Friday, July 31, 2020

இந்திய கணவன்மார்கள் தினமா இன்று?! -வரலட்சுமி நோன்பு ஸ்பெஷல்


கல்யாணத்தப்போ என் கால்ல விழுந்தது. அதுக்கப்புறம் என் பொண்டாட்டி என் கால்ல விழவே இல்லன்னு  புலம்பும் ஆண்கள் நிறைய உண்டு. ஆனா, ஒருசில சமுகத்தாருக்கு இந்த ஏக்கம் வருடத்துக்கு ஒருமுறை தீரும். ஒரு சில ஆண்களின் ஏக்கத்தை தீர்க்கும் நாள் வரலட்சுமி விரதமாகும்.  இன்றைய தினம் , வீட்டுக்காரர், குழந்தை, குடும்பம்லாம் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு விரதமிருந்து அம்பாளை கும்பிட்டு வீட்டுக்காரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் நன்னாளே இந்நாள். வெள்ளைக்காரன் பாதர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு கொண்டாடுனா கிண்டல் பண்ணுறோம். ஆனா, நாம புருசனுக்காக கொண்டாடும் இந்த பண்டிகையை கிண்டல் செய்யமாட்டோம். வரலட்சுமி நோன்பை இந்தியாவின் ஹஸ்பண்ட் டேன்னு சொல்லலாமோ?!
Raja Ravi Varma - Collections - Google+

பத்ரச்வரஸ்ன்ற மன்னன் சிறந்த விஷ்ணுபக்தன். அவன் மனைவி சுரசந்திரிகா.  இவர்களின் மகள் சியாமபாலா. சுரசந்திரிகா இயல்பிலேயே ஆணவம், தலைச்செருக்கும் மகாராணியென்ற மமதையும் கொண்டவள். ஆனால் சியாமபாலாவோ தாய்க்கு நேர் எதிரான குணம் கொண்டவள். மிகுந்த அன்பு கொண்டவள். மனிதரை மதிக்கும் குணம் கொண்டவள். சியாமபாலாவை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தனர். காலங்கள் ஓடின.   ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி வேடத்தில் பத்ரச்வரஸ் அரண்மனைக்கு மகாலட்சுமி வந்தாள். அவளை யாரோ என்று கருதிய சுரசந்திரிகா அரண்மனையைவிட்டு விரட்டி அடித்தாள்
சுரசந்திரிகா அரண்மனையை  விட்டு அகன்ற மகாலட்சுமி நேராய் சுரசந்திரிகாவின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். தாயைப்போல உதாசீனப்படுத்தாமல்  கர்ம சிரத்தையுடன் கேட்டு, பயபக்தியுடன் வரலட்சுமி பூஜையை செய்து வழிப்பட்டாள். விரதத்தின் மகிமையால் மலைப்போல செல்வம் குவிய துவங்கியது.. மக்கட்செல்வமும் பெற்றாள். பெற்றோர் வறுமையில் இருப்பதை அறிந்த சியாமபாலா ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அனுப்பித்தாள்.  அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே! அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம்,  அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே   ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது!! இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா என்ன ஏதுவென்று விசாரிக்க, மூதாட்டியாய் வந்த மகாலட்சுமியை விரட்டியடித்த விவரத்தினை அறிந்துக்கொண்டாள். தாயிடம் விவரத்தினை சொல்லி, சுரசந்திரிகாவையும் வரலட்சுமி விரதம் இருக்க சொன்னாள். சுரசந்திரிகாவும் மனம் திருந்தி வரலட்சுமி விரதத்தினை முறையாக கடைப்பிடித்தாள். இழந்த செல்வத்தினையும் திரும்ப பெற்றாள்.

