Monday, June 11, 2018

மனுசனுக்கு மட்டுமல்ல யானைக்கும் மதம் பிடிச்சா ஆபத்துதான் - ஐஞ்சுவை அவியல்

மாமா! சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு மதம் பிடிச்சுட்டுதே உங்களுக்கு தெரியுமா?!

தெரியும் புள்ள. வாட்ஸ் அப்ல பார்த்தேன். 

ம்ம்ம் நாள் முழுக்க பாகனோடவே சுத்திக்கிட்டிருந்துட்டு, அவன் கையாலயே சாப்பிட்டு அவனையே தூக்கி போட்டு மிதிக்குதே! கொஞ்சம்கூட பாசமே இல்ல அந்த யானைக்கு...

யானைக்கு பாசம்லாம் இல்லாம இல்ல. பாகன்மேல் அதிகமான  பாசமும் நம்பிக்கையும் இருக்குறதாலதான் இப்படி ஆகுது.

பாசத்தாலதான் இப்படி ஆகுதா?! உளறாத மாமா.

உளரல புள்ள, உனக்கொரு மகிழ்ச்சியான விசயம்ன்னா யார்க்கிட்ட முதல்ல சொல்லுவே?!

உன்கிட்டதான் முதல்ல சொல்வேன்.

சரி, கஷ்டமான விசயம்ன்னா?!

இதென்ன கேள்வி?! உன்கிட்டதான் மாமா ஷேர் பண்ணிக்குவேன்.

அதேதான். உனக்கு என்மேல பாசம் அதிகம். அதனால என்கிட்ட ஓடிவந்து முதல்ல சொல்றேன். நாள் முச்சூடும் பாகனோடவே இருக்கும் யானை, தனக்கு எதாவது ஒன்னுன்னா பாகனுக்குதான் முதல்ல உணர்த்தும். தனக்கு மதம் பிடிச்சிருக்குறதை  பாகன்கிட்டதான் முதல்ல உணர்த்தும். பாகன் அனுபவசாலின்னா அதை புரிஞ்சு தக்க நடவடிக்கை எடுப்பாங்க. போதிய அனுபவம் பாகனுக்கு இல்லன்னா இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடக்கும். 




யானை பாகனுக்கு யானையால்தான் சாவுன்னு நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு.  யானை பாகன்மேல் கொண்ட பாசம் இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்க ஒரு காரணம். இன்னொரு காரணம் யானையின் பழி உணர்ச்சி. ஏன்னா யானையை பழக்க பாகன்கள் செய்யும் வேலைகள் அப்படி. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல ஞாபகம் வெச்சுகிட்டே இருக்கும்.  வாய்ப்பு கிடைச்சதுன்னா அந்த கோபம் வெளிப்பட்டு, யானை ருத்ர தாண்டவம் ஆடிரும்.

யானைய பழக்கும்போது  அந்த யானையை சுத்தி, நாலு அல்லது ஐந்து கும்கிய யானைய நிறுத்தி,  ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு, ஆளுக்கு ஒரு குச்சிய கீழே போடுவாங்க.  அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்பத் திரும்ப கும்கி யானை  செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கி யானைகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச, காட்டு மூங்கில் பிரம்புகளை  அங்குசமா தயார்படுத்துவாங்க. அது வளைச்சா ரப்பர் மாதிரி வளைஞ்சு ரெண்டு முனையும் சேரும். ஒரே ஒரு அடி அதுல வாங்குனா மனுசன் செத்துருவான். அந்த அங்குசத்தால அந்த யானைய வெளுப்பாங்க.  அடிவாங்கிக்கிட்டு யானை பிளிறும், ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. குச்சிய எடுக்கும்வரை இந்த இம்ச தொடரும். குச்சியை எடுத்து ஏழெட்டு பாகன்களில் யாருகிட்ட அந்த குச்சியை கொடுக்குதோ அவந்தான் அன்னில இருந்து அந்த யானைக்கு தலைமை பாகன். அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். அவனுக்குதான் அது பணியும். 
யானைப்பாகனை தேர்ந்தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும். யானைய  பழக்கறதுக்காக,  தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு சாப்பாடு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகன் அந்த கரோல்ல போகும்போது சாப்பாட்டுக்கு யானை   கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசியைத் தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அப்படி வழிக்கு வர்றதுக்குள்ள எத்தனை அடிகள், சித்ரவதைகள் அப்பப்பா............ அந்தப் பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும், பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.



