Showing posts with label மகாவிஷ்ணு. Show all posts
Showing posts with label மகாவிஷ்ணு. Show all posts

Wednesday, September 27, 2017

எது அழகென்று உணராத மகாலட்சுமி... அதை உணர வைத்தை மகாவிஷ்ணு.....

நவராத்திரியின் ஏழாவது நாள் நாம் வணங்க வேண்டியது மகாலட்சுமியை. மகாலட்சுமியை பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.  விஷ்ணுவின் பத்தினி, செல்வத்துக்கு அதிபதி. அழகு நிறைந்தவள்.  கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.  இப்படி நாம் இத்தனை நாள் நினைத்திருக்க, மகாலட்சுமி விஷ்ணுவின் பத்தினி, அவருக்கு சேவை செய்ய பிறந்தவள், அழகும், அன்பும் நிறைந்தவள் என்று மட்டுமே தேவி பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


ஆதிபராசக்தி தன்னிடமிருந்து தன்னைப்போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இடது பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி,  வலது பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி. ‘ரமா’  என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகா லட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். 



ஒருமுறை  துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினர். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். ‘’நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த செல்வங்களை பெற அருள்புரிவாள்’’ என்று மகா விஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.


இதையடுத்து பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில்,ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும், ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான சௌந்தர்ய லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, ‘’என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்’’ என்று கூறினாள்.

அதன்படி, யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப்பாடி மகிழ்ந்தனர். சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வகைச் செல்வங்களையும் அளிப்பவள்.


ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். அவர்கள் பூலோக மக்கள் பற்றியும், அவர்களின் இன்ப– துன்பங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு அழகு பக்கம் திசைமாறியது. அப்போது மகாலட்சுமி, ‘நான் அழகாக இருக்கிறேன். அதனால்தான் பூலோகத்தில் இருப்பவர்கள், நான் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், அந்த வீட்டில் நான் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர்’ என்று தன் அழகைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.  அதைக் கேட்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்களுக்கு அகத்தில் இருப்பதுதான் அழகு, புறத்தில் இருக்கும் அழகு மாயையில் சுழல வைப்பது என்று தெரிவதில்லை. பூலோகத்தில் இருக்கும் மனிதர்களில் பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாதவர்கள் பூலோகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம் அவர்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பணம் ஒரு மாயை என்பதை உணராமல், அதை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.  இப்படியே வாக்குவாதம் வலுத்தது. 


‘சுவாமி! என்னுடைய அழகையும், பூலோகத்தில் எனக்குக் கிடைக்கும் மதிப்பையும் பாராட்ட மனமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். கருமையாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? என்னைப் போன்று அழகாக இருப்பவர்களைக் குறை சொல்ல மட்டுமே தெரியும்’ என்று விஷ்ணுவின் கருமை நிறத்தைச் சுட்டிக் காட்டி பேசினார் மகாலட்சுமி. தன் நிறத்தைப் பற்றி பேசியும் மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல், ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு முகத்தை வைத்தும், ஆண்களுக்கு உடலமைப்பை வைத்தும் அழகைத் தவறாக மதிப்பிட்டு வருகின்றனர். பொலிவான முகம், பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, சிவந்த உதடுகள் போன்ற முக அமைப்புடைய பெண்கள்தான் உடல்நலத்துடன், அதிகமான குழந்தைகளை அளிப்பார்கள் என்கிற எண்ணத்தில் ஆண்கள் அவர்களை விரும்பினார்கள். காலப்போக்கில் இந்த விருப்பமே பெண்களின் அழகு என்றாகிவிட்டது. இதேபோல் பெண்கள், தங்களுக்குக் கணவனாக வருபவன் உடல் பலத்துடன் இருந்தால்தான் காட்டிற்குச் சென்று, வேட்டையாடித் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தனர். இதனால், ஆண்களுக்கு உடல் பலமே அழகு என்றாகி விட்டது.  ஆனால் உண்மையில், பிறருக்குத் தீங்கிழைக்காத நல்ல மனமும், தம்மைத் தேடி வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும்தான் உண்மையான அழகு என்பதை அனைவரும் மறந்து போய்விட்டனர்’ என்றார்.