முன் ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள்,  நீங்கி நாம் நலமோடு வாழ தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்டபம் அமைத்து, ஒரு மனையில் கோலம் போட்டு,  லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம்  வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ஒருமுறை பார்வதியும், பரமசிவனும் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்தனர். அவ்விளையாட்டுக்கு பரமசிவனின் பணிப்பெண்ணான சித்திரநேமி என்ற தேவர்குலப்பெண் நடுவராய் இருந்தாள். ஆட்டத்தின் முடிவில் பரமசிவன் வெற்றி பெற்றதாய் அறிவித்தாள். தன் எஜமானுக்கு சாதகமாய் சிவன் வெற்றி பெற்றதாய் சித்திரநேமி மீது கோவம் கொண்ட பார்வதிதேவி, சித்திரநேமிக்கு தொழுநோய் வருமாறு சபித்தாள். தன்மீதுள்ள பாசத்தால் சித்திரநேமி அப்படி நடந்துகொண்டாள், அவளுக்கு சாபவிமோசனம் கொடு என பரமசிவன் பார்வதிதேவியை சாந்தப்படுத்தியபின், தேவ கன்னிகைகள், எப்போது குளக்கரையில் வரலட்சுமி விரதமிருப்பார்களோ, அப்போது உன் சாபம் நீங்குமென சொன்னாள். சித்திரநேமி பூமிக்கு வந்து, யாருமில்லாத ஒரு குளக்கரையில் தன் வாழ்நாளை கழித்து வந்தாள். அக்குளக்கரைக்கு தேவக்குல பெண்கள் வரலட்சுமி விரதமிருக்க வந்தனர். அவர்கள் வரலட்சுமி விரதமிருப்பதை கண்டதும் சித்திரநேமியின் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து சித்திரநேமியும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கலானாள். 

உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

பக்தியோடு  நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் மாதிரியான அன்னதானம் செய்யலாம். . எளியோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தர, சாருமதி கனவில் தோன்றி, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்க அறிவுறுத்தினாள். இறை வழிப்பாட்டோடு, கணவனையும், மாமனாரையும், மாமியாரையும் சேர்த்து வணங்கி நீண்ட ஆயுளோடு, செல்வ செழிப்புடனும், சுமங்கலியாய் வாழ்ந்தாள். சாருமதியின் செயல்பாட்டை பொருத்தே இன்றும் விரதமிருப்பவர்கள்  கணவன், மாமியார், மாமனார் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவதும் உண்டானது..

வெறும் செல்வச்செழிப்புக்கு மட்டுமில்லாம மாமனார், மாமியார் உறவு மேம்படவும் இவ்விரதம் வழிவகை செய்யுது.  ஆன்மீக காரணங்களுக்காகவும், செல்வத்துக்காகவும் நோன்பு இருக்கோமோ இல்லியோ! மாமியார், மாமனார் மனசு மகிழவும், புகுந்த வீட்டாரின் அன்பு கிடைக்கவும், கணவன் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கவும் விரதம் இருக்கலாமே!



விரதம் இருக்கும் முறை..
வீட்டை சுத்தப்படுத்தி கோலமிட்டு, செம்மண் இட்டு, வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்பி, ஒரு மனைப்பலகைமீது  சந்தனத்தால் ஆன உடல் செய்து அம்மன் முகம் வைத்து வரலட்சுமியினை அதில் எழுந்தருள செய்ய வேண்டும். அம்மனுக்கு மஞ்சள் நிற புடவையை கட்டவேண்டும். அம்மனை தாழம்பூ கொண்டு அலங்கரிக்க வேண்டும்.  சிலைமுன் தலைவாழையிலை பரப்பி, அதில் படி பச்சரிசி நிரப்பி, அரிசியின்மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொற்காசுகள், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைக்க வேண்டும்.  அவரவர் வசதிக்கேற்ப ஒரு செம்பினை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு,  அதில் நீர் நிரப்பி, மாவிலை வைத்து அதில் முழு தேங்காயினை வைத்து அரிசிக்கு நடுவில் வைக்கனும்.  கும்ப பூஜை, கணபதி பூஜை முடித்து அஷ்டலட்சுமி பூஜை செய்ய வேண்டும், அருகம்புல்லினை கொண்டு பூஜை செய்வது நலம். பூக்களை கொண்டும் பூஜை செய்யலாம்.. அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லனும். வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், ஜாக்கட் பிட், சீப்பு, கண்ணாடி , வளையல் என அவரவர் வசதிப்படி கொடுக்கலாம். அரிசி பாயாசம், கொசுக்கட்டை, அதிரசம் மாதிரியான நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜை முடிஞ்சதும் பூஜையில் வைத்திருக்கும் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும். கலசத்தினை அரிசி இருக்கும் பாத்திரத்தில் வைக்கவனும். இப்படி செய்யுறதால் அன்னப்பூரணி அருள் கிட்டுமாம். லட்சுமி சிலை செய்ய பயன்படுத்திய சந்தனத்தை கிணறு அல்லது ஓடும் நீர்நிலைகளில் கரைச்சுடனுமாம்..

