Showing posts with label சாமுண்டி. Show all posts
Showing posts with label சாமுண்டி. Show all posts

Thursday, September 21, 2017

சகல நன்மைகளையும் அளிக்கும் சாமுண்டி வழிபாடு


நவராத்திரியின் முதல்நாள் வணங்க வேண்டிய பெண் தெய்வம் சாமுண்டி என்கிற சாமுண்டீஸ்வரி. தெத்துப்பல் கொண்ட திருவாயும், முண்டங்களால் ஆன மாலையும் அணிந்து கோரமாய் காட்சி தருபவள். பார்க்க கோவக்காரியாய் இருந்தாலும் இவளது கோவம் தீயவைகளை அழித்து நல்வழிப்படுத்தவே அன்றி அவள் குழந்தைகளை ஒன்றும் செய்யமாட்டாள். 

சப்த கன்னியர்களில் ஒருவள் இந்த சாமுண்டி.  கடுந்தவத்திற்குப் பின் பிரம்மனிடம் இருந்து பெற்ற வரங்களால் திமிரடைந்திருந்த அந்தகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். அவர்கள் சிவனிடம் முறையிட, சிவன் எய்த அம்பினால் காயமுற்ற அசுரன் சிந்திய ஒவ்வொரு துளி உதிரமும் ஒரு அரக்கனாக மாறியது. அவர்களை அடக்க சிவன் தனது வாயைத் திறந்து தீ ஜுவாலையினால் ஒரு பெண்ணுருவைப் படைத்தார். மற்ற கடவுளரும் இவ்வாறே செய்து ஏழு மாதர் உருவாயினர்.  அந்த எழுவரும் அந்தகாசுரனை அடக்கினர். . சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, கெளமாரி, இந்திராணி இவர்கள்தாம் அந்த சப்த மாதர்கள். சப்த என்றால் ஏழு என்று பொருள்.   இவர்கள் ஆண் கடவுளரின் பெண் உருவங்கள். சிற்ப வடிவில் ஒரு குழுவாக இவர்கள் உருவாக்கப்படும்போது இவர்களுடன் கணேசரும், வீரபத்திரரும் இடம்பெறுவர். ஆக, முழுமையான சப்தகன்னியர் சிற்பத்தில் ஒன்பது உருவங்கள் இடம் பெற்றிருக்கும்.
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

ஆதிசிவன் என அழைக்கப்படும் ருத்திரனின் அம்சம் இவள். முத்தலை சூலம், முண்டம், கத்தி, கபாலம் மாதிரியான ஆயுதங்களை தாங்கிய பதினெட்டு கரங்கள், மூன்று கண்கள், கோரைப்பற்களுடன், கருத்த மேனியுடன் புலித்தோல் உடுத்தி முண்டமாலையை அணிந்து பிணத்தின்மீது அமர்ந்து காட்சியளிக்கிறாள்.  சண்டர், முண்டர் என அரக்கர்களை அழிக்க அவதாரம் எடுத்தவள்.
நேபாள நாட்டின் சாமுண்டி சிலை

இந்த சாமுண்டிக்கு பல இடங்களில் கோவில் இருந்தாலும் கர்நாடகாவின் மைசூர் சாமூண்டீஸ்வரி கோவிதான் மிகப்புகழ்பெற்றது.  சாமுண்டி இங்கு சாமூண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.  இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை பெற்றதாகும். கி.பி12ம் நூற்றாண்டை சேர்ந்தது இந்த கோவில். ஹோய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தன்  இந்த கோவில் திருப்பணி செய்தவர்களில் மிக முக்கியமானவர்.  

1573ம் ஆண்டு  மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்துக்கொண்டிருந்த நேரம். சாமுண்டீஸ்வரியை தினமும் தரிசிப்பதை வழக்காமாக்கிக்கொண்டிருந்தார்.  ஒருமுறை அம்மனை வழிப்பட்டு திரும்பும்போது பலத்த மழை. இடி, மின்னலென கதிகலங்க வைத்தது.  ஒரு மரத்தின் அடியில்  பல்லக்கை இறக்கி வைத்துவிட்டு மழைக்கு ஒதுங்கி நின்றனர். இனம்புரியா பயம் மன்னன் மனதை சூழ்ந்துக்கொள்ள,  தன்னை காத்தருளும்படி அம்மனை வேண்டியபடி மலைக்கோவிலை பார்த்தார். கோவில் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. 
பதறி துடித்த  அவர் சில அடி தூரம் நகர்ந்து சென்று பார்த்தார். மரத்தின் அடியில் இருந்தபோது, தெரியாத கோவில் இப்போது தெரிந்தது. அப்போது மின்னலுடன் இடி விழுந்தது. எந்த மரத்தின் அடியில் நின்றிருந்தாரோ, அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காக்கவே, அம்பிகை கோயிலை மறைத்து விளையாடல் நிகழ்த்தியதை எண்ணி மகிழ்ந்தார். அதன் பின், சாமுண்டீஸ்வரி கோயிலைப் பெரிதாக கட்டினார். 

மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத அசுரனான மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரியைப் போற்றும் விதத்தில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் மைசூரில் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. 1610ம் ஆண்டு முதல் தசராவிழா நடக்கிறது. தற்போது கர்நாடக அரசு இதை அரசு விழாவாக நடத்துகிறது. தசராவையொட்டி, மைசூரு அரண்மனை மின்விளக்கால் அலங்கரிக்கப்படும். முக்கிய நிகழ்ச்சியாக யானை ஊர்வலத்தின் போது, யானை மீது தங்க சிம்மாசனம் அமைத்து அதில் சாமுண்டீஸ்வரி பவனி வருவதைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தசரா கண்காட்சி, வேளாண் கண்காட்சி, இளைஞர் திருவிழா, கலைத்திறன் போட்டி, கலை விழா, யானை ஊர்வலம், தீப்பந்த பேரணி போன்ற நிகழ்ச்சிகளும் உண்டு. அம்பா விலாஸ் மாளிகையில், மன்னர் பரம்பரையினர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவர். அப்போது வேத பாராயணமும், மன்னருக்கு பாதபூஜையும் நடக்கும். சாமுண்டீஸ்வரியைத் தரிசித்தால், சாதிக்க முடியாததையும் சாதிக்க அருள் செய்வாள். 

சாமுண்டீஸ்வரி தேவியின் மூலமந்திரம்...

ஓம் க்ருஷ்ணவர்ணாய விதமஹே சூல ஹஸ்தாயை திமஹி தந்நோ சாமுண்டா பிரசோதயாத்.

கல்வியாகிய சரஸ்வதி, வீரமான காளி, செல்வமான லட்சுமி இந்த மூன்று தத்துவங்களும் ஒன்று சேர்ந்ததே இந்த சண்டி என்கிற சாமுண்டீஸ்வரியாகும். இவள் ராத்திரி ஸகுக்த்ததால் வணங்கப்படும் ராத்திரி தேவியாகும். இவளுக்கு பிடிச்ச நைவேத்தியம் புளியோதரை. 

சாமுண்டியை வழிப்படுவோம். சகல நன்மைகளையும் பெறுவோம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472383

நன்றியுடன்,
ராஜி