Wednesday, February 04, 2015

நன்றி இறைவா!!


நொடிக்கொருதரம் சாலைகளில்   
பறக்கும் மகிழுந்துகளும்..,
எதிர் வீட்டுக்காரி     வாங்கிருக்கும் 
புது  ஆரமும்....,

மச்சினர் மகள்  சேர்ந்திருக்கும்  
மிகப்பெரிய பள்ளியும்...,   
நாத்தனார் சென்று வந்த 
அயல்நாட்டு  சுற்றுலாவும்....,

பாதாளம் வரை பாயும் பணமும்...,
புழுங்க வைக்கும் பகட்டும்...,
கால்  வாரிவிடும்  உறவுகளை  பற்றியும்  
முறையிட விரைகிறேன் உன் இருப்பிடம் நோக்கி....,

 கண்ணீர்விட்டு அழுது , கதறி, 
ஏன் இந்நிலை!?
 என்ன தந்தாய் எனக்கு!?
என   மணியடித்து புகார் வாசித்து நிமிர்கிறேன்.,  

 எதையும் தாங்கும் இதயத்தையும்..,
மாறாத புன்னகையும்.., 
தோள் தட்டி ஆறுதல் சொல்லும்   நட்புக்களையும்  ...,

இவையெல்லாவற்றையும் விட நானும் 
உன்னுடன் இருக்கையில், 
வேறென்ன  வேண்டும் என்பதுப் போல 
உள்ளிருந்து   நீ புன்னகைக்க..,  

உன் புன்னகையின் பொருளுணர்ந்து 
திருப்தியுடன் திரும்புகிறேன்......,
 கை நிறைய  கிடைத்த வரங்களோடு!! 
நன்றி இறைவா!!