Wednesday, September 04, 2019

வேட்டைக்குப்போகும் சுடலைமாட சாமி - சிறுதெய்வ வழிபாடு

தென்தமிழகத்தின் வழிப்பயணங்களில்  ஜன்னலில் நம்மை கடந்து செல்லும் காடு, மலை, மரம், மனிதர்களை கடப்பது போலவே ஊர் கடைசியில், வெட்டவெளியில் வலது கையில் வாளும், இடதுக்கையில் சூலமும், பின் இருக்கும் ஆறு கைகளில் மான்மழு, ஊன்றுகோல், உறுக்குத்தடி, கபாலம், திரிசூலம், வல்லாயுதம் ஏந்தி  சிவப்பேறிய கண்களுடனும், முறுக்குமீசையுடனும் வெள்ளைக்குதிரையில் அமர்ந்திருக்கும் காவல் தெய்வத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம்.  அவர் பெயர் சுடலைமாடன்.  அவரைப்பத்திதான் இன்றைய சிறுதெய்வ வழிபாட்டில் பார்க்கப்போறோம்.

சுடலை மாடன் பிறப்பிற்கு இரண்டு கதை சொல்லப்ப்படுது. ஒருமுறை அம்மையும், அப்பனும் பேசிக்கிட்டிருந்தாங்களாம். உலக உயிர்களுக்கு படியளக்கும் நேரம் வந்திட்டுது. நான் போய், அவரவர் விதிப்படி  எல்லாரும் பசியாற அவரவருக்கான உணவை சேரும்படி வழி செய்துட்டு வரேன்னு சொல்லி சிவன் கிளம்பினாராம். உடனே, பார்வதி தன் பக்கத்தில் போய்க்கிட்டிருந்த ஒரு எறும்பை பிடிச்சு ஒரு டப்பாக்குள் போட்டு அடைச்சு வச்சுக்கிட்டாங்க. போன வேலையை முடிச்சுட்டு டயர்டா வந்த சிவன்கிட்ட, என்னங்க போன காரியம் நல்லபடியா நடந்துச்சா?! எல்லா உயிர்களுக்கும் சாப்பாடு போய் சேர்ந்துச்சான்னு கேட்டாங்க. ம்ம்ம் எல்லா உயிர்களுக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்துட்டேன்னு சிவன் சொன்னாராம்.  அப்படியா! அப்ப இந்த டப்பாவில் இருக்கும் எறும்புக்கும் உணவு போய் சேர்ந்திருக்குமான்னு நக்கலா  கேட்டபடி டப்பாவை திறந்து பார்த்தால்,  எறும்பு டப்பாவில் ஒட்டிக்கிட்டிருந்த எதையோ சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சாம். பார்வதி தேவிக்கு தன் தவறு புரிந்தது. பரம்பொருளையே சந்தேகித்துவிட்டேன், என்னை மன்னியுங்கள்ன்னு பார்வதிதேவி சிவனை பணிந்தார். 

சிவனை பத்திதான் நமக்கு தெரியுமே! நெற்றிக்கண்ணை திறந்தாலும், குற்றம் குற்றமேன்னு திருவிளையாடல்லையே பார்த்திருக்கிறோமே! என் மனைவியே இருந்தாலும் என்னை சோதிச்சதால், பூலோகம் போய் வனப்பேச்சியாய் சுற்றித்திரின்னு சாபமிட்டார்.  பார்வதிதேவி கணவனை பிரியனுமேன்னு அழுதாங்க.    மயானத்திலிருந்தபடியே நீ என்னை நினைத்து தியானம் செய்.  உரியகாலம் வந்ததும் என்னை வந்தடைவாய்ன்னு சாப விமோசனம் தந்து பூமிக்கு பார்வதிதேவியை அனுப்பிட்டாங்க.  பார்வதிதேவியும் பூமிக்கு வந்து ஒரு மயானத்தில் வனபேச்சியம்மனாக அமர்ந்தாள்.  மனம் ஒன்றி ஈசனை எண்ணி தவம் புரிந்தாள்..

சிவன் வாக்களித்த நேரம் நெருங்கியது, பார்வதிதேவிமுன் தோன்றினார்.  அன்னையின் சாபத்தை நீக்கினார். "தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என சிவன் கேட்டார். பார்வதி தேவி, ஐயா! நமக்கு இரு புதல்வர்கள் இருக்காங்க. அதில் ஒன்னு கோவிச்சுக்கிட்டு பழனி மலையில் உக்காந்திருக்கு, இன்னொன்னு யானை முகத்தோடு முழுமுதற் கடவுள்ன்ற பேரில் பிசியா இருக்கு.  அவர்களை பிரிந்து வாழும் சூழல். நீங்களும், உலகை காக்கிறேன்னு அடிக்கடி காணாம போய்டுறீங்க! அதனால், எனக்கு துணையாக என்னோடு இருக்கமாதிரி அழகான ஒரு ஆம்பிள்ளை பிள்ளை வேணும்ன்னு கேட்டாங்க. 

