Showing posts with label மகாபலி. Show all posts
Showing posts with label மகாபலி. Show all posts

Saturday, October 06, 2018

ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமசுவாமி - திருக்கோவிலூர்

உலகத்துல கெட்டவனாவே வாழ்ந்தா என்ன கதின்னு துரியோதனன், ராவணன், நரகாசுரன்,  பத்மாசூரன், அனலாசூரன், தாடகி, மகிஷன்..... மாதிரியான அசுரர்களின் முடிவை பார்த்து தெரிஞ்சுக்கலாம்.  சரி, கெட்டவர்கள் கதிதான் இப்படியாச்சுதேன்னு, எதுக்குடா வம்புன்னு  நல்லவனாய் வாழ்ந்து வந்தாலும் இந்த உலகம் விட்டு வைக்குதா?! அட, இந்த உலகம்தான் இப்படின்னா, இந்த சாமிகளுக்கு வேலை வெட்டி  இல்லாம பொழுது போகாம இருந்தா சொக்கட்டான், தாயப்பாஸ் விளையாடிக்கிட்டு இருக்காம, சொய்ய்ய்ய்ய்ய்ன்னு பூலோகத்துக்கு வந்து பண்ணாத இம்சைலாம் பண்ணிட்டு பக்தா! உன் பக்தியை மெச்சினோம். உன்னை இந்த பூலோகம் மறக்காதுன்னு டயலாக் விட்டுட்டு அவன் இழந்ததுலாம் கொடுத்துட்டு சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு பறந்து போயிடும். அதனால், தங்கத்துல செப்பு கலந்த மாதிரி நல்லவன்+கெட்டவனாக வாழ்ந்து இருக்க இடம் தெரியாமயே காலத்தை கடத்துடலாம்.  எதுக்கு இந்த டயலாக்!? ஏன் இந்த முடிவுன்னு தெரிஞ்சுக்கனும்ன்னா  மகாபலி மன்னன் கதை அதானுங்க ஓணம் பண்டிகை கதையை தெரிஞ்சுக்கிடுங்க.

அசுரக்குலத்தில் தோன்றி இருந்தாலும், மகாபலின்ற மன்னன் குலகுருவான சுக்ராச்சாரியார் அறிவுரையோடு தர்ம நியாயங்களின்படி ஆட்சிபுரிந்து வந்தான். மகாபலி கர்ணனுக்கு ஒப்பான சிறந்த கொடையாளி. அவன் ஆட்சியில் மக்கள்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க.  குலகுருவான சுக்ராச்சாரியார் ஆலோசனைப்படி  மிகப்பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். எங்கே தனது பதவிக்கு ஆபத்து வந்திடுமோன்னு பயந்த தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகாவிஷ்ணுவை அணுகி, தங்கள் நிலையினை எடுத்துச்சொல்லி, யாகத்தினை தடுத்திட வேண்டி நின்றனர். யாகத்தினை தடுக்க மனமில்லாவிட்டாலும், தேவர்களின் மனக்குறையை தீர்க்க,  குழந்தை வரம் கேட்டு காசியபர் -அதிதி தம்பதியினர், திருமாலை வேண்டி காமேஷ்டி யாகம் செய்ததன் பலனாய், அவர்களுக்கு மகனாய் குட்டையான வடிவம் கொண்ட  வாமணன்ன்ற பேர்ல விஷ்ணு அவதரித்தார். 

