Monday, October 23, 2017

வள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....

குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான். முருகன் இருக்கும் இடமெல்லாம் ஆன்மீக வியாபாரம் இருக்கும். கோவில் சிறுசோ பெருசோ ஆன்மீகம் சம்பந்தமான வியாபாரம் களை கட்டும். கூடவே, கசகசன்னு கூட்டமும் இருக்கும். ஆனா, வள்ளிமலை முருகன் கோவில் மட்டும் கூட்டம் அதிகமின்றி,  வியாபார சலசலப்பில்லாமல் கோவிலும், மலைப்பாதையும் வெகு அமைதியும், சுத்தமுமாய் உள்ளது.  இதற்கு காரணம், இம்மலை முருகனின் பராக்கிரமத்தையோ அல்லது திருவிளையாடலையோ உணர்த்தாமல் முருகனின் காதலை உணர்த்துவதால்  இந்த இடம் அமைதியாகவும், அழகாகவும் இருக்கு.  காதல் இருக்கும்வரை எல்லாமே அழகாதான் தெரியும்போல!

எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான் வள்ளி, முருகன் காதல் கதை.  இருந்தாலும், தல வரலாறு சொல்றது மரபு. அதனால, நாம முதல்ல  அதை பார்ப்போம்.  ஒருமுறை  சிவனின் ஆனந்த தாண்டவத்தை கண்ட விஷ்ணுவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. திருமகளின் ஆசியோடு கண்ணீரின் இரண்டு துளிகள் இரு பெண் பிள்ளைகளாய் மாறியது. விஷ்ணு, மகாலட்சுமிக்கு குழந்தைகள் இல்லாததால் இவ்விரு குழந்தைகளையும் தங்கள் பெண்பிள்ளைகளாய் நினைத்து அமுதவல்லி, சுந்தரவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். 
தந்தை விஷ்ணுவின் ஆலோசனைப்படி முருகனை மணாளனாய் அடைய வேண்டி, முருகனை நினைத்து தவம் செய்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கிய முருகன், அவ்விருவரையும் அழைத்து அமுதவல்லியை தேவலோகத்திலும், சுந்தரவல்லியை பூலோகத்திலும் பிறக்க கட்டளையிட்டார். முருகனின் அவதார நோக்கமான அசுர வதம் முடிந்ததும், தெய்வானையை மணந்தார். பின், சுந்தரவல்லிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, போரினால் ஏற்பட்ட அசதிக்கு ஓய்வெடுக்க திருத்தணிகை செல்வதாய் பொய்யுரைத்து தனித்து பயணமானார். 
வடுக நாட்டு எல்லையில் குறவர் குலத்தலைவன் நம்பிராஜனுக்கு பிறந்த அனைத்துமே ஆண் குழந்தைகள்தான். பெண்குழந்தைமீது பெரும் ஆவல் கொண்டு முருகப்பெருமானை வேண்டி நின்றான்.  நம்பிராஜனின் எல்லையில் உள்ள மலைச்சாரல் குகையில்தான் முருகனின் ஆணைப்படி மன்ணுலகம் வந்த சுந்தரவல்லி தவம் செய்து கொண்டிருந்தாள்.  அவளுக்கு காவலாக விஷ்ணுவும் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். நம்பிராஜனின் ஆசைப்படி சுந்தரவல்லி திருமாலின் கண்வழியே பாய்ந்து, அங்கு மான் உருவில் திரிந்த திருமகள் வயிற்றை கருவாய் அடைந்தாள். கருவுற்ற பெண்மான்  அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தது. பிறந்த குழந்தை மனித வடிவில் இருப்பதை கண்டு  வள்ளிக்கிழங்கை அகழ்ந்தெடுத்த குழியில் விட்டுவிட்டு அவ்விடம் விட்டு அகன்றது.  அங்கு வந்த நம்பிராஜன் அக்குழந்தைக்கு வள்ளி எனப்பெயரிட்டு கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தான்.

