Wednesday, January 31, 2018

தமிழ்கடவுளுக்கு உலகெங்கும் கொண்டாட்டம் - தைப்பூசம்


தமிழரின் இறை வழிபாட்டுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  எல்லா பௌர்ணமிக்கும் சின்னதும் பெருசுமா எதாவது ஒரு விழா இருந்துக்கிட்டே இருக்கும். அந்த கொண்டாட்டம் பெரும்பாலும், சிவனுக்குரியதா இருக்கும். ஆனா, தைமாசத்துல வரும் பௌர்ணமி தினம் சிவ மைந்தனான கார்த்திகேயனுக்கு உகந்தது. இந்நாளில் சகல முருகன் ஆலயங்களிலும் சிறப்பு அர்ச்சனை, அப்ஷேக ஆராதனைகள்லாம் நடக்கும். பழனி மலை வாழ் முருகனுக்கு காவடி எடுத்தல், பாத யாத்தரையாய் செல்லுதல்ன்னு பெரிய அளவில் கொண்டாடப்படுது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட கோவில்களில் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பழனி தலத்தைவிட குறைவே. 

பழனி முருகனுக்கு அடுத்தபடியா பெரிய அளவில் தைப்பூசம் கொண்டாடப்படுவது மலேசியா வாழ் முருகனுக்குதான். இதுக்காகவே, நம்மூர் ஆளுங்க  ஃப்ளைட் பிடிச்சு போய் தங்கி மலேசியா முருகன் அருளை வாங்கி வர்றாங்க.   தமிழகத்தில் அறுபடை வீடு உள்ளிட்ட பல முருகன் கோவில் புகழ் பெற்றதா இருக்கு. அதேமாதிரி, மலேசியாவில் மூணு முருகர் கோவில்கள் புகழ்பெற்றது. அவை, கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில், பினாங்கு தண்ணீர்மலை,  ஈப்போ கல்லுமலை . இந்த மூணு தலம் பத்தி சுருக்கமா பார்க்கலாம்....


பத்துமலை முருகன் கோவில்...
மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் தலைவனான முருகனுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில்  கோவில் இருக்கு.   இது, நிலத்தில், கடற்கரையில், மலையில் என கோவில் இடம்பெற்றிருந்தாலும்,  மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் முருகன் இடம்கொண்டுள்ள இடம் வித்தியாசமானது. முருகனுக்கு குகன் எனவும் ஒரு பெயருண்டு, அந்த பேருக்கேற்ப, மலைமேல் இருக்கும் குகையிலிருந்து அருள் புரிகின்றான். குகைன்னதும், மலைப்பாறைகளுக்கிடையில் கூனி, குறுகி, தவழ்ந்து செல்லும் குகை அல்ல. மரங்கள் சூழ்ந்த, சுண்ணாம்பு மலைக்குகையில் இருந்துகொண்டு நம்மை ஆட்கொள்கிறான். மலாய் மொழியில்  ’பது கேவ்’ ன்னு சொல்றாங்க. இதுக்கு அர்த்தம், சுண்ணாம்பு குகையாகும். இதுவே, தமிழர்களால் பத்துமலைன்னு அழைக்கப்படுது. 


