Showing posts with label இனிப்பு. Show all posts
Showing posts with label இனிப்பு. Show all posts

Tuesday, March 10, 2020

ருசியான பாதாம் அல்வா - கிச்சன் கார்னர்

கோதுமை, பாசிப்பருப்பு, கேரட், பிரட்ன்னு. அல்வா எந்த ரூபத்தில் இருந்தாலும்  எனக்கு பிடிக்கும். மனுஷங்க கொடுக்கும் அல்வாவினை தவிர!! ஆனா, அடிக்கடி அதுதான் கிடைக்குதுன்றது வேற விசயம்.  பசங்களுக்காக வாங்கின பாதாம், பசங்கலாம் ஆளுக்கொரு திக்குக்கு போயிட்டபின் சாப்பிட ஆள் இல்லாம இருந்துச்சு. ஓடு யூட்யூப்க்கு.. பலவிதமா செய்யலாம்ன்னு  இருந்தாலும் பாதாம் அல்வாதான் என்னை ஈர்த்துச்சுன்னு சொன்னா அது பொய். இதுதான் ஈசியா இருந்துச்சு. அதான், உடனே செஞ்சுட்டேன்..

தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு- 25
சர்க்கரை- ஒரு கப்
நெய்
ஏலக்காய்பொடி
மஞ்சள் கலர்
பொடித்த முந்திரி, திராட்சை


பாதாமை எட்டு மணிநேரம் ஊறவச்சு தோலெடுத்து, கொரகொரப்பா அரைச்சு வச்சுக்கனும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தினை வச்சு சூடாக்கி நெய் ஊற்றி, அது உருகினதும் முந்திரி, திராட்சையினை வறுத்து எடுத்து வச்சுக்கனும்.
இன்னும் கொஞ்சம் நெய்யினை சேர்த்து அரைச்சு வச்சிருக்கும் பாதாமை சேர்த்து கிளறனும்.
பச்சை வாசனை போனதும் சர்க்கரையை சேர்த்து கிளறிவிடனும்..
ஏலக்காய் பொடி சேர்க்கனும்.. கூடவே கொஞ்சூண்டு மஞ்சள் கலர்பொடி சேர்க்கனும்..  இயல்பாவே பாதாம் பருப்பிலிருந்து மஞ்சள் நிறம் வரும். அதனால், சேர்க்கலைன்னாலும் பரவாயில்லை.  மஞ்ச்ள் கலருக்கு பதிலா குங்குமப்பூவை பாலில் கரைச்சு சேர்க்கலாம். இன்னும் ருசி கூடும் கலரும் வரும்.
வறுத்து வச்சிருக்கும் முந்திரி, திராட்சையினை சேர்த்து கிளறனும்..

சுவையான பாதாம் அல்வா தயார்.

நன்றியுடன்,
ராஜி

Tuesday, December 11, 2018

ஈசியான கேரட் அல்வா - கிச்சன் கார்னர்

வெள்ளையா இருக்கவுங்கலாம் பொய் சொல்லமாட்டாங்கன்ற வடிவேலு காமெடி மாதிரி வெள்ளையா இருக்க பண்டம்லாம் உசத்தின்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா, உண்மை அப்படியில்லை. மைதா, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பாலீஷ் பண்ணப்பட்ட அரிசி, ரவைன்னு எல்லாமே உடம்புக்கு தீங்கு செய்யக்கூடியதுதான். நஞ்சுன்னு தெரிஞ்சே வெள்ளை சர்க்கரையை பயன்படுத்திக்கிட்டிருக்கோம். இந்த நச்சுப்பொருள்தான் உணவு அரசியலில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியான இடம்பெற்றிருக்கு.

எலும்புப்புரை நோய், எலும்பு மெலிதல், எலும்புத்துளைன்னு பெண்களை மட்டுமே தாக்கும் ஆஸ்டியோபொரோசிஸ்ன்ற நோய் சர்க்கரையை சாப்பிடுவதால் உண்டாகுது. அதுமட்டுமில்லாம, நிறைய வகை புத்துநோய் உருவாக இந்த சர்க்கரையே காரணமாகும்.    நம் பாரம்பரிய இனிப்புகள்லாம் பனைவெல்லத்துலயும், வெல்லம், தேனினாலுமே செய்யப்படும். ஆனா, அறிவியல் வளர்ச்சி சர்க்கரை கொண்டுவந்தபின்,  பயன்படுத்த ஈசின்னு இந்த சர்க்கரையை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டோம்.  வெல்லம் கொஞ்ச நாளில் கெட்டுடும், இல்ல காத்தோடு சேர்ந்து வேதிமாற்றமடைஞ்சு நீர்த்துடும்.  அதுமில்லாம வெல்லத்துல, கரும்பு சக்கை, மண் மாதிரியான பொருட்கள் இருப்பதால அதை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சோம்.அதன்பலனை இன்னிக்கு அனுபவிக்குறோம். 