வள்ளி திருமணம் பருவம் அடைந்ததும், அவர்கள் குலவழக்கப்படி தினைப்புனம் காக்க தோழியரோடு சென்று, அங்கேயே பரண் அமைத்து தங்கி பறவைகளை விரட்டி பயிர்களை காப்பதோடு முருகனை நினைத்து தவமும் செய்து வந்தாள். இந்நிலையில் அங்கு வந்த முருகன்,  வேடனாக, வேங்கை மரமாக, விருத்தனாக வேடமிட்டு வள்ளிக்கு ரூட்டு விட்டார். எதுக்கும் மசியாதவளாய் முருகனை நினைவாகவே இருந்தாள்.
யார் துணையுமின்றி காதல் நிறைவேறாது என்பது காதலின் விதி. அதன்படி, முருகன் அண்ணனிடம் உதவி கேட்டார்.  தனக்குதான் கல்யாணம் ஆகலியே! தனக்கும் சேர்த்து ரெண்டா கட்டி தம்பி சந்தோசமா இருக்கட்டும்ன்னு நினைச்ச அண்ணன் இதுக்கு ஓகே சொல்ல... முருகன் வயோதிகர் வேடம் கொண்டு வள்ளியிடம் காதல் வார்த்தை பேசினார்.
அதை சகியாத வள்ளி ஓட, கிழவன் துரத்த.. வள்ளி, தன் எதிரில் வந்த யானையை கண்டு பயந்து முருகனை கட்டிக்க....  ஐயோ! பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு... காடில்லப்பா. லவ்வு. அப்புறமென்ன?! டும்.. டும்.. டும்...தான். கல்யாணம் நடந்திச்சு. இதான் இந்த தலத்தோட ஹிஸ்ட்ரி, ஜியாகரபி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரிலாம்....

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வ‌ள்‌ளிமலை‌க்கு‌ வர அதிகபட்சம் மூன்று ம‌ணி நேர‌ம் ஆகு‌ம். அதில்லாம,  செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி, ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம். அதில்லாம திருவலம், ராணிப்பேட்டை, காங்கேயநல்லூர், வேலூரிலிருந்தும் தனிப்பேருந்து உண்டு. ஆனா, அதுலாம் குறிப்ப்ட்ட நேரத்துக்குதான்.   இதான் மலைக்கோவிலுக்கு செல்லும் முகப்பு வாயில். 

இந்த திருக்குளத்திற்கு சரவணபொய்கை என்று பெயர். இங்கிருந்து பாதை இரண்டாக பிரியும். ஒன்று முருகன் கோவிலுக்கும், மற்றொன்று இங்கு வாழ்ந்த சச்சிதானந்த சுவாமிகள் சமாதி, வள்ளிச்சுனை, முருகன் உருமாறிய வேங்கை மரம், வள்ளி குளித்த தடாகம், பொங்கி அம்மன் ஆலயம் செல்லும் வழி என பிரிகிறது.
வள்ளி அம்மனுக்கென தனி ஆலயம்....  திருமணத்தடை அகல அம்மனை வேண்டிக்கும் வழக்கம் இங்குள்ளது. வாரியார் சுவாமிகள் பிறந்த ஊர் வேலூர் காங்கேயநல்லூர். அவர் சென்னைக்கு வரனும்ன்னா இந்த வள்ளிமலை வழியாதான் வரனும். அதனால, அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவார். இதோட இயற்கை அழகு கெட்டு போகக்கூடாதுங்குறதுல ரொம்ப கவனமா இருந்தார். மலைமேல் எந்த காங்க்ரீட் கட்டடமும் கட்ட அனுமதிக்கல.
மூச்சு வாங்க வைக்கும் படிகள். தங்கி ஓய்வெடுத்து செல்ல ஆங்காங்கு மண்டபங்கள் இருக்கு. இதில் ஒரு எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அது மிக சிறப்பு வாய்ந்தது. எல்லா மண்டபங்களையும் செப்பனிடும்போது இந்த எட்டுக்கால்மண்டபத்தை செப்பனிட அங்கிருக்கும் கல்லை பெயர்த்தபோது அங்கிருந்து வாசனை மிகுந்த புகை வர அப்படியே விட்டுவிட்டார்களாம்.  அதன்பின், சாமியாடி ஒருவர் அங்கு சித்தர்கள் வாசம் செய்வதாக சொல்ல அந்த கல்லை மட்டும் அப்படியே பழமை மாறாமல் இருக்கு. இங்கிருக்கும் சித்தர் பேர் விபூதி சித்தர்.
நூற்றுக்கும் அதிகமான படிகளை ஏறிய பின், நம்மை வரவேற்பது முருகனின் வாகனமான மயில்.... அழகிய சுத்தமான பிரகாரத்தைக்கொண்ட கற்கோவில்...
கோவிலின் உள் குகை... நன்றி மறப்பது நன்றன்று என்ற கூற்றுக்கு ஏற்ப காதலுக்கு ஹெல்ப் செஞ்ச வினாயகருக்கு ஒரு சன்னிதி. இந்த குகைக்கோவில் ஒரே கல்லினை குடைந்து உருவாக்கப்பட்டது. காலத்தின் மாற்றம் கோவிலில் தெரிகின்றது. எக்சாஸ்ட் ஃபேன், ஏசி என முருகன்   செமயா வாழ்றார்யா.

