Thursday, October 27, 2016

கடந்த கா(லம்)தல்.....சிறுகதை

இன்னும் எத்தனை தூரம்தான் நடக்கனும்?! லக்கேஜ்லாம் அனுப்பிய வண்டியிலேயே நாமும் போயிருக்கலாம்டா.
சுமி! நான் பொறந்து வளர்ந்த ஊருக்கு பதிமூணு வருசம் கழிச்சு வரேன்... நான் மட்டும் வந்தா பரவாயில்ல. நான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட நீயும் வர்றே! என்னைப் பத்தி நான் ஒளிவுமறைவில்லாம சொல்லியிருக்கேன். இருந்தாலும், அந்த இடங்களைலாம் உனக்கு காட்டனும்ன்னு  ஆசை... அதான்...

ம்க்கும். பெரிய ஹிஸ்டாரிக்கல் ஸ்பாட். அப்புறம் வந்து சுத்தி காட்டக்கூடாதா?! ட்ரெயின் ஜர்னி செஞ்சது இடுப்புலாம் வலிக்குதுடா.

வீட்டுக்கு போனதும் அம்மாவை பார்த்து, ஆசீர்வாதம் வாங்கிட்டு, நல்லா வெந்நீர் வெச்சு குளிச்சா சரியாகும்....


சுமி, இதான் நான் படிச்ச ஸ்கூல்.. அப்பலாம் இந்த மாதிரி கட்டிடம் இல்ல... ஓடு வேய்ஞ்ச கூரைதான்... இந்த குளத்துலதான் நான் நீச்சல் கத்துக்கிட்டேன்.  அந்தா தெரியுது பாரு அந்த மைதானத்துலதான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்...
பதினாலு வயசுப்பிள்ளையாவே மாறிட்டேன் சுமி... இங்க ஒரு பூவரசம் மரம் இருக்கும்.. அதுல சம்பத்து மாமா தூக்கு போட்டுக்கிட்டாரு.... இந்த கண்மாயில துணி ...

துவைச்சிட்டு பக்கத்துல இருக்கும் குட்டிச்சுவத்துல உக்காந்து தம்மடிச்சீங்க... சுடுகாட்டு மயானத்து புளியமரத்தடியில் தண்ணியடிச்சீங்க.... அந்த குட்டிச்சுவத்துக்கிட்ட ரெக்கார்டு டான்ஸ் பார்த்தீங்க.. எத்தனை முறைடா சொல்வே?! முடில சாமி...

சுமி, இந்த மரப்பொந்துலதான்.... எதோ சொல்ல வந்து தயங்கியவனை...

வர்றது யாரு?! முருகேசனா?! எனக் களைத்தது ஒரு குரல்.

ஆமா! நீங்ங்ங்க!பெட்டிக்கடை குமாரசாமி பெரியப்பாவா?!


ஆமாண்டா படவா! பழசைலாம் மறக்காம இருக்கியே! நல்லாயிருக்கியா தம்பி!? ம்ம்ம்  அப்பன் அடிக்கு பயந்து ஓடி.... பதிமூணு வருசம் கழிச்சு ஊருக்கு வர இப்பதான் தோணுச்சோ!! எதுக்கு அடிச்சான்னு சொல்லாம அவனும் போய் சேர்ந்தான்.. ம்ம் எல்லாம் விதி... உங்கம்மா காத்துக்கெடக்கு. சீக்கிரம் வீட்டுக்கு போ.
வீட்டுக்கு போனதும் அம்மா காலில் விழுந்து, அழுது, அரற்றி, குளிச்சு, அம்மா சமைத்த சாப்பாட்டை உண்டு.... இளைப்பாற திண்ணையில் வந்து உக்காந்தான். இதற்குள் விசயத்தை கேள்விப்பட்ட ஊரார் அத்தனை பேரும் வீட்டு வாசலில் வந்திருந்தனர்.

இத்தனை நாள் எங்கிருந்தப்பு?!

எதாவது படிச்சியா?! ஆயி, அப்பனில்லாத புள்ள எது படிச்சிருக்கு?

இந்த புள்ளைய எங்கய்யா புடிச்சே?! யாரு?! அதுக்கு பெத்தவங்க இருக்காங்களான்னு கேட்ட கேள்விகளுக்குலாம் பொறுமையாய் பதில் சொல்லி வந்தவனை கூட்டத்திலிருந்த இரண்டு கண்கள் முருகேசனை நிலைக்குலைய வைத்தது.. முக்காடிட்டிருந்த முகத்திலிருந்த அக்கண்களில்தான் எத்தனை கொலைவெறி?! யாரந்த பெண்?! என நினைவடுக்குகளை கிளறிப்பார்த்தான்.
ம்ஹூம்.. ஏதும் சிக்கவில்லை...