பச்சை போர்வையால் போர்த்திய மாதிரி நீண்டு உயர்ந்த மலை அடிவாரத்தில் 140 அடி உயரத்தில் ஜொலிக்குதே.. ஜொலி ஜொலிக்குதேன்னு நகைக்கடை விளம்பரம் மாதிரி முருகன் ஜொலிக்கிறார்.  உலகின் மிக உயர்ந்த  சிலை இதுதான். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகளின் கைவண்ணத்தில் 2006ல் இந்த சிலை உருவானது.  வலப்புறம் அரசமரத்தடியில் வினாயகர் இருக்கார். அவருக்கு ஒரு வணக்கத்தையும் தோப்புக்கரணமும் போட்டுட்டு படி ஏறினால், நந்தி தேவர் நம் வருகையை பதிவு செய்ய உக்காந்திருக்கார்.  அவருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு உள்ள போனா லிங்கத்திருமேனியாய் நமக்கு அருள்புரிகிறார் சிவன். தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கா தேவி, சண்டிகேஸ்வரர், மீனாட்சி அம்மன்னு அனைவரும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த பொன்னிற வேலவனின் சிலைக்கு அருகே இருக்கும் 272 படிகளை ஏறினால், செயற்கை நீருற்று அழகன் இருப்பிடத்தை மேலும் அழகாக்குது. குகை வாசலில் நமக்கு வலப்பக்கம் இடும்பனுக்கு சின்னதா ஒரு சன்னிதி இருக்கு., காவடி எடுப்பது தோன்றியது இடும்பனால்,, அதனால அவருக்கு சின்னதா ஒரு மரியாதை. அவரை கடந்து இன்னும் கொஞ்சம் படி ஏறினா மூலவர் முருகனை தரிசிக்கலாம். இம்ம்ம்மாம்பெரிய குகைக்குள் இருக்கும் சின்னதொரு குகைக்குள் கிழக்கு நோக்கி  சின்னஞ்சிறு மூர்த்திக்குள் இருந்தவாறு வெள்ளியால் ஆன சிலாரூபத்திலிருந்து மிகப்பெரிய கீர்த்திகளை நடத்திக்கொண்டிருக்கிறார் முருகன். முருகனுக்கு அருகில் வேல் ஒன்னு இருக்கு, அதுக்குதான் அபிஷேகம்லாம் நடக்கும்.  
இவரை நினைத்து பிரார்த்தித்து வேண்டிக்கிட்டா கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்.  மூலவர் முருகன் தனியா நின்னு அருள்பாலிக்க, மூலவர் சன்னிதிக்கு மேல சற்று உயரமான இடத்தில் நின்று சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை சமேதரராய் அருள்பாளிக்கிறார். பழனி தண்டாயுதபாணிக்கும் தனி சன்னிதி இங்குண்டு. மலாய், சீனமொழியும் அதிகளவில் இருந்தாலும் இங்கு அழகுதமிழில்தான் அழகனுக்கு அர்ச்சனை நடக்குது.  மலையடிவாரத்தில் ஆஞ்சநேயருக்கும், நவக்கிரக சன்னிதி இருக்கு,  கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலை அமைத்து பராமரித்து வணங்கி வந்த தமிழரும், பெரும் வணிகரான தம்பு சாமிப்பிள்ளை என்பவரின் கனவில் தோன்றி, தனது அருட்சக்தி இங்கிருப்பதை உணர்த்தி தனக்கு ஒரு கோவிலை எழுப்புமாறு கட்டளையிட, மலேசியாவை அப்போது ஆண்டுக்கொண்டிருந்த  ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று 1891 ம் ஆண்டு இக்கோவிலை எழுப்பினார். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம், கார்த்தி கிருத்திகை, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும்.  தைப்பூச விழா பழனி மலையில் நடப்பதை போன்று வெகு விமர்சையாய் கொண்டாடப்படும். 


 காப்பு கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து பால்குடங்கள் ஏந்தி, காவடி தூக்கி, நாக்கில், உடலில் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து என கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலமாக வந்து மலையேறி வழிபடுகிறார்கள்.  மலேசியா வாழ் தமிழர்கள் மட்டுமில்லாம இந்தியா, சிங்கப்பூர், இலங்கை,  சீனா. ஆஸ்திரேலியாவிலிருந்தும் வந்து  முருகனை வழிபடுகின்றனர். கோலாலம்பூரிலிருந்து 15கிமீ தூரத்தில் இக்கோவில் இருக்கு.