நமக்கு தேவையான சர்க்கரையை, அரிசி, கிழங்குகள், கீரைகள், சர்க்கரையிலிருந்து எடுத்துக்கொள்ளும்.  ஆனா, இப்ப தினத்துக்கு 20முதல் 50கிராம் சர்க்கரையை நேரடியா எடுத்துக்க ஆரம்பிச்சுட்டோம். தலைவாழையிலையில் இனிப்பு பரிமாறின காலம்போய் சர்க்கரை நோய்க்குண்டான மாத்திரையை பரிமாற ஆரம்பிச்சுட்டோம்.  இனியாவது சுதாகரிச்சுக்கிட்டா நல்லது. இயற்கையோடு இணைந்து வாழ கத்துக்கிட்டா மிகப்பெரிய ஆபத்திலிருந்து பிள்ளைகளை தப்பிக்க வைக்கலாம்... ஆரோக்கியத்தைவிட நாவின் ருசிக்கும், சோம்பேறித்தனத்துக்கும் ஆட்பட்டதால சர்க்கரையைதான் அதிகம் சேர்த்துக்குறோம்.

தேவையான பொருட்கள்..
கேரட் 1/4கிலோ
சர்க்கரை 1/4கிலோ
நெய் - 100மிலி
பால் 100மிலி
முந்திரி திராட்சை
ஏலப்பொடி 
கொஞ்சூண்டு கலர் பவுடர்(தேவைப்பட்டால்)
உப்பு - கொஞ்சம்

வாணலியில் நெய் ஊற்றி காய்ஞ்சதும். முந்திரியை உடைச்சு சிவக்க வறுத்துக்கனும்.. திராட்சையையும் சேர்த்து வறுத்துக்கனும்.

அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் ஊத்தி துருவிய கேரட்டை சேர்த்துக்கனும். 
கூட கொஞ்சூண்டு உப்பு சேர்த்து நல்லா வதக்கனும்...

கேரட் கொஞ்சம் வதங்கினதும் பால் சேர்த்துக்கனும்.
 பச்சை வாசனை போய்,  கேரட் வெந்ததும் சர்க்கரையை சேர்த்துக்கனும்..

கூடவே ஏலக்காய்பொடி சேர்த்துக்கனும்..

தேவைப்பட்டால் கலர்ப்பொடி சேர்த்துக்கலாம். இல்லன்னாலும் பரவாயில்லை
வறுத்து வச்சிருக்கும் முந்திரி திராட்சையை சேர்த்துக்கனும்.... நல்லா சுண்டி வரும்வரை விட்டு அல்வாப்பதம் வந்ததும் இறக்கிடனும்.
வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமா செய்யக்கூடிய கேரட் அல்வா ரெடி.. 

நன்றியுடன்,
ராஜி

Tuesday, July 25, 2017

ரவா லட்டு - கிச்சன் கார்னர்

ஆண்களுக்கு பொண்டாட்டியை புடிச்சாலும்கூட புடிச்சிடும். உப்புமாவை மட்டும் பெரும்பான்மையான ஆண்களுக்கு பிடிக்காது. உப்புமாவைதான் பிடிக்காது. ஆனா, உப்புமா செய்ய பயன்படும் ரவைல பாயாசம், பணியாரம், தோசை, இட்லி, பொங்கல், லட்டு.....ன்னு எத்தனை எத்தனையோ செய்யலாம்.  அதுலாம் எல்லாருக்கும் பிடிக்கும்.....

கோதுமை, அரிசி, மக்காச்சோளத்திலிருந்துதான் ரவை கிடைக்குது. இதோட ஆங்கில பெயர் செமோலினா. இத்தாலி மொழில இருந்துதான் இந்த பேர் வந்துச்சு. செமோலினான்னா தவிடுன்னு அர்த்தம்.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளில் சுஜின்னு சொல்லப்படுது. கோதுமையை சுத்தம் செய்து ஒருநாள் முழுக்க வேந்நீரில் ஊற வைத்து பின் குளிரச்செய்து நீரில்லாமல் மெஷினில் இட்டு கோதுமையின் மேற்பாகம் உடைக்கப்பட்டு ரவையாக்கப்படும். உள்ளே இருக்கும் பகுதி மைதாவாகப் பிரிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியில் உள்ளது ஆட்டாவாக வெளிவரும். ‘க்ளூடன்’ அதிகம் இருக்கும் பகுதி தான் மைதாவாக வரும். அதனுடைய வெண்மை நிறம் கிடைக்க பல கெமிக்கல் கலக்கப்படுது.  கோதுமையின் எந்த பகுதியும் வீணாவதில்லை. கோதுமைத் தவிடும்  பிஸ்கெட் தயாரிக்கவும், கால்நடைகளுக்கு தீவனங்களுக்காகவும் வாங்கிச் செல்லப்படுகிறது. .

