Showing posts with label காரக்குழம்பு. Show all posts
Showing posts with label காரக்குழம்பு. Show all posts

Tuesday, December 17, 2013

வேர்க்கடலை, கத்திரிக்காய் காரக்குழம்பு -கிச்சன் கார்னர்

சாம்பார், கூட்டு, பொறியல்ன்னு கத்திரிக்காய் எந்த ரூபத்துல என் பசங்களுக்கு பிடிக்கும். அதுலயும் வேர்க்கடலை அரைச்சு ஊத்தி செய்யும் காரக்குழம்புன்னா நிமிசத்துல காலி ஆகிடும். 

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - கைப்பிடி
பிஞ்சு கத்திரிக்காய் - 5(குட்டி, குட்டி காயா இருந்தா நல்லது)
வெங்காயம் - 1
தக்காளி- 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சீர்கம் - சிற்து
கடுகு- சிறிது
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் 2 டீஸ்பூன்
மஞ்சப்பொடி - சிறிது

வறுக்காத வேர்க்கடலையை தோலோடு மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க.

கத்திரிக்காய் சின்ன, சின்னதா இருந்தா காம்பை மட்டும் கட் பண்ணிட்டு நாலா கீறி முழுசாவும், கத்திரிக்காய் பெருசா இருந்தா நீள வாக்குல கீறி எண்ணெயில வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.

கடாயில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் சீரகம், கடுகு போட்டு பொறிய விடுங்க.

கடுகு, சீரகம் பொறிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமா வதக்கிங்கோங்க.
அடுத்து தக்காளி போட்டு வதக்கிக்கோங்க. 

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேருங்க.

உப்பு சேர்த்துக்கோங்க.

அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை போட்டு வதக்குங்க.


வேர்க்கடலை பச்சை வாசனை போனதும் தேவையான அளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து,  மிளகாய் தூள் வாசனை போகும் வரை வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க.
கத்திரிக்காய் சேர்த்து கொதிக்க விடுங்க. 

கத்திரிக்காய் நல்லா வெந்ததும் புளிக் கரைச்சு ஊத்திக் கொதிக்க விடுங்க.

காரசாரமான கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி.சூடான சாதத்துல நெய் சேர்த்து சாப்பிட செமயா இருக்கும். வேர்க்கடலை போட்டிருக்குறதால ருசி கூடுதலா இருக்கும். சட்டுன்னு அடிப்பிடிச்சுக்கும். அதனால, அப்பப்ப குழம்பை கிளறி விடுங்க. உங்களுக்கு முடியாட்டி சமைக்குறது பெண்களா இருந்தா வூட்டுக்காரரை கிளறி விடச்சொல்லுங்க. சமைக்குறது ஆண்களா இருந்தா வேற வழியே இல்ல குழம்பு கொதிச்சு இறக்கும் வரை நீங்களே கிளறிவிடுங்க.

வேற ஒரு ரெசிபியோட அடுத்த வாரம் பார்க்கலாம்!! இப்ப டாட்டா! பை பை! சீ யூ.

Tuesday, November 19, 2013

சீரக காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

ரெண்டு நாள் ஜுரத்துல படுத்தெழுந்தா எதாவது காரசாரமா சாப்பிடத் தோணும். அதுக்காக, சிக்கன், மட்டன்னு வெளுத்து வாங்க முடியாது. சீக்கிரம் செரிமானம் ஆகாதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நேரத்துல காரமும், புளிப்பும் சேர்ந்த மாதிரி எதாவது செஞ்சுச் சாப்பிட்டா உடம்புக்கும் நல்லது, நாக்குக்கும் ருசி திரும்பக் கிடைக்கும்.

காரமும், புளிப்பும் சேர்ந்த சீரகக் காரக்குழம்பு எப்படிச் செய்யுறதுன்னு இன்னிய கிச்சன் கார்னர்ல பார்க்கலாம். 

தேவையானப் பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி- 2
பூண்டு- 10 பல்
சீரகம் -1டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புளி- எலுமிச்சை அளவு.
தேங்காய் - 2 பத்தை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்

புளியை ஊற வச்சுக்கோங்க. வெங்காயம், தக்காளி நறுக்கி வெச்சுக்கோங்க.  பூண்டை உரிச்சு நசுக்கி வச்சுக்கோங்க. 

சீரகத்தை வெறும் வாணலில, சிவக்க வறுத்து எடுத்து வச்சுக்கோங்க. 


வாணலியை அடுப்பில வச்சு எண்ணெய் ஊத்தி சூடானதும் கடுகு போட்டு பொறிய விடுங்க. அடுத்து நசுக்கி வெச்சிருக்கும் பூண்டை போட்டு வதக்குங்க.

அடுத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமா மாறும் வரை வதக்குங்க.

அடுத்து வெட்டி வச்சிருக்கும் தக்காளியை போட்டு நல்லா வதக்குங்க. 

நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்துக்கோங்க. 

அடுத்து மிளகாய் தூள், தனியாதூள் சேர்த்து வதக்கிக்கோங்க.

அடுத்து உப்பு சேர்த்து, கரைச்சு வச்ச புளித்தண்ணியை ஊத்தி நல்லா கொதிக்க விடுங்க. 
குழம்பு நல்லா கொதிச்சு மிளகாய்தூள், புளி வாசனை போனதும், வறுத்து வச்சிருக்கும் சீரகத்தையும், தேங்காய் பத்தையையும் தண்ணி விட்டு நைசா அரைச்சு குழம்புல சேர்த்து கொதிக்க விடுங்க.
சீரக வாசனையோடு காரக்குழமு ரெடி. சூடா சாதத்துல நெய் விட்டுக்கிட்டு இந்த காரக்குழம்பையும் கூடவே அப்பளத்தையும் சேர்த்து சாப்பிட்டா நாக்குக்கு ருசியாவும், உடம்புக்கு தெம்பாவும் இருக்கும். ஏன்னா, சீரகம் தலைசுத்தல், வாந்தி, மயக்கம், பித்தம், அஜீரணம், வாயுத்தொல்லையை சரியாக்கும் மருத்துவ குணம் கொண்டது. 

எங்க ஊர்லலாம் பெரிய வெங்காயம்தான் அதிகமா யூஸ் பண்ணுவோம். சின்ன வெங்காயத்தை கிடைச்சா அதையே போடுவேன். முழுசா சின்ன வெங்காயம், பூண்டை போட்டு செஞ்சா என் பையன் பூண்டு, வெங்காயத்தைலாம் அவனே சாப்பிட்டு வெறும் குழம்பை மட்டும் எங்களுக்கு வைப்பான்.

மொபைல்ல எடுத்த போட்டோக்கள். அதனால, படம் தெளிவில்லாமதான் இருக்கும். மன்னிச்சு.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட உங்களை சந்திக்குறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!?