Thursday, December 01, 2016

பர்வதமலை கடப்பாரை மலை புண்ணியம் தேடி ஒரு பயணம்

பொழுது விடிய தொடங்கியதும் ஆதவன் மெல்ல மெல்ல நமக்கு முன்னெழுந்து தனது ஒளிகதிர்களினால், மலைமேலிருக்கும் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரம்மராம்பிகையையும் வணங்கி நின்றான். பொழுது புலர்ந்து விட்டது. மலைமேல் இருக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும். இனிதான் கடப்பாரைப்படிகள், தணடவாளப் படிகள்,ஆகாசப்படிகள் கொண்ட கடினமான மலைப்பாதைகளை நாம் கடக்கவேண்டும்.
இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. இதை நமது கடந்த வார பதிவில் தெளிவாக பார்த்தோம்.பார்க்காதவங்க, இந்த பதிவில் போய் பார்த்துவிட்டு வாங்க. அப்பொழுதுதான் இந்த மலைப்பயணத்தின் தொடர்ச்சி புரியும். மலை ஏற தொடங்கும் முன் சில பக்தர்கள், அடிவாரத்திலிருக்கும் சூலத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டு செல்கின்றனர்.நாமும் இங்கு நம்முடைய பயணம் இனிதாக அமைய இறைவனை பிரார்த்தித்து  செல்லலாம்
காலையில் பக்தர்கள் மலையேறுவதும்,இறங்குவதுமாக இருந்தனர்.நாமும் உற்சாகமாக ஏற ஆரம்பித்தோம். அண்ணாந்து பார்த்ததும், அங்கேயே பாதிப்பேர் உட்கார்ந்து விட்டனர். நம்மால் முடியுமாவென்று!! ஏனெனில், பாறை செங்குத்தாக 90 டிகிரி அமைப்பில் இருந்தது. சரி இங்கே இருந்தே இறைவனை தரிசித்துவிட்டு செல்லலாம் என,எங்களுடைய குழுவில் இருக்கும் சிலர் கூற, இந்த மலைப்பு, மலைமேல் இருக்கும் இறைவனுக்கு கேட்டுவிட்டதோ என்னமோ, உதவிக்கு ஆள் அனுப்பின மாதிரி சிலர், உற்சாகமூட்டி உங்களால் முடியும் என தைரியம் சொன்னனர்.அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூதாட்டி, வேண்டாம்! கவனம் அப்படியே ஏறுவதாக இருந்தால் கடப்பாறை மலை கடினம்,தண்டவாளப்படி வழியாக போக வேண்டியிருக்குமென  பயம் காட்டினார். உண்மையில் அவர் கூறியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.மலையை சற்றே அண்ணாந்து பாருங்கள்.
இந்த மலையை பார்த்து மலைச்சு நிற்பதை விட்டுட்டு இதன் பெருமைகளை முதலில் பார்க்கலாம். வடஇந்தியாவிற்கு எப்படி ஒரு இமயமலையோ, அதுபோல,தென் இந்தியாவிற்கு ஒரு பர்வதமலை. அதனால தான் இதை எல்லோரும் தென்கயிலாயம் என அழைக்கின்றனர்.மகான் மௌனயோகி விடோபானந்தா குரு தவக்குகை அன்னதான மடம்.அவரை பற்றி நம் கடந்த பதிவில் பார்த்துவிட்டோம். இங்கு கடலாடியில் இருந்துவரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்தில் இருந்து வரும் பாதையும் ஒன்று சேர்கின்றன. அதன்பிறகு பாதைகள் செங்குத்து பாறைகளாக நெட்டாக செல்கின்றன. இந்த இடத்தை குமாரி நெட்டு என்று சொல்கின்றனர். அதன் காரணப்பெயர் தெரியவில்லை.அதை தாண்டி சென்றால்,மலையேறும் பாதை மிகவும் செங்குத்தானது..அதையும் தாண்டி மேலே சென்றால் இருப்பது கடப்பாரை நெட்டு.