ரவையில் நாரச்சத்து, இரும்புச்சத்து, புரதசத்து, மாவுச்சத்து இருக்கு.   இதில் குறைந்தளவு கலோரி இருக்கு. உடல் எடையை குறைக்க நினைக்குறவங்க ரவையை பயன்படுத்தலாம்.ரவையை  வெண்மையாக்க பல கெமிக்கல் சேர்க்குறாங்க. அதனால சம்பா கோதுமை ரவையை பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. நம்மூர்ல அரிசியை உடைத்து ரவையாக்கி வச்சு உப்புமா செய்து சாப்பிடும் பழக்கம் இருந்துச்சு... கால ஓட்டத்தில் அதுலாம் மறைஞ்சு போய் கண்டதையும் வாங்கி தின்னு ஆரோக்கியத்தை கெடுத்துக்குறோம். 



ரவை லட்டு செய்முறை...
ரவை 
சர்க்கரை
ஏலக்காய் பொடி
முந்திரி
திராட்சை
நெய்
பால்


வாணலில நெய் ஊத்தி காய்ஞ்சதும் முந்திரி, திராட்சை போட்டு சிவக்க விடுங்க.. கூடவே இன்னொரு அடுப்புல பாலை காய்ச்சிக்கோங்க.. அடுப்பை அணைச்சுடாம சிம்மிலேயே இருக்கட்டும்


ரவையை கொட்டி வறுக்கவும்.... ரவை நிறம் மாறாம இருக்கனும்.


ஏலக்காய் பொடியை சேர்த்துக்கோங்க.... ரவைக்கு சமமா சர்க்கரையை கொட்டி லேசா சூடுப்படுத்திக்கோங்க...

வறுத்த ரவை, சர்க்கரை கலவையை தட்டுல கொட்டிக்கோங்க.  ரவை சூடா இருக்கும்போதே பாலை கொஞ்சமே கொஞ்சமா சேர்த்து சூடா இருக்கும்போதே உருண்டை பிடிச்சுக்கோங்க.

சீக்கிரமா உருண்டை பிடிச்சு வைங்க. ரவை ஆறிட்டா அப்புறம் உருண்டை பிடிக்க வராது. 


கொஞ்சம் ஆறினதும் மீண்டும் நல்லா அழுத்தி உருண்டை பிடிச்சுக்கோங்க. ரவா லட்டு ரெடி. இதுல டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக்கலாம். கலர் கலரா இருக்குறதால சின்ன பிள்ளைங்க  விரும்பி சாப்பிடுவாங்க... பால் சேர்த்திருக்குறதால அதிகப்பட்சம் ஒரு வாரம்தான் வரும். ஃப்ரிட்ஜ்ல வச்சா கூடுதல் நாள் வரும். 

எனக்கொரு டவுட்... உயிர் போக்கும் துப்பாக்கி ரவைக்கும், இந்த ரவைக்கும் என்ன சம்பந்தம்?! ஏன் இந்த பேரு வந்துச்சு?!ன்னும் சொல்லிட்டு போங்க...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...


நன்றியுடன்,
ராஜி.

Tuesday, November 12, 2013

சோமாஸ் - கிச்சன் கார்னர்


தீபாவளி பண்டிகைக்கு என் நாத்தனார் வீட்டுக்கு பலகாரம் கொடுத்தனுப்ப, என்ன கொடுக்கலாம்ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்ல. நாத்தனார் வீட்டுக்காரருக்கும், அவங்க பசங்களுக்கும் சோமாஸும், ஓமப்பொடியும், குளோப் ஜாமூனும் ரொம்ப பிடிக்கும். அதையே செஞ்சு கொடுத்தா போதும். 

சோமாஸ் உள்ள வைக்கும் பூரணத்துக்கு எல்லாரும் ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய்ப்பூ, சர்க்கரைலாம் வச்சு செய்வாங்க. ஆனா, எங்க வீட்டுல வேற மாதிரி ரொம்ப ஈசியாவும் அதே நேரத்துல சுவையாவும் செய்வோம்.

தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
உடைத்த கடலை - 1 கப்
சர்க்கரை - 1கப்
ஏலக்காய் - 3
முந்திரி, திராட்சை - தேவைப்பட்டால் சேர்த்துக்கலாம்.
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் தேவையான அளவு

மைதா மாவை சலிச்சு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் உப்பு சேர்த்து  தண்ணி விட்டு சப்பாத்திக்கு பிசையுற மாதிரி பிசைஞ்சு ஒரு மணி நேரம் ஊற விடுங்க.


உடைச்ச கடலையோட சர்க்கரை சேர்த்துக்கோங்க.

ஏலக்காயையும் சேர்த்து மிக்சில நல்லா நைசா அரைச்சுக்கோங்க.

