Wednesday, January 31, 2018

தமிழ்கடவுளுக்கு உலகெங்கும் கொண்டாட்டம் - தைப்பூசம்


தமிழரின் இறை வழிபாட்டுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  எல்லா பௌர்ணமிக்கும் சின்னதும் பெருசுமா எதாவது ஒரு விழா இருந்துக்கிட்டே இருக்கும். அந்த கொண்டாட்டம் பெரும்பாலும், சிவனுக்குரியதா இருக்கும். ஆனா, தைமாசத்துல வரும் பௌர்ணமி தினம் சிவ மைந்தனான கார்த்திகேயனுக்கு உகந்தது. இந்நாளில் சகல முருகன் ஆலயங்களிலும் சிறப்பு அர்ச்சனை, அப்ஷேக ஆராதனைகள்லாம் நடக்கும். பழனி மலை வாழ் முருகனுக்கு காவடி எடுத்தல், பாத யாத்தரையாய் செல்லுதல்ன்னு பெரிய அளவில் கொண்டாடப்படுது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட கோவில்களில் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பழனி தலத்தைவிட குறைவே. 

பழனி முருகனுக்கு அடுத்தபடியா பெரிய அளவில் தைப்பூசம் கொண்டாடப்படுவது மலேசியா வாழ் முருகனுக்குதான். இதுக்காகவே, நம்மூர் ஆளுங்க  ஃப்ளைட் பிடிச்சு போய் தங்கி மலேசியா முருகன் அருளை வாங்கி வர்றாங்க.   தமிழகத்தில் அறுபடை வீடு உள்ளிட்ட பல முருகன் கோவில் புகழ் பெற்றதா இருக்கு. அதேமாதிரி, மலேசியாவில் மூணு முருகர் கோவில்கள் புகழ்பெற்றது. அவை, கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில், பினாங்கு தண்ணீர்மலை,  ஈப்போ கல்லுமலை . இந்த மூணு தலம் பத்தி சுருக்கமா பார்க்கலாம்....


பத்துமலை முருகன் கோவில்...
மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் தலைவனான முருகனுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில்  கோவில் இருக்கு.   இது, நிலத்தில், கடற்கரையில், மலையில் என கோவில் இடம்பெற்றிருந்தாலும்,  மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் முருகன் இடம்கொண்டுள்ள இடம் வித்தியாசமானது. முருகனுக்கு குகன் எனவும் ஒரு பெயருண்டு, அந்த பேருக்கேற்ப, மலைமேல் இருக்கும் குகையிலிருந்து அருள் புரிகின்றான். குகைன்னதும், மலைப்பாறைகளுக்கிடையில் கூனி, குறுகி, தவழ்ந்து செல்லும் குகை அல்ல. மரங்கள் சூழ்ந்த, சுண்ணாம்பு மலைக்குகையில் இருந்துகொண்டு நம்மை ஆட்கொள்கிறான். மலாய் மொழியில்  ’பது கேவ்’ ன்னு சொல்றாங்க. இதுக்கு அர்த்தம், சுண்ணாம்பு குகையாகும். இதுவே, தமிழர்களால் பத்துமலைன்னு அழைக்கப்படுது. 


