Tuesday, March 13, 2018

பெண்களின் சபரிமலையில் மாசி கொடை விழா


புரட்டாசி மாசம் பொறந்ததும் நம்ம ஊரில் கருப்பு, காவின்னு உடை அணிந்து, துளசி மாலை அணிந்து, சந்தனமிட்டு 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போவாங்க. வயதுக்கு வராத பெண்களும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும்தான் இங்கு அனுமதி. ஆனா, எந்த வயது பெண்களும் மாலை அணிந்து, விரதமிருந்து செல்லும் பெண்களுக்கான சபரிமலைன்னு ஒன்னு  இருக்கு. ஆனா, அது கேரளாவுல இல்லீங்கோ. நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாக்குமரி மாவட்டம், குளச்சலுக்கு தெற்கே சுமார் 2 மைல் தூரத்துல கடற்கரையோரத்தில் இருக்கு அழகிய மண்டைக்காடு கிராமம்.  இங்கு வீற்றிருக்கும் பகவதி அம்மன் கோவிலுக்குதான் இந்த பேரும், சிறப்பும்...
இந்த பகவதி அம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா மார்ச் மாசம் 4ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மார்13 அன்னிக்கு முடியுது.  அதாவது இன்னிக்கு.  ஒவ்வொரு நாளும் அத்தாழ பூஜை, திருவிளக்கு பூஜை, உச்சி கால பூஜை, அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வருதல், வலிய படுக்கை, பெரிய தீ வெட்டி அலங்கார பவனி வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 9-ஆம் நாள் திருவிழாவான  5 ஆயிரதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் வழிபாடுகள் நடைபெறும். அப்போது பச்சரிசி கொளுக்கட்டைகளும் தயார் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்வர். 10-ஆம் நாள் திருவிழாவான நாளை (செவ்வாய்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நிகழ்ச்சியோடு மாசி கொடை விழா நிறைவு பெற உள்ளது.  இதுக்காக கன்னியாக்குமரி மாவட்டத்துல உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம்.  


பொதுவா கோவிலில் குடிக்கொண்டிருக்கும் மூலவர் சிலை கற்கள், சுயம்புவா எழுந்தருளியிருக்கும். ஆனா, இந்த கோவில் மூலவர் விக்கிரகமோ இல்ல சுயம்புவா வளர்ந்த மூர்த்தமோ இல்லை.  சுமார் 15 அடி உயரம் வளர்ந்திருக்கும் பெரிய புற்றே பகவதி அம்மனா வணங்கப்படுது. இந்த புற்று வடிவம்கூட நாளுக்கு நாள் வளர்ந்து வருவதா இந்த பகுதி மக்கள் சொல்றாங்க. 
முன்னொரு காலத்தில் அடர்ந்த பனைக்காடாக இருந்த இந்த பகுதியில் புற்று வடிவில் எழுந்தவள் இந்த மண்டைக்காடு பகவதி அம்மன், ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபட்டவள். பின்னர் கேரள வழக்கப்படி பகவதி அம்மன் என்றழைக்கப்பட்டு ஊர் பேரையும் சேர்த்து மண்டைக்காடு பகவதி அம்மன் என்றானாள். முற்காலத்தில் காடாக இருந்த இந்த இடத்தில் கால்நடை மந்தைகளை மேய்ச்சலுக்கு  மக்கள் கொண்டு வந்ததால்  மந்தைக்காடு என அழைக்கப்பட்டு நாளடைவில்  மருவி மண்டைக்காடு ஆனதாய் ஊர் பெயர்க்காரணம் சொல்வாங்க. 
கேரள மற்றும் கன்னியாக்குமரிவாழ் பெரும்பான்மையான மக்களின் குலதெய்வமாக இந்த அம்மன் விளங்குகிறாள்.  தீயவர்களைத் தண்டிக்கவும், நல்லவர்களை காக்கவும் எப்போதும் இவள் விழிப்போடு இருப்பதாகவும், இவளை வேண்டிக்கொண்டு தொடங்கும் எந்த காரியமும் வெற்றியைத்தான் கொடுக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  கேரளத்தை உருவாக்கிய பரசுராமர் மொத்தம் 108 சக்தி பீடங்களை உண்டாக்கினார். அப்படி அவர் உருவாக்கிய முதல் சக்திபீடம் இதுவாகும். 
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக, வெண்கலச்சிலையாக நின்றக்கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறாள். கடைசி இருவருக்கே அபிஷேக ஆராதானை. 
ஆதிசங்கரரின் சீடர் ஒருவர், ராஜேஸ்வரி அம்மன் குடியிருப்பதாய் சொல்லப்பட்ட ஸ்ரீசக்கரம் ஒன்றை ஏந்தியபடி இங்கு வருகை தந்தபோது  அவர் ஸ்ரீசக்கரத்தை தரையில் வைத்துவிட்டு பூஜையில் ஆழ்ந்துவிட, அவரை சுற்றிலும் உடனே புற்று வளர்ந்துவிட , ஆடுமேய்க்கும் சிறுவர்கள் அவரை எழுப்பிவிட்டனர். ஆனால், ஸ்ரீசக்கரமோ மண்ணை விட்டு வரவில்லை. அதைச் சுற்றி புற்று பெரிதாக வளர்ந்துவிட்டது. பிறகு அங்கே கோயில் கட்டப்பட்டுள்ளதென இந்த ஊர்க்காரங்க சொல்றாங்க.  காலையில் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்விக்கப்ப்படுகிறது. அப்பம் செய்து இந்த அம்மனுக்கு நைவேத்தியமா கொடுத்தா தலைவலி குணமாகும் என்பது நம்பிக்கை. 

 தாலிக்காணிக்கை, மண் சோறு சாப்பிடுதல், உறுப்பு வடிவ தகடுகளை செலுத்துதல்.. இந்த மாதிரியான வேண்டுதல்கள் இங்கு நிறைவேற்றப்படுது. மனநிலை பாதிக்கப்பட்டவங்களை இங்க கூட்டி வந்து வழிபட்டால் அவர்களின் குறை தீரும்ன்னும் இங்க சொல்றாங்க. இங்க அம்மன் கோவிலில் இருக்கும் 
இந்த கோவிலில் இருக்கும் கிணற்றுக்கு தோண்டி (சின்ன சைஸ் குடம், தவளை), நீர் இறைக்க கயிறும் நேர்த்திகடனா செலுத்துறோம்ன்னு சொல்லி வேண்டிக்குறாங்க, மனநிலை பாதிக்கப்பட்டவங்க சரியானபின் இங்கு வந்து நேர்த்திகடன் செலுத்தி, நீர் இறைத்து அம்மன் அபிஷேகத்துக்கு கொடுப்பதா சொல்றாங்க.   27 நெய் தீபங்கள் ஏற்றி, அம்மனின் சன்னிதியை 9 முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறுமாம். உடல்ரீதியா குறைபாடு, நோய் குணமாக, தேர்வெழுத, திருமணம் ஆக..ன்னு எல்லா குறைகளும் இந்த அம்மன் தீர்த்து வைப்பாராம். 


இந்த கோவிலின் விசேசமே பச்சரிசி மாவு, பைத்தம்பருப்பு,  ஏலக்காய், சுக்கு வெல்லம் சேர்த்து செஞ்ச மண்டையப்பம்ன்ற பிரசாதம்தான்.  அதேமாதிரி, நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களது குறை நீங்கியதும் இங்க வந்து  முத்தப்பம்ன்னு ஒன்னு செஞ்சு நைவேத்தியம் செஞ்சு பக்தர்களுக்கு கொடுக்குறாங்க. 
இந்த விழாவுக்காக உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மாலையணிந்து 41 நாட்கள்  விரதமிருந்து, இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வர்றாங்க பெண்கள்.  இங்கு வேப்பமரமே தலவிருட்சம்.


