Monday, August 06, 2018

வீட்டில் பிரசவம் இனி சாத்தியமா ?! - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா!   வீட்லதான் பிரசவம் பார்க்கனும்ன்னு யூட்யூப் பார்த்து புள்ளை பார்த்துக்க போயி ஒரு புள்ள செத்து போயிருக்கு. அதேநேரத்தில் இன்னொரு புள்ள தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கிட்டு நல்லா இருக்குறதா வாட்ஸ் அப், பேஸ்புக்ன்னு ஊரே அல்லோகலப்படுதே! பார்த்தீங்களா?!


ம்ம் பார்த்தேன்.  ஒரு பொண்ணுக்கு பிரசவம்ங்குறது அந்த நாளில் நடப்பதில்லை. அவள் வளர்ந்த சூழல், கர்ப்பிணியானப்பின் அவ மனநிலை, அவள் வாழும் சூழல், அவளோட மன நலம், உணவு, மருத்துவ வசதி.. இப்படி எல்லாம் சேர்ந்துதான் அவளுக்கு சுகப்பிரசவமா இல்ல அறுவை சிகிச்சையான்னு தீர்மாணிக்குது. இந்த காரணிகளோடு புதுசா ஒரு காரணீயும் சேர்ந்திருக்கு, அது மருத்துவமனைகளின் பணத்தாசை.. எல்லா மருத்துவமனையும் பணத்தாசையால் அறுவை சிகிச்சை செய்வதில்லைன்னாலும் அப்படி செய்யும் மருத்துவமனையும் இருக்குன்னு ஒத்துக்கத்தான் வேணும்.




சுகப்பிரசவம்ன்னு சொன்னாலும் வலி இல்லாம குழந்தை பெத்துக்குறதில்லை.  பல டன் எடையுள்ள இரும்பு சம்மட்டியால், முதுகெலும்பில் அடிச்சா எப்படி வலிக்குமோ அந்த வலியை பெண் தாங்கனும். அதுமட்டுமல்ல, குழந்தை வெளில வர வேண்டி அவ பிறப்புறுப்பு கிழிக்கப்பட்டு தையல் போடப்படும். உக்கார, எழுந்துக்க,. நடக்க ஒரு வாரம் வலிக்கும்.   ஒருவேளை அதில் எதாவது பிரச்சனைன்னா, செப்டிக் ஆகி புழு, சீழ் வச்ச கதைலாம் நாம் கேட்டிருப்போம். அதற்குபின் லூசான பிறப்புறுப்போடு அவள் காலம் முழுக்க இருக்கனும்.. பிரசவத்தின்போது குழந்தை வெளியில் வரவேண்டி மூச்சடக்கி முக்க்க்க்க்க்குவதால் அதிக வெயிட் தூக்கினாலோ, மலம் கழிக்கும்போது முக்கினாலோ கொஞ்சம் கொஞ்சமா கர்ப்பப்பை இறங்க ஆரம்பிச்சு பிறப்புறுப்பு வழியா தொங்கும். அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை  செய்யனும். லூசான பிறப்புறுப்பால் உடலுறவிலும் இன்பம் இருக்காது.  ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு 3.5 இஞ்ச். ஆனா பாப்பாவின் தலையோ கிட்டத்தட்ட 15இஞ்ச்(38செமீ) இருக்கும். பிறப்புறுப்பு தன் இயல்பைவிட 5 மடங்கு விரிந்தாக வேண்டிய கட்டாயம். இப்படி விரிய வேண்டியது சதை மட்டுமில்ல. எலும்பும் விலகிக்கொடுக்கனும். உச்சக்கட்ட வலியினால் உண்டாகும் அதிர்ச்சியினால் மரணமடைந்தவங்க ஏராளம். பிரசவத்தில் உயிரிழப்பு ஏற்பட முக்கிய காரணம் ஜன்னி. அதாவது, தொப்புள்கொடியை அறுக்க சுத்தமில்லாத பொருட்களை பயன்படுத்துவதாலும், நோய் தொற்றும் ஏற்பட்டு இறந்தவர்கள் 20% பெண்கள். இப்ப இந்த எண்ணிக்கை 0% இது அத்தனையும் மருத்துவத்தால் மட்டுமே சாத்தியம். 
அடுத்து சிசேரியன் பத்தி பார்க்கலாம்... வயிற்று நிறைய குழந்தை இருக்கும்போது கர்ப்பிணி பெண்ணை மடக்கி அவள் முதுகுத்தண்டு எலும்பு மஜ்ஜையில் ஊசி செலுத்தப்படும். அதுவே உயிர்போகும் வலி.  முதுகுதண்டில் போடப்பட்ட ஊசியால் வாழ்நாள் முழுக்க அதிக நேரம் நிற்கவோ, ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கவோ முடியாது. குறுக்கு வலிக்கும். அழகான வயிறு கிழிக்கப்பட்டு குழந்தை எடுக்கப்படும். கிழிக்கப்பட்ட தடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அந்த தழும்பை கண்டபின் எங்கிருந்து காமம் வரும்?!  பிரசவிச்ச பின் ஒரு மணிநேரத்துக்குள் கொடுக்க தாய்ப்பால் வேண்டிய மயக்கம் தெளியாததால் கொடுக்க முடியாது. குழந்தைக்கு பால் உண்ண பழக்கப்படுத்தவும், பால் ஊறவும் ஒரு வாரமாகும். அதுவரை பாப்பாக்கு கரைச்சல் பால்தான். சிசேரியன் செஞ்சுக்கிட்ட பலருக்கு 6 மாசத்துக்குள் பாலும் வற்றி போகும். இப்படி பிறக்கும் குழந்தை கிட்டத்தட்ட குறை பிரசவம்தான். தாயின் கர்ப்பப்பையிலிருந்து நீந்தி, அம்மாவின் பிறப்புறுப்பை தட்டி, மோதி, யோனி வழியே உடலை குறுக்கி நுழைந்து வெளி வருவதால் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் இயல்பாவே அக்குழந்தைக்கு இருக்கும். சிசேரியனில் அந்த தைரியம் மிஸ்சிங்க். சுருங்க சொன்னால் குறுக்கு வழியில் பிறந்தவங்கன்னு திட்ட வசதிதான்.