மகாலட்சுமியோ, ‘இறைவா! மகாலட்சுமி என்ற எனது பெயருக்குப் பேரழகு என்று பொருள் என்று உங்களுக்குத் தெரியும். இருப்பினும் அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி என்று அனைத்துச் செல்வங்களின் தேவதையாக இருக்கும் என்னைப் பற்றிக் குறை சொல்கிறீர்கள். அழகு வெளிப்படும் இடங்களிலெல்லாம் திருமகளாக நான் இருக்கிறேன் என்பதைத் தாங்கள் அறிந்திருந்தும், என்னை அவமதிக்கும் நோக்கத்திலேயே பேசுகிறீர்கள். செல்வத்துடன் சேர்ந்திருக்கும் என்னுடைய அழகிற்கு, நீங்கள் சொல்லும் எந்த அழகும் இணையானதில்லை’ என்றார் கோபத்துடன். இதைக் கேட்டு கோபமடைந்த மகாவிஷ்ணு, ‘ஒரு பெண்ணுக்கு உடல் அழகு தேவையாக இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் கொண்டு, உண்மையான அழகினை மறந்துவிடக் கூடாது. எந்த உடல் அழகு மீது நீ அளவு கடந்த பற்று கொண்டு, என்னை எதிர்த்துப் பேசினாயோ, அந்த அழகு கொண்ட உடல் இல்லாமல், உருவமில்லாதவளாகப் (அரூபம்) போவாய்’ என்று மகாலட்சுமிக்கு சாபம் கொடுத்தார். 



சாபம் கொடுத்த பிறகுதான் மகாலட்சுமிக்கு சுய உணர்வே வந்தது. ‘இறைவா! என் தவறை மன்னித்து எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். அவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூமியில் ஒரு முறை செய்யும் தவத்திற்கு, ஒரு கோடி முறை தவம் செய்த பலன் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று என்னை நோக்கித் தவம் செய்தால் உனது சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும்’ என்றார். உருவம் இல்லாதவளாகப் பூலோகம் வந்து சேர்ந்தார் மகாலட்சுமி. சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதி தேவி, அந்த சாபத்தில் இருந்து மீள ஏகாம்பரேஸ்வரரை வணங்கிய இடமே, தனக்கும் சாப விமோசனமளிக்கும் இடமாக இருக்கும் என்று எண்ணினார். எனவே அந்த இடத்திற்கு வந்த மகாலட்சுமி, விஷ்ணுவை நினைத்து தவம் இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்தின் பயனாக, ஒவ்வொரு நாளும் மகாலட்சுமியின் உருவம் சிறிது சிறிதாகக் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது. தொடர் வேண்டுதலில், அவரது உருவம் முழுமையாக பிறர் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியது. தவத்தின் வலிமையால் முன்பு இருந்ததைவிட அதிகமான அழகு சேர்ந்து ஒளி வீசத் தொடங்கியது. 



தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மகாலட்சுமியை, வைகுண்டம் அழைத்து வருவதற்கு சரியான நாளை எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. இந்த நிலையில் விஷ்ணு வரத் தாமதமானதால், மகாலட்சுமிக்கு கவலை அதிகரித்தது.  இந்நிலையில் ஒருநாள், அந்த இடத்திலிருக்கும் பஞ்சதீர்த்தக் கரையில் பார்வதி தேவியை மகாலட்சுமி சந்தித்தார். அவரிடம், தனக்கு முழு உருவம் கிடைத்தும், விஷ்ணு தன்னை அழைத்துச் செல்லாதது பற்றி வருத்தப்பட்டார். அப்போது விஷ்ணு, மகாலட்சுமி முன்பை விட எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், மறைவான ஒரு இடத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பார்வதிதேவி, அவரைக் ‘கள்வன்’ என்று அழைத்தார். பார்வதி கள்வனென்று யாரைச் சொல்கிறார் என்று மகாலட்சுமியும் திரும்பிப் பார்த்தார். அங்கு மகாவிஷ்ணு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டுத் தலை குனிந்தார். 