அத்தனை எளிதா யாரையும் தன் முதுகில் ஏற விடாது. யானைய சாம, பேத தாண்டன்னு அத்தனை வழிமுறைகளையும் கையாண்டு, கடைசியா... என்னைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங்கால்களை மடக்கிக் குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு, கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்துதான் கரோலை விட்டு வெளிய வரணும். அப்பதான் அது முழுசும் பழக்கப்பட்டதுக்கான அடையாளம்.  தெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்துல 13 பேரைக் கொன்று, கேரள அரசால் shooting ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

 நவம்பர் டூ ஜனவரி மாதங்கள் யானைகளின் இணைச் சேர்க்கை காலம்.  அந்த நேரத்தில்  நெத்தியில் இருந்து ஒரு  நீர் வடியும். அதுக்கு மஸ்துன்னு பேரு. அதைதான் நாம மதம்ன்னு சொல்றோம். பாகன்மேல் பாசம் இருக்கும் யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போது ரெட்டை காலுக்கும் சேர்த்து சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும், கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடத்தில்தான் வாசம். அந்த மஸ்து நீரோட வாசம், ரொம்ப தூரம் வீசும்.  அந்த வாசம் வந்தா எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்றுறுன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு, தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும்.அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார ஞாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்கவும், அவன்மேலான பாசத்திலயும் தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனைத்தான் தேடும். பாகன் யானை கையில் சிக்கினால் அவ்வளவ்தான்.  அக்கு வேறா.,  ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.


யானைகளில் ஆறு வகை இருக்கு. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானை களை வளர்க்கவே முடியாது. நம்பகத்தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது. அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானைகளையும், இடுங்கிய கண்களைக் கொண்ட யானைகளையும், நெற்றி துருத்திய யானைகளையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லைன்னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும்.

ஒழுங்கில்லாத தந்தங்கள் இல்லன்ன்னா ஒரு தந்தம் இருக்கும் யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட்கொல்லிகள். மத்ததுலாம்  வெறும் மிரட்டலோடு விலகிடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும், குணமும் இதுக்குண்டு. மனுசங்களை பார்த்துட்டா, பாயிலாகிடும். பயங்கர ராட்ஷசன். இதோட உடம்பிலிருந்து  அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இதோட நடமாட்டத்தை கண்டுபிடுச்சுடுவாங்க.  

நிமிர்ந்த தலை சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும், மனிதர்களுடன் முக்கியமாக குழந்தைகளுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்குறதுலாம் பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குத்தான் அமையும். இதன் உடம்பில் தாமரைப் பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கலைன்னாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப்பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.

போதும், போதும், ரெண்டு மார்க் கேள்விக்கு பத்து மார்க் அளவுக்கு எழுதுற மாதிரி பதில் சொல்லாதீங்கன்னு எத்தனை தரம்தான் சொல்லுறது. வாய் இல்லன்னா உன்னைலாம் நாய்கூட சீண்டாது மாமா.  எத்தனை அழகா இந்த நாய் சாமி கும்பிடுதுன்னு பாருங்க. செம க்யூட்ல்ல.  அந்த குட்டி நாய்க்கு என்ன வேண்டுதலா இருக்கும் மாமா?!

குழந்தை பொறந்தா அப்பா பேரை எதுக்கு இன்சியலா வைக்குறாங்க சொல்லு பார்க்கலாம்.

தெரியாதே மாமா.


புள்ளை எதாவது சாதிச்சாலும், இல்ல கெட்டது பண்ணி ஊர்வம்பை இழுத்துக்கிட்டு வந்தாலும் இன்னார் மகன்னு சொல்லி அப்பா பேரை சொல்லிதான் அந்த புள்ளைய அடையாளப்படுத்துவாங்க. அதனாலதான், அப்பா பேரை இன்சியலா வச்சாங்க.  அப்ப அம்மாக்கு புள்ளை இல்லையான்னு பெண்ணியவாதிகள் கேட்கலாம். அந்த காலத்தில் பெண்கள் வெளில வருவது அபூர்வம். அதனால, அவங்களை வெளி உலகத்துக்கு தெரியாது. அதனால அவங்களை அடையாளப்படுத்தல.

