Friday, January 03, 2014

திருப்பதி போனா திருப்பம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் ”திருப்பதி” ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சின்னமாகவும் உலக அளவில் புகழ் பெற்று விளங்குது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் , ஏழுமலைகளுக்கு இடையில் இருக்கும் ஒரு மலை உச்சியில் திருமலை யில் அமைந்திருக்கு. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். 

”திரு”ன்ற சொல்லுக்கு “எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட இறைச்சக்தி”ன்னு பொருள், ”பதி”ன்ற சொல்லுக்கு ”ஸ்தலம்”ன்னு பொருள். அதாவது, இறவன் குடிக்கொண்டிருக்கும் இடம்ன்னு பொருள் படும்படியா திருப்பதின்னு இத்தலத்திற்கு பேர் வந்திருக்கு.

வெங்கடேசப்பெருமாள் கோவில் அமைந்திருக்கும் மலைபகுதி திருமலைன்னும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்திருக்கும் மலையின் கீழ்ப்பகுதி திருப்பதின்னும் அழைக்கப்படுது. திருமலைன்னு அழைக்கப்படும் மலைப்பகுதி, உலகிலேயே இரண்டாவது பழமையான பாறை மலையமைப்பைக் கொண்டதாக புவிஅறிவியல் ரீதியாகக் கண்டறிப்பட்டிருக்கு.
 
திருப்பதிக் கோவில், யாரால, எப்போது கட்டப்பட்டதுன்னு ஆதாரம் ஏதுமில்லை. ஆனா, சங்கத் தமிழ் இலக்கியங்களில் திருமலையானது “திருவேங்கடம்”ன்ற பேரால் இடம் பெற்றிருக்கு.

இக்கோவில் தொண்டை மண்டல மன்னனா இருந்த “தொண்டைமான் இளந்திரையன்” என்பவரால் எழுப்பப்பட்டிருக்கலாம்ன்னு பல தமிழ்ப்புலவர்களின் பாடல்களிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஓரளவு கணிக்க முடிகிறது.

பின்னர் இக்கோவில் 4ம் நூற்றாண்டிலிருந்து பல தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கு. பல்லவ வம்சத்தைத் தொடர்ந்து சோழ வம்சம், விஜயநகர வம்சத்தவர்கள் பராமரிப்பில் இக்கோவில் இருந்து வந்திருக்கு.”திருவேங்டமலை” என்பது காலப்போக்கில் மாறி திருமலைன்ற பேர்ல நிலைத்து நின்று விட்டது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் ”புளிய மரம்”.

எல்லா இந்தியக் கோவில்களையும் போல இக்கோவிலும்,14ம் மற்றும் 15ம் ஆண்டுகளில் நிகந்த முஸ்லீம் ஊடுருவல் மற்றும் கொள்ளையிலிருந்து தப்பியது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது காலணிய ஆட்சியாளர்கள் இந்த கோவிலின் நடைமுறையில் தலையிடாமல் இருந்தனர்.

1933 ம் ஆண்டில் “மெட்ராஸ் பிரசிடென்சி” அரசாங்கம் ”திருமலா தேவஸ்தான கமிட்டி”ன்ற தன்னாட்சி குழுவை அமைத்து கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தது, அரசால் நியமிக்கப்படும் கமிஷ்னர் மூலம் இக்கோவில் நிர்மானிக்கப்படும் முறையை கொண்டு வந்தனர்.  ஆகம நெறிகளில் இந்த கமிட்டிக்கு அறிவுறை கூற ‘ஆகம ஆலோசனைக்குழு’ ஒன்றையும் உருவாக்கினாங்க. 

தினம் ஒரு பண்டிகைக் கொண்டாடினாலும் மே மாதத்தில் நடைபெறும் கங்கம்மா ஜாத்ரா, விஜயநகர திருவிழா, சந்திரகிரி கோட்டை திருவிழா மற்றும் ராயலசீமா நடனம் மற்றும் உணவுத்திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிளை கொண்டாடுறாங்க.


கோவில் வளாகத்திற்குள் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தைக்காரர்களுக்கு வசதியாக பேட்டரி கார் இயக்கப்படுது. அதுமட்டுமில்லாம, ஆங்காங்கு கழிப்பிட வசதியும் இருக்கு. 

