Friday, June 30, 2017

மனைவியை அவமதித்து கணவனை மட்டும் வணங்குதல் முறையா?! ஆனி திருமஞ்சனம்.



வாட்டி வதைத்த   கோடையின் கடும் வெப்பம் தணிந்து இதமான தட்பவெப்பம் துவங்குவது இந்த  ஆனி மாதத்தில்.   சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.நட்சத்திரத்திலேயே மிக உக்கிரமானது இந்த திருவாதிரை நட்சத்திரம். அக்னியை கைகளிலே ஏந்தியும், ஆலகால விஷத்தை உண்டதால் உண்டான உடல்சூட்டினாலும், நெருப்பின் சாம்பலை பூசியதாலும் இயற்கையிலேயே சிவபெருமான் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். அதனாலாயே அவனுக்கு பால், தயிர் பன்னீர், கரும்புச்சாறு,  பஞ்சாமிர்தம்...போன்ற குளிர்ச்சியான பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டுமென்பது ஆகம விதி. அதனாலயே சிவபெருமானுக்கு அபிஷேகப்பிரியன் என்றும் பெயர்.  


வெம்மையின் நாயகனான சூரியனுக்கு உகந்த நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரமாகும்.  அகில உலகை காக்கும் பெருமானின் திருமேனி குளிர்ந்தால் அண்ட சராசரமும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது ஐதீகம். அதனாலயே வெம்மையுடன் இருக்கும் பெருமானை குளிர்விக்க வெம்மை நாயகனின் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்விக்கப்பட்டுது. 


வேனிற் காலம், ஆனி இலை அசங்க’ என்றொரு வாசகம் உண்டு. அதாவது, ஆனியில் மழை அடிக்கடி பெய்யுமாம். அப்போதுதான் காவிரி பெருக்கெடுத்து ஓடி ஆடிப்பெருக்கெனக் கொண்டாடப்படும். அதுமட்டுமா? மாதங்களில் நீண்ட பகல்பொழுது கொண்டது ஆனி மாதம் எனும் பெருமையும் உண்டு. பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் மிக விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. 


திருமஞ்சனம் என்பது  இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் மிக விசேஷமானது. அன்றைய தினம் பால்  தயிர், எண்ணெய், சீயக்காய், சந்தனம், மஞ்சள், இளநீர், கரும்புச்சாறு, பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் , திருமண மஞ்சனப்பொடி போன்ற 36 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்படும்.  நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பதை எல்லோரும் அறிவோம். தேவர்களுக்கு காலைப்பொழுது நமது மார்கழி மாதத்தில் தொடங்குகிறது. உச்சிக்காலம் சித்திரையிலும் மாலைப்பொழுது ஆனியிலும், இரவுப்பொழுது ஆவணியிலும், நடுஜாமம் புரட்டாசியிலும் வரும். 



இதில் சந்தியாக்காலம் என அழைக்கப்படும் காலையும், மாலையும் முறையே மார்கழியும், ஆனியும் இறைவழிபாட்டிற்கு உகந்ததென போற்றப்படுது.  இதில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் திருமஞ்சனம் செய்விக்கப்படும். இந்த ஆனி உத்திரம் நட்சத்திரத்தில்தான், தேவர்கள் ஆலகால விஷத்தை உண்டு தங்களை காத்ததற்கு நன்றி செலுத்தும் விதமாய் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்விப்பதாக ஐதீகம். அந்த நாளைத்தான் நாம் ஆனி திருமஞ்சனம் என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் இறைவனுக்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். 


எல்லா கடவுளும் வெவ்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோவில்களில் காட்சி தருவர். ஆனால், சிவபெருமான் லிங்க ரூபத்தில்தான் பெரும்பான்மையான கோவில்களில் காட்சித்தருவார். அதைத்தாண்டி வெகு சில கோவில்களில் ஆடலரசனான நடராஜராய் காட்சி தருவார்.  நடராஜர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிதம்பரம் கோவிலாகும்.  இங்கு நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் செய்விக்கப்படும்.  ஆனி திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் போன்றே திருவாரூர், திருவாலங்காடு போன்ற ஊர்களிலும் ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுது. சிதம்பரத்தில் 10 நாட்கள் வெகு விமர்சையாக இவ்விழாவை கொண்டாடுவர்.


