Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Tuesday, September 05, 2017

நாம் அனைவரும் ஆசிரியர்களே!

ஆசிரியர்ன்னா  புனிதம்ன்னு அர்த்தம். வருங்கால சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்குவது ஆசிரியர்கள்தான்.  அதனாலதான் ஆசிரியர்களை ஆண்டவனுக்கு சமமா வச்சிருக்கோம். .  ஒருசில இழி ஜென்மங்களால் அந்த ஆசிரிர் தொழிலுக்கே இழுக்குன்னாலும் குழந்தையின்மீது பெற்றோர்கள் காட்டும் அக்கறையைப்போலவே, தானும்,    அக்கறை காட்டும் ஆசிரியர்கள் இன்னிக்கும் நம்மோடு இருக்காங்க. பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் மட்டுமில்லாம நம்மோடவே இருக்கவுங்க, போனவங்களாலதான் வாழ்க்கைன்னா என்னன்னு நாம பாடத்தை கத்துக்குறோம்.  என் வாழ்க்கைல வந்த சில ஆசிரியர்களை பத்தி இன்னிக்கு பார்ப்போம். 

”ராமசாமி ஐயா”
தத்தக்க பித்தக்கன்னு நடக்கும் வயசில்,  பக்கத்து வீட்டு அண்ணாவோடு மஞ்சப்பையில், கைக்கு கிடைத்த குமுதம், கல்யாண பத்திரிகைகளை போட்டுக்கிட்டு போன என்னை ச்ச்சீ போன்னு விரட்டி அடிக்காம, வா தாயி!!ன்னு வகுப்புக்குள்ள கூட்டிக்கிட்டு போனவர்.


 “அப்பா”
பள்ளியில் சேர்த்ததும் தன் கடமை முடிந்தது என எண்ணாமல், பக்கத்தில் அமர்ந்து எழுத்துக்களையும், எண்களையும் கற்று தந்ததோடு விளையாட்டுக்கு கூட பொய் சொல்ல கூடாது, வழ வழன்னு குழைய கூடாது,  (மன்னிச்சு அப்பா! உன் பேச்சை மீறிட்டேன், நான் பிளாக்கராகிட்டேன்!!)

அம்மா”
எல்லாருக்குமே அப்பா தைரியத்தையும், அம்மா அன்பையும் சொல்லி தருவாங்க. ஆனா, வித்தியாசமா பெண்ணாய் பொறந்ததால அழனும்ன்னு அவசியமில்லை. தைரியமா இரு. எதிரியே வீடு தேடி வந்தாலும் அவமானப்படுத்தக்கூடாது,யாரையும் பசியோடு இருக்க விடக்கூடாது ன்னு கற்று தந்தவள்.  வைராக்கியம், ரோஷத்துக்கு சொந்தக்காரி. ஒரு ஆணால் வரும் தைரியத்தை விட, ஒரு பெண்ணால் வரும் தைரியத்துக்கு மதிப்பதிகம்ன்னு அடிக்கடி உணர வைப்பவள்.. 

”கமலா டீச்சர்”
அன்னையும், பிதாவும் மட்டுமில்ல நானும் கத்து தருவேன்ன்னு ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கைப்பிடிச்சு கத்து தந்தவள்.

மூர்த்தி சார்”
உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமில்லை, தேமாவும், புளிமாவும் சேர்ந்ததுதான் தமிழ்ன்னு சொல்லி தந்து, எதாவது தப்பா சொன்னால், காதை திருகி அப்புறம் பச்சை பச்சையாய் திட்டிப்புடுவேன்னு பயமுறித்தி வெண்டைக்காய், மாங்காய், சுண்டைக்கா, முருங்கைக்காய், பீர்க்கங்காய்ன்னு சொல்லி சிரிக்க வைத்து, தப்பு தப்பா எழுதிய என்னைக்கூட தமிழில் மாணவர் மன்றத்தேர்வில் முதல் வகுப்பில் தேற வைத்தவர்.