மலைக்கோவில் மட்டுமில்லாமல் வராகஸ்வாமி கோவில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோவில், பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜா கோவில், சீனிவாசக் கோவில், பாபநாசம், ஆகாசக்கங்கை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவையும் பார்த்துட்டு வரலாம். கோவிலுக்குள் ஆண்கள் வேட்டி சட்டை, ஃபேண்ட் சட்டை, குர்தா போன்ற உடைகளும், பெண்கள் சேலை, சுடிதார், பாவாடைதாவணி போன்ற உடைகளிலும் மட்டுமே அனுமதி. செல்போன், கேமரா போன்றவை கோவிலுக்குள் அனுமதி இல்லை.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு,கொல்கத்தாவிலிருந்து விமானசேவையும், நிறைய ரயில் மற்றும் பேருந்து வசதியும் இருக்கு. சொந்த கார் இருந்தால் போகலாம். வாடகைகார் கொண்டுப்போவது பண விரயம். மேல் திருப்பதியில் எந்த இடத்திற்கும் போக வர இலவச பஸ் வசதி இருக்கு. இலவச தங்குமிடம் நிறைய இருக்கு. 50,100,250, 500 கட்டணம் அறைகளும் உண்டு. 100,520 ரூபாய் அறைகளில் சுடுதண்ணீர் வசதி இருக்கு.

பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலயே மொட்டை அடிக்கும் இடம் இருந்தாலும் அதுல க்யூல நின்னு மொட்டை அடிச்சுட்டு வருவதற்குள் எப்படியும் 3 இல்ல 4 மணி நேரம் ஆகிடும். ரூம் எடுத்து தங்கும் பக்தர்கள் வசதிக்கேற்ப அங்கயே மொட்டை அடிக்கும் இடம் இருக்கு. அங்க சீக்கிரம் அடிச்சுக்கிட்டு வந்துடலாம். இங்கு காணிக்கையாக தரப்படும் முடிகள் தர வாரியாக பிரிக்கப்பட்டு விக், சவுரி செய்யப் பயன்படுது. ரொம்பவும் சின்ன முடிகள்லாம் சாக்லேட் செய்ய மூலப்பொருள் தயாரிக்கப் பயன்படுது.


சில அதிசய தகவல்கள்:
கருங்கல்லில் செதுக்கப்பட்ட எல்லா சிலைகளிலும் சிற்பியின் உளிப்பட்ட இடம் தெரியும். ஆனா, திருப்பதி வெங்டாச்சலப்பதியின் சிலையில் அப்படிக் காண முடியாது. சிலையின் நகைகள்கூட பாலீஷ் போட்டதுப் போல பளப்பளக்குது.

கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 அடி உயரத்தில் இறைவனின் சிலை இருந்தாலும் 110பாரன்ஹீட் வெப்பத்திலேயே இருக்கு. அபிஷேகத்திற்கு முன் இறைவனின் நகைகளைக் கழட்டும்போது சூடாய் இருப்பதை அர்ச்சகர்கள் உணர்வர்.

ஹரியும் சிவனும் ஒன்று என்பது போல மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

காளி, பைரவர் போன்ற ருத்ர கடவுள்கள் மட்டுமில்லாமல் முருகன், விநாயகர் போன்ற சாத்வீக கடவுள்கள் கூட போர் ஆயுதங்கள் தாங்கி அருள் புரிகின்றனர். ஆனா, வெங்கடேசப் பெருமாள் மட்டும் நிராயுதபாணியாய் அருள் புரிகிறார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கம், வெள்ளி, வைர பொருட்கள் இருந்தாலும், நைவேத்தியத்துக்கு மண்சட்டியையே உபயோகிக்குறாங்க. தினமும் புது சட்டியிலேயே நைவேத்தியம் நடக்குது. நைவேத்தியப் பொருளான தயிர்சாதம், புளிச்சாதம், லட்டு, அதிரசம், வடைலாம் கோவிலின் குறிப்பிட்ட வாசல் தாண்டி வெளிவருவதில்லை. 
கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி செல்ல, கோவிலுக்கு சொந்தமான பஸ் உண்டு. பிரைவேட் ஜீப் வசதியும் உண்டு. சிலர் வேண்டுதல் காரணமாக கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரை நடந்து வருபவர்களும் உண்டு. அப்படி வருபவர்களுக்கு தனிப்பாதை உண்டு. அப்படிப்பட்ட பாதை ஒன்றைதான் மேல் படத்தில் காண்பது.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) கலக்குது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மை கூடுது. 
1180 கல்வெட்டுகள் கோவிலில் காணப்படுது. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளது.


இக்கோவில் ஆதிக்காலத்தில் முருகன் கோவிலாய் இருந்ததாகவும், அதை பெருமாள் கோவிலாய் மாறியதாகவும், அதனால்தான் இறைவனுக்கு பக்தர்கள் முன் அபிஷேகம் செய்யப்படுவதில்லைன்னும் ஒரு பேச்சு உலவுது. மேல இருக்கும் முருகன் மற்றும் ஏழுமையானின் படத்தில் இருக்கும் இடதுகையை  உற்றுப்பார்க்கும்போது புலப்படும்ன்னு தங்கள் வாதத்திற்கு ஆதாரம் காட்ட முனைகிறார்கள். 


