Friday, June 01, 2018

வித்தியாசமான நேர்த்திகடனை கொண்ட அங்காளபரமேஸ்வரி ஆலயம் - அறிவோம் ஆலயம்

தீ மிதிக்குறது, காவடி எடுக்குறது, அலகு குத்துறது, பாடை எடுத்தல், மாங்கல்யம் செலுத்துதல்ன்னு விதம் விதமான வேண்டுதல்களை பார்த்திருக்கோம். ஆனா, போட்டோக்களை காணிக்கையா செலுத்தும் கோவிலை எங்காவது கேள்விப்பட்டிருக்கீங்களா?! வேலூர் மாவட்டத்திலிருக்கும் கலவை அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில்தான்  இந்த வித்தியாசமான வேண்டுதல் நடக்குது. அந்த ஆலயத்தை பத்திதான் இன்னிக்கு பார்க்க போறோம். 
வீட்டுக்கு அடங்காம திரியுறது, சொல்பேச்சு கேட்காம இருக்குறது, இப்படி ஏடாகூடாம இருக்கும் ஆட்களை கலவை கோவிலுக்கு கூட்டிப்போங்கன்னு சொல்வாங்க. இந்த கோவிலில் பேய் ஓட்டுதல் என்பது ரொம்ப பிரசித்தம். கிராமத்து கடைசியில் இருக்கும் கிராம தேவதை கோவிலின்  அளவுதான் இந்த ஆலயம் இருக்கும். 
2000 சமீ அளவிலான பழைகாலத்து வீடு மாதிரியானதோரு கோவில். பலிபீடம் இல்லை. ராஜ கோபுரம் என ஆலயத்துக்குண்டான எந்த அம்சமும் இந்த கோவிலில் கிடையாது.இது கோவில்ன்னு உணர்த்த  கோவிலுக்கு முன் ஆர்ச் ஒன்னு சமீபத்தில் கட்டி இருக்காங்க. 

 கோட் போட்ட அங்கிள், லிப்ஸ்டிக் போட்ட ஆண்டி, கல்யாண கோலத்தில். நடைவண்டி ஓட்டும் குழந்தை, சார்ட்சோடு விமானத்தில் எடுத்த செல்பி, பிளாக் அண்ட் வொயிட், லேமினேசன், பாஸ்போர்ட் சைஸ்ன்னு  கோவில் வாசலில், சுவத்தில் கூரையில், ஸ்விட்ச் போர்ட் மேலன்னு இந்த கோவில் முழுக்க போட்டோக்களை  பார்க்கலாம்.  உண்மையாவே பேய், பில்லி சூனியம் மாதிரியான பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவங்க, இந்த ஊர் எல்லையிலிருந்தே காந்தத்தால் ஈர்க்கப்பட்டது போல தானாகவே இந்த கோவிலுக்கு வந்து சேர்வது இக்கோவிலின் மற்றொரு அதிசயம். 

கலவையைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்தவர் அப்பு முதலியார். காஞ்சி மகா பெரியவருக்கு முன்பிருந்த சங்கராச்சாரியாரிடம் அங்காளபரமேஸ்வரிக்கு கோயில் கட்ட அனுமதி கேட்டார். சங்கராச்சாரியார் ஒரு சிறிய நெற்குவியலிலிருந்து ஒரு யந்திரத்தை எடுத்துக் கொடுத்து,  அதையே ஆதாரபீடமா வைத்து கோயில் எழுப்பச் சொன்னார். அப்படி உருவானதுதான் கலவை அங்காள பரமேஸ்வரி ஆலயம். மேல்மலையனூர் உற்சவத்திற்கு அடுத்தபடியாக, கலவை மயானக் கொள்ளை உற்சவம் இங்க விமரிசையாக கொண்டாடப்படுது. அந்நாளில், இக்கோவிலில் தங்கி இருந்து மனநலம், உடல் நலம் குணமானவர்கள் மொத்தமாய் சேர்ந்து தீச்சட்டி எடுக்குறது, பறவை காவடி எடுக்குறதுன்னு பத்து நாள் திருவிழாக்கோலமாய் இருக்கும் இந்த ஊர். 