தண்ணீர் மலை முருகன்...
மலேசிய நாட்டின் தனித்தீவு நகரமான பெனாங்க் தீவில்  ஜார்ஜ் டவுனில் இருக்கு பால தண்டாயுதபாணி கோவில்.  1700களின் இறுதியில், பெனாங்க் பொடானிகல் கார்டனில் இருந்த ஒரு நீரருவியின் கீழே வேல் வழிபாடு நடத்தப்பட்ட சிறிய கோயிலாகத்தான் இக்கோயில் இருந்துச்சு.  இப்பகுதியில் முதன் முதலில் வேலை பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தவர் யார்ன்னு இன்னைய வரை தெரியாது.  அங்கு குடியிருந்த தமிழர்கள் முருகனின் வேலை வழிவழியாக வணங்கி வந்திருப்பர்போல. அந்த இடத்தில் சிறிய முருகன் கோவிலை அமைத்து வழிப்பட்டு வந்தனர். காலப்போக்கில்,  ஜார்ஜ் டவுன் பகுதிக்கு தண்ணீரை வண்டிகளில் சுமந்து செல்லும் கூலித் தொழிலாளிகளின் முக்கிய வழிபாட்டுத் தலமாக வளர்ந்தது அக்கோயில். மெல்ல மெல்ல வளர்ந்து 1800களில் மிகப் பிரபலமாகிவிட்டது ஆலயம். 

அக்காலத்தில் தைப்பூசத் திருவிழா என்றாலே மலேசியத் தமிழர்கள் எல்லாம் இக்கோயிலை நாடி வர ஆரம்பித்தனர். கோவிலுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்ட பிரிட்டிஷ் அரசு, நீர்வீழ்ச்சி இருந்த இடத்தை பாதுகாக்க நினைத்தனர். அதேநேரம் மதம் சார்ந்த உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, வேறொரு இடத்தில் 11 ஏக்கர் நிலத்தை இக்கோவிலுக்காக கொடுத்தனர்.  அந்த இடத்தில் கோவில் கட்ட ஆரம்பித்து 1850ல் முடிவடைந்து இன்று கம்பீரமாய் காட்சியளிக்குது இக்கோவில். ஒவ்வொரு 12வருசத்துக்கொருமுறை கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதை வழக்கமா வச்சிருக்காங்க. நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரே இக்கோவிலை நிர்வாகம் செய்கின்றனர். அதனால, இக்கோவிலுக்கு நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில்ன்னும் பேரு.   தொடக்க நாளில் நீரருவி இருந்த மலையில் வழிப்பட்ட தண்டாயுதபாணி என்பதால் தண்ணீர்மலை முருகன் எனவும் பேர் உண்டாச்சு. இப்படி சொன்னால்தான் மலேசியாக்கரவுங்களுக்கு அடையாளம் தெரியும்.


ஈப்போ கல்லுமலை சுப்ரமணியர்..

மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து வடக்கே 200கிமீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஈப்போ நகரம் கோடீஸ்வரர்களின் சொர்க்கபூமி.  கிந்தான்ற நதியும், கங்கை பிங்கி, கங்கை பாரின்ற துணை நதிகளும் பாய்ந்து வளம் கொழிக்கும் பூமி.  சுண்ணாம்பு குன்றுகள் நிறைந்தது. வெள்ளீயம் அதிகம் வெட்டி எடுக்கப்படும் இடமும்கூட. அப்படி ஒரு குவாரிக்கு சொந்தக்காரரான பாரிட் முனிசாமி உடையாரிடம் கல் உடைக்கும் தொழிலாளியாக மாரிமுத்து என்பவர் இருந்தார். தன் தொழில் நிமித்தமா குனோங்  சீரோ கல்லுமலை அடிவாரத்தில் நடமாடிக்கொண்டிருந்தபோது, இங்கே வா! இங்கே வா! என குரல் கேட்டு, சுற்றும் முற்றும் பார்த்து யாருமில்லாததை கண்டு, திகைத்து நிற்கும்போது, மீண்டும் அக்குரல் கேட்டு வியந்து, பயந்து தன் முதலாளியான முனிசாமி உடையாரிடம் சென்று இத்தகவலை தெரிவித்தார். 