யாகத்திற்கு வந்தவர்களுக்கு  அவர்கள் விரும்பிய வண்ணம் பொன், பொருள், நிலம், பசுவென வாரி வழங்கிக்கொண்டிருந்தார். அங்கு வந்த வாமனரை வரவேற்ற மகாபலி என்ன வேண்டுமென கேட்க, மூவடி மண் போதுமென வாமணன் சொல்ல,  அவர் கேட்ட மூன்றடி மண்ணை கொடுக்க மகாபலி ஒப்புக்கொண்டான். வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தன் சீடனைக் காக்க எண்ணி, அவனிடம் உண்மையைக் கூறி தானம் கொடுக்க வேண்டாம் என்றார். ஆனா,  கொடுத்த வாக்கை மீறாத மகாபலி, ‘வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்றால், அவருக்கே தானம் தருவது தமக்குப் பெருமையே’ எனக்கூறி, கமண்டலத்தைச் சாய்த்து தாரை வார்க்கத் தொடங்கினான். இதனைத் தடுக்க விரும்பிய சுக்ராச்சாரியார், வண்டாக மாறி, கமண்டலத்தில் தண்ணீர் வரும் வழியை மூடினார். ஆனால் வாமனர், ஒரு புல்லை எடுத்து துவாரத்தில் குத்தியதால் சுக்ராச்சாரியார் தமது ஒரு கண்ணை இழந்தார். முடிவில், மகாபலி தண்ணீர் விட்டு மூவடி நிலைத்தை தாரை வார்த்தான்.
தாரை வார்த்தல் முடிந்ததும், வானுக்கும், மண்ணுக்குமாய் உயர்ந்து நின்று வாமனர், ஓரடியை வைத்து மண்ணுலகை அளந்தார். மற்றொரு அடியால் விண்ணுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என வாமனர் கேட்க, மகாபலி தன் செருக்கை இழந்து மூன்றாவது அடியைத் தன் தலை மீதே வைக்க வேண்டினான். அதன்படியே பெருமாள் வைக்க பாதாளம் சேர்ந்தான் என்பது இந்த தலத்தோட ஹிஸ்ட்ரி, ஜியாகரபிலாம்.  அதுக்கப்புறம், விஷ்ணு பக்தா உன் பக்தியை மெச்சி, உனக்கு பாதாள லோகத்தை அரசாட்சி புரிய அருள் செய்தோம்ன்னு அருளினார். ஆளே இல்லாத இடத்துல யாருக்குதான் டீ ஆத்த சொன்னாரோ! அது பகவானுக்கே வெளிச்சம். செத்த பாம்பை திரும்ப அடிக்குற மாதிரி என்ன வரம் வேணும்ன்னு கேக்க தன்னோட நாட்டு மக்களை  பிரிஞ்சிருக்க முடியாதுன்னும், வருசம் ஒருவாட்டி வந்து பார்க்கனும்ன்னு வரமாய் கேட்க, அப்படி வாங்குன வரம்தான் ஓணம் பண்டிகை. 
விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் திருக்கோவிலூர் 108 திவ்ய தேசங்களில் 53வது தலமாம். நடுநாட்டு திருப்பதியில் 2வது தலமாகவும், பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில் 4வது தலமாகவும், தமிழ்வேதம் எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் அவதரித்த தலமாகவும் இத்தலம் இடம்பெற்றிருக்கு.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரத்தையும் பிடித்தபடி வலது காலை ஆகாயம் நோக்கி தூக்கி நின்று திருவிக்கிரம அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வலது காலின் மேல்புறம் லட்சுமியும், கீழே இடதுக்காலை நமச்சு முனிவர், மகாபலி சக்கரவர்த்தி, சுக்கிராச்சாரியார். ஆண்டாள், கருடன் ஆகியோர் பூஜை செய்யும் தோரணையிலும், பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடல் பாடும் தோரணையிலும் காட்சியளிக்கின்றார். இந்த திருக்கோலத்தை கோவிலின் கருவறையில்தான் அர்ச்சகர்கள் விளக்கி சொல்ல பக்தர்கள் தரிசிக்க முடியும். 
ஒரு அதிகாலை நேரத்தில் விழுப்புரத்திலிருந்து பச்சை பசேலென  அழகிய வயல்வெளிகளை கண்டு களித்தவாறே  திருக்கோவிலூர் சென்றோம்.  கரும்பு, நெல், வாழை என எங்கும் பசுமைக்கோலம்.  பத்ம புராணம், பிரமாண்ட புராணம் இரண்டிலும் திருக்கோவிலூர் புகழப்படுது. பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும்முன்பாக  இந்த ஆலயம் கிருஷ்ணன் கோவிலாய் இருந்ததாம்.  கோபாலன் என்ற சொல்லே கோவாலன் உறையும் ஊர் எனப்பொருள்படும்படி  திருக்கோவலூர் என அழைக்கப்பட்டு இப்ப திருக்கோவிலூராய் ஆனதாம்.
சில மாதங்களுக்குமுன் நாங்க போனபோது தென்பெண்ணையாற்றில் ஓரளவுக்கு தண்ணி ஓடிட்டு இருந்துச்சு. இங்கதான் கபிலர் குன்று இருக்குறதாய் பிறகுதான் தெரிஞ்சது. போக வேண்டிய இடங்களில் அந்த பேரையும் சேர்த்தாச்சு. கபிலர் யாருன்னு சுருக்கமா...  கபிலர்,  பாரி வள்ளலின் முகம் காணா நண்பர்.  பாரிவள்ளலின் மறைவுக்கு பின் அங்கவை, சங்கவையை பராமரிச்சு திருமணம் செஞ்சு வச்சபின் இந்த ஆற்றிலிருக்கும் ஒரு பாறையின்மீது வடக்கு நோக்கி அமர்ந்து அன்னம் தண்ணியின்றி உயிர் நீத்தார்.  அது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 2கிமீ தூரத்திலிருக்காம். சரி நாம உலகளந்த பெருமாள் கோவிலுக்கு போகலாம். வாங்க.


படம் பேஸ்புக்ல சுட்டது... 
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் இது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது.  11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம்.  கோபுரத்தைக் கடந்து உள்ளே போனால்,  மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளையும், பூஜை பொருள்கள் விற்கும் கடைகளையும் பார்க்கலாம்.  நாங்க துளசிமாலையும், தாயாருக்கு தாமரைப்பூவும் வாங்கிக்கிட்டோம்.

நாங்க போனபோது இக்கோவில் கட்டுமான வேலைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப கும்பாபிசேகம் ஆகிட்டுது. ஏழுநிலை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் திருவிக்கிரமசுவாமியை தரிசிக்கலாம்.   ஒரு காலத்தில் வேணுகோபால சன்னதியா இருந்து படிப்படியா உலகளந்த பெருமாள் கோவிலாய் மாற்றம் கண்டது. சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலை பல்லவர்கள், விஜயநகரபேரரசு, இரண்டாவது நரசிம்மவர்மன், பாண்டியர்கள், திருமலைநாயக்கர், திருமங்கை மன்னன், மலையமான் சக்கரவர்த்தி ஆகியோர் படிப்படியாக இக்கோவிலை இப்ப இருக்கும் கட்டமைப்பில் கொண்டு வந்தனர்.   