பொதுவா நம்ம வீட்டில்லாம் ஆம்பிளை பிள்ளைதான் உழைக்கனும், வெளில போகனும்ன்னு அவனுக்கு நல்லதா சாப்பிட கொடுப்பாங்க. மதியம் சாதம், கொஞ்சம் அப்பிடி இப்படி இருக்கும் சாப்பாடுலாம் அந்த வீட்டு பொண்ணுகளுக்குதான். இது எல்லார் வீட்டிலயும் நடக்கும். பையனை கவனிக்க வேண்டியதுதான் அதேநேரத்தில் ஒரு உயிரை கொடுக்க போகும் பெண்ணுக்கு ஊட்டச்சத்தான உணவை அவளுக்கு 10 வயசிலிருந்தாவது கொடுக்கனும். அதுக்குதான் பொண்ணுங்க சடங்கானால் உளுத்தங்களி, பச்சை பயிறு சுய்யம்ன்னு சமையலும், புட்டு, உளுந்தவடைன்னு போசாக்கான உணவுகளும்,   நல்ல எண்ணெய், நாட்டு முட்டையை குடிக்க கொடுப்பதும்.  வெல்லம் ,வாழைப்பழம்ன்னு எல்லாமே சத்தானதா கொடுப்பாங்க. இப்ப என் பொண்ணுக்கு பிடிக்காதுன்னு அம்மாவே இதுலாம் தவிர்த்துடுறாங்க. நல்ல எண்ணெய், வெல்லம், வாழைப்பழம்லாம் அந்த நாளில் சாப்பிட்டா குறுக்க வலிக்காதுன்னு என் அம்மா சொல்லும்.

