Friday, March 02, 2012

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு...,





அது ஓர் அழகிய பனிக்காலம்.

ரவியும் சீதாவும் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும்  ஒரேகிளாஸ் . படிப்பில் ரெண்டு பேருமே ரொம்ப கெட்டி. ஆனா, அவங்க ரெண்டு பேருக்குள்ள, யார் ஒசத்தின்னு  அடிக்கடி சண்டை வரும்.    அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக்கிட்டு  படிப்பாங்க. அன்னிக்கும்  அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கிட்டு இருக்கும்போது, அவங்களுக்கிடையே சண்டை வந்துச்சு.

ரவி சொன்னான், ""நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்'' என்று.
ஆனா சீதாவோ "நிச்சயமா இல்லை... நாந்தான்'' என்று  பதிலடி குடுத்தா. அவங்கவங்க தன்னோட  வீர தீர பிரதாபங்களை சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  இதே ரீதியில் பேச்சு வளர்ந்து சண்டை முத்தி போச்சு.

அப்போ, திடீர்ன்னு  அவங்க  முன்னாடி   ஒரு அழகிய தேவதை  வந்தாங்க. தேவதையைக் கண்ட ரெண்டு பேரும் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னாங்க.  ரெண்டு பேரும்  சுதாரித்துக்கொண்டு, ""நீங்க யாரு?ன்னு கேட்டாங்க.

தேவதை அவங்ககிட்ட, ""நான் தேவலோகத்து பெண். இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலகத்தை சுத்தி பார்ப்பேன்... இன்னிக்கும் அந்த மாதிரி போறப்போ நீங்க  சண்டை போடுறது கேட்டது. உங்க சத்தம்  தாங்க முடியாம  இறங்கி வந்தேன்'' ன்னு சொல்லிச்சு.

பின், ""உங்க ரெண்டு பேருக்குள் என்ன பிரச்சினை? என்கிட்ட சொல்லுங்க.. முடிஞ்சா தீர்த்து வைக்குறேன்''ன்னு சொல்லிச்சு..

உடனே ரவி, ""தேவதையே! இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் ன்னு சொன்னா, இவ  ஒத்துக்க  மாட்டேங்கிறா'' என்றான்.

""ஒண்ணும் கெடையாது... நாந்தான் இவனை விட அறிவாளி...'' என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.
இதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.

""சரி, சரி... உங்கள சண்டையைகொஞ்சம்  நிறுத்துறீங்களா? இதுக்கு  நான் ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறியது.

""உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவங்கதான் அறிவில் சிறந்தவர்'' என்று கூறி, ""உங்களுக்கு இதில் சம்மதமா?''ன்னு  கேட்டது.

ரவியும் சீதாவும் "சம்மதம்' ன்னு தலையாட்டினாங்க.

உடனே போட்டி என்னன்னு  தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. ""நான் உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தரேன். இது பனிக்காலம்.  அந்தக் குடுவையில் ராத்திரி பெய்யுற  பனித்துளிகளைச் சேர்த்து வைக்கனும்.  ரெண்டு பேரில் யார் அதிகமா  சேக்குறாங்களோ அவரங்கதான் இந்தப் போட்டியில் ஜெயிச்சவங்க''ன்னு  தேவதை சொல்லிச்சு.



""ஆனால் ஒரு கண்டிஷன். இந்த நிமிசத்திலிருந்து போட்டி முடியுற வரை நீங்க ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்குறதோ,  பேசிக்குறதோ கூடாது. நான் நாளைக்கு சாயந்தரம் இதே நேரத்துக்கு மறுபடியும் இங்க வரேன். இதே மைதானத்தில எனக்காகக் காத்திருங்க''ன்னு சொல்லி, மூடியில்லாத ரெண்டு குடுவைகளை அவங்ககிட்ட கொடுத்துட்டு மறைஞ்சுடுச்சு.

ரெண்டு பேரும் குடுவையுடன் அவங்கவங்க  வீட்டுக்கு போய்ட்டாங்க.  சூரியன் மறைஞ்சு,  இரவும்  வந்தது. கொஞ்ச  நேரத்துல பனியும் கொட்ட ஆரம்பிச்சுச்சு.  ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனான்.  திறந்தவெளியில் வச்சுட்டு, தூங்க போய்ட்டான். ஆனா, தூக்கமே வரலை. அடிக்கடி போய் குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துச்சான்னு  பார்த்துக்கிட்டே இருந்தான்.

சீதாவும் அவளது வீட்டின் முன்னாடி  உள்ள புல்தரையில குடுவையை வச்சுட்டு அடிக்கடி  பனித்துளியின் அளவைப் பார்த்துக்கிட்டேயிருந்தா. "நாளைக்கு எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்'ன்ற நினைப்பிலேயே  தூங்கிப்போனாள்.

மறுநாள் பொழுது விடிந்தது...,

சீதாவும், ரவியும் போய்  அவங்கவங்க குடுவையைப் பார்த்தங்க. ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ?ன்னு  சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தா என்ன செய்றதுன்னு ரவியும் நினைச்சங்க. 


மதியத்துக்கு மேல ரெண்டுபேரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போத மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம தோத்துபோய்டுவோமேன்னு  ரெண்டு பேருமே நினைச்சதால, குடுவை நிறையத் தண்ணியை ஊத்தி  எடுத்து போனாங்க.

மைதானத்தில ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம குடுவையை மறைச்சபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.

""சரியாக வந்துட்டீங்களே! எங்கே உங்க குடுவையைக் காட்டுங்க'' என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.

பின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,
""ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?''ன்னு...,

அதுக்குப் பதில் சொல்லாம மீண்டும் சிரித்த தேவதை, ""பனித்துளின்னா  என்ன தெரியுமா உங்களுக்கு? மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திக்கிட்டு இருக்கீங்க. 