மறைவில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, ‘தேவி! இந்தப் பூமியில் உன் அழகைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஹரிணி (பசுமையான உடல் அழகைப் பெற்றவள்), சூர்யா (கதிரவனுக்கு நிகரான ஒளியுடையவள்), ஹிரண்மயி (பொன்னிறமானவள்), ஹிரண்ச வர்ணா (பொன்னிற உடலுடையவள்), சந்திரா (நிலவுக்கு நிகரான முகமுடையாள்), ஆர்த்திரா (நீரில் தோன்றியவள்), பத்ம ஸ்திதா (தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள்), பத்ம வர்ணா (தாமரை நிறமுடையவள்), ஆதித்ய வர்ணா (சூரியகாந்தி தோற்றமுடையவள்), கரிஷிணி (பெருகும் பசுச் செல்வமானவள்), பிங்கள (செம்மை நிறம் கொண்டவள்) என்று பல பெயர்கள் உனக்குக் கிடைக்கும். இத்திருத்தலத்திற்கு வந்து உன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு அழகின் மீதிருக்கும் மோகம் குறையும்” என்று சொல்லி அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வைகுண்டம் திரும்பினார்.   உடலின் நிறம், பலம் போன்றவைகளால் கிடைக்கும் அழகு காலமாற்றத்தால் மாற்றமடையக் கூடியது. உடலின் அழகு நிலையானதில்லை. பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் விதமாக மகாலட்சுமி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன....

பதிவின் நீளம் கருதி, சென்னை அஷ்டலட்சுமி கோவில் பதிவோட லிங்க்...... 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,.
ராஜி. 

Tuesday, September 12, 2017

மூன்று தலைமுறைக்கும் இனி கிட்டவே கிட்டாத பாக்கியம் - காவேரி மகாபுஷ்கரணி

நீரின்றி அமையாது உலகுன்னு உலக பொதுமறையாம் திருக்குறள்ல சொல்லி இருக்கு. அதேப்போல, நதிக்கரைகளில்தான் நாகரீகம் தோன்றியதுன்னு அறிவியல் சொல்லுது. அந்த நதிகளை புனிதத்தன்மையா கருதி பெண் கடவுளாய் பாவித்து வணங்குது இந்தியா.  நதி, நீர்களை கொண்டு ஏராளமான விழாக்கள் கொண்டாடப்படுது. கும்பமேளா, மகாமகம், தீர்த்தவாரின்னு ஏராளமானது இருந்தாலும் 144 வருசத்துக்கொருமுறை கொண்டாடும் மகாபுஷ்கரணி விழாவும் ஒண்ணு. 
காவிரி நதியின் கதை....

இன்னிக்கு குடகுமலைன்னு சொல்லப்படும் சஹ்யாசலம்ன்ற இடத்துல கவேரர்ன்ற மன்னன்  தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டும், இறைவனுக்கு பயந்தும் நீதி தவறாமல்  ஆண்டு வந்தான். தனக்கு இப்பிறவியே போதுமென எண்ணிய மன்னன் முக்தியை பெற வேண்டி பிரம்மாவை நோக்கி கடுந்தவம் இருந்தான்.   அவன் முன் தோன்றிய பிரம்மா தனக்கு முதியை தரும் அதிகாரமில்லை. ஆனால், முக்தியை தரக்கூடிய வழியை காட்ட முடியுமெனக்கூறி  தன்னுடைய மானச புத்திரியான ஒரு பெண்குழந்தையை சாமுத்திரிகா லட்சணப்படி படைத்து  காவேரர் மன்னனுக்கு தத்து கொடுத்தார். அவள்தான் காவேரி.  இவளால் உனக்கு முக்தி கிடைக்குமெனக்கூறி மறைந்தார். காவேரியும், காவேரர் மன்னனின் அரண்மனையில் சீரும் சிறப்போடு மிகுந்த அன்புக்காட்டி வளர்த்து வந்தாள்.
தன்னுடைய ஐந்தாவது வயதில் மகாவிஷ்ணுவை நோக்கி,  தலைக்காவேரி என்று இன்று அழைக்கப்படும் இடத்தில் தவமிருந்தாள். பிரம்மாவின் மானச புத்திரி என்பதால் மகாவிஷ்ணு, காவேரிக்கு தாத்தா முறையாகும். அதனால், ஓடோடி வந்து, விளையாட்டு குழந்தையான நீ தவமிருக்க என்ன காரணம்?! உனக்கு என்ன வரம் வேண்டுமென மகாவிஷ்ணு கேட்டார். அதற்கு,  காவிரி குழந்தை ’என் பெயருக்கு உள்ள மகிமைகளை எனக்கு வரமாக வேண்டும்’ என கேட்டார்.  அதாவது கா என்றால் பாவத்தை போக்குபவள். வே என்றால் விருப்பங்களை நிறைவேற்றுபவள். ரி என்றால் முக்தியை தருபவள். இந்த மகிமையை எனக்கு வரமாக வேண்டும் என கேட்டாள்.  மகாவிஷ்ணு மிகவும் மனமகிழ்ந்து அகில உலகத்திலும் 5 வயதில் பரோபகரமான சிந்தனையுடன் லோகத்திற்கே பயன்படும் வரத்தை, இதுவரை யாருமே கேட்டிராத வரத்தை நீ கேட்டதனால் இன்று முதல் நீ லோபா முத்திரை என்ற பெயருடன் விளங்குவாய். தகுந்த நேரத்தில் அகத்திய பெருமான் உன்னை மணமுடிப்பார். அவர் மூலம் உன்னுடைய வரங்கள் நிறைவேறும் என அருளினார்.

