Friday, September 14, 2018

அம்மா அப்பா கல்யாணம்

                                              
44 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  ஒரு கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா! நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.
தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!
 சில வருடங்களுக்கு முன் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய் தேற்றி நடக்க வைத்து திரும்ப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா. இப்பவும், தனக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நானே சமாளிச்சுக்குறேன். நீ பிள்ளைகளையும், அப்பாவையும், வீட்டையும் பார்த்துக்கோ! ஆப்ரேஷன் போது வந்தால் போதும்ன்னு தன்னந்தனியாய் இருக்கும் இரும்பு மனுசி!! எனக்குலாம் அம்புட்டு தைரியம் இல்ல. பொசுக்குன்னா அழுதுடுவேன்! ஆனா, அம்மா அழுது அதிகம் பார்த்ததில்ல!!

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், செய்வன திருந்த செய்ன்னு அறிவுரை சொல்லும், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா..., எனக்கு தெரிஞ்சு வருமான வரிக்காக திடீர்ன்னு இன்சூரன்ஸ் போடுறது, அதை இதை வாங்குறதுன்னு இல்லாம எத்தனை ஆயிரம் வந்தாலும் அப்படியே வரி கட்டும் நேர்மையானவர். ஒரு ரூபாய் செலவழித்தாலும் நோட்டில் எழுதி வைக்கும் பழக்கத்துக்கு சொந்தக்காரர்.
                                                                       
தோள்மீது போட்டு தாலாட்டியதில்லை..
மடிமீது சாய்த்து தூங்க வைத்ததில்லை..
கதைச்சொல்லி உற்சாகப்படுத்தியதில்லை..
யானைச்சவாரி சுத்தியதில்லை..

வழிக்காட்டியதுண்டு... 
ஆனா, கருத்து சொல்ல அனுமதித்ததில்லை..
சராசரி இந்திய பெற்றோராய் 
பெண்பிள்ளையை தட்டி வைத்தே வளர்த்தீர்
அந்நியமும் ஆனீர்...

கைப்பிடியை உதறிச்செல்ல முயன்றேன்...
ஆனாலும், கைப்பிடியை  விட்டதில்லை..
உங்கள்மீது அன்பில்லை..
பாசமில்லை...
வெறுப்பு மட்டுமே உண்டு

எனத்தான் இத்தனை நாள் நினைத்திருந்தேன்!
என் அப்பா மாதிரி  காத்திருக்க தெரில...
அம்மா மாதிரி பிடிச்சதை தெரிஞ்சுக்க தெரில..’
அப்பாப்போல தோசை சுட்டு தரத்தெரில..
அம்மா மாதிரி செலவழிக்க தெரிலன்னு 
கொண்டவனை குறை சொல்லும்போதுதான் தெரிகிறது
உங்கள்மீது நான் கொண்ட பாசம்....

சொந்தம், பந்தம், நட்புன்னு அத்தனை உறவுகளும், சிலசமயம் கடவுளும்கூட கைவிட்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும், எந்நாளும் என்னை நீங்க கைவிட்டதில்லை... நான் இது வரை உங்களிடம் கேட்டதில்லை. ஆனாலும் இன்று கேட்கிறேன்.......  மறு ஜென்மம் இருந்தால் நீங்கள் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்.  அப்போதாவது நீங்கள் என்னை கவனித்ததை போல் நான் உங்களை கவனித்து என் நன்றி கடனை தீர்க்க வேண்டும்.  இந்த வேண்டுதல் அடுத்த பிறவிக்கு... இப்பிறவியின் வேண்டுதல்..  ஒருசேர ஒரு நொடியில் இருவரது உயிரும் பிரியனும்.. ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருக்க கூடாது... அன்றில்பறவையாய் உங்களை கண்டவள் ஒருவரை மட்டும் காண சகியாது..  இந்நாளிலும் இதுவே என் வேண்டுதல்... ஆசையும்கூட... 

நான் இது வரை உங்களிடம் சொன்னதில்லை.  இன்று சொல்லுகிறேன்...... I Love U Paa.......  I Love U Maa........
நன்றியுடன்,
ராஜி. 

9 comments:

  1. அப்பா, அம்மாவுக்கு நமஸ்காரங்களுடன் கூடிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மின்னல் வரும்போது இடி சத்தம் கேட்பதில்லை. அதுபோல்தான் பெற்றோர்கள் குழந்தைகள் மீது காட்டும் பாசம் அவர்களுக்கு புரிவதில்லை. புரியும்போது சிலர் இருப்பதில்லை.சிலர் இருந்தாலும் அதனால் அவர்களுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை

    ReplyDelete
  3. வணங்குகிறேன் நானும்....

    ReplyDelete
  4. ராஜி அருமையாக சொன்னீர்கள்.
    அப்பா, அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.!
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. பாசத்தை இவ்வாறாக சொற்களால் பகிர்ந்துகொள்ளமுடியுமா? வியப்பாக உள்ளது. பெற்றோர் மீதான உங்களின் அன்பு பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  6. உங்கள் தாய்-தந்தைக்கு எங்களது வணக்கங்களும்....

    ReplyDelete
  7. பெண்களுக்கு பெற்றோர் மீது அதிக அன்பாமே

    ReplyDelete