Friday, January 05, 2018

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்....

 விசேச நாட்களில் நிலைவாசல் தொடங்கி எல்லா வாசலுக்கும் மஞ்சள் பூசி குங்குமம் வைப்பாங்க. அது எதுக்குன்னா, கரையான் மாதிரியான பூச்சிகளால் வாசக்கால், கதவுலாம் அரிச்சுடக்கூடாதுன்னு. பெரியம்மை, சின்னம்மை மாதிரியான அம்மை கண்டவங்களை வேப்பிலை படுக்கையில் படுக்க வைப்பாங்க. இது எதுக்குன்னா, வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. அம்மை நோய் கண்டபோது கூழ் காய்ச்சு ஊத்துவாங்க. அம்மை நோய் வர முதல் காரணம் உடல் சூடு. அதை தணிக்கதான் கூழ், மோர், சின்ன வெங்காயம்ன்னு சாமிக்கு படைச்சு குடிக்க கொடுப்பாங்க. அதுமாதிரி, நம் முன்னோர்கள் அன்றாடம் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிச்ச ஒவ்வொரு விசயத்துக்கு பின்னும்   ஒவ்வொரு அர்த்தம் இருக்கு.  சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மற(றை)ந்துப் போயின.   மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும் நம்ம பொண்ணுங்க இன்னும் ஒதுக்கல. அறிவியல் காரணம் புரிஞ்சு செய்யுறாங்களோ இல்லியோ! ஆனா, வீடு அழகா இருக்கவாவது விதம் விதமா போடுதுங்க. ஆனா புள்ளி வச்சு கோலம் போடாம ரங்கோலின்னு கிறுக்கி வைக்குதுங்க.  எது எப்பையோ கோலம் போடுதுங்களா?! அதுவரைக்கும் சந்தோசம்.  கோலம் போடுறதால பலவித நன்மைகள் உண்டாகும். அதேநேரத்தில் கோலம் சிலரது வாழ்க்கையையே புரட்டிப்போடும். கோலத்தால் தீமையா?! எப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. கடைசில சொல்றேன்.


எல்லா நாட்களிலும்  எல்லா கோலத்தையும் போட்டுடக்கூடாது. பிறந்த குழந்தையை தொட்டில்ல போடுற அன்னிக்கும், முதன்முதல்ல வீட்டுக்கு கூப்பிட்டு வரும்போதும் தொட்டில் கோலம் போடனும்.  சுபிட்சத்தை வரவைக்க ஹிர்தய கோலம், கல்யாணம் செய்து வரும் புத்தம்புது தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம்ன்னு.. வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம்ன்னு விதம் விதமா இருக்கு. ஆனா, இறப்பு நடந்த வீடு, திவசம், அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் இடக்கூடாது.


கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை. தெய்வீக சக்தியை வரவைக்கும் யந்திரமுமாகும். யந்திரத்துக்கு அடிப்படை உருவம் முக்கோணம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அதுதான் யந்திரமாகும். அதுமாதிரி சரியான அளவில் உருவங்கள் ஒன்றிணையும் கோலமும் யந்திரத்துக்கு ஒப்பானது.   அதனாலேதான், கோலங்கள் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது. மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதும் அவசியம்ன்னு நம் முன்னோர்கள் சொல்வர். அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழுமாம். மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போது பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதுலாம் கோலம் கலையாமல் இருக்க உதவுது.  அதேநேரம், சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவச் செய்யுது. இதனால், உடலில் ரத்த ஓட்டம் சீராகுது. மேலும் அந்நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாம ஓரளவுக்கு சுத்தமான காத்து சுவாசிக்க கிடைக்கின்றது. இது நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பா வச்சிருக்க உதவுது.  குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுது.
புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுது. நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகும். மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. இதனாலதான் சாகும்வரைகூட சில அந்தக் காலத்து பாட்டிங்க கன்ணாடி போட்டதில்ல.   
அரிசிமாவுக்கொண்டு கோலம் போடுவது எறும்பு மாதிரியான சிறு பூச்சிகளுக்கும், குருவி மாதிரியான சிறு பறவைகளுக்கும் உணவாகுது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.
கோலம் போடுறதால ஐந்து குண நலன் நமக்கு கைவரும். அவை..

நேர மேலாண்மை..
என்னதான் திட்டமிட்டிருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு குதிரை கொம்புதான். ஆனா, ஏதோ ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் எழுந்திருக்க தவறமாட்டோம். அந்தக் காரணம் கோலமாக அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கோலத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனத் திட்டமிடும் வழக்கம் நம் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும்.
2. படைப்பாற்றல்
கோலம் போடுறது என்ன கவிதையா இல்ல கதை எழுதுறதா இதுல படைப்பாற்றல் வெளிப்படன்னு   நினைக்கலாம். உண்மையில் அவற்றைப் போலவே ஒரு கலைதான் கோலம் போடுவதும். கோலப் புத்தகம் பார்த்து போடுவது, இணையதளங்கள் உதவியோடு சில நாட்களையே தள்ள முடியும். ஒரு கட்டத்தில் நாமே புதிதான கோலம் போட்டால் என்ன யோசனை வரும். அப்போது இதுவரை நாம் போட்டிருக்காத கோலம் என யோசிக்க தொடங்கும்போது, உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளியையும் எழுப்பி விடுகிறீர்கள்.

