Saturday, March 31, 2018

இட்லி ஆணா?! பெண்ணா?! - இட்லி தினம்


இட்லி- சட்னி, இட்லி-குருமா, இட்லி-மட்டன் குழம்பு, இட்லி- தேங்கா சட்னி, மினி இட்லி, ராகி இட்லி, டம்ப்ளர் இட்லின்னு முகநூல், ட்விட்டர்ன்னு நேத்து முழுக்க இட்லி போட்டோக்கள் சுத்திக்கிட்டு இருந்துச்சு. என்னன்னு கேட்டா, நேத்து இட்லி தினமாம். அடேய்களா! இதை முதல்லியே சொல்லி இருந்தா ஒரு பதிவை தேத்தி இருப்பேனே!ன்னு நினைச்சுக்கிட்டேன். தாமதமா தெரிஞ்சாலும் பிறந்தநாள், கல்யாணநாளுக்கு வாழ்த்துற மாதிரி நினைச்சுக்கிட்டு இன்னிக்கு பதிவை போட்டுட்டேன். பிலேட்டட் இட்லி டே! 
குழந்தைக்கு முதன்முதலா ஊட்ட ஆரம்பிக்கும் உணவு இட்லியாதான் இருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதானவங்க வரை எல்லாரும் எல்லா நேரத்திலும் சாப்பிடலாம். இதுவரை இட்லி சாப்பிடாதன்னு யாருக்கும் மருத்துவரீதியா அட்வைஸ் கொடுத்திருப்பாங்களான்னு பார்த்தா இல்லன்னுதான் சொல்லனும். அளவு குறைச்சலா சாப்பிடுங்கன்னு வேணும்ன்னா சொல்லி இருக்கலாம். எப்பேர்ப்பட்ட நோய்க்கிருமியும் 100டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அழிஞ்சுடும். நீரின் கொதிநிலை 100டிகிரி செல்சியஸ். நீராவியினால் செய்யப்படும் இட்லியும், இடியாப்பமும் 100டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்பத்தினால் சமைக்கப்படுவதால் இட்லிமாவில், அதில் சேர்க்கப்படும் தண்ணியில் எதாவது கிருமி இருந்தாலும் அழிஞ்சுடும்., அதனால, எந்தவித கிருமியும் இல்லா உணவுன்னு இட்லியை சொல்லலாம். ஆறிப்போன இட்லி மீது அமரும் ஈ, கொசு, சுத்தமில்லாத பாத்திரத்தினால் பரவும் கிருமிகள் இட்லி கணக்கில் சேராது.
அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட்டும், உளுந்தில் இருக்கும் புரோட்டீனும் நீராவியில் இட்லியாய் அவித்தெடுக்கும்போது ஈசியா ஜீரணமாகக்கூடிய புரதமா மாறிடுது. ஒரு இட்லியில் ஒன்று அல்லது இரண்டு  கிராம் புரதம் இருக்கும். இந்த புரத அளவு இட்லி சைஸை பொறுத்து 65 முதல் 100 கலோரி கிடைக்கும். அதனால உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்குது., இதில் கொழுப்புக்கு இடமே இல்லாததால் உடல் எடை கூடாது. அதுக்காக பத்து பதினைந்து இட்லிகளும், குருமா, தலைக்கறி, குடல்குழம்பு, மீன் குழம்புலாம் சாப்பிட்டு உடல் எடை கூடிடுச்சுன்னு என்கிட்ட சண்டைக்கு வரப்படாது.
பண்டிகை தினத்திலும், காதுகுத்து, கல்யாணம் மாதிரியான விசேச வீடுகளிலும், சாவு, கருமாதி மாதிரியான இழவு வீடுகளிலும் அபூர்வமாக அந்தக்காலத்தில் பரிமாறப்பட்டு, மினிமம் அஞ்சு, மேக்சிமம் பதினைந்துன்னு வெளுத்து கட்டிய இட்லி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர், இன்ஸ்டண்ட் மாவுன்னு தினம் தினம் பரிமாறப்பட்டு நாலு இல்ல அஞ்சு என்ற எண்ணிக்கையில் சுருங்கிட்டுது. அந்த வயசுல நான் உன் வயசில் ஆறு இட்லிக்கு குறையாம சாப்பிடுவேன்னு ஓரிரண்டு இட்லி சாப்பிடும் மகள்கிட்ட சொல்லி தீனிப்பண்டாரம்ன்னு பேர் வாங்கி கொடுத்த நிகழ்வெல்லாம் நம்மில் பலருக்குண்டு.
 
நிர்பந்தம் காரணமாய் சொத்து சுகம் நிலம் புலம் விட்டு  ஊர் பெயர்ந்தவங்களை கைத்தூக்கி விட்டிருக்கு இந்த இட்லி.   இறைவனால்  கைவிடப்பட்ட விதவைகளுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கும் இட்லி வியாபாரம்தான் மானத்தோடு வாழ வழி செய்திருக்கு. அதிகபட்சம் 1000ரூபாய் இருந்தால் சின்னதா ஒரு இட்லிக்கடை போட்டுடலாம். இது, பத்து வருசத்துக்கு முந்தின கதை.
தென்னிந்தியாவின் குறிப்பா தமிழகத்தின் பாரம்பரிய உணவா இட்லியை சொன்னாலும் இட்லியின் பிறந்தகம் இந்தோனேசியான்னு ஹிஸ்டரிக்கல் ஆஃப் இண்டியன் ஃபுட்ன்ற நூலில் K.T.அச்சையா  சொல்லி இருக்கார்.  அதுமட்டுமில்லாம, , 7ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இட்லிப்பானைன்ற பாத்திரம்ன்னு ஒன்னு இல்லவே இல்லன்னு சீன யாத்ரீகர் யுவான் சுவாங் பயணக்குறிப்பு சொல்லுது. ஆகமொத்தம் கி.பி 800 முதல் கி.பி 1200 யிலான காலக்கட்டத்தில்தான் இட்லி இந்தியருக்கு அறிமுகமாகி இருக்கு. இட்லி ஆணா பெண்ணான்னு பட்டிமன்றம் வச்சா பொண்ணுன்னு ஓங்கி அடிச்சு சொல்லலாம். ஏன்னா, பெண்கள் வாழ்க்கை நல்லவிதமாவும், கெட்டவிதமாவு அமையுறது புகுந்தவீட்டில்தான். வாழ்க்கையின் பெரும்பகுதியை புகுந்தவீட்டில்தான் கழிப்பாங்க. அம்மா, மாமியார், அண்ணி, பாட்டி.....ன்னு அவளுக்கு அதிகமான ரூபம் உண்டாகுது. இட்லியும் அதுப்போலதான், ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி, முருங்கக்கீரை இட்லி, காஞ்சிபுரம் இட்லி, இட்லி சாண்ட்விச், இட்லி உப்புமா, சேமியா இட்லி, சாமை இட்லி, குதிரைவாலி இட்லி, திணை இட்லி, கேரட் இட்லி, பொடி இட்லி....ன்னு இட்லியின் ரூபமும் அதோட புகுந்த வீடான இந்தியாவில் பல ரூபத்தில் வெளிப்படுது.