சத்தான உணவுகளை கொடுத்து வளர்ந்த பெண், மணமாகி கர்ப்பிணியானப்பின் அவளை கவனிக்க ஆள் இருந்தது. கூட்டு குடும்பம்ன்றதால பாட்டி, மாமியார், ஓரகத்தி, நாத்தனார்ன்னு ஆட்கள் அவள் பயத்தை போக்க இருந்தாங்க. கணவன், மனைவி பிரச்சனையை பேசி தீர்க்க மாமா, சித்தப்பா, தாத்தான்னு ஆட்கள் இருக்கவே மன நலமும் நல்லாவே இருந்துச்சு.  நீர் இறைத்தல், தயிர் கடைய, துணி துவைக்கன்னு வீட்டு வேலைகளும் அவளுக்கு தெரியாமயே அவளோட இடுப்பு எலும்பை இலகுவாக்கி வச்சிருந்தது. அதனால் வீட்டிலேயே பிரசவமும், சுகப்பிரசவமும் சாத்தியமானது. ஆனா இப்ப அப்படி இல்ல.  தனிக்குடித்தனம்ன்றதால கவனிக்க ஆள் இல்ல. கணவன் மனைவி பிரச்சனை, மன அழுத்தம், உடல் உழைப்பு, சத்தான உணவுலாம் இல்லாததால் இனி வீட்டிலேயே பிரசவம் சாத்தியப்படாது. இப்படியே தொடர்ந்துக்கிட்டிருந்தால் காலப்போக்கில் சுகப்பிரசவமும் இல்லாம போயிடும்.
கருவுற்ற நாள் முதலா பொத்தி பொத்தி பார்த்துக்கிட்டு, பால் பழம், காய், கீரைன்னு சாப்பிட்டு மாசாமாசம் செக்கப்,  மருந்து, ஊசி,, ஓய்வுன்னு இருந்தும் பல புள்ளைக்கு சிசேரியன் நடக்குது. இன்னிக்கும் சரியான சாலை வசதி இல்லாம, கையில் காசில்லாம, இப்படி பல்வேறு காரணங்களுக்காக  மருத்துவமனைக்கே போகாம , சரியான சாப்பாடு இல்லாம  மலைவாழ் மக்கள் வீட்டிலயே பிரசவிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. என்ன ஒன்னு அங்கலாம் கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் அதிகமா இருக்கும்.  அதேமாதிரி, முறைதவறி வீட்டுக்கு தெரியாம பிள்ளை சுமக்கும் பெண்கள் அசால்ட்டா கழிவறையிலும் புதரிலும் ஈசியா பிள்ளை பெத்துக்கிட்டு, எதும் நடக்காதமாதிரி நல்லாதான் நடந்து போறாங்க.  இதை படிக்கும்போதும் கேட்கும்போதும் நாம சாப்பிடும் மாத்திரைகள்தான் பிரசவத்தை கஷ்டமாக்குதோன்னு டவுட் வராமயும் இல்ல. அவங்கலாம் எப்படி மாமா ஈசியா குழந்தை பெத்துக்குறாங்க?!
பிரசவ வலி தாங்க முடியாத வலிதான் இல்லேங்கல. ஆனா, அதேநேரம் பிரசவ வலியைவிடவும் பெரிய வலி Trigeminal Neuralgiaதான். இது மறுக்க முடியாத உண்மை. அதுபத்தி வேற பதிவில் பார்ப்போம். மிருகங்கள், பறவைகள்லாம் இயற்கையோடு இசைந்து வாழ்வதால் அதுக்கு சுகப்பிரசவமாகுது. அங்கு சிசேரியன் உண்டான்னு கேள்வி கேட்கும் மேதாவிகளுக்கு, அங்கயும் பிரசவம் எவ்வளவு கடினமானதுன்னு சில எடுத்துக்காட்டு சொல்றேன் கேளு. கிவின்னு ஒரு பறவை கேள்விப்பட்டிருப்பே.  அது தன்னோட எடையில் கால் பங்கு எடையுள்ள முட்டையை சுமக்கும். அதாவது, சராசரியா ஒரு கிவி பறவையின் வெயிட்  1கிலோ 300 கிராம் இருக்கும் . ஆனா அதோட முட்டை  300 கிராம் இருக்கும் . அதாவது ஒரு பொண்ணு 11கிலோ எடையுள்ள குழந்தையை சுமந்து பெத்துக்குறதுக்கு சமம்.


அடுத்தது முள்ளம்பன்றி. முள்ளம்பன்றியின் முட்கள் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது சாஃப்டாதான் இருக்கும். குட்டி வெளிய வந்த ஒரு மணி நேரத்துலயே அதோட முள் கூர ஆக ஆரம்பிச்சிடும் . சில நேரம் முள்ளம்பன்றி தவறான பொசிஷன்ல வந்தாலோ இல்ல நேரமானாலோ அம்மாவின் யோனிப்பாதையை குத்தி கிழிச்சுதான் வெளிய வரும்  .
பிரசவிச்ச நாய் தன்னோட ஒரு குட்டியை சாப்பிட்டுடும்ன்னு சொல்வாங்க, ஆனா ஒரு குட்டி தன்னோட அம்மாவையே சாப்பிட்டடும். அது எதுன்னா, தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் உதாரணமா சொல்லும் சிலந்திதான் அது. சிலந்தி முட்டைல இருந்து வெளிய வந்ததும் 9 நாளுக்கு தன்னோட அம்மாவைதான் நம்பி இருக்கும் . அம்மா சிலந்தி, தன் குட்டி சிலந்தி சாப்பிடுறதுக்காகவே ஸ்பெஷலா ஒரு முட்ட போடும் . அந்த முட்ட திரவ வடிவில் இருக்கும். அது சீக்கிரமே காலி ஆகிடும் . ஓடியாடி தனக்கான உணவை தேடுமளவுக்கு உடல் வலுவும், புத்திசாலித்தனமும் இருக்காததால் தன்னோட அம்மாவையே சாப்பிடும்.