அப்பு முதலியாருக்கு பின் திரு.கண்ணப்ப சுவாமிகள் மற்றும் அவருக்கு அடுத்தபடியாக திரு.பன்னீர்சுவாமிகள்ன்னு  கோவில் பணிகளை கவனிச்சுக்கிட்டாங்க. இப்ப  திரு.சந்தானம் சுவாமிகள் மற்றும் திரு.செளந்தராஜன்தான் கோவிலை பராமரிச்சுக்கிட்டு வர்றாங்க.  எட்டுக்கு எட்டு அளவிலான சிறிய அறையில் அங்காளபரமேஸ்வரி குடிக்கொண்டிருக்கும் கருவறை இருக்கு. அவளுக்கு முன் சயன கோலத்தில் அம்மன் உருவம் ஒன்று இருக்கு. இக்கோவிலில் பூசாரிகள் கிடையாது. 


அர்ச்சனை, அபிஷேகம்ன்னு எதும் கிடையாது. இக்கோவிலில் சேவை செய்ய வேண்டிக்கிட்ட ஆட்களே பிரசாதம் தருவாங்க. பிரசாதமா பெருமாள் கோவில்களில் கொடுப்பது மாதிரி துளசி தீர்த்தம் கொடுத்து  சடாரி வைப்பாங்க. அதேப்போல், மாதவிடாய் காலங்களிலும் கோவிலுக்கு வரலாம். 

 கல்யாணம், குழந்தை வரம், வேலை, வழக்குன்னு தங்கள் வேண்டுதல்களை சொல்லி   இக்கோவிலில் வேண்டிப்பாங்க. வேண்டுதல் நிறைவேறியதும் ஒரு தட்டில் அவங்கவங்க வசதிப்படி புடவை, பழம், தேங்காய், பணத்தோடு  யாருக்காக வேண்டிக்கிட்டாங்களோ அவங்க படத்தை கொண்டு வந்து இங்க மாட்டுவாங்க.  உதாரணத்துக்கு, குழந்தை வரம் வேண்டி இருந்தா குழந்தை பிறந்தபின் அந்த குழந்தை படத்தை மாட்டுவாங்க. கல்யாணம் நடக்கனும்ன்னு வேண்டிக்கிட்டா கல்யாணம் முடிஞ்சு தம்பதியா படமெடுத்து இங்க கொண்டு வந்து மாட்டுவாங்க.  அப்படி வேண்டிக்கிட்டு மாட்டும் படங்கள் பழசானதும் ஒரு அறையில் கொண்டு போய் வச்சுடுவாங்க. இந்த கோவில் முழுக்க பல லட்சம் அளவில் இங்க இருக்கு. துலாபாரம் செலுத்துவதும் இங்குண்டு. இங்க சுத்துவட்டாரத்தில் தங்கள் நிலத்தில் விளையும் முதல் விளைச்சலில் ஒரு பங்கை இந்த கோவிலுக்கு கொடுத்துடுறாங்க. இந்த வருமானத்தில்தான் கோவில் நிர்வாகம் நடக்குது.

காதல், குடி மாதிரி மனநலம் பாதிக்கப்பட்டவங்களை  இந்த கோவிலுக்கு கூட்டி வந்து மந்திரிச்சுக்கிட்டு போவாங்க.  ரொம்பவே மனநிலை பாதிக்கப்பட்டவங்களை கூட்டி வந்து  ஒன்பதிலிருந்து 48 நாட்கள் தங்குவாங்க. அதுக்குன்னு இந்த கோவிலில் தனியா அறைகள் இருக்கு. வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் கொடுக்கும் பழங்களை கொண்டு பஞ்சாமிர்தம் செய்து, அதோடு பொங்கலும்  செய்து இங்க தங்கி இருக்கவுங்களுக்கு  கொடுப்பாங்க. அதான் காலை உணவு. காலை உணவோடு தீர்த்தமும் கொடுப்பாங்க. அப்படி தங்கி இருக்கவுங்க இந்த கோவிலை சுத்தம் செய்வது, பூஜை செய்வதுன்னு பொழுதை கழிப்பாங்க. மதிய உணவை வெளில வாங்கிக்கனும். இரவு உணவா எதாவது பழமும், தீர்த்தமும் கொடுப்பாங்க. அவங்க இப்படி தங்கி இருக்க எந்த கட்டணமும் வாங்குறதில்லை. 