3. சிக்கலைத் தீர்க்கும் பொறுமை ....
 32 புள்ளிகள் வைத்து, அதனையொட்டி நேர்புள்ளி, ஊடு புள்ளிகள் வைத்து முடிப்பதற்குள்ளேயே முக்கால் மணி நேரமாகியிருக்கும். அதற்கு அடுத்து, கவனமாக பூக்கோலம் அல்லது சிக்கு கோலமாக போடுவோம். அதற்கு முக்கால் மணிநேரம். இந்த ஒன்றரை மணிநேரத்தில் கவனமும் நிதானமும் இருந்தால் மட்டுமே உங்கள் மனதில் இருக்கும் கோலம் வாசலுக்கு வரும். இதுவே தினசரி செய்யும்போது அந்த கவனமும் நிதானமும் உங்களின் இயல்பு குணமாக மாறிவிடும். இது இரண்டும் இருந்தாலே எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்து விடலாம்.
முடிவெடுக்கும் திறன்...
இன்று இந்த பூக்கோலமா?! சிக்கு கோலமா என்ற முடிவு எடுக்கிற திறனைச் சொல்லலை. சிறப்புத் தினங்களுக்கு ரங்கோலி ஸ்டைலில் புதிதாக ஏதேனும் முடிவு செய்வோம். அதற்கு எந்த டிஸைன் எல்லோருக்கும் பிடிக்கனும், என்ன கலர் கொடுக்கலாம்.. அது பொருத்தமா இருக்குமான்னு முடிவு செய்யுறோமில்லையா அதைதான் சொல்றேன்.  இது உங்களுக்கு ரசனையை மட்டும் கொடுக்கலை. சரியான இடத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் திறனையும் கொடுக்கும். அது நீங்கள் ஜவுளி கடையில் புடவை தேர்வு செய்வதிலிருந்து அலுவலகத்தில் எடுக்கும் முடிவு வரை நீளும்.
5. போட்டி மனப்பான்மை
'நான் யாருக்கும் போட்டி இல்லை.. எனக்கு யாரும் போட்டி இல்லன்னு சினிமா டயலாக்குலாம் சொல்லாம நான் எந்த போட்டியை சொல்றேன்னு புரிஞ்சுக்கனும். ஆரோக்கியமான போட்டி சொல்றேன். 
நாம தினமும் கோலம் போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளிலும் கோலம் போட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு நல்ல பழக்கத்தை அவர்களும் தொடங்குவது நல்லதுதான். அவர்களைவிட சிறப்பான கோலம் போடும் மனநிலையை உங்களுக்கு தரும். இது, வேலை செய்யும் இடங்களிலும் பிரதிபலிக்கும். உங்களுக்கு பதவி உயர்வையும் பெற்றுத் தரும்
கோலம் தமிழ்நாட்டில்தான் கோலம் ஃபேமஸ், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இலங்கைலலாம் கோலமாவு கொண்டு கோலம் போடுவாங்க. கேரளாவில் பூக்களாலும், வட இந்தியாவில் கலர்பொடியைக் கொண்டும் கோலம் போடுவாங்க. இப்ப காலமாற்றத்தில் எல்லா இடத்திலும் எல்லா கோலமும் போடுறாங்க. முதன் முதலில் கோலப்புத்தகம் 1884ஆம் ஆண்டில் வெளிவந்தது.  
கோலமிடுவது தெய்வீக சக்தியையும், மங்கலத்தையும் நம் வீட்டுக்கு வரவைக்கும். அதனால, அந்த கோலத்தை போடுறதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளையில் போடனும். புது தண்ணி கொண்டு வாசல் தெளிக்கனும். முன்வாசலில் தெளித்த நீரில் மிச்சம் கொண்டு பின்வாசலிலும் தெளிக்கனும். கோலம் போட்டு முடிக்கும்போது தெற்கு பார்த்த மாதிரி முடியக்கூடாது. கோலம் போட்டு முடியும் திசையை வைத்து கூட அன்றைய பொழுது எப்படி போகும்ன்னு சொல்வாங்க.  கோலத்தில் செம்மண் காவி இழுப்பது மும்மூர்த்திகளை குறிக்குது. கோலத்தில் பூசணி, செம்பருத்தி பூ வைப்பது செல்வச்செழிப்பை உண்டாக்கும். செருப்பணிந்துக்கொண்டு கோலமிடக்கூடாது. ஆட்காட்டி விரலை நீக்கி பெருவிரல் நடுவிரல், மோதிரவிரல் கொண்டே கோலமிடனும்.  
ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை அல்லது சூரியன் கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம், செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் , வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம்,  சனிக்கிழமை பவளமல்லி கோலம், பவுர்ணமி அன்னிக்கு தாமரைப்பூ கோலம்,   வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை வீட்டுக்குள் விடாது. அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது. இடது கையால் கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்னுதான் கோலம் போடனும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போடனும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பத்த வைக்கனும். ஒருவேளை சமைக்குறது கணவனா இருந்தா என்ன பண்ணுறதுன்னு கேட்டா எங்கிட்ட நோ ஆன்சர். 

தமிழ் எழுத்துகள் தோன்றுவதற்கு முன்பே கோலமிடும் பழக்கம் உண்டாகிட்டுதாம். ஆரம்பத்தில் வெறும் கோடுகளைக்கொண்டுதான் கோலம் இருந்ததாம். கோலமிடப் பழகியபின் பூ, காய், கனி, பறவைன்னு உருவங்கள் வர ஆரம்பிச்சதாம். போருக்கு சென்று வந்த அரசர்களை ஆரத்தி கொண்டு வரவேற்று, அந்த ஆரத்தியை கோலத்தின் நடுவில் கொட்டியதாக சான்றுகள் உண்டு.  இனியும் நம்ம வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போடலாம். இரும்மா ராஜி! பொசுக்குன்னு ஓடாத. கோலம் வாழ்க்கையை புரட்டிப்போடனும்ன்னு சொன்னியே! அது எப்படின்னு சொல்லிட்டு போ, எங்க மண்டைய காய வைக்காதன்னு கேக்குறவங்களுக்கு...
அதிகாலையில் குளிச்சு முடிச்சு ஃப்ரெஷ்சா அழகா வரும் பெண்களை சைட்டடிக்க ஆண்கள் வருவாங்க. அவங்க அழகுல, சேட்டைல பொண்ணுங்க  மயங்கி  லவ்வாகி, வீட்டுக்கு தெரிஞ்சு வெட்டுக்குத்துன்னு போகுதுல்ல! அதைதான் சொன்னேன்.  அதனால, வெளில போனோமா! கோலம் போட்டமான்னு குனிஞ்ச தலை நிமிராம வீட்டுக்குள் வந்திடனும்..

 நன்றியுடன்,
ராஜி. 

Thursday, January 04, 2018

நள தமயந்தி காதல் கதை - தெரிந்த கதை தெரியாத உண்மை

டிசம்பர் 19ந்தேதி சனிப்பெயர்ச்சி வந்தாலும் வந்தது. சனிபகவான் பத்தி பலகதைகள், பல அனுமாங்கள், பல பரிகாரங்கள்னு தின, வார, மாத ஏடுகள் தொடங்கி தொலைக்காட்சி வரை அல்லோகலப்பட்டது. சனிபகவானை நினைச்சாலோ, அவர் பெயரை உச்சரிச்சாலோ நம்ம வீட்டுக்கு வந்திடுவார்ன்னு எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். ஆனா, சனிபகவானால் ஆட்கொள்ளப்பட்டு, பின்னாளில் அவனாலே விடுவிக்கப்பட்டு இழந்த நாடும் நகரம், மனைவின்னு சந்தோசமாய் வாழ்ந்த நள மகராஜன் கதையை படிச்சாலோ இல்ல கேட்டாலோ  சனியின் ஆதிக்கம் குறையும். அப்படி கேட்பவருக்கும், படிப்பவர்களுக்கும் அவர்கள் கேட்கும் வரத்தை கொடுப்பதாய் சனிபகவான் நள மகராஜனுக்கு வாக்கு கொடுத்திருக்கார்.  சனிபகவான், நளமகராஜனுக்கு அப்படியொரு வாக்களிக்க என்ன காரணம்ங்குறதைதான்  இன்னிக்கு பதிவில் பார்க்க போறோம்.
மகாபாரத்தின் வரும்  கிளைக்கதை கதைகளில்  நளன், தமயந்தியின் காதல் கதையும் ஒன்று. வடநாட்டில் நைஷதம் என்ற பெயரில், ஸ்ரீஹர்ஷர் என்பவரால் எழுதப்பட்டது இக்கதை. இங்க நம்மூர்ல தமிழில் புகழேந்திப் புலவரின் நளவெண்பாஎன்னும் நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேமாதிரி, வடமொழியிலிருந்த நைஷதம் நூலிலிருந்து அதிவீரராம பாண்டியர்நைடதம் என்ற பெயரில் மொழிப்பெயர்த்திருக்கிறார். எந்த மொழியினாலும் சரி, இந்த கதை சொல்லப்பட்டிருக்கும் விதமே அழகானது. ஒருவரையொருவர் காணாமல் காதலித்து, பல இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணம் செஞ்சிக்கிட்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செல்வச்செழிப்பையும் இழந்து, காட்டுக்குத் துரத்தப்பட்டு, கணவனும்மனைவியும் ஒருவரையொருவர் பிரிந்து, ஆளுக்கொரு திக்கு சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாமல் வாடி, பிள்ளைகளை நினைத்து உருகி, கட்டக்கடைசியில் சேர்ந்து, நாடு நகரத்தையும் பெற்று சந்தோசமாய் வாழ்ந்தாங்க.  ஆன்மீகம், சோகம், காதல், ஏக்கம், தவிப்புன்னு எல்லாத்தையும் சரிவர சேர்ந்த கதைதான் இந்த நளதமயந்தி கதை.
இந்த கதை நகரும் விதமே அலாதியானது. மஹாபாரத கதை நடந்துக்கிட்டிருந்த நேரம். சூதில் நாடு நகரம், தம்பி, மனைவியை இழந்து, பின்னர் 12 வருட வனவாசம், 1 வருட அஞ்சாத வாசம் செய்ய ஒப்புக்கொண்டு காட்டில் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு மகிழ்ச்சியோடு ஒற்றுமையாய் பாண்டவர்கள் வாழ்ந்து வந்த காலம். அந்த நேரத்தில் அங்கு வந்த பிருஹதஸ்வர் என்ற முனிவர், தருமனிடம், மகனே!   இந்நிலையை கண்டு வருந்தாதே. இதைவிட கொடுமையான நிலையை அயோத்யா மன்னன் நளன் அடைந்திருக்கிறான்.  அவனுடைய கதையை கேட்டால் நீ பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமில்லை எனக்கூறி நளதமயந்தி கதையை சொல்ல ஆரம்பித்தார்.  