கோவில் ரொம்ப சுத்தமா அமைதியாய் இருந்துச்சு.   ஞானிகளும், நாரதரும், கின்னரர்களும் இத்தலத்தில் தவம் செய்ததாகக் கூறப்படுது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்ட முனிவர், திருமாலின் வாமன அவதாரத்தைக் காண விரும்பித் தவம் செய்து தான் விரும்பியவாறே இறைக்கோலத்தை தரிசனம் செய்த தலம் இது. 
பெருமாள் கோவில் வழக்கப்படி முதலில் தாமரை மலரால் தாயாரை வணங்கி மஞ்சளை பிரசாதமாய் பெற்றோம்.  தாயார் சன்னிதி கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் என  தனிக்கோவிலாய் அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார்,  உற்சவர் புஷ்பவல்லித் தாயார் எனவும் அழைக்கப்படுகிறாள். 
அடுத்து உலகளந்த பெருமாள் திருவிக்கிரமன் எனப்பேர்கொண்டு அருளும், கருவறைக்கு சென்றோம். துளசி மாலைக்கொண்டு அவனை தொழுதப்பின், அர்ச்சகர் காட்டிய திருவிளக்கு வெளிச்சத்தில் 21 அடி உயரம் கொண்ட பழமையான தேவதாரு மரத்தால் ஆன சிலாரூபத்தினை தரிசித்தோம்.  இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயார் வேறு பேர்களும் உண்டு. எம்பெருமான் பச்சிலை மூலிகைகளால் ஆன வண்ணங்கள் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார். பிரசாதமாய் சடாரியும், தீர்த்தமும், துளசியும் பெற்றுக்கொண்டோம். உற்சவர் தேகளீச பெருமாள் என அழைக்கப்படுகிறார். பொதுவா வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்குமாய் காட்சியளிக்கும் பெருமாள் இங்கு மகாபலியை தன்னோடு  சேர்த்துக்கொண்ட மகிழ்ச்சியில் தலைக்கால் புரியாம வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாய் காட்சியளிக்கிறார். இந்த திருக்கோலத்தில் இறைவனை காண்பது அபூர்வம். இக்கோலம் ஞானத்தை தரும்.


பூங்கோவல் நாச்சியார் சன்னத்திக்கு இடதுபுறம் சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார். சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமை கல்கண்டு அர்ச்சனை செய்தால் தீமைகள் அகலும்.  இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள்  தொல்லை நீங்கும்.


திருவிக்கிரமசுவாமி சன்னதிக்கு பின்புறம் வாமனருக்கென தனி சன்னதி இருக்கு. இங்குள்ள வாமனர் கையில் குடையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கேரளாவிற்கு அடுத்தபடியாக வாமனருக்கு இங்குதான் தனிச்சன்னதி இருக்கு.  இவரை தரிசனம் செய்தால் திருமணம், செல்வம், குழந்தைபேறு, கல்வி போன்றவற்றை குருபகவான் அருள்வார். அனைத்து பலன்களும் இங்கு கிட்டும். திருவோண நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுது.


திருவிக்கிரமசுவாமி கருவறையின் முன்பு நாகராஜாக்கலான வலதுபுறம் அனந்தன், இடதுபுறம் வாசுகி ஆகியோரை ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வழிபாட்டால் கால சர்ப்ப தோஷங்கள் நீங்கும். திருவிக்கிரமசுவாமி விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு  முனிவருக்கு ஆசை உண்டானது. அவர் பிரம்மாவிடம்  ஆலோசனை கேட்க, பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பலகாலம் இத்தலத்தில் கடுந்தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் செய்தனர். ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம், வந்தவருக்கு இல்லை என சொல்லாமல், ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்,என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது, அந்தணர் வடிவில் வந்த பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார்.

திருவிக்கிரம சுவாமி சன்னதி நுழைவுவாயிலின் இடப்பக்கம், விஷ்ணுக்கோவிலில் வேறு எங்கும் காணமுடியாத விஷ்ணு துர்க்கை சன்னதி.  விஷ்ணு துர்க்கை சிவன்கோவிலில்தான் வீற்றிருப்பாள். பெருமாளின் சகோதரியான இவள் எல்லை காவல் தெய்வமாகவும், வனதேவதையாகவும் இருக்கும்  இவர் விந்திய மலைக்கு புறப்பட தயாரா இருக்கும்போது பெருமாள் தன் அருகில் இருந்துக்கொண்டு, இங்கு வரும் பக்தர்களுக்கு துயர் போக்கவேண்டும் என தன்னோடு இருக்க செய்தார்.  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ராகுகாலத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் விஷ்ணுதுர்க்கைக்கு புடவை  மற்றும் எலுமிச்சை பழ மாலை அணிவித்து எலுமிச்சை பழவிளக்கு ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமண யோகம் கிடைக்கும்.

திருவிக்கிரமசுவாமி கருவறையில் உள்ள  அசுரக்குலகுருவான சுக்ராச்சாரியாரை வழிபட்டால் சங்கீதம், வாத்தியம், நாட்டியம், போகபாக்கியம், இளமை, லட்சுமி கடாட்சம், போன்ற பலன்கள் கிட்டும்.


தமிழ் புத்தாண்டு, ராமநவமி, ராமானுஜர் விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் ஆடிப்பூர விழா, ஆடி வெள்ளி, ஆடி கடைசி வெள்ளி தாயாருக்கும், பெருமாளுக்கும் புஷ்பாங்கி சேவை, ஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழா, வாமன ஜெயந்தி மூன்று நாட்கள், புரட்டாசி பவித்ர உற்சவம், தாயாருக்கு நவராத்திரி விழா, திருமாலுக்கு தினப்படி திருமஞ்சனம், ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார்களுக்கு 5 நாள் விழா, மணவாள மாமுனிகளுக்கு பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள், கைசீக ஏகாதசி, மார்கழியில் பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து, தைத் திருநாள், மாசியில் மகம், பங்குனி பிரம்மோற்சவம்......... என விழாக்களுக்கு பஞ்சமில்லாத் திருக்கோவிலாக இருக்கு. சொல்லவே மூச்சு வாங்குது. இத்தனை விசேசம் நடக்குதுனா கோவிலோட அருமை என்னவா இருக்கும்ன்னு யூகிச்சுக்கோங்க.

கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக இருக்கு. நாங்க போனபோது கட்டுமான பணிகள் நடந்துக்கிட்டு இருந்ததால் படமெடுக்க முடில. இது நுழைவாயில் சுவத்துல இருக்கும் ஒரு சிற்பம். 

சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் சிலை தனிச்சன்னிதியில் அருள் பாலிக்கிறார். இவரை தரிசித்தபின் தான் மூலவரை தரிசிக்கனும்.(இந்த விவரம் எங்களுக்கு தெரியாது வெளியில் வந்தபின் தான் அங்கிருக்கும் பெரியவர் சொன்னார். பெருமாள், வேணுகோபாலர், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள்.. என அவரவர் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
வேலை கிடைக்க, பதவி உயர்வு வேண்டி,  வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலையில் அமர இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச்சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறும். 

பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன்முதலாகப் பாடினர்.  இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா எனக் கேட்டார். அதற்கு மிருகண்டு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் எனக்கூறி சென்றார்.

.சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக்கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். இப்படியாக மூவரும் நின்றுக்கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்டபோது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.

நாங்க வேன்ல போனதால் பேருந்து மார்க்கம்லாம் எப்படின்னு தெரில. ஆனா, விழுப்புரம், திண்டிவனம் பஸ்லாம் கண்ல பட்டது.  விழுப்புரம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் இருக்குன்னு கூகுள் ஆண்டவர் சொல்றார்.  
காலை 5.30 மணி முதல் 6.45 மணி வரையும், 8.30மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். 


புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உலகலாம் அளந்தவன் அருளும் திருக்கோவிலூர் திருவிக்கிரம சுவாமியை தரிசனம் செய்தாச்சு. நான் போய் கோவிந்தா போட்டுட்டு வரேன்.

நன்றியுடன்,
ராஜி

Monday, September 04, 2017

கடவுளே மனிதனிடம் தானம் கேட்ட கதை - ஓணம் பண்டிகை



தமிழ்நாட்டுக்கு உழவர் திருவிழா, அறுவடை திருவிழான்னு சொல்ற பொங்கல் திருவிழா மாதிரி மலையாளத்தவருக்கு  ஓணம் பண்டிகை. கடவுளின் தேசம்ன்னு சொல்லப்படும் கேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் இது முதன்மையானது.  பொதுவா , கடவுள்கிட்டதான் எல்லாரும் நமக்கு வேணுங்குறதை கேட்போம். ஆனா, கடவுளே மனிதன்கிட்ட தனக்கு வேணுங்குறதை கேட்டதன் நினைவாதான் இந்த பண்டிகை கொண்டாடப்படுது. அது என்ன கதைன்னு தெரிஞ்சுக்கலாம்... 


விஷ்ணு அவதரித்ததும், விஷ்ணுவின் அம்சமான வாமணன் அவதரித்ததும் இந்நாளில்தான்னு சங்கக்கால ஏடுகள் சொல்லுது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பண்டிகை கொண்டாடப்படுத்தா கிபி 861 ம் தேதியிட்ட செப்புத்தகடு சொல்லுது.  இந்த பண்டிகை சாதி, மத, பேதமின்றி கொண்டாடப்படுது.  கேரள மக்கள் மட்டுமின்றி கன்யாக்குமரி, கோவை, மார்த்தாண்டம் மாதிரியான கேரள, தமிழக எல்லையோரத்து மக்களும் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். இப்ப, சென்னையிலும், மற்ற ஊர்களிலும் ( சில அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளிலும்) கொண்டாடப்படுது. 


கொல்லவர்ஷம்ன்னு சொல்லுற மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் தொடங்கி திருவோணம் வரை இப்பண்டிகை கொண்டாடப்படுது.  விஷ்ணு பகவான் அவதரித்ததால் திருவோணம் நட்சத்திரம் விஷ்ணுவுக்கு உகந்தது. இந்நாளில் இவரை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும்,  பேரோடும், புகழோடும் வாழ்வர்.



ஒருமுறை சிவன் கோவிலில் இருந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அந்த வழியே சென்ற எலியின் வால் பட்டு விளக்கின் திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாய் எரிந்தது, எலி அறியாமல் செய்த இந்த புண்ணிய காரியத்துக்காக மறுபிறவியில் அரசனாய் பிறந்தது. அந்த அரசன் தான் இன்றைய கேரளா உள்ளிட்ட மலையாள தேசத்தை ஆண்டு வந்த , மகாபலி சக்ரவர்த்தி. 


மகாபலி சக்ரவர்த்தி தன் நாட்டு மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டு, அசுர குருவான சுக்ராச்சாரியார்  வழிக்காட்டுதலின்படி  நாட்டை மிகச்சிறப்பாய் ஆண்டு வந்தான். சிறந்த கொடையாளியாகவும் இருந்தான்.   அவனின் ஆட்சியில் மக்கள்  மகிழ்ச்சியோடு இருந்தனர். இதனால், மகாபலி சக்ரவர்த்திக்கு லேசாய் தலைக்கணம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. தன்னால் தானமாய் கொடுக்க முடியாதது எதுமில்லை என அகங்காரம் கொண்டார். இதனை அறிந்த மகாவிஷ்ணு  வாமணன் என்ற சிறுவனாய் அவதரித்து மகாபலி அரண்மனை நோக்கி சென்றார். அந்த நேரத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். யாகத்தின் ஒருபகுதியாக மக்கள் விரும்பியவற்றை அவர்கள்  விருப்பப்படி தானதர்மங்களை செய்து வந்தார். 


வந்திருப்பது அந்த மகாவிஷ்ணு என்பதை  சுக்ராச்சாரியார் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்துகொண்டார். மகாபலியிடம் சென்று வந்திருப்பது அந்த மாயவன். அதனால, எந்த வாக்கையும் கொடுத்துவிடாதே! அதனால,  உன் ராஜ்ஜியம் உட்பட உன் உயிருக்கேகூட ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். 