சித்திரை மாதத்து திருவோண நட்சத்திரத்திலும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலும், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதத்து சதுர்த்தசியிலும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரமென மொத்தம் ஆறுமுறை சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்விக்கப்படும். இதன் பொருட்டே அனைத்து சிவாலயங்களிலும் ஆறுகால பூஜை செய்விக்கப்படவேண்டுமென ஆகம விதி.  இதில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர அபிஷேகமும் அதிகாலையில் செய்விக்கப்படும். 


சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் உலகத்திலேயே சிவனுக்கு இணையாகவும்கூட எந்த தெய்வத்தையும் மதிப்பதில்லை. மற்ற தெய்வத்தை தெய்வமாய்கூட அவர் எண்ணுவதில்லை. அவ்வளவு ஏன்!? சிவனின் மனைவியான சக்தியைக்கூட மதித்ததில்லை. தினமும் கைலாயம் செல்வார். சிவபெருமானை மட்டும் வணங்குவார். பின்னர் பூலோகம் செல்வார். இதே வழக்கமாய் கொண்டிருந்தார்.  இதனால் சக்தியின் கோவத்துக்கு ஆளாகி தன் உடல் பலத்தை இழந்து அதை மீண்டும் பெற்றதுலாம் தனிக்கதை. இக்கதையின் மூலம் சொல்ல வருவது 


சிவலிங்கம் மூலவராய் இருக்கும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும்போது தனி சன்னிதியில் வீற்றிருக்கும் அம்பிகையையும் வணங்க வேண்டுமென்பது ஐதீகம். ஆனால் நடராஜரை தரிசிக்கும்போது அவரது இடக்காலை பார்த்து வணங்கினாலே போதுமானது. காரணம் சிவனின் இடப்பாகம் முழுக்க பராசக்தியின் அம்சம். அதனால் நடராஜரின் இடது பாதத்தை தரிசித்து வணங்கினால் சக்தியின் அருள் முழுமையாய் கிடைக்கும். தனியாய் அம்பிகை சன்னிதியை வலம்வர வேண்டுமென்பதுமில்லை.  மார்க்கண்டேயரை காக்க எமனை எட்டி உதைத்ததும் அக்கால்தான். நடராஜரின் வலது கால் பக்தர்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும். இடப்பாகம் பக்தர்களின் வாழ்விலிருக்கும் இன்னல்களை நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியினை கொடுக்கும் என்பது நம்பிக்கை. 
இன்றைய தினத்தில்   சாயரட்சை  பூஜையில் நடராஜப்பெருமானுக்கு செய்விக்கப்படும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமுமே ஆனி திருமஞ்சனம் என அழைக்கப்படுது.  சிவபெருமானின் நடனத்தை காண தேவர்கள் முனிவர்கள் தவம் இருந்தனர். அவர்களோடு விஷ்ணு பகவானும் தவமிருந்தார். அவர்களுக்கு இந்த ஆனி திருமஞ்சனத்தின்போது ஆனந்த நடனமாடி காட்சி தந்தார். சிவபெருமானின் நடனத்தை காண கண்கோடி வேண்டும். அத்தனை சிறப்புமிக்கது. நடன ரூபத்திலிருக்கும் நடராஜரின் அபிஷேகத்தையும் நடனத்தையும் தரிசித்து சிவசக்தியின்  பேரருள் கிடைத்துகஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, ஏற்றங்களையும்நல்லமாற்றங்களையும் பெற்று  வளமோடும்நலமோடு வாழ்வாங்கு வாழ நடராஜர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.



அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.  நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கினாலே போதும். இந்த தரிசனத்தை தில்லையில் காண இயலாதோர், தம் சித்தத்தையே சிவமாக்கி, மனமுருகி துதித்து வணங்கினாலும் ஈசனின் அருட்பேராறு நம்மை வந்தடையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை

நன்றியுடன்,
 ராஜி.

7 comments:

  1. ஆனி இலை அசங்க அசங்க அசங்க...

    மழை விரைவில் வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அதான்ண்ணே எல்லார் ஆசையும்... வேண்டுதலும்....

      Delete
  2. நல்ல ஐதீகம் நீங்களே சொன்ன மாதிரி முறையற்ற புராணக் கதைகள் :)

    ReplyDelete
    Replies
    1. எது எப்படியோ மழை பெய்ஞ்சா சரிதான்ண்ணே!!

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  4. நல்லாருக்கே...புராணக் கதைகள் அப்படித்தான் பல....எங்கள் ஊரில் மழை பெய்துவிடும்...(துளசி)
    நம்ம ஊர்ல தமிழ்நாட்டுல மழை அதுவும் தமிழ்நாட்டின் வடபகுதியில்..ம்ம்ம்ம் (கீதா)

    ReplyDelete