பச்சை போர்வையால் போர்த்திய மாதிரி நீண்டு உயர்ந்த மலை அடிவாரத்தில் 140 அடி உயரத்தில் ஜொலிக்குதே.. ஜொலி ஜொலிக்குதேன்னு நகைக்கடை விளம்பரம் மாதிரி முருகன் ஜொலிக்கிறார்.  உலகின் மிக உயர்ந்த  சிலை இதுதான். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகளின் கைவண்ணத்தில் 2006ல் இந்த சிலை உருவானது.  வலப்புறம் அரசமரத்தடியில் வினாயகர் இருக்கார். அவருக்கு ஒரு வணக்கத்தையும் தோப்புக்கரணமும் போட்டுட்டு படி ஏறினால், நந்தி தேவர் நம் வருகையை பதிவு செய்ய உக்காந்திருக்கார்.  அவருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு உள்ள போனா லிங்கத்திருமேனியாய் நமக்கு அருள்புரிகிறார் சிவன். தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கா தேவி, சண்டிகேஸ்வரர், மீனாட்சி அம்மன்னு அனைவரும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த பொன்னிற வேலவனின் சிலைக்கு அருகே இருக்கும் 272 படிகளை ஏறினால், செயற்கை நீருற்று அழகன் இருப்பிடத்தை மேலும் அழகாக்குது. குகை வாசலில் நமக்கு வலப்பக்கம் இடும்பனுக்கு சின்னதா ஒரு சன்னிதி இருக்கு., காவடி எடுப்பது தோன்றியது இடும்பனால்,, அதனால அவருக்கு சின்னதா ஒரு மரியாதை. அவரை கடந்து இன்னும் கொஞ்சம் படி ஏறினா மூலவர் முருகனை தரிசிக்கலாம். இம்ம்ம்மாம்பெரிய குகைக்குள் இருக்கும் சின்னதொரு குகைக்குள் கிழக்கு நோக்கி  சின்னஞ்சிறு மூர்த்திக்குள் இருந்தவாறு வெள்ளியால் ஆன சிலாரூபத்திலிருந்து மிகப்பெரிய கீர்த்திகளை நடத்திக்கொண்டிருக்கிறார் முருகன். முருகனுக்கு அருகில் வேல் ஒன்னு இருக்கு, அதுக்குதான் அபிஷேகம்லாம் நடக்கும்.  
இவரை நினைத்து பிரார்த்தித்து வேண்டிக்கிட்டா கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்.  மூலவர் முருகன் தனியா நின்னு அருள்பாலிக்க, மூலவர் சன்னிதிக்கு மேல சற்று உயரமான இடத்தில் நின்று சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை சமேதரராய் அருள்பாளிக்கிறார். பழனி தண்டாயுதபாணிக்கும் தனி சன்னிதி இங்குண்டு. மலாய், சீனமொழியும் அதிகளவில் இருந்தாலும் இங்கு அழகுதமிழில்தான் அழகனுக்கு அர்ச்சனை நடக்குது.  மலையடிவாரத்தில் ஆஞ்சநேயருக்கும், நவக்கிரக சன்னிதி இருக்கு,  கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலை அமைத்து பராமரித்து வணங்கி வந்த தமிழரும், பெரும் வணிகரான தம்பு சாமிப்பிள்ளை என்பவரின் கனவில் தோன்றி, தனது அருட்சக்தி இங்கிருப்பதை உணர்த்தி தனக்கு ஒரு கோவிலை எழுப்புமாறு கட்டளையிட, மலேசியாவை அப்போது ஆண்டுக்கொண்டிருந்த  ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று 1891 ம் ஆண்டு இக்கோவிலை எழுப்பினார். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம், கார்த்தி கிருத்திகை, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும்.  தைப்பூச விழா பழனி மலையில் நடப்பதை போன்று வெகு விமர்சையாய் கொண்டாடப்படும். 


 காப்பு கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து பால்குடங்கள் ஏந்தி, காவடி தூக்கி, நாக்கில், உடலில் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து என கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலமாக வந்து மலையேறி வழிபடுகிறார்கள்.  மலேசியா வாழ் தமிழர்கள் மட்டுமில்லாம இந்தியா, சிங்கப்பூர், இலங்கை,  சீனா. ஆஸ்திரேலியாவிலிருந்தும் வந்து  முருகனை வழிபடுகின்றனர். கோலாலம்பூரிலிருந்து 15கிமீ தூரத்தில் இக்கோவில் இருக்கு.

தண்ணீர் மலை முருகன்...
மலேசிய நாட்டின் தனித்தீவு நகரமான பெனாங்க் தீவில்  ஜார்ஜ் டவுனில் இருக்கு பால தண்டாயுதபாணி கோவில்.  1700களின் இறுதியில், பெனாங்க் பொடானிகல் கார்டனில் இருந்த ஒரு நீரருவியின் கீழே வேல் வழிபாடு நடத்தப்பட்ட சிறிய கோயிலாகத்தான் இக்கோயில் இருந்துச்சு.  இப்பகுதியில் முதன் முதலில் வேலை பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தவர் யார்ன்னு இன்னைய வரை தெரியாது.  அங்கு குடியிருந்த தமிழர்கள் முருகனின் வேலை வழிவழியாக வணங்கி வந்திருப்பர்போல. அந்த இடத்தில் சிறிய முருகன் கோவிலை அமைத்து வழிப்பட்டு வந்தனர். காலப்போக்கில்,  ஜார்ஜ் டவுன் பகுதிக்கு தண்ணீரை வண்டிகளில் சுமந்து செல்லும் கூலித் தொழிலாளிகளின் முக்கிய வழிபாட்டுத் தலமாக வளர்ந்தது அக்கோயில். மெல்ல மெல்ல வளர்ந்து 1800களில் மிகப் பிரபலமாகிவிட்டது ஆலயம். 

அக்காலத்தில் தைப்பூசத் திருவிழா என்றாலே மலேசியத் தமிழர்கள் எல்லாம் இக்கோயிலை நாடி வர ஆரம்பித்தனர். கோவிலுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்ட பிரிட்டிஷ் அரசு, நீர்வீழ்ச்சி இருந்த இடத்தை பாதுகாக்க நினைத்தனர். அதேநேரம் மதம் சார்ந்த உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, வேறொரு இடத்தில் 11 ஏக்கர் நிலத்தை இக்கோவிலுக்காக கொடுத்தனர்.  அந்த இடத்தில் கோவில் கட்ட ஆரம்பித்து 1850ல் முடிவடைந்து இன்று கம்பீரமாய் காட்சியளிக்குது இக்கோவில். ஒவ்வொரு 12வருசத்துக்கொருமுறை கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதை வழக்கமா வச்சிருக்காங்க. நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரே இக்கோவிலை நிர்வாகம் செய்கின்றனர். அதனால, இக்கோவிலுக்கு நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில்ன்னும் பேரு.   தொடக்க நாளில் நீரருவி இருந்த மலையில் வழிப்பட்ட தண்டாயுதபாணி என்பதால் தண்ணீர்மலை முருகன் எனவும் பேர் உண்டாச்சு. இப்படி சொன்னால்தான் மலேசியாக்கரவுங்களுக்கு அடையாளம் தெரியும்.


ஈப்போ கல்லுமலை சுப்ரமணியர்..

மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து வடக்கே 200கிமீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஈப்போ நகரம் கோடீஸ்வரர்களின் சொர்க்கபூமி.  கிந்தான்ற நதியும், கங்கை பிங்கி, கங்கை பாரின்ற துணை நதிகளும் பாய்ந்து வளம் கொழிக்கும் பூமி.  சுண்ணாம்பு குன்றுகள் நிறைந்தது. வெள்ளீயம் அதிகம் வெட்டி எடுக்கப்படும் இடமும்கூட. அப்படி ஒரு குவாரிக்கு சொந்தக்காரரான பாரிட் முனிசாமி உடையாரிடம் கல் உடைக்கும் தொழிலாளியாக மாரிமுத்து என்பவர் இருந்தார். தன் தொழில் நிமித்தமா குனோங்  சீரோ கல்லுமலை அடிவாரத்தில் நடமாடிக்கொண்டிருந்தபோது, இங்கே வா! இங்கே வா! என குரல் கேட்டு, சுற்றும் முற்றும் பார்த்து யாருமில்லாததை கண்டு, திகைத்து நிற்கும்போது, மீண்டும் அக்குரல் கேட்டு வியந்து, பயந்து தன் முதலாளியான முனிசாமி உடையாரிடம் சென்று இத்தகவலை தெரிவித்தார். 

இத்தகவலை கேட்டு முதலில் அசட்டை செய்திட்ட முனிசாமி உடையார், மாரிமுத்து மீது கொண்டிருந்த நம்பிக்கையில், ஆட்களை அழைத்துக்கொண்டு மாரிமுத்துவை அழைத்த குரலோசை ஒலித்த இடத்துக்கு சென்று, அம்மலை பகுதியை ஆராய்ந்து பார்த்தனர். அப்போது கும்மிருட்டுடன் கூடிய குகை ஒன்று தென்பட்டது. அதனுள் நுழைந்து பார்த்தபோது,  கமகமவென, கற்பூரம், ஊதுபத்தி வாசனை வந்தது. அனைவரும் பக்தி பரவசத்தோடு மேலும் ஆராய்ந்தபோது திருமுருகன் சாயலை ஒரு கல்லில் கண்டு அதிசயத்தனர். பின்னர், அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டு வழிபாட்டிற்குரிய கோவிலாய் எழுப்பினர்.  1889 கோவில் எழுப்பும்பணி நிறைவடைந்தது. 



ஏழுமலை ராஜகோபுரத்தோடு, ஏழு கலசங்களை தாங்கி பிரம்மாண்டமாய் இக்கோவில் காட்சியளிக்குது, விசாலமான பிரகாரம், பிரம்மாண்டமான முன்மண்டபம்,  வினாயகர், அம்மன், நடராஜர் சபை, அரசமரத்தடி பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னிதின்னு பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. முருகனின் வாகனமான  மயில்களுக்கென  தனி இடமுண்டு. ஆலயத்தின் நடுப்பகுதியில் கல்லுமலை சுப்ரமணியர் திருச்செந்தூர் நாயகனின் சாயலில் இருந்து அருட்பாலிக்கிறார். 

இந்த தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தார். இது நடந்ததது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்த்தால்தான்…  தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) , இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர். மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். இந்நாளில் தேரோட்டம் நடக்கும். நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வள்ளி மலை. வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்த தலம் இது. இங்கும் தைப்பூசம் வெகுவிமர்சையாய் கொண்டாடப்படும். அத்தோடு, நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடக்கும்.

கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்தது இந்நாளில்தான். சோலைமலை முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், நெல்லைன்ப்ப ஆலயம்ன்னு எல்லா கோவில்களிலும் தைப்பூச விழா சிறப்பாய் கொண்டாடப்படுது. 




.


‘அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் எனவேல் தோன்றும்...!’
நெஞ்சில் ஒருகால் நினைக்கில்

இருகாலும் தோன்றும் முருகா 
என்று ஓதுவார்முன்’என்பதுபோல் ஆறுமுகனே நம் முன்வந்து நம் அல்லல் எல்லாம் அறுத்துவிட்டதாகத் தோன்றி, அவனை வணங்கும்போது மனம் லேசாகிறது. ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. தாரகாசூரனை வதம் செய்த இந்நாளில் முருகனை வழிப்பட்டு அவன் அருள் பெறுவோம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....

நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
    த.ம.7

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
  3. அருமையான கோயில்கள் தரிசனம்.

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு....

    அயல் தேசத்து முருகனையும் தரிசிக்க வைத்தீர்கள்...நன்று ராஜிக்கா...

    ReplyDelete
  5. அருமையான தகவல்
    வேலவனை வணங்கி வெற்றிகள் குவிப்போம்

    ReplyDelete
  6. ஓம் முருகா கந்த கடம்பா கதிர் வேலா கார்த்திகேய ஸ்ரீ பழனி ஆண்டவனே அரகர அரகர அரகர அரோகரா குன்றுதோறும் வாழும் குமரகுருபரனே தகப்பன் சாமியான ஆறுமுகனே கடற்கரைமுருகா மயூரப்பிரியனே சேவற்கொடியோனே தணிகை வேல் முருகா ஓம் சரவணபவ யாமிருக்க பயமேன் முருகு என்றால் அழகு என்றால் முருகா சோலைமுருகா சாமிக்கு சாமியான சாமி மலை ஆண்டவனேமருதமலை ஆண்டவனே ஸ்ரீமுருகப் பெருமானே ஓம் வள்ளி மலை ஆண்டவனே அன்னதான திண்டல் முருகா பச்சை மலை ஆண்டவனே குருவின் குருவே குருந்த மலையாண்டவானே சிவன் மலை ஆண்டவனே சென்னிமலை ஆண்டவனே தவளகிரி முருகா ஊத்துமலை ஆண்டவனே கொங்கணகிரி முருகா ஓதிமலையானே சென்னியாண்டவரே அலகு மலை ஆண்டவனே பச்சை மலை ஆண்டவனே வடபழனி ஆண்டவனே குமர குன்றில் வாழும் கல்யாண சுப்பிரமணியா சாமியே அன்னமலையோனே அனுவாவிமுருகாப்பெருமனே சிக்கல் சிங்கரா வடிவேலனே இரத்தினகிரி முருகாப்பெருமனே வள்ளி முருகா தெய்வனை ஸ்ரீ முருகா கந்த வேல் முருகா குழந்தை வேல் முருகா மலைக் கோயில் குழந்தை வேலாயுதசாமியே எட்டுக்கூடி முருகா ஆவினங்குடி ஸ்ரீதண்டாயுதபணியே இம் மானுடம் பயனுறா தமிழ் கடவுளே உனது கருணை இத்தாய் திரு நாட்டின் அரசியல் சமூகம் மக்கள் இப்பூவுலகையும்காக்க காக்க கனக வேல் காக்கனூம் ஆறுபடை ஆண்டவனே அரகர அரகர அரகர அரகர அரோகரா அரோகரா அரோகரா ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் முருகா சரணம் சண்முக சரணம் சரணம் சரணம்

    ReplyDelete