Monday, July 30, 2012

எங்கே தேசப்பற்று?! - ஐஞ்சுவை அவியல்

                               
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இந்த ஆடி மாசம் வந்தாலே, சந்து பொந்துல இருக்குற  அம்மன் கோவில்லாம் களை கட்டுது. எல்லா கோவில்லயும் கூழ் ஊத்தி, பாட்டுக்கச்சேரின்னு அவனவன் போட்டி போட்டுக்கிட்டு செய்யுறான். இந்தாங்க மாமா  அம்மன் கூழ், பொங்கல், பிரசாதம்.

ஏம் புள்ள! ரொம்ப வேலையா?! செத்த நாழி சாஞ்சு, ரெஸ்ட் எடுத்துக்கோ. ஆமா, எல்லா மாசத்தையும் விட்டுட்டு இந்த ஆடி மாசத்துல ஏன் கூழ் ஊத்துறாங்கன்னு உனக்கு தெரியுமா புள்ள?

 தெரியாதுங்க மாமா, என் பாட்டி சொன்னாங்கன்னு அம்மா ஊத்துனாங்க, அம்மா சொன்னாங்கன்னு நான் ஊத்துறேனுங்க.

அப்படிலாம் பொத்தம் பொதுவா செய்யக்கூடாது. ஒரு செயலை செய்யும்போது அது ஏன் செய்யுறோம்? எதுக்காக செய்யுறோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு செய்யனும். அப்போதோன் அதோட பலன் நமக்கு கிடைக்கும்.

சரிங்க மாமா சொல்லுங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்.

ம்ம் இப்படி பக்கத்துல வந்து உக்காரு..., உன் வேலை செஞ்சு களைச்சு போன உன் கை, காலை குடு இதமா பிடிச்சு விட்டுக்கிட்டே சொல்றேன். கேட்டுக்கோ.

ஐயையோ, பொம்பளை  காலை நீங்க பிடிக்குறதா? போங்க மாமா, அதெல்லாம் தப்பு..,

 ஒரு தப்புமில்ல புள்ள, நான் உம்மேல வெச்சுருக்குற பாசத்தை உனக்கு காட்ட ஒரு சந்தர்ப்பம்ன்னு நினைச்சுக்கோ, ம்ம் குடு..., பிடிச்சு விடுறது வலிச்சா மட்டும் சொல்லு, இப்போ நான் சொல்றதை கேளு.

ம்ம்ம் சரிங்க மோமோய்...,

ஆடி மாசம்ன்னாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊத்துறதும் வழக்கம், இது ஏன்ன்னா ..  ஆடி மாசம் வீசுற  காத்துல வேகம் அதிகமா இருக்கும். அதனால  எங்க பார்த்தாலும்  தூசியாக இருக்கும். இதனால, இருமல், டஸ்ட் அலர்ஜி, சைனஸ் போல பல நோய்கள் வரலாம். இதை வராம தடுக்கவே மாரியம்மன் கோயில்ல ஆடி மாசம் முழுவதும் கூழ் ஊத்துவாங்க. 

 இதை,  ஆடிக்கஞ்சின்னு அந்த காலத்துல சொல்வாங்க. . அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் இதையெல்லாம்  லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வெச்சுக்கனும்.அரிசியைக் கஞ்சியாக வேகவெச்சு, அதுல,   துணியில இருக்குற  மருந்துகளைப் பிழியணும்;  இல்லைனா கஞ்சிக்குள்ள அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துடனும். அதைத்தான் ஆடிக் கஞ்சியைப் பரிமாறனும்.  இதையே எல்லாரும் ஃபாலோ பண்ணா நல்லது. ஆனா, இப்பலாம் இந்த மருந்தையெல்லாம் சேகரிச்சு இடிச்சு கஞ்சி பண்ண சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கம்மங்கூழ் காய்ச்சு ஊத்திடறாங்க.

அப்படியா மாமா! இனிமே நான் அதேப்போல செய்யுறேன். ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும். 