 முன்னொரு காலத்தில் அயோத்தியை ஆண்ட நிஷாத மன்னனுக்கு நளன் மற்றும் குவரா என்ற இருமகன்கள் இருந்தனர்.  இதேப்போல், விதர்ப்ப நாட்டை பீமன் என்றொரு அரசன் சீரும் சிறப்புமாக ஆண்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே ஒரு ஏக்கம் இருந்தது. அது என்னன்னா, அவனுக்கு பிள்ளை இல்லை.  இதனால், அவன் மட்டுமல்லாது, அவனோடு சேர்ந்து அவன் மனைவியும், அவன் நாட்டு மக்களும் மனம் நொந்திருந்தனர்.  இந்த சமயத்தில்தான் அவனைக்காண தமனர் என்ற பிரம்ம ரிஷி வந்தார். அவரிடம் தன் மனக்குறையை கூறினான்.  முனிவரும் அவனுக்கு அழகான ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறப்பார்கள் என மன்னனுக்கு வரமளித்தார். சிலகாலம் சென்றதும், பீமமன்னனுக்கு தமயந்தி, தமன், தாந்தன் மற்றும் தமனன் என நான்கு குழந்தைகள் பிறந்தனர். நால்வரும் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறப்புடன் வளர்ந்து வந்தனர். 
இதே நேரத்தில்,  நளனும் பூவுலகில் இருக்கும் மன்மதனோ என்று கூறும் அளவுக்கு அழகானவனாகவும், கல்வி, கேள்வி, சண்டை பயிற்சிகள் உள்ளிட்ட சகலகலைகளிலும்  வித்தகனாக திகழ்ந்தான். தமயந்தியும், தேவலோக பெண்ணைப்போல அழகில் ஈடு இணையில்லாதவளாக வளர்ந்தாள். விதிவசத்தால், இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் என இருவரும் அறிமுகமாகி,   இருவரும் நேரில் பார்க்காமலே தங்களுக்குள் அன்பை வளர்த்துக்கொண்டனர். இந்த சமயத்தில் நளன் தன்னுடைய அந்தப்புரத்தில் இருந்த அழகான அன்னப்பறவை ஒன்றினை தமயந்தியிடம் தூதாக அனுப்பினான். அன்னமும் நளனின் காதலை சுமந்து சென்றது. தமயந்தி அன்னத்திடம் தன்னுடைய காதலையும் சொல்லி நளனுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை சொல் அன்னமே எனத் திருப்பி தூது அனுப்பினாள். இதே நேரத்தில் பருவ வயதையடைந்த தன் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க ஆசைப்பட்டார் தமயந்தியின் தந்தை. மகளுக்குண்டான சிறந்த வரனை அவளே தேர்ந்தெடுக்க வேண்டி, சுயவரத்துக்கு நாள் குறித்து,  எல்லா  தேசத்திற்கும் தூது அனுப்பினார். எட்டு திக்குமிலிருந்து மன்னர்கள் விதர்ப்ப நாட்டிற்கு சுயம்வரத்திக்காக சென்று கொண்டிருந்த வேளையில், நாரதர், பூலோகத்தில் உள்ள தமயந்தியின் சிறப்புகளையும் அவளுக்கு நடக்கவிருக்கும் சுயம்வரத்தையும் பற்றி  தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் .
தமயந்தியின் அழகினை கேள்வியுற்றான்   இந்திரன். இந்திரன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக். எத்தனை பட்டும் அவனுக்கு புத்தி வந்ததில்லை. அதனால் தமயந்தியை அடையும் நோக்கில், அவனும்   சுயம்வரத்திற்கு புறப்பட்டான். அங்கே நளனும் சுயம்வரத்தில் கலந்துகொள்ள தேரில் ஏறி விதர்ப்ப நாட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான். நளன்மீது தமயந்தி காதல் கொண்டிருப்பதை அறிந்த இந்திரனின் குறுக்குபுத்தி வேலை செய்ய, நளனைப்போல உருமாறி சுயம்வரம் நடக்கும் இடத்துக்கு  சென்றான். சுயம்வர ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடந்து கொண்டிருந்தது. எல்லா மன்னர்களும் சபைகளில் நிரம்பி வழிந்தனர்.  தமயந்தியின் அழகைக் கண்டு தேவர்களும் வியந்து பார்த்தனர். நளனும் அங்கே வருகை புரிந்திருந்தான். நளனின் உருவந்தை அன்னத்தின் துணையுடன் கேட்டறிந்த தமயந்தி சுயம்வர மாலையோடு சபைக்குள் நுழைந்தாள். நளனை அவள் கண்கள் தேடின.  அங்கே நளன்  அழகே வடிவாக மாறனோ இல்லை பூவுலகிற்கு வந்திருக்கும் கந்தர்வனோ என்று சொல்லுமளவு அழகே வடிவாக கம்பீரமாக இருந்தான். ஆனால், அவனருகே அவனைப்போல் தோற்றம் கொண்ட ஐந்துபேர் இருப்பதைக்கண்டு தமயந்தி குழம்பி போனாள். உண்மைக்காதல் என்றும் தோற்காது அல்லவா?! தன்னுடைய சமயோசித புத்தியால் சிந்திக்க தொடங்கினாள் ...
!கருணையே வடிவான அந்த மகேஸ்வரனை வேண்டினாள். இறைவா என்னுடைய காதலுக்கும், உண்மையான அன்பிற்கும் எந்தவித களங்கமும் வராமல் காத்தருள்க என வேண்டினாள். அப்பொழுதுதான் அந்த மகேஸ்வரன் அவளுடைய பிரார்த்தனையை எண்ணி, மனிதருக்கும் தேவருக்கும் உள்ள . துக்குணங்களை ஆராந்து பார் என தமயந்தியின் மனதில் உதிக்க செய்தார் . தமயந்தியும் சுதாரித்துக்கொண்டு மணமகனை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் செய்து கொண்டே வந்தாள். நேரம் செல்ல செல்ல நளன் கழுத்தில் சூடியிருந்த பூமாலை வாடத்தொடங்கியது. அதேபோல் தேர் ஏறி வந்ததால் சிறிது களைப்புற்றவனாக காணப்பட்டான். ஆனால் தேவர்கள் அனைவரும் ,வாடாத மலர்மாலைகளுடன் ,மூடாத இமைகளுடன் ,சிறிதுகூட பொலிவு கலையாமல் இருந்தனர் .தமயந்தி இதைப் புரிந்துக்கொண்டு, மனிதஉருவில் இருக்கும் தேவர்களை கண்டறிந்தாள். சரியாக நளனின் கழுத்தில் மாலை அணிவித்தாள். தேவர்களும் , இந்திரனும் சபையில் நாணி நின்றனர்.
இருந்தாலும் ஒருவாறாக மனதை தேற்றிக்கொண்டு அவர்கள் நளனை பாராட்டி பல வரங்களை கொடுத்தனர். விரும்பிய நேரத்தில் தங்களை காணவும்,யமன் சமயற்கலையின் சூத்திரங்களையும் வரமாக கொடுத்து அவரவர் அவரவர் உலகங்களுக்கு திரும்பினார்கள். மற்ற மன்னர்களும் மணமக்களை வாழ்த்தி தங்கள் ராஜ்ஜியம் திரும்பினர்.  நளனும் தமயந்தியுடன் தன்னுடைய நாட்டிற்கு திரும்பினான். நாட்டுமக்களையும் பாதுகாத்து நீதிதவறாமல் அரசாண்டான். குடிமக்களும் நளனுடைய ஆட்சியில் எந்த மனக்குறையும் இன்றி சந்தோசமாக வாழ்ந்தனர். நளனும் தன்னுடைய காதல் மனைவியுடன் நந்தவனம், .அருவி , வனங்கள் என சென்று  காதல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான் . கதை இத்தோடு முடிஞ்சிருந்தா நளவெண்பா வந்திருக்காது.  சனிபகவான் வரமும் நளனுக்கு கிடைச்சிருக்காது.
இப்படி சந்தோசமா வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்த வேளையில், சுயம்வரத்தில் தோற்ற சனிபகவானுக்கு நளனின்மேல் தீராத பகை இருந்தது. அவனுக்கு நளனை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் அரித்துகொண்டிருந்தது.  ஆனால்  சாஸ்திரங்கள்  முழுவதும் கற்றறிந்த நளன் சிறு தவறு கூட இல்லாமல் அரசாட்சி புரிந்துவந்தான். இதனால் சனிபகவான், நளனின்  அரண்மனையிலேயே தங்கி தக்க  சந்தர்பத்திற்க்காக காத்துகொண்டு இருந்தான். ஒருமுறை நளன் மாலையில் சிறுநீர்கழித்து விட்டு கால்களை முழுமையாக அலம்பாமல் கை மற்றும் முன்கால்களை  மட்டும் நனைத்து சந்தியாவந்தனம் செய்து விட்டான். அந்த தவறுக்காகவே காத்திருந்த சனிபகவான், ஈரம்படாத கால் பகுதி வழியாக நளனை பிடித்தான். இந்த சூழ்நிலையில் நளன் புஷ்காரன் என்பவனுடன் சூதாட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அவனை பீடித்திருந்த சனிபகவான், நளனை தடுமாற செய்து அவனை சூதாட்டத்தில் மூழ்க வைத்து அவனை அனைத்தையும் இழக்க செய்தான்.
நிலைமை மோசமானதைக் கண்ட தமயந்தி, தன்னுடைய பணிப்பெண் பிருகத்சேனை மற்றும் தேரோட்டி  வார்ஷ்ணேயனை  அழைத்து தன்னுடைய  மகன் இந்திரேசனையும்,   மகள் இந்திரேசைனையயும் அவர்களிடம் ஒப்புவித்து, தன் தந்தையிடம் கொண்டுவிட்டு அவர்களை பாதுகாப்பாக வளர்க்க சொல் என கூறி வழியனுப்பி, கணவனின் துயரத்தில் பங்கெடுக்க ஆயத்தமானாள். எல்லாவற்றையும் இழந்த நளன் கடைசியில் வைப்பதற்கு பொருள் ஒன்றும் இல்லாததால், உன் மனைவி தமயந்தியை வைத்து சூதாடு என புஷ்காரன் எள்ளி நகையாடினான். நிலைமை விபரீதமாவதை  உணர்ந்த நளன் தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் துறந்து அறையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரண்மனையில் இருந்து வெளியேறினான். உடனே தமயந்தியும், தன்னுடைய ஆபரணங்களையும் கழற்றி வைத்துவிட்டு நளனுடன் சேர்ந்து  அரண்மனையை விட்டு வெளியேறினாள். நாட்டு மக்களும் நளனுக்கு வேலையோ அல்லது பொருள் உதவியோ செய்ய  புஷ்காரனுக்கு அஞ்சினர்.   

