Saturday, December 16, 2017

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்... மார்கழி ஸ்பெஷல்

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என வைணவமும், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ என சைவமும் இணைந்து போற்றும் அதி உன்னத மார்கழி மாதம் இன்று ஆரம்பம்.  பொதுவா, இரவின்போது பெய்யும் பனிப்பொழிவை விட, அதிகாலையில் பொழியும் பனிப்பொழிவானது நோய் உண்டாக்கும் தன்மையற்றதா இருக்கும். அதிகாலை வேளையில் உடலுக்கு தேவையான கதிர்களின் தாக்கம் அதிகமிருக்கும். வாகனங்களால் உண்டாகும் புகை நச்சு அதிகம் இருக்காது.   கார்த்திகையில் மாலையிலும், மார்கழியில் அதிகாலையிலும் விளக்கேத்தி வைப்பதும் நம் வழக்கம். அதுக்கு காரணம், கார்த்திகை மாதம் முதல் பனிப்பொழிய ஆரம்பிக்கும். வீட்டில் கதகதப்பை உண்டாக்கவே இந்த ஏற்பாடு. ஓசோன் வாயுக்கள் அதிகம் இருக்கும் அதிகாலை வேளையில் கோலமிடுவதால் பல சுவாச பிரச்சனைகள் தீரும்.  ஆனா, இப்பலாம் அதிகாலை எழ சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு நைட்டுலயே கோலம் போட்டுட்டு படுத்துடுறாங்க. அது தப்பான செயல். மார்கழி மாசத்தின் முக்கிய நோக்கமே அதிகாலையில் எழுவதும், பின்பனி நேரத்தில் காற்று மாசுபாடு இல்லாதபோது கோலமிட்டு இறைவனை வணங்குவதுமாகும். 

பூசணிப்பூ வைப்பதின் ரகசியம்..

அப்பலாம்,  கல்யாண புரோக்கர்கள் ,  மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் இல்ல.  எந்த வீட்டில் பெண்ணோ இல்லன்னா பிள்ளையோ திருமணத்துக்குத் தயாராக இருந்தா,  அந்த வீட்டின் வாசலில்  மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பாங்களாம்.. ஒட்டுமொத்தமா எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டாங்களாம்.  மார்கழி மாத அதிகாலையில் பஜனைப்பாடல் பாடிக்கிட்டு வர்றவங்க பார்வையில் இந்த பூசணிப்பூ தென்பட்டு, தகவல் அறிந்து, விசாரித்து, பேசி தை மாசம் கல்யாணத்தை முடிப்பாங்களாம். அதனாலதான் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்ன்னு சொல் வந்துச்சாம்.  பூசணிப்பூ வைக்க இன்னொரு காரணம், இப்பூக்களிலிருந்து வரும் வாசம் பனிக்காற்றில் கலந்து கிருமிகளை கொல்லும் என்பதாலும்தான்.  

மார்கழி மாதம் பீடை மாதம்ன்னு இப்ப சொல்றாங்க. ஆனா, அது அப்படி இல்ல. நமக்கு வீடு உள்ளிட்ட சகல செல்வமும்  பெற்று நம் வாழ்வில் பீடு நடைப்போட உதவும் மாதம் என்பதால் இதுக்கு பீடுடைய மாதம்ன்னு பேராம்.  காலப்போக்கில் அது மருவி பீடை மாசமாகிட்டுது. பீடுன்னா உயரிய, சிறந்த, உன்னதமான..ன்னு பொருள். இறைவனை வழிபட்டால், வாழ்வின் உன்னத நிலைக்கு செல்லலாம்ன்னு பொருள்படும். இந்த மாசத்தில் கரும்பு, நெல், மஞ்சள், காய்கறிகள்ன்னு அறுவடைக்காலம். வயல்ல பொழுது கழிக்கவும், விளைப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பவுமே சரியாய் இருக்கும். அப்படி இருக்க, மாமன் மச்சான் வீடுகளின் விசேசங்களில் கலந்துக்க முடியாதில்லையா?! அதுமில்லாம, இந்த மாசம் முழுக்க நிறைய ஆன்மீக விழாக்கள் வர்றதாலயும்தான் இந்த மாதத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகளை தவிர்த்தாங்க. சுப நிகழ்ச்சிகளை  நடத்தக்கூடாதே தவிர அதுக்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம்.   இந்த மார்கழி மாசத்தில்தான்  அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் கல்யாணம்,  ஆருத்ரா தரிசனம் மாதிரியான ஆன்மீக நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுது. 
வைணவ திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவாங்க.  திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலா ஆண்டாளின் திருப்பாவையைத்தான் இந்த மாசம் முழுக்க  திருப்பள்ளியெழுச்சிக்காக பாடுவாங்க. சகல சிவாலயங்களில் திருவெம்பாவை பாடல்கள்  திருப்பள்ளியெழுச்சியாக  இம்மாசத்தில் பாடப்படும். இந்த மாசத்துலதான் நல்ல கணவன் கிடைக்கனும்ன்னு பாவை நோன்பை வயசு பொண்ணுங்க இருப்பாங்க. 
மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்னு கீதைல கண்ணன் சொல்றாப்ல. அப்ப மத்த பதினோரு மாதம் என்ன தக்காளி தொக்கான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு பதில் இதோ...

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம்ன்றது தேவர்களைப் பொறுத்தவரை  ஒருநாள்.  அந்த வகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே! ( 1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத  காலம் தேவர்களுக்கு பகல்  பொழுது.  இந்தக் காலத்துக்கு உத்தராயணம்ன்னு பேரு. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்  வரை வருகின்ற ஆறு மாத காலம்  தேவர்களுக்கு இரவுப் பொழுது. இந்த காலத்துக்கு தட்சிணாயணம் ன்னு பேரு. தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி,  அதாவது, தேவர்களை  பொறுத்தவரை இரவுப்பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் ன்னு கணக்கிட்டு சொல்றாங்க. இந்த காரணத்தினால்தான் தேவர்களை வரவேற்கும் விதமாக மார்கழி மாசத்து அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமா வச்சிருக்காங்க. 