அதுவா, போன வருசம் நம்ம கோவில்ல பிரசங்கம் பண்ண பெரியவர் சொன்னார்.

ஓ, ஏனுங்க மாமா இன்னிக்கு டிவில நியூஸ் வாசிக்குறதை பார்த்தீங்களா மாமா?

இல்ல புள்ள, வெளில வேலை இருக்கவே பார்க்கலை என்ன புள்ள?

                                        
 நம்ம ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துல,  சம்பா மாவட்டத்துல, 20 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதை ஒண்ணு  கண்டுபிடிச்சிருக்காங்களாம். அந்த ஊர் கிராமவாசி ஒருத்தங்க கொடுத்த தகவல்னால, ராணுவத்தினர், அந்த சுரங்கத்தை ஆய்வு செய்ஞ்ச போது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில இருந்து இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் வரை  சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்திருக்கு. அதுல, ஒயர்களும் புதைச்சிருக்காங்களாம். அந்த சுரங்கம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ள  ஊடுருவதற்கு யூஸ் பண்ணாங்களான்னு   போலீஸார் விசாரணை நடத்தி வர்றாங்களாம்.  

இப்படி யாரோ ஒரு சிலர் கவனக்குறைவினாலயும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஹெல்ப் பண்ணதாலயும் பல்லாயிரக்கணக்கான வீரர்களின் தேசப்பற்றும், உழைப்பும் கேலிக்கு ஆளானதாலயும், தேசத்தின் பாதுகாப்பும் கேள்விக்குரியதா மாறுதே.

சில ஆயிரங்கள் சம்பளமா வாங்கியும், குடும்பத்தாரை விட்டு, கடும் குளிர், வேக வைக்கும் வெயில்லயும் வெந்து நாட்டுப்பற்றோடு நாட்டுக்காக  உயிரையும் துச்சமா நினைச்சு போராடும் மனிதர்கள் இருக்குற இதே நாட்டில்.....,  கோடி கோடியா    பணத்தையும், அதுக்கு மேல புகழையும் சம்பாதிச்சு, இப்போ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை கட்டிக்கிட்ட இந்த இந்திய பொண்ணுக்கு நம்ம நாட்டு பற்று துளிக்கூட இல்லைன்னு இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

ஒலிம்பிக்ல எல்லா நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடக்கும்போது, நம்ம நாட்டு வீரர்கள் தங்கள் கைகளில் நம்ம நாட்டு தேசியக்கொடியை பிடிச்சுக்கிட்டு போனாங்க மாமா. ஆனா, இந்த பொண்ணு...., ம்ம்ம் யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியலை மாமா.                        

ம் ம் ம் நீ சொல்றதுல உண்மைதான் புள்ள. சீரியசா பேசிட்டதால, ஒரு ஜோக் சொல்றேன் ஒருத்தன் ஒரு கார் டிரைவர் தன் முதலாளிக்கிட்ட: சாரி சார் பெட்ரோல் போட மறந்திட்டேன். கார் ஒரு அடி கூட முன்னால போகாதுன்னு சொல்றான். அதுக்கு அந்த காரோட  ஓனர்  உன்னை மாதிரியே  தத்தி  போல, சரி.. சரி..விடு ரிவர்ஸ்லயே காரை வீட்டுக்கு விடுன்னு சொன்னாராம்.

ம்க்கும் நானா மாமா தத்தி? ஒரு கணக்கு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்?

கேளு புள்ள...,

ஒரு வியாபாரி, ஒரு கூடையில மாம்பழங்களை எடுத்துக்கிட்டு  விற்க போனார். முதல்ல Aன்றவர் கூடையில இருந்து ஒண்ணை தவிர மத்த பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். அடுத்து, Bன்றவர் மீதி இருக்குற பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். கடைசியா, Cன்றவர் மிச்சம் இருக்குற பழங்களில் பாதியை வாங்கிகிட்டார். அப்படின்னா, வியாபாரி கூடையில் மொத்தம்  எத்தனை பழம் எடுத்துக்கிட்டு போனார்?