இதை பார்ர்கும்போதே பயம் வந்துவிடும். நம்மால் முடியுமா?! என நினைக்க தோன்றும்.  90 டிகிரி சாய்வு பாறையில் இருபக்கமும் கடப்பாரை கம்பிக்களை துளையிட்டு, அதில் மாட்டி வைத்துள்ளனர்.அவற்றில் சில பக்தர்கள் அசைத்து, அசைத்து ஆட்டம் கண்டுள்ளன. சில இடத்தில கொஞ்சம் தூரமாகவே இருக்கின்றன, மிகவும் ஆபத்தான பயணம்.  இந்த கடப்பாரை படி செல்லும்போது மிகவும் கவனமாகவும் அதேசமயம் திரும்பி பார்க்காமலும் செல்லவேண்டும்.ஏன்னா கீழே பார்க்கும் போது நமக்கே ஒரு அச்சமும் கைகால்கள் உதறலும் வரும். அதனால்தான்,பெரும்பான்மையான பக்தர்கள் இரவில் மலையேறுகின்றனர்.இறைவன் அருளால் இதுவரை ஒரு அசம்பாவிதமும் நடைப்பெறவில்லை என்பது ஆனந்தம். அதே சமயம் ஒரு முதியவர் மட்டும் மலைகளில் இருந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. நாம் அந்த இறைவனை மனதில் தியானித்து சென்றால், நமக்கு பயமும் நீங்கி, மலை ஏறுவதற்கான சக்தியையும் அவனே கொடுப்பான்.
அதேப்போல், இந்த நெட்டுப்பாறையில், ஏறுவதற்கு வேறு ஒரு ஏணிப்படிப்பாதையும் உண்டு. அது பெரும்பாலும் இறங்குபவர்கள் பயன்படுத்துவது. கடப்பாரை தொடக்க வழி என்றால் ஏணிப்படி அடுத்து வருவது. இதில் செங்குத்தான பாறைகளின்மேல் பெரிய இரும்பு ஏணி படிகளை ஆங்காங்கே வைத்துள்ளனர்.அதன் மூலமும் மலையின் மேல் செல்லலாம். இதில் திகிலூட்டும் விஷயம் என்னனா மேலே போக வழி இல்லாத இடங்களில் தண்டவாளப்படிகளையும் அமைத்து இருக்கின்றனர். இதிலும் கவனமாக செல்லவேண்டும்.
தண்டவாளப்படிகளில் செல்லும்போது நமக்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்படுகிறது,இறைவன் மேல் பாரத்தை போட்டு பர்வத மலையானே! மலையேறுவதற்கு சக்தியை கொடுப்பா என வேண்டிக்கொண்டு படிகளை மெதுவாகவும் கவனமாகவும் கடந்தோம். அப்பொழுது கூட்டத்தில் வந்த ஒருவர் நீங்கள் பயப்படக்கூடாது என்று தான் இரவில் மலையேறலாம் என சொன்னேன் என்றார். அவர் சொன்னப்படி இரவில் செல்வதால் செங்குத்து பாறையும், சாய்வானப்படிகளும், அதாலபாதாளமும் நம் கண்களுக்கு தெரியாததால்,உடல் சோர்வு மட்டும் தான் வரும். ஆனா பகலில் கீழே பார்க்கும்போது நமக்கு திகிலாகத்தான் இருக்கிறது.    
