உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை...
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை....,
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை!?
ஏக்கம், கவலை, இயலாமை,
வெறுப்பு, விரக்தி, வேதனை என
நிறைந்து வழிகின்றன...,
ஆனால்,
நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்...,
இருந்தும் என்னால் பேச முடியவில்லை!?.
ஏன்?
நான் பூரணமடையாதவளா?
இல்லை குறைபாடு உடையவளா?
என்னுள் மட்டுமே
என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.
அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.
ஆனாலும்,
பேசுகின்றேன்....
நிறையவே பேசுகின்றேன்...,
வாய் இருந்தும் ஊமையாய்!!!???