பூரணத்துக்கு பொடி ரெடி.

பிசைஞ்சு வச்ச மைதாமாவை வட்ட வடிவமா தேச்சுக்கோங்க...,

அதுக்கு நடுவுல, பொடிச்சு வச்ச கடலை மாவை வச்சு, மடிச்சு சோமாஸ் வடிவத்துல கத்தியால கட் பண்ணிக்கோங்க, அதுப்போல கட் பண்ண பழக்கமில்லாதவங்க, இதுக்குன்னு இருக்கும் அச்சை கடைல வாங்கி செய்ங்க. 

இதுப்போல கொஞ்சம் சோமாஸ்களை செஞ்சு எடுத்து வச்சுக்கோங்க.


ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி, அதுல ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு , ரெண்டுப் பக்கமும் பொன்னிறமா சிவக்க விட்டு எடுங்க.

மேல, மொறு மொறுன்னும், உப்புச்சுவையோடும், உள்ள மிருதுவா இனிப்போடும் சேர்ந்து நல்லா இருக்கும். குட்டி குட்டியா செஞ்சு வச்சுக்கிட்டா பசங்க ஸ்கூல் விட்டு வந்ததும் கொடுத்தா ஆசையா சாப்பிடுவாங்க. ரொம்ப ஈசியானது. அதனால, கொஞ்சம் கொஞ்சமா செஞ்சு டப்பாவுல வச்சு பிள்ளைகளுக்கு கொடுக்கலாம், வயிற்றை பதம் பார்க்காதது.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் காரனர்ல சந்திக்கலாம்! 


Wednesday, July 31, 2013

சொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்

டெய்லி ஒரு பதிவு போடுறீங்க.அடுத்தவங்க பிளாக்குக்கும் போய் வர்றீங்க. முஞ்சி புக்குலயும் மொக்கை போடுறீங்க. எல்லாம் சரி உங்க வூட்டுல கிச்சன் எங்க இருக்கு? மாமாதானே சமைக்குறாங்க அக்கா?!ன்னு கமெண்ட்ல கேக்குற  நல்ல நல்ல?! தம்பிகளுக்காக இனி வார வாரம் புதன் கிழமை தோறும் சமையல் பகுதி வரும்.  

அதுக்காக, ஆலு டிக்கி, பட்டர் கோப்தான்னு வாய்ல நுழையாத பதார்த்தம்லாம் பதிவா போட மாட்டேன். ஏன்னா! அதெல்லாம் எனக்கு சமைக்க தெரியாது!! அதனால, வீட்டுல எப்பவும் இருக்குற  மளிகைப்பொருளை வெச்சுக்கிட்டு செய்யுற பதார்த்தம்தான் பதிவுல வரும் பெரும்பாலும் நம்ம அம்மாக்கள் செஞ்ச பாரம்பரிய உணவுகள்தான் வரும்...,

பள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.

எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க.  பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க  மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.

ரொம்ப மொக்கை போடாதே! என்னதான் செஞ்சு இருக்கே?!ன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வா!ன்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)

இன்னிக்கு செய்ய போறது “சொய் உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கம் செய்யுற ஒரு பலகாரம். மத்த ஊருல என்ன பேருன்னு கமெண்ட்ல சொல்லுங்க. இதோட பெயர் காரணம், எண்ணெயில போடும்போது “சொய்”ன்னு சத்தம் வர்றதால இருக்கலாம்ன்னு நானே கெஸ் பண்ணேன். யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை!!

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கிலோ
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
மைதா - 200 கிராம்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
உப்பு  - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


பச்சை பயறை வெறும் வாணலியில  பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும். 


அப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)


குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி  குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.

திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.


வெந்த பச்சை ப்யறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க. 

 
ஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,

 உரல்ல  இல்லாட்டி மிக்சில கரகரப்பா  அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும். புது வீட்டுல இன்னும் உரல் வாங்காததால மிக்சில போட்டு அரைச்சேன்)

 
 அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.

 
 ஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி, அதுல தேவையான புப்ப்பு சேர்த்துக்கோங்க.

ஆப்ப சோடாவயும் போட்டுக்கோங்க.

 தண்ணி கலந்து கட்டி இல்லாம  கரைச்சுக்கனும்.

 பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.

 
 அடுப்புல வாணலியை வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய வைங்க.

கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.



உருண்டை  ஃபுல்லா மாவு இருக்குற மாதிரி முக்கி எடுத்துக்கோங்க.



ரெண்டு பக்கமும்  பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.




சொய்யா உருண்டை ரெடி!!

மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அதனால  குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,

பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும்.  .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம்  கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

அடுத்த வாரம் வேற ஒரு சிம்பிள் ரெசிபியோட வர்றேன்.