Friday, March 30, 2018

சுகமான திருமண வாழ்வருளும் - பங்குனி உத்திரம்

இந்துக்கள் பண்டிகைக்கும், பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எதாவது ஒரு விசேசதினம் இருக்கும். அதன்படி, தமிழ்வருடங்களில் 12வதும், கடைசிமாதமுமான பங்குனியும்,  12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும், நாளை பங்குனி உத்திரம் எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.   
திருமணம் என்பது இறைவனால் நிச்சயக்கப்பட்டது.  எங்கேயோ பிறந்து, வெவ்வேறு சூழலில் வளர்ந்த ஆணையும், பெண்ணையும் வாழ்க்கையில் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும். அது ஃப்ரெண்டுங்க தூது போய், ஏற்பாடு செய்யும் காதல் திருமணமானாலும் சரி, மேட்ரிமோனியல்ல பார்த்து பெரியவங்க செஞ்சு வைக்கும் பெத்தவங்களால் நடத்தி வைக்கப்படும் கல்யாணமானாலும் சரி, இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். இன்றைய சூழலில் ஒரு கல்யாணம் நடக்க எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கு?! படிப்பு, ஜாதகம், வரதட்சணை, உருவப்பொருத்தம், ஸ்டேட்டஸ், பணிச்சூழல்...ன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். இத்தனை போராட்டங்களையும் மீறி கல்யாணம் நடந்துட்டாலும் எத்தனை பேர் மகிழ்ச்சியா இருக்காங்க?! 


தடையின்றி திருமணம் நடக்கவும், நடந்த திருமணம் வெற்றியடையவும் இறைவன் அருள் வேண்டி இருக்கும் விரதமே பங்குனி உத்திரம். இந்நாளில் விரதமிருந்து இறைவனை தியானித்து ஆலயங்களுக்கு சென்று,அங்கு நடக்கும் தெய்வத்திருமணங்களை தரிசித்து, இல்லாதவருக்கு இயன்றளவுக்கு உதவிகள் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நல்லபடியா அமையும். சரி, அதென்ன?! எத்தனையோ நாள் இருக்க, இந்த பங்குனி உத்திரம் நாள் மட்டும் திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வா இருக்குன்னு யோசிச்சு பார்த்தால் இன்றைய தினம் ஏகப்பட்ட தெய்வ திருமணங்களும், தெய்வமே குழந்தையாகவும் அவதரிச்ச நாள், அதனாலதான் இந்நாள் திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வா இருக்கு... எந்தெந்த தெய்வங்களுக்கு இன்னிக்கு திருமணம்ன்னு பார்க்கலாமா?!
நீண்டநெடு போராட்டத்திற்கு பின் தவம் கலைந்த சிவப்பெருமான்,  தட்சனின் மகள் மீனாட்சியாய் அவதரித்த பார்வதிதேவியை சுந்தரேஸ்வரராய் அவதரித்து மணந்தது இந்நாளில்தான்.  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண சிறப்பை வேற ஒரு பதிவில் பார்க்கலாம். இன்றைய தினம், சிவனுக்கும், பார்வதிக்கும் அபிசேக ஆராதனைகள் செய்வித்து, மேளதாளம் முழங்க, திருமாங்கல்யம் அணிவித்து, பால் பழம் தந்து, ஊஞ்சலாடி, பள்ளியறைக்கு தம்பதியினரை அனுப்பும் வைபவம் இன்றளவும் வெகு விசேசமாய் கொண்டாடப்படுது.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணுபகவான், மகாலட்சுமியை மணந்ததும் இந்நாளில்தான். அதேப்போல், நாரதர் கலகத்தால், சிவப்பெருமானின் இடப்பாகத்தை பெற்ற பார்வதிதேவியின்பால் பொறாமைக்கொண்டு விரதமிருந்து விஷ்ணுபகவானின் மார்பில் லட்சுமிதேவியும், பிரம்மதேவனின் நாவில் சரஸ்வதியும் இடம்பிடித்தது இந்நாளில்தான். அதுமட்டுமில்லாம இந்நாளில்தான் பிரம்மா-சரஸ்வதிதேவி திருமணமும் நடந்தது.
மனிதன் எப்படிலாம் வாழனும்ன்னு உணர்த்த, தானே வாழ்ந்து காட்ட, விஷ்ணுபகவான் ராமராய் அவதரித்தார். ராம அவதாரத்தில், ராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகிய நால்வருக்கும் மிதிலையில் திருமணம் செய்தது இந்நாளில்தான்.  சிவப்பெருமானின் தவத்தினை கலைக்கும்பொருட்டு, அவர்பால் மன்மத பானம் விட்ட மன்மதனை, தனது நெற்றிக்கண்ணால் சிவன் எரிக்க, பின், அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதனை உயிர்பித்த தினம் இன்று. 