மணமுடிக்கும் பருவம் வந்ததும்  அகத்திய பெருமான்,  லோபா முத்திரையை மணமுடித்தார். அவரிடம் தான் 5 வயதில் வரம் பெற்றதை சொல்லி அகத்தியரும் லோபா முத்திரையும் 5 வயதில் தவம் செய்த இடத்திற்குச் சென்றார்கள். இருவரும் மகாவிஷ்ணுவை தியானம் செய்ய மகாவிஷ்ணு அவர்களிடம் நீ தவம் செய்த இடத்தில் நான் நெல்லி மரமாக மாறுவேன்.  லோபா முத்திரையான உன்னிலிருந்து ஒரு (அம்சம்) கூறு பிரிந்து நெல்லி மரமான என்னுடைய வேர் பாகத்திலிருந்து (பாதகமலம்) காவேரி எனும் புனித நதியாக வருவாய் என அருளினார். பிறகு மகாவிஷ்ணு நெல்லி மரமாக மாற, லோபா முத்திரையின் ஒரு கூறு காவேரி நதியாக மாறியது. நதியான காவேரி, அகத்திய முனிவரை வணங்கி புனித நதியாக தனக்கு பூரணத்துவத்தை தரும்படி வேண்டினார். 

அனைத்து புண்ணிய நதிகளுடைய பாவங்களை நீக்கும் ஆற்றலையும், விரும்பியவற்றை தரும் ஆற்றலையும், முக்தியை தரும் ஆற்றலையும் தரும்படி வேண்டினார். அகத்தியர்,  காவேரி நதியை கமண்டலத்தில் அடக்கி பூரணத்துவம் பெற தவத்தில் வைத்தார். நீண்ட நெடுங்காலமாக தவத்தில் ஆழ்ந்து விட்டார். நாட்டில் புண்ணிய நதிகள் இல்லாமையால் பாவங்கள் பெருகி மழையின்றி வறுமையால் மக்கள் வாடினார்கள்.  அதே நேரத்தில்   தமிழகத்தை ஆண்ட காந்தமன் எனும் சோழ மன்னன் தன் நாட்டிற்கு வற்றாத ஜீவநதி வேண்டும் என திருமாலை துதித்து தவமிருந்தான். அதேசமயத்தில் சீர்காழியில் சாபம் பெற்ற இந்திரன் மூங்கில் காட்டில் சிவனை வழிபட்டு வந்தார். பூஜைக்கு நீரும் மலர்களும் இல்லாததால் அவரும் நீருக்காக வேண்டினார். 



திருமாலும், சிவபெருமானும் கணபதியை வேண்டும்படி வழிகாட்ட கணபதியும் அகத்தியர் தவம் செய்த இடத்திற்கு சென்றார். என்ன செய்தும் அகத்தியர் தவம் கலையாததால்,  கமண்டலத்தில் பூரணத்துவம் பெற்றிருந்த காவிரியை காகம் உருக்கொண்டு பூமியில் ஓட விட்டார். நதியின் தண்ணீரில் சத்தம் கேட்டும் துளிகள் பட்டும் அகத்தியர் தவம் கலைந்தது. நீண்ட கால தவத்தில் ஆழ்ந்ததால் கணபதியின் அருளால் காவிரி பூமியில் பெருகி ஓடுவதை கண்டு ஆசீர்வதித்தார். 