ஆங்.. முக்கியமான ஒரு விசயத்தினை சொல்ல மறந்துட்டேன். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி வாங்கனுமாம். முக்கியமா வூட்டுக்காரர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கனுமாம். அதனால், சகோதரர்களே! இந்த நாளை மிஸ் பண்ணிடாம சீக்கிரமா குளிச்சு முடிச்சு ரெடியா இருங்க. மாமா ரெடியாகிட்டாரான்னு கேக்குறீங்களா?! ஹே! ஹே! ஹேய்ய்ய்ய்.. குறிப்பிட்ட சில இனத்தவர் தவிர மத்தவங்க வீட்டில் ஊர்பக்கம் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கமில்லாததால் உம்ம்ம்முன்னும், நான் ஜம்முன்னும் இருக்கோம்...

அனைவருக்கும் வரலட்சுமி விரத தின வாழ்த்துகள்..

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, July 29, 2020

எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்?!... மாமல்லபுரம்- அன்றும்-இன்றும் -மௌனச்சாட்சிகள்

சிலரை பார்த்ததும் பிடிக்கும், சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்.. சிலரை எப்ப பார்த்தாலும் பிடிக்காது.. இது சினிமா டயலாக். நம்ம வீட்டில் இருக்கும் பழைய போட்டோக்களை பார்க்கும்போது  எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்னு  ஆச்சர்யப்படுவது வழக்கம்.  இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், நம்மை சுற்றியிருக்கும் கலைபொக்கிஷங்கள், கட்டிடங்கள், இடங்களுக்கும் பொருந்தும்.... எப்படி இருந்த இடம், இப்படியாகிட்டதுன்னு வியப்பாய், ஆச்சரியமாய், கோவமாய், வருத்தமாய் நம் மனதில் எண்ணங்கள் அலைமோதும். அதுமாதிரியான எப்படி இருந்த நீ இப்படியாகிட்டியேன்ன்னு நினைக்க தோணும் மகாபலிபுரத்தின் சில இடங்களை பார்ப்போம்.

Friday, July 24, 2020

தாய்மையை போற்றும் ஆடிப்பூரம்

ஒரு பொண்ணு பொறந்து, வளர்ந்து, பூத்து, காதலாகி கசிந்துருகி, கல்யாணம் கட்டி, தாயாகின்னு அத்தனை நிகழ்வும் விசேசமானது. கொண்டாடத்தக்கதும்கூட. சாதாரண மானுட பொண்ணுக்கே இப்படின்னா அகில உலகையும் உருவாக்கி, காக்க துணையாக நிற்கும் இறைவியின் அவதார நிகழ்வுகள் எத்தனை சிறப்பு வாய்ந்ததாய் இருக்கும்?! அத்தகைய சிறப்பு வாய்ந்த நாள்தான் இன்றைய ஆடிப்பூரம். 