இந்தோனேசியாவில் இதுக்கு பேரு கெட்லி(kedli). அதான் இட்லின்னு ஆச்சுன்னு சொல்றாங்க. இல்லையில்லை, இட்டாலிக்கான்ற கன்னட வார்த்தைதான் இட்லின்னு மாறிச்சுன்னும், அரிசி உளுந்துமாவினை பானையில் இட்டு அவிக்குறாதால இட்லின்னு உண்டாச்சுன்னும் சொல்றாங்க. கிபி 1130ல் மேலை சாளுக்கிய மன்னனான மூன்றாம் சோமேஸ்வரன் எழுதிய நூலில்  மானசொல்லாசான்ற நூலில் ஒரு உணவுக்கு இட்டாரிகான்னு சொல்லி இருக்கார் அது இட்லிதான்னும்,  10ம்நூற்றாண்டில் தமிழ்நாட்டில் குடியமர்ந்த சௌராஷ்டிரர்கள் இடாடான்ற ஒரு உணவுப்பொருளை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினாங்க. அது இட்லின்னும், 1250காலக்கட்டத்திற்குப்பிறகுதான் இந்தியாவுக்கு இட்லி அறிமுகம் ஆச்சு. அது அரேபிய வணிகர்கள் இந்தியாவிற்குள் வந்ததால்தான் இட்லியே வந்துச்சுன்னும் சொல்றாங்க. ஆகமொத்தம் அப்பயும், இப்பயும் இட்லின்னாலே பிரச்சனைதான் போல!  என்னிக்குமே நதிமூலம் ரிஷிமூலம் போல இட்லியின் மூலமும் கண்டறியமுடியாது போல!
ஒரு மீடியம் சைஸ் இட்லியில் 65கிராம் கலோரி,  2கிராம் புரதம், 2 கிராம் நார்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கு. ஜீரணிக்க எளிதாகவும், இட்லி சுட்டெடுப்பது எளிதா இருந்தாலும் இட்லி மாவு தயாரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.  இட்லிமாவில் உளுந்து அதிகமாகிட்டால் இட்லி சப்பையா இருக்கும். உளுந்து கம்மியாகிட்டா இட்லி கல்லு மாதிரி இருக்கும். மாவு தண்ணியா இருந்தாலும் இட்லி ஒருமாதிரி அதிகப்பட்ச சாஃப்டா இருக்கும். மாவு கெட்டியா இருந்தால் ரப்பர் பந்துபோல இருக்கும். ஈசியான இட்லிக்கான சின்ன சின்ன செய்முறை நுணுக்கங்கள் பல...  அதுலாம்  கைவர பழகிட்டா இட்லி ஈசியான உணவுதான்.

இட்லி அரிசி 4 பங்குக்கு, ஒரு பங்கு உளுந்தோடு கால் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து தனித்தனியா ரெண்டு மணிநேரத்துக்கு மேலா ஊற வைக்கனும். அரிசி, உளுந்தை நல்லா கழுவி உளுந்தை அடிக்கடி நீர் தெளிச்சு பந்துபோல் நல்லா நைசா அரைச்சு எடுத்துக்கனும். அரிசியை ரொம்ப நைசா இல்லாம ரவை பதத்துக்கு அரைச்சு எடுத்து உப்பு சேர்த்து கலக்கி எட்டு மணிநேரம் புளிக்க வச்சு, இட்லித்தட்டில் மாவை இட்லிகளா ஊத்தி இட்லிப்பானையில் வச்சு அவித்தெடுக்கனும். உளுந்தை கம்மி பண்ணிக்கிட்டு கொஞ்சம் ஜவ்வரிசி இல்லன்னா ஆமணக்கு கொட்டையும் சேர்ப்பது வழக்கம். இட்லிமாவில் ஆப்பசோடாவையும் சேர்ப்பது நம்மூர் வழக்கம்.   அப்படி சேர்க்கனும்ன்னு நினைக்குறவங்க நைட்டே சேர்த்து கரைச்சு வச்சுக்கனும்.
 காலையில் இட்லி அவிக்கனும்ன்னா நைட்டே இட்லி மாவில் கொஞ்சூண்டு ஆப்பசோடா சேர்த்து சரியான பதத்தில் கரைச்சு வச்சுக்கனும். காலையில், இட்லி ஊத்தும்போது மாவை ரொம்ப கிளறாம, ஓரிரண்டு முறை கிளறி இட்லியா ஊத்தனும். ஏன்னா, இப்படி கிளறிவிடுறதால மாவில் இருக்கும் காற்று குமிழிகள் உடைஞ்சிடும். இந்த காற்று குமிழிகள்தான் இட்லி சாஃப்டா இருக்கக் காரணம். மாவை ரொம்ப நைசா அரைச்சாலும் இட்லி நல்லா இருக்காது. 
இட்லி மாவு மீந்துட்டா கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகுலாம் எண்ணெயில் வதக்கி சேர்த்து இட்லி ஊத்தலாம். முன்னலாம் ஊருக்கு போகும்போது இப்படிதான் கொண்டுப்போவாங்க. ரெண்டு நாள் தாங்கும். அதேநேரம் சைட்டிஷ்சா எதும் தேவை இருக்காது. இட்லி மீந்துட்டா உதிர்த்து உப்புமா செஞ்சுக்கலாம். இட்லி ஃப்ரை, இட்லி மஞ்சூரியன், இட்லி பக்கோடான்னு இட்லில செய்யப்படும் பதார்த்தங்கள் நீண்டுக்கிட்டே போகும்.  காலத்துக்கு ஏற்ப, ஓட்ஸ் இட்லி, பாஸ்தா இட்லியும் வந்தாச்சு. 

மாவில், ருசியில், நிறத்தில் மட்டுமல்ல இட்லி உருவத்திலும்கூட மாற்றம் வந்தாச்சு. முக்கோணம், சிப்பி, இதயம், பூ வடிவிலான இட்லி தட்டுகள் இப்ப மார்க்கட்டில்  கிடைக்குது.  இட்லின்னாலே பறந்து கட்டிக்கிட்டு சாப்பிட்ட காலம் போய் இட்லியை, நம்ம பசங்க சாப்பிட  என்னென்ன உத்திகளை செய்ய வேண்டி இருக்கு?!
இட்லின்னா பலப்பல நினைவுகள் வந்தாலும், ஊர்க்காவலன் படத்தில் ராதிகா, ரஜினி காமெடியான கொஞ்சூண்டு மாவில், கொஞ்சூண்டு இட்லி அவிச்சு வச்ச காமெடியை மறக்க முடியுமா?! 