இந்த தென்கயிலாயம்ன்னு சொல்லப்படுகிற, பர்வதமலை அவ்வளவு கஷ்ட்பட்டு ஏறி அந்த இறைவன் மல்லிகார்ஜுனரையும் , இறைவி பிரமராம்பிகையையும்,தரிசித்தால் நமது பாவங்கள் எல்லாம் தொலைந்துப்போகும் என்பதை விட, நமது முன்ஜென்ம மற்றும் இந்த பிறவி கர்மாக்கள் தொலைந்து போகும் என்பது நமபிக்கை. இந்த பர்வதமலை தத்துவமே, ஒரு இறைவனை காண்பது இல்லை. இரு பிறவிகடலை கடப்பது என்பது மிகவும் கடினமானது. அப்படி இளமை முறுக்கோடு அறியாமல் செய்யும் தவறுகள்,நாம் உணர்ந்து கொள்வது நம்முடைய வயதான காலத்தில்தான்.. அப்பொழுது மிகவும் கவனமாக வாழ்க்கையை நடத்தி செல்லவேண்டும் என்பதற்காகத்தான் முக்கால் பாகம் மேல் கவனமாக செல்லும் படியாக,அமைந்துள்ளது. அதில் தவறு செய்தால் வாழ்க்கையே அழிந்துவிடும் என்பதற்காகத்தான்.  முக்கால்பாகம் வழி உணர்த்துகிறது. அதில் ஒரு சிறு தவறு நடந்தால் என்னவாகும் என இந்த படத்தில் செல்லும் பகதர்கள் நிலையை பார்த்தல் தெரியும் .
ஆதிசங்கரர் காலத்திற்கு முன்பெல்லாம் இந்த மலை தனியாக தொடர்பு இல்லாமல் தான் இருந்தது. அதற்கப்புறம் மக்கள் வந்து வழிப்படவேண்டும் என்பதற்காக இறைவனாலேயே நம்மருகில் நகர்த்தப்பட்ட மலை என்று செவிவழியா சொல்லுவாங்க.இந்த மலைல என்ன விஷேசம்னா, பௌர்ணமிநாள், அமாவாசை நாள், பண்டிகை,மற்ற விஷேச தினங்கள் என்றில்லாமல் வருடத்தின் எல்லா நாளும் இங்கே விஷேசம் .அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக்காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். கேன்சர் போன்ற கொடிய ரோகங்களுக்கும் இம்மலையில் மூலிகைகள் இருக்கிறதென பழையக்காலத்து பாரம்பரிய வைத்தியர்கள் சொல்கிறார்கள். ஆன்மீகரீதியாக பார்த்தால் மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்.என்பதையும் உணர்த்தும் மலை இது .
ஏணிப்படியைத் தாண்டி சென்றால் வருவது ஒரு பாதி மண்டபம். இந்த கல் மண்டபத்தினை இதனைத் தீட்டுக்காரி மண்டபம் என்றும் சொல்லுவார்கள். கோவிலுக்குச் செல்ல பெண்களும் மலையேறி வருவதுண்டு. அப்போது அவர்களுக்கு மாதாந்திர தொந்தரவுகள் ஏற்பட்டால் இத்துடன் திரும்பிச் சென்று விடுவார்களாம். அதனால் இந்தப் பெயர் என சொல்லப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சொல்லப்படுகிறது.சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கு. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்ளும் உள்ளன.      
இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் சிங்கக்கிணறு என்னும் சுனையைக் காணலாம். இதில் ஒரு சுரங்கப்பாதை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் வழியே சென்றால் ஓர் அதிசய உலகத்தைக் காணலாமாம். அதை மானிடர்களாகிய நாம் காண வழியில்லை.சித்தர்கள் சூட்சுமமாக அங்கே செல்வார்கள் என்றும் அவர்கள் இச்சுனையில் உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாகவும்  சொல்லப்படுகிறது.இந்தச் சுனை நீரில் கை, கால், முகம் கழுவிக் கொண்டு, தாகத்திற்குத் தண்ணீர் குடித்தால் மலை ஏறிவந்த களைப்பு நீங்கி தெம்பு பிறக்கும் என்றும் இந்தச் சுனை நீர் மருத்துவ குணம் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது . ஆனா இப்ப இதுல தண்ணீர் இல்ல.ரொம்பகாலத்துக்கு முன்பு ஒரு இடி இடித்ததில், இங்குள்ள நீர் வற்றி பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று சொல்லப்படுகிறது. பாதாளச் சுனை என்றும் சிங்கக்கிணறு என்றும் சொல்லப்படும் இந்த இடத்தில் சற்று ஓய்வு எடுத்தபின் மெதுவாக நடந்தால் கணக்கச்சி விழுந்த பள்ளம்- அதாவது பாதாளப் பகுதி வரும். இந்தப் பகுதியை கணக்கச்சி ஓடை மலை என்றும் சொல்வர். இங்கே கவிழ்ந்து நிற்கும் பாறை ஒரு புறமும் பாதாளமாகக் காட்சி தரும் பயங்கரமான பள்ளம் மறுபுறமும் உள்ளன. இங்கு ஒருவர் மட்டுமே குனிந்து பாறையை ஒட்டிச் செல்ல முடியும்.