உடனே, சிவன், பார்வதி!  அங்க பாரு! மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா?! அப்பிணம் கொழுந்துவிட்டு எரியும்போது,  நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து .உனக்கு ஓர் ஆண்குழந்தை கிடைக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயத்திற்கு வா!" என சொல்லி மறைஞ்சுட்டார்.  வனப்பேச்சியம்மனும் சிவன் சொன்னமாதிரி மயானத்தில் எரிஞ்சுக்கிட்டிருந்த பிணமொன்றின் அருகில் போனாங்க. பிணம் கொழுந்துவிட்டு எரியும் வேளை வந்ததும், அதன் அருகில் போய், தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் பிணத்தின் சதைகள் முத்துக்கள் போல் உருண்டு அன்னையின் மடியில் விழுந்தன. அப்படி விழுந்த சதைதுண்டுகள்  ஓர் சதைப் பிண்டமாக வனபேச்சியம்மாளின் மடியில் இணைந்தன. பிண்டத்திற்கு உயிர் இருக்கு.  ஆனா,  எந்த உறுப்புகளும் இல்லையேன்னு வனப்பேச்சியம்மன் கலங்கினாங்க. வனப்பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே!" என புலம்ப சிவன் அவள்முன்தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி பார்வதி தேவியிடம் கொடுக்கின்றார். 

முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என பேர் வச்சாங்க. பேர் வச்சா போதுமா?! சோறு வச்சியான்னு பின்னாடி பேசிடக்கூடாதுன்னு,  அமுதத்தையே  பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தாள்.  கொஞ்ச காலத்துக்கப்புறம் சுடலைமாடனோடு கயிலாயத்துக்கு போனாங்க.   முருகன், பிள்ளையார் இல்லாம, வெறிச்சோடி கிடந்த கயிலாயம் சுடலைமாடனின் வரவால், புதுப்பொலிவு கண்டது. என்னதான் ராஜா மாதிரி கயிலாயத்தில் இருந்தாலும், சுடலைமாடனின் வயிற்று பசி தீரலை.  ஒருநாள், தீராத பசியோடு சுடலைமாடன் படுத்திருந்தான்.  அவனுக்கு பசியினால் தூக்கம் வரலை.  அவன் பிறந்த  சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த வாசனை கயிலாயத்தின் சுடலை மாடனின் நாசிக்கு வந்து சேர்ந்தது. அன்னை ஊட்டும் அமுது நம்ம பசியை தீர்க்காது. நாம போய் அந்த பிணத்தை தின்று பசியை தீர்த்து வருவோம்ன்னு நினைச்சு கிளம்பினான்.  சுடலைமாடன் சுடுகாட்டுக்கு போய் எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்.

அம்மா தேடுவாங்கன்னு சுடலைமாடன் நல்ல பிள்ளையாய் கயிலாயம் திரும்பி அம்மாக்கு பக்கத்தில் படுத்திக்கிட்டார். இது வாடிக்கையானது. ஒருநாள், பக்கத்தில் படுத்திருக்கும் குழந்தையின்மீது பிணவாடை அடிப்பதை உணர்ந்தாள் பார்வதிதேவி. நடந்ததை ஞானதிருஷ்டியால் அறிந்தவள், குழந்தை வரம் கேட்டால், பிணத்தை தின்னும் குழந்தையை எனக்கு தந்துவிடிட்டீரேன்னு மீண்டும் சிவனிடம் முறையிட்டாள்.  பிணத்தை தின்றதால், சைவலோகமாய்  திகழும் கயிலாயத்தில் இனி சுடலைமாடன் இருப்பது தகாது. அதனால், சுடலையை அழைத்து, நீ பூலோகம் செல் என சிவன் சுடலைமாடனை பணித்தார்.

ஐயனே! என்னை உருவாக்கி வளர்த்தவரான தாங்களே  என்னை பூலோகத்திற்கு செல் என பணித்தால் நான் என்ன செய்வேன் என சுடலைமாடன் சிவனிடம்  முறையிட்டான். சுடலைமாடா!  நீ பூலோகம் செல்லும் காலம் வந்துவிட்டது. அதனால்தான், பிணத்தை உண்ணும் நிலை உனக்கு வந்தது. உனக்கான பணிகள் பூலோகத்தில் காத்திருக்கின்றது. நீ பூலோகம் சென்று அந்த பணிகளை கவனி என சிவன் பதில் சொன்னார்.  சரி, உங்கள் வாக்குப்படி நான் பூலோகம்  போகிறேன். ஆனால், தாங்கள் எனக்குக் கொடை கொடுத்து வரமளிக்க வேண்டும்" சுடலை விண்ணப்பித்தான்.  அப்படியா! உனக்கு எந்த மாதிரியான கொடை வேண்டும் என சிவன் கேட்க,  அதற்கு, ஐந்து வயது பாலகனான  சுடலை,  "எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் எனக்குப் படையல் இட வேண்டும். ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கல் அரிசி சோறும், ஒரு பரணில் சூலி ஆடுகளும், ஒரு பரணில் சூலி எருமைகளும், ஒரு பரணில் சூலி பன்றிகளுமாக, உயிர்ப்பலிகள் படையல் இடவேண்டும்."என்று கேட்டான். இதைக் கேட்டதும் கைலாயமே  அதிர்ந்தது. சைவத்தின் பிறப்பிடமான கயிலாயத்தில் அசைவப்படையலா?! அதும் சிவன் தரவேண்டுமென இந்த சிறுவன் கேட்டுவிட்டானே என முப்பத்து முக்கோடி தேவர்களும் திகைத்து நிற்க, அன்னையவள் பிணந்தின்னும் குழந்தையை வளர்த்ததை எண்ணி கூனிக்குறுகி நின்றாள். 

