Sunday, July 05, 2020

தம்பியென்ற நிலையை கடந்து போனானே! போனானே! - பாட்டு புத்தகம்

தனியாய் பிறந்து வளர்ந்ததால் எனக்காக, என் சார்பா பேச யாருமில்லைன்ற எண்ணம் எனக்கு இன்றுவரை உண்டு.  இரண்டாவது பெண்ணாய் பிறந்தபோது ஆண் பிள்ளை இல்லியேன்ற எண்ணத்தைவிட, இரு பெண்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாய் இருப்பாங்கன்ற எண்ணமே எனக்கு தோணுச்சு. வேண்டுதலின் பலனா?! இல்ல அம்மா அப்பா செய்த புண்ணியமான்னு தெரியாது. மூன்றாவது பையனா பிறந்தான்.  
என் விருப்பத்தின்படியே பிள்ளைகள் ஒன்னுக்கொன்னு ஆதரவா இருப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம மூணு பேரும் ஒன்னா இருப்பாங்க.. ரெண்டு வருசத்துக்கு முந்தி பெரியவளுக்கும் பையனுக்கும் கருத்து மோதல்...  பெரியவள் தம்பிக்கிட்ட கெஞ்சி, மன்னிப்பு கேட்டும் இருவரும் 2 வருசம் பேசிக்குறதே இல்ல. நான்கூட கெஞ்சுவேன்.. ம்ஹூம் மகனார் இரக்கம் காட்டவே இல்ல. பெரியவள்  கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சது. முதலில் மாப்பிள்ளையின் விவரத்தை மகனார் என்னிடம் கேட்க ஆரம்பிச்சான். படிப்படியா அவளுடன் பேச ஆரம்பிச்சு, இருபது வயசிலேயே ஒரு தகப்பனாய், அண்ணனாய், தம்பியாய் இருந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் கல்யாண வேலைகளை இழுத்து போட்டுக்கிட்டு செஞ்சான்...

இப்ப, கருத்தரித்தரிக்கும் அவளுக்கு ஒரு தாயாய், பாட்டியாய், அக்காவாய் இருந்து எப்படி உட்காரனும், என்ன சாப்பிடனும்ன்னு  சொல்வான். இதோ, வெளிநாட்டிலிருந்து வரும் அவன் அக்காவை கூட்டி வர, இந்த இக்கட்டான சூழலில் கேரளா வரை கார் ஓட்டி போய் இருக்கான். தேனி, குமுளி வழி காட்டுவழின்றதால் பயந்தோம். ம்ஹூம், நான் பொறுப்புன்னு கிளம்பி போய்ட்டான்.. குமுளி வழியா அவளை கூட்டி வருவது பாதுகாப்பில்லைன்னு நாகர்கோவில் செக்போஸ்ட்ல கெஞ்சி கூத்தாடி சமதளத்திலேயே பயணிச்சு பத்திரமா கூட்டியும் வந்துட்டான்.  என் மகள்களுக்கு எனக்கப்புறம் தாயாய் இருந்து பார்த்துப்பான்ன்ற நம்பிக்கை எனக்கு வந்திட்டுது..  

சிவப்பு, மஞ்சள், பச்சை படத்தின் கதை என் பிள்ளைகள் கதைப்போலத்தான்.. ஆரம்பத்தில் ஒற்றுமையா இருந்து, கொஞ்ச நாள் பேசாம இருந்து பிறகு பேசுறதுன்னு நிறைய விசயங்கள் ஒத்துபோகும்.. இந்த படத்தின் ஆழி சூழ்ந்த உலகிலே.. பாட்டு போகும்போதுலாம் என் பிள்ளைங்களை பார்க்குற மாதிரி இருக்கும்.


ஆழி சூழ்ந்த உலகிலே..
யாவும் அழகாச்சே!!
வயதை மீறிய வாழ்விலே
சிறுகவிதை உருவாச்சே!!

விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே!!
கிரீடமா?! பாரமா?!
புரியுமா சில நேரமே!

இவன் அண்ணன் பாதி..
தந்தை மீதி 
ஆனானே! ஆனானே!!
தம்பியென்ற நிலையை கடந்து 
போனானே! போனானே!

ஆழி சூழ்ந்த உலகிலே..
யாவும் அழகாச்சே!!

உறங்கும்போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது..
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது...

உலகமே இவளென இவன்
வாழும் அழகை பாரடா..
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா....
இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாதே! போதாதே!

இவன் அண்ணன் பாதி..
தந்தை மீதி ..
ஆனானே! ஆனானே!
தம்பியென்ற நிலையை கடந்து
 போனானே! போனானே!..

ஆழி சூழ்ந்த உலகிலே..
யாவும் அழகாச்சே!...

படம்: சிவப்பு, மஞ்சள், பச்சை
எழுதியவர்: மோகன் ராஜன்
இசை: சித்துகுமார்
பாடியவர்: ஸ்ரீகாந்த் ஹரிசரண்
நடிகர்கள்: ஜி.வி.பிரகாஷ், காஷ்மிரா பர்தேசி

பாட்டு எப்படி இருக்குன்னு கேட்டு சொல்லுங்க!!

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. // தாயாய், பாட்டியாய், அக்காவாய்... // இந்த அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை...

    அருமையான பாடல்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுண்ணே... பார்த்ததும் என் பிள்ளைங்க நினைவுதான் வரும்

      Delete
  2. உயரம் குறைந்த தாய்!   தம்பின்னா குள்ளமாதான் இருக்கணுமா?  அண்ணன்னாதான் உயரமா இருக்கணுமா?!!!

    ReplyDelete
    Replies
    1. பாட்டுல வரும் வயதை கவனிங்க.. குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் பிள்ளைகள் கடகடன்னு வளருவாங்க.

      Delete
  3. இது மாதிரி வருடக்கணக்கில் பேசிக்கொள்ளாத அண்ணன் தங்கையை எனக்குத்தெரியும்.  நாங்கள் அவனிடம் 'பேசு பேசு, இது தப்பு' என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  இன்னும் அவன் அவளுடன் பேசவில்லை.  இருவருக்குமே கல்யாண வயதும் வந்தாச்சு...ஹூம்...   பார்ப்போம்...  என்ன ஆகிறது என்று!

    ReplyDelete
  4. இந்தப் பாடல் இப்போதுதான் கேட்கிறேன்.  பரவாயில்லை.

    ReplyDelete

  5. இப்படிப்பட்ட பையன் உங்களுக்கு கிடைத்து இருப்பதற்கு பெருமையும் சந்தோஷமும் அதிகமாகப் படலாம். இது போல என்றும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இந்த அன்பும், பாசமும் என்றும் நிலைத்திருக்கட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் விழிகளில் நீர்த்திவளைகளுடன்...

    அன்பு, பாசத்தால் நஷ்டப்பட்டவன் நான் ஆகவே பதிவு என்னை உலுக்கி விட்டது.

    ReplyDelete
  7. உங்கள் மகன் பாசத்துடன் தன் அக்காவிடம் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். இது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்ற பிரார்த்தனைகள். தொடர்வார்.

    படமும் தெரியவில்லை. பாடல் இப்பத்தான் கேட்கிறோம்.

    துளசிதரன், கீதா

    பாட்டு ஓகே. கேட்கலாம்..

    கீதா

    ReplyDelete
  8. பாடல் நன்று. அக்காக்களுடன் பாசமாக இருக்கும் தம்பி! வாழ்த்துகள்

    ReplyDelete