ஒவ்வொரு அடியும் இங்கே கவனமாக வைக்கவேண்டியது அவசியம். ஏன் இவ்வளவு கடினம் என்றால் ,இங்கே சித்தர்கள இருக்கிறார்கள். யோகிகள் இருக்கிறார்கள். முனிவர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட இறைவனே இங்குதான் இருக்கிறார் என்பதே உண்மை. காமம், பொய், சூது,வஞ்சனை, பொறாமை,கர்மா போன்றவை கொண்ட மனிதர்கள் இங்கே வருவது மிகவும் கஷ்டம். அவர்களுக்கு இங்கு கடும்சோதனையும் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதுப்போல இந்த மலையில் சுனைகள் நிறைய இருந்திருக்கின்றன.அவைகளெல்லாம் இப்பொழுது இல்லை ஒரு முனிவரின் சாபம் காரணமாகத்தான் அங்கே இயற்கை தண்ணிய தவிர வேறு தண்ணி இருக்காது. எனவும், அப்படியேக கொண்டு சென்றாலும் அது நடக்காது என்றும் ஒரு பெரியவர் சொல்லி கொண்டு வந்தார்.அவருக்கு அவருடைய தாத்தா சொன்னாராம். மேலும் பல உண்மைகளை அவர் சொன்னபோது நாங்களே ஆச்சர்யப்பட்டு போனோம்.அவர் சிறிய வயதில் வரும்போது பனை ஓலையால் வேயப்பட்ட கூரைதான் இருக்குமாம். ஆட்கள் அதிகம் வருவதில்லையாம். மருந்துகள் செய்பவர்களும், சிலதொழில் முறை மந்திரம் செய்பவர்களும் தான் சித்துக்கள் எடுக்க வருவார்களாம். ஆனால் இன்று பல லட்சம் பேர் வருவது மனதிற்கு சந்தோசமான விஷயம் என்று கூறினார்..
பர்வதமலைஇன்று நிறைய பக்தர்களை ஈர்த்து இருக்கிறது என்றால் கடலடியில் ஜீவசமாதியான மௌனகுரு சித்தரும் ஒரு காரணம்.அவர் கிடைக்கிற வருமானத்தில் மலை மேல் வருகிறவர்களுக்கு ,அன்னதானம் செய்தார்.அதேபோல் இந்த அன்னதான மடத்தில் இருக்கும் தவக்குகையையும் தரிசிக்க மறந்துவிடவேண்டாம் .மிகவும் சக்திவாய்ந்த இடம் இதை இங்கே இருந்து தியானம் செய்பவர்கள் அதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.மகாபெரியவர்தான் கிரிவலம் செல்லும் முறையையும் ஏற்படுத்தினாராம், அதுப்போல இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சுமார் 800 வகையான பாம்புகள் இந்த மலையில் இருக்கிறதாம் .ஆனால் இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் வந்தது இல்லையாம்.இப்படி பெரியவர் சொல்ல சொல்ல நாங்கள் இதுவரை கேட்டராத தகவலை ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டே மலையேறினோம். அவர் சொன்னதைக்கேட்டு மலையேறியதாலோ என்னமோ நாங்கள் கீழேயே பார்க்காமல் மலை ஏறி ஒரு சமவெளியினை அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டு நின்றோம்..
