Saturday, March 03, 2018

கின்னசில் இடம்பெற்ற பெண்கள் மட்டுமே வைக்கப்படும் பொங்கல் திருவிழா


கார்த்திகை மாசம் ஆண் பக்தர்களால் கேரளா களைக்கட்டும். மாசி மாசம் பெண்பக்தர்களால் களைக்கட்டும்.  கார்த்திகை மாசம் என்ன விசேசம்ன்னு உங்களுக்குலாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனா, மாசி மாசம் என்ன விசேசம்?! அது பெண் பக்தர்கள்ன்னு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்காது.  விசேசம் என்னன்னு தெரிஞ்சவங்க நான் சொல்லுறதுலாம் சரியான்னு பாருங்க. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.


பெண்களின் சபரிமலைன்னு பேரெடுத்த ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே பொங்கல் வைக்கப்படுது.  இந்த கோவில் சுத்தி கிட்டத்தட்ட 15கிமீ தூரத்துக்கு அதாவது திருவனந்தபுரம் நகர் முழுக்க தெரு, சந்துபொந்துன்னு எல்லா இடத்துலயும் பொங்கல் வைப்பாங்க. இந்த பொங்கல் வைக்கும் திருவிழா கின்னஸ் ரெக்கார்ட்ல இடம் பெற்றிருக்கு.


 1997-ல் பிப்ரவரி 23-ம் தேதி நடந்த பொங்கல் வைபவத்தில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டதாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பொங்கல் விழா முதலில் இடம் பிடித்தது. பின் அது 2009 மார்ச் 10ம் தேதி நடந்த பொங்கல் விழாவில் 30 லட்சம் பெண் பக்தைகள் கலந்து கொண்டதாக முன் சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மீண்டும் இடம் பிடித்தது.   அங்க  ஏன் பெண்கள் மட்டும் பொங்கல் வைக்குறாங்க?! ஏன் ஆம்பிளைகளுக்கு இடமில்ல...  பொங்கல்ல என்ன சிறப்பு?! தமிழகத்துலகூடதான் வித விதமான பொங்கல் வைக்கும் வைபவம் நடக்குது ன்னு யோசிக்குறவங்களுக்கு பதில் இதோ......
கேரளம் உருவெடுக்க காரணம் பரசுராமர். அவர், 108 சிவாலயங்களையும், 108 அம்மன் கோவில்களையும் உருவாக்கினார். கேரளாவில் அம்மன் கோவில்கள் நிறையவே இருந்தாலும் தனிப்பட்ட பெயரால் அழைக்கப்படுவதில்லை. கோவில் அமைந்திருக்கும் இடப்பெயருடன்  பகவதி சேர்த்தே அழைப்பர்.

பராசக்தியின் பக்தர் ஒருவர், ’’கிள்ளி” என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணிய அந்த பக்தர் சிறுமியை கண்டு உருகி நின்றார்.  கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ”என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு போய்விட முடியுமா? என்று கேட்டாள். அவ்வாறே மறுகரையில்  கொண்டு போய் சேர்த்தார். ஆனால், சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார். 



அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள்.  மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு. 
இக்கோவிலை பற்றிய மற்றொரு கதை....


கற்புக்கரசியும், சிலப்பதிகாரத்தின் நாயகியுமான கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்றும் கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல, என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி.  பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினார்ன்னும், அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறதுன்னும் சொல்றாங்க. 

தனது வெஞ்சினப் பார்வையினால் மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக பெண்கள், தேவிக்கு பொங்கல் படைத்து நைவேத்யம் செய்வதாக ஓர் ஐதிகம். மகிஷாசுரவதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை பெண் பக்தைகள் பொங்கல் நைவேத்யம் சமர்ப்பித்து வரவேற்றனர் என மற்றொரு கதையும் உண்டு. பொங்கலுக்கு புதுமண்பானை, பச்சரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்வசக்தி சொரூபிணியான ஆற்றுக்கால் அம்மாவை நினனத்து விரதசுத்தியுடன் தவமிருந்து அஷ்டசித்தி பெற்றிடவே பெண்கள் பொங்கல் படைக்கின்றனர்.



விரதமிருந்து இருமுடி கட்டி சபரி மலைக்கு ஆண்கள் செல்வது போல, கேரள மற்றும் கேரள தமிழக எல்லை வாழ் பெண்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி இக்கோவிலுக்கு செல்கின்றனர். அதனால் இக்கோவில் பெண்களின் சபரிமலைன்னு பெயர் பெற்றது. கேரளத்து மக்கள் பகவதி அம்மனை தங்கள் தாயாக பாவித்து தங்கள் இல்லத்து விசேசத்துக்கு அம்மனுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள். ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீ சக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவருக்குப்பின், வித்யாதிராஜ சட்டம்பி  சுவாமிகள் இத்தலத்தில் வெகுகாலம் தங்கி பூஜை செய்துள்ளார்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டுள்ளது. கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 

கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.  மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன. 