நள வருடம்... ஆடி மாதம்... சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும்...., சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த  சுக்ல பட்சம், சதுர்த்தசி திதி, பூரம் நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று அவதரித்து துளசி மாடத்தின்கீழ் பொறுமைக்கு பேர்போன பூமாதேவி ஆண்டாளாய் அவதரித்தாள். பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு சீரும் சிறப்புமாய் வளர்க்கப்பாட்டாள். ஆண்டாளின் ஆதிப்பெயர் கோதை. வடமாநிலங்களில் இவள் பெயர் கோதாதேவி.  விஷ்ணு கையிலிருக்கும்   சங்கும், சக்கரமும், அரங்கனின் படுக்கையான ஆதிஷேசன்கூட ஆழ்வர்களாக அவதாரமெடுத்து அரங்கனை அடைந்ததைக்கண்டு பூமாதேவிக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. அவள் கலக்கம் போக்க ஆண்டாளாய் அவதரிக்க அருள்புரிந்தார் எம்பெருமான். அவ்வாறே எழுந்தருளி அரங்கனை சேர்ந்தாள். ஆண்டாள் கதையை விரிவா வேற ஒரு பதிவில் பார்ப்போம்.. 
இந்த ஆடிப்பூர நாளில்  திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைப்பெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் சகல அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். 

.பெண் பூப்பெய்தினால் மட்டுமே தாய்மை அடைய முடியும்.. பெண் தாய்மை அடைந்தல்தான் புது உயிர் படைக்கப்படும்.  இதுக்கு அம்பாளும் விதிவிலக்கல்ல. எத்தனை எத்தனையோ உயிர்களை படைக்க வேண்டிய அம்பாள் ருதுவானது இந்த ஆடிப்பூரத்தில்தான். ஆடி மாதத்தில்தான் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும். இந்நன்னாளில்தான் அன்னை பூப்பெய்தியாக புராணங்கள் கூறுகின்றது.  ருது சாந்தி செய்தாலும் அம்பாள் இன்று மட்டும் அழிக்கும் சக்தியாய் அவதாரமெடுக்கிறாள். அதனால், அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வந்தால் நலம் பயக்கும். அவ்வாறு கோவிலுக்கு செல்ல முடியாதவங்க  வேப்பிலையையே அம்மனாக பாவித்து, செம்பாலான குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி, குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி, வாழை இலை விரித்து, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் இக்குடத்தை வைத்து, பூமாலைகள் சூட்டி, வண்ண வளையல்கள்  கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து, நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து, நைவேத்தியம் படைத்து தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி 12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம். பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்..

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம்.  மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும், மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும், ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும், புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு விநாயகன் மற்றும் முருகன் மகனாக இருந்தும்  தனக்கு வளைகாப்பு நடக்கவில்லையே என கவலை உண்டாயிற்று. 

ஈரேழு லோகமும்,  மூவுலகையும் காக்கும் அம்பிகைக்கு இப்படி உண்டான கவலையை கண்ட தேவாதி தேவர்கள், ரிஷிகள், ரிஷிபத்தினிகள், முனிவர்கள், மும்மூர்த்திகள், லட்சுமி, சரஸ்வதி அனைவரும் சேர்ந்து வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். வளைக்காப்பு செய்ய கரு  உருவாக வேண்டுமே என்ன செய்ய?! தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி விதைகளை முளைப்பாறியாக்கி, அம்பிகையின் வயிற்றில் வைத்து கட்டி கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி வளைகாப்பு நடத்தினர்.  விதை முளைத்து வரும் வேளையில் பார்த்தால் ஆண் உயிரணு போல தோணும். அந்த விதையை, பெண் அம்சமான பூமியில் விதைத்தால் ஒரு உயிர் வளரும்.  ஆண், பெண் சேர்க்கையால் வரும் உயிரைப்போலவே பயிரும் கொண்டாடப்படனும்ன்னுதான் இந்த ஒரு ஏற்பாடோ?!