இத்தகவலை கேட்டு முதலில் அசட்டை செய்திட்ட முனிசாமி உடையார், மாரிமுத்து மீது கொண்டிருந்த நம்பிக்கையில், ஆட்களை அழைத்துக்கொண்டு மாரிமுத்துவை அழைத்த குரலோசை ஒலித்த இடத்துக்கு சென்று, அம்மலை பகுதியை ஆராய்ந்து பார்த்தனர். அப்போது கும்மிருட்டுடன் கூடிய குகை ஒன்று தென்பட்டது. அதனுள் நுழைந்து பார்த்தபோது,  கமகமவென, கற்பூரம், ஊதுபத்தி வாசனை வந்தது. அனைவரும் பக்தி பரவசத்தோடு மேலும் ஆராய்ந்தபோது திருமுருகன் சாயலை ஒரு கல்லில் கண்டு அதிசயத்தனர். பின்னர், அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டு வழிபாட்டிற்குரிய கோவிலாய் எழுப்பினர்.  1889 கோவில் எழுப்பும்பணி நிறைவடைந்தது. 



ஏழுமலை ராஜகோபுரத்தோடு, ஏழு கலசங்களை தாங்கி பிரம்மாண்டமாய் இக்கோவில் காட்சியளிக்குது, விசாலமான பிரகாரம், பிரம்மாண்டமான முன்மண்டபம்,  வினாயகர், அம்மன், நடராஜர் சபை, அரசமரத்தடி பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னிதின்னு பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. முருகனின் வாகனமான  மயில்களுக்கென  தனி இடமுண்டு. ஆலயத்தின் நடுப்பகுதியில் கல்லுமலை சுப்ரமணியர் திருச்செந்தூர் நாயகனின் சாயலில் இருந்து அருட்பாலிக்கிறார். 

இந்த தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தார். இது நடந்ததது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்த்தால்தான்…  தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) , இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர். மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். இந்நாளில் தேரோட்டம் நடக்கும். நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வள்ளி மலை. வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்த தலம் இது. இங்கும் தைப்பூசம் வெகுவிமர்சையாய் கொண்டாடப்படும். அத்தோடு, நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடக்கும்.

கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்தது இந்நாளில்தான். சோலைமலை முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், நெல்லைன்ப்ப ஆலயம்ன்னு எல்லா கோவில்களிலும் தைப்பூச விழா சிறப்பாய் கொண்டாடப்படுது. 




.


‘அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் எனவேல் தோன்றும்...!’
நெஞ்சில் ஒருகால் நினைக்கில்

இருகாலும் தோன்றும் முருகா 
என்று ஓதுவார்முன்’என்பதுபோல் ஆறுமுகனே நம் முன்வந்து நம் அல்லல் எல்லாம் அறுத்துவிட்டதாகத் தோன்றி, அவனை வணங்கும்போது மனம் லேசாகிறது. ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. தாரகாசூரனை வதம் செய்த இந்நாளில் முருகனை வழிப்பட்டு அவன் அருள் பெறுவோம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....

நன்றியுடன்,
ராஜி.

Saturday, January 20, 2018

முகநூலில் கிறுக்கியவை...


தோசைலாம் முக்கோணம், அறுகோணம்
வட்டம், செவ்வகமாவும் வரும்ன்னு சொல்லி 
நம்ப வைக்குறதுக்குள்ள
மதியமே வந்திட்டுது :-(

..............................................................

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் ன்னு கேட்டாலே நாலு நாள் யோசிப்பேன்...
இதுல, புல்லாங்குழல்ல எத்தனை ஓட்டை? யாழ் ல எத்தனை நரம்பு இருக்குன்னா நான் என்ன செய்வேன்?
தெரிஞ்சவங்க சொல்லி என்னைய காப்பாத்துங்க சாமி! புண்ணியமா போகும்.


உன்னிடமிருந்து
உன்னால்
நீ சொல்லக்கேட்டுக்கேட்டு
என்னிடம் தொற்றிக்கொண்ட -
உன் வட்டார மொழிவழக்கில் இருக்கிறது,
நாம் நெருங்கியிருந்த தூரமும்
விரும்பியிருந்த காலமும்!!!!
...................................................

மானம் காக்கும் புடவையாய்...
குளிருக்கு போர்வையாய்....
மகளுக்கு தாவணியாய்...
அரிசி உலர்த்தும் துணியாய்...
தரை விரிப்பாய்...