குருவே! எல்லாரும் கடவுளிடம் வரம் கேட்பர். ஆனால், கடவுளே என்னிடம் வரம் கேட்பதென்றால் எத்தனை சிறந்த பாக்கியம்!!  அதனை இழக்க நான் விரும்பவில்லை எனக்கூறி வாமணனை வரவேற்க சென்றான் மகாபலி. வாமணனை வரவேற்று, தாங்கள் வேண்டி வந்தது யாதென வணங்கி நின்றான். எனக்கு மூன்றே மூன்றடி நிலம் வேண்டுமென வாமணன்  கூறினான். சிறுவன்தானே!  மூன்றடி நிலம் எவ்வளவு இருந்திடுமென்ற அலட்சியத்தோடு அப்படியே ஆகட்டுமென வாக்களித்தார் மகாபலி. ம்ஹூம். நீர் விட்டு வாக்களிக்க வேண்டுமென வாமணன் பிடிவாதம் பிடித்தான். 



இப்போதும் மனம் கேட்காத சுக்ராச்சாரியார், மகாபலியை தடுத்தார். இதை எதையும் காதில் வார்க்காத மகாபலி நீரூற்ற கமண்டலத்தை எடுத்தார். சுக்ராச்சாரியார் வண்டாய் மாறி கமண்டலத்தின் நீர் வரும் வாயிலை அடைத்துக்கொண்டார்.  எத்தனை முயன்றும் நீர் வெளிவரவில்லை.  சுக்ராச்சாரியாரின் செயலை உணர்ந்த வாமணன் அருகிலிருந்த  தர்ப்பைப்புல்லை கொண்டு வாயிலை குத்த சுக்ராச்சாரியாரின் பார்வை பறிபோனதோடு நீரும் வந்தது. மகாபலியும் வாமணன் கேட்ட வரத்தை தந்தார். 


உடனே, வானுக்கும், மண்ணுக்குமாய் உயர்ந்து நின்ற வாமணன், ஓரடியில் நிலத்தையும், இரண்டாமடியில் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு என்ன செய்யவென மகாபலியிடம் கேட்டான். ஐயனே! மூன்றாம் அடியை என் தலையில் வையுங்கள் எனக்கூறி தன் தலையைக்காட்டி பணிந்து நின்றார். வாமணனும் மூன்றாவது அடியை மகாபலி தலையில்  வைக்க,  மகாபலி பாதாளலோகம் சென்றார்.  அங்கிருந்தபடியே, ஐயனே! எந்நாட்டு மக்களை பிரிந்து என்னால் இருக்க இயலாது அதனால், வருடம் ஒருமுறை எம்மக்களை சந்திக்க வரம் கொடுங்கள் என வேண்டி நிற்க விஷ்ணுவும் அவ்வாறே அருளி மகாபலியை ஆட்கொண்டார். 

மகாபலி சக்ரவத்தி வருடமொரு முறை வரும் நாளையே ஓணம் பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். புத்தம் புது ஆடை, அணிகலன் அணிந்து, வீட்டு அழகூட்டி, வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, சுவையான உணவு உண்டு தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை மகாபலி சக்ரவர்த்திக்கு உணர்த்துகின்றனர்.  படகு போட்டி, மேள , தாளம் உட்பட பல கலை நிகழ்ச்சிகளோடு இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். 

அத்தப்பூ கோலம்...

ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுறாங்க. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வரனும். பூக்கோலத்தில் அதைதான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூக்களுக்கு முதலிடம் கொடுப்பாங்க. பத்தாம் நாள் கோலம் பத்துவகையான பூக்கள் இருக்குறதால மிகப்பெரியதாய் இருக்கும். 

ஓண சத்யா....


கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சமைக்கப்படும் அறுசுவை உணவான  ‘ஓண சத்யா’வின் சிறப்பை உணர்த்துது. இதில் அறுசுவையில் ஒன்றானா கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர்நிறைய சேர்த்துக்குவர்.  வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுது.

புலிக்களி ஆட்டம்


மலையாளத்தில் ‘களி’ ன்னா நடனம்ன்னு பொருள். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ ன்னு சொல்லப்படுற இந்த  நடனம் ஓணம் பண்டிகையின் 4–ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தால புலி வேஷமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

கசவு, நேரியல்ன்னு சொல்லப்படுற வெண்ணிறமும், ஜரிகையும் சேர்ந்த புடவை, வேட்டியையையே இந்நாளில் அணிகின்றனர். வயதான பெண்கள் முண்டுன்னு சொல்லப்படுற இரண்டு துண்டுகளால் ஆன புடவையை கட்டி கொள்வர்.  ஓணம்  பண்டிகையன்று,  வயது வித்தியாசமில்லாம அனைத்து பெண்களும் "கைகொட்டுக்களி”ன்ற நடனத்தை ஆடுவர்



படகுபோட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள்ன்னு ஒன்பது நாட்கள் கொண்டாட்டமாய் போகும் இத்திருவிழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவது யானைத் திருவிழாவால் தான். பண்டிகை என்றாலே பண்டங்களை ஈகை செய்வது தானே! கேரள மக்கள், தங்கள் சக மனிதர்கள் மட்டுமல்லாமல், சக உயிர்களுக்கும் ஈகை புரிந்து கொண்டாடும் திருவிழா இந்த ஓணம்.  யானைகளுக்கு பொன், மணிகளாலான தங்க கவசம் இட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். பார்க்கும் அனைவரும் பரவசமாய் கும்மாளமிட்டபடி தொடருவர். 


கோவில் முழுவதும் சுற்றிவரும் யானை, மகாபலி மண்டபத்தில் சிறிது நேரம் நிற்கும். ஸ்ரீவாமனமூர்த்தி, மகாபலியை பாதாள லோகத்துக்கு திரும்ப அனுப்புவதற்கான அவகாசம்.  பத்து நாட்களின் விருந்து,கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம். 




மகாபலி மன்னன் எத்தனை உயர்ந்த குணமிருந்தாலும் ஆணவம், அகங்காரம் கொண்டதால் அழிந்துபோனான். அதனால, ஆணவம், அகங்காரம், ஈகோவை ஒழித்து நலமாய் வாழ்வோம்....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,’
ராஜி.