காவிரித்தாய் அகத்தியரை வணங்கி தான் சோழ மன்னன் பெற்ற வரத்தின் காரணமாக தென்னகம் நோக்கி சென்று கடலில் சங்கமிக்கும் வரை தன்னை வழி நடத்தி, தான் போகும் பாதை முழுமையும் சிவாலயங்களையும், விஷ்ணு ஆலயங்களையும் அமைக்க வேண்டினார். அதன்படியே, இருவருக்கும் ஆலயங்களை அமைத்த  அகத்தியரும் தான் சந்தியாவந்தனம் செய்யும் இடமெல்லாம் சிவபெருமான் சுயம்புவாக தோன்ற வேண்டிக்கொண்டு அதன்படி சிவன் அருள, தேவார பாடல் பெற்ற 269 தலங்களில் 190 தலங்களும், 108 திவ்ய தேசங்களில் பெரும்பான்மையான தலங்களும், காவிரி நதியினுடைய தென்கரையிலும், வடகரையிலும் அமைந்துள்ளன. அதேப்போல வைணவத்தின் 108 திவ்ய தேசங்களில் பெரும்பான்மையானது காவிரிக்கரையில்தான் இருக்கு . தென்னகத்தை ஆண்ட சோழ மன்னன் ஜீவ நதி வேண்டித் தவம் இருந்து வரம் பெற்ற காரணத்தால் சோழநாடு சோறு உடைத்து எனும் பெருமையை காவிரித்தாயால் பெற்றது. பொன்னி வளநாடு எனும் பெயரும் பெற்றது.  
நெற்கதிரில் நெல்மணிகள் நிறைந்து கதிர் கொள்ள முடியாமல் தலை சாய்த்துக் கொட்டிய கதிர்கள்,  கரை புரண்டு ஓடும் காவேரியில் கொட்டி,  நீர் தெரியாமல் தங்கபாலம் விரித்தது போல் காவேரி முழுமையும் நெல் மணி நிறைந்து ஓடியதால் இந்த பகுதியில் காவேரி பொன்னி என பெயர் பெறுகிறாள். 

மக்களின் பாவத்தை தீர்ப்பதோடு மட்டுமில்லாம,  நதிகளின் பாவத்தைத் தீர்ப்பதற்கு வரம் வாங்கியதால் துலாமாதமான ஐப்பசி மாதத்தில் புனித நதியான கங்கையும் காவிரியில் 30 நாளும் வாசம் செய்து தன் ஒரு வருட பாவத்தை நீக்கிக் கொண்டு தன்னுடைய இருப்பிடம் செல்கிறாள் என்பது ஐதீகம். கங்கையே காவிரி நதியில் வாசம் செய்வதால் 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்து தங்கள் பாவத்தை போக்கி கொண்டு தங்கள் இருப்பிடம் செல்கின்றனர். இவ்வளவு பெருமை வாய்ந்த காவிரி தாயினுடைய மகா புஷ்கர நாட்களில் காவிரித் தாய்க்கு மாலையில் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், பாராயணங்களும், தேவாரம், திருவாசகம் திவ்விய பிரபந்த பாராயணங்களும் நடைபெறும். மாலை 6 மணிக்கு தினமும் காவிரி தாய்க்கு தீப ஆரத்தி செய்யப்படும்.
குரு கிரகம் ஒரு ராசிக்குள்  பிரவேசிக்கும் காலம் தொடங்கி 12 நாட்கள் முடிய புண்ணிய நதிகளில் நீராடுவதை  "புஷ்கரம்" ன்னு சொல்லப்படுது. அதை தொடர்ந்து குரு நின்ற காலம் முழுவதும் "புஷ்கர ஆண்டு" என நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்பணம்செய்து தான தர்மங்ககளை செய்வதாகும்
அந்த வகையில் குருகிரகம் துலா இராசியில் 12.9.2017 செவ்வாய் அன்று காலை 6:51 மணிக்கு பிரவேசிக்கிறார் அன்று முதல் 23.9.2017 வரை புஷ்கரம் எனும் நீராடல் வைபவம் காவேரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்படும். 
புஷ்கரம் கொண்டாடப்பட காரணம்...