ம்ம்ம்ம் அது வந்து..., அது வந்து விடை...,

இரு இரு நிதானமா யோசிச்சு சொல்லு. நேத்து உன் ஃபிரண்ட் ராஜி வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருந்தேன். அங்க, நம்ம ராஜியோட சின்ன பொண்ணு  இனியா பத்தி பேச்சு வந்துச்சு. அவளுக்கு 4 இல்ல 5 வயசிருக்கும்போது அவ காலைல அவ அப்பா ஆபீஸ் கிளம்பும்போது, அவ தன் அப்பாக்கிட்ட டெடி பியர் பொம்மை கேட்டிருக்கா. அவ, அப்பா ஆபீஸ் டென்சன்ல மறந்துட்டார். வீட்டுக்கும் வரவும் நைட் 11 மணி ஆகிடுச்சாம். இனியா தூங்காம முழிச்சுக்கிட்டு இருந்திருக்கா.

ம்ம்ம்ம் அப்புறம்...,

அவ அப்பா வந்ததும், தன் அப்பாக்கிட்ட ஏன் பொம்மை வாங்கி வரலைன்னு  கேட்டு அடம்பிடிச்சு இருக்கா. அவ அப்பா, டென்ஷன்ல  ஏய், நான் ஆபீசுல இருந்து கிளம்ப 10 மணி ஆகிட்டுது. பத்து மணிக்கு ஈ, காக்கா கூட கடைத்தெருவுல இருக்காது. அப்படி இருக்க எப்படி வாங்கி வ்ர்றது?ன்னு கோவமா கேட்டிருக்கார்.

அதுக்கு அவ, சடார்ன்னு நான் உங்களை ஈ, காக்காவா கேட்டேன், பொம்மைதானேன்னு கேட்டேன்னு ,மழலை மாறாம கேட்டதுல டென்ஷம் மறந்து எல்லாரும் சிரிச்சதுமில்லாம, மறுநாளே பொம்மையை மறக்காம வாங்கியும் குடுத்துட்டாராம்.

ஹா ஹா, பசங்க குறும்புத்தனங்களை எம்புட்டு வருசமானாலும் மறக்க முடியாதுங்க மாமோய்,  குடும்பத்துல பிள்ளைங்க பண்ற குறும்புலாம் சுகம்ன்னா, சமைக்குறது ரொம்ப கொடுமைங்க மாமா.

ஏன் புள்ள அப்படி சொல்றே. சின்ன சின்ன விசயத்துல கவனம் செலுத்தி வேலை செஞ்சா அதுவும் ஒரு அழகான கலையே. அப்புறம் நீயே சமைக்க அலுத்துக்காம சுகமா எடுத்துக்குவே.

எப்படி சொல்றீங்க மாமா?
                                       

கூடையில  வைக்குற  உருளைக்கிழங்கு முளை விடாம இருக்க, கூடவே, கூடையில ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வெச்சா சீக்கிரம் முளை விடாது. சப்பாத்தி மாவு பிசையும்போது கால் பங்கு சோயா மாவு சேர்த்துக்கிட்டா சுவையும் கூடும் குழந்தைகளுக்கு புரோட்டினும் கிடைக்கும். வாழைக்காய் வெட்டும்போது கையில இருக்குற பிசுபிசுப்பு போக தயிர் ஊத்தி கழுவலாம். உரல், அம்மி, கிரைண்டர்ன்னு புதுசா வாங்குனா அதுல எடுத்த உடனே இட்லி, தோசைக்கு மாவு அரைக்காம தவிடு போட்டு அரைச்ச பின்னாடி அரைக்கனும். அப்படி செய்யலைன்னா ஆட்டுக்குக்கல்லில் இருக்குற கண்ணுக்கு தெரியாத சின்ன கல்துகள்கள்லாம் மாவுல வந்து மாவே வேஸ்டாகிடும். இப்பலாம் தவிடு எல்லா இடத்துலயும் கிடைக்குறதுல்லை. தவிடு கிடைக்காதவங்க பெரிய வெங்காயம் போட்டு ஆட்டி எடுத்தா கல்லுலாம் வந்துடும்.