நகரத்தைவிட்டு வெகுதூரம் வந்த நளன், பசியின் கொடுமையால் காட்டிலிருக்கும் பழங்களையும் கிழங்குகளையும் உண்ண தொடங்கினான். இப்படி மூன்று நாட்கள் பசியும், பட்டினியுமாக நளனுடன் சேர்ந்து தமயந்தியும் கஷ்டப்பட்டாள். அவள் கஷ்டப்படுவதை கண்ட நளன், தமயந்தியை நோக்கி, நீ உன்னுடைய தந்தையின் நாட்டிற்கு சென்று தங்கி இரு. நாடு நகரத்தை மீட்டப்பிறகு திரும்பி வா. அதுவரை என்னுடன் இருந்து கஷ்டப்படாதே என கூறினான். இதைக்கேட்ட தமயந்தி, அன்பே!  உங்களை எப்படி இந்த கானகத்தில் தனியாக விட்டுச்செல்வேன்?! நீங்கள் படும் துயரத்திற்கு மருந்தாக உங்களுக்கு ஆறுதலாக உங்களுடனேயே இருப்பேன் என அவனைவிட்டு நீங்காமல் இருந்தாள். அரண்மனையில் பஞ்சு மெத்தையில் பட்டு பீதாம்பரத்தில் உறங்கியவர்கள் இன்று கல்லிலும் பாறை இடுக்குகளிலும் தங்கி  சொல்ல முடியாத துயரத்துடன் வாழ்ந்து வந்தனர். நளனின் துயரத்தைக் கண்டும் தன்னுடைய தந்தை நாட்டிற்கு செல்வோம் என நளனிடம் வேண்டினாள். எனக்கு அங்கு வருவதால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நாடிழந்த நிலையில் நான் அங்கு வர விரும்பவில்லை எனக்கூறினான் .
இப்படியாக அலைந்து திரிந்து, காட்டிலிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தைக் கண்டு அங்கு சென்று தங்கினர். அழுக்கு ஆடைகளை உடுத்தியிருந்த அவர்கள் மண் தரையில் புழுதிகளுக்கிடையே படுத்து உறங்கினர். அலைந்து திரிந்தமையாலும், பசியின் கொடுமையாலும்  தமயந்தி உடனே உறங்கிவிட்டாள். ஆனால் நளனோ உறங்காமல், அரண்மனையில் பிறந்து வளர்ந்து அனைத்து நல்ல குணங்களும் கொண்ட பத்தினி பெண்ணான இவள் எனக்காக பசியும் பட்டினியுமாய், புழுதி  தரையிலும் படுத்து, அழுக்கடைந்த ஆடைகளுடனும் துயரப்படுகிறாள். நான் இவளுடன் இருக்கும்வரை என்னைவிட்டு போகமாட்டாள். நான் இவளை இங்கேயே விட்டுச்சென்றால் அவளுடைய தந்தையிடம்  செல்ல வாய்ப்பிருக்கிறது என பலவாறு எண்ணி தூங்காமல் இருந்தான். கடைசியில், அவளை பிரிவது என்ற முடிவுக்கு வந்தான். சரி, நாம் இவளை இங்கே தனியாக விட்டுச் சென்றால், எவரேனும் தீங்கு செய்துவிடுவார்கள் என்ற பயம் இல்லாமல், பத்தினி பெண்களுக்கு அந்த பரமேஸ்வரனே காப்பு. அவனை மீறி யாரும் ஒரு தீங்கும் செய்து விடமுடியாது என முடிவுக்குவந்தான். போர்த்திக்கொள்ள  ஒரு துணிகூட இல்லாமல் அழுக்கு துணியுடன் தரையில் உறங்கும் இவளை, பாம்புகளும் கொடிய மிருகங்களும் நிறைந்த இந்த கானகத்தில் இருந்து எப்படி தந்தையிடம்  செல்வாள் என மண்டபத்தை விட்டு போவதும், பிறகு வந்து பார்ப்பதுமாக இருந்தான்.  சனிபகவான்,  அவன் உடம்பில் ஏறினாலும், காதல் அவனுள்ளே வேலைசெய்ய ஆரம்பித்தது.  அவளின் அறமே அவளைக்காக்கும். தேவாதி தேவர்களே! என் மனைவியை காத்து அருளுங்கள் என தூரத்தில் இருந்து புலம்பிக்கொண்டு அவளைவிட்டு நீங்கவும் முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் .
மனத்தால் அழுத நளன் அழுதுகொண்டே கடைசியில் அவளைவிட்டு நீங்கினான். பித்துபிடித்தவன்போல் அவளை  எண்ணியே கால்போன போக்கிலே சித்தம் கலங்கியவாறு நடந்தான். உறக்கம் விழித்த தமயந்தி அருகில் கைவைத்து தொட்டுப்பார்க்கும்போது நளனை காணவில்லை. பயத்தால் அலறினாள். என்னைவிட்டு போகமாட்டாய் . என் அன்பே ,புதருக்கு பின்னால் ஒளிந்து இருந்தால் என்  முன்னே வந்துவிடு.பசியால் இருக்கும்போது என்னைவிட்டு உன்னால் தனியாக இருக்கமுடியுமா?! அப்பொழுதும் என்னை அல்லவா நினைத்து இருப்பாய்! நீ எங்கே இருக்கிறாய் என பயத்தில் கண்ணுக்கு தெரிந்த திசையை நோக்கி ஓடி அவனை தேடினாள். என்  தலைவா! அரசே, அன்பே எங்கே இருக்கிறாய் என இறை தேடி மிருகங்கள் அலையும் அந்த காட்டுக்குள் கத்திகொண்டே நளனை தேடி ஓடினாள். அப்படி ஓடிவரும் போது, அங்கிருந்த ஒரு பெரிய மலைப்பாம்பு அவளை பிடித்து விழுங்க ஆரம்பித்தது. அப்பொழுதும் தனக்காக அழாமல், நீ பசித்திருக்கும் வேளையில் உனக்கு யார்  ஆதரவாக பேசுவார்கள்?! கள்ளமற்ற மனதை உடைய நீ எங்கு சென்று கஷ்டப்படுகிறாய் என  நளனுக்காக வருந்தினாள். பாம்பு  விழுங்க ஆரம்பித்ததும் பலவாறு கதறி நளனை அழைத்தாள் .