பழைய அங்காளம்மன் கோவிலுக்கு பக்கத்திலேயே  ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன்  ஆலயம் இருக்கு.  பெருமாளின் தங்கையான இவள்  இந்த ஊர் ஆலயங்களில் அண்ணனைப்போலவே  சைவமாய் இருக்கிறாள்.  அதனால்தான் எந்த அம்மன் தலங்களிலும் இல்லாத முறையில் துளசி தீர்த்தம் தந்து  சடாரியும் வைக்கப்படுது.   
முழுக்க முழுக்க மார்பிள் கற்களால் கட்டப்பட்டது இந்த கமலக்கண்ணி கோவில்.  அகில உலகங்களுக்கும் தாயாகி நின்று காத்து அருளுகின்ற பராசக்தியானவள் பல்வேறு திருநாமங்களோடு பல கோவில்களில்  அருள் பாலித்து வருகின்றாள். அப்படி அம்பாள் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் கமலக்கண்ணி ஆலயமும் ஒன்று. தாமரைக்கு நிகரான தன் கண்களால் பக்தர்களை கண்டு, அவர்களின் மனக்குறையை தீர்ப்பதால் அவளுக்கு இந்த பேர்.  கோவிலுக்குள் நுழைந்ததும் சயனக்கோலத்திலிருக்கும் அன்னையை வணங்கி கருவறை செல்லனும். 
நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்  இந்த கம்லக்கண்ணி அம்மன் தேவிதான் செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குலதெய்வமாகவும் செஞ்சிக் கோட்டையைக் காத்து வருகின்ற காவல் தெய்வமாகவும் விளங்குபவள். பற்றற்ற யோகியாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு இமயமலைச்சாரலிலும்,  வடஇந்தியாவில் பல இடங்களிலும் பாத யாத்திரையாகச் சென்று பல தத்துவ ஞானிகளின் ஞான உபதேசங்களினால் தியானம், யோகம், இவற்றில் மேன்மையை அடைந்த சிறந்த தவயோகியாக விளங்குபரான  தவத்திரு. சச்சிதானந்த சுவாமிகள்தான் இக்கோவிலை நிர்மாணித்தார்.


 சும்மாயிரு சொல்லறேன்ன்றது அருணகிரியாரின் வாக்கு. அந்த வாக்குக்கேற்ப  மௌன விரதத்தை கடைபிடித்து வருகின்றார் இந்த சச்சிதானந்த   சுவாமிகள்.  மௌன விரதத்தில் இருந்தாலும்  இங்கு வரும் பக்தர்களின் துன்பங்களை, ஒரு வெள்ளைத்த்தாளில்  எழுதி தர, அதற்குண்டான தீர்வுகள், ஆறுதலை பதிலுக்கு எழுதி தந்து பக்தர்களது மனக்குறையை அம்பாளின் ஆசியோடு போக்குகிறார்.  

1979ம் ஆன்டு கலவை முன்னாள் மணியம் R.D கிருஷ்ணஸ்வாமி முதலியாரும், அவர் துணைவியார் திருமதி. சரோஜாம்மாள் அம்மையாரும் இப்பகுதியில் அம்மனுக்கு  கோவில் எழுப்ப தீர்மாணித்து கோவில் கட்டி வந்தனர். கோவில் கட்டி முடியும் நேரத்தில், இந்த பகுதிக்கி வருகை தந்த சச்சிதானந்த சுவாமிகள் தம்பதியரிடம்  கமலக்கண்ணி அம்மனின்  பூர்வீக கோவில் செஞ்சி மலையில் உள்ள கோட்டையில் இருப்பதாக  சொல்லி தம்பதிகளையும், ஊரார் சிலரையும் அழைத்துக்கொண்டு செஞ்சிக்கு போனார். 