சரிங்க மாமா! இனி சின்ன சின்ன விசயத்துலலாம் அக்கறை எடுத்து  பார்த்துக்குறேன். உடம்பு வலிலாம் போன இடமே தெரியலை மாமா. நீங்க கால் பிடிச்சு விட்டதுல மனசும் தெம்பாகிடுச்சு. நான் போய் வீட்டு வேலை பார்க்குறேன்.

சரி புள்ள! எனக்கும் கொஞ்சம் கடைத்தெருக்கு போற வேலை இருக்கு. அப்புறம் பேசலாம்.                                  

Friday, July 27, 2012

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? (பதிவர்களுக்கு டிப்ஸ்)

                                                  
அடிச்சு பிடிச்சு கரெக்ட் டைமுக்கு ஆபீசுக்கு வந்து,  மேலதிகாரிக்கு ஒரு வணக்கம் வெச்சுட்டு,சீட்டுக்கு வந்து,   கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ஒரு போஸ்ட்டை போட்டு அதை திரட்டிகளில் இணைச்சு, படபடன்னு மத்த பிளாக்குகளுக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு போஸ்ட்டை தேத்தி டிராஃப்ட்ல போட்டு, அதுக்கு படங்களைஇணைச்சு...,  நிமிர்ந்து பார்த்தா மணி பணிரெண்டுதான் ஆகியிருக்கும்.

சரி,  ட்விட்டர், மூஞ்சி புத்தகத்துலலாம் போய் அரட்டை அடிக்கலாம்ன்னு போய் பார்த்தா எல்லாரும், அன்னிக்குன்னு பார்த்து  சின்சியரா வேலை பார்க்க போய்ட்டு இருப்பாங்க. நம்மை சுத்தி எல்லாருமே வேலை(ஆபீஸ் வேலை) பார்த்துக்கிட்டு இருப்பாங்க. நமக்குதான் ஆபீஸ் வேலை செஞ்சு பழக்கம் இல்லியே. அதனால, நமக்கு போரடிக்கும், அதுமில்லாம நம்மளையே மேனேஜர் உத்து பார்க்குற மாதிரி நமக்கு தோணும்.

அதனால, நாம தீயா?! வேலை செய்றோம்ன்னு சீன் போட்டாகனுமே, அதுக்குதான் சில டிப்ஸ்..., டிரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் என்னன்னு  சொல்லுங்க...



   1. உங்க மானிட்டரில முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ இல்ல  கோடையோ (code) திறந்து வச்சுட்டு..., ஏதையோ  யோசிக்குற மாதிரி,  அதையே பார்த்துக்கிட்டு இருங்க . பார்க்குறவங்கலாம்  நீங்க பிஸியா இருக்கீங்கன்னு நினைச்சுக்குவாங்க.

2. அடிக்கடி நெத்தியை சொறிஞ்சுக்கோங்க. . எப்ப பார்த்தாலும்னெத்தியை சொறிஞ்சுக்கிட்டு இருந்தாலும் சந்தேகம் வந்துடும். அதனால, கொஞ்சம் மாத்தி  பல்லை(உங்க)  கடிச்சுக்கோங்க.  ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செஞ்சுட்டு யோசிக்குற மாதிரி  பாவ்லா காட்டுங்க.

3. கம்ப்யூட்டர் மவுஸையூஸ் பண்ணாம  கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை யூஸ் பண்ணா பிஸியா, வேகமாக வேலை செய்ற மாதிரி தோணும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைச்சுக்கிட்டும்,  வெறிச்சிக்கிட்டும் பாருங்க. கூடவே நகத்தையும் கடிங்க.