ஜோதிடரீதியா சொல்லனும்ன்னா  மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’  ன்னு  வடமொழியிலும்,  மார்கழி ன்னு தமிழிலும் சொல்றோம்.  இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே  அந்நாளில்  பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் நம்மில் பலபேருக்கு தெரியாது. சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்றவர். . மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அவர், தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நமக்கு தெரியும்தானே?! மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும்.   அதன்னாலதான் நினைத்தது நிறைவேற, எதிரிகள் தொல்லை நீங்க  ம்ருத்யுஞ்ஜய ஹோமம் த்தை மட்டும் மார்கழிக்குன்னு காத்திருந்து செய்வாங்க. 

ஒருவரை ஒருவர் காணாமலே அவர் பற்றி பேசி அன்புக்கொண்டு அவர்களை அடைந்தது இருவார். அதில் ஒருவர் ஆண், இன்னொருவர் பெண்,  ஆண்கொண்ட அன்புக்கு பக்தி, சேவகம்ன்னு பெயர்சூட்டி கடவுளாய் கொண்டாடும் அனுமன் ஜனித்தது இந்த மார்கழியில்தான், காதால் கேட்டு பெண் கொண்ட அன்புக்கு காதல்ன்னு பேர் சூட்டி, அவள் நோன்பிருந்து அரங்கனை அடைந்தது இந்த மார்கழி மாதத்தில்..  மார்கழி மாசத்தில்  சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் ன்னும் சொல்வாங்க. தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது,  குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும்  நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள்  உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். அதனாலும் இந்த மாதத்தில் இறைப்பற்றுக்குன்னு ஒதுக்கி வச்சுட்டாங்க. 



இந்த மாசத்தில்தான்  மகாபாரத யுத்தம் நடந்தது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாசத்தில்தான். இந்திரனால் பெருமழை, வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மாசத்தில்தான். 
 எங்க ஊர்லலாம் மார்கழி மாத அதிகாலையிலும், மாலையிலும் பஜனை பாடிக்கிட்டு வருவாங்க. அரிசி, பணம், கோவில் விளக்குக்கு எண்ணெய்ன்னு கொடுப்போம். பதிலுக்கு துளசியை பிரசாதமா தருவாங்க. இப்ப அதுலாம் இல்ல. ஆன்மீக மலர்ச்சிக்கு இந்த மாசம் உகந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த  இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில்  மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!


நன்றியுடன்,
ராஜி. 

11 comments:

  1. கோலங்கள் அருமை உங்கள் வீட்டு வாசலில் தறி நெய்கின்றார்களே.....

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர் (ஆரணி) பட்டுக்கு புகழ் வாய்ந்ததுண்ணா. இங்க பாதிக்கு பாதி பேர் நெசவுத்தொழில் செய்வாங்க. எங்க தெருவில் பட்டுத்தறி இல்லாத வீடு எங்க வீடு மட்டும்தான், எங்க குலத்தொழில் நெசவுதான். வேலைக்கு போய்ட்டதால் எங்க வீட்டில் தறி இல்ல. மத்தபடி நெசவு சம்பந்தமான வேலை எனக்கும் தெரியும்ணே.

      Delete
  2. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. வீட்டு வாசலில் தறி!

    கோலங்கள் அழகு.

    தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படத்தில் இருப்பது தறி இல்லண்ணே. பாவு. பாவு நீட்டி, சிக்கு, இழை அறுந்திருக்கான்னு பார்த்து தறியில் சேர்ப்பாங்க. அதுக்கப்புறம்தான் புடவை, வேட்டி, பட்டுத்துணின்னு நெய்வாங்க. ஒருமுறை பதிவாக்கனும். ஆசை இருக்கு.. சீக்கிரத்தில் பதிவு வரும்.

      Delete
  4. பீடுடைய மாதத்தின் சிறப்பு, பூசணிக்காய் வைப்பதன் முக்கியத்துவம் மற்றும் பல அரிய செய்திகளை அறிந்தேன். புகைப்படங்கள் அருமை.கும்பகோணத்தில் எங்கள் தெருவில் மார்கழி மாதம் அந்நாட்களில் சிறப்பாக இருந்ததைப் பார்த்தது நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் ஆமாம்ப்பா, நானும் சின்ன வயசில் பிள்ளைகளோடு போட்டி போட்டுக்கிட்டு 15, 17, 21,23ன்னு சாணத்தால் பிள்ளையார் பிடிச்சு பூசணிப்பூ வைப்போம். ஆனா, என் பொண்ணுங்க காலையில் எந்திரிக்காம தூங்குதுங்க. என்ன செய்ய?!

      Delete
  5. வீட்டு வாசலில் பாவு ஆத்துகிறார்கள். எங்க ஊரிலும் இது போல் பாவு ஆத்துவோம். அது அந்தக்காலம். இப்போ யாரு வீட்டிலும் தறி என்பதே கிடையாது. எங்கள் ஊர் திரூநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுர். நாங்கள் அடவியார் ஜாதி.மொத்தம் 6+6 = 12 தெருக்கள் உண்டு.ஒரு தெருவில் சில நேரங்களில் 4 பாவு வரை போடுவார்கள். இப்போ எல்லாம் மலரும் நினைவுகளாகிவிட்டது.

    ReplyDelete