  மண்டைக்காடு சாஸ்தா கோயில் அருகில் மறைவான இடத்தில் யாருடைய பார்வையும் படாமல்  தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவு பதார்த்தங்களை ஒன்பது பானை மற்றும் பெரிய பெட்டிகளில் எடுத்து வைத்து, பின்பு ஒரே நீளமான வெள்ளைத்துணியை உணவுகளின் மீது மூடி தலை சுமடாக சுமந்து கோயிலுக்கு, மேள தாளம், யானைப்பரிவாரம் சூழ தீ வெட்டியுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையல் செய்வதுதான் ஒடுக்கு பூஜை. இந்த பூஜையில் கலந்துக்கிட்டா குழந்தை வரம் கிட்டும்.

கேட்ட வரங்கள் யாவையும் கேட்டபடி கொடுத்தருளும் மண்டைக்காடு பகவதியம்மனின் அருளும் ஆசியும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். மங்களங்கள் யாவும் பெற்று மனையறம் சிறந்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறட்டும். எல்லாம்வல்ல தேவி எல்லோரையும் காப்பாள். 

மண்டைக்காடு கோவில் அமைப்பு பத்தி இன்னும் அதிகமான தகவல்கள்  முன்ன போட்ட பதிவில் இருக்கு..  மறுக்கா ஒருமுறை படிச்சு பாருங்க.

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. அறியாத அரிய தகவல்கள் நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. இது புதிது.......தமிழ் நாட்டிலிருப்பவர்களுக்கே தெரிந்திருக்குமோ,என்னமோ?அழகான படங்களும், தல சரிதமும்............. நன்றி,தங்கச்சி......

    ReplyDelete
  3. இறை வழிபாடு என்பது
    உளநிறைவையும்
    நீண்ட ஆயுளையும் தரும்

    ReplyDelete
  4. புதிய, சுவாரஸ்யமான தகவல்கள். ஒருமுறை சென்று பார்க்க ஆவல்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அறியாத தகவல்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. நான் பார்க்க ஆசைப்படுகின்ற, இதுவரை பார்த்திராத கோயில்களில் ஒன்று. அம்மனைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. பகவதி அம்மன் கோவிலும் ...இடமும் மிக சிறப்பு ராஜிக்கா..

    அதிலும் சந்தன முகத்தோடு காட்சி தரும் புற்றுவடிவ மூலவர் தேவி, வெண்கலச்சிலையாக நின்றக்கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருவது.....

    புதிய செய்தியும் ,வியப்பான தகவலும்...

    ReplyDelete
  9. மண்டைக்காடு பகவதி கோவிலும் மாசித் திருவிழாவும் விவரித்த விதம் நிறைவாக இருந்தது.

    ReplyDelete
  10. எங்க ஊர் பகுதி மண்டைக்காடு ரொம்ப ஃபேமஸ். நான் ஊரில் இருந்த வரை ஏதேனும் கலவரம் நடக்கும் திருவிழாவின் போது ...ஒரு முறை ரொமப்வே பெரிய கலவரம்...அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் தான். நான் குளச்சல் சென்றிருந்த போது போயிருக்கேன். குளச்சல் அருமையான கடற்கரை...அத்தனை அழகா இருக்கும்...தண்ணீர் ரொமப் தூரம் ஓடி வரும். சுத்தம்னா அப்படி ஒரு சுத்தமா இருக்கும்....ரொம்ப தூரம் ஆழம் இல்லாத மாதிரி இஉர்கும் பாறைகளும் இருக்கும்....அந்த அழகு இன்னும் கண்ணில்...தண்ணீர் வரும்..அருகிலேயே வீடுகள் இருக்கும்....இப்ப கடற்கரை எப்படி இருக்குனு தெரியலை...நம்ம ப்ளாகர் அஜய் (கவிதைகள் மட்டும் எழுதுவாரே அவர்) அந்தப் பகுதிதான்....ரொம்ப நாளாச்சு அவர் தளம் சென்று
    அருமையான தகவல்களுடன்...எங்க ஊர்ப் பகுதி பற்றிய பதிவு...நன்றி ராஜி
    கீதா

    ReplyDelete