இந்த படத்தில் தெரியும் பாறையானது இருளில் பார்க்கும் போது, சிவன் மலையில் நின்ற கோலத்தில் சாய்ந்து நிறமாதிரி தெரியும்.ஆஸ்ரமத்தின் பகுதியில் ஜடாமுடியும், தலைப்பாகமும்,கழுத்தில் நாகமும், வயிற்று பகுதியும் தெரிவதுப்போல இருக்கிறது. இங்கே பகலில் எடுத்த போட்டோவும், திரும்ப மாலையில் இறங்கி வரும்போது எடுத்த போட்டோவும் உங்கள் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன்.அதேப்போல் கடப்பாரைப்படி மலையேறும் இடத்தில ஒரு கடை வரும். அந்த இடத்தில இருந்து பார்த்தால் அம்மன் நிற்கிற கோலத்தில் இருப்பது போன்று தெரியும். இப்படி பல அதிசயங்கள் நிறைந்தது இந்த பர்வதமலை.
இந்த வழிதான் மிகவும் குறுகலான வழி,கணவாய் பகுதி போல குறுகலான வழியாக செல்லும் போது ,தங்கள் ஆடைகளின் மேல் ,கவனம் செலுத்துவது ,நல்லது ஏனெனில் செங்குத்து பாறையில் கீளிருந்து வரும் அதிவேகமான காற்று .ஆடைகளை  பறக்கவைக்க செய்யும் ,மலையேறுவதற்கு ஏற்றவாறு சுடிதார் போன்ற உடைகளில் வருவது நலம்.இந்த குறுகலான பாதையை கடந்தால் நாம் ,பர்வதமலையனின் கோவிலை காண்லாம் 
எல்லா பாதைகளையும் கடந்து பர்வதமலையின் கடைசி உச்சி பகுதிக்கு இப்பொழுது வந்துவிட்டோம் ,இங்கே நாங்கள் செல்லும் போது இருட்ட தொடக்கி விட்டது .நிறைய பக்தர்கள் எல்லாம் ,ஆங்காங்கே மலையேறிய களைப்பில் ,ஓய்வெடுத்து கொண்டு இருந்தனர் .சிலர் அங்கேயே உறங்கவும் , ஆரம்பித்தனர் .ஆனால் எல்ல இடமும் மிகவும் கவனமாக ,நிற்கவேண்டிய ,பார்க்கவேண்டிய பகுதிகள் ஒரு அடி பிசகினாலும் விபரீதங்கள் தான் ,ஆகவே ,பக்தர்கள் மிகவும் பொறுமையாக ,அவசரபடாமல் ,ஒருவரை ஒருவர் தள்ளு முள்ளு செய்யாமல் ,அமைதியாக செல்லவேண்டும் .நாங்களும் வந்துவிட்டோம் .இப்பொழுதான்,பசியெடுக்கஆரம்பித்தது .எங்கேயாவது உணவு கிடைக்குமா எனத்தேட ஆரம்பித்தோம் .
கோவிலுக்கு செல்வதற்கு முன் ,காணப்படுவது தவக்குகை அன்னதானமடம் ,பௌர்ணமி நாட்களில் ,பிரிஞ்ச் சாதம் , தக்காளி சாதம் ,லெமன் சாதம்,என வருகின்ற பக்தர்களுக்கு ,அன்னதானம் செய்கின்றனர் .மலையேறிவந்த களைப்பு  தீர ,எல்லோரும் வயிறார உண்பதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது .இந்த அன்னதான மடத்திற்கு ,மலைமேல் செல்லுகின்ற நாம் ஒவ்வருவரும் ,அனறைய சாப்பாட்டிற்கு ,௫ 50 என கொடுத்தாலே ,அவர்களால் வருகின்ற அனைவருக்கும் ,வயிறார உணவு கொடுக்கமுடியும் ,இல்லையெனில் அரிசியாகவோ , காய்கறி, மசால் சாமான்களாகவோ கூட கொடுக்கலாம் ,மலைமேல் கொண்டு கொடுக்கவேண்டும் என்று இல்லை ,அவர்களது ஆஸ்ரமம் கீழேயே இருக்கிறது அங்கேயும் கொடுக்கலாம். அவர்கள் அதை எடுத்து மலைமேல் கொண்டுவந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர். .
