Wednesday, May 08, 2019

கற்பெனப்படுவது யாதெனில்?! - வெளிச்சத்தின் பின்னே...

Image result for இந்திர விழா
அதுதான் தனக்கும், கோவலுக்குமான கடைசி சந்திப்பென உணராமல் இந்திர விழாவுக்கு தயாராகிக்கொண்டிருந்தாள் மாதவி. தன்னை அலங்கரித்துக்கொள்வதிலும், அங்கு சென்று சாப்பிட சித்தரன்னங்களை தயார் செய்வதிலும், உண்ட களைப்பு தீர ஆடல் பாடலில் மகிழ்ந்திருக்க இசைக்கருவிகளை எடுத்து வைப்பதென பரப்பரப்பாய் இருந்தாள் மாதவி. தன் வாழ்நாளின் கடைசி மகிழ்ச்சி தினம் என்பதை அறியாமல் கோவலனுடன் இந்திரவிழாவுக்கு  மாதவி சென்றாள். 
Image result for இந்திர விழா
விழாவில் கலந்துக்கொண்டு மகிழ்ந்திருந்தாள் மாதவி. நாக்குல சனின்ற வாக்கிற்கேற்ப யாழ் எடுத்து பாட்டு பாட தயாரானாள். பதிலுக்கு கோவலன் பாட.. இப்படியே பாட்டுக்கு பாட்டு தொடர்ந்தது..  'வீசும் அலைகளைக்கொண்ட கடலோரம் நீரில் விளையாடும் இளம் பெண்ணின் நடைக்கு அன்னமே உன் நடை ஒப்புமையாகாது போ ''என்பதே கோவலன் பாடிய பாடலின் பொருள்.கோவலன் வேறு பெண்மீது காதல் கொண்டு பாடியாதாக மாதவி தவறாக எண்ணினாள். அதனால் அவன்மீது மாதவி ஊடல் கொண்டு தானும் ஒருவனை கருதியது போல் நினைத்துகொண்டு பாடத்தொடங்கினாள்*விரும்புவதுப்போலவும், தன் காதல் உணர்வு கோவலனால் பூர்த்தியடையாத ஏக்கத்தினை வெளிப்படுத்தும்விதமாய் 
உடைதிரை நீர்ச்சேர்ப்பர்க்கு உறு நோய் உரையாய்

அடையல் குருகே அடையல் எம் கானல்''

என பதிலுக்கு  மாதவி பாடுகிறாள். இதன்பொருள்' என் காதல் நோயை கடல் சூழ்ந்த ஊர்த்தலைமகனுக்கு[காதலன்] என் காதலை நீ கூறவில்லை எனவே கடல் மணல் அருகே கொக்கே தங்காதே என்பதாகும். மாதவி வேறு ஒருவனை நினைத்து பாடல் படிக்கிறாள். கொக்கே தங்காதே! என மறைமுகமாய் தன்னைத்தான் சொல்கிறாள் என எண்ணி  கோபமாய் அங்கிருந்து  அகன்றான்.  அவனுக்காய் காத்திருந்து சலித்து போய் வீடு வந்து சேர்ந்தாள். 

ஊரே மகிழ்ந்திருக்கும் மாலை வேளை வந்தது. நிலா முற்றத்தில் காத்திருந்த மாதவி, இனியும் தாமதிக்கலாகாது என எண்ணி, இவ்விளவேனில் நாளில் காதலர் மகிழும் மாலையில் தோன்றிய நிலா என்னைத் துன்பம் செய்கிறது. காதலர் சற்றே பிரியினும் பிரிந்த காதலர் வராமல் போயினும் காமன் காதலர் உயிரைக்கொல்வான் இதை நீர் அறிவீராக! என கடிதம் எழுதி, தனது தோழி வசந்தசேனையிடம் தந்து அனுப்பினாள். மடலை தந்த வசந்தசேனை மாதவியின் நிலையை எடுத்து சொன்னாள். ஆடல், பாடல், நடிப்பில் தேர்ச்சி பெற்ற ஆடல் மங்கைதானே அவளுக்கு இந்த உருக்கமெல்லாம் அத்துபடி என அந்த மடலை வாங்கக்கூட மறுத்துவிட்டான். மாலையில் வராவிட்டாலும், காலையில் வருவார் என மனதை சமாதானம் செய்தபடி கோவலனுக்கும் தனக்கும் பிறந்த பெண்குழந்தையை அணைத்தபடி  உறங்கிப்போனாள் மாதவி. 