அடுத்து கழுதைப்புலி, இந்த இனத்தில் உருவ அமைப்பில் ஆண் பெண்னு வித்தியாசம் இருக்காது. ரெண்டுத்துக்குமே ஆண் உறுப்பு இருக்கும். இத Pseudopenisன்னு சொல்லுவாங்க .  இந்த Pseudopenis வழியாதான் சிறுநீர் கழிக்க, உடலுறவு கொள்ள, குட்டி ஈன எல்லாமே நடக்கும். இந்த pseudopenisல இருக்க சின்ன ஓட்ட வழியா குட்டி வெளிய வரதுனால பயங்கர வலியும் சாவு வரைக்கும் கொண்டு போய் விட்ரும் . 15% கழுதைப்புலி மொத குட்டி போடுறதுல இறந்துடுது .
பல்லி, ஓணான், அரனைய வகைய சேர்ந்த Singleback lizard தன்னோட எடையில் மூன்றில் ஒரு பங்குள்ள குட்டியை பெற்றெடுக்கும். அதாவது ஒரு பெண் 7 வயசு குழந்தையை பெத்தெடுப்பதுக்கு சமம். உலகத்துலயே மோசமான பிரசவம் இதுதான்.

பெண் கடல்குதிரை ஆண் கடல்குதிரை வயிற்றிலிருக்கும் ஒரு பை மாதிரியான அமைப்பில் முட்டையிடும். சாப்பிடாம, தூங்காம அந்த முட்டைகளை முப்பது நாட்களுக்கு அடைகாப்பது ஆண் கடல் குதிரையின் பொறுப்பு. அந்த முட்டை குஞ்சு பொறிச்ச கொஞ்ச நாளில் ஆண் கடல் குதிரை செத்து போகும்.

Tasmanian Devilன்ற ஆஸ்திரேலியா நாட்டு விலங்கினம் ஒரே நேரத்தில் அம்பது குட்டிகள் வரை போடும். ஒவ்வொன்னும் அழிரப்பர் சைசுல இருக்கும். கங்காருக்கு இருக்குற மாதிரி இதுக்கும் வயிற்றின் வெளிப்பகுதியில் ஒரு பை இருக்கும். அந்த பைக்குள் நாலு பால் காம்பு இருக்கும். குட்டிகள் வெளிவந்ததும் ஊந்து அந்த பைக்குள் போயிடனும். பைக்குள் நுழையும் முதல் நாலு குட்டிதான் உயிரோடு இருக்கும், மத்ததுலாம் செத்துடும். சிக்கலான பிரசவம்ங்குறது மனித இனத்துக்கு மட்டுமல்ல. எல்லா உயிருக்கும் உண்டு. பிரசவிக்கும் எந்த உயிரும் மறு பிறவி எடுக்குதுங்குறதையும் மறுப்பதற்கில்லை. அதனால் பிரசவம் விசயத்தில் ரிஸ்க் எடுக்காம பழங்கதை பேசாம ஹாஸ்பிட்டலில் பிரசவம் பார்ப்பது நல்லது. அதைவிட்டு வீட்டில்தான் பிரசவம் பார்ப்பேன்னு சொல்லுற ஆட்கள் முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தைய வீட்டு சூழல், உணவு, சமூக சூழலைலாம் செஞ்சு கொடுத்துட்டு வீட்டுலயே பிரசவம் பார்க்கட்டும் புள்ள. ஏன்னா, இது தாய், சேய் உயிரோடு விளையாடும் விசயம்.

இப்படி அரும்பாடுப்பட்டு பெத்துக்கும் பிள்ளைகளைத்தான் வேண்டுதல், சாமின்ற பேரால் சிலர் கொடுமைப்படுத்துறாங்க. உடனே இந்து மதம் அப்பிடி இப்படின்னு கூப்பாடு போட வேணாம். மதத்தின் பெயரால் சிறு குழந்தைகள் வதைப்படுவது எல்லா மதத்திலும் உண்டுதானே மாமா.

