Tuesday, August 13, 2019

ஹரியும், சிவனும் ஒன்றென உணர்த்தும் ஆடித்தபசு

ஒரு பொண்ணுக்கிட்ட போய் பொறந்த வீடு பெரிதா?! இல்லை புகுந்த வீடு பெரிதான்னு  கேள்வி வரும்போது  சாமானிய பொண்ணுன்னா என்ன செய்யுறதுன்னு குழப்பம் வரும். யாரை உயர்த்தி சொல்லுறது?! யாரை விட்டுத்தர்றதுன்னு ரொம்ப குழம்புவோம். இதுமாதிரியான ஒரு இக்கட்டான நிலை பார்வதிதேவிக்கு வந்தது. அம்பாள் அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிச்சாங்கன்னு இன்னிக்கு பதிவில் பார்ப்போம். 
நெல்லை மாவட்டத்தின் சங்கரன் கோவிலில் கோமதி ஆலயத்தின் இப்போதிருக்கும் அம்பாள் சன்னிதி முன், நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.இருவருக்கும்  சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என வாக்குவாதம் வந்தது. இதன் முடிவை அறிந்துக்கொள்ள பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர்.“சிவனுக்கு புலிதோலும், திருவோடும்தான் சொந்தம். மயானமே அவன் இருப்பிடம்.அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தான் பதுமன்.  பெரும் செல்வந்தனாய் இருந்தாலும்  குபேரனிடம் கடன் வாங்கி இன்றுவரை வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு கடன்காரன் என்ற பெயரோடு இருப்பவர். அதுமட்டுமல்லாமல் முனிவரின் காலால் உதை வாங்கியவர்தானே விஷ்ணு. இப்படிப்பட்ட பெருமாள் நம் ஈசனுக்கு இணையாவாரா?” என சங்கன் வாதிட்டான். 
குழப்பம் தீராத பார்வதிதேவி சிவனிடம் முறையிட்டாள். சுவாமி! தாங்கள் எனக்கொரு வரம் தரவேண்டுமென வேன்டி நின்றாள். பார்வதிதேவியின் வரத்தினை கேட்ட மாத்திரத்தில் சிவன் ஆடிப்போனார். தேவி, யோசித்துதான் வரம் கேட்கிறாயா?! என மீண்டும் கேட்டார். ஆமாம் சுவாமி, நீங்கள் இருவரும் சமமென உலக்குக்கு உணர்த்த உங்கள் உடலின் இடப்பாகமான எனது இடத்தை என் அண்ணனுக்கு தர முடிவு செய்துள்ளேன் என சொன்னாள். அம்பிகையின் வேண்டுதல் நிறைவேற ஈசன் ஒரு யோசனை சொன்னார். ஈசனின் யோசனைப்படி,  பொதிகை மலையில் உள்ள புன்னைவனத்தில் தவம் செய்தாள். பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின்  தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் ஆடி மாம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள். “பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம்.? நாங்கள் இருவரும் சமமானவர்கள்தான்உடல்இல்லையெனில் ஆத்மாவுக்கு மதிப்பில்லைஆத்மா இல்லையெனில் உடலுக்கு மதிப்பில்லைஇரண்டும் சேர்ந்து இருக்கும்வரைதான் நல்லதுஅதுபோல உடலும் ஆத்மாவும் போன்றதே நாங்கள்.
எங்கள் இருவரின் துணை உள்ளோரே வளம் பெறுவர். அதனால் உன் வீணான சந்தேகத்தை இன்றோடு  ஒழி என்றார் ஈசன். “ஹரனாகிய உன் கணவனும்,  உன் அண்ணனான இந்த ஹரியும் சம உயர்வு கொண்டவர்களே! என்பதை உணர்ந்தாயா என் தங்கையே.” என்றுக்கூறி  புன்னகைத்தார்  விஷ்ணு. பார்வதிதேவியும்  ஹரியும் சிவனும் ஒன்று என்பதை தானும், உலக மக்களும் அறியவேண்டியே தவம்செய்து சங்கரநாராயணராக இருவரையும் காட்சிகொடுக்கும்படி செய்தேன் என வணங்கி நின்றார்.  அதனால, தவம் செய்யும்  அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும். ஆடிமாதம் பௌர்ணமியன்று அம்மனின் தவக்கோலத்தை வணங்கினால் மிகச்சிறப்பு.  
தபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற  நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா நெல்லை சங்கரன்கோவிலில் 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில்  எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.  மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன்  இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.
சங்கரன்கோவில்வாழ் அம்மனுக்கு கோமதி அம்மன் எனப்பெயர்.  சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக  மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு  பெயர் உண்டு. ஆ என்றாலும் பசு தான். பசுக்களாகிய உயிர்களை ஆள்பவள் என்ற பொருளில் இவ்வாறு சொல்வர். திங்கள்கிழமைகளில்  இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி  முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த  சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

சங்கரநாராயணர் சன்னிதி சிவன், அம்பாள் சன்னிதிக்கு நடுவில் அமைந்துள்ளது.   சிவனுக்குரிய வலப்பாகத்தில்  தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை  இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில்  மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள  திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில்  விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர்.  எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.  இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில்  உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.
அம்மனின் தவக்கோலத்தை காண்பது அத்தனை மகத்தானது. அம்பிகையை காண்போம், வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்.


நன்றியுடன்,
ராஜி.

4 comments:

  1. எல்லா வளமும் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஆடித்தபசு திருநாள்..மிக சிறப்பு

    ReplyDelete
  3. ஆடித்தபசு பற்றி அறிந்ததுண்டு. சிறப்பான தகவல்கள்...

    ReplyDelete