கணக்கு நாகரத்தினம் சார்”:
ஜியாமெண்ட்ரி பாக்சில் இருக்கும் காம்பஸ் வம்பு சண்டைக்கு வரும் கதிரேசனை குத்துறதுக்கு மட்டுமே யூஸ்ன்னு நினச்சுக்கிட்டு இருந்த என்னை, மகளாய் நினைத்து கிஸான் ஜாம் கொடுத்து, ஜியாமெண்ட்ரி வரைய கத்து கொடுத்து 81 மார்க் எடுக்க வைத்தவர்.


“வடிவேலு சார்”
9 வகுப்பில் அடி எடுத்து வைத்த முதல் நாள்..., கிளாசுக்குள் நுழைந்தவர், எங்கள் பேரை வரிசையா சொல்லிட்டு வர சொன்னார். என் பேரை சொல்லிட்டு அமைதியா உக்காந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது.  கடைசி பெஞ்ச் அரட்டை கேர்ள்ன்னு பேரெடுத்ததை நிரூபிக்கனுமேன்னு எங்க பேரையே கேட்டிட்டு இருக்கீங்களே! உங்க பேர் என்னன்னு கேட்டதுக்கு..,இங்க வா! இதோ என் பாக்கட்டுல இருக்குற பேட்ச்ல என் பேர் இருக்கு படின்னார். vadiveluன்னு இருந்துச்சு, என் நாக்குல இருந்த சனி பகவான் கதகளி ஆட வாடிவாலுன்னு படிச்சு தொலைச்சேன், அன்னில இருந்து ரொம்ப ரொம்ப டிரை பண்ணி ஆங்கிலத்தை எழுத்து கூட்டி படிக்க வச்ச புண்ணியவான். அதுக்கு அவர் எடுத்துக்கிட்ட காலம் மூணு வருசம்.

“மீனாட்சி டீச்சர்”
தமிழ் -தகராறு, ஆங்கிலம்- ஆகாது, புவியியல் -புரியாது, வரலாறு- வராது, கணக்கு - கசக்கும்ன்னு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு புது அகராதி போட்டு வச்சிருந்த என்னை நம்பி!!  அப்பா 11 வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப்பில் கொண்டு போய் போட அங்க விலங்கியல், இயற்பியல், வேதியியல்ன்னு விதம், விதமா, கலர் கலரா பூதங்கள் வந்து மிரட்டுச்சு. அதுலயும் விலங்கியல் பாடம் இருக்கே! ஐயோ! நைட் கனவுல கரப்பான் மூச்சி மல்லாந்து படுத்து வயித்தை காட்டும், சாப்பிட போனால் தவளை வந்து சாப்பாட்டு தட்டுல டான்ஸ் ஆடும். அட, போனா போகுது இதெல்லாம் மறக்கலாம்ன்னு டிவி பொட்டி முன்னாடி உக்காந்தா மண்புழு நெளியும், பிராக்டிக்கல் எக்சாம் காலை வரை கூட ரெக்கார்ட் முடிக்காம தில்லா நின்ன என்னை, விட்டா மறுபடியும் இதே கிளாசுல உக்காந்து நம்ம உயிரை வாங்குவான்னு முழு மார்க் போட்டு 12வது கிளாசோடு மூட்டை முடிச்சு கட்டி அனுப்பியவர்.

ரவி சார்:
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு எம்ப்ராய்டரி, பொம்மைகள், வொயர் கூட பின்ன கத்து கொடுத்தவர்,ஒரே வாரிசானதால் பொத்தி பொத்தி வளர்த்ததால், வேகமா நடக்கவே பயப்படும் என்னை விளையாட்டுக்களில் கலந்துக்க வைத்தவர்.

நட்புகள்:
பள்ளிக்கூடத்துல பாடம் மட்டுமல்ல, குறும்புத்தனம், சண்டை, அழுகை, சமாதானம், பகிர்தலும் கூட கத்துக்கலாம்ன்னு கத்துக்கொடுத்த மாலதி, சுஜாதா, செல்வி, தெய்வநாயகி, நசீமா, ஜெயலட்சுமி, உமா, கமலகண்ணன், வில்வநாதன், அருணகிரி, கார்த்தி....,

லவ்ஸ்:
பதின்ம வயதில் பாடமும், நட்பும், குறும்புத்தனமும் மட்டுமல்ல, காதலும் கூட வரும்ன்னு சொல்லி தந்த செல்ல இம்சை. 