காலையில் இடியென இறங்கியது அச்செய்தி, கோவலன்  ஊரைவிட்டே போய்விட்டான் என அறிந்து வேரற்ற மரம் போல் சாய்ந்தாள்.  கையில் குழந்தையுடன், இன்று கண்ணீருடன் தான் நிற்க காரணமான அந்நாளை எண்ணி மாதவி மாய்ந்து போனாள். மாசாத்துவன் மகன் கோவலன் கண்ணகியை மணந்து பூம்புகாரில் வசித்து வந்தான்.   மாதவியின் நாட்டிய அரங்கேற்ற நாள் வந்தது.  மன்னர், தளபதி, ஊர் பெரியவர்கள் என ஊரே அங்கு கூடியிருக்க,   ஆடை கட்டி வந்த நிலவாக மாதவி ஒயிலுடன் மேடை ஏறி, மின்னலென சுழன்று, சுழன்று ஆடினாள். 

ஏழு வருடங்களாய் கற்ற மொத்த வித்தையையும் மேடையில் அரங்கேற்றினாள்.  கோவலனுக்கு மாதவியின் அழகு மனதை கொள்ளை கொண்டது. மனைவி கண்ணகியா?! அழகி மாதவியா?! என கோவலனின் மனம் தடுமாற அழகி மாதவி ஜெயித்தாள்.  ஒருகட்டத்தில்  கோவலனின் கண்களை மாதவியின் கண்கள் சந்தித்தது. கண்களாலேயே காதலை பரிமாறிக்கொண்டனர்.  எத்தனை அழகான ஆண்மகன் தன்னை விரும்புகிறான் என எண்ணி மாதவி அவன் காதலுக்கு சம்மதித்து தன் கண்களாலேயே ஒரு நிபந்தனை விதித்தாள். அப்பா யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் விழிக்கும் தன் தாயை போல அல்லாமல், இன்னாரென என் பிள்ளைக்கு தகப்பன் பேரை சொல்லும் அதிகாரம் எனக்கு வேண்டும். எனக்கு கணவராக, உங்கள் மூலமாய் பிள்ளை பெற்றுக்கொள்ளும் உரிமையை தனக்கு தரவேண்டுமென மாதவி வேண்டுகோள் வைத்தாள்.  இனி எனக்கென தனி விருப்பமில்லை. உனது விருப்பமே எனது விருப்பமென மாதவியின் நிபந்தனைக்கு கண்களாலேயே உடன்பட்டான் கோவலன். நாட்டியத்தோடு காதலும் அரங்கேறியது.
INDIAN PAINTING,south indian woman

இதை கவனித்த மாதவியின் தாயான சித்ரபதியும், அவளது தோழியுமான கூனி அதிர்ந்தனர். மாதவியின் அழகினை வைத்து பொருள் ஈட்டலாம் என காத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி இது.  நாட்டியம் முடிந்ததும் 1008 பொன்கழஞ்சும், முத்துமாலையும் பரிசாய் தந்து தலைக்கோலி என்ற பட்டத்தினையும் மன்னன் மாதவிக்கு தந்தான். தலைக்கோலி மாதவி வாழ்க என மக்கள் கொண்டாடினர். மன்னன் சென்றதும், மன்னன் பரிசளித்த முத்துமாலை 1008 பொன்கழஞ்சுக்கு சமமாகும். இதை விலைக்கொடுத்து வாங்குபவர்களுக்கே மாதவி சொந்தமென மாதவியின் தாய் சித்ரபதி சபையில் அறிவித்தாள்.  தன் மனம் புரியாமல் தாய் இப்படி தன்னை ஏலம் விட்டதில் கூனிக்குறுகி நின்றாள் மாதவி. அப்போதுதான் அரும்பியிருக்கும் தன் காதல் ஜெயிக்க வேண்டியும், தனது நிபந்தனையையும் எண்ணி கடவுளை வேண்டியபடி நின்றாள்.   அவளின் நிலையை அறிந்த கோவலன் முத்துமாலையை 1008 பொன் கழஞ்சுகள் தந்து வாங்கிக்கொண்டான். 
Grace painting by Kamal Rao | ArtZolo.com