Tuesday, November 10, 2015

அட! தீபாவளில இத்தனை விதமா?!

ந்திரமயமாகிவிட்ட இந்த உலத்தில் நம் வாழ்க்கையும் எந்திரம் போலவே ஆகி போனதுதான் துரதிர்ஷ்டம்.  காலை எழுந்து , இரவு படுக்கும் வரை நம் அன்றாட பணிகள் ”என்னடா வாழ்க்கை இது?!ன்னு அலுப்பை உண்டாக்கி நம் வாழ்க்கையின் மீதே சலிப்பை உண்டாக்கிடுச்சு.  வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டாலும் வெறுப்பு வரக்கூடாதுன்னுதான் திருவிழாக்களையும், பண்டிகைகளும் உண்டானது. நம் அன்றாட பணிகள், சலிப்பு, அலுப்பிலிருந்து விடுபட்டு குடும்பம், சுற்றம், சொந்தம் சூழப் பண்டிகைகள் கொண்டாடி அனைவரும் மகிழ்ந்திருப்பதில் தீபாவளிக்கு முதலிடம்.
தீபாவளியின் சிறப்பு:
ஆனால், அப்பண்டிகைகள் இன்று  வெறும் மகிழ்ச்சிக்கும், கேலிகூத்துக்கும் மட்டுமேன்னு ஆகிடுச்சு. பண்டிகை வாயிலாக ஆன்மிகத்தையும், பக்தியையும், இறைவனையும் உணரும் வகையிலேயே பண்டிகைகள் தோணுச்சுன்னு நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம புரிய வைக்கனும்.
நரகாசுர வதம், என சொல்லப்படுவது, உண்மையில் கதையாக சொல்லபட்டாலும், மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், அகங்காரம், பொறாமை, தலைக்கணம், அறியாமை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது. புற இருளைத் தீபங்கள் கொண்டு விரட்டுவதைப் போல, அக இருளை, ஒழுக்கம், பிறருக்கு உதவுதல் போன்ற நற்குணம் கொண்டு விரட்டவேண்டும் என்பதே அதன் தத்துவமாகும்.
நரகாசுர வதம்:
மக்களையும், ஏனைய உலக உயிர்களையும் துன்புறுத்தி வந்த நரகாசுரன் என்ற அசுரனை, கண்ணனும் அவரது மனைவியில் ஒருவரான சத்தியபாமாவையும் (நரகாசுரனின் தாய் பூமாதேவியின் அம்சமே சத்தியபாமா) சேர்ந்து சம்ஹாரம் செய்த நாளே தீபாவளி என்று பக்தி மார்க்கமான கதை தெரிவிக்கிறது.ஆனால், வட இந்தியர்கள், சீக்கியர்கள், சமணர்கள், போன்றவர்கள் வேறு சில நிகழ்வுகள் மற்றும் புராணக் கதைகளைக் காரணம் கொண்டு தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமளிக்குது.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு பக்தி மார்க்கமாக கூறப்பட்டுள்ள கதையில் புதைந்திருக்கும் வாழ்க்கை தத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். 10 அவதாரங்கள் எடுத்து, பலப்பல பராக்கிரமங்கள் புரிந்த கிருஷ்ணரால், நரகாசுரன் என்ற அசுரனை தனியாக போரிட்டு வெல்ல முடியாதா என்ன? எதற்காக அவருக்கு சத்தியபாமா என்ற பெண்ணின் உதவி தேவைப்படுகிறது??!!
கணவன்–மனைவி தத்துவம்:
கவலையும், மகிழ்ச்சியும் மாறி மாறி வரும் மனித வாழ்க்கையில் மனைவியின் துணையின்றி கணவனால் வெற்றிப் பெற முடியாது என்பதையே சத்தியபாமா, கண்ணன் கதையின் மூலம் நமக்கு உணர்த்தும் உண்மை. கணவனும், மனைவியும் இணைந்து வாழ்வதே வாழ்க்கை. அப்படி வாழும்போது வரும் துன்பங்களை இருவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இருவரும் ஒன்றாகத் துன்பங்களை எதிர்க்கொண்டு அதனை வெற்றிக்கொண்டால்தான் வாழ்வில் இன்பங்கள் ஏற்படும்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு பல கதைகள் கூறப்பட்டாலும், ”தீபங்களை ஏற்றி வழிப்படுவதே தீபாவளி” என்பது தான் மையக் கருத்தாக அமைந்துள்ளது. இந்து மதத்தின் தத்துவப்படி வெளிச்சத்தை ஏற்படுத்தும் ஒளியானது, ஞானத்தின் பிறப்பிடமாக பார்க்கப்படுகிறது. எனவே, தீபாவளியன்று ஏற்றப்படும் தீப விளக்குகள், மனித வாழ்வில் ஞானத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்தப் பண்டிகை மனிதர்களிடையே ஞானத்தையும், அன்பையும், நட்பையும் வலியுறுத்துது.
ஆனால், தீபாவளி ஒருநாள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகை  அல்ல. ஆறுநாட்கள் கொண்டாடப்படுவதாகும். முதல்நாள் பசுவிற்கு வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கும் ஒரு கதை இருக்கு. நமது பழைய புராணங்களில் இந்தக் கதை சொல்லப்பட்டு இருக்கு. ”வேனா” நாட்டு அரசனின் மகனான ”பிரித்து”, பூவுலகு முழுவதும் முடிசூட்டி ஆண்ட மிகப்பெரிய சக்ரவர்த்தி, இவர் விஷ்ணுவின் அவதாரம் எனவும் சொல்லப்படுகிறது. “வேனா” மன்னர் காலத்தில் கடுமையான பஞ்சம் இருந்ததாகவும், “பிரித்து” சக்ரவர்த்தி காலத்தில் பூமித்தாய் பசுவின் வடிவம் கொண்டு தனது பாலை கொடுத்து மக்களுக்கு பசியாற்றி அவர்களை செழிப்புற செய்ததாகவும், அவர்காலத்தில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை மகாபாரதத்திலும், விஷ்ணு புராணத்திலும் குறிபிடப்பட்டுள்ளது. இவரது வரலாற்றை தனியாக வேறு பதிவில் பார்க்கலாம். இதனால்தான், பூமித்தாய்க்கு வழிபாடு செய்யும் விதமாக பசுவிற்கு வழிபடு செய்வது முதல் நாள் கொண்டாடப்படுகிறது. 
தீபாவளியின் இரண்டாம் நாள்தான் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் கொண்டாடப்படும்.  இந்த நாளை ”தன்டேராஸ்” எனக் கூறுவார்கள். சந்திர மாதத்தின் இரண்டாம் பகுதியில் 133 ஆம் நாளன்று இது ஏற்படும். தங்கம் மற்றும் பிற வடிவில் சொத்து வாங்க இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் கடவுள்களின் மருத்துவரான தன்வந்திரியின் பிறந்த நாளாகும். தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தை அருள, கடவுளை வணங்குவதற்கான மங்களகரமான நாளாகவும் இது கருதப்படுது.
தீபாவளின் மூன்றாம் நாள், நரக சதுர்தசி என அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ணபட்சத்தின் 14வது நாள்தான் சதுர்தசி. இதனை நரக் சதுர்தசி என்று கொண்டாடுகின்றனர். அன்று தான் நரகசுர வதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. பிரத்யோஷபுரம் என்னும் நாட்டை ஆண்ட ”நரகாசுரன்” தன் நாட்டு மக்களை மிகவும் துன்புறுத்திவந்தான். இதனால் இந்நாட்டு மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அவன் வாங்கிய வரத்தின்படி கிரிஷ்ணரின் மனைவி சத்யபாமாவினால் கொல்லப்பட்டு, நாட்டு மக்களை நரகாசுரனின் கொடுமையில் இருந்து விடுவித்த தினம் மூன்றாம் நாள் பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை நினைவு கூர்வதுதான் மூன்றாம் நாள். இந்த நாளின் போது வீடுகளில் தீய சக்திகள் அண்டாமல் இருக்க வீட்டை ரங்கோலி கோலத்தாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள்.
தீபாவளி அன்று நான்காம் நாள், விநாயகரையும், லட்சுமியையும் ஒன்றாக வழிப்படுவது மரபாகும். லட்சுமித்தேவியை வரவேற்க, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. தீபம் என்பது லட்சுமி கடாட்சம் ஆகும். லட்சுமித்தேவி, செல்வச்செழிப்பிற்கும், வளத்திற்கும் கடவுள். அதேப்போல், விநாயகர் அறிவாற்றலுக்கு கடவுள் என்பதும் நாம் நன்றாக அறிந்த ஒன்றாகும். மக்கள் செழிப்பையும், அறிவாற்றலையும் பெறுவதற்காக இவ்விருவரையும் ஒன்றாக இந்நாளில் வழிப்பட்டு வருகின்றனர்.
தீபாவளியின் ஐந்தாவது  கோவர்தன் பூஜை செய்கின்றனர். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து நிறுத்தியதை நினைவு கூரும் வகையில் இந்த பூஜையை காலங்காலமாக மக்கள் செய்து வருகின்றனர். மனிதர்களையும், கால்நடை கூட்டங்களையும்  வெள்ளத்தில் இருந்தும், மழையில் இருந்தும் காப்பாற்ற கோவர்த்தனமலையை கிருஷ்ண பரமாத்மா தூக்கியத்தைக் குறிப்பதே இந்த நாளாகும்.  