சிவன் சுடலைமாடனின் வேண்டுகோளுக்கு சம்மதித்தார். சைவதிருக்கோவிலான கயிலாயத்தில் அன்றைய தினம், சுடலைமாடனுக்கு அசைவப்படையல் சிவனின் மேற்பார்வையில் தயாரானது.  நாட்டிய மங்கைகள் நடனமாடினர். சுடலைமாடன் வந்தான். அசைவப்படையலை சிவன், சுடலைமாடனுக்கு படைக்க, அனைத்தையும் ஏற்க மறுத்த சுடலைமாடன், தனக்கு நரபலி கொடுக்க வேண்டுமென, சுடலைமாடன் கேட்க, ஈசனுக்கு கோவம் வந்தது. கோவத்தை அடக்க, காலை தரையில் தேய்க்க, தேவகணியன் தோன்றினான். தன் கையிலிருந்த மகுடியை இசைத்துக்கொண்டே நடனமாடினான். நடனம் உச்சக்கட்டத்தை எட்டும்போது தன் கையை கிழித்துக்கும்கொண்டும். நக்கை கடித்துக்கொண்டதாலும் ரத்தம் பெருக்கெடுத்தது.  அந்த ரத்தத்தையே பலியாய் சுடலைக்கு தேவகணியன் கொடுக்க, அதை நரபலியாய் சுடலைமாடன் ஏற்றுக்கொண்டு, மீண்டும் ஒரு வரத்தினை சிவனிடம் சுடலைமாடன் கேட்க, "ஓயாத பேய்களை அடக்கும் வரம் வேண்டும். தர்க்கம் செய்யும் பேய்களை நான் தடிக்கொண்டு ஓட்ட வேண்டும். நான் கொடுக்கும் மயான சாம்பலால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து போக வேண்டும். நல்லவர்கள் என்னைப் பணியாவிட்டாலும் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். கெட்டவர்கள் என் பாதம் பணிந்தாலும் அவர்களை நான் கருவறுக்க வரம் வேண்டும்" என்று சுடலைமாடன் வரம்  கேட்டான்.

மகனின் கோரிக்கை நியாயமானதென உணர்ந்த சிவன், நீ கேட்ட வரத்தினை தந்தேன் என வரமளித்து, சுடலையை கயிலாயத்தின் தெற்கு வாசல் வழியாய் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். சுடலைமாடனும் வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி சுடலைமாடசாமியாய் பூலோகம் வந்து சேர்ந்தார். திருக்கேதாரம் தொடங்கி அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.  வடநாட்டுப் புண்ணியதலங்களையெல்லாம் தரிசனம் செய்துவிட்டு  தென்னாடு நோக்கி வந்தார் சுடலைமாடசாமி.  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரையும், சிதம்பரத்து நடராஜரையும், திருவண்ணாமலை அண்ணாமலையாரையும் உட்பட அனைஅவரையும் தரிசித்துக்கொண்டே மலையாளதேசத்திற்கு சென்று புண்ணிய தலங்களை தரிசித்தார். அங்கு, பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரை என்ற ஊரை சுடலைமாடசாமி  வந்தடைந்தார். சுடலைமாட சுவாமி கொட்டாரக்கரை வந்து சேர்ந்த சமயத்தில் அங்கே கோயில் கொண்டிருந்த அன்னை பகவதிக்குத் திருவிழா. தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.. தேரிலே சிம்மக்கொடியைக் கண்டதும் தன் தாய்க்குத்தான் திருவிழா நடக்கிறது என்று அறிந்த சுடலைமாட சாமி  அன்னையிடம் அடைக்கலம் கேட்டு வணங்கி நின்றார். 