சரி சரி விசயத்தை விட்டு எங்கயோ போய்ட்டோம்...  அம்மனுக்கு வளைகாப்பு செய்து வாய்க்கு ருசியாய் சமைத்து உணவு கொடுத்து அவளை சமாதானப்படுத்தினர்.  அந்நாளை நினைவுக்கூறும் விதமாய் இன்றும் பல அனேக அம்மன் கோவில்களில் அம்மனுக்க்கு வளைகாப்பு நடத்தப்படும். இதற்காகவே அவரவர் இல்லங்களை சுத்தப்படுத்தி நவதானியங்களை பதப்படுத்தப்பட்ட மண்ணில் விதைத்து  கோமியம், சாணம், பால், தயிர், நெய் கலந்து உருவாக்கப்பட்ட பஞ்சக்கவ்வியம் தெளித்து பாதுகாத்து வளர்த்து வருவர். அந்த ‘மூணு’ நாட்களில் உள்ள பெண்கள் இந்த வேலையிலிருந்து ஒதுங்கியிருந்து முளைப்பாரி தயார் செய்து ஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னிதியில் சேர்ப்பர். முளைப்பாரியின் வளர்ச்சியினை கண்டு வீடும் நாடும் எந்தளவுக்கு செழிப்பா இருக்கும்ன்னு கணிப்பர்.  முளைப்பாரி பழக்கம் உண்டாக இன்னொரு காரணமும் உண்டு.
ஒவ்வொரு அறுவடையின்போதும், நல்லா தேறின விதைகளா தேர்ந்தெடுத்து, அடுத்த முறை, விதைக்க வேண்டி, தானியங்களை  குதிர், சால், கோணிப்பைகளில்  சேர்த்து வைக்கும் பழக்கமிருந்துச்சு.  வசம்பு, வேப்பிலை, நொச்சி, மஞ்சளை விதைகளோடு சேர்த்து பூச்சி தொல்லைல இருந்து காப்பாத்துவாங்க.  அப்படி பலகாலமாய் சேர்த்து வச்ச விதைகள் சரியாய் முளைக்குதான்னு பார்க்க, திருவிழா, திருமணம் மாதிரியான நாட்களில் முளைப்பாரி நிகழ்வு உண்டானது.

பெரும்பாலும் மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில்தான் கோடை கோடை சாகுபடி நடக்கும். அதுமட்டுமில்லாம  விதைக்கும் நாட்களுக்கு முன் விதைகளை டெஸ்ட் செய்யும் வழக்கம் உண்டானது. வளர்பிறை நாட்களில் விதைகளை விதைத்து, ஒன்பதாம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று ஒவ்வொருவர் வீட்டு முளைப்பாரியும் காட்சிப்படுத்துவாங்க. , அந்த முளைப்பாரியில் எதாவது கோளாறு இருந்தால் ஊர் பெரியவங்க ஆலோசனை சொல்வாங்க. அதுக்கப்புறம்,   10 ம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பாங்க. இந்த தொழில்நுட்பத்தை  மக்கள் மறக்கக்கூடாதுன்னுதான் முளைப்பாரி உண்டானது.  மண்பானை,பனை,மூங்கில் கூடைகளில் சுத்தமான இடத்திலிருந்து  வண்டல் மண் எடுத்து வந்து, அதனுடன் மக்கிய எடுக்கிலையை சேர்த்து,முளைப்பாரி சட்டி தயார் செய்து,   பாதுகாத்த விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்து,   அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும். முளைக்கட்டிய  விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள். அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை,மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். முளைப்பாரி போட்ட வீடுளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்நாட்களில் வெளிநபர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்கலில் முளைப்பாரியின் அருகில் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களில் அவர்களின் உடம்பில் இருந்து அதிகப்படியான வெப்பம் மற்றும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறுவதால், அது பச்சிளம் குழந்தை போல் உள்ள முளைப்பாரியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள்.
அன்னை, அழகு ரூபம் கொண்டு பல்லாயிரக்கணக்கான கண்கள் கொண்டவளாகத் தோன்றியதால், சதாக்ஷீ (சத + அக்ஷம் – கண்) ஆனாள். ஆயிரமாயிரம் கண்களால் அருள்பார்வை நோக்கிய அம்பிகையின் திருவடிவில்,  அற்புதம் – தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், கனிகள், கீரைகள், மூலிகைகள் என்று பற்பல உணவுகளை, தமது திருமேனியெங்கும் நிறைத்தும் தாங்கியும் அன்னை காட்சி தந்தாள்.