இராமன் பாலம் கட்டியபோது அனுமன் கோவர்த்தன மலையை தூக்கிச் சென்றராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும்போது, அனுமனிடம் மலை கேட்டதாம், என்னை ஏன் இங்கே வைத்துவிட்டுச் செல்கிறாய் என்று. அதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து இங்கே வந்து உன்னை தூக்குவார். அதுவரை, இங்கே காத்திரு என்று பதிலளித்தாராம். அதன்படியே கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்த்தன பூஜையாக வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற தென்னக மாநிலங்களில் இந்த ஐந்தாம் நாளை ”பாலி பட்யமி” என அழைப்பார்கள். இந்த நாளில் தான் விஷ்ணு பகவான் அசுர அரசனான பாலியை அழித்துள்ளார். மராத்தியர்கள் இந்த நாளை ”நவ தியாஸ்” அல்லது ”புதிய தினம்” என அழைக்கிறார்கள்.
ஆறாவது நாளை ”பாய்துஜ்” எனவும் அழைக்கிறார்கள். சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பை நினைவுப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வங்காள நாட்டை சேர்ந்தவர்கள் இந்த நாளை ”பாய் போட்டா” எனவும், குஜராத்தியர்கள் இந்த நாளை ”பாய் பிஜ்” எனவும் அழைப்பார்கள். இந்த நாளின் போதுதான் மரணத்தின் கடவுளான ”யமதர்மன்” தன் தங்கையான ”யாமி”யை (யமுனை நதி) சந்தித்தார் என புராணம் கூறுகிறது. இன்றைய தினம் சகோதரர்கள் தங்களது சகோதரிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் நலம் விசாரிக்கும் தினமாக கடைபிடிக்கின்றனர். சகோதரிகளும் தங்களது சகோதரர்களின் நலன், வெற்றிக்காக பூஜைகள் செய்கின்றனர். இந்த நாளின் போது, எப்படி தன் சகோதரனான எமனுக்கு யாமி விருந்து படைத்தாரோ, அதேபோல் இந்நாளில் சகோதரர்களும், சகோதரிகளும் உணவைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ராமரின் தீபாவளி:


இராமாயணத்தில் கூட இராமர் வனவாசம் முடிந்து, இராவணனை வென்று, வெற்றிகரமாக நாட்டிற்கு திரும்பியதை மக்கள் தீபம் ஏற்றி கொண்டாடினார்கள். இராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்பி பட்டம் கட்டிக் கொண்ட இந்நாளே தீபாவளி எனவும் சொல்லப்படுகிறது. 