தேரின்மீதிருந்த அன்னை, கூட்டத்தோடு இருந்த சுடலைமாடசாமியை கவனிக்கவில்லை. அன்னையின் கவனத்தினை ஈர்க்கும்விதமாய், சுடலைமாடசாமி, ஒரே பாய்ச்சலாய் ஓடி தேர் முன் நின்றார். தேரின் அச்சு முறிந்தது. கோவிலின் கொடிமரத்தை உடைத்து, கோவில் கொடியை கிழித்தார். திருவிழா கூட்டத்தினுள் தேவதாசியின் நடனத்தை காமத்துடன் பார்த்துக்கொண்டிருருந்த ஒருவன் தலையை   பிடுங்கி எறிந்தார்.  அவனின் காமத்தை காசாக்கும் எண்ணத்துடன் இருந்த தேவதாசியின்மீது அந்த தலை பட்டதால் அவளும் இறந்தாள். அன்னையே கதியென இருந்த கோவில் பூசாரியையும் அடித்தார் சுடலைமாடசாமி. பூசாரி அன்னையிடம் முறையிட, அன்னை பகவதிக்கு பொறுக்கவில்லை. "யாருடா அது என் கோட்டைக்குள் அத்து மீறியது?" என்று கோபத்தோடு கிளம்பி வந்தாள்.

ருத்ரகோலத்தில் இருக்கும் தன்னை கண்டால், அன்னையின் கோபம் அதிகமாகும் என எண்ணிய சுடலைமாடசாமி ஏழு வயது பாலகனாக உருக்கொண்டு அன்னையின்முன் நடந்து வந்தார். பாலகனைக் கண்டதும் அன்னையின் தாய்மை பெருக்கெடுத்தது.  பாலகனை பக்கம் அழைத்து, யார்?! எந்த ஊர்?! பெற்றோர் யார் என விசாரித்தாள். கயிலாயத்தில் நடந்தவற்றையெல்லாம் சுடலைமாடன் பகவதி அம்மையிடம் சொல்ல,   எனக்கென யாருமில்லை தாயே! அதனால் உங்களை அடைக்கலம் கேட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கவே இப்படி செய்தேன் என சுடலைமாடன்சாமி கூறினார்.


யார் பெற்றால் என்ன?! என்னை அடைக்கலமென நாடி வந்ததால், நீ இனி என் மகன்.  நீ கேட்டவாறு உனக்கு அடைக்கலம் தந்தேன். முதலில் பசியாறு என பகவதி அம்மன் சுடலைமாட சாமியை அழைத்தாள். அன்னையே சிலகாலமாய்,  தங்கள் கோவிலை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன். இங்கு பச்சரிசி சாதம் தவிர வேறு எதும் இங்கு உமக்கு படையல் இடுவதில்லை.  இது என் பசியை தீர்க்காதே என்று சுடலைமாடசாமி சொல்ல,  உனக்கு வேறென்ன வேண்டுமென பகவதி அம்மை கேட்க, "ஒரு கோட்டைப் 
புழுங்கலரிசியில்  பொங்கி ஒரே படையலாக இடவேண்டும்" என சொன்னார்.  

யார் அன்னையும்  சுடலைமாடசாமி கேட்டபடி படையல் இட ஏற்பாடு செய்தாள். பகவதி அம்மையின் கோவிலின் ஈசான மூலையில் உள்ள, ஏழு கடாரம் தங்கத்தினை காவல் காக்கும் பொறுப்பினை சுடலைமாடசாமியிடம் தந்தாள். அன்றிலிருந்து, தங்கத்தினை காவல் காக்கும் பொறுப்பினை திறம்பட செய்துவந்தார் சுடலைமாடசாமி. கூடவே, கோவிலுக்கு வரும், கொடியவர்களை பலிக்கொள்ள ஆரம்பித்தார். இதைக் கண்ட பகவதிக்குப் பொறுக்கவில்லை "மகனே இங்க பார்... என்னை நாடி வருவோர் கெட்டோர்களென்றாலும், நல்லோர்களென்றாலும் அவர்களைக் காப்பது என் கடமை.. நீ அவர்களை வதம் செய்யக் கூடாது" என்று எச்சரித்தாள். இதைக் கேட்ட சுடலை மாடனோ "அம்மையே நீ தரும் சைவப் படையல் எனக்குப் போதவில்லை.. என்ன செய்வது?! என்னைப் படைத்த ஈசன் இப்படிப் படைத்து விட்டார்..  செவ்வாய் மற்றும் வெள்ளி  இரவுகளில் மயானத்தில் நான் வேட்டைக்குச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். அம்மையும் அனுமதி அளித்தாள். வ்வாறாக சுடலைமாடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்கு செல்வதோடு, அன்னையின் புதையலுக்கும் காவல் இருப்பதுமாக இருந்து வந்தார்.