கைப்பிடி துணியாய்...

விளக்கு திரியாய்....
நீ வாங்கி தரும் புடவையினைப்போல, காலாகாலத்துக்கும் என்னோடவே இருக்கனும் மாம்ஸ்..
............................................................
அன்றைய டேட்டா வாலிடி டைம் வரும்முன் யூட்யூப்ல பைசா பிரயோசனமில்லா விடியோ பார்த்து காலி பண்ணுற மாதிரி....
பிரியப்போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா, வாழ்நாள் மொத்தத்துக்கும் சேர்த்து லவ்வி இருப்பேனே!
சூரிய கிரகணத்தில்
குழம்பும் காகமாய்..
உன் நிலை புரியாமல் 
நான்......

........................................................





விடிகின்ற வேளையில் கழுத்து மணி குலுங்க, 
கன்னுக்குட்டி குடிச்ச மிச்ச பசும்பாலில் காஃபி .....

அப்பதான் பறிச்ச கொத்தமல்லி, கறிவேப்பிலை சட்னியோடு ரெண்டு இட்லி...
பதினோறு மணிக்கு வீட்டில் செஞ்ச மோர் இல்லன்னா தோட்டத்தில் பறிச்ச இளநீர்...
நுனி தலைவாழை இலையில் பச்சரி சாதம், கீரை மசியல், பசுநெய்யோடு பருப்பு சாதம், ரசம்...
மாலையில் அரட்டையோடு கேப்பை அடையும் டீயும்..
இரவு ஒரு சப்பாத்தி, தோட்டத்தில் விளைந்த பழங்கள், பசும்பால்....
நிறைய புத்தகங்கள், கார்த்திக் பாட்டு, புத்தகம், கொஞ்சம் தனிமை, நிறைய அரட்டையுடன் கூடவே மாமன்.......
# அக்கா நொக்கான்னு ஒரு பய வீட்டுக்கு வரக்கூடாது..

............................................................

தனிமைக்கு அஞ்சுகிறவனின் பயத்தை ...
புறக்கணிப்பின் கூர்மை தரும் நடுக்கத்தை... 
பற்றியெழ யாருமற்று மூழ்கும் கணத்தின் பதற்றத்தை... 
உங்களால் உணரவே முடியாது!!!

வாழ்வில் ஒருமுறையாவது நீங்கள்
நம்பியது நொறுங்கி கைவிடப்படும் வரை...

.......................................................

அறைந்து சாத்தப்பட்ட கதவுகளுக்கு முன்
மண்டியிட்டுக் காத்திருக்கும்
ஆயுள்தீர்ந்த பிரியங்கள்
சுமக்க முடியாத 
பெருஞ்சுமை.

பறவையிலிருந்து
பிரிந்த பின்பும்
பல மைல்கள்
பறக்கும் இறகினை 
போன்றதொரு வாழ்வு
உன்னை பிரிந்தபின்
நான் வாழ்வது!!
...............................................

அழுதால் கிடைக்குமென்ற
நம்பிக்கை
குழந்தைக்குண்டு...

அதுகூட இவளுக்கில்லை...

...........................................................

கொண்டாடியவை பறிபோனப்பின்
எல்லாவற்றையுமே தள்ளி வைக்கத்தோணும்..

...............................................


அழைப்பு மணியில்
எல்லாம்..
உன்னோசைத் தேடித்தேடி..
உன்னைக்
காணாது 

உயிரலைந்து...

இன்று..
மரத்துப் போன சடலமாய்
உள்ளம்..

இனி..
உன்னழைப்பு வந்தாலும்
எடுக்க நானிருப்பேனோ
இல்லையோ
தெரியாது.... 
உனக்காக 
ஏங்கும் ஆன்மா
உன்னை எதிர்நோக்கி காத்திருக்கும்!

.............................................................

வரம் கிடைக்காதென தெரிந்தும்
தவமிருந்து என்ன பயன்?
.............................................
மறந்தே போனார்கள்
என்று தெளிவுற்றபின்..

விடைப்பெறுதல் என்பது 
அத்தனை கஷ்டமில்லைதானே?!...

அதனால்...
விடைப்பெறுகிறேன்

.................................................................

நன்றியுடன்,
ராஜி.





Friday, January 19, 2018

ஆடல் கலையே தேவன் தந்தது - புண்ணியம் தேடி...


ஆருத்ரா தரிசன பதிவின்போது பதிவின் நீளம் கருதி சிவ வடிவமான நடராஜர் தோற்றம் பற்றியும், இவர் நடனமாடி சிறப்பித்த ஐந்து சபைகள் பத்தி பதிவு வரும்ன்னு சொன்னேன். அதுமாதிரி நடராஜர் பத்திய பதிவு இதோ..... ஆருத்ரா தரிசனம் பதிவை பார்க்காதவங்களுக்காக... இதோ லிங்க்

 தீமைகளை அழிக்கவும், பக்தர்களை காக்கவும் விஷ்ணு பகவான் மாதிரி புதுப்புது அவதாரங்களை சிவன் எடுப்பதில்லை. தனது வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொள்வதோடு சரி. உருவ, அருவ,அருவுருவன்னு மொத்தம் 64 வடிவங்களை சிவன் எடுத்திருக்கார்.  அதில் 5 வடிவங்கள் மிகமுக்கியமானது. அவை,  வக்ர மூர்த்தியான பைரவர்,  சாந்த மூர்த்தியான தட்சிணாமூர்த்தி, வசீகர மூர்த்தியான பிட்சாடணர், ஆனந்த மூர்த்தியான நடராசர்,  கருணா மூர்த்தியான சோமாஸ்கந்தர் ஆகும். இதில்லாம, அரூப வடிவமான லிங்கம்தான் நாம் பெரும்பாலும் வணங்கக்கூடியது. லிங்கத்திருமேனிக்கு பிறகு நாம் அதிகம் வணங்குவது நடராஜ வடிவத்தில் இருக்கும் சிவரூபமாகும்.
 அணுத்துகள்கள் அசைந்ததால் உலகம் உருவானது. உலகம் சரிவர இயங்க, அணுத்துகள்கள் சதாசர்வக்காலமும் அசைந்துக்கொண்டே இருக்கனும். மெல்லிய அசைவில் தொடங்கி, நளினமாய் நகர்ந்து, வேகமாய் நகர்ந்து, முடிவினில் ஈசனை அடையும். இதையே, நடராஜரின் ஆடல் நமக்கு உணர்த்துது.  அந்த அசைவினை உணர்த்தும்படி  வலது காலை ஊன்றி இடதுகாலை உயர்த்தி, வலது கையால் அருளும், நாட்டிய பாவனையில் இருக்கும் சிவ வடிவத்தின் பெயரே நடராசர். நாட்டிய கலைக்கே ராஜாவென அர்த்தம் சொல்கிறது இந்த பெயர். அபஸ்மராவை  (முயலகன்) வதம் செய்த கோலத்தில் காட்சியளித்தாலும், மிகவும் பாசமிக்கவர். இசை, நடனத்தில் கைதேர்ந்தவர் இவர். படிப்பறிவில்லாதவர்களின் அறியாமையை ஆடல், பாடல்களினால் போக்கமுடியும் என்பதை நடராஜ அவதாரம் வலியுறுத்துகிறது.
சோழர்கள் காலத்திய வெண்கலச் சிலைகளின் மூலமாய்தான் முதன் முதலாக நடராஜ ரூபம் வெளிப்பட்டது. தகதகவென எரியும் தணலின் மேல் அபஸ்மரா என்ற அசுரனைக் கொன்று அவன் மேல் வலது காலை மட்டும் ஊன்றி, இடது காலைத் தூக்கி, மேலே உள்ள வலது கையில் உடுக்கையும். கீழே உள்ள வலது கை 'யாரும் பயப்படத் தேவையில்லை' என்று கூறும் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறார். அறியாமையின் அறிகுறியாக  அபஸ்மரா என்ற குள்ள அரக்கன் இருந்தான். குள்ள வடிவத்தில் இருந்த அவனைக் கொன்றால் அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான பேலன்ஸ் போய்விடும் என்றொரு நிலை. அவனைக் கொல்வது என்பது முயற்சி, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு இல்லாமல் அறிவைப் பெறுவதற்குச் சமம் என்றும் ஒரு நிலை. வதம் செய்ய இவற்றையெல்லாம் நடராஜர் யோசித்துகொண்டிருந்தார். 