அவளுடைய சப்தத்தை கேட்டு, அங்கே வந்த வேடனொருவன் பாம்பை கொன்று அவளைமீட்டான். தமயந்தியின் அழகும், அவளுடைய கண்களும் உடல் வனப்பையும் கண்ட வேடன் அவள்மேல் காமமுற்றான்.  அவளை நெருங்கி தீண்டினான். இதைக்கண்டு கோபமுற்ற தமயந்தி, ஒ ..இறைவனே என் மன்னனைத்தவிர வேறு யாரையும் மனத்தால் கூட நினைத்தது இல்லை என்னை தீண்டுவது என்றால் அது என் கணவனாக மட்டுமே இருக்கவேண்டும். அவரை அல்லாது கெட்ட நோக்குடன் காமத்தீ கொண்டு நெருங்கும் இவனை, என்னுடைய பவித்திரம் என்றும் தீ இவனை சுட்டெரித்து இவனுடைய உயிரை எடுக்கட்டும் என்றாள், மறுகணமே வேடன், பத்தினி பெண்ணின் வார்த்தைகளுக்கு இருந்த வன்மையால் உயிரற்று நிலத்தில் வீழ்ந்தான். அந்த காட்டிற்குள் இருந்த மிருகங்களை கண்டு அஞ்சாமல் நளனை மட்டும் தேடிக்கொண்டே இருந்தாள். அப்பொழுது அங்கே சில குடில்களை இருப்பதைக்கண்டாள். பின்னர் அங்கிருந்த ஒரு அசோக மரத்தினடியில் அமர்ந்திருந்தாள் . பின் அங்கு வந்த வணிகர் கூட்டத்துடன் பக்கத்து நாட்டிற்கு சென்று அங்குள்ள ஒரு பெண்ணின் ஆதரவுடன் அங்கே வசிக்கலானாள்  .
நளன் குமுறிய மனதோடு காட்டில் கால்போன போக்கில் சென்று கொண்டு இருந்தான். அப்பொழுது அங்கே ஒரு இடத்தில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்தது. அப்பொழுது, அந்த தீயின் நடுவே இருந்து ஒரு அபயக்குரல் கேட்டது. நீதிதவறாத நள மன்னா! ,என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்று என குரல் கேட்டது. நளனும்  குரல்வந்த திசையை நோக்கி சென்றான். அங்கே கொடியவிஷம் .கொண்ட பாம்பு ஒன்று கதறியது. ஏ அரசனே! ,தவத்தில் சிறந்த நாரத முனிவரை, நான் அவமதித்ததால் அவர் என்னை இந்த தீயில் எரிந்து கொண்டிருக்குமாறு சாபம் கொடுத்துவிட்டார் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கேட்டபோது, இப்பூலகில் நீதிதவறாத நளமன்னன் வந்து உன்னை தீண்டும்போதுதான் உனக்கு விமோசனம் என்றார். ஆகையால் உன்னை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றி வெளியில் கொண்டுவிடு என கதறியது அந்த கொடிய நாகம். எல்லோரிடமும் இரக்கம் கொண்ட நளன், அந்த நாகத்தை தீயிலிருந்து எடுத்து தரையில் விட்டான் அப்பொழுது ,பாம்புக்கு பால் வார்த்தால், பால் விட்டவனையே அது கடிக்கும் என்பது போல அந்த நாகம் நளனை தீண்டியது .
உன் பேச்சை கேட்டு உனக்கு உதவியது என் தவறுதான். இருந்தாலும் ஆபத்திலிருப்பவரை காப்பது ஒரு மன்னனின் கடமை. அது நிறைவேற்றுவதில் என் உயிர் போவதில் எனக்கு மகிழ்ச்சியே! என நளன் கூறினான். அதற்கு  அந்த நாகம்,   மன்னா! எனது கொடிய விஷத்தால் உன்னுள் வாசம் செய்யும் சனிபகவான் பலவித தொல்லைகளை அனுபவிப்பான். அந்த தொல்லைகளை அனுபவிக்கவே அவனுக்கு சரியாய் இருக்கும். அவனால் உனக்கு எந்த தொல்லையும் இருக்காது எனக்கூறி.. மேலும் மக்கள் யாரும் உன்னை அடையாளம் காணாதவாறு உன் உடல் கொடூரமான .தோற்றத்தை அடையும் என்றும், மேலும் நீ அயோத்யா ராஜ்யத்தை அடைந்து, இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த அரசனான சூதாட்டத்தில் நிபுணன் ரிதுபர்ணனிடம் செல். நீ ஒரு தேரோட்டி உனது பெயர் பாஹூக்கா  என்று சொல்லி அறிமுகப்படுத்து. குதிரைகளை பற்றிய அபார ஞானம் கொண்ட நீ அவனிடம் தேரோட்டியாக சேர்ந்துவிடு. அவனுக்கு அஷ்வா ஹிரித்யாவின் நுட்பங்களை அவருக்கு கற்றுக் கொடு. சூதாடவும் செய். உன் சூதாட்ட திறமையைக் கண்டு அவன் உனக்கு நண்பனாவான்.அந்த பகடைமூலமாகவே உன் புகழ் உயர்ந்து, நீ இழந்த வாழ்க்கையையும், உன் மனைவி மக்களையும் திரும்ப அடைவாய் என்றுக்கூறி, உன்னை சார்ந்தவர்கள் உன்னை அடையாளம் காணவேண்டும் எனில் இந்த ஆடையை அணிந்து கொண்டால் உன் சுய உருவத்தை அடைவாய் என கூறி இரண்டு ஆடைகளை கொடுத்து மறைந்தது .