கொட்டாரக்கரை பகவதி அம்மன் ஆலயத்தின் ஏழு கடாரம் தங்க புதையலுக்கு காவல் பொறுப்பிலிருந்தபோது,  கேரள தேசத்தில் நந்தம்புனலூர்ன்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு,  காளிப் பெரும்புலையன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு மந்திரவாதி. மந்திரத்தால் என்னவேண்டுமானாலும் செய்வான். அதனால், அவனுக்கு பயந்த மக்கள் அவனை அந்த ஊருக்கு தலைவனாக்கி வைத்திருந்தனர். ஊருக்கே தலைவனாய் இருந்தாலும், அவனுக்கு குழந்தைகள் ஏதுமில்லை. அது அவனுக்கு பெரும் கௌரவக்குறைச்சலாய் இருந்தது. தன் மனைவி புலக்கொடியாளை பாதளகண்டி ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சென்று ஒருமண்டலம் விரதம் இருந்து அம்மனை வணங்கி வரச்சொன்னான். புலக்கொடியாளும் அன்னையை நோக்கி கடும் விரதமிருந்தபோது, ஔவையார் நோன்பிருந்த வீட்டிலிருந்த ஒரு கொழுக்கட்டை மாவின் ஒரு துளியை காகமொன்று கவ்விக்கொண்டு விரதமிருந்த புலக்கொடியாள் மடியில் போட்டது. கேட்ட வரம் கிடைக்குமென மனநிம்மதியோடு வீடு திரும்பினாள் புலக்கொடியாள். அம்மன் அருளால், அழகிய  பெண் குழந்தையொன்றுக்கு தாயானாள். காளிப்புலையனின் குலதெய்வமான இசக்கியம்மன் நினைவாகவும், ஔவையார்  நோன்பு கொழுக்கட்டையின் மாவின் நினைவாகவும் மாவு+இசக்கி=மாவிசக்கி என பேர் வைத்து கண்ணின் மணியாய் காத்து வளர்த்து வந்தான். மாவிசக்கியும் படிப்பிலும், குணத்திலும்  சிறந்து விளங்கியதோடு யாரோடும் ஈடு சொல்லமுடியாத பேரழகியாய் திகழ்ந்தாள். மாவிசக்கி, சடங்காகி நின்றபோது, தன்னிடமிருந்த சொற்ப ஆபரணங்களை கொண்டு அழகுப்படுத்தி இருந்தாள் புலக்கொடியாள். மகளை கண்ட காளிப்புலையனுக்கு, தன் மகளை இன்னும் பல ஆபரணங்களைக்கொண்டு அழகுபார்க்க ஆசை வந்தது. 

உடனே, மந்திரக்கூடத்துகு  சென்று, காளியை வேண்டி அஞ்சனமை போட்டு   மிகுந்த தங்க நகைகள் எங்குள்ளது என பிரசன்னம் பார்த்தான். அதில்,  கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக இருப்பதை அறிந்தான். அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டான். ஆனால், காவலுக்கு சுடலைமாடன் இருப்பது அவனை யோசித்தான். செவ்வாய், வெள்ளிகளில் சுடலைமாடன் மயான வேட்டைக்கு கிளம்புவதை தெரிந்துக்கொண்ட சுடலைமாடன்,  கோவிலுக்குள் சென்று ஒரு கடாரம் தங்கத்தை கொள்ளையடித்து வீடு வந்து சேர்ந்தான். மயான வேட்டையிலிருந்து வந்த சுடலைமாடன்சாமிக்கு, ஒரு கடாரம் தங்கம் களவு போனதை அறிந்து கடும் கோபம் கொண்டார்.  அன்னை பகவதியிடம் சென்று, நடந்ததை சொல்லி, களவாடியது யார் என கேட்டார். அன்னையோ, எனக்கு நகை பெரிதல்ல. தங்கத்துக்கு ஆசைப்பட்ட எனது குழந்தை ஒருவன் கொண்டு சென்றான். அவனை மன்னித்துவிடு என சுடலைமாடசாமியை தேற்றினாள்.  சுடலைமாடசாமி பிடிவாதம் பிடிக்க, காளிப்புலையனை பற்றி அன்னை சொன்னாள்.  களவு போன தங்கத்தை மீட்டுவர அன்னையிடம்  அனுமதி கேட்டார் சுடலைமாடசாமி, மகனே! வேண்டாம். அவன் மிகப்பெரிய மந்திரவாதி.  உன்னை சிமிழ் ஒன்றில் அடைத்துவிடுவான் என எச்சரித்தாள். அம்மையே! நான் பரமசிவனிடம் வரம் வாங்கி வந்தவன். என்னை யாரும் ஒன்னும் செய்யமுடியாது. எனது காவலிலிருந்த தங்கத்தை கொள்ளை கொண்டவன் குடும்பத்தை பலிகொள்வேன் என பதமிட்டார். அப்போது தெரியும் மிகுந்த சக்திக்கொண்டது இந்த சுடலை மாயாண்டியா?! அல்லது அந்த மந்திரவாதியா?!என சொல்லி  ஆவேசமானார். இனி மகனை கட்டுப்படுத்த இயலாது என பகவதி அம்மனும் திருநீற்றைப்பூசி, வல்லயத்தை(ஈட்டி ) கையில் கொடுத்து ஆசி  வழங்கி அனுப்பி வைத்தாள். 