இதனால் அவனுக்கு தான்தான் எல்லாமே என்ற அகந்தை உண்டானது. அகந்தையால் சிவனுக்கே பயங்கர சவால்களையும் கொடுத்தான். இதற்குப் பிறகும் தாமதித்தால் ஆகாதென, சிவன் நடராஜ அவதாரம் எடுத்து, ருத்ர தாண்டவமாடி, அவனைத் தன் கால்களில் மிதித்து வதம் செய்தார்.   நடனத்தின் மூலம் கடவுளுடன் ஒன்றி இருக்கலாம் என்பதையும் நடராஜ அவதாரம் விளக்குகிறது. இதுதான் 'ஆனந்தத் தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலான தத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.

நடராஜரின் தோற்றம் பற்றி இனி பார்க்கலாம்..

நடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை நீங்கும்,  சிவன் கையிலிருக்கும் டமருகம்ன்ற உடுக்கை, ஓம் என்ற ஒலியே உலகம் உருவாக காரணம். சிவன் உடம்பிலிருக்கும் அரவம், முக்காலமும் காலகாலனிடம் அடக்கம்,  உயர்த்திய கால்கள்  அனைத்து உயிர்களிடத்திலும் இறைவன் இருப்பது.  அபயவரத முத்திரை கரங்கள்,  எல்லாவற்றிற்கும் துணையாய் நானிருக்கிறேன். பயம் கொள்ளாதே!.  பத்ம பீடம், இறைவனை சரணடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.  திருவாசி, மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது தெய்வத்தின் செயலே.  பிறைநிலா, வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம், வளர்தல், தேய்தல் இயற்கையே!  சிவன் கையிலிருக்கும் அக்னி, தன் படைப்பே ஆனாலும் தீயவைகளை அழிப்பதும் கடவுளின் வேலை, சிவனின் திருவடியில் இருக்கும் அபஸ்மரா என்னும் முயலகன், ஆணவம் கொள்ளக்கூடாது. இவை அனைத்தையுமே நடராஜர் தோற்றம் நமக்கு உணர்த்துது.
 சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களை பஞ்ச சபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுது. அவை, பொற்சபை, இரஜித சபை (வெள்ளி சபை), இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுது.  இவைகள் முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அமைந்துள்ளது. மார்கழி திருவாதிரை திருவிழா, ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட ஆறு நாட்கள் நடராசருக்கு திருவிழா எடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இனி ஐந்து சபைகளைப் பற்றிப் பார்ப்போம்.
பொற்சபை - திருமூலட்டநாதர் திருக்கோவில்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் இருக்கு இக்கோவில். இங்கு இறைவன், தனது நடனத்தை பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாத முனிவருக்கு, உமையம்மை சமேதராக காட்சியளித்தார்.  நடராஜர் நடனமாடிய இந்த இடம் பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம்ன்னு பலவாறா சொல்லப்படுது.  இங்கு இறைவன் வலது காலை ஊன்றி,  இடது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் நடனமாடுகிறார். இவ்விடத்தில் இறைவனின் திருநடனமானது ஆனந்த தாண்டவம்ன்னு சொல்லப்படுது. இங்கு இறைவன் பொன்னால் ஆன கூரையின் கீழ் தனது திருநடனத்தைக் காட்டியருளுகிறார். இத்தலத்தில் இறைவன் பொன்னம்பலவாணன், நடராஜன், கனக சபாபதி, அம்பலவாணன், ஞானக்கூத்தன் ன்னு அழைக்கப்படுகிறார். ஆடல்வள்ளானை சிறப்பிக்கும் வகையில் இங்கு வருசந்தோறும் நாட்டியாஞ்சலி விழா நடத்தப்படுது. 
இரஜித(வெள்ளி) சபை - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்...