வூட்டுக்காரர்:
ஏழுக்கழுதை வயசாச்சு! இன்னும் பொறுப்பில்லாம இருக்காளேன்னு பொறுப்பா வாழ்க்கை பாடத்தை கத்து தரும் தியாகி!!

மூத்த பெண்: 
தாய்மையை கற்று தந்தவள், கூடவே, இலவச இணைப்பாக கம்ப்யூட்டரையும்...,

இளைய மகள்: 
அச்சச்சோ! ரெண்டாவதும் பெண்ணாகிடுச்சே!ன்னு ஒதுக்கிய சொந்தங்களையும், அதைலாம் எதிர்த்து போராட வேண்டி இருக்கும்ன்னு உலகத்தை பற்றி கற்று கொடுக்க ஆரம்பித்தவள்.

கடைக்குட்டி:
தொலைத்த என் குழந்தை தனத்தையும், குறும்புத் தனத்தையும் மீண்டும் நினைவு படுத்திய என் ஆசான்.

பதிவர்கள்:
எல்லாவற்றையும் கற்று தர ஆளிருந்த எனக்கு சகோதர பாசத்தை காட்ட ஆளில்லாமல் தவித்த காலங்களில் சகோதர பாசத்தை அறிய வைத்தவர்கள்.

முகம் அறியாத ஆசான்கள்:
பிள்ளை பேறு முடிந்த பதினைந்தாவது நாளே ரெண்டாவது மாடிக்கு கற்களை சுமந்து உழைப்பை கற்று தந்த கட்டிட தொழிலாளி.., 

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நேரத்திலும் கவனக்குறைவாய் தந்த அதிகமான நூறு ரூபாயை திருப்பி தந்த பால்கார ஐயா! 

கையில் காசில்லாம போய் ஒரு முழம் பூ கேட்டு பர்சை வீட்டுலயே வச்சுட்டு வந்ததை உணர்ந்து, கையில் வாங்கிய பூவை, வேணாம் பாட்டின்னு திருப்பி தர, வெள்ளிக்கிழமை அதுமா பூவை திருப்பி தராதம்மா, அப்பாலிக்கா வரும்போது காசு கொடுன்னு நம்பி கடன் கொடுத்ததள்ளாத வயதிலும் பூ விற்கும் பாட்டி.

கடையை காலி பண்ணிட்டு, கடைசியாய் இருந்த நாலு இட்டிலியை தட்டில் வைத்து சாப்பிட, அமரும்போது அக்கா வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்துட்டாங்க. அவங்க பையன் பசிக்கு அழுகுறான். வீட்டில் மாவு எதுமில்ல. டிஃபன் இருக்கான்னு கேக்க, 11 மணி ஆகியும், சாப்பிடாத போதும், எச்சில் விழுங்கியப் படியே தன் சாப்பாட்டை தரும் ஹோட்டல் கார அக்கா!!

இப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கை பாடத்தை கற்று தரும் அனைத்து விதமான ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.



அ, ஆ, இ, ஈ..... 1,2,3,.... A,B,C,D..... கத்துக்கொடுக்குறவங்க மட்டும் ஆசிரியர்கள் இல்ல. நாம சந்திக்கும் அத்தனை பேரும் நமக்கு ஆசிரியர்கள்தான். அன்பு, கோவம், பழி, துரோகம், பாசம், இரக்கம், பக்தின்னு அவரவருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு விசயத்தை கத்துக்கொடுத்துட்டுதான் போறாங்க.  அதனால, நமக்கே தெரியாம நமக்கு வாழ்க்கை பாடத்தை கத்து தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471043

நன்றியுடன்,
ராஜி.

Monday, December 02, 2013

இப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்!? ஐஞ்சுவை அவியல்

ஸ்ஸ்ஸ்ஸ் அபா! வெளில வேலைக்குப் போய் வீட்டுக்குள் வந்தோமா! கசகசப்பு போக கொஞ்ச நேரம் காத்து வாங்க ஃபேனுக்கடியில நின்னோமான்னு இல்ல. ச்ச்சே எப்ப பார்த்தாலும் கரண்ட் கட்.

ஆமா மாமா! தினமும் 12 மணி நேரம் கரண்ட் கட்டாகுது. எப்ப கரண்ட் கட்டாகும்ன்னு பயந்து பயந்து மிக்சில அரைக்க வேண்டியதுலாம் முதல்லியே அரைச்சு வச்சுக்குறதா இருக்கு.இந்த கரண்ட் கட்னால எந்த எலக்ட்ரானிக் பொருள், எப்ப ரிப்பேர் ஆகி என்ன செலவு வைக்கும்ன்னு தெரியல.  ம்ம்ம் சென்னைல பொறந்திருக்கலாம். நிம்மதியா இருந்திருக்கலாம்.

ரொம்ப அலுத்துக்காத! இன்னில இருந்து (2.12.2013) முதல் சென்னையிலயும் தினமும் ரெண்டு மணி நேரம் பவர் கட்ன்னு மின்சார வாரியம் அறிவிச்சிருக்கு. 

அப்படியா! மாலை ஆறு மணிக்கு முன்னயும், காலை ஆறு மணிக்கு பின்னயும் எரிய விடப்படும் தெரு விளக்குகள், கட்சிக் கூட்டம், மத விழாக்களுக்காக எரியவிடப்படும் அலங்கார விளக்குகள், பகலிலேயே தேவையில்லாம அரசு அலுவலகங்களில் எரிய விடப்படும் விளக்குகள்ன்னு இருக்குறதை அக்கறையா யாராவது அணைச்சா நல்லா இருக்கும்.

சும்மா அரசாங்கத்தையே குறைச் சொல்லாம வீடுகள்லயும் ஆளுக்கொரு ரூம்ல டிவி பார்க்காம, ஒரே ரூம்ல டிவி பார்க்கலாம். தேவையில்லாத நேரங்களில் சாமி ரூம், தெரு வாசப்படில எரியும் ஜீரோ வாட்ஸ் பல்ப்களை அணைச்சு வைக்கலாம். குழந்தைகள் தனித்தனி ரூம்ல படிக்காம ஒரே ரூம்ல படிக்க வைக்கலாம். முடிந்த வரை குழந்தைகளை ஒரே ரூம்ல படுக்க வைக்கலாம். பகல்ல ஜன்னல்லாம் திறந்து வச்சு லைட் எரிக்காம பார்த்துக்கலாம். வெயில் நேரத்துலயும் வாஷிங் மெஷின் ட்ரையர்ல துணிகளைத் துவைச்சு போடாம, துணிகளை துவைச்சு, அலசுறதை மட்டும் செட் பண்ணிக்கலாம். 

நீ சொல்றதுலாம் கூட சரியாதான் இருக்கு புள்ள. அரசாங்கத்தோடு சேர்ந்து நாமளும் பொறுப்பா நடந்துக்கனும்.

ஆனா, எனக்கொரு டவுட் மாமா. கரண்ட் கட்டுக்கு காரணம்ன்னு நீதான், நீதான்னு இப்போ ஆள்றவங்களும், ஏற்கனவே ஆண்டவங்களும் அடிச்சுக்குறாங்களே! அதைவிட்டு ஆக்கப்பூர்வமா சிந்திச்சு பிரச்சனையை சரிப்பண்ண மாட்டாங்களா!? அதுமில்லாம எதாவது ஒரு இடத்துல ரிப்பேர்ன்னு சொன்னா பரவாயில்ல. நெய்வேலி. மேட்டூர்ன்னு எங்கெல்லாம் கரண்ட் தயாரிக்குறாங்களோ அங்கெல்லாம் ஒரே நேரத்துலயா ரிப்பேர் வரும்!? 

நீயும், நானும் பேசி என்ன பிரயோஜனம்!? யோஒசிக்க வேண்டியவங்க யோசிக்கனும். நம்ம வூட்டு வேலைகளை செய்யவே அலுத்துக்குறியே! ராஜி வூட்டுக்கு எதிர்க்க செல்வின்னு ஒரு அக்கா இருக்காங்க. படிப்பறிவில்லாதவங்க. குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட அவங்க, தினமும் காலைல 4  மணிக்கு எழுந்து பஜாருக்கு போய் சில கடைகள் வாசல் தெளிச்சு கோலம் போட்டு, அதுக்கப்புறம் 2 வீடுகளில் வேலை செய்து, 9 மணிக்கு வீட்டுக்கு வந்து குளிச்சு சித்தாள் வேலை இல்லாட்டி அரிசி ஆலை வேலைக்கு போய் வருவாங்க. 