நன்றியுடன்,
ராஜி

Friday, March 30, 2018

சுகமான திருமண வாழ்வருளும் - பங்குனி உத்திரம்

இந்துக்கள் பண்டிகைக்கும், பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எதாவது ஒரு விசேசதினம் இருக்கும். அதன்படி, தமிழ்வருடங்களில் 12வதும், கடைசிமாதமுமான பங்குனியும்,  12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும், நாளை பங்குனி உத்திரம் எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.   
திருமணம் என்பது இறைவனால் நிச்சயக்கப்பட்டது.  எங்கேயோ பிறந்து, வெவ்வேறு சூழலில் வளர்ந்த ஆணையும், பெண்ணையும் வாழ்க்கையில் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும். அது ஃப்ரெண்டுங்க தூது போய், ஏற்பாடு செய்யும் காதல் திருமணமானாலும் சரி, மேட்ரிமோனியல்ல பார்த்து பெரியவங்க செஞ்சு வைக்கும் பெத்தவங்களால் நடத்தி வைக்கப்படும் கல்யாணமானாலும் சரி, இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். இன்றைய சூழலில் ஒரு கல்யாணம் நடக்க எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கு?! படிப்பு, ஜாதகம், வரதட்சணை, உருவப்பொருத்தம், ஸ்டேட்டஸ், பணிச்சூழல்...ன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். இத்தனை போராட்டங்களையும் மீறி கல்யாணம் நடந்துட்டாலும் எத்தனை பேர் மகிழ்ச்சியா இருக்காங்க?! 


தடையின்றி திருமணம் நடக்கவும், நடந்த திருமணம் வெற்றியடையவும் இறைவன் அருள் வேண்டி இருக்கும் விரதமே பங்குனி உத்திரம். இந்நாளில் விரதமிருந்து இறைவனை தியானித்து ஆலயங்களுக்கு சென்று,அங்கு நடக்கும் தெய்வத்திருமணங்களை தரிசித்து, இல்லாதவருக்கு இயன்றளவுக்கு உதவிகள் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நல்லபடியா அமையும். சரி, அதென்ன?! எத்தனையோ நாள் இருக்க, இந்த பங்குனி உத்திரம் நாள் மட்டும் திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வா இருக்குன்னு யோசிச்சு பார்த்தால் இன்றைய தினம் ஏகப்பட்ட தெய்வ திருமணங்களும், தெய்வமே குழந்தையாகவும் அவதரிச்ச நாள், அதனாலதான் இந்நாள் திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வா இருக்கு... எந்தெந்த தெய்வங்களுக்கு இன்னிக்கு திருமணம்ன்னு பார்க்கலாமா?!
நீண்டநெடு போராட்டத்திற்கு பின் தவம் கலைந்த சிவப்பெருமான்,  தட்சனின் மகள் மீனாட்சியாய் அவதரித்த பார்வதிதேவியை சுந்தரேஸ்வரராய் அவதரித்து மணந்தது இந்நாளில்தான்.  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண சிறப்பை வேற ஒரு பதிவில் பார்க்கலாம். இன்றைய தினம், சிவனுக்கும், பார்வதிக்கும் அபிசேக ஆராதனைகள் செய்வித்து, மேளதாளம் முழங்க, திருமாங்கல்யம் அணிவித்து, பால் பழம் தந்து, ஊஞ்சலாடி, பள்ளியறைக்கு தம்பதியினரை அனுப்பும் வைபவம் இன்றளவும் வெகு விசேசமாய் கொண்டாடப்படுது.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணுபகவான், மகாலட்சுமியை மணந்ததும் இந்நாளில்தான். அதேப்போல், நாரதர் கலகத்தால், சிவப்பெருமானின் இடப்பாகத்தை பெற்ற பார்வதிதேவியின்பால் பொறாமைக்கொண்டு விரதமிருந்து விஷ்ணுபகவானின் மார்பில் லட்சுமிதேவியும், பிரம்மதேவனின் நாவில் சரஸ்வதியும் இடம்பிடித்தது இந்நாளில்தான். அதுமட்டுமில்லாம இந்நாளில்தான் பிரம்மா-சரஸ்வதிதேவி திருமணமும் நடந்தது.
மனிதன் எப்படிலாம் வாழனும்ன்னு உணர்த்த, தானே வாழ்ந்து காட்ட, விஷ்ணுபகவான் ராமராய் அவதரித்தார். ராம அவதாரத்தில், ராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகிய நால்வருக்கும் மிதிலையில் திருமணம் செய்தது இந்நாளில்தான்.  சிவப்பெருமானின் தவத்தினை கலைக்கும்பொருட்டு, அவர்பால் மன்மத பானம் விட்ட மன்மதனை, தனது நெற்றிக்கண்ணால் சிவன் எரிக்க, பின், அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதனை உயிர்பித்த தினம் இன்று. 

அமிர்தக்கலசத்தை அரக்கர்க்குலத்தவரிடமிருந்து மீட்க விஷ்ணுபகவான் மோகினியாய் அவதரிக்க, அவள் அழகில் சிவன் மயங்க, அவர்கள் இருவருக்குமாய் ஐயப்பன் அவதரித்தார். அப்படி ஐயப்பன் அவதரித்த தினமும் இன்றுதான். தேவர்குல தலைவனும், தேவலோகத்தின் அதிபதியுமான தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடப்பெற்றதும் இந்நாளில்தான். 
சிறந்த சிவபக்தரும், சித்தருமான அகத்தியமுனிவர் முக்தியடைய தடை உண்டானது. அத்தடை என்னவென இறைவனை குள்ளமுனி கேட்க, வாரிசு இல்லாததே அத்தடை என இறைவன் எடுத்துச்சொல்ல, வாரிசு வேண்டி, பக்தியிலும், குணத்திலும் சிறந்த லோபாமுத்திரையை அகத்தியர் மணந்தது இந்நாளில்தான். வில்லுக்கு விஜயன் எனப் புகழப்படும் பஞ்சப்பாண்டவர்களில் ஒருவனான, அர்ஜுனன் பிறந்த நாள் இந்நாள். 
ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருக்கும் திருமணம் நடந்தேறியது இந்நாளில்தான். இப்படி ஏகப்பட்ட தெய்வநிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானது முருகப்பெருமான், தெய்வானை திருமணம். சந்திரபகவான் ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திர பெண்களை மணந்தது இந்நாளில்தான். 