என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் கொஞ்சமாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழியுதே!  எப்படி? இதைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்யட்டும்?'' ன்னு கேட்டுச்சு.

""இப்போ சொல்லுங்க.... உங்களில் அறிவில் சிறந்தவர் யார்ன்?'' ன்னு அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.

இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.


""பார்த்தீங்களா? இது நம்ம வாழ்வில் தினமும் நிகழும்  சாதாரண
ஒரு நிகழ்வு. இதைக்கூட நீங்க  தெரிஞ்சுக்கலை. உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள்ன்னு யாருமே இல்லை. இந்த உலகத்தில உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்க முயற்சிக்கனுமே தவிர, இப்படி வீணா சண்டை போட்டுகிட்டு, உங்க எனர்ஜி, நேரம்லாம் வீணாக்கிட்டு இருப்பது எந்த வகையில்   எவ்வகையில் சரியாகும்?''ன்னு கேட்டது தேவதை.

அதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, ""எங்களை மன்னிச்சுடுங்க. நாங்க இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டோம்'' ன்னு சொன்னாங்க.

பின் தேவதை அவங்களைப் பார்த்து, ""உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்? கேளுங்க'' ன்னு சொல்லிச்சு.

""நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு''ன்னு  ஒரே குரலில் சொன்னாங்க.

""உங்க பரிசை எங்களது ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்''ன்னு சொன்னாள் சீதா.

""மாணவர்களாகிய நீங்கதான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.

ரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கிட்டாங்க..., உண்மையான நட்புடன்.


டிஸ்கி: இன்னிக்கு என்ன பதிவு போடலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ என் பையன் அப்பு, கம்யூட்டர் ஷார்ட் கீ கண்டுபிடிக்க சொல்லி ஒரு புதிர் பதிவு போடும்மான்னு சொன்னான். இதெல்லாம் போட்டால் யாரும் படிக்க மாட்டாங்க. எனக்கு எல்லாம் தெரியும் நீ போடான்னு சொன்னேன். அப்போ இந்த கதையை சொல்லி, ”கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” அதனால, ரொம்ப அலட்டிக்காதன்னு சொன்னான். கதையும் நல்லா இருந்துச்சு. அந்த கதையே ஒரு பதிவாக்கிட்டேன்.

18 comments:

  1. கற்றது கைமண் அளவு... உண்மை....

    நல்லதோர் பகிர்வு சகோ...

    பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  2. எனக்கு எல்லாம் தெரியும்னு யாரும் சொல்லிட முடியாது தான்.
    பையன் கூடிய சீக்கிரம் பிளாக்கராக வருவாரா?

    ReplyDelete
  3. கற்றது கை மண் அளவு. அருமையான கதை.உங்க பையனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு போல...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கற்றது கை மண் அளவு கதை அருமையா இருக்கு...வாழ்த்துக்கள் ராஜி..

    ReplyDelete
  5. குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல கதை.
    பகிர்வுக்கு நன்றி.

    கற்றது= கைமண் அளவு.

    கல்லாதது=
    உலகு மைனஸ் கைமண் அளவு

    ReplyDelete
  6. நல்ல கதை!
    ஆச்சர்யப்பட வைக்கும் அப்பு!

    ReplyDelete
  7. அந்த குழந்தைகள் உங்கள் குழந்தைகளா? அப்ப அந்த தேவதை நீங்கள்தானா? எது எப்படியோ இதை சிறுவர்களுக்கான நல்ல கதை என்று சொல்லி பெரியவங்களை படிக்க வைத்து அவர்கள் மண்டையில் உரைக்குமாதிரி சொன்ன உங்கள் திறமையை பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  8. அருமை அருமை
    படிக்கப் படிக்க
    புரியாதவைகள் அதிகரித்துக் கொண்டே
    போவதுதானே யதார்த்தமாய் இருக்கிறது
    இதில் கௌரவம் கொள்ள என்ன இருக்கிறது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மிக அருமையான கதை ரசித்தேன். அப்பு பாத்திரம் தத்துரூபமானது....

    ReplyDelete
  10. அப்புவுமா? சீக்கிரமா அவனுக்கும் ஒரு பிளாக் ஓப்பன் பண்ணித் தந்துடும்மா. பதிவர் சந்திப்புக்கு உங்க வீட்ல எல்லாரும் வந்தாலே சபை நிறைஞ்சிடும். ஹா... ஹா... நல்லாத்தேங் இருந்துச்சு கதை!

    ReplyDelete
  11. உங்க குடும்பமே கதை விடற குடும்பம் போல ஐ மீன் கதை சொல்ற குடும்பம்..

    ReplyDelete
  12. நல்லதோர் பகிர்வு சகோதரி ! புதிர் எங்கே ?

    ReplyDelete
  13. கற்றது கைமண் அளவ
    நல்லதோர் பகிர்வு

    ReplyDelete
  14. குட்டிக்கதையில எவ்வளவு விஷயங்கள்! உங்க Son ரொம்பவே Bright ஆனவர் போலருக்கு. Thanks for Share with us.

    ReplyDelete
  15. இன்னும்... நிறைய்...ய.... கத்துகோணும்

    ReplyDelete
  16. குழந்தைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏராளமாய் உள்ளன. சிறுவன்தானே என்று அலட்சியப்படுத்தாமல் அவர் சொன்னதையும் அப்படியே எடுத்துச் சொன்ன உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இருந்தாலும் முதல் பாராட்டுகள் உங்கள் மகனுக்குதான். தான் சொல்ல நினைப்பதைத் தக்க சமயத்தில் சொல்லி, அதையும் ஒரு கதை மூலம் புரியவைத்ததற்கு அவருக்கு ஒரு சபாஷ்.

    ReplyDelete