இங்கிருந்து சுற்றி பார்க்கும் போது 50  கி மீ சுற்றளவு வரை தெளிவாக பார்க்கமுடிகிறது .இங்கே ஒரு ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது. .அதையும் தாண்டி தெரிவதுதான் கோவில் .அங்கே கதவுகளை இல்லை ,புதியதாக சிமெண்ட் பூசப்பட்ட தளங்கள் பக்தர்கள் இரவில் ஓய்வு எடுக்க வசதியாக இருக்கிறது . மூலிகை வாசத்துடன் சேர்ந்து காற்று அருமையாக வீசுகிறது .ரம்மியமான சூழ்நிலை .பார்க்கும் போதே காற்றுடன் ,இசைநாதங்களும் கேட்பது போல ஒரு உணர்வு .இயற்கையே நந்தனம் ஆடுவது போன்ற ஒரு உணர்வு நமக்கு வருகின்கிறது .
நாங்கள் சென்று தரிசனம் செய்து திரும்பும் போது இருட்டிவிட்டது .அங்கேயே தங்க விரும்பினோம் .பொதுவாக மலைமேலானாலும் சரி ,நடு மலைகளிலும் சரி .எந்த தண்ணீர் வசதியும் கிடையாது .அன்னதான மடத்திற்காக ,ஒரு பெரிய நீர்தொட்டி கட்டி இருக்கிறார்கள் .மலைமேல் பெய்யும் மழை தண்ணீரை சேமித்து வைத்து ,அதன் மூலம் சமையல் செய்கின்றனர் .ஆகவே பக்தர்கள் சென்றவுடன் ,ஐயனை தரிசித்து விட்டு ,உடனே கீழிறங்கி விடுவது நல்லது. கீழிருந்து மலைக்கு மேல் தண்ணீர் கொண்டு செல்ல .பைப் எல்லாம் போட்டு இருக்கிறார்கள் .ஆனால் போட்டு முடித்தவுடன் ,கீழ்மலையில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது .பாவம் மானிடர்கள் அவர்களுக்கு தெரியாது.மலையே இயற்கை தண்ணீரை மட்டும் தான் உபயோக படுத்த முடியும் அது ஒருமுனிவருடைய சாபத்தினால் அப்படி ஆகிவிட்டதாம்,அந்த சாபம் நீங்கும் வரை எந்த காரணத்தை கொண்டும் தண்ணீர் மேலே கொண்டு போகமுடியாது.
இவர்தான் மூலவர்,சுயம்புவாக தோன்றியவர் ,மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரியதாக விளங்குபவர்,இந்த பர்வதமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட ஒரு விஷயம் பர்வதமலையில்  தான் ,வடநாடுகளை போல் நாமே மூலவருக்கு அபிஷேகம் பண்ணலாம் என கூறுகின்றனர் .ஆனால் இங்கே அபிஷேகம் ,ஆராதனைங்கிற பெயரிலே அதன் புனிதத்தை கெடுத்து அசிங்க படுத்துபவர்கள்தான் அதிகம் அப்படி செய்யகூடாது .அதற்கும் ஒரு வழிமுறை உண்டு.இதை தெரிந்தவர்கள் சொல்லி புரியவைக்கலாம். வடக்கே.இமயமலை எவ்வுளவு புனிதம் வாய்ந்ததோ அந்த அளவு புனிதமானது இந்த பர்வதமலை ,அங்கே கிடைக்காத மூலிகைகள் இல்லை .குணப்படுத்தவே முடியாது என கூறப்படுகின்ற கேன்சர் போன்ற நோய்களுக்கும் இங்கே மூலிகைகள் இருப்பதோடு , சித்தம் பேதலித்து இருப்பவர்களை கூட பித்தத்தை தெளியவைத்து குணமாக்குபவர்தான் இந்த பர்வத மலைமேல் இருக்கும்   மல்லிகார்ஜுனர்.