நவக்கிரகங்களில் ஒன்றாக குருபகவான் பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டும்" எனக் கேட்டார்.  " எனக்கு தங்களுடைய புஷ்கரன்  வேண்டும்" என குருபகவான் கேட்டார். புஷ்கரன் என்பது அனைத்து ஈரேழு உலகத்திலும் உள்ள 66 கோடி தீர்த்தங்களின் அதிபதி. இவர் அமிர்த கலசம் ரூபம்கொண்டு பிரம்மன் கைகளில் இருக்கிறார்.  குருபகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரனை அவருக்கு அளிக்க பிரம்மன் ஒப்புக் கொண்டார்  ஆனால் புஷ்கரன்,  பிரம்மனை விட்டுப் பிரிந்து குருபகவானிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரனிற்கும், குருபகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரன் இருக்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி புஷ்கரன் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரன் அங்கு தங்கி இருப்பார் அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி  தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது. 
பிரம்மனின் அருளாலும் குருப்பெயர்ச்சியாலும், புஷ்கரன் நதியில் கலக்கும்போது  66கோடி தீர்த்தங்களும் கலப்பதாய் ஐதீகம். இந்த குருப்பெயர்ச்சியின் போது குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். துலாம் ராசிக்கான நதி காவிரியாகும். அதனால், கர்நாடகாவின் குடகு மாவட்டம் பிரம்மகிரி தொடங்கி, ஸ்ரீரங்கப்பட்டினம், சிவன்சமுத்திரம், ஒக்கேனக்கல், மேட்டூர் பவானி பள்ளிப்பாளையம், கொடுமுடி, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், பூம்புகார் வரையிலான அனைத்து காவிரிக்கரை மக்கள் இந்த காவேரி புஷ்கரணியை மிகச்சிறப்பாய் கொண்டாடுகின்றனர்.

இந்த புஷ்கரணியை நம் அப்பா, நாம், நம் பிள்ளைகள் உள்ளிட்ட மூணு தலைமுறையும் அடுத்த புஷ்கரணி விழாவை கண்டு களிக்கவும், நீராடி புண்ணியம் பெறவும் முடியாது. அதனால வாய்ப்பு கிடைக்குறவங்க இன்று முதல் செப் 23 வரை காவிரி நதியில் நீராடி இறை அருள் பெறுவோம். பண்டிகை என்பது வெறும் கொண்டாட்டமன்று. அந்த நன்னாளில் நம்மால் முயன்றளவு இயலாதவர்களுக்கு தான தர்மங்களை செய்வதும்க்கூட.... 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471475

நன்றியுடன்,
ராஜி.

Monday, September 04, 2017

கடவுளே மனிதனிடம் தானம் கேட்ட கதை - ஓணம் பண்டிகை



தமிழ்நாட்டுக்கு உழவர் திருவிழா, அறுவடை திருவிழான்னு சொல்ற பொங்கல் திருவிழா மாதிரி மலையாளத்தவருக்கு  ஓணம் பண்டிகை. கடவுளின் தேசம்ன்னு சொல்லப்படும் கேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் இது முதன்மையானது.  பொதுவா , கடவுள்கிட்டதான் எல்லாரும் நமக்கு வேணுங்குறதை கேட்போம். ஆனா, கடவுளே மனிதன்கிட்ட தனக்கு வேணுங்குறதை கேட்டதன் நினைவாதான் இந்த பண்டிகை கொண்டாடப்படுது. அது என்ன கதைன்னு தெரிஞ்சுக்கலாம்... 


விஷ்ணு அவதரித்ததும், விஷ்ணுவின் அம்சமான வாமணன் அவதரித்ததும் இந்நாளில்தான்னு சங்கக்கால ஏடுகள் சொல்லுது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பண்டிகை கொண்டாடப்படுத்தா கிபி 861 ம் தேதியிட்ட செப்புத்தகடு சொல்லுது.  இந்த பண்டிகை சாதி, மத, பேதமின்றி கொண்டாடப்படுது.  கேரள மக்கள் மட்டுமின்றி கன்யாக்குமரி, கோவை, மார்த்தாண்டம் மாதிரியான கேரள, தமிழக எல்லையோரத்து மக்களும் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். இப்ப, சென்னையிலும், மற்ற ஊர்களிலும் ( சில அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளிலும்) கொண்டாடப்படுது. 