அம்மனே பொங்கலிடும் ஐதீகம்;

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள்.  அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர்.  கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் தினமும் பக்தர்கள் பொங்கல் படைத்து வழிபடுவதுண்டு. பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் சமர்ப்பித்து உரிய கட்டணம் செலுத்தினால் கோவிலில் பொங்கல் தயாரித்து அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழங்குவார்கள். 
விழா காலகட்டத்தில் எல்லா தினமும் இரவு தீபாராதனை முடிந்து, நடை சாத்துவதற்கு முன்னால் பலவித வர்ணக் காகிதங்களாலும் குருத்தோலைகளாலும் தீப அலங்காரத்தாலும் அலங்கரிக்கப்பட்டு தேவி சிலையை அதன் நடுவில் அமர வைத்து சுமந்தபடி வழிபாடுகளாக அனேக விளக்குக் கட்டுகள் கோவிலை சுற்றிலும் நடனமாடியபடி வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். ஒவ்வொரு வருடமும் வழிபாடு விளக்குக்கட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


மொத்தம் பத்து நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவின் ஒன்பதாவது நாள் பொங்கல் விடும் வைபவம் நடக்கும். அன்று காலையில் சிறுமிகள் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்தை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்துத் திரும்புவார்கள். இதை 'தாலப்பொலி' என்கிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து தலையில் மலர்க்கிரீடம் சூடி கையில் தாம்பாளம் ஏந்தி அதில் அம்மனுக்கு பூஜைக்குரிய பொருட்கள் வைத்து சிறு தீபம் எற்றிக்கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர் உறவினர்களும் வருவார்கள். இப்படி செய்வதால், அந்த சிறுமிகளுக்கு நோய் நொடிகள் வராது, அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும், எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கை. 

சிறுமிகளின் தாலப்பொலி போல, சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்புமிக்கது. அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் மகிஷாசுரமர்த்தினியின் காயமடைந்த போர் வீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை பூஜாரியிடம் பிரசாதம் பெற்று கோவிலில் தனி இடத்தில் ஏழு தினங்கள் தங்கி விரதம் கடைபிடிக்கின்றனர். நீராடி அம்மன் சன்னிதானத்தில் ஈர உடையுடுத்தியபடி ஏழுதினங்களில் 1008 நமஸ்காரத்தை முடித்திருக்க வேண்டும்.  இந்த குத்தியோட்டம் எனும் விரதத்தை சிறுவர்கள் கடைபிடிப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. பொங்கல் தினத்தன்று சிறுவர்கள் முருகன் கோவிலில் அலகு குத்துவது போல் விலா எலும்புகளின் கீழ் உலோகக் கம்பி கொக்கியால் குத்தியிருப்பார்கள். பொங்கல் வைத்து முடித்ததும் இவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளும் அம்மன் முன் அணிவகுத்துச் செல்வார்கள். மறுநாள் காலையில், அவர்களது உடலில் குத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டு விரதம் நிறைவு பெறும். 

இத்தனை சிறப்பு வாய்ந்த, கின்னசில் இடம்பெறும் பொங்கல் விழாவில் சாதி மத பேதமில்லாம எல்லாரும் கலந்துக்கலாம். வாய்ப்பு கிடைக்கும்போது நாமும் கலந்துப்போம்.
படங்கள்லாம் கூகுள்ல சுட்டது..
நன்றியுடன்,
ராஜி.

12 comments:

  1. அருமை.......கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற பெண்கள் மட்டும் பொங்கல்.....புதிய செய்தி எனக்கு. நன்றி தங்கச்சி,பதிவுக்கு...........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. பொங்காலா என அழைக்கப்படும் இந்தத் திருவிழா மிகவும் பிரபலமானது. கேரளத்தவர்களின் பெரும்பாலான கோவில்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் தில்லியில் இருக்கும் கேரளக் கோவில்கள் உட்பட....

    ReplyDelete
    Replies
    1. பொங்காலா! பேரே நல்லா இருக்கே!. டெல்லியிலும் இந்த விழா கொண்டாடப்படுறது புது தகவல்ண்ணே

      Delete
  3. பொங்காலே என்று அழைக்கப்படும் வெங்கட்ஜி!!! ஆமாம் மிகவும் பிரபலாமனது...நான் தி புரத்துல 8 வருஷம் இருந்திருக்கேன் அப்பல்லாம் அத்தனை கூட்டம் இருக்காது ஆனால் பின்னர் பின்னர் ரொம்பவே அதிகமா கூட்டம் ...நான் பல முறை சென்ற கோயில்...பொங்கலும் வைத்ததுண்டு..கொழுக்கட்டை என்று. என் தங்கை அங்குதான் எனவே அவள் வைக்கிறாள்...நான் இருந்தவரை நாங்கள் இருந்த மெயின் ஏரியா வரை எல்லாம் பொங்காலே வரிசை வந்ததில்லை இப்போது சிட்டியே எல்லா ரோடுகளிலும் இடம் போடப்படுகிறது. இடம் பிடிச்சுக்கணும்....அந்த அளவு ஆகிவிட்டது. ட்ராஃபிக் வேறு இப்போது அன்று இருக்காது.தெருக்கள் ரோடுகள் எல்லாம் மூடப்பட்டுவிடும்.....அப்படி ஆகிப் போனது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இப்பலாம் உச்சக்கட்ட வியாபார ஸ்தலம் எதுன்னா கோவிலும், கல்வி நிறுவனங்களும்தான் கீதாக்கா. பிக்னிக் போற மாதிரி குடும்பத்தோடு கிளம்பிடுறாங்க.

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. அருமை
    மகிழ்ந்தேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நானும் மகிழ்ந்தேன் . நன்றிண்ணே

      Delete
  6. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளேன். பார்க்கவேண்டிய கோயில். பொங்கலைப் பற்றி கூடுதல் செய்திகளை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் போனதில்லைப்பா.

      Delete