மீண்டும் சாயந்தரம் 6 மணில இருந்து 3 வீட்டு வேலைக்குப் போய் வருவாங்க. இதுக்கிடையில் அவங்க வீட்டில் சமைச்சுன்னு ஓயாம ஓடி உழைக்குறங்க. இப்படி உழைச்சு 3 வீடு கட்டி இருக்காங்க. வேலை விட்டு வரும்போது ரோடு ஓரத்துல நாம எறியும் அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குடிமகன்கள் போடும் சரக்கு பாட்டில்கள், புத்தகம்ன்னு எல்லாத்தையும் எடுத்து வந்து காசாக்கி தன் ஒரே பையனை டிப்ளமோ மெக்கானிக் படிக்க வைக்குது.

ம்ம்ம் எனக்கும் தெரியும்ங்க. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதுவரை யார்கிட்டயும் எதுக்காகவும் கையேந்தினதில்லைன்னு ராஜி சொல்லுவா. 

அவங்களும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கனும்ன்னு நாம எல்லோரும் வேண்டிக்கலாம்!! 

ராஜியோட பையன் அப்பு எட்டு மாச கைக்குழந்தையா இருக்கும்போது, அவனுக்கு கிஃப்டா வந்த டெடி பியர் பொம்மையை பார்த்தாலே அழுவான்.  முட்டிப் போட்டு நகர ஆரம்பிச்சதும் தெருக்கதவை திறந்தாலே தெருவுக்கு ஓட ஆரம்பிச்சுடுவான். அப்போ அவங்க வீட்டுக்கு எதிர்க்க பெரிய தரைக் கிணறு இருக்கும். அதனால, இடுப்புல கயிறுக் கட்டி சோஃபாவுல கட்டி வைக்க ஆரம்பிச்சா. அது தப்பு குழந்தை மனசு பாதிக்கும்ன்னு யாரோ சொன்னதால என்னப் பண்றதுன்னு தெரியாம முழிச்சா ராஜி. 

அப்புறம் அவன் பார்த்து பயப்படும் டெடி பியர் பொம்மையை வாசப்படில வச்சு பார்த்தா. பயப்புள்ள அதுக்கப்புறம் மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி டெடி பியர் பொம்மையைத் தாண்டி தெருவுக்கு ஓட ஆரம்பிக்கலியே! ராஜியும் நிம்மதியா இருந்தா.

புள்ளையை கயிறுல கட்டலாமா!? உன் ஃப்ரெண்டுக்கு அறிவே இல்லியா!? 

என் ஃப்ரெண்டை பத்தி சொல்லாதீங்க. உங்களுக்கு அறிவிருக்கா!? அப்படி இருந்தா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!!

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு.அப்போ உங்களால எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

விடைதானே!? சொல்றேன் அதுக்கு மின்னாடி ஒரு ஜோக் சொல்றேன். கேளு..,
மூன்றாம் வகுப்பு மாணவன் :டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?
ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை சொல்றாங்கன்னு பார்க்கலாம்.


அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .

ஆசிரியை :மறுநாள்....  உலகத்தின் எடை என்ன ன்னு யாருக்காவது பதில் தெரியுமா!?

யாருமே பதில் சொல்லலை!!


சிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த விடையை சொல்ல ....,
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா!?


ஆசிரியை :- ?????????????????

ஹா! ஹா! சிரிச்சுட்டேன். சாக்லேட் புதிருக்கு விடை சொல்லுங்க!!

விடைதானே!? இரு ஒரு முக்கியமான ஃபோன் பண்ணனும். பண்ணிட்டு வந்து சொல்றேன்.

ம்ம்ம் போங்க மாமா! போங்க. எப்படியும் சாப்பிட வீட்டுக்குதானே வந்தாகனும்!? அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி!?