Friday, November 18, 2016

ஈசனின் அருளைப்பெற "சோமவார விரதம்

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது "கார்த்திகை சோமவார விரதமாகும்".  சிவப்பெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம், ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். 
திங்கட்கிழமை என்பது "சோமவாரம்" என்றழைக்கப்படுகிறது. சிவப்பெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமையிலிருந்து ஆரம்பித்து கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.நினைத்த வரம் கிடைக்க 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்கலாம்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் வளர்ந்து பருவமெய்தியதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 நட்சத்திர பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இருஎன்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போவாய்என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், நாளுக்கு நாள் தான் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
 சந்திரன், சிவப்பெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
இனி, விரதம் இருக்கும் முறையை பார்க்கலாம்...

இந்து மத திருமணங்களில் " அருந்ததி பார்ப்பது" என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம்.
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிப்பட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூரதீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின்போது சிவநாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைத்துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசிப்பெறவேண்டும்.இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.
சோமவார விரதம் தோன்றிய கதை....

 ஒரு சமயம் திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தனியாக அமர்ந்திருக்கச் சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் பார்வதி தேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றார். அப்போது பரமன் யாரும் அறியாதபடி தனது ஜடாமுடியை அசைத்துப் பார்த்தார். அதில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். பார்வதி தேவியார் இறை வனிடம், “சுவாமி என்ன இது? சந்திரனைத் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்?” என்று கேட்டார். அதற்கு ஈசன், “தேவியே, எனக்கு மிகவும் பிடித்த சோமவார விரதத்தை இந்தச் சந்திரன் முறையாகக் கடைப்பிடித்துச் செய்து இந்தப் பேறினைப் பெற்றுள்ளான்என்றார். உடனே தேவி, “சுவாமி அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விரதத்தை எனக்கும் உபதேசித்து அருள வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். பார்வதி தேவியும், மற்றவரும் பயன்பெறும் பொருட்டு சோமவார விரதத்தை இறைவன் கூறி அருளினார்.
 வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.
சீமந்தினி பெற்ற மறுவாழ்வு...

சித்திரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் தனது 14 வயது முதல் சோமவார விரதத்தைச் செய்து வந்தாள். சந்திராங்கதன் என்ற இளவரசனை மணந்தாள். அவன் நண்பர்களுடன் படகில் யமுனை நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து அனைவரும் உயிர் நீத்தனர். நண்பர்களோடு நாகர் உலகம் சென்று அங்குள்ள நாக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தான். இதற்கிடையில் சந்திராங்கதன் இறந்துவிட்ட செய்தி கேட்டு அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்தனர். சீமந்தினி விதவைக் கோலத்தில் இருந்தவாறே யமுனை நதிக்கரையில் சோமவார விரதத்தைச் செய்தாள்
கணவன் சந்திராங்கதன் நாக மன்னனிடம் முறையாக நடந்து நல்லபெயர் பரிசுப் பொருட்களை பெற்றுத் திரும்பும்போது மனைவியைக் கண்டு அதிர்ந்துவிட நடந்ததைக் கூறி அவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட்டான். காசி மாநகர் அருகே ஆட்சி புரிந்து வந்த மன்னன் ஒருவன் சீமந்தினியின் மனதிடத்தைச் சோதித்து அறிய விரும்பி, இரண்டு பிரம்மச்சாரிகளை அனுப்பி ஒருவனை பெண்வடிவாகச் சென்று போகச் செய்தான். அவள் இருவரையும் பார்வதி பரமேஸ்வர வடிவங்களாகத் தியானித்தாள். அப்போது பெண் உருவம் ஏற்றவன் உண்மையான பெண் வடிவமாகவே மாறிவிட்டான் என்பது புராணக் கருத்து.
சோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.
வரும்  21.11.2016 அன்று இந்த வருடத்திய கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமை வருது. நான் சோமவார விரதமிருக்க ஆரம்பிக்கப்போறேன்.... நீங்க?!
சிவார்ப்பணம்.


8 comments:

  1. சிறுவயது முதல் சோமவார விரதம் கடைபிடிக்கிறேன்.
    எங்கள் வீட்டில் எல்லோரும் இருப்போம். காலை, மதியம் சாப்பிடாமல் ஒருந்து இரவு மாவிளக்கு வைத்து, சாதம் வைத்து இறைவனை வணங்கிய பின் உணவு உண்போம்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அம்மாக்கு பதில்... அப்படியாம்மா. நான் இந்த வருடம்தான் விரதம ஆரம்பிக்கப்போறேன். நானும் உங்களைப்போலவே இரவில் மட்டும் பால் பழம் அருந்தி விரதமிருக்கேன்ம்மா.

      Delete
  2. அழகிய படங்கள் விளக்கமும் நன்று இதனால்தான் திங்கள்கிழமையை ஹிந்தியில் சோமவார் என்று சொல்கின்றார்களோ....

    ReplyDelete
    Replies
    1. அண்ணே! சோமவார்என்பது கன்னட சொல்.

      Delete
    2. ஹிந்தியிலும் சோமவார் என்றே சொல்கிறார்கள் வார் என்றால் கிழமை

      Delete
    3. ஹிந்தி மொழி

      ரவிவார் - ஞாயிறு
      சோமவார் - திங்களி
      மங்கள்வார் - செவ்வாய்
      புதவார் - புதன்
      குரூவார் - வியாழன்
      ஸுக்ரவார் - வெள்ளி
      ஸனிவார - சனி

      Delete
  3. ஒரு வேலை சாப்பிடாமல் இருப்பதுதான் சோமவார விரதம் என்றிருந்தேன், ஒரு வேலைதான் சாப்பிடவேண்டுமோ?

    ReplyDelete
  4. அவரவர் உடல்நிலை பொறுத்து விரதமிருக்கலாம் சகோ. மனசு சுத்தம் வேணும். அன்னதானம் செய்யனும்.. இது போதும்... கடவுளை அடைய உடலை வருத்திக்கனும்ன்னு அவசியமில்ல சகோ

    ReplyDelete