நளனும் அந்த நாகம் கூறியபடி,  அயோத்யா சென்று ரிதுபர்னாவிடம் நட்பு கொண்டு அங்கு வாசிக்கலானான். இந்த நிலையில் தமயந்தி என்ன ஆனாள்  என பார்க்கலாம்.  தமயந்தியின் தந்தை பீம அரசன் நாலா புறமும் ஆட்களை அனுப்பி தேடினான். கடைசியில் அவள் அச்சல்புரா ராஜ்யத்தில் இருப்பதைக்கண்ட வீரர்கள், அவளை தங்கள் நாட்டுக்கு கூட்டி சென்றனர் அங்கே தந்ததையை கண்ட தமயந்தி அழுது அவருடன் வசிக்கலானாள்.   நளனை குறித்த சிந்தனையில் எப்பொழுதும் இருந்தாள். மன்னனும் மிகவும் கவலை கொண்டவனாக, நளனைத் தேட , எல்லா ராஜ்யத்திற்கும் ஆட்களை அனுப்பினான். ஆனால், தமயந்தி நளனைக் காண ஒரு உபாயம் சொன்னாள். எல்லா ராஜ்யத்திற்கும் சென்று, மனைவியை, பாதி ஆடையுடனும்,  பசிபட்டினியாக தனிமையில் அலையவிட்டவனே! அவளுக்கு எவ்வளவு தீங்கு வந்திருக்கும்?! அவளைக் காக்கும் கடமையில் இருந்து தவறியது ஏனோ?!  தனிமையால் விட்டு சென்றது முறையாகுமா?! என செல்லுமிடமெல்லாம் கேளுங்கள். இதற்கு சரியான பதில் யார்  சொல்கிறார்கள் எனக் கேட்டு என்னிடம் சொல்லுங்கள் எனக்கூறி வீரர்களை அனுப்பினாள். அனைவரும் எட்டு திக்கு சென்றும், எதிர்படுபவர்களிடமெல்லாம் இக்கேள்வியை கேட்டும் யாரும் சரியான பதிலை சொல்லவில்லை .
அதேசமயம்  பர்ணாதன் என்ற அந்தணன் தமயந்திக்கு ஒரு சேதி அனுப்பினான். பெண்கள் குல தேவியே! அயோத்தி நகரை ஆண்டுவரும் பங்காசூரனின் மகன் ரிதுபர்ணா ஆட்சி செய்துவரும் நாட்டில் எல்லோர் முன்னும் சென்று நீங்கள் கூறியதை கூறினேன். யாரும் இதற்கு பதில் சொல்லவில்லை. அதேசமயம், அவனிடம் தேரோட்டியாக இருக்கும் குதிரையை பராமரிக்கும் பாஹூக்கா என்பவன் மட்டும் இதற்கு பதில் கூறினான். குட்டைகைகளுடன், கூன்விழுந்து காண சகியாத அவன்,, "எவ்வுளவு துன்பம் வந்தாலும்,  ,கற்புக்கரசிகளை அந்த மகேஸ்வரன் காப்பதோடு, அவர்களின் கற்பு தீ அவர்களையே பாதுகாக்கும். பசியால் வாடி வதங்கி, மண்தரையில், அழுக்கு ஆடைகளுடன் உறங்கும் தன்  மனைவியை காண சகியாத தலைவன் இறுதி முடிவாகவே அவளைவிட்டு விலகி செல்லும் முடிவினை எடுத்தான். இல்லையெனில் அவளும் அவனைவிட்டு நீங்கி இருக்க மாட்டான். அறம் சார்ந்த பெண்டிரை அரவம் கூட தீண்ட முடியாது. அது அவர்களை பாதுகாக்கும் அவளும் தன் இடம் சேர்வாள் என்றுதான், அந்த தலைவன் விட்டு சென்றான்.  அவன் எவ்வளவு கனத்த இதயத்துடன் இன்றும் வருத்தத்தோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.  தன் காதல் மனைவியை எண்ணி...என அவன் பதிலுரைத்தான்  என தமயந்தியிடம் கூறினார் 