.செஞ்சி மலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் மிகவும் சிறிய கோவில். அங்கிருக்கும் அம்மனின் சிலாரூபம்  மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பூஜைகளும், பராமரிப்பும் இல்லாமல் அம்மன் இருப்பதை அறிந்து தம்பதியர்களும், சுவாமிகளும்  மனம் நொந்து  போனார்கள். கமலக்கண்ணி அம்மனை சுவாமிகள் தன் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டபோது,  உன்னோடவே  வந்து விடுகிறேன் மகனே! என செஞ்சி கமலக்கண்ணி அம்மன் சொல்வதைப்போல உணர்ந்தார்.  தெய்வீக அருள்வாக்கினால் ஈர்க்கபட்டு அவளது அருளானையின்படி செஞ்சியில் இருக்கிற அம்மனைப் போலவே சிலாரூபம் செய்து தான் வாழும் கலவையில் வளர்ந்து வரும் ஆலயத்தில் கமலக்கண்ணி அம்மனை நினைத்து அவளது சிலாரூபத்தை பிரதிஷ்டை செய்தார். 
கிருஷ்ணசுவாமி சரோஜாம்மாள் துணையோடு கமலக்கண்ணியம்மனுக்கு ஆலயம் எழுப்பி  வழிபாடு செய்து வந்தார்கள் .கலவையில் கோவிலை சுவாமிகள் விரிவு செய்து கொண்டு போனபோதும் கோவில் அமைப்பு சுவாமிகளுக்கு மன நிறைவு தரவில்லை இரத்தினகிரி தவத்திரு . பாலமுருகனடிமை சுவாமிகள் தனது 39 ஆண்டு மலைவாசத்தை முடித்து கலவைக்கு வருகை தந்தபோது கோவிலை புதுபித்து கட்ட வேண்டும் என்ற தனது வேட்கையை சச்சிதானந்த சுவாமி தெரிவித்தார்.  பழைய கோவிலை அகற்றிவிட்டு புதுக்கோவிலை எழுப்புமாறு பாலமுருகனடிமை சுவாமிகள் சொல்ல, அதன்படியே புதுக்கோவில் எழுப்பப்பட்டு வருகிறது. ஸ்ரீகமலக்கண்ணி அம்மனின் திருவருள் துணையோடு பக்தர்களின் பாத காணிக்கைகளை கொண்டும் சச்சிதானந்த சுவாமிகள் மனதில் எண்ணியவண்ணம் கோவில் திருப்பணி நிறைவேறி வருகிறது. மார்பிள் கற்களால் அழகும் பொலிவுமாய் வளர்ந்து வரும் இக்கோவில்  பெற்றுள்ள ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் திருகோவிலில் கருவறை வாசல் கதவு வெள்ளியிலும் முன் வாசல் கதவுகள் தஞ்சாவூர் பாணியிலும் வடிவமைக்கபட்டுள்ளது.

ஆரணில இருந்து 18 கிமீ தூரத்திலும், செய்யாறிலிருந்து 15கிமீ தூரத்திலும், ஆற்காட்டிலிருந்து 12கிமீ தூரத்திலும் இருக்கு. ஆரணி, செய்யாறு, ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரத்திலிருந்தும்  கலவைக்கு பஸ் உண்டு. கலவைக்கு வந்து அங்காளபரமேஸ்வரி அம்மனையும், கமலக்கண்ணி தாயாரையும் வணங்கி, அப்படியே ஆரணிக்கு வந்து ராஜிக்கு செய்ய வேண்டிய சீரையும் செஞ்சுட்டு போங்க சகோஸ்

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. அருமையான தகவல்களுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. அருமை........புதுமையான கோவில்.....வேண்டுதல்களும் புதுமை...அம்மனின் திருவுருவக் காட்சிகள் அருமை. நன்றி பதிவுக்கு தங்கச்சி..

    ReplyDelete
  3. நேர்த்திக்கடன் என்றாலேயே வித்தியாசமாகதான் இருக்கும் மனம் பிறழ்ந்தவர்கள் திருச்சி அருகே உள்ள குண சீலத்தில் பரிகாரம் செய்வார்கள் பேய் பில்லி சூனியம்போன்ற வ்சற்றுக்கு கேரளத்தில் சோட்டானிக்கரை பிரபலம்

    ReplyDelete
    Replies
    1. தெரியும்ப்பா, பேய், பில்லி சூனியத்துக்கு மேல்மலையனூர் பிரபலம். இங்க மனநலம் பாதிக்கப்பட்டவங்களும், தீய சக்தியால் பாதிக்கப்பட்டவங்களும் தங்கி இருந்து குணம் ஆவாங்க.

      Delete
  4. வித்தியாசமானக் கோயில்தான் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  5. அங்காளபரமேஸ்வரி கோவில் ரொம்பவே வித்தியாசம்.

    ReplyDelete
  6. இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் பதிவு அருமை. வாழ்த்துகள்.


    பயணங்கள் பலவிதம் - 06
    https://newsigaram.blogspot.com/2018/06/PAYANANGAL-PALAVIDHAM-06.html
    #பூண்டுலோயா #மலையகம் #டன்சினன் #நீர்வீழ்ச்சி #Pundaluoya #Malaiyagam #UpCountry #Dunsinane #WaterFalls #DunsinaneWaterFalls #SriLanka #LK #Travelling #Travel #TravelLanka #SigaramBharathi ##சிகரம்பாரதி

    ReplyDelete