அரக்கன் சூரபத்மனை அழிக்க வேண்டி   முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது. முருகனது அவதார நோக்கம் நிறைவேறியதற்கு பரிசாகவும்,  அரக்கர்குலத்திடமிருந்து, தேவர்குலத்தை காப்பாற்றியதற்கு கைமாறாக,  தேவேந்திரனின் வளர்ப்பு மகளான, தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்வித்தனர். இதன்பொருட்டு, இந்நாளில் பால்குடமெடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை அறுபடை வீடுகளிலும் முருகபக்தர்கள் செலுத்துவர். அனைத்து சிவன் கோவில்களிலும் இன்றைய தினம் வள்ளி, முருகன், தெய்வானை திருமணம் நடைப்பெறும். வள்ளிக்கிழங்கு கொடி வயலில் மான் வள்ளியை ஈன்றதும் இந்நாளில்தான். 
பங்குனி உத்திரம் பழனி என்றழைக்கப்படும் திருவாவினன்குடியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுது. இன்றைய தினம் விரதமிருந்து காவடி தூக்கி வருவதோடு, அருகிலிருக்கும், கொடுமுடிக்கு சென்று காவிரிநீரை சுமந்து வந்து முருகனுக்கு அபிசேகம் செய்விக்கப்படுது. பழனி தலப்புராணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்,  இன்று ஒருநாள் அபிஷேகத்தின்போது மட்டும் முருகன் ஜடாமுடியுடன் உள்ள தோற்றத்தில் இருப்பார். பழனிக்கு அடுத்து,முருகன் தெய்வானை திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் மிகச்சிறப்பாக திருக்கல்யாண வைபவம் நடைப்பெறும். இத்திருமணத்தைக்காண, தங்களது திருமணம் முடிந்த கையோடு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தம்பதி சமேதரராய் வந்தருள்வார்.  இது இன்றளவும் நடக்கும் வைபவம் ஆகும்.
பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி, பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்தி மாலையில் சிவன், விஷ்ணு, முருகன் ஆலயங்களில் நடக்கும் திருமணத்தில் கலந்துக்கொண்டு தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதுமாதிரி 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்தால் மறுப்பிறப்பு கிடையாது. பிறப்பு, இறப்பு சுழற்சியில் சிக்காமல் முக்திப்பேற்றை அடையலாம். 

சூரியன் சித்திரையில் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அதன் அடிப்படையில், பங்குனியிலேயே சூரியன் உக்கிரம் பெற ஆரம்பிப்பார். சூரியனுக்குரிய நட்சத்திரம் உத்திரம். அதனால், சூரியன் உக்கிரமடைவதற்குமுன் அவருக்கு உகந்த நட்சத்திரத்தில் வழிப்பட்டால் அவரின் உக்கிரம் தணிவதோடு, நமது பாவங்களும் பஸ்பமாகிவிடும் என்பதும் ஒரு நம்பிக்கை.  பங்குனி உத்திர நாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனராசியிலும் இருப்பர். இவ்விருவரும் ஒருவருக்கொருவர் ஏழாம்பார்வையில் பார்த்துக்கொள்வர். அதனால், இருவரையும் வழிப்பட்டால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். 
இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர நன்னாளில் திருமணமாகாத ஆண்களும், பெண்களும், திருமண வாழ்வு தடுமாற்றித்தில் இருப்போரும், கல்வி வளம் கிடைக்கவும் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று, அங்கு நடக்கும் தெய்வ திருமணங்களை கண்டு அருள்பெருக!

நன்றியுடன்..
ராஜி. 



Thursday, March 29, 2018

அகிம்சையை போதித்த பகவான் மகாவீர்

மகாவீர் ஜெயந்தின்னா என்னன்னு கேட்டா.. லீவ் விடுவாங்க, அன்னிக்கு அசைவக்கடை, சரக்கு கடை இருக்காது. இதுதான் பதிலா இருக்கும். கொஞ்சம் படிச்ச ஆட்கள்கிட்ட கேட்டா, புத்தர் மாதிரி இருப்பார், சைவம், வைணவம்போல இந்துக்களின் ஒரு பிரிவினர். வாய்ல துணி கட்டி இருப்பாங்க. ஒருசிலர் கோவணம் மட்டுமே! ஒருசிலர் அதுகூட இல்லாம இருப்பாங்க. மயிலிறகால் ரோட்டை பெருக்கிக்கிட்டே போவாங்க. மாலை 6 மணிக்கு மேல சாப்பிடமாட்டாங்கன்னு  ஆறாப்பு படிச்சதையும் கேள்விப்பட்டதையும் வச்சு பதில் சொல்வாங்க. ரொம்ப சொற்பமானவர்களுக்கே  பகவான் மகாவீரை பற்றி தெரியும். எனக்கும் அவ்வளவ்தான் தெரியும்!! இன்னிக்காவது அதிகமா தெரிஞ்சுக்கலாம்ன்ற தேடலின் முடிவுதான் இந்த பதிவு.. அதுக்காக, முழுசா தெரிஞ்சுக்கிட்டியான்னு கேட்டா... இல்லன்னுதான் பதில் வரும். 

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் போர்த்தொடுத்து, புண்ணியபூமியாம் பாரதபூமியில் ரத்த  ஆறு ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவதரித்து அஹிம்சையின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியவர்.  சுயவிருப்பு வெறுப்புகள்தான் சமூகத்தில் நடக்கும் மாற்றத்துக்கான காரணம்ன்னு எடுத்துச் சொல்லி, அஹிம்சையை முன்னிறுத்தி சமூக மாற்றத்துக்காக மனிதன் மேற்கொள்ளவேண்டியதென எட்டு கட்டளைகளை வகுத்தார். தானும் அதுப்படியே துறவறம் மேற்கொண்டு வாழ்ந்து காட்டினார். சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.என்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்ற இடத்தில் சித்தார்த்தன் என்ற அரசருக்கும்,. அவரது மனைவி த்ரிஷாலா தேவிக்கும் கி.மூ 599ல் சித்திரை மாதம்  வளர்பிறை 13ம்நாளில்  அழகான ஆண்குழந்தை பிறந்தது.  அதுக்கு வர்த்தமானன்ன்னு பேர் வச்சு வளர்த்து வந்தாங்க.  வர்த்தமானன்ன்னு சொன்னா, வளம் சேர்ப்பவன்னு  பொருள். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே நாட்டில்  வளங்களைப் பெருக்கியதாக நம்பப்படுகிறது;  அவர் பிறக்கும் தறுவாயில் அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி காணப்பட்டது.  எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய  ‘வர்த்தமானன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அரசி திரிசாலாவுக்கு மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், அவர் கருவுற்றிருக்கையில் 14  சுப கனவுகளைக் கண்டதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன.  உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜெயின் – ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர் . 