.5. சீட்டுல சாய்ஞ்சு  உட்காராம முன்னால இழுத்து விட்டு, சில நிமிசங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிங்க.

6. அப்பப்போ பேப்பர் ஃபைல்களை கலைச்சு விட்டு பெருமூச்சு விடுங்க. நீங்க முக்கியமான பேப்பர் எதையோ தேடுறீங்கன்னு  நினைச்சுக்குவாங்க. கடைசியில எதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." இல்லைன்னா  "சக்சஸ்" ன்னு  சொல்லுங்க.

7. எங்காவது எழுந்து போகும்போது,  வேகமாக நடந்து போங்க. ஏதோ முக்கியமான விஷயத்துக்காக நீங்க  போறீங்கன்னு  மத்தவங்க  நினைச்சுக்குவாங்க.

8. உங்க கைகளை பிசைஞ்சுக்கோங்க. , கைவிரல்கள்ல சொடக்கு எடுத்துக்கோங்க . அப்பப்போ டென்ஷனா டேபிளில் ஒரு தட்டு தட்டுங்க.

9. உங்க மானிட்டருக்கு பகக்த்துல,   எப்பவும் ஒரு நோட்டையும்,பேனாவையும் திறந்தே வையுங்க. அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை, நம்பர்களையும் கிறுக்கிக்கிட்டிருங்க.

10. ஆபீசுக்குள்ள எங்கே போறதாயிருந்தாலும் கையில ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போங்க. நீங்க முக்கியமான மீட்டிங்குக்கோ, இல்ல  ஹிண்ட்ஸ் எடுக்கவோ போறீங்கன்னு நினைச்சுக்குவாங்க.

11. ஆபீஸில் நடந்து போகும்போது எதிர்க்க வர்றவங்க  சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாம போங்க. அப்பதான் நீங்க டென்ஷனா வேலை செய்யுறதா நினைச்சுக்குவாங்க. அப்புறமா அவங்ககிட்ட போய் பிஸியாக இருந்தேன், ஸாரி ன்னு  சொல்லிக்கலாம்.

12. சரியாக காபி வர்ற நேரத்துல எங்காவது எழுந்து போய்டுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து  காபி கேளுங்க. மீட்டிங் போயிருந்தேன், ஃபைல் தேடினேன்னு புருடா விடுங்க.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நாலு இல்லை அஞ்சு அப்ளிகேஷன்களையோ இல்ல பைல்களையோ திறந்து வெச்சுக்கோங்க. அப்பப்போ  அதையெல்லாம்  ஓபன் செஞ்சு,  குளோஸ் செஞ்சு, மாத்திக்கிட்டே இருங்க. 

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கிட்டிருங்க. சீரியஸா முகத்தை வச்சுக்கிட்டு  குறுக்கும் நெடுக்கும் நடங்க.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயா  இருந்தா (உங்களைப் போலவே வெட்டியா இருக்குற) உங்க டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்க. போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டுட்டு வாங்க.

16. முதல்ல  வர்ற  காபியைக்குடிக்காதீங்க. அப்படியே ஆற விடுங்க. மறுபடியும் கேட்டு வாங்கிக் குடிங்க. கொஞ்சம் பிஸியா இருந்ததால காபி குடிக்க முடியவிலைன்னு  (மற்றவர் காதில் விழும்படி) சத்தமா  சொல்லுங்க.



17. இதையெல்லாத்தையும் மீறி உண்மையாவே ஏதாவது ஆபீஸ் வேலை செய்ஞ்சுட்டா?!  அதை மத்தவங்ககிட்ட  சந்தோஷமா சொல்லுங்க.. நம்ம பெருமையை நாமளே பேலைன்னா,   நமக்காக யார் பேசுவாங்க!?

டிஸ்கி: இதையெல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டு நெகடிவ்வா ரிசல்ட் வந்தா..., நிர்வாகம் பொறுப்பல்ல.

Wednesday, July 25, 2012

அம்மாவின் அறிவுரை

சலிச்சு எடுத்த அரிசியை கையில் எடுத்து!!
பாத்திரத்தில்  போட வண்டுகள் குடு குடுவென ஓட!!
என் மனசோ படபடப்பில் அங்கும் இங்குமாய் ஆட !!
நான் என்ன தவறு செய்தானோ என்று நினைவலை ஓட!!!


முன்னொரு நாள் சமையல் செய்ய நான் நாட !!
கையில் ஈரத்தோடு அரிசி அண்டாவை தேட !!
நான் மெல்ல மெல்ல நடந்து!!
கால்படியை எடுத்து ஈரக்கையுடன் !!
அண்டாவில் விட்டேன் !!


அரிசியும் வந்தது நேக்காக!!
இது போல் தவறு செய்தேன்!!
பல முறை சமத்தாக !!
அது சரி வந்தேன் நிகழ காலத்துக்கு அதிரடியாய் !!
சடக்குன்னு சொடுக்கு போடும் முன் !!

அம்மா சொன்ன விஷயத்தை !!
பின்பற்றவில்லை அன்று!!
நான் வருந்துகிறேன் இன்று!!
ஈர கையில எடுகாதடி என்று !!
அவர் சொன்ன வாக்கியம் தான் அது!!


வண்டுக்களுடன் தினமும் !!
ஒரே போராட்டம் தான் !!
ஆடு புலி ஆட்டம் தான் !!
என் பாடு திண்டாட்டம் தான்!!
ஆனால் நான் தான் சாமர்த்தியமாக!!
ஜெயிக்கிறேன் லாவகமாக!!

Thursday, July 19, 2012

மலர்களே! மலருங்கள்...., பாசப்பைங்கிளியை வாழ்த்த வாருங்கள்

 எனக்குப்பின், பல வருடங்கள் கழித்து வீட்டில் சின்னஞ்சிறு பாதம் பதியப்போகுதுன்னு  ஏகப்பட்ட எதிர்பார்ப்ப்பை மனதில் சுமந்தபடி  நானும், என் பெற்றோர்...,

வயிற்றில் குழந்தையின் அசைவை உணராமல், அருகிலிருக்கும் மருத்துவரை நாட, அவரின் தவறான கணிப்பில் குழந்தை இறந்துவிட்டது. ஸ்கேன் செய்து பார்த்துட்டு  ஆப்ரேஷன் செஞ்சு எடுத்துடலாம்ன்னு சொன்னதை கேட்டு அலறி அடிச்சுக்கிட்டு...,

பெரிய ஆஸ்பிட்டலுக்கு செல்ல, குழந்தை பூரண நலம். கடைசி சில நாட்கள் குழந்தையின் அசைவு தாய்க்கு அதிகம் தெரியாதென்று வயிற்றில் பால் வார்க்க....,

 பதினெட்டு வருடங்களுக்கு முன் இதே நாளில், துணியில் சுற்றப்பட்ட பொற்குவியலென கையில் வாங்கினேன்.பிரசவ வலி சிறிதும் இன்றி, ”என் மகளை”

                         

அன்றைய தினத்தை தவிர,  அவளால் நான் எதற்கும் பதறி நின்றதில்லை. அவ்வளவு பக்குவமாய் நடந்துக்குவா.

என் கண்ணை பார்த்தே, என் மனசுல உள்ளதை புரிஞ்சு நடந்துப்பா. அவளின் ஒரே பார்வையில்,  என் உலகமகா கோவத்தை கரைக்கும் உத்தி தெரிந்தவள்...

நான் சொல்வதற்கெல்லாம் எதிர்வாதம் செய்வா. ஆனா, சொல்பேச்சை தட்டாதவ.



                                              

என் பெரிய பொண்ணு தூயா, படிப்புல, பேச்சுல, நடத்தைலன்னு படு சுட்டி. அவ,  ரெண்டாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த போது ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா.

