Showing posts with label கேரட் அல்வா. Show all posts
Showing posts with label கேரட் அல்வா. Show all posts

Tuesday, December 11, 2018

ஈசியான கேரட் அல்வா - கிச்சன் கார்னர்

வெள்ளையா இருக்கவுங்கலாம் பொய் சொல்லமாட்டாங்கன்ற வடிவேலு காமெடி மாதிரி வெள்ளையா இருக்க பண்டம்லாம் உசத்தின்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா, உண்மை அப்படியில்லை. மைதா, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பாலீஷ் பண்ணப்பட்ட அரிசி, ரவைன்னு எல்லாமே உடம்புக்கு தீங்கு செய்யக்கூடியதுதான். நஞ்சுன்னு தெரிஞ்சே வெள்ளை சர்க்கரையை பயன்படுத்திக்கிட்டிருக்கோம். இந்த நச்சுப்பொருள்தான் உணவு அரசியலில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியான இடம்பெற்றிருக்கு.

எலும்புப்புரை நோய், எலும்பு மெலிதல், எலும்புத்துளைன்னு பெண்களை மட்டுமே தாக்கும் ஆஸ்டியோபொரோசிஸ்ன்ற நோய் சர்க்கரையை சாப்பிடுவதால் உண்டாகுது. அதுமட்டுமில்லாம, நிறைய வகை புத்துநோய் உருவாக இந்த சர்க்கரையே காரணமாகும்.    நம் பாரம்பரிய இனிப்புகள்லாம் பனைவெல்லத்துலயும், வெல்லம், தேனினாலுமே செய்யப்படும். ஆனா, அறிவியல் வளர்ச்சி சர்க்கரை கொண்டுவந்தபின்,  பயன்படுத்த ஈசின்னு இந்த சர்க்கரையை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டோம்.  வெல்லம் கொஞ்ச நாளில் கெட்டுடும், இல்ல காத்தோடு சேர்ந்து வேதிமாற்றமடைஞ்சு நீர்த்துடும்.  அதுமில்லாம வெல்லத்துல, கரும்பு சக்கை, மண் மாதிரியான பொருட்கள் இருப்பதால அதை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சோம்.அதன்பலனை இன்னிக்கு அனுபவிக்குறோம். 

நமக்கு தேவையான சர்க்கரையை, அரிசி, கிழங்குகள், கீரைகள், சர்க்கரையிலிருந்து எடுத்துக்கொள்ளும்.  ஆனா, இப்ப தினத்துக்கு 20முதல் 50கிராம் சர்க்கரையை நேரடியா எடுத்துக்க ஆரம்பிச்சுட்டோம். தலைவாழையிலையில் இனிப்பு பரிமாறின காலம்போய் சர்க்கரை நோய்க்குண்டான மாத்திரையை பரிமாற ஆரம்பிச்சுட்டோம்.  இனியாவது சுதாகரிச்சுக்கிட்டா நல்லது. இயற்கையோடு இணைந்து வாழ கத்துக்கிட்டா மிகப்பெரிய ஆபத்திலிருந்து பிள்ளைகளை தப்பிக்க வைக்கலாம்... ஆரோக்கியத்தைவிட நாவின் ருசிக்கும், சோம்பேறித்தனத்துக்கும் ஆட்பட்டதால சர்க்கரையைதான் அதிகம் சேர்த்துக்குறோம்.

தேவையான பொருட்கள்..
கேரட் 1/4கிலோ
சர்க்கரை 1/4கிலோ
நெய் - 100மிலி
பால் 100மிலி
முந்திரி திராட்சை
ஏலப்பொடி 
கொஞ்சூண்டு கலர் பவுடர்(தேவைப்பட்டால்)
உப்பு - கொஞ்சம்

வாணலியில் நெய் ஊற்றி காய்ஞ்சதும். முந்திரியை உடைச்சு சிவக்க வறுத்துக்கனும்.. திராட்சையையும் சேர்த்து வறுத்துக்கனும்.

அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் ஊத்தி துருவிய கேரட்டை சேர்த்துக்கனும். 
கூட கொஞ்சூண்டு உப்பு சேர்த்து நல்லா வதக்கனும்...

கேரட் கொஞ்சம் வதங்கினதும் பால் சேர்த்துக்கனும்.
 பச்சை வாசனை போய்,  கேரட் வெந்ததும் சர்க்கரையை சேர்த்துக்கனும்..

கூடவே ஏலக்காய்பொடி சேர்த்துக்கனும்..

தேவைப்பட்டால் கலர்ப்பொடி சேர்த்துக்கலாம். இல்லன்னாலும் பரவாயில்லை
வறுத்து வச்சிருக்கும் முந்திரி திராட்சையை சேர்த்துக்கனும்.... நல்லா சுண்டி வரும்வரை விட்டு அல்வாப்பதம் வந்ததும் இறக்கிடனும்.
வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமா செய்யக்கூடிய கேரட் அல்வா ரெடி.. 

நன்றியுடன்,
ராஜி