ஆமாம் புள்ள. பக்தி இருக்கட்டும். பைத்தியம் வேணாம்ன்னு சொன்னால் யார் கேட்குறாங்க?! நீயாவது நான் சொல்றதை கேளேன்.. ப்ளீஸ்...

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. இது குறித்து யூடியூப்பில் நான் இரு காணொளிக் காட்சிகளைப் பதிவிட்டுள்ளேன். தங்களுக்கு நேரம் இருந்தால் பார்க்கவும்.

    1) மரூட்டி பிரசவ முறை ஆபத்தானதா? - https://www.youtube.com/watch?v=8rHKX95cQgc
    2) அறிவியலை ஏன் எதிர்க்கிறீர்கள்?- https://www.youtube.com/watch?v=o22Na8yw7mg

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பார்க்குறேன் சகோ
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. நிறைய விவரங்கள்... சுவாரஸ்யமான கட்டுரை.

    கடைசிப்படம் வேதனை தந்தது. பிரார்த்தனையை தான் செய்வதாக வேண்டிக் கொள்ளலாம். பிஞ்சுகளை வதைப்பது என்ன நியாயம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ, இது இந்துக்களில் மட்டும்தான் இருக்குன்னு நினைக்காதீங்க. எல்லா மதத்திலும் இந்த மாதிரி எதாவது மூட நம்பிக்கையிலான சடங்கு
      இருக்கு.

      Delete
  3. பல தகவல்கள் வியக்க வைத்தன...

    ReplyDelete
    Replies
    1. விலங்குகளின் பிரசவங்கள் பத்தி ஆங்காங்கு படித்தவைதான்ண்ணே. மத்தபடி சுகப்பிரசவமும், சிசேரியனும் சொந்த அனுபவம்.

      Delete
  4. ரொம்ப தெளிவா அழகா கொடுத்து இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. மோதிரக்கையால் குட்டுப்பட்டேன், நன்றி சகோ

      Delete
  5. திகில் ஊட்டும் பிரசவங்கள்...நிறைய தகவல்கள் ராஜி க்கா...

    ReplyDelete
    Replies
    1. இது சும்மா ட்ரையல்தான் அனு. இன்னமும் சிக்கலான பிரசவம் நிறைய இருக்கு.

      Delete
  6. வைரமுத்து ஒரு கதையில் கரிசல் காட்டு கதைஎன்று நினைக்கிறேன் ஒரு பெண் எதிர்பாரா நேரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்ப்பதுபோல் விலாவாரியாக எழுதி இருப்பார்

    ReplyDelete
    Replies
    1. அதே கதைதான்ப்பா. என் மாமா பொண்ணு மொத்தமே 35கிலோதான் இருப்பா. குடிகாரனை கல்யாணம் கட்டி படாத பாடு படும் வேளையில் கர்ப்பிணியானாள். ஏதோ ஒரு சூழல் வீட்டில் யாருமில்லாத போது வலி எடுத்தது. குழந்தை பிறந்தது, மொத்தம் ரெண்டு பெண், ஒரு ஆண்குழந்தை. அதில்லாம வளர்ச்சியடையாத குழந்தை ஒண்ணு. இது நடந்தது 1992ல

      இன்னிக்கு அவள் மகளுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருக்கு.

      என்ன சொல்ல?! அவளுக்கு இருந்த தைரியம் மகளுக்கில்லை.

      Delete
  7. நீங்கள் இந்தப் பதிவுக்கு நிறைய ஹோம் வர்க் செய்திருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் இல்லப்பா. விலங்குகளின் சிக்கலான பிரசவம் பத்தி ட்விட்டரில் படிச்சிருக்கேன். மத்தபடி பிரசவத்தை அனுபவிச்சது, கேட்டது, பார்த்தது அனுபவம்தானே?!

      Delete
  8. விரிவான தகவல்கள்.

    கடைசி படம் - வேதனை.

    ReplyDelete
  9. விவரங்கள் நிரைந்த பதிவு.

    கூடலுக்குப்பின் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று தின்றுவிடும் என்றுதான் படித்திருக்கிறேன். சிலந்தி குட்டிகள் அம்மாவை சாப்பிடும் என்பது புது தகவல்.

    ReplyDelete