ஆவேசமாய் சென்ற சுடலைமாடன், மோசக்காரனை நாமும் வேசம் போட்டு மோசம் செய்வோமென பாம்பாட்டி வேடம் கொண்டு சில பாம்புகளை பிடித்து பெட்டியில் அடைத்துக்கொண்டு, நந்தப்புனலூர் வந்து சேர்ந்தார்.  பாம்புகளை காட்டி வித்தை காட்டினான். ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. ஆனால், காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. மாடியில் தலைக்கோதிக்கொண்டிருந்த மாவிசக்கியை கண்ட, சுடலைமாடன், இவளுக்காகத்தானே நகையை கொள்ளைக்கொண்டான். இவளை முதலில் பலிக்கொள்ள வேண்டுமென பண்டார ரூபங்கொண்டு, காளிப்புலையன் வீட்டுக்கு வந்து பிட்சை கேட்டார்.  மாவிசக்கியும் பிட்சையிட உணவினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள், அவள் கிழக்கு வாசலுக்கு வந்தால், வடக்கு வாசலுக்கு போனார் சுடலைமாடன், அவள் வடக்கு வாசலுக்கு வந்தால், மேற்கு வாசலில் நின்று போக்கு காட்டினார். கோவமடைந்த இசக்கி, கிழட்ட் பண்டாரமே! ஓரிடத்தில் நிற்க மாட்டாயா?! என கத்தினாள், நான் அன்னம் கேட்கவில்லை, உன் பெண் கேட்க வந்துள்ளேன் என சுடலைமாடன் சொல்ல, கிழட்டுப்பயலுக்கு நான் பொண்டாட்டியாக வேண்டுமா?! என் தந்தைக்கு தெரிந்தால் தலை துண்டாகும். இங்கிருந்து போய் தொலை என மிரட்டினாள் மாவிசக்க்.


சரி, அங்குமிங்கும் ஓடி, தாகமாய் உள்ளது. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா என சுடலைமாடன் சொல்ல,  தண்ணீரும் தரமுடியாது என மாவிசக்கி மறுக்க, உன்னை உன் தந்தையின்முன்னே கற்பழிப்பேன் என சபதம் செய்கிறார். நடந்ததை தந்தையிடம் சொல்கிறாள் மாவிசக்கி. தனது மகளிடமே வாலாட்டுபவன் யார் என அஞ்சனமைக்கொண்டு பார்க்க, அதில் எதுவும் தெரியவில்லை. மாந்திரீகத்தில் சிறந்து விளங்கும் தனக்கே ஒருவன் அகப்படவில்லையெனில் அவன் மிகுந்த சக்திகொண்டவனாய்தான் இருக்கவேண்டுமென முடிவெடுத்து, தன் மகள் மாவிசக்கிக்கு ஏழு அறைகளை அடுக்காக அமைத்து அதில் நடு அறையில்  மந்திரீக வளையம் அமைத்து அதன் நடுவே தனது மகளை அமரவைத்தான்.  சுடலைமாட சாமி பல்லி(எறும்பு எனவும் சொல்வதுண்டு) உருக்கொண்டு  அறையின் மேற்கூரையிலேறி அங்கிருந்து மந்திர வளையத்தினுள் இருந்த மாவிசக்கிமீது விழுந்து அவளே அறியாமல், அவளை கற்பழித்தார் சுடலைமாடசாமி. மறுநாள் காலையில் தன் நிலை உணர்ந்த மாவிசக்கி அழ, தனது மகளின் நிலைக்கண்ட, காளிப்புலையன் வந்தவன் மிகப்பெரிய சித்துக்காரன். அவனை எதிர்க்க முடியாது என உணர்ந்து வந்தவன் யாரென தனது ஏவல் தேவதைகளிடம் கேட்டான்.  அவைகளும் விடை தெரியாமல் விழித்தன. மாவிசக்கி கர்ப்பமானாள்.  கொள்ளைக்கொண்டவன் குடும்பத்தை பலிக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தார். 


நாட்கள் நகர்ந்தது. மாவிசக்கி நிறைமாத கர்ப்பிணியானாள். ஆலடிப்புதூரிலே காக்காச்சி மலை தாண்டி பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்தனர்.  அவர்கள் நிலத்தை பாழாக்கினால் புலையன் வருவான். அவனைப் பழிவாங்கலாம் என எண்ணிய சுடலைமாடசாமி, விவசாய நிலத்தை நாசம் செய்தார். காளிபுலையனிடம் விவசாயிகள் புகார் செய்தனர். சேதாரத்தை பார்வையிட கிளம்பிய காளிப்புலையனை அவன் மனைவி புலக்கொடியாள் , தான் கொடிய கனவு ஒன்று கண்டதாய் சொல்லி தடுத்தாள்.  மனைவியிடம், தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாது எனக்கூறி காக்காச்சி மலைக்கு போனான் காளிப்புலையன். அங்கு மைப்போட்டு பார்க்கும்போது, தானே அவன்முன் பிரசன்னமானார் சுடலைமாடசாமி. தான் யார் எனச்சொல்லி, என் அன்னையின் ஆலயத்துனுள் புகுந்து கொள்ளையடித்த உம்மை பழிவாங்கவே வந்தேன் என ஓங்கி ஓர் அடி அடித்தார் சுடலைமாடசாமி. கதிகலங்கிபோனான் புலையன். 