கொல்லவர்ஷம்ன்னு சொல்லுற மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் தொடங்கி திருவோணம் வரை இப்பண்டிகை கொண்டாடப்படுது.  விஷ்ணு பகவான் அவதரித்ததால் திருவோணம் நட்சத்திரம் விஷ்ணுவுக்கு உகந்தது. இந்நாளில் இவரை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும்,  பேரோடும், புகழோடும் வாழ்வர்.



ஒருமுறை சிவன் கோவிலில் இருந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அந்த வழியே சென்ற எலியின் வால் பட்டு விளக்கின் திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாய் எரிந்தது, எலி அறியாமல் செய்த இந்த புண்ணிய காரியத்துக்காக மறுபிறவியில் அரசனாய் பிறந்தது. அந்த அரசன் தான் இன்றைய கேரளா உள்ளிட்ட மலையாள தேசத்தை ஆண்டு வந்த , மகாபலி சக்ரவர்த்தி. 


மகாபலி சக்ரவர்த்தி தன் நாட்டு மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டு, அசுர குருவான சுக்ராச்சாரியார்  வழிக்காட்டுதலின்படி  நாட்டை மிகச்சிறப்பாய் ஆண்டு வந்தான். சிறந்த கொடையாளியாகவும் இருந்தான்.   அவனின் ஆட்சியில் மக்கள்  மகிழ்ச்சியோடு இருந்தனர். இதனால், மகாபலி சக்ரவர்த்திக்கு லேசாய் தலைக்கணம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. தன்னால் தானமாய் கொடுக்க முடியாதது எதுமில்லை என அகங்காரம் கொண்டார். இதனை அறிந்த மகாவிஷ்ணு  வாமணன் என்ற சிறுவனாய் அவதரித்து மகாபலி அரண்மனை நோக்கி சென்றார். அந்த நேரத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். யாகத்தின் ஒருபகுதியாக மக்கள் விரும்பியவற்றை அவர்கள்  விருப்பப்படி தானதர்மங்களை செய்து வந்தார். 


வந்திருப்பது அந்த மகாவிஷ்ணு என்பதை  சுக்ராச்சாரியார் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்துகொண்டார். மகாபலியிடம் சென்று வந்திருப்பது அந்த மாயவன். அதனால, எந்த வாக்கையும் கொடுத்துவிடாதே! அதனால,  உன் ராஜ்ஜியம் உட்பட உன் உயிருக்கேகூட ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். 


குருவே! எல்லாரும் கடவுளிடம் வரம் கேட்பர். ஆனால், கடவுளே என்னிடம் வரம் கேட்பதென்றால் எத்தனை சிறந்த பாக்கியம்!!  அதனை இழக்க நான் விரும்பவில்லை எனக்கூறி வாமணனை வரவேற்க சென்றான் மகாபலி. வாமணனை வரவேற்று, தாங்கள் வேண்டி வந்தது யாதென வணங்கி நின்றான். எனக்கு மூன்றே மூன்றடி நிலம் வேண்டுமென வாமணன்  கூறினான். சிறுவன்தானே!  மூன்றடி நிலம் எவ்வளவு இருந்திடுமென்ற அலட்சியத்தோடு அப்படியே ஆகட்டுமென வாக்களித்தார் மகாபலி. ம்ஹூம். நீர் விட்டு வாக்களிக்க வேண்டுமென வாமணன் பிடிவாதம் பிடித்தான். 



இப்போதும் மனம் கேட்காத சுக்ராச்சாரியார், மகாபலியை தடுத்தார். இதை எதையும் காதில் வார்க்காத மகாபலி நீரூற்ற கமண்டலத்தை எடுத்தார். சுக்ராச்சாரியார் வண்டாய் மாறி கமண்டலத்தின் நீர் வரும் வாயிலை அடைத்துக்கொண்டார்.  எத்தனை முயன்றும் நீர் வெளிவரவில்லை.  சுக்ராச்சாரியாரின் செயலை உணர்ந்த வாமணன் அருகிலிருந்த  தர்ப்பைப்புல்லை கொண்டு வாயிலை குத்த சுக்ராச்சாரியாரின் பார்வை பறிபோனதோடு நீரும் வந்தது. மகாபலியும் வாமணன் கேட்ட வரத்தை தந்தார். 