இந்த பதிலை கேட்ட தமயந்தி, மிகவும் சந்தோஷமுற்றாள். நளனை கண்டுப்பிடித்த ஆனந்தத்தில் இறைவனுக்கு நன்றி கூறினாள் . அவர்கள் கூறிய தோற்றத்தை, குறித்து எண்ணியவள்  , இதில் ஏதோ சூது இருக்கிறது என எண்ணி ,ஒரு திட்டம் வகுக்கலானாள். உடனே தனது தூதுவனை அயோத்தி ராஜ்யத்திற்கு அனுப்பினாள். பீமமன்னனின் மகளான தமயந்திக்கு இரண்டாவதாக சுயம்வரம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். நளன் ,இருக்கிறானா?! இல்லையா?! என தெரியாததால் அவளுக்கு இந்த திருமண எற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சுயம்வரம் என்ற செய்தியை அயோத்யஅ நாட்டிற்கு கொண்டு செல்லுங்கள் என பணித்தாள். காலம் குறைவாக இருப்பதாலும், ஏற்கனவே தமயந்தியின் அழகை பற்றி கேள்விப்பட்ட மன்னன்  ரிதுபர்ணன் விரைந்து செல்வதற்காக தன்னுடைய தேரோட்டி  பாஹூக்கா என்னும் பெயரில் இருக்கும் நளனை  கூட்டிக்கொண்டு சுயம்வரத்திற்கு விரைந்தான் .
நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், காற்றைவிட வேகமாக சென்றான் அவனது வேகத்தைப்பார்த்த அயயோத்யா மன்னன் அந்த குதிரை செலுத்தும் கலையை முழுவதுமாக உபதேசிக்க கேட்டான். அதற்கு பதிலாக தான் சிறந்து விளங்கு, ம் சூதாட்ட கலையை உனக்கு உபதேசிக்கிறேன் என கூறினான் . இப்படி பேசியவாறு வேகமாக தேரை செலுத்தி தமயந்தியின் நாட்டிற்கு சென்றனர் . அந்த தேரின் ஒலி நளன் ஓட்டும் போது வரும் ஒலியை போன்று இருந்தது. ஆனால் நளனை காணவில்லை என்பதால் தனது தோழியான கேசினி என்பவளை அனுப்பி விசாரித்து வரச்சொன்னாள். நளனின் நடத்தைகள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்டு தேவ சக்திகளை போல் இருப்பதையும், அவன் செயல்களையும் விளக்கிய கேசினி அவனுடைய மக்களை அவனிடம் கேசினி மூலம் அனுப்பிவைத்தாள் . அவர்களை கண்டதும் வாரி உச்சிமுகந்த நளன், கண்ணீர்மல்க நின்றதையும் தமயந்தியிடம் கூறினாள் பணிப்பெண் கேசினி. 
வந்திருப்பது நளனே  என்று அறிந்துக்கொண்ட தமயந்தி, கடைசி ஆயுதமாக ,ஓ பாஹூக்கா என்னும் நாமம் கொண்டவரே! கடமையை உணர்ந்த ஒருவர் கானகத்தில் ,தனியே உறங்கி கொண்டிருந்த மனைவியை, துன்பத்திலும் துயரத்திலும் சிக்கவைத்து தனியே சென்றதை கேள்விப்பட்டு இருக்கிறீரா?! என்று கேட்டு ..மள .மள வென கண்ணீர் சிந்தினாள்  தமயந்தி.  இவையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நளன் அந்த நாகம் கொடுத்த ஆடையை  எடுத்து உடுத்தினதும் தன் சுயரூபத்திற்கு வந்தான். அவனைக்கண்ட தமயந்தி ஓடிச்சென்று கட்டியணைத்து அவன் மார்பில் சாய்ந்து அழுதாள். பிரிந்தவர் கூடினால் அங்கே பேச்சுக்கு இடமேது?! ஆனாலும், இவையனைத்தும் சனிபகவானலாயே  வந்தது என நடந்த அனைத்தும் கூறினான் .
12 வருஷகாலம் சனியின் பிடி முடிந்ததும் , நளனும் -தயமயந்தியும் ஒன்றாக சேர்ந்தனர். பீம அரசனின் படை கொண்டு தன்னுடைய நாட்டையும் பிடித்து நல்லாட்சி மீண்டும் செய்ய துவங்கினான்.  அப்பொழுது அங்கு வந்த ஒரு துறவி, நீதித்தவறாத உத்தமனான நீ  ஏன் இப்படி கொடுமைக்கு ஆளானாய் என்றால், போனப்பிறவியில், நீங்கள் இருவரும் இணைபிரியாத ஜோடிகளாக ராஜா ,ராணியாகத்தான் இருந்திருக்கிறீர்கள். அப்பொழுது அப்பாவியான ஒரு துறவியை 12 ஆண்டுகாலம் சிறையில் அடைத்தற்கான தண்டனை இது. ஒரு நிரபராதியை தண்டிப்பதும், குற்றம் செய்பவனை தப்பிக்கவிடுபவர்களும் அடுத்தபிறவில் இதே தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதி . ஆகையால்தான் இத்துன்பத்தை  அனுபவிக்க நேர்ந்தது என விளக்கினார் .இறை சக்தியின் முன்னே எதுவும் நிலை இல்லாதது என உணர்ந்துக்கொண்ட நளன், சிறிது காலம் நல்லாட்சி புரிந்து தன்மகனுக்கு முடிசூடி, பின்பு இறைவனை தேடி தமயந்தியுடன் நாடுவிட்டு ஆன்மீக ஞானத்தை தேடி சென்று ,சுகமாக வாழ்ந்தனர்.
 எல்லாம் சரி ராஜி, நளன் கதையை படிச்சாலோ இல்ல கேட்டாலோ சனிபகவானின் ஆதிக்கம் குறையும்ன்னு சனிபகவான் வாக்கு கொடுத்ததா சொன்னியே! அந்த பகுதி எங்க மறந்துட்டியான்னு என்னை குறை சொல்ல சனிபகவான் நளனின் சிறு தவறுக்கு காத்திருந்த மாதிரி இருப்பவங்களுக்கு பதில் இதோ..
ரிதுபர்ணா மன்னனும், நளனும் விரைந்து வந்துக்கொண்டிருந்தபோது திருநள்ளாற்றை கிராஸ் செஞ்சாங்க. போற வழிதானே! சனிபகவானுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போகலாம்ன்னு கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்த வேளையில் அவனை பிடித்திருந்த சனி முற்றிலும் நீங்கியது. அங்கிருந்து ஆலயத்துக்கு வந்த நளனிடம், உன்னிடம் யாம் சற்று விளையாடினோம்ன்னு கூலா சனிபகவான் சொல்லி, உனக்கு என்ன வரம் வேணும்ன்னு நளனை தாஜா பண்ண கேட்டார். நளனும், சுவாமி! இந்த நள தீர்த்தத்தில் நீராடினாலும், என் கதையை கேட்டாலும், படிச்சாலும், என்னை பற்றி, இக்குளத்தை பற்றி நினைச்சாலும் அவர்களை நீங்க வச்சு செய்யக்கூடாதுன்னு நளன் வேண்டிக்கிட்டான். அதுப்படியே சனிபகவானும் வரம் கொடுத்தார்.
இதானுங்க. நள தமயந்தி வரலாறு.  லைலா மஜ்னு, ரோமியோ ஜுலியட்,  அனார்க்கலி சலீம்ன்னு பிற நாட்டு காதல் கதைகளை கொண்டாடும் நம்ப பசங்க நள தமயந்தியை அந்தளவுக்கு கண்டுக்குறதில்லை. அது ஏன்னுதான் எனக்கு புரியல. உங்களுக்கு புரிஞ்சா எனக்கு பதில் சொல்லுங்க.