இதுதான் அம்பாள் சன்னதி .பர்வதவர்த்தினியாக இருந்த அந்த தாயாரை இப்பொழுது காலப்போக்கில் பிரமராம்பிகை என அழைக்கின்றனர் உண்மையில் இந்த தாயாருடைய பெயர் பர்வதவர்தினி என்பதாகும் .குழந்தை பேறு இல்லாதவர்கள் ,இந்த தாயாரை தொடர்ந்து வழிபட்டால் குழந்தைபேறு அடைவது திண்ணம் ,இது சிலரின் அனுபவ பூர்வ உண்மை.நாம் இந்த அம்மனை பார்த்துக்கொண்டே பின்னோக்கி செல்ல, செல்ல இந்த அம்மன் பெரியதாக தோன்றுவார் .அது இங்கே காணக்கிடைக்காத ஒரு அற்புதம் . .மேலும் பெண்கள் சம்பத்தப்பட்ட எல்லா நோய்களும் இவரை வழிபடும்போது தீர்ந்துவிடும் என்பதும் உண்மை.இங்கே உண்மையான பக்தியோடு வரும் சிலர் கூறுவது ,இந்த மலையில் இசை நர்த்தன ஓலி எல்லாம் கேட்கும் என ,ஆனால் அது உண்மை இங்குவரும் பலருக்கு இந்த ஓலி கேட்பதில்லை .இந்த மலையில் ,ஐயனும் ,அம்மையும் மிக ஆனந்தமாக நடனமாடுவார்கள் , அந்த ஒலி சில சமயம் காற்றோடு கலந்து ஒலிக்குமாம் .,அதை உணர்ந்தவர்களும் உண்டு.
மேலும் இந்த திருக்கோவிலை எந்த ராஜாவும் கட்டவில்லை,ஐயனும் ,அம்பாளும் சுயமாக வந்து அருள் புரிந்த மலை ,நான் மன்னன் நான் பெரிய அரசியல்வாதி ,நான் பெரியவன் இப்படி ஆணவத்தோடு வருகிற யாருக்கும் இங்கே இடமில்லை அவர்களால் மலைமேலேயே ஏறமுடியாது .இறை சிந்தனையோடு பயபக்தியோடு வருபவர்களுக்கு மட்டுமே இங்கே இடமுண்டு .மீதி உள்ளவர்கள் அனைவருக்கும் சோதனைதான் அவர்களை அந்த 60 % பாகத்திற்கு மேலே ஏற்றுவதில்லை அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார் அதாவது கடப்பாரை மலைக்கு மேலேயே அவர் ஏற்றுவதில்லை.அனைவரும் இங்கே சமம் .அதுதான் இந்த கோவிலின் சிறப்பு.
பொழுதும் விடிய தொடங்கிவிட்டது ,நாமும் மலையில் இருந்து கீழே இறங்க தொடங்கிட்டோம் .நாம இன்னைக்கு இவ்வுளவு சிறப்பா இங்கே வந்து கும்பிடுறோம்னா ,இயேசு பிறப்பதற்கு 2500 வருஷங்களுக்கு முன்பு பிறந்த ஆதிசங்கரர் தான் காரணம். அவர்தான் முதன் முதலில் மக்கள் வந்து வழிபடும் முறையை ஏற்படுத்தி வைத்தார்.அதற்கு முன்பே பூதகணங்கள் மற்றும் தேவகணங்கள் மட்டுமே வழிபட்டு வந்தன .ஆதிசங்கரர் இந்த வழியாக மாட்டுவண்டியில் வந்து கொண்டு இருக்கும் போது ,தானாகவே வண்டி நின்றதாம் ,அப்பொழுது அம்பாளே வந்து அவரை நிறுத்தி மலைக்கு மேலே அழைத்து சென்றாராம் ,அப்பொழுது மக்களின் உதவியுடன் கற்களை வைத்து படிக்கட்டுகள் போல் அமைத்து மேலே சென்று வழிபட்டாராம் ,அன்று முதல் மக்களும் அங்கே சென்று வழிபட தொடங்கினாராம் ,இன்று கம்பிகள் கட்டப்பட்டும் ,பாதைகளை அபாயகரமாக இருக்கின்றனவே ,அந்தகாலகட்டங்களில் எப்படி இருந்து இருக்கும் .நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.