இது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருக்கு. இங்கு, இறைவன் தனது பக்தனின் வேண்டுகோளுக்கிணங்கி வலது இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனம் ஆடிய தலம். இவ்விடம் வெள்ளியம்பலம், வெள்ளி சபை, வெள்ளி மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் மாணிக்க  நான்கு கரங்களுடன் தேவர்கள் இசைக்கருவிகள் இசைக்க திருநடனம் புரிகின்றார். முதலில் இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த பதஞ்சலி மற்றும் வியாக்கிரத பாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையில் ஆடிய நடனத்தை வெள்ளியம்பலத்தில்  ராஜசேகரப் பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாற்றி நடனம் ஆடினார். இங்கு இறைவனின் தாண்டவம் சந்தியா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம் என்றழைக்கப்படுது.  இங்கு இறைவன் சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களிலும், அம்மை மீனாட்சி, அங்கையற்கண்ணி என்ற பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.

இரத்தின சபை - வடராண்யேஸ்வரர் திருக்கோவில்..

இக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவபெருமான் ஆலங்காட்டின் தலைவியான காளியை நடனத்தில் வெற்றி பெற்றார். இவ்விடம் இரத்தின அம்பலம், இரத்தின சபை, மணி மன்றம்லாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன் வலது காலை, ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார். காளியுடனான நடனப்போட்டியில் காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார்.  இங்கு இறைவன் ஆடிய ஆட்டத்துக்கு அனுக்கிரக தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்ன்னு பேரு. இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தன் தலையால் நடந்து வந்து ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடியில் அமர்ந்து இறைவனின் திருநடனத்தை கண்டுகளித்த இடம் இது. இங்குதான், அம்மை முக்தியும் பெற்றார். இங்கு இறைவன் வடராண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை வண்டார்குழலி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

தாமிர சபை- நெல்லையப்பர் ஆலயம் 
இக்கோவில்,  திருநெல்வேலியில் இருக்கு. இங்கு இறைவன் தாமிரத்தினால் ஆன அம்பலத்தில் நான்கு கரங்களுடன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இச்சபையில் இறைவனின் திருத்தாண்டவம் முனித்திருத்தாண்டவம், காளிகா தாண்டவம்  என்றழைக்கப்படுது.  இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுது.  இங்கு இறைவன் சந்தன சபாபதி ன்னு அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன், நெல்லையப்பர் என்ற பெயரிலும், அம்மை காந்திமதி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

சித்திர சபை - குற்றாலநாதர் திருக்கோவில்...

இக்கோவில்  திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கு.  இங்கு இறைவன் யமனை வென்று, சிவகாமி அம்மையை இடத்தில் கொண்டு மார்க்கண்டேயனுக்கு அருளிய மூர்த்தியாக சித்திர வடிவில் காட்சியருளுகிறார். இச்சபையில் இறைவன் புரிந்த திருநடனத்துக்கு திரிபுரதாண்டவம்ன்னு பேரு.  இத்தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாகக் கருதப்படுது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம்ன்னு அழைக்கப்படுது. சித்திர சபையின் கூரையானது செப்புத்தகடுகளால் ஆனது. இங்கு இறைவன் குற்றாலநாதர் எனவும், அம்மை குழல்வாய்மொழி ன்னும்  அழைக்கப்படுகின்றனர்.

தத்துவம் ஆடச்
 சதாசிவம் தானாடச்
 சித்தமும் ஆடச்
 சிவசத்தி தானாட
 வைத்த சராசரம் ஆட 
மறையாட அத்தனும் ஆடினான்
ஆனந்தக் கூத்தே!
ன்னு உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, சதாசர்வக்காலமும் ஆடிக்கொண்டும், தனது திருநடனத்தினை பக்தர்கள் துயர் தீர்க்கும்  ஆடல்நாயகனின் நடனங்களை ஐந்து சபைகளிலும் கண்டு பெரும் பேற்றினைப் பெறுவோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....

நன்றியுடன்,
ராஜி