ம்ம்ம கேள்வி கேட்டு எம்புள்யை கொடைஞ்சது போதும்... எல்லாரும் போங்க. எய்யா முருகேசு! உம்பொஞ்சாதிய கூட்டி உள்ளாற போய் படு. தெரிஞ்சு வந்தியோ தெரியாம வந்தியோ! ஆனா, நல்ல நேரத்துலதான் வந்திருக்கே.  நாளைக்கு ஊருணி பொங்க  வைக்குறாங்க.  காலைல முனீஸ்வரன் கோவில்ல பொங்க வைக்கனும். வெள்ளன எந்திரிக்கனும் என முணுமுணுத்தவாறே ஆடு, மாடுகளை கொட்டடியிலடைக்க போனாள்...
அதான் சுமி தெரில. ஒருவேளை புதுசா ஊருக்குள் வந்ததால என்னை அடிச்சதோ என்னமோ?! சரி வா! வீட்டுக்கு போகலாம் என படியேறினான்...

ஏண்டி, இப்டி வயசான காலத்துல என்னை பாடாய் படுத்துறே?! உன்னாக்கூட பொறந்த ஆணும், பொண்ணும் கல்யாணம் கட்டி புள்ள குட்டியோட போகுதுங்க. பத்து வருசமா உன் தலைமுடிய நீயே வெட்டிக்கிட்டு, நகை நட்டு பேடாம, சொந்தங்களோடு சேராம பைத்தியக்காரி மாதிரி இருக்கே! இத்தனை நாள் நல்லாத்தானே இருந்தே! எத்தினி வருசம் கழிச்சு வந்திருக்கான் முருகேசு அவனை ஏண்டி அடிச்ச?! ரெண்டு பேரும் ஒண்ணு மண்ணா சுத்துன கழுதைங்கதானே? அவனை ஏன் அடிச்சே! அவனை அடையாளம் தெரிலயா ரேனு?!
ரேனு...... 

சடாரென திரும்பிப் பார்த்தாவன் விழிகளை, உரசிச்சென்ற ரேனுவின் கசிந்த விழிகள் கோவில் குளக்கரையிலிருந்த ஆலமரப்பொந்தை நோக்கிச்சென்றது....

அரைக்குறையாய் ரேணுவிடம் விளையாடிய அப்பா அம்மா விளையாட்டும்அதைகண்டு அடித்த அப்பாவும்.... ஊரைவிட்டு வரும்போது என்னிக்காயிருந்தாலும் நீதான் எம்பொஞ்சாதியென... ரேனுவிடம் கையடித்து செய்த சத்தியத்தை நினைவுப்படுத்தியப்டி ஆக்ரோசமாய் அசைந்துக் கொண்டிருந்தது குளத்துக்கரை ஆலமரம்!!

8 comments:

  1. ennamma kathai ethu..... muppathu varuzham mundhi vandirukka vendia kathai...

    ReplyDelete
  2. முப்பது வருடங்களுக்கு முன் ,மனிதர்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கிறார்கள் ,என இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டாமா,இப்பொழுது நாகரீகம் வளர்ந்தது ,ஆலமரத்தடி காதல் , புஸ் பிடித்து இடம் பெயர்ந்து ,பஸ்கள் ,தடம் மாறி நிற்பதை போல் ,தங்கள் தடத்தை அடிக்கடி மாற்றி கொள்கின்றன .அவர்களும் முப்பது வருடம் முன்பிருந்த ,மாட்டுவண்டி ,பயணத்தையும் தெரிந்து கொள்ளட்டுமே சகோ ..

    ReplyDelete
  3. பழைய காதலின் நினைவோட்டங்கள் நிழலாடியது

    ReplyDelete
    Replies
    1. புகைப்படங்கள் கொள்ளை அழகு

      Delete
    2. புகைப்பட கலைஞர்களின் ..கைவண்ணத்தில் எடுக்கப்பட்டவை ..நன்றி நாம் அவர்களுக்குத்தான் .சொல்லவேண்டும் ...

      Delete
  4. அவைகளெல்லாம் மனிதர்கள் உண்மையாக வாழ்ந்த காலம் ,ஓரளவு மனசாட்சியுடன் வாழ்ந்த காலங்கள் .அவைகளெல்லாம் திரும்புமா ,இல்லை மனிதர்கள் திருந்துவார்களா என தெரியளவில்லை ,நன்றி சகோ..உங்கள் கருத்துக்களுக்கு ..

    ReplyDelete
  5. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

      Delete