சாகம்பரி (சாக – காய்கனி தொடர்பாக; அம்பரம் – ஆடை; காய் கனிகளையே ஆடையாகத் தரித்தவள்) ஆனாள். உலகின் தவிப்பைத் தீர்த்து உணவிடுவதற்காக, தாமே உணவுக் களஞ்சியமாக அன்னை அருள்பாலித்த வடிவமே, சாகம்பரி தேவி! பரதேவதை, சாகம்பரியாக ஆவிர்பவித்து,கோடி சூரியப் பிரகாசம் தன்னுள் ஐக்கியப்பட்ட அம்பிகை தன் கரத்தில் தாமரை ஏந்தியிருக்க அந்தத் தாமரையை வண்டுகள் சுற்றிச் சூழ்ந்திருப்பது போல் காய்கள், கனிகள், வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை அவளுடைய பற்பல கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும்அன்னை சாகம்பரி தேவி

திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை. 

கல்மாஷபாதன்ன்ற சோழ மன்னனுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.  இவன் சிறந்த சிவபக்தன். தனக்கு வாரிசு வேண்டுமென அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டான். மன்னனின் குறை தீர திருவரங்குளத்தில் மறைந்திருக்கும் சிவலிங்கத்தை த்தேடி வணங்க சொன்னார். மன்னனும் அத்தலம் சென்று தேடி சிவலிங்கத்தை கண்டுப்பிடித்து  கோவில் கட்ட சென்று இறைவனை தேடினான். 

இடையர்கள் கொண்டுச்செல்லும் பூஜைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் இடறி விழுவதை கண்ட மன்னன் அந்த இடத்தில் தன் வாளால் கீறிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலைமீது வாள்பட்டு ரத்தம் பீய்ச்சி அடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன்... மாபெரும் தவறு செய்துவிட்டேனென உயிரை மாய்த்துக்கொள்ள சென்றான். மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதிதேவியுடன் திருமணக்கோலத்தில் காட்சிதந்ததோடு பிள்ளைச்செல்வமும் அருளினார். இந்த நிகழ்வு ஆடிப்பூரத்தன்று நிகழ்ந்தது. இறைவன் அருளால் மன்னன் குலம் விளங்க ஆண்குழந்தை பிறந்தது. 

இதுமட்டுமில்லாம பெரும்பாலும் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த மாதிரி பத்துநாள் பிரம்மோற்சவம்  திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல்வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை எனுமளவுக்கு அத்தனை கோலாகலம். 

எல்லா கோவில்களிலும் அம்மன் வளைக்காப்புக்கென பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு, அதையே பிரசாதமாக பக்தர்களுக்கு தருவர். இதை வாங்கி அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை...  இன்னாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும். இந்நாளில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற அவள் பாதம் பணிவோம்!!

நன்றியுடன்,
ராஜி.

Saturday, July 18, 2020

இந்த பெட்டில் படுக்க சொன்னால் படுப்பீங்களா?! - சுட்ட படம்

பக்கம் பக்கமா படிக்கும் இம்சையிலிருந்து இன்று விடுதலை.. ட்விட்டர், பேஸ்புக்ல வலம் வந்தவைகளில் மனதில் பதிந்தவைகளின் தொகுப்பு... ஏற்கனவே பார்த்திருந்தால் மன்னிச்சு..

Friday, July 17, 2020

ஆடி மாதத்தில் கூழ் வார்க்கும் பழக்கம் உண்டானது எப்படி?! - புண்ணியம் தேடி...