உடனே, வானுக்கும், மண்ணுக்குமாய் உயர்ந்து நின்ற வாமணன், ஓரடியில் நிலத்தையும், இரண்டாமடியில் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு என்ன செய்யவென மகாபலியிடம் கேட்டான். ஐயனே! மூன்றாம் அடியை என் தலையில் வையுங்கள் எனக்கூறி தன் தலையைக்காட்டி பணிந்து நின்றார். வாமணனும் மூன்றாவது அடியை மகாபலி தலையில்  வைக்க,  மகாபலி பாதாளலோகம் சென்றார்.  அங்கிருந்தபடியே, ஐயனே! எந்நாட்டு மக்களை பிரிந்து என்னால் இருக்க இயலாது அதனால், வருடம் ஒருமுறை எம்மக்களை சந்திக்க வரம் கொடுங்கள் என வேண்டி நிற்க விஷ்ணுவும் அவ்வாறே அருளி மகாபலியை ஆட்கொண்டார். 

மகாபலி சக்ரவத்தி வருடமொரு முறை வரும் நாளையே ஓணம் பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். புத்தம் புது ஆடை, அணிகலன் அணிந்து, வீட்டு அழகூட்டி, வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, சுவையான உணவு உண்டு தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை மகாபலி சக்ரவர்த்திக்கு உணர்த்துகின்றனர்.  படகு போட்டி, மேள , தாளம் உட்பட பல கலை நிகழ்ச்சிகளோடு இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். 

அத்தப்பூ கோலம்...

ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுறாங்க. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வரனும். பூக்கோலத்தில் அதைதான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூக்களுக்கு முதலிடம் கொடுப்பாங்க. பத்தாம் நாள் கோலம் பத்துவகையான பூக்கள் இருக்குறதால மிகப்பெரியதாய் இருக்கும். 

ஓண சத்யா....


கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சமைக்கப்படும் அறுசுவை உணவான  ‘ஓண சத்யா’வின் சிறப்பை உணர்த்துது. இதில் அறுசுவையில் ஒன்றானா கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர்நிறைய சேர்த்துக்குவர்.  வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுது.

புலிக்களி ஆட்டம்


மலையாளத்தில் ‘களி’ ன்னா நடனம்ன்னு பொருள். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ ன்னு சொல்லப்படுற இந்த  நடனம் ஓணம் பண்டிகையின் 4–ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தால புலி வேஷமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

கசவு, நேரியல்ன்னு சொல்லப்படுற வெண்ணிறமும், ஜரிகையும் சேர்ந்த புடவை, வேட்டியையையே இந்நாளில் அணிகின்றனர். வயதான பெண்கள் முண்டுன்னு சொல்லப்படுற இரண்டு துண்டுகளால் ஆன புடவையை கட்டி கொள்வர்.  ஓணம்  பண்டிகையன்று,  வயது வித்தியாசமில்லாம அனைத்து பெண்களும் "கைகொட்டுக்களி”ன்ற நடனத்தை ஆடுவர்



படகுபோட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள்ன்னு ஒன்பது நாட்கள் கொண்டாட்டமாய் போகும் இத்திருவிழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவது யானைத் திருவிழாவால் தான். பண்டிகை என்றாலே பண்டங்களை ஈகை செய்வது தானே! கேரள மக்கள், தங்கள் சக மனிதர்கள் மட்டுமல்லாமல், சக உயிர்களுக்கும் ஈகை புரிந்து கொண்டாடும் திருவிழா இந்த ஓணம்.  யானைகளுக்கு பொன், மணிகளாலான தங்க கவசம் இட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். பார்க்கும் அனைவரும் பரவசமாய் கும்மாளமிட்டபடி தொடருவர். 


கோவில் முழுவதும் சுற்றிவரும் யானை, மகாபலி மண்டபத்தில் சிறிது நேரம் நிற்கும். ஸ்ரீவாமனமூர்த்தி, மகாபலியை பாதாள லோகத்துக்கு திரும்ப அனுப்புவதற்கான அவகாசம்.  பத்து நாட்களின் விருந்து,கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம். 




மகாபலி மன்னன் எத்தனை உயர்ந்த குணமிருந்தாலும் ஆணவம், அகங்காரம் கொண்டதால் அழிந்துபோனான். அதனால, ஆணவம், அகங்காரம், ஈகோவை ஒழித்து நலமாய் வாழ்வோம்....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,’
ராஜி.