உமது வலிமை தெரியாமல் உமது காவலில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துவிட்டேன்.  என்னை மன்னித்து விடு என மன்றாடினான் காளிப்புலையன்.  இப்பொழுது தெரிகிறதா?! களவு கொடுத்தவனின் மனநிலை. எமது செல்வத்தை கொள்ளையடித்த வலி தெரியவே உமது மகளின் கற்பை சூரையாடினேன். உமது காவலில் இருந்த நிலத்தை பாழ்படுத்தினேன். யாருக்காக, நீ தங்கத்தை கொள்ளையடித்தாயோ அவளை பலிகொடுத்தால் உமக்கு மன்னிப்பு தருகிறேன். உன்னை மன்னிக்கிறேன் என சுடலைமாடசாமி சொல்ல, சரி, என் மகளை பலிக்கொடுக்க சம்மதிக்கிறேன். பதிலுக்கு நீ என் சிமிழுக்குள் அடைபடவேண்டுமென கோரிக்கை வைத்தான். சரி  என சம்மதித்தார் சுடலைமாடன், "ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம் வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில் செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே படையலாய் போட்டு சுடலைமாடசாமியை திருப்திப்படுத்த நினைத்தான் புலையன். படையலை ஏற்ற, சுடலைமாடசாமி, அடேய்! நான் கேட்ட உன் மகள் எங்கே என ஆவேசத்தோடு புலையனின் நெருங்கினான். மகளா?! உயிரா? என யோசித்த புலையன் உயிர் என முடிவெடுத்து, மகளை அழைத்து வந்து, கைகால்களை கட்டி வைத்து வயிற்றை கீற கத்தியை எடுத்தான்.




பெற்ற மகளென்றும் பாராது, பலிகொடுக்க துணிந்த நீ, . நான் மரித்து ஏழு நாட்களுக்குள் செத்துப் போவாய்." என்று சாபமிட்டு அழுதாள்.. மகளின் கதறலை காதில் வாங்காமல், வயிற்றை கீறி, கருவை வேரோடு பிடுங்கி, தலைவாழையிலையில் படையல் வைத்தான். படையலை ஏற்ற சுடலைமாடசாமி, புலையனின் சிமிழில் அடைந்தார். சுடலைமாடனை அடைத்துவிட்டோம். இனி, பகவதி அம்மன் கோவில் தங்கம் முழுக்க கொண்டு வந்துவிடலாம் என எண்ணினான் புலையன். மாடனை அடைத்த சிமிழை அருகிலிருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் எறிந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். புலக்கொடியாள் நீர் எடுக்க சென்ற புலக்கொடியாள், கணவனுக்கு சமைக்க நேரமானதால், அதிக தூரம் செல்ல முடியாது என யாரும் புழங்காத அந்த பாழடைந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

புலையனும் உணவு உண்ண அமர்ந்தான். குடிக்க தண்ணீரை செம்பில் நிரப்பி புலையன் அருகிள் வைத்தாள். தண்ணீர்  குடிக்க சொம்பை எடுத்த புலையன் கண்ணில் சிமிழ் பட்டது. ஐயோ! இந்த சிமிழ் இங்கு வந்தது எப்படி!? என திகைத்தபோது, புலக்கொடியாள் அவளும் திகைத்து, எப்படி வந்தது, என்ன இருக்கிறது என அறிய செம்பிலிருந்த சிமிழை எடுத்து திறந்தாள், சிமிழிலிருந்து ஆங்காரமாய் வெளிவந்த சுடலைமாடசாமி, மகளுக்காக கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்த மாபாதகன், தன் உயிர் காக்க, பெற்ற மகளையே பலிக்கொடுத்த பாவி, இனி நீ உயிரோடு இருக்கக்கூடாது என என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன் என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனையும், அவன் மனைவி புலக்கொடியாளையும் பலிக்கொண்டார்.