பழைய வளையல், நூல், கல், சமிக்கு, பாட்டில்கொண்டு  நீ கிராஃப்ட் செய்யுறே. இங்க ஒருத்தன் தட்டு, டம்ப்ளர், ஸ்பூன் வச்சி என்ன பண்ணி இருக்கான் பாரு.

எனக்காக சாப்பிடல, உனக்கு வயிறு வலிக்குமேன்னுதான் சாப்பிடுறேன்னு சிவாஜி வசனம் மாதிரி இருக்கு பாரு இந்த காதலிசம்..

நீயே பாரு மாமா இதெல்லாம்.. எனக்கு வேலை கெடக்கு. நான் போறேன்.

நன்றியுடன்,
ராஜி

25 comments:

  1. அருமை..........யானை க்குப் பின்னாடி இவ்ளோ இருக்கா.....யானை ன்னா எல்லாம் ஒண்ணுதான்னு இத்தன நாளா நெனைச்சுக்கிட்டிருந்தேன்..கும்கி பாத்தப்ப கூட...யானை தானே நல்லா பழக்கி எடுத்திருக்காங்கன்னு.....ச்சைக்..ஒம்போது கழுத வயசாகியும்...../// நன்றி தங்கச்சி...காணொளி நாடாக்களும் அருமை.......

    ReplyDelete
    Replies
    1. இது யானைகளின் குணாதிசயங்களை கொண்டு பிரிக்கப்பட்டது, இன்னமும் இடத்துக்கு தகுந்தபடி யானைகளை ரகம் பிரிச்சு இருக்காங்கண்ணே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. யானையைப்பற்றிய விடயங்களை படிக்கும்போது அதனுடைய சுதந்திர வாழ்க்கையை மனிதன் பாழ்படுத்தி விட்டான் என்பதே எனது கருத்து.

    ஏன் காண்டாமிருகத்தை இப்படி வளர்க்க வேண்டியதுதானே ?

    ச்சே வீட்டில் நாலு யானையை வாங்கிப் போட்டு வளர்ப்போம் என்ற எண்ணமே கை விட்டுப்போச்சு.

    ReplyDelete
    Replies
    1. நாலு யானையா...

      Delete
    2. ஏன் காண்டாமிருகத்தை இப்படி வளர்க்க வேண்டியதுதானே ?
      //

      குறிப்பிட்ட சில விலங்குகளை தவிர்த்து மத்ததுலாம் பழக்கப்படுத்த ரொம்ப பொறுமையும், மெனக்கெடலும் வேணும்ண்ணே

      Delete
    3. நாலு யானையா...

      ///////

      தேவைகோட்டைல வீடுகள்லாம் ரொம்ம்ம்ம்ப பெருசு. நாலு யானையை வச்சு வளர்க்கலாம். ஆனா, தீனிக்கு?!

      சரி நம்ம கில்லர்ஜி அண்ணாதான் படா ஆளாச்சுதே! அவர் சமாளிச்சுப்பார்ம்மா அனு.

      Delete
    4. ஆமா ஆமா...

      Delete
  3. ராஜிக்கா...


    வாவ்...அந்த யானை gif படங்கள் ரொம்ப ரொம்ப அழகு ..செல்லம்ஸ்..

    செய்திகளும் மிக அருமை..போன மாசம் சமயபுரம் போனப்ப நாங்களும் அந்த யானையை பார்த்தோம்..குட்டியா சாதுவா நின்னுச்சு..இப்போ கொடுமை தான்..