அமிர்தக்கலசத்தை அரக்கர்க்குலத்தவரிடமிருந்து மீட்க விஷ்ணுபகவான் மோகினியாய் அவதரிக்க, அவள் அழகில் சிவன் மயங்க, அவர்கள் இருவருக்குமாய் ஐயப்பன் அவதரித்தார். அப்படி ஐயப்பன் அவதரித்த தினமும் இன்றுதான். தேவர்குல தலைவனும், தேவலோகத்தின் அதிபதியுமான தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடப்பெற்றதும் இந்நாளில்தான். 
சிறந்த சிவபக்தரும், சித்தருமான அகத்தியமுனிவர் முக்தியடைய தடை உண்டானது. அத்தடை என்னவென இறைவனை குள்ளமுனி கேட்க, வாரிசு இல்லாததே அத்தடை என இறைவன் எடுத்துச்சொல்ல, வாரிசு வேண்டி, பக்தியிலும், குணத்திலும் சிறந்த லோபாமுத்திரையை அகத்தியர் மணந்தது இந்நாளில்தான். வில்லுக்கு விஜயன் எனப் புகழப்படும் பஞ்சப்பாண்டவர்களில் ஒருவனான, அர்ஜுனன் பிறந்த நாள் இந்நாள். 
ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருக்கும் திருமணம் நடந்தேறியது இந்நாளில்தான். இப்படி ஏகப்பட்ட தெய்வநிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானது முருகப்பெருமான், தெய்வானை திருமணம். சந்திரபகவான் ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திர பெண்களை மணந்தது இந்நாளில்தான். 

அரக்கன் சூரபத்மனை அழிக்க வேண்டி   முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது. முருகனது அவதார நோக்கம் நிறைவேறியதற்கு பரிசாகவும்,  அரக்கர்குலத்திடமிருந்து, தேவர்குலத்தை காப்பாற்றியதற்கு கைமாறாக,  தேவேந்திரனின் வளர்ப்பு மகளான, தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்வித்தனர். இதன்பொருட்டு, இந்நாளில் பால்குடமெடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை அறுபடை வீடுகளிலும் முருகபக்தர்கள் செலுத்துவர். அனைத்து சிவன் கோவில்களிலும் இன்றைய தினம் வள்ளி, முருகன், தெய்வானை திருமணம் நடைப்பெறும். வள்ளிக்கிழங்கு கொடி வயலில் மான் வள்ளியை ஈன்றதும் இந்நாளில்தான். 
பங்குனி உத்திரம் பழனி என்றழைக்கப்படும் திருவாவினன்குடியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுது. இன்றைய தினம் விரதமிருந்து காவடி தூக்கி வருவதோடு, அருகிலிருக்கும், கொடுமுடிக்கு சென்று காவிரிநீரை சுமந்து வந்து முருகனுக்கு அபிசேகம் செய்விக்கப்படுது. பழனி தலப்புராணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்,  இன்று ஒருநாள் அபிஷேகத்தின்போது மட்டும் முருகன் ஜடாமுடியுடன் உள்ள தோற்றத்தில் இருப்பார். பழனிக்கு அடுத்து,முருகன் தெய்வானை திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் மிகச்சிறப்பாக திருக்கல்யாண வைபவம் நடைப்பெறும். இத்திருமணத்தைக்காண, தங்களது திருமணம் முடிந்த கையோடு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தம்பதி சமேதரராய் வந்தருள்வார்.  இது இன்றளவும் நடக்கும் வைபவம் ஆகும்.
பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி, பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்தி மாலையில் சிவன், விஷ்ணு, முருகன் ஆலயங்களில் நடக்கும் திருமணத்தில் கலந்துக்கொண்டு தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதுமாதிரி 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்தால் மறுப்பிறப்பு கிடையாது. பிறப்பு, இறப்பு சுழற்சியில் சிக்காமல் முக்திப்பேற்றை அடையலாம். 

சூரியன் சித்திரையில் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அதன் அடிப்படையில், பங்குனியிலேயே சூரியன் உக்கிரம் பெற ஆரம்பிப்பார். சூரியனுக்குரிய நட்சத்திரம் உத்திரம். அதனால், சூரியன் உக்கிரமடைவதற்குமுன் அவருக்கு உகந்த நட்சத்திரத்தில் வழிப்பட்டால் அவரின் உக்கிரம் தணிவதோடு, நமது பாவங்களும் பஸ்பமாகிவிடும் என்பதும் ஒரு நம்பிக்கை.  பங்குனி உத்திர நாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனராசியிலும் இருப்பர். இவ்விருவரும் ஒருவருக்கொருவர் ஏழாம்பார்வையில் பார்த்துக்கொள்வர். அதனால், இருவரையும் வழிப்பட்டால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். 
இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர நன்னாளில் திருமணமாகாத ஆண்களும், பெண்களும், திருமண வாழ்வு தடுமாற்றித்தில் இருப்போரும், கல்வி வளம் கிடைக்கவும் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று, அங்கு நடக்கும் தெய்வ திருமணங்களை கண்டு அருள்பெருக!

நன்றியுடன்..
ராஜி. 



15 comments:

  1. பங்குனி உத்திரம் என்றாலே எனக்கு நெய்வேலி நினைவுகள் தான். காவடிகள் பார்க்க காலையிலேயே சென்று விடுவோம். நூற்றுக் கணக்கில் காவடிகள் - ஒவ்வொரு கோவிலிலிருந்தும் எடுத்துச் சென்று வில்லுடையான்பட்டு கோவிலில் சேர்ப்பார்கள்....

    பங்குனி உத்திரம் பற்றிய தகவல் தொகுப்பிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிவ கோத்திரமா இருந்தாலும் எங்க வீட்டில் பங்குனி உத்திரம் கொண்டாடும் பழக்கமில்லை. வேலை மிச்சம்ன்னு இத்தனை நாள் அலட்டிக்கிட்டதில்லை. இப்ப, பதிவுலகம் வந்தபின் தான் தெரியுது. எத்தனை சிறப்பு வாய்ந்த நாள்ன்னு.. அதனால கோவிலுக்கு மட்டும் போய் வருவேன். அக்கம் பக்கம் வீட்டில் இருந்து, அவங்க படையல் போட்டு அந்த கொழுக்கட்டைகளை கொடுப்பாங்க.

      Delete
  2. பங்குனி உத்திரம் எங்கள் ஊரில் கிராமத்து வீட்டில்..அதாவது ஊருக்குப் பொதுவான கிராமத்து வீட்டில் சாஸ்தா பூசை நடக்கும். ஊரில் ஒருவருக்கு சாமி வரும். அப்புறம் ஊர் சாப்பாடு...இப்போதும் நடக்கிறதாம்...ஆனால் பூசை என்றில்லை சாப்பாடு மட்டும் ஆனால் அதிகம் நபர்கள் இல்லையாம்...ம்ம்ம் எனக்கு நினைவுகளோடு சரி...

    உங்கள் தொகுப்பு நன்றாக இருக்கிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்க வீடுகளில் கொழுக்கட்டை செஞ்சு படைப்பாங்க. கோவில்களில் சாமிக்கு திருக்கல்யாணம் நடக்கும். அவ்வளவ்தான் கீதாக்கா

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!

      Delete
  4. படங்களுடன் தகவல்களும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. அருமையான பதிவு.........தெரியாத பல திருமண வைபவங்களை அழகான படங்களுடன் பதிவிட்டமைக்கு நன்றி,தங்கச்சி...

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. பங்குனி உத்திரம் என்றால் எனக்கு சூலமங்கலம் சகோதரிகள் பாடலும் நினைவுக்கு வருகிறது. தகவல்கள் நிறைந்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. கந்தர் சஷ்டி கவசமா?! இல்ல வேறு பாடலா?! இப்படி தலையை பிச்சுக்க வச்சுட்டீங்களே!

      Delete
  7. பங்குனி உத்திரம் பற்றிய தகவல் நிறைவு தருகிறது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  8. பங்குனி உத்திரம் பற்றிய தகவல் நிறைவு தருகிறது.நன்றி

    ReplyDelete