அன்னையின் ஆலயத்தில் களவாடிய ஒரு கடாரம் தங்கத்தோடு கொட்டாரக்கரை திரும்பி அன்னையிடம் சேர்ப்பித்தார். அன்னையே! இப்போது புரிகிறதா உனது மகனின் பராக்கிரமம்?! என பணிந்தார். திரவியங்களை மீட்டது சந்தோசம், உமது பராக்கிரமத்தினை மெச்சினோம். ஆனா, நீ இப்படிப் பழிவாங்குவதெல்லாம் கூடாதப்பா. தெய்வங்கள் மனிதர்களை ரட்சிக்க வேண்டும். இனி,  நீயும் வரங்கொடுக்கும் தெய்வமாக வேண்டும்" என்று அவனை ஆசீர்வதித்தாள். "அப்படியே செய்கிறேன் அன்னையே.. எனக்கு விடை கொடு" என்று சொல்லி அன்னையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொட்டாரக்கரையை விட்டுப் புறப்பட்டார். நேராக குற்றாலம் வந்து சேர்ந்தார். குற்றால அருவியில் குளித்து விட்டு திருக்குற்றால நாதரையும், அம்பிகையையும் வணங்கினார்... பின்னர் குற்றாலப்பதியிலேயே அருளும் தெய்வமாகி வரமருள ஆரம்பித்தார்.
ஊர்க்கடைசியில் அல்லது மயானத்துக்கு அருகில் சுடலைமாடனுக்கென கோவில் உண்டு. கோவில்ன்னா ஆகமவிதிப்படி ராஜகோபுரம், பள்ளியறை, கருவறை, மடப்பள்ளி என இருக்காது. மேற்கூரை இன்றி, வெட்டவெளியில் ஒரு பீடத்தின்மீது சுடலைமாடன் வீற்றிருப்பார். நித்திய பூஜைகள் என எதுவும் கிடையாது. சுடலைமாடனை குலதெய்வமாய் ஏற்றோர் வழிபாடு செய்தால் மட்டுமே உண்டு. மற்றபடி வருடத்திற்கு மூன்று நாட்கள் கொடைவிழா நடக்கும். வியாழக்கிழமை இரவில் குடியழைப்போடு விழா தொடங்கும். வெள்ளிக்கிழமை பலவித பட்சணங்கள், காய்கறிகள், பழங்கள், அசைவமென அன்னம் படைப்பு,  உச்சிகாலத்தில் தீபாராதனையும் நடக்கும்.
Image may contain: people standing and food

பலிகொடுத்த ஆடு, மாடு, பன்றியின் ரத்தம் கலந்த சாதம் ஒரு கலயத்தை ஒரு கையிலும், மறுகையில் தீவட்டியுடன்   மாலையில் சுவாமி மயானம் செல்வார். இதனை வேட்டைக்கு செல்லுதல் சொல்வாங்க. சாமி வேட்டைக்கு போகும்போது யாரும் எதிரில் வரக்கூடாது.  அப்படி எதிரில் வந்தால் மூன்று நாளுக்குள் மோட்சம் அடைவர் என நம்பிக்கை. கலயத்தில் இருக்கும் ரத்தச்சோற்றை ஊரின் நான்கு எல்லையில் வானத்தை நோக்கி சாமி ஆடுபவர் இறைப்பார். இதனால், தீய சக்திகள் ஊருக்குள் வராது என்பது நம்பிக்கை.  சாமி வேட்டைக்கு சென்று வந்த பின்னர் அருள்வாக்கு சொல்லுதல் நிகழும்.  அடுத்த நாள் சனிக்கிழமை பூப்படைப்பு தீபாராதனை, மாலையில் கணியன் கூத்துடன் விழா முடியும்.  கணியன் கூத்தில் கொடைவிழா நடத்துவபர்களின் குடும்பம் உட்பட, ஊரார், ஊரிலிருக்கும் ஆடு,மாடுகள் நலமோடு வாழவும், மழை பெய்து நிலவளம் செழிக்கவும் சுடலமாடனே வாழ்த்துவது போல இருக்கும்.  சுடலைமாடனின் படையலில் சுருட்டு, பிராந்தி,  அசைவம், பொரி, கடலை என கட்டாயம் இடம்பெறும். 

Image may contain: 1 person, outdoor


கோபம் தெறிக்கும் கண், வேல், வாள்ன்னு இருந்தாலும், தீயவர்களை மட்டுமே அழிக்கும் குணமுடையவன் இந்த சுடலைமாடன். பொருளை களவு கொடுத்தவர்கள், அநீதிக்கு ஆளானவர்கள் முறையிட்டால் ஓடோடி வருபவர். அவரை வணங்கும்போது சொல்லவேண்டிய மூலமந்திரம்..
"ஹரி ஓம் அகோரமாடா கெம்பிரமாடா 
ஆகாசமாடா பகவதி புத்திரா 
வீராதி வீரா வாவா ஐயும் கிலியும் சௌவும் 
நசி மசி வாவா சுவாகா"

மீண்டும் ஒரு சிறுதெய்வத்தின் கதையோடு சந்திப்போம்!!

நன்றியுடன்,
ராஜி.

2 comments:

  1. எத்தனை எத்தனை கதைகள்... விரிவான தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. இந்தக் கதை இன்றே அறிந்தேன். "கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி"ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete