Sunday, April 12, 2020

உன்கூடவே பொறக்கனும்.... உன் கூடவே இருக்கனும்.. - பாட்டு புத்தகம்

என் முதல் பொறந்த நாளுக்கு ரேடியோ செட் கட்டி, சீரியல் பல்ப் போட்டு ஊருக்கே விருந்து வச்ச அதே அப்பா, கல்யாணத்துக்குமுன்  புதுத்துணி எடுத்துக்கொடுத்து, எல்லாருக்கும் கொடுக்க சாக்லேட்டை வாங்கி தந்த அதே அப்பாதான் என்ன சாதிச்சேன்னு இப்ப பொறந்த நாள் கொண்டாடனும்ன்னு கேட்பாரு?!  ஞாயிற்றுக்கிழமைல பொறந்த நாள் வந்தால் பிரியாணியோடு மதியம் சாப்பாடு, கையில் ஒரு நூறு ரூபா. இதுதான் பல வருசமா தொடர்ந்து வருது...  பிள்ளைகள் வளர்ந்தபின் அதுங்க கேக் வாங்கி வந்து, எதாவது கிஃப்ட் பண்ணும்...


 ஊரடங்கு சட்டம் இருக்குறதால எல்லாமே கட். கால் எலும்பு முறிவுன்றதால் நடந்தும் வீட்டுக்கு போகமுடியாது. நைட்  12 மணி ஆச்சுது. போனை பார்த்துக்கிட்டே இருக்கேன்,. வாழ்த்து சொல்லி ஒரு மெசேஜ், போன் இல்ல...  பக்கத்துல படுத்திருந்த சின்ன பொண்ணும், பையனும்கூட கண்டுக்கல.   காலையில் செம கோவம்  பொறந்த நாளும் அதுமா எந்த எருமைக்காவது விஷ் பண்ணனும்ன்னு தோணுதா?! இனி பந்த பாசத்துக்கு இடமில்லைன்னு மனசுக்குள்  சங்கல்பம் எடுத்துக்கிட்டு டிபனை செஞ்சு யாரையும் கூப்பிடாம நான் மட்டும் சாப்பிட்டேன். 

காலை மணி 9.... சின்னவ, அம்மா! உன் சின்ன அண்ணன் வச்சிருக்கும் ஸ்டேட்டசை பாருன்னு சொன்னா, பார்த்து செம ஷாக். ஏன்னா, என் பொறந்த நாள் எங்க அப்பா, அம்மா பிள்ளைகள், மாமாக்கு மட்டுமே தெரியும். பேஸ்புக் வந்தபின் அதுல தெரிய வரும். ஆனா சொந்தக்காரங்களுக்கு தெரியாது.  

 கூட பொறந்தவங்க யாருமில்லாததால் பிரண்ட்ஸ்ங்க தங்களோட அண்ணன், தம்பிங்க பத்தி பேசினால் சின்ன வயசுல பொறாமைப்படுவேன். வீட்டுக்கு வந்து அழுவேன். 3 சகோதரிகள்,  2அண்ணன்கள் இருந்தாலும் நாங்க ஊரைவிட்டு வந்துட்டதால் பெருசா ஒட்டுதல் இல்ல. ஆனா, என் சின்ன அண்ணாக்கு மட்டும் என்மீது பாசம் உண்டு. எனக்கும் அப்படியே! வருசம் ஒருக்கா பார்த்தாலும் செல்லம் கொஞ்சும். என் கல்யாணத்தப்போ அண்ணன் முறையில் சடங்கு செஞ்சது சின்ன அண்ணந்தான். ரெண்டு பேருக்குமே கல்யாணம் முடிஞ்சு சந்திப்பு குறைஞ்சது. ஆனாலும், அவன் பாசம் குறையல. எதாவது விசேசத்துல சந்திக்கும் சில மணித்துளிகள்கூட என்னை அத்தனை அக்கறையாய் பார்த்துக்கும். அண்ணா நெசவு தொழிலாளி. வருமானம் கம்மி. நான் அதிகமா போய் வந்தால் அவனுக்கு செலவுன்னு அம்மா என்னைய அதிகம் போகவிடாது.   ஆனா, என் மகள் கல்யாணத்தில் தன் வசதியையும் மீறி அம்மா சொல்வதையும் மீறி தாய்மாமன் சீர் செஞ்சான்.  மனசுக்குள் பாசம் இருந்தாலும் அதிகமா போக்குவரத்து இருக்காது. 

சின்னவ இன்ஸ்டாகிராமில் பதிந்திருந்த பதிவை பார்த்துட்டு அண்ணன் மகள், அண்ணனிடம் சொல்ல, அண்ணன் வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் வச்சிருக்கார். அவர் வச்ச பாட்டை கேட்டதும் எனக்கு அழுகையே வந்திட்டு.    மதியமா போனில் வாழ்த்தியவர் என்ன நினைச்சாரோ அழுதிட்டாரு. உனக்கு நான் இருக்கேன்டாம்மா! யாருமில்லைன்னு நினைக்காத! அண்ணன் நானிருக்கேன் சொல்லிச்சு...  இரண்டு பேரின் பிள்ளைகளும் ஏக கலாட்டா.   ரெண்டுத்துக்கும் பாசமலர் சிவாஜி, சாவித்ரின்னு நினைப்புன்னு...





உன் கூடவே பொறக்கணும்..
உன்கூடவே இருக்கனும்....

உன்கூடவே பொறக்கணும்..

உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே!
உன் கூடவே பொறக்கணும்

உன் கூடவே பொறக்கணும்

தாய்போலவே நான் காக்கணும்.. எப்போதுமே!
என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே!!

என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே!!
பசி தூக்கத்த மறந்து நீயும்

அடி பாசத்த பொழிஞ்சாயே!!

தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே!!
நீ எனக்கு சாமி.. இந்த பூமி

அட எல்லாம் நீதானே!!

உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தருவேனே!!
உன் கூடவே பொறக்கணும்..


அஞ்சு விரல்கள கோர்த்து நாம

பத்து விரலா ஆனோமே!!

மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோமே!!
சிலநாளில் நீ என் தாயே!

சிலநாளில் நீ என் சேயே!

நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே!!
எப்போதுமே என்கூடத்தான்

என்று நினைச்சேன்

இப்போ நீயோ போகும்போது
செத்து பொழச்சேன்.
நீதானே கொலசாமி!

ஒரு வரமும் தாயேன்

மகளாக பொறப்பேன்னு
நீ சொல்லி போயேன்!!
உன் கூடவே பொறக்கணும்...

கடந்த பத்து நாளாய்  இந்த பாட்டுதான் மனசுலயும், உதட்டுலயும் ஓடிக்கிட்டிருக்கு. எதிர்பாராமல் வந்த வாழ்த்து.. வாழ்வினிதுன்னு சொல்லாம சொல்லுதோ!!   எதிர்பாராத இடத்திலிருந்து வந்த ஒரு வாழ்த்தும், நான் இருக்கேன்ன்ற வார்த்தையும்  இத்தனை குஷிப்படுத்துதே!  எதிர்பார்த்திருந்த இடத்திலிருந்து வந்திருந்தால்!?

படம்: நம்ம வீட்டு பிள்ளை
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ்,
இசை: இமான்
பாடியவர்: சித் ஸ்ரீராம்
நன்றியுடன்,
ராஜி



8 comments:

  1. கூடப் பிறந்தவர்களை நினைக்க வைக்கும் அருமையான பாடல்...

    ReplyDelete
  2. பாட்டு கேட்ட ஞாபகம் இருக்கு. உங்கள் பிறந்தநாள் மன உணர்வுகளைப் படித்து நெகிழ்ந்தேன்.

    ReplyDelete
  3. அன்பு சகோதரி , உங்களுக்கு பல நூறு உடன் பிறவா சகோதரர்கள் உள்ளனர் ,அதில் நானும் ஒருவன் !என்றும் உங்களுக்கு இன்றும் என்றும் நல்ல காலம் தான் சகோதரி !வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. பாட்டு இப்பத்தான் கேட்கிறேன் ராஜி. லிரிக்ஸ் எதுவுமே புரியலையே. ஃபுல் ம்யூசிக்காவே வருது. சித் ஸ்ரீராமின் குரல் ஆலாப் மட்டுமே பேக் க்ரவுன்ட்ல வருது. ஒரு வேளை வேறு வீடியோ இருக்குமோ? ம்யூசிக் நல்லாருக்கு. ஆனால் வரிகள் எதுவுமே க்ளியரா கேட்கலை. எனக்குத்தான் அப்படியோ ஒரு வேளை...

    பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜி.

    கீதா

    ReplyDelete
  5. ஓ கோரஸா பாடுறாங்களா....

    கீதா

    ReplyDelete
  6. ஒரு கூட்டுக்குள்ளே ஒன்றாய்
    கொரோனா இருக்க வைத்ததால்
    உங்கள் பாடல் அதனை உறுத்தி விடுகிறது

    ReplyDelete
  7. எனக்கு என்னமோ உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தான் இன்னும் பொருத்தமா இருக்கும் போல தெரியுது.

    தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete