Showing posts with label நொறுக்கு தீனி. Show all posts
Showing posts with label நொறுக்கு தீனி. Show all posts

Tuesday, March 31, 2020

வீட்டிலேயும் செய்யலாம் ரிங் முறுக்கு -கிச்சன் கார்னர்

யானை அசைஞ்சு தின்னும்.. வீடு அசையாம தின்னும்..ன்னு பெரியவங்க சொல்வாங்க. அதுல, வீட்டில் அடைஞ்சு கிடக்கும் பிள்ளைகள் அசைஞ்சும், அசையாமலும் தின்னும்ன்னு சேர்த்துக்கலாம் போல! பண்டம் செஞ்சு மாளலை.

Tuesday, March 03, 2020

மாலை நேர காஃபிக்கு ஜோடி இந்த தட்டடை - கிச்சன் கார்னர்..

சமையலில் புலி இல்லதான். ஆனா, ஒருமுறைக்கு நாலுமுறை செய்தா எந்த பலகாரமும் செய்ய பழகிடும். ஆனா, இந்த எள்ளடை, தட்டடைன்னு சொல்லப்படும் தட்டை செய்ய மட்டும் எனக்கு இன்னும் கைவரல. மாவை ஆவில வச்சு பார்த்தாச்சு, வறுத்து பார்த்தாச்சு.. ஆனாலும் கைகூடாம இழுத்துக்கிட்டே இருந்துச்சு. கடைசியா ஒரு நாலைஞ்சு முறைதான் நல்லா வர ஆரம்பிச்சிருக்கு. பார்ப்போம் இந்நிலை தொடருதான்னு...

பச்சரிசியை ஊறவச்சு அரைச்சு மாவாக்கி சிலர் வறுத்தும், சிலர் ஆவியில் வேக வச்சு, மிளகாய் பூண்டை அரைச்சு அதில் சேர்த்து, பெருங்காயம், வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தட்டை செய்வாங்க. ஆனா, நான் இப்பவும் கல் உரலில்  மாவு ஆட்டிதான் செய்வேன். 
தேவையான பொருட்கள்..
புழுங்கலரிசி - கால் படி
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
பூண்டு - பத்து பல்
ஊறவைத்த கடலை பருப்பு  - ஒரு கப்
எள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம்- தேவைக்கேற்ப
பொடித்த வேர்க்கடலை - சிறிது
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணெய்


அரிசியை 2 மணிநேரம் ஊறவச்சு, அத்தோடு மிளகாய், பூண்டு, பெருங்காயம் உப்பு சேர்த்து அரைக்கனும்.  மிக்சிலயும் போட்டுக்கலாம்..
அரைச்ச மாவோடு ஊற வச்ச கடலை பருப்பு, எள், கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி சேர்த்துக்கனும்..
கூடவே பொடித்த பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கனும்..
நல்லா பிசைஞ்சுக்கனும்..

ஒரு சுத்தமான பருத்தி துணில தேவையான அளவில் தட்டை தட்டிக்கனும்.. அதிகப்படியான தண்ணியை துணி இழுத்துக்கும்.  அரிசி காய வைக்க, தானியங்கள் முளைக்கட்ட இப்படி பயன்படுத்த ஒரு காட்டன் லுங்கியை தனியா வச்சுக்குறது நல்லது. இல்லன்னா காடா துணியையும் இதுக்கு பயன்படுத்தலாம்.
எண்ணெயில் போட்டு இருபக்கமும் திருப்பி விட்டு சிவக்க விட்டு எடுத்தால் தட்டை ரெடி..
வாங்களேன்! தட்டையோடு கொஞ்சம் காஃபி, நிறைய கதைன்னு இந்த மாலைப்பொழுதை கழிக்கலாம்!!

நன்றியுடன்,
ராஜி

Tuesday, November 12, 2013

சோமாஸ் - கிச்சன் கார்னர்


தீபாவளி பண்டிகைக்கு என் நாத்தனார் வீட்டுக்கு பலகாரம் கொடுத்தனுப்ப, என்ன கொடுக்கலாம்ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்ல. நாத்தனார் வீட்டுக்காரருக்கும், அவங்க பசங்களுக்கும் சோமாஸும், ஓமப்பொடியும், குளோப் ஜாமூனும் ரொம்ப பிடிக்கும். அதையே செஞ்சு கொடுத்தா போதும். 

சோமாஸ் உள்ள வைக்கும் பூரணத்துக்கு எல்லாரும் ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய்ப்பூ, சர்க்கரைலாம் வச்சு செய்வாங்க. ஆனா, எங்க வீட்டுல வேற மாதிரி ரொம்ப ஈசியாவும் அதே நேரத்துல சுவையாவும் செய்வோம்.

தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
உடைத்த கடலை - 1 கப்
சர்க்கரை - 1கப்
ஏலக்காய் - 3
முந்திரி, திராட்சை - தேவைப்பட்டால் சேர்த்துக்கலாம்.
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் தேவையான அளவு

மைதா மாவை சலிச்சு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் உப்பு சேர்த்து  தண்ணி விட்டு சப்பாத்திக்கு பிசையுற மாதிரி பிசைஞ்சு ஒரு மணி நேரம் ஊற விடுங்க.


உடைச்ச கடலையோட சர்க்கரை சேர்த்துக்கோங்க.

ஏலக்காயையும் சேர்த்து மிக்சில நல்லா நைசா அரைச்சுக்கோங்க.

பூரணத்துக்கு பொடி ரெடி.

பிசைஞ்சு வச்ச மைதாமாவை வட்ட வடிவமா தேச்சுக்கோங்க...,

அதுக்கு நடுவுல, பொடிச்சு வச்ச கடலை மாவை வச்சு, மடிச்சு சோமாஸ் வடிவத்துல கத்தியால கட் பண்ணிக்கோங்க, அதுப்போல கட் பண்ண பழக்கமில்லாதவங்க, இதுக்குன்னு இருக்கும் அச்சை கடைல வாங்கி செய்ங்க. 

இதுப்போல கொஞ்சம் சோமாஸ்களை செஞ்சு எடுத்து வச்சுக்கோங்க.


ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி, அதுல ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு , ரெண்டுப் பக்கமும் பொன்னிறமா சிவக்க விட்டு எடுங்க.

மேல, மொறு மொறுன்னும், உப்புச்சுவையோடும், உள்ள மிருதுவா இனிப்போடும் சேர்ந்து நல்லா இருக்கும். குட்டி குட்டியா செஞ்சு வச்சுக்கிட்டா பசங்க ஸ்கூல் விட்டு வந்ததும் கொடுத்தா ஆசையா சாப்பிடுவாங்க. ரொம்ப ஈசியானது. அதனால, கொஞ்சம் கொஞ்சமா செஞ்சு டப்பாவுல வச்சு பிள்ளைகளுக்கு கொடுக்கலாம், வயிற்றை பதம் பார்க்காதது.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் காரனர்ல சந்திக்கலாம்!