நன்றியுடன்
ராஜி.

Tuesday, January 02, 2018

திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்

 
சிறப்பான நாளில் சாமி கும்பிடுவதால் நன்மை அதிகம் உண்டாகும். அதும் சிறப்பு +சிறப்பு = சிறப்ப்ப்ப்பான நாளில் சாமி கும்பிட்டா அளவில்லா நன்மை கிடைக்கும். அதென்ன சிறப்ப்ப்பான நாள்ன்னு யோசிக்குறீங்களா?! மார்கழியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்த ஆருத்ரா தரிசனம் நாளான இன்று. அதுக்கு காரணம், கிருஷ்ணர் மார்கழி மாதமா இருப்பதா அவரே சொல்லி இருக்கார். அதேமாதிரி திருவாதிரை நட்சத்திரமா சிவன் இருக்கார்.  அதன்படி, மார்கழி மாசத்து திருவாதிரை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததா கொண்டாடப்படுது. பொதுவா, ஒவ்வொரு கடவுளும் அவதரித்த நாளில் அந்தந்த கடவுளுக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனா, பிறப்பில்லாத ஆதி கடவுளான சிவனின் ஜென்ம நட்சத்திரம்ன்னு தனியா இல்லாத குறையை போக்கவே திருவாதிரை நட்சத்திரமா நான் இருப்பேன்னு சிவன் சொன்னதா புராணங்கள் சொல்லுது. 

ஆதி அந்தமுமில்லாத, பிறப்பில்லாத கடவுளுக்கு எப்படி திருவாதிரை உகந்த நட்சத்திரமா மாறிச்சுன்னு பார்க்கலாம்... திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரான்னு பேர். அதுவே ஆருத்ரான்னு மாறிட்டுது. அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரச பதவியில் இருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகி, அப்பவும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல் தான் உண்பதில்லை என்ற கொள்கையில் மாறாமல் இருந்தார். கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது,   ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாத போதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசிமாவில் , சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர். இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர். இதனால், சிவனே அடியவர் வேடம் கேட்டு சேந்தனார் வாயிலில் நின்று பிட்சை கேட்டார்.  அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர். களி மிக ருசியாயுள்ளது எனச்சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.  மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல்நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.  அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும். அன்றிலிருந்து , ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிட்டுது.

களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்ல. களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையா வச்சுதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுது.  இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார். கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர். பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான். அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிப்பட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும். பிரிஞ்சிருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். 

 முன்னொரு காலத்தில் திரேதாயுகான்ற பெண் இருந்தாள். சிறந்த பார்வதிதேவியின் பக்தை. திருமண வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. திருமணமான நாலாவது நாளில்தான் சாந்திமுகூர்த்தம் நடத்துவது அன்றைய நாளின் வழக்கம். ஆனால், திருமணமான மூன்றாவது நாளே அவள் கணவன்  இறந்துவிட்டான். அழுது அலறி துடித்த திரேதாயுகா  பார்வதிதேவியிடம் முறையிட்டாள். கைலாயத்திலிருந்த பார்வதி காதில் அவள் முறையீடு கேட்க, அவள் கணவனுக்கு உயிர்பிட்சை கொடுப்பேன் என சபதம் செய்ய, அதைக்கேட்ட சிவன், எமலோகத்தில் இருக்கும் எமனை பார்க்க, எமனும் திரேதயுகா கணவனின் உயிரை திருப்பி அளித்தான். பார்வதியும், சிவனும் தம்பதி முன் தோன்றி ஆசி அளித்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

தாருகாவனத்தில் வசித்த வேதத்தை கற்றதால் மமதை கொண்ட முனிவர்கள் சிலர் , கர்மாவே கடவுள், அதற்கு மிஞ்சியது ஏதுமில்லை. ஒருவனின் கர்ம வினைப்படியே அவனின் வாழ்க்கை அமையும். கடவுளால்கூட ஏதும் செய்யமுடியாது என சொல்லி திரிந்தனர். இவர்களின் கர்வத்தை அடக்க சிவன் பிட்சாடனாராகவும், விஷ்ணு மோகினி வேடம் கொண்டு முனிவர்கள் முன் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி முனிவர்களும்,  பிட்சாடனர் அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகளும் சென்றனர்.  இதனால் முனிவர்களது தவம் பாதிக்கப்பட்டதால்,  மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினர்.



 கர்வமும், தவ வாழ்வும் கலைந்த நிலையில் வேள்வியில் பிழை ஏற்பட்டு வேள்வி தீயிலிருந்து புலி ஒன்று உருவாகிட்டுது. அதை அந்த பிசாடனர்மேல் ஏவினர். தன்னை நோக்கி வந்த புலியை அடக்கி, அதன் தோலை, தன் இடைக்கச்சையாக கட்டிக்கொண்டார் பிட்சாடனர் வேடம் கொண்ட சிவன். அடுத்தடுத்து மான், நெருப்பை வேள்வியிலிருந்து உண்டாக்கி அதை பிட்சாடனர்மேல் ஏவ, அதையும் வீரியமில்லாததாக்கி, தன் கைகளில் ஏந்திகொண்டார் பெருமான்.  அடுத்து யானை வர அதையும் கொன்று அதன் தோலை மேலாடையாக போட்டுக்கொண்டார்.  அடுத்து தங்களது முழு ஞானத்தையும் வேள்வியில் இட்டு, அதன்மூலம், முயலகன் என்ற அரக்கனை உண்டாக்கி, சிவன்மேல் ஏவினர். முயலகனை அடக்கி, தன் காலடியில் அழுத்தி வைத்துக்கொண்டனர். இத்தனைக்கு பிறகு புத்தி வந்த முனிவர்கள், சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதை உணர்ந்து சிவனை பணிந்து, தங்களை மன்னிக்க வேண்டி நின்றனர். அவர்களை மன்னித்து அருளி, மோகினி வேடத்திலிருந்த விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மேளம் கொட்ட, சிவன் ஆனந்த நடனம் புரிந்தார்.  சிவனின் நடனம் கண்டு தாருகாவனமே மகிழ்ந்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.  விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார். தவத்தை மெச்சிய சிவன்,  பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார். மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.


கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர். அதனாலதான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.  அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன் கோவில்களிலும்  சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.  சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108 . இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48. ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம். இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.  சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க. அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிப்படனும். அப்பதான் முக்தி கிடைக்கும். 


ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் செய்யனும். இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.



இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி. சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கனும். சுவாமிக்கு திருவாதிரை  களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கனும். ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று  செய்யலாம். இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம். 
ஓம் நமச்சிவாய.... 

நன்றியுடன்,
ராஜி