கண்ணே! கரும்பே! மலைத்தேனே! என கொஞ்சிய கண்ணகியை மறந்தான். பெற்றோரை, வியாபாரத்தை மறந்தான். நாட்டிய மண்டபத்திலிருந்து  மாதவியுடன் அவள் இல்லம்  கோவலன் சென்றான்.  உற்றார், சுற்றம், ஊர் நிகழ்வுகள் மறந்து இருவரும் இரவும், பகலும் கூடி களித்தனர்.  கோவலனனின் அதீத காமத்தை பயன்படுத்தி மாதவிக்கு தெரியாமல்   கோவலனின் கணையாழியை காட்டி காட்டி கண்ணகியிடமிருந்து பொன், பொருள், ஆஸ்தியென அனைத்தையும் வாங்கிக்கொண்டாள் சித்ரபதி. கண்ணகி நடுவீதிக்கு வந்து சேர்ந்தாள். மாதவி கருத்தரித்து ஒரு பெண் பிள்ளையையும் பெற்றாள். இந்த இன்பம் என்றும் நிரந்தரம் என்று பூரித்ததாலும், தாய்மையாலும்  மாதவி மேலும் அழகானாள்.  எதுவும் நிரந்தரமில்லை என இந்திர விழா வரை அவள் உணரவில்லை. இந்திர விழாவும் வந்தது. வர விருப்பமில்லாத கோவலனை வற்புறுத்தி அழைத்துச்சென்றாள் மாதவி.. இல்லையில்லை மாதவியின் விதி. 
by Ravi Varma (63 pieces)

புன்னை மரத்தடியில் புதுமணல் நிரவி,  திரைச்சீலையை கட்டி,  வெண்ணிற தந்தக்கட்டிலில் நறுமண மலர் தூவி, பால், பழம் வைத்து, தேவதையாய்  மாதவியை அலங்கரித்து இருவரையும்  தனித்திருக்க செய்தனர் மாதவியின் தோழியர். அங்குதான் மேற்கண்ட அந்த அசம்பாவிதம் நடந்து இருவரும் பிரிந்தனர். 

கோவலன் ஊரை விட்டு போனதும் நம்பிக்கை குன்றிய மாதவி, கோசிகா என்பவனிடம் மீண்டும் ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பினாள். யாரிந்த கோசிகா?! மாதவி, கோவலன் பிரிவை கேள்விப்பட்ட  பல ஆண்கள் மாதவியை சொந்தம் கொண்டாட  வந்தனர். அவர்களில் ஒருவன்தான் இந்த கோசிகா.  ஆனால் மற்ற ஆண்களைப்போல மாதவியின் உடலுக்கு ஆசைப்படாமல், அவளின் நாட்டிய கலைமீது ஆர்வம் கொண்டும், மாதவிக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு அவளிடம் சேர்ந்தவன். தாய் தந்தைக்கு சேவை செய்வதைக்கூட மறந்து, இரவோடு இரவாக கண்ணகியோடு  ஊர் விட்டு செல்லுமளவுக்கு நான் என்ன பாவம் செய்தேன்?! எப்படியோ இந்த குற்றம் நடந்துவிட்டது. பிரிவுத்துன்பத்தில் இருக்கும் என் மனம் குற்றமற்ற உங்கள் அன்பை  நாடுகிறது.  அதனால் குற்றங்குறைகளை மன்னித்து வந்து விடுங்கள் என கடிதம் எழுதி, இது வெறும் மடலல்ல கோசிகா. எனது உயிர். விரைந்து அவரிடம் சென்று சேர்பித்து பதில் மடல் பெற்று வா! முடிந்தால் அவரை கையோடு கையாய் அழைத்துவா என கோசிகாவை அனுப்புகிறாள். 

கோவலன் இனி செல்லாக்காசு, அவனிடமிருந்த அனைத்து செல்வத்தையும் வாங்கியாகிவிட்டது. இனி எதற்கு அவன்?! உனக்கிருக்கும் அழகிற்கும், நாட்டிய திறமைக்கும் இந்த நாடே அடிமைப்படும். அவனை விடுத்து பிழைக்கும் வழியைப்பார் என மாதவியின் தாய் சித்ரபதியும், அவளது கூனியும் சொல்ல, அப்போதுதான் கண்ணகியை அவர்கள் ஏமாற்றி பொருள் கவர்ந்தது மாதவிக்கு தெரிய வந்தது.  உடனே, கோவலனின் சொத்துகள் அனைத்தையும் கோவலனின் தந்தையான மாசாத்துவனிடம் சேர்ப்பித்தாள். அவளது கடிதத்தையே சிறிது மாற்றி எழுதி தனது தந்தை, தாய்க்கு அனுப்பி வைத்தான் கோவலன். தனித்து வந்த கோசிகாவை கண்டதும் ஓடி கோவலன் என்ன சொன்னான் எனக்கேட்டாள், நடந்ததை சொன்னான் கோசிகா. தன்னை பற்றி எதாவது கேட்டாராவென மாதவி கேட்க இல்லையென்றான் கோசிகா. மகள் மணிமேகலை பற்றி?! ம்ஹூம் என உதட்டை பிதுக்கினான் கோசிகா. கோவம் தன்மீதுதானே?! மகளை விசாரிக்கக்கூடவா மனமில்லை என மனம் நொந்தாள். கோவலனுடன் அவள் வாழ்ந்த பொன் நாட்களின் நினைவுச் சின்னமாகத்தான் அவள் மணிமேகலையை எண்ணி மிகவும் பாசத்துடன் வளர்க்கிறாள்.