மேலும் கிரிவலம் மற்றும் வழிபாடுகளை  சிறப்பாக ஆரம்பித்து வைத்த ,காஞ்சி மகாபெரியவர் மலைமீது ஏறும் போது பிடிக்கொருலிங்கம் இருப்பதை கண்டார் ,அவருடைய கண்களுக்கு அது தெரியும்,நம்மால் முடியுமா ,இனிமேல் ஒரு லிங்கத்தை கூட தான் மிதிக்க விரும்பவில்லை என கூறி கீழிறங்கி விட்டார்.இந்த மலையில் நிறைய சுனைகளை இருக்கின்றன .அவைகள் எல்லாம் சரியாக பராமரிப்பு இல்லாமல் எல்லோருக்கும் தெரியாமல் போய்விட்டது .மேலும் கூடுதல் தகவலாக ,பூலோகத்தின் பழைய வரைபடத்தில் இந்த பர்வதமலையானது பூமியின் இதயம் போல காட்சியளிக்கும் .என செவிவழி செய்திகளில் கூறுவர்..
இங்கே பயபக்தியுடன் அடிக்கொருலிங்கம் லிங்கம் அண்ணாமலை பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என வருகிற ஒவ்வொருவரும் ,இறைவனை  நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பல அடிகளை எடுத்து வைப்பார்.அப்படி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது ஒவ்வொரு கர்ம வினைகளாக விலக தொடங்கும் .இங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் சிவனே பாதுகாப்பு .அவரே ஒவ்வொருவரையும் பத்திரமாக அழைத்து செல்கிறார் என்பது செங்குத்தான ,ஆபத்தான இந்த மலைமீது ஏறுபவர்களுக்கு உணர்வு பூர்வமாக தெரியும்.ஒரு வழியாக எங்கள் தரிசனத்தை இனிதே முடித்து கொண்டு, பர்வதவர்தினியையும் , மல்லிகார்ஜுனரையும் தரிசித்த புண்ணியத்தோடு மலைமேல் இருந்து கீழே இறங்க தொடங்கினோம். மீண்டும் அடுத்தவாரம்  அன்னாபிஷேகம் அன்று மலைமேல் நடந்த அன்னாபிஷேகம் பற்றி விரிவாக பார்க்கலாம்..நன்றி.....




10 comments:

  1. பக்தி உணர்வூட்டும் அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்குன் நன்றி சகோ

      Delete
  2. முகநூலில் 24 மணி மணி நேரம் இருந்து கொண்டு... இங்கேயும்...!!!

    எப்படி....?

    ReplyDelete
  3. ஏற பயமாயிருக்கு இங்கிருந்தே வணங்கிக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கைத்தூக்கிவிட கடவுள் இருக்கார். பயப்படாம ஏறுங்க சகோ

      Delete
  4. பர்வதமலையை நேரில் சென்று காணும் வாய்ப்பு கிடைக்குமோ என தெரியவில்லை. ஆனால் உங்களது பதிவு எங்களை அவ்விடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது. இதைக்காண இறையருள் வேண்டும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா உங்களுக்கு இறையருள் கிடைக்கும் சகோ

      Delete
  5. பர்வத மலை பற்றிய விவரங்கள் மலைக்க வைக்கின்றன. செல்ல முடிந்தால் சென்று வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. வரும்போது சொல்லுங்கண்ணே! நான் திருவண்ணாமலைக்கு பக்கத்துலதான் இருக்கேன்

      Delete