சிறந்ததொரு அரசனா வருவான்னு எல்லாரும் எதிர்பார்த்திருக்க, வர்த்தமானனுக்கு சிறுவயதில் இருந்தே தீர்த்தங்கரர்கள் வகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளிலேயே அதிகமான நாட்டம் இருந்தது. தியானத்திலும்,தன்னை அறிவதிலுமே அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். அவருடைய போக்கை மாற்ற எண்ணிய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண்குழந்தையும் பிறந்தது.  ம்பம் சமண மதத்தைப் பின்பற்றிய குடும்பம்.  வர்த்தமானர்,  மெதுவாக, உலகச் சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். தமது முப்பதாவது வயதில் அரசாட்சியையும் குடும்பத்தையும் துறந்து, துறவறம் மேற்கொண்டார் வர்த்தமானர்.  பிறகு துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டார்.  மனிதர்கள்,  தாவரங்கள்,  விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும்  அவர்  மதிப்பளித்தார்; அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.
  
இந்தக் காலகட்டத்தில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். புலன்களை வென்ற அவரது பொறுமையும் வீரமுமே அவரை மகாவீர் என அழைக்க காரணமா விளங்குச்சு.  தேடலின் விளைவாக  ‘கைவல்ய ஞானம்’ கிடைக்கப் பெற்றார். அதன்பிறகு மகாவீரர்  நாடு முழுவதும் யாத்திரை செய்து, மக்களிடையே தாமறிந்த ஆன்மிக விடுதலையின் உண்மையை பரப்பத் துவங்கினார் . காலணியில்லா வெறும் கால்களில், துணிகள் ஏதும் அணியாமல், கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரது பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.

தீர்த்தங்கரர்களின் சமணக் கொள்கைகளின் மீதிருந்த அதீத பற்றால் தனது முப்பதாவது வயதில் அரசவாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டார். தமது இடைவிடாத ஆன்மிகத் தேடலில் 12 ஆண்டுகள் கழித்தார், தீர்த்தங்கர்கள் தொகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளை சீர் செய்து சமண மதத்தை தோற்றுவித்தார். ரிஜுபாலிகா நதிக்கரையில் தியானம் செய்து ஞானம் அடைந்தார். மனதை அடக்கி எல்லாவற்றையும் வென்றவர் என்று பொருள்படும் வகையில் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். பிறகு நாடு முழுவதும் சென்று சமண மதக் கருத்துக்களை பரப்பினார்.

 தமது 72-வது வயதில், பவபுரி என்னுமிடத்தில், தீபாவளியன்று பரிநிர்வாணம் (நம்ம ஊரில் சித்தி அடைதல், முக்தி அடைதல் போல சமணத்தில் பரிநிர்வாணம்ன்னு சொல்றாங்க) அடைந்தார் மகாவீரர். அவர் இறைப்பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் இல்லங்களில் தீபமேற்றிக் கொண்டாடுகிறார்கள். மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது அணுக்கச் சீடர்களால்  ‘அஹம் சூத்திரங்கள்’ என வாய்மொழியாகவே மனனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது. காலப்போக்கில் பல அஹம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும்,  மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. 

சமணர்களின் ஒரு பிரிவினரான  ‘சுவேதம்பரர்கள்’ இவற்றை அப்படியே வரிக்கு வரி உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர்; சமணர்களின் மற்றொரு  பிரிவினராகிய  ‘திகம்பரர்கள்’ இவற்றை உபதேச ஆதாரமாக மட்டுமே ஏற்கின்றனர். காலப்போக்கில் சமணர்கள் வேத சமயப் பழக்கங்களையும் சடங்குகளையும் கைக்கொண்டனர். மகாவீரரை உருவச்சிலையாக வடித்து வழிபடும் போக்கு பிற்காலத்தில் உருவானது. எனினும், பாரதத்தின் சைவ உணவுப் பழக்கம், கொல்லாமை, துறவுநெறி ஆகியவற்றை வளர்த்தெடுத்ததில் சமணம் பெரும் பங்கு வகித்துள்ளது.
மகாவீரரின் எட்டு கொள்கைகள்...
மகாவீரரின் மெய்யியலில் முதன்மையானதாக எட்டு கொள்கைகள் உள்ளன.  இவற்றில் மூன்று கொள்கைகள் கருத்துமயமானவை;  ஐந்து கொள்கைகள் நெறிவழிப்பட்டவை. இவற்றின் குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவது.  வாழ்வின்மூலம் ஆன்மிக வளமை பெறும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் இருக்கு. அவை, அநேகாந்தவடா, சியாத்வடா, கர்மா. ஐந்து நெறிவழிகள்: இருக்கு. அவை, அகிம்சை, சத்தியம், அஸ்தேயம்,  பிரமச்சரியம்,  அபாரிகிருகம்.
மகாவீரரின் மும்மணிகள்.....
மகாவீரர்  ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு;  அது தனது செயல்களின் விளைவாக கர்மா (விதிப்பலன்) எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது’ என்று கூறுகிறார். கர்மவினையின் மாயையால் ஒருவர் தற்காலிகமான,  மெய்யின்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறார். இவற்றின் தேடலில் அவருக்கு சுயநலத்தால் வன்முறை எண்ணங்களும் செயல்களும், கோபம், வெறுப்பு, பொறாமை உள்ளிட்ட குணங்களும்,  பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மவினைப் பளு கூடுகிறது.
இவற்றிலிருந்து விடுபட,  நன்னம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  நல்லறிவு  (சம்யக்-ஞானம்),  நன்னடத்தை (சம்யக்-சரித்திரம்) ஆகிய மூன்று மணிகள் தேவை  என்று மகாவீரர்  வலியுறுத்தினார்.