ஆடிமாசத்தை பத்தி, இந்த மாசத்துல வரும் விசேசங்கள், விரதங்கள்ன்னு நேற்றைய பதிவில் பார்த்தோம்.  அதனால, நேரா பதிவுக்கு போய்டலாம். ஆடி மாசத்து முதல் வெள்ளிக்கிழமையன்று நாம வணங்க வேண்டியது சொர்ணாம்பிகையை.   சிவனை தரிசிக்க 16 வருடங்கள் கடுந்தவம் புரிந்தார் காகபுஜண்டர். அவரின் தவத்தினை மெச்சிய சிவப்பெருமான்  16 முகங்களோடு காட்சியளித்தார். என்ன வரம் வேண்டுமென காகபுஜண்டரை கேட்டபோது எனக்கு காட்சியளித்த இத்தலத்தில் தாங்கள் எழுந்தருளி மக்களுக்கு பொன், பொருள்ன்னு அனைத்து செல்வங்களையும் அள்ளித்தருமாறு வேண்டினார். அவ்வாறே வரமளித்த இறைவன் அங்கேயே எழுந்தருளினார். அங்கு அவருக்கு பெயர் சுவர்ணபுரீஸ்வரர் என்றும், அம்மனுக்கு சொர்ணாம்பிகைன்னும், சிவனின் காவல்தெய்வமான காலபைரவருக்கு சுவர்ண பைரவர் என்றும் பெயர். சகல செல்வங்களையும் அள்ளித்தரும் இந்த ஆலயம், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பொன்பரப்பின்ற ஊரில் இருக்கு. அந்த அம்மனைதான் இன்று நம் இல்லங்களில் ஆவகணப்படுத்தி வழிப்பட வேண்டும்.   

Thursday, July 16, 2020

அனைவரையும் பிசியாக வைத்திருக்கும் ஆடி மாதம் பிறந்தாச்சு...

ஆடி மாதம்’ எந்த மாதத்திற்குமில்லாத சிறப்பு இந்த மாதத்துக்கு உண்டு.   இந்த மாசம் முழுக்கவே குடும்பம், இறை சிந்தனை, விவசாயம்ன்னு நீத்தார் கடன்ன்னு இந்த மாசம் முழுக்கவே தினத்துக்கொரு பண்டிகை, விசேசம்ன்னு எல்லாரும் பிசி.  அதனாலதான் புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளை பிரிச்சு வைக்குறது. இந்த ஆடி மாசத்துலதான் விவசாயமும், இறை வழிபாட்டுலயும் மனசும், உடம்பும் லயிக்கனும்ன்னுதான் புதுப்பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டிப்போறதும், கல்யாணம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளை செய்யாம இருக்குறதும்.. அந்த காலத்தில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்துச்சு. ஆடிப்பட்டம் தேடி விதைன்னு ஒரு பழமொழியே இருக்கு. ஆடியில உழவு, சேடை ஓட்டுதல்,  நடவு, விதைத்தல், நடுதல்ன்னு விவசாயம் சார்ந்த பணிகள் ஏராளம்.  

Friday, July 10, 2020

அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.

கடந்தவாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களுக்கு ஆன்மீக யாத்திரை சென்ற பட்டியலை பார்த்துக்கொண்டே வரும் போது சில கோவில்களின் படங்கள் எந்த இடத்தில சேமித்து வைத்திருந்தேன் என்று தெரியவில்லை அந்த குழப்பத்தில்,சரி என்று மொபைலில் சேமித்துவைத்திருந்த திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்ற படங்கள் கண்ணில்படவும் உடனே அந்த கோவிலை பற்றி போனவாரம்  பதிவு செய்துவிட்டேன்.அதற்கு முந்தைய வாரத்தில் நம்முடைய புண்ணியம் தேடி ஒருபயணம் பதிவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள சோழராஜா கோவிலில் தரிசனம் செய்தோம்.இந்தவாரம் நாம தரிசனம் செய்ய போறது.அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்,கிருஷ்ணன் கோவில்...