அங்கு சுவற்றில் வள்ளி அம்மன் சிற்பம் உண்டு. அதற்கு உடை அலங்காரம் செய்து இருக்காங்க.  கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் அருள்பாலிக்கிறார். எந்த முருகன் கோவிலிலும் இல்லாத அதிசயமாய் இங்கு சடாமுடி வைத்து தீர்த்தம் தருகின்றனர். இக்கோவில் இந்திய தொல்துறை வசம் உள்ளது.
இங்கிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் சலஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஆசிரம்,  வள்ளி சுனை, வேங்கிமரம் இருக்கு.. அதுக்கு சரியான பாதை வசதி கிடையாது. கற்களும், பாறைகளும், மரங்களும் அடர்ந்து காணப்படுது. பெண்கள், தக்க துணையின்றி இப்பாதையில் பயணிப்பதை தவிர்க்கலாம்.  பாறைகள் ஒவ்வொன்றும் யானை வடிவம் கொண்டு மிரட்டுது.
இதுதான் சலஸ்ரீ திருப்புகழ் சுவாமிகள் ஆலயம். மிக சுத்தமாக பராமரிக்கப்படுது. முன்கூட்டியே சொன்னால், சாப்பாடு செஞ்சு கொடுக்குறாங்க.

சுவாமிகள் ஓய்வெடுத்த நாற்காலி.. ஒருமுறை இந்த பாதை வழியே சென்றுக்கொண்டிருந்த ஒரு சிறுமி அவரை தடுத்தி நிறுத்தி யாசகம் கேட்டாளாம். என்னிடம் எதுமில்லை பாப்பா என சொன்னதுக்கு.. எதுவுமே இல்லியா?! உன்னிடம் அன்புகூடவா இல்லயென கேட்டு பரிகசித்து சிரிக்க சுவாமிகளுக்கு ஞானம் உண்டாகி இங்கயே தங்கி தவம் புரிந்ததாய் சொல்கிறார்கள். சுவாமிகளின் ஞானக்கண்ணை திறந்தவள் பொங்கி அம்மன்., அவளுக்கும் இங்கு ஒரு ஆலயம் உண்டு.
பொங்கி அம்மன்.. சரஸ்வதி தேவியின் அம்சம்...


வயோதிகனாய் தன் இல்லம் நாடி வந்த முருகனுக்கு தேனும், தினைமாவும் கலந்து உருண்டை பிடித்து கொடுக்க, மாயவன் மருமகனான முருகன் விக்கலெடுத்ததாக நடிக்க, நீரெடுக்க சென்ற வள்ளியை தடுத்து நிறுத்தி சூரியன் காணா சுனைநீர் வேண்டுமென முருகன் கேட்க..

அருகிலிருந்த சுனையில் நீரெடுத்து வந்து தந்திருக்கிறாள். இன்றும், இச்சுனையில் சூரியன் கதிர் விழாது. இச்சுனை நீர் அத்தனை குளிர்ச்சி, அத்தனை சுவை...
இந்த மலைப்பாறைக்கு பிந்தான் வள்ளி குளித்த தடாகம்... வள்ளி மஞ்சள் அரைத்த பாறை இங்கதான் இருக்கு. இன்னிக்கும் அந்த பாறையில் வெள்ளைத்துணியை தேய்த்தால் மஞ்சள் நிறமாய் மாறுவதை காணலாம்...  இங்குதான் முருகன் வேங்கை உருமாறி நின்றது, இப்ப அந்த மரம் இல்ல. மலையில் எதும் கிடைக்காது. குளுக்கோஸ், குடிநீர் என எல்லாமே நாமதான் கொண்டு போகனும். நமக்கு லக் இருந்தா நாம கோவிலுக்கு போகும்போது பிரசாதம் கொடுத்தாதான் உண்டு. எனக்கு அந்த லக் கிடைக்கல. உங்களுக்கு கிடைக்குதான்னு பாருங்க.. படங்கள் அனைத்தும் கூகுள்ல சுட்டது.
ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், சஷ்டி என முருகன் சம்பந்தமான அனைத்து விழாக்களும் சிறப்புற நடைப்பெறுது.வள்ளி மணாளனை நினைத்து வணங்குவோம். அனைத்து நலன்களும் பெறுவோம். நாளைக்கு வேற ஒரு முருகன் கோவில் பத்தி பார்ப்போம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1475592
நன்றியுடன்,
ராஜி.

14 comments:

  1. aanmega varalarudan muruhan thagaval arumai.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. புகைப்படங்கள் அருமை

    ReplyDelete
  3. //தனக்குதான் கல்யாணம் ஆகலியே! தனக்கும் சேர்த்து ரெண்டா கட்டி தம்பி சந்தோசமா இருக்கட்டும்ன்னு நினைச்ச அண்ணன்//

    ஹா..... ஹா.....ஹா...

    இந்த இடம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஒருமுறை செல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வேலூர் பக்கம் இருக்கு. சரியான ஹோட்டல் வசதிலாம் இருக்காது. இயற்கை அழகு செமயா இருக்கும். ஒருநாள் செலவழிக்குற மாதிரி வாங்க. வரும்போது சொல்லுங்க. இன்னும் கூடுதல் தகவல் சொல்றேன்.

      Delete
  4. வள்ளிக்கணவன் பெயரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் உருகுதடி கிளியே ஊனும் உருகுதடி

    ReplyDelete
  5. ஆஹா அழகிய வனம்...

    '////வள்ளியின் எதிரில் வந்த யானையை கண்டு பயந்து முருகனை கட்டிக்க.... ஐயோ! பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு... காடில்லப்பா. லவ்வு///.

    முருகன் கதையை...கொஞ்சம் ரொமாண்டிக்கா தான் சொல்லறீங்க ராஜிக்கா...



    ReplyDelete
    Replies
    1. உள்ளத்தில் காதல் இருந்தா உலகமே அழகாவும், ரொமாண்டிக்காவும் இருக்கும். இப்ப ஐ ம் இன் லவ் மூட்ப்ப்பா

      Delete
  6. ////பரண் அமைத்து தங்கி பறவைகளை விரட்டி பயிர்களை காப்பதோடு முருகனை நினைத்து தவமும் செய்து வந்தாள்////


    ... வயது பெண்ணை காவலுக்கு அனுப்பலாமா....என்ற எண்ணம் வரும்..ஆனால் அந்த காலத்தில் பெண்கள் காவல் இருந்தால் அந்த இடத்திற்கு திருடர்கள் வர மாட்டார்கலாம் ...

    ..அதனால் காக்கா, குருவி விரட்டுவது தான் அவர்கள் பணி......

    அக்காலத்தில் திருடர்களிடமும் பெண்ணை மதிக்கும் பாங்கு ...

    ...நேற்று கேட்டவை...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! இது புது தக்வல். எனக்கு தெரியாதுப்பா.

      Delete
  7. வள்ளி வள்ளி என்று வந்தான் வடிவேலன் தான்.
    தினைபுனைகளை காத்த வள்ளியை காக்க வந்த கந்தன் .
    படங்களும் கதை விவரிப்பும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

      Delete