ஐந்து உறுதிமொழிகள்....
நன்னடத்தைக்கு துணைநிற்க சமண மதத்தில் ஐந்து உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்

1. வன்முறை தவிர்த்தல் (அஹிம்சைஎந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல். 2. வாய்மை (சத்தியம்தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல் 3.  திருடாமை (அஸ்தேயம்தனக்கு உரிமையற்ற எதையும் அபகரிக்காது இருத்தல். 4. பாலுறவு துறவு (பிரமச்சரியம்) – உடலின்பம் துய்க்காதிருத்தல்.  5.உரிமை மறுத்தல்/ பற்றற்றிருத்தல் (அபாரிகிருஹம்) – மக்கள்,  இடங்கள்,  பொருள்கள் மீது பற்றற்று இருத்தல் என இந்த ஐந்து உறுதிமொழிகளையும் எடுத்துக்கனும்.
சமய சீர்த்திருத்தம்....:
ஆண்களும் பெண்களும் ஆன்மிக நோக்கில் சரிசமமானவர்கள் என்றும், இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியும். அவரை அனைத்துத் தரப்பு மக்களும்,  சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்களும், விளிம்புநிலை மக்களும் பின்பற்றினர். அன்றைய காலகட்டத்தில் பாரதத்தில் நிலவிய வர்ணாசிரம முறையை விலக்கி,  சமயத்தில் நான்கு நிலைகளை உருவாக்கினார்; அவை,  ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்), பொதுமகள் (ஷ்ராவிக்).  இதனை ‘ சதுர்வித ஜைன சங்கம்’ன்னு பேரு. சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது.  மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை அடியொற்றியவையே.  மகாவீரர் பண்டைய மதத்தின் சீர்திருத்தவாதியே; அவர் புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்ல.

தனது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர் மகாவீரர். எனினும் தமது காலத்திற்கேற்ப சமண மதக் கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். அதன் விளைவாக, பாரத ஞான தரிசனங்களில் ஒன்றான சமணம் தனி மதமாக வளர்ந்து, பாரத வரலாற்றில் பேரிடம் பெற்றது. உண்மையில் மகாவீரர், பாரதத்தின் தொன்மையான சனாதன   மதத்தின்  சீர்திருத்தவாதியே ஆவார். மகாத்மா காந்தி சமணர்களின் அடிப்படைக் கொள்கையான அஹிம்சையை அரசியல் போராட்ட ஆயுதமாக மாற்றியபோதுதான் அதன் மாபெரும் சக்தி உலகிற்கு தெரிந்தது. 


போகும் பாதை எதுவாகினும் சேரும் இடம் ஒன்றே! அது இறைவனின் திருவடி. இன்றைய காலக்கட்டத்திற்கு மகாவீர் போதித்த கொள்கையை  உலக நலன் பொருட்டு அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்கலாம். தப்பில்ல!
நன்றியுடன்,
ராஜி. 

Wednesday, March 28, 2018

தாயுமானவன் நீ....

பாசம், அன்பு, பியார், பிரேமம், காதல், பக்தி, நேசம்ன்னு எத்தனை பேரிட்டு அழைத்தாலும் சக மனுஷங்கமேல் வரும் ஈர்ப்புங்குறது அலாதியானது. நேசிக்கப்படுகிறோம்ன்ற உணர்வு அசாத்திய பலத்தை கொடுக்கும். நேசிக்கின்றோம்ன்ற உணர்வும் அப்படியே!  இந்த உணர்வு சிலசமயம் நேர்மறையான விளைவுகளையும் கொடுத்திருக்கு. இந்த உணர்வு ஆளுக்கும் வயதுக்கும் தகுந்தமாதிரி நட்பு, காதல், பாசம்ன்னு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுது. எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க வைக்கும் இந்த உணர்வு. இதே அன்பு, எதுக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாதுன்னு மல்லு கட்டும். 

ஒத்த அலைவரிசையில் ஒரு உறவு அமைஞ்சிட்டா அது எத்தனை சுகமானது!? அப்படி ஒரு அழகான உறவுதான் எனக்கும் அவனுக்குமானது  அம்மா தன் கருவின்பால் கொண்ட பாசம், அப்பா தன் மகளின்மேல் கொண்ட அக்கறை, காதலனின் வாஞ்சை, கணவனின் கவனிப்பு, பிள்ளைகளின் மரியாதை, ஆசிரியரின் வழிகாட்டுதல், கடவுளின் ஆசிர்வாதம் தோழிகளின் பகிர்தல்ன்னு எனக்கு எல்லாமுமாய் ஆனவன். இக்கட்டான சூழலில் காத்தவன்.....
வாழ்வின் தொடக்கத்திலும் வரவில்லை.. முடிவிலும் வரப்போவதில்லையென்றாலும் அவனில்லாமல் நானில்லை. தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்புக்குலாம் வாழ்த்து சொல்லும்போது சேம் டூ யூன்னு சொல்வோம். ஆனா, பிறந்த நாளுக்கு வாழ்த்தும்போது நன்றின்னுதான் சொல்ல முடியும். ஆனா, எங்களால் முடியும். ஏன்னா ஒரே நாளில் பிறந்தவங்க. பிறந்த இடம், சூழல், கலாச்சாரம்ன்னு வேறுபட்டாலும் எங்களுக்குள் இருக்கும் பொருத்தம் யாருக்கும் அமையாதுன்னு பெருமையா சொல்வேன். என் பிள்ளைகளை என் அம்மா, அப்பாக்கிட்ட தவிர வேற யாரையும் நம்பி விடமாட்டேன். ஆனா, அவனை நம்பி விடுவேன்/ அத்தனை நம்பிக்கை..
தனியாய் பிறந்து தவிப்பேனென
எனக்கு முன்னே பிறந்து காத்திருந்தாயே!
நட்பாய் நுழைந்து
அன்பின் வடிவமாய் உயிரில் கலந்தாயே! 

இசையின் ராகமாய்
உயிரின் ஆதார  சுருதியாய் 
நடனத்தின் ஜதியாய்
உள்ளத்தில் பாவமாய் கலந்தாயே!

அன்பின் வினையாய்
ஏழேழு ஜென்மமாய் தொடர்ந்து
வந்தவனே! இப்பிறவியோடு
முடியாது, அடுத்த 
பிறவியிலும் என்னை தாங்க நீ வேண்டும்
நீ மட்டுமே வேண்டும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா!

நன்றியுடன்
ராஜி.

Tuesday, March 27, 2018

புதினா ரைஸ் - கிச்சன் கார்னர்

கறிவேப்பிலை, கொத்தமல்லிக்கு அடுத்தப்படியாக உணவினை மணமூட்ட நாம பயன்படுத்துறது புதினா.  இது பெரும்பாலும் சட்னி, அசைவ உணவுகள்ன்னுதான் பயன்படுத்தப்படுது. ஆனா, இதுல சாதம், புலாவ், ஜூஸ், குழம்பு, சூப்ன்னு விதம் விதமா செஞ்சு சாப்பிடலாம். புதினாவில், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரத சத்து, கந்தகம், தாது உப்புகள்,ஆகஸாலிக் அமிலம், க்ளோரின், நிகோடினிக் அமிலம், நார் சத்துகள்லாம் இருக்கும். புதினா செடியின் இலை, தண்டு, வேர்ன்னு அனைத்தும் மருந்தாய் பயன்படுது.  இது செரிமான பிரச்சனையை தீர்க்கும். புதினாச்சாறுடன், எலுமிச்சைச்சாற்றினை கலந்து கூந்தலில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, புது ரத்தம் ஊறும், வயிற்றிலுள்ள புழுக்களை நீக்கும், வயிற்றுப்போக்கினை நீக்க புதினா துவையலை சாப்பிடலாம். புதினா இலைகளை காய வைத்து, எட்டு பங்கு கீரையுடன், ஒரு பங்கு உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் தீரும். புதினாச்சாற்றினை முகத்தில் தேய்த்துவர முகப்பரு நீங்கி முகம் பளிச்சுன்னு இருக்கும். வாதம், மஞ்சக்காமாலை, இதய நோய்கள்ன்னு புதினாகீரையால் குணமாகும் நோய்கள் நீண்டுக்கிட்டே போகும்.... அதனால இத்தோடு நிறுத்திக்கலாம்...

தேவையானப்பொருட்கள்...
உதிர் உதிரா வடிச்ச சாதம்..
புதினா, 
பச்சை மிளகாய்
இஞ்சி,
பூண்டு,
புளி
எண்ணெய்,
கடுகு,
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு,
வேர்க்கடலை,
வெங்காயம்.
காய்ந்த மிளகாய்..


செய்முறை...
 புதினா, புளி, மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்சுக்கனும். 
வாணலி சூடானதும், எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொரிஞ்சதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை போட்டு சிவந்ததும், காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும்,. வெங்காயம் சேர்த்து வதக்கிக்கோங்க. 
வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், அரைச்சு வச்சிருக்கும் புதினாக்கலவையை சேர்த்து, உப்பு சேர்த்து நல்லா வதக்கிக்கனும்... 
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிங்கோங்க... 
புதினாக்கலவை பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்ச சாதத்தை சேர்த்து நல்லா சூடு பண்ணனும். லேசா எலுமிச்சை சாறும் சேர்த்துக்கலாம். 
சுவையான, ஆரோக்கியமான புதினா ரைஸ் ரெடி. பசங்க லஞ்ச் பாக்சுக்கு ஏத்த டிஷ். நல்லா வதக்கிட்டா எட்டு மணிநேரத்துக்கும் மேலானாலும் கெட்டு போகாது.

என் சின்னப்பொண்ணுக்கு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்புலாம் வெரைட்டி ரைஸ் சாப்பிடும்போது ரொம்ப ஊறிட்டு இருந்தால் பிடிக்காது. அதனால, அவளுக்குன்னு செய்யும்போது பருப்பு வகைகளை தனியா வறுத்து எடுத்து வச்சிக்கிட்டு சாதம் கிளறும்போது சேர்ப்பேன். மதியம் சாப்பிடும்போது லேசா மொறுமொறுப்பா இருக்கும்...

அடுத்த வாரம் கசப்போடு வரேன்....
நன்றியுடன்,
ராஜி. 

Wednesday, March 14, 2018

கணவன் மனைவி அன்னியோன்யம் பெருக -காரடையான் நோன்பு

என்னதான் அழகு, படிப்பு, அறிவு, குணம், அந்தஸ்து  இருந்தாலும் வாழ்க்கைத்துணை சரியில்லன்னா வாழ்க்கையே பாழ். நல்ல கணவன் கிடைக்கவும், கிடைத்த கணவன் முறுக்கிக்கிட்டிருந்தா அவனை நல்வழிப்படுத்தவும் நோற்கும் நோன்பே “காரடையான் நோன்பு”. 
இந்த நோன்பு பத்திய சொலவடை ஒன்னு இருக்கு. அது என்னன்னா, மாசிக்கயிறு பாசி படியும் என்பது பழமொழி. இதுக்கு விளக்கம்.. இந்த பண்டிகையின்போது பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.  கேட்ட வரம் கிடைக்கும். தம்பதியர் மனமொத்திருந்தால் அடுத்து?! குழந்தைதானே?! அந்த வரமும் கிடைக்கும்.  கர்ப்பிணி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றக்கூடாது என்பது ஐதீகம். கிட்டத்தட்ட பத்துமாதம் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தால் அழுக்கடையும். இதான் அப்பழமொழிக்கு விளக்கம்.
சாவித்திரி என்ற பெண் தன் கணவனான சத்தியாவனின் உயிரை காப்பாற்றிய தினமே காரடையான் நோன்பு என கொண்டாடப்படுது.  அந்த கதையை இனி பார்க்கலாம்...

அசுபதி என்னும் அரசனுக்கு,  அழகிலும்,  பண்பிலும் சிறந்து விளங்கிய பெண் இருந்தாள். அவளுக்கு  சாவித்திரின்னு பெயர் வைத்து அருமை பெருமையாய் வளர்த்து வந்தார். அவள் சிறுபிள்ளையாய் இருந்தபோது அரண்மனைக்கு வந்த நாரதர், சாவித்திரியை கண்டு, இவள் பின்னாளில் உலகம் போற்றும் பதிவிரதையாய் திகழ்வாள். ஆனால், இவள் கணவன் இருபத்தொயொரு வயது மட்டுமே வாழ்வான் என சொல்லிச் சென்றார். அதை நினைத்து அரசனும், அரசியும் கவலையுற்றனர்.

சாவித்திரிக்கு தக்க பருவம் வந்ததும், மகளுக்கு தக்க மணாளனை தேர்ந்தெடுக்க சுயவரம்  நடத்தினர்.   அரண்மனைக்கு வந்த எந்த நாட்டு ஆணையும் சாவித்திரி மனதை ஈர்க்கவில்லை. அதனால், தக்க துணையுடன் மணாளனை தேடி தூரதேசத்துக்கு பயணமானாள். அவ்வாறு செல்கையில் காட்டில் சென்று தங்கினாள்.

நாட்டுக்கு திரும்பிய சாவித்திரி தன் தந்தையிடம் சத்தியவான் பற்றி சொல்ல, அவன் நாடு நகரம் இழந்து காட்டில் சுள்ளி பொறுக்கி வயிற்றை கழுவுபவனுக்கா உன்னை மணமுடிப்பது என வாதிட்டார். சாவித்திரியும் தன் கொள்கையில் பிடிவாதமாய் நின்றாள். என்ன செய்வதென தெரியாமல் மகளின் மனதை மாற்ற நாரதரை தூதனுப்பினார் அரசன். சாவித்திரியிடம் சென்ற நாரதர், எத்தனையோ சமாதானப்படுத்தியும் சாவித்திரி மசியவில்லை. கடைசி அஸ்திரமாய்...  அம்மா! இன்னும் ஒரு வருடத்தில் இறந்துவிடும் ஒருவனையா  நீ மணக்கப்போகிறாய் என வினவ, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் மனதை தேற்றிக்கொண்டு, ஐயா! சத்தியவானை காணும்போதே அவரிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன். வேறு யாரையாவது மணக்கசொல்லி என் கற்பை மாசுப்படுத்தாதீர்கள் என சொல்லிவிட, சத்தியவான், சாவித்ரி திருமணம் கோலாகலமாய் நடந்தது.