Sunday, July 05, 2020

தம்பியென்ற நிலையை கடந்து போனானே! போனானே! - பாட்டு புத்தகம்

தனியாய் பிறந்து வளர்ந்ததால் எனக்காக, என் சார்பா பேச யாருமில்லைன்ற எண்ணம் எனக்கு இன்றுவரை உண்டு.  இரண்டாவது பெண்ணாய் பிறந்தபோது ஆண் பிள்ளை இல்லியேன்ற எண்ணத்தைவிட, இரு பெண்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாய் இருப்பாங்கன்ற எண்ணமே எனக்கு தோணுச்சு. வேண்டுதலின் பலனா?! இல்ல அம்மா அப்பா செய்த புண்ணியமான்னு தெரியாது. மூன்றாவது பையனா பிறந்தான்.  

Friday, July 03, 2020

ராகு-கேது பரிகார தலம் - திருநாகேஸ்வரம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்...


ஜோதிடரீதியாக முற்பிறவியில் நாகங்களை துன்புறுத்துவதாலும், ஆண் பெண் பாம்புகள் இணைந்திருக்கும்போது அவற்றை பிரிப்பது, நாகங்களை கொன்றதாலும் ராகு-கேது தோசம் வருமாம்.  எங்க வீட்டுக்கு மட்டுமில்லாம தெருவில் யார் வீட்டுக்கு பாம்பு வந்தாலும் என்னைய கூப்பிட்டுதான் அடிக்க சொல்றாங்களே! நான் கொன்ன பாம்புகளின் கணக்குப்படி பார்த்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் ராகு-கேது தோசம் என்னை விடாது போல! 

Thursday, July 02, 2020

பழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்

முன்னலாம்  பாத்திரக்காரருக்கு கொடுத்து, பாத்திரம் வாங்குவது வழக்கம். இப்ப யாரும் அப்படி வருவதில்லை. அதனால் துணிகள் நல்லா இருக்கும்போதே  கொடுத்துடுவேன். சேலை வாங்குமளவுக்கு பேண்ட், சர்ட், பொண்ணுங்க சுடிதார்லாம் யாரும் வாங்குவதில்லை.  இப்பலாம் துணிகள் சாயம் போவதுமில்லை, அதிகம் கிழிவதில்லை. நம் அஜாக்கிரதையால கிழிச்சிக்கிட்டாதான் உண்டு.  

Wednesday, July 01, 2020

பாரீஸ் கார்னர் கதை தெரியுமா?! - மௌன சாட்சிகள்

அடிக்கடி கேள்விப்பட்டு, பார்த்து பழகிய நமக்கு தெரிந்த இடங்கள்தான், ஆனா அந்த ஊரை பற்றி எதுவுமே நமக்கு தெரியாது. ஒவ்வொரு ஊரின் பின்னும் ஒரு கதை இருக்கும். வீரம், காதல், தியாகம், பழி உணர்ச்சின்னு எதாவது ஒரு உணர்வே  அந்த கதையின் ஆதாரமாய் இருக்கும். அந்த காதைகளை தன்னுள் கொண்டு  கட்டிடங்கள், கோவில்கள், அரண்மனைகள் அவற்றின் மௌன சாட்சிகளாய் நம் முன்னே இருந்தாலும், இந்த அவசர உலகில் நமக்கு அதெல்லாம் தெரிஞ்சுக்கக்கூட நேரமில்லாம, விருப்பமில்லாம  எதை எதையோத் தேடி, ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு ஓடியும் கிடைக்கவேண்டிய நிம்மதி நம் காலடியில் மிதிபட்டுக் கிடப்பதைக்கூட அறியாமல் இருக்கும் அற்ப மானிடராய் இருக்கிறோம்.  இந்த அவசர காலக்கட்டங்களில் அனைவரும் தெரிந்துக் கொள்ளமுடியாத பல  கதைகளைத் தன்னுள் கொண்டிருக்கும் இடங்களை மௌன சாட்சிகள் மூலம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்னைக்கு நாமப் பார்க்கப் போறது பழைய மெட்ராஸ் பிரெசிடென்சில இருந்த சில முக்கியமான இடங்களை....