சிவன் தீபாவளி:
சக்தி தேவி 21 நாட்கள் மேற்கொண்ட கேதாரகௌரி விரதம் முடிவுற்ற இத்தினத்தில் தான் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக உருவெடுத்தார். இந்த தினமும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என ஸ்கந்த புராணம் கூறுகிறது.
1577-ல் இந்த தினத்தில தான் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியது. இந்த நாளையே சீக்கியர்கள் தீபாவளி திருநாளாக கொண்டாடுகின்றனர்.

மாஹாவீரர் நிர்வாணம் அடைந்த இந்த  தினத்தில்தான். ஆகவே, சமண மதத்தினரும் தீபாவளியை அமோகமாக கொண்டாடுகிறார்கள் .
ஜப்பானில் தீபாவளி
முன்னோர்கள் அனைவரும் தம் தம் சந்ததியினருக்கு ஆசி வழங்கும் தினமாக இந்த தீபாவளி பார்க்கப்படுகிறது. அந்த முன்னோர்களுக்காக விளக்குகளை ஏற்றி வைத்து, அவர்களை பூமிக்கு வரவேற்கும் வழிப்பாடாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் இதுபோன்று தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. ‘டோரோனாகாஷி’ என்பது தான் ஜப்பானிய தீபாவளிக்கு பெயர்.
சீன தீபாவளி:
தீபாவளி அன்று விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பார்கள். மேலும் தங்களின் வீட்டு கதவுகளில் ‘வளங்கள் பெருகட்டும், நல்வாழ்வு அமையட்டும்’ என்பது போன்ற வாசகங்களை எழுதி வைப்பார்கள். புதுவருட கணக்கையும் இந்த தீபாவளி நாளில்தான் சீன மக்கள் தொடங்குகிறார்கள்.
கேரள தீபாவளி:
பிரகலாதனின் பேரன் ”மகாபலி சக்கரவர்த்தி”. மகாபலி முடிசூடிக் கொண்ட நாளே ‘தீபாவளி’ என்றும் கூறப்படுகிறது. அன்று  ஏற்றப்படும் தீபம், ‘எமதீபம்’ என்று அழைக்கப்படும். வாமன அவதாரம் எடுத்த நாராயணர், மகாபலி சக்கரவர்த்திக்கு அருள்புரிந்தார். அவருக்கு ஞான திருவடி சூட்டிய நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிறது. இதையே கேரள மக்கள் ‘ஓணம்’ பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
மராட்டிய தீபாவளி:
வீரச்செயல்களில் சிறப்பு மிக்கவர் மராட்டிய மன்னனான சத்ரபதி சிவாஜி. அவர் தன்னுடைய விரோதிகளின் கோட்டையைத் தாக்கி கைப்பற்றிய நாள் தீபாவளி என்று கூறப்படுகிறது. அதன் நினைவாக பொதுமக்கள் தங்களின் வீட்டு வாசல்களில் மண்ணாலான ஒரு சிறிய கோட்டையை கட்டுகிறார்கள். இந்தக் கோட்டை கட்டும் நிகழ்ச்சியில் சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துக்கொள்வார்கள். தீபாவளி தினத்தன்று மும்பையில் மண் கோட்டை கட்டப்படுவதை இன்றும் காணலாம்.

இந்த தீபாவளி பண்டிகை ,இந்துக்கள் பண்டிகை என்று இல்லாமல், மேற்கத்திய நாடுகளில், “ஃபெஸ்டிவல் ஆப் லைட்ஸ்” (Festivals Of Lights) என்று கொண்டாடுகிறார்கள் காரணம் தெரியாவிட்டாலும் கூட அவர்கள் கொண்டாடுவது நமது பண்டைய காலச்சாரம். ஒருகாலத்தில் உலகளவில் பரவியிருந்திருக்கலாம்.
எது எப்படியோ! போட்டி போட்டுக்கிட்டு எல்லா கடைகளிலும்  தள்ளுபடி விலையில் துணிமணி, வீட்டு உபயோகப் பொருட்கள்லாம் கிடைக்குது. அதைலாம் வாங்கி நம்ம மனசும், வீடும்  தீப ஒளிப்போல நிறையுது. சேமிப்பு பணம் கறைவதுப் போல நம் கவலைகளும், துக்கங்களும் கறைஞ்சா நல்லா இருக்கும்.

மனதில் மகிழ்ச்சியுடனும், அனைவரிடமும் அன்பையும், நட்பையும் பாராட்டி இருப்போமானால் தீபாவளி நாள் மட்டுமல்ல,  ஒவ்வொரு நாளுமே தீபாவளி போல குதூகலமாய்த்தான் இருக்கும்.
சகோ’ஸ் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

தீபாவளி அதுவுமா நம்ம வூட்டுக்கு வந்திருக்கீங்க. அதனால எல்லோரும் இனிப்பு எடுத்துக்கோங்க. பயப்படாதீங்க. நான் செய்யல.

எல்லோரும் எடுத்துக்கிட்டீங்களா?!  நான் தீபாவளி ஸ்வீட் தந்துட்டேன். இதேப்போல, சகோதரர்கள் அனைவரும் சகோதரிக்கு செய்ய வேண்டிய சீரை ஒழுங்கா செஞ்சுடனும். இது முக்கியமா, அமெரிக்கா, துபாய், வியட்நாம், சென்னை, கோவைல இருக்குற அண்ணன், தம்பிகள்லாம் நோட் பண்ணிக்கோங்கப்பா. சீர் வரலைன்னா நான் சண்டைக்கு இழுப்பேன்.