கணவனின்  இறப்பு தேதி தெரிந்தும், அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் கணவனோடு காட்டிற்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.  நாரதர் சொன்ன சத்தியவானின் கடைசி  நாள் நெருங்கியது. மூன்று நாட்கள் ஊன், உறக்கமின்றி கடுமையான விரதமிருந்தாள் சாவித்திரி. இறுதி நாளன்று, சத்தியவானை அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்று விறகு சேகரித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது, சத்தியவான், சாவித்திரி! எனக்கு தலைச்சுற்றி மயக்கம் வருவதுப்போல இருக்கு என சொல்ல, என் மடியில் படுங்கள் என படுக்க வைத்துகொண்டான். சற்று நேரத்தில் அவனது உயிர் பிரிந்தது. காட்டில் தன்னந்தனியாய் கணவனை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் எமத்தூதர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் நெருங்காவண்ணம் அக்னி வளையத்தை உண்டாக்கினாள். எத்தனை முயன்றும் அவர்களால் சத்தியவானை நெருங்கமுடியாமல் போகவே எமனிடம் சென்று முறையிட்டனர்.

இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான்.  பூமியில் இறந்த முதல் மனிதன் அவன்.  அவன்தான் மரணக் கடவுளாவான்.  இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன்தான் எமன்.  அவனே அங்கு வந்தான்.  அவன் தேவன்,  ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.

அவன் சாவித்திரியைப் பார்த்து, மகளே, இந்த உடலை விட்டுவிடு.  மரணம் மனிதனின் விதி.  முதன்முதலில் மரணமடைந்த மனிதன் நான்.  அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும்.  மரணமே மனிதனின் விதி என்றான்.  இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான்.  பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன் வழியே செல்ல ஆரம்பித்தான்.  சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.  சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

'என் மகளே, சாவித்திரி! ஏன் என்னைப்  பின்தொடர்கிறாய்?  எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்' என்றான் எமன்.  'தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை.  ஒரு பெண்ணின் விதி இதுதானே!  கணவனை இழந்த பெண்கள் அவன் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும்.  ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவேண்டாமே என இறைஞ்சி நின்றாள்.

 அவளின் நிலைக்கண்டு மனமிரங்கிய எமன், 'உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதாவது ஒரு வரம் கேள்'.என்றார்.தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள்புரியுங்கள் எனக்கேட்டாள். சரியென வாக்களித்து, சத்தியவான் உயிரோடு அங்கிருந்து சென்றான் எமன். சிறிது தூரம் சென்றதும், காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சாவித்திரி வந்துக்கொண்டிருந்தாள். நீ கேட்ட வரம் தந்துவிட்டேனே! மீண்டும் ஏன் பின்தொடர்கிறாய் என எமன் வினவினான்.

தந்தையே, நான் என்ன செய்வேன்.  நான் திரும்பிப் போக வேண்டும் என்றுதான் பார்க்கிறேன்.  ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது.  என் உயிர் முன்னாலேயே போய்விட்டது.  ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது.  உயிர் சென்றால்  உடம்பும்கூடச் செல்லத்தானே வேண்டும்? 'சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்.  இன்னும் ஒரு வரம் கேள், அனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது'. 'தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்'.

'அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.  வீடு திரும்பு.  ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது'.  எமன் தொடர்ந்து செல்லலானான்.  சாவித்திரியும், அவர்களை பின்தொடர்ந்தாள்.   எமன் சற்று கோவத்துடன் இன்னும் என்ன வேண்டும்.. இறந்தவர் ஒருபோதும் பிழைக்கமுடியாது அதை நினைவில் கொண்டு கேள் எனக் கேட்க...,கற்பு நிலை மாறாமல் நூறு பிள்ளைகள் நான் பெற்று, அவர்கள் சத்தியவானின் அரசாங்கத்தை ஆளவேண்டும். அதை என் மாமனாரும் மாமியாரும் பார்த்து மகிழவேண்டுமென அருளவேண்டும் என வேண்டி நின்றாள். அவள் கேட்ட வரத்தின் உள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதையும் கொடுத்து சத்தியவான் உயிரோடு எமலோகம் சென்றான். மீண்டும் சாவித்திரி வருவதை கண்ட, எமன் என்னம்மா! எனச் சலிப்புடன் கேட்டான்.

ஐயா! இதுவரை சத்தியவானுக்கு குழந்தை ஏதுமில்லை. அவனும் இறந்துவிட்டான். பூலோகத்திற்கு நான் சென்றாலும் உங்கள் வாக்கு பலிக்காது. இறந்தவர்கள் பிழைப்பதென்பது சாத்தியமில்ல. அதனால் என்னால் உங்கள் வாக்கு பொய்த்து போகும். என்னால் உங்கள் வாக்கு பொய்க்க வேண்டாம். என்னையும் உங்களோடு அழைத்து செல்லுங்கள் என்று வேண்டி நின்றாள். இதைக்கேட்டு வெலவெலத்துப் போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார்.  பின்பு சத்தியவானோடு இல்லத்திற்கு வந்த சாவித்திரி மாமனார் பார்வையை திரும்ப அளித்து, நாட்டுக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் என்பது வரலாறு.

 இனி விரதமுறை..

காரடையான் நோன்பன்று வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டி, பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை சூட்ட வேண்டும். 

ஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்த போது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக் குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி துளசியை ஒன்று கட்டி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். 


‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் 

வைத்து நோன்பு நோற்றேன் 

ஒரு நாளும் என் கணவன் என்னைப் 
பிரியாமல் இருக்க வேண்டும்’ 


–என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும்.  பிறகு தானும் கட்டிக்கொண்டு, அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல், முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன், பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு காரடையான் நோன்பு இன்று வருது.  மாசியும், பங்குனியும் சங்கமிக்கும் நேரமான மாலை 7.30 முதல் 8.30 வரை பூஜை செய்யனும். 



வைக்கோலுக்கு மரியாதை 

காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும் போது, வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை, உடலை காத்திரு!’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பார்வதி தேவி செய்த சிவலிங்க பூஜை;

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை, காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.

ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,  உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் ன்னு பெயர் உண்டு.

நோன்பின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்

 மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி

அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் 

ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

த்யானம்



ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம் 

த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.


நன்றியுடன்,
ராஜி