அவக்கிட்ட, ஒரு இங்கிலிஷ் வார்த்தை சொல்லி அதுக்கு மீனிங்க் கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிட்டா.

அடுத்து சின்ன, சின்னதான வாக்கியம் சொல்லி கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிக்கிட்டே வந்தா..., அந்த நேரம் பார்த்து என் ஃப்ரெண்ட் வந்தாங்க. அவங்க  எதிர்க்க பெருமை பீத்திக்கனும்ன்னு  "I AM READING WELL"க்கு மீனிங்க் சொல்லுன்னு கேட்டேன்....

”நான் கிணத்துக்குள்ள இருந்து படிக்குறேன்”ன்னு சொல்லி குண்டை தூக்கி போட்டா.  ஏண்டி, தப்பா  சொல்றே? மீனிங்க் தப்பா வருதேன்னு கேட்டா..., READINGன்னா படிக்குறது, WELLன்னா கிணறு. ஒண்ணா சேர்த்தா, கிணத்துக்குள்ளிருந்து படிக்குறதுன்னு சொல்லி என்னை அசடு வழிய வெச்சா.
 
                                   



நிலவுக்கும், தமிழுக்குமான
ஒரு ஒற்றுமை “தூய்மை”..,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்

நிலைகொண்ட உனக்கு 
யோசித்து...,பெயரிட்டான்...,
உன் மாமன்  அப்பெயரினை,
”தூயா”வென.

சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ,
பாசத்தின் வெள்ளமடி!
என்னைத் தாயாக்கிய பெண்ணே,

நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!
கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

சமையலை  கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!
தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும்,
குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல்
பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும்
குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

கல்வியிலே சிறப்புற்று
பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்வாய்!

'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுவேனடி, பெண்ணே,
உன்னால் பேரின்பம்!

இத்தனையும் செய்துமுடிக்கப் போகும் நீ
போனால் போகிறதென்று?!
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய்
வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான்,
பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினெட்டாம் ஆண்டில்
பாதம் பதிக்கும் உனக்கு
"பதினாறு" பேறும்
தவறாமல் சேரட்டுமமெஎன்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே!
பல்லாண்டு நீ வாழி!



 டிஸ்கி: இந்த கவிதையை கீத மஞ்சரியிடமிருந்து சுட்டுக்கிட்டேன். பர்த்டே அதுவுமா அவ போடுற ஆட்டத்தை பார்க்க இங்க போங்க
  

Tuesday, July 17, 2012

வந்தேன்.., வந்தேன்..., மீண்டும் வந்தேன் நானே!


                                                 
வணக்கம் உறவுகளே நலமா?  

என்னடா! ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு..., நீங்க  பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால்.....,

 SO, SORRY. ஏன்னா ?   I CAME BACK கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . ஏறத்தாழ 2 வருசமா வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை. ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்ன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது எனக்கு கேட்குது. 

 SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை,  குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு. 

   பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு ரொம்ப  முக்கியமாக்கும்ன்னுலாம் கேட்கப்படாது..., கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம். 

 இதுவரைக்கும் சைலண்டா இருந்த என் வலைப்பூ இனி,  தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைலாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது.)   

இனி,  பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும். அது உங்க தலையெழுத்து நான்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.  இல்லாட்டி தூங்கும்போது எதிர்க்க நிக்குறவங்க யாருன்னு தெரியாம போய்டனும்ன்னு இஷ்ட தெயமான ஆஞ்சிநேய சாமிக்கிட்ட வரம் வாங்கி வந்திருக்கேன்.

டிஸ்கி:  சில  சொந்த சூழ்நிலைகளின்  காரணமாக வலைப்பக்கம் வராம இருந்தாலும்,  நிறைய உறவுகளின் தரமான பதிவுகளை மிஸ் பண்ணி இருக்கேன்.  இனி தொடர்ந்து வந்து,  படித்து, கருத்துக்களை சொல்வேன்.