    ReplyDelete
    Replies
    1. பாகனின் நிலையை டிவிலயும், யூட்யூப்லயும் பார்த்தேன்பா. பாவம்தான். காலத்துக்கு ஏத்தமாதிரி நாமும் மாறிக்கனும். வெப்பநிலை மாற்றம், சத்தம், அது இதுன்னு யானைகள் இப்படி மதம் பிடிக்க பல காரணம் இருக்கு, நகர்ப்புறம் மனுஷங்க வாழ. மனுஷங்க வாழவே இப்ப நகர்ப்புறங்களின் சூழல் சரியில்லாதபோது காட்டில் வாழ வேண்டிய மிருகம் இங்க எப்படி சமாளிக்கும். பாவம்ல

      Delete
  4. யானனையப் பழக்குதல் பற்றிய விவரங்கள் முன்பே படித்திருந்தாலும், தற்பொழுது தங்களது பதிவில் மேலும் கூடுதல் தகவல்கள்.
    ஏன் யானையைப் பழக்கவேண்டும்?. கோவில்களில் யானை அவசியமா? இந்தக் கேள்விகளுக்கு மாப்புகிட்ட கேட்டு விடை சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. மாப்பு டூர் போயிருக்காப்ல. இதுக்கு எதுக்கு அவரை கேட்டுக்கிட்டு நானே சொல்றேனே! முன்னலாம், சாமி ஊர்வலம் வர, கோவில் பணிகளுக்கு, குடமுழுக்கின்போது தூர தேசத்திலிருந்து நீர் கொண்டுவர என யானைகள் தேவைப்பட்டது.

      ஆனா, இப்பதான் எல்லாத்துக்கும் மெஷின் வந்துட்டுதே! அதனால் யானைகள் கோவிலில் இருக்க வேண்டாம். காட்டில் விட்டுடலாம். குடமுழுக்கு விசேசங்களின்போது மட்டும் கூப்பிட்டுக்கலாம்.

      Delete
  5. யானைகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து அளித்தது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. யானைகளைப் பற்றி ஒரு தீசிஸே எழுதி விட்டீர்கள் யானைகளையும் கடலையும் பார்த்துக் கொண்டிருந்தால் அலுப்பே வராது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. ரயில், யானை, கடல், குழந்தை, மழை... இதுலாம் என்றென்றும் சளிக்கவே சளிக்காது.

      Delete
  7. யானை பற்றியச் செய்திகள் வியப்பைத் தருகின்றன
    யானையின் நிலையை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. எல்லா யானையும் காட்டில் விட்டுட்டு விழாக்காலங்களில் தேவைப்படும்போது கூப்பிட்டு வரலாம்

      Delete
  8. தெரிந்த விவரங்கள். அடிக்கடி யானை பற்றிய விடீயோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். ரொம்ப சுவாரஸ்யமான விஷயங்கள். இளையராஜா பாட்டு கேட்கும் யானை முதல், தனக்கு மருத்துவம் பார்த்த நண்பரை அவர் இறந்த அன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து மரியாதை செலுத்தி விட்டு - அதுவும் ஒரே வரிசையில் - யானைகள் பற்றியும் செய்திகள் படித்துள்ளேன். தனது உறவு யானைகள் இறந்த இடத்தில் வருடத்துக்கொருமுறை வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகும் செய்தியும் படித்து நெகிழ்ந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அயல்நாடுகளில் விலங்குகள், மலைகள், ஆறுகளை அதுவாகவே பார்க்கின்றனர். நாமதான் புனிதம், கடவுள்ன்னு சொல்லி பாழாக்கிட்டு இருக்கோம்.

      Delete
    2. ஆம் ராஜி நான் அப்படியே ஸ்ரீராமின் கருத்தை டிட்டோ செய்யறென். அவற்றை வளர்க்கும் போது பாவம் அதன் இணையும் காலத்தில் அவற்றிற்கான சுதந்திரம் பறி போவதால்வ் வரத்தானே செய்யும்...மனிதர்களில் எத்தனை வெறியர்கள்? அவை காட்டிலேயே இ ருந்தால் நல்லதுதானே..

      கீதா

      Delete
  9. யானை பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  10. யானையினைப் பற்றிய படங்களும் செய்திகளும் அருமை. நாம் இப்போது அதனுடைய வாழ்வில் குறுக்கிட்டு வேதனைப்படுத்துகிறோம் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. யானையின் வாழ்வில் மட்டுமில்லப்பா பொதுவாவே இயற்கையை நாம் பாழ்படுத்திக்கிட்டு இருக்கோம்

      Delete
  11. யானை பற்றிய தகவல்கள் அனைத்தும் கொஞ்சம் அறிந்திருந்தாலும் இங்கும் அறிந்தோம்

    ReplyDelete