திருப்பதி போகும்போது சோத்து மூட்டையை கட்டிக்கிட்டு சுமந்துக்கிட்டு போக வேணாம். ஏராளமான அன்ன சத்திரங்கள் இருக்கு. காலை 11 மணி முதல் இரவு 11 வரை இயங்குது. இரண்டு வகை பொறியல், சாம்பார், ரசம், மோர், சர்க்கரைப் பொங்கலுடன். அதுமட்டுமில்லாம நிறைய ஹோட்டல்களும் இயங்குது. அசைவ உணவு மேல் திருப்பதியில் இல்லை. புகை மற்றும் போதைப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டை மேல் படத்துல வச்சிருக்கேன். எல்லோரும் எடுத்துக்கோங்க. அடுத்த வாரம் புண்ணியம் தேடி வேற ஒரு கோவிலுக்கு போகலாம். 



18 comments:

  1. எங்கும் எப்போதும் க்யூ... க்யூ... க்யூ...

    அதிசய தகவல்களுக்கு (+ லட்டு) நன்றி சகோதரி...

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி. பழனி கோவிலுக்கு போகர் சித்தர் மாதிரி, திருப்பதிக்கு கொங்கணச்சித்தர் உண்டு. தகவல் தெரிந்தால் விளக்கவும். நன்றி அக்கா. இசக்கி, நெல்லை.

    ReplyDelete
  3. புண்ணியம் அக்கா உங்களால் எங்களுக்கு புண்ணியமும் லட்டும் கிடைத்தது.

    ReplyDelete
  4. போட்டோ வழக்கமான க்ளாரிட்டி இல்லையே..

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் கேமராவை ரூம்ல வச்சிட்டுதான் போகனும். கைல கொண்டு போகவும் முடியாது. எனக்கும், கேமராவுக்கும் ஏழாம் பொருத்தம். இதுவரை 3 டிஜிட்டல் கேமராக்களைத் தொலைச்சிருக்கேன். அதான் கேமராவை வீட்டுலயே வச்சிட்டு போய்ட்டேன். மொபைல்ல கொஞ்சம் படம் தேத்துனேன், சிலது கூகுள்ல சுட்டது

      Delete
  5. நான் போட வேண்டியத போட்டுட்டேன்.. நீங்கதான் இன்னும் லட்டு அனுப்பி வைக்கலே..

    ReplyDelete
    Replies
    1. லட்டுதான் மேல படத்துல இருக்கே! எடுத்துக்க வேண்டியதுதானே! இதுக்கு ஏன் என்னை தொல்லைப் பண்ணுறே ஆவி!?

      Delete
  6. பகிர்வுக்கும்,தரிசனத்திற்கும் நன்றி தோழி!!

    ReplyDelete
  7. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சமயத்தில் அப்பாவுடன் சென்றது - அதற்குப் பிறகு - அதாவது கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகிவிட்டன - இன்னும் செல்ல முடியவில்லை!

    லட்டு பிரசாதம் எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  8. தங்களின் ஆம்மீகப் பயணம் தொடரட்டும்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  9. enaku thirupathi lattu rompa pudikum so konjam athikamavey eduthuketen akka, thetathengaa ,,,

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு வேணுமோ அம்புட்டும் எடுத்துக்கோங்க. நான் திட்டலைங்க.

      Delete
  10. நானும் என்னுடைய கல்லூரி பருவத்தில் எங்கப்பா அம்மாவோடு சென்றது... அதுக்கப்புறம் இதுவரை போக முடியலை...:) அப்போ தான் காளஹஸ்தி போக பேருந்து ஏறும் போது என் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த ரூ 1500 அபேஸ் ஆகிவிட்டது... :)) 99 ல் என்று நினைக்கிறேன்..

    சிறப்பான பகிர்வு...

    சின்ன முடிகள் சாக்லேட் செய்ய பயன்படுதா!!!! என்னங்க...நிஜமாகவா?

    ReplyDelete
  11. திருவேங்கடம் சிறப்புகள் அறிந்தோம்! லட்டான பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  12. லட்டை நீங்கள் பார்சல் பண்ணி அனுப்புவீங்கன்னு நினைச்சேன். இபாப்டி படத்தை மட்டும் போட்டு எடுத்துக்குங்கன்னு சொல்லி, ஏமாத்திவிட்டீங்களே!!!

    ReplyDelete
  13. .உங்கள் தர்சனத்தில் மீண்டும் திருப்பதி .ஸ்ரீவெங்கடாசலபதியை தர்சித்தேன். நன்றி

    ReplyDelete