இதற்கிடையில் கோவலன் கொலையுண்டது மாதவி காதுக்கு வந்து சேர்ந்தது கோவலன் இறந்ததும் நன்மைக்கே! பத்து கப்பலுக்கு சொந்தக்காரனான ஒரு வணிகன் உன்மீது ஆசைக்கொண்டு வந்திருக்கிறான். மணிமேகலையை உனது தங்கை என சொல். போய் ஒப்பனை செய்துக்கொண்டு வா. என ஒப்பனை அறைக்குள் மாதவியை தள்ளினாள். ஒப்பனை முடிந்து வந்த மாதைவியை கண்ட சித்ரபதி விக்கித்து நின்றாள். பொன் ஆபரணங்கள் நீக்கி, தலையை மொட்டையடித்து, காவி அடித்து துறவியாய் வந்து நின்றாள்.   மகள் மணிமேகலையோடு நாடு நகரம் என சுற்றினாள்.
Image may contain: 2 people

வெறும் உடல் சுகத்துக்காக மட்டுமே மாதவியை கோவலன் அண்டியிருந்தான். அதனால்தான் அவள் பாடிய கானல்வரி பாடலின் பொருள் புரிந்துக்கொள்ளாமல் மாதவியை சந்தேகித்து   அவளைவிட்டு பிரிந்துப்போனான். ஆனால் மாதவி அவனை உண்மையாய் நேசித்தாள்.  அதனால்தான் அவனை பிரிந்தபின் தவ வாழ்வை வாழ்ந்தாள் மாதவி.  கோவலனுக்கு உற்ற பத்தினியாக தன்னை அற்பணித்துக்கொண்டு வாழ்ந்த மாதவி கோவலனுக்காக காத்திருந்து உருகிய கண்ணகிக்கு எந்த வகையிலும் குறைவில்லாத பத்தினி தெய்வம்தான்.  அவள் நினைத்திருந்தால், அவள் பின்னே சுற்றி வந்த ஆண்களில் யாருடனாவது செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்கலாம்.   துறவியாய் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை. அவள் மட்டுமில்லாமல் மகள் மணிமேகலையையும் சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுத்தாமல் யோகியாய் வளர்த்து வந்தாள்.  .

சித்ரபதி தனது மாதவியிடம், உன் மகள் மணிமேகலை பருவம் வாய்த்த மங்கை ஆகிவிட்டாள். அவள் நடனம் கற்காததால் பெருங்குடிமக்கள் மணிமேகலையை ஏற்கமாட்டார்கள்.  என்ன செய்வாய் மாதவி என்று கேட்கிறாள். மாதவி தன் மகள், பெரும்பத்தினியான கண்ணகியின் மகள், கோவலனின் மகள்  கணிகையின் மகளில்லை. அவள் இந்த வாழ்க்கைக்கு சரிப்படமாட்டாள். அவள் புத்தமதத்தை சேர்ந்துவிட்டாள் எனக்கூறி தனது மகள் தனக்கோ, கண்ணகிக்கோ சற்றும் குறைவில்லாத பத்தரை மாற்று தங்கம் என உலகுக்கு உணர்த்துகிறாள்.

ஒரு மகளாய் சித்ரபதிக்கு பொருளீட்டி கொடுத்து, மனைவியாய் காதலியாய் கோவலனை உண்மையாய் நேசித்து, தாயாய் மணிமேகலையை  காமப்பார்வை பார்க்கும் ஆண்களிடமிருந்து காப்பாற்றியும், தான் பிறந்த கணிகையர் குலத்து பெண்ணாய் நாட்டிய கலையில் தேர்ச்சியும், ஆன்மீகத்தில் ஈடுபாடும் என தான் ஏற்ற அனைத்து பாத்திரத்திலும் தேர்ந்து விளங்கினாள். அவளது மனதை, விருப்பத்தை அவளை பெற்றவளும் புரிந்துக்கொள்ளாமல் அவளை சந்தைப்படுத்தினாள். காதலே முக்கியம் என எண்ணி கோவலனை நாட, அவனோ அவளது உடல்மீது மட்டுமே ஆர்வம் கொண்டான். கற்பு மணத்திலும் களவு உண்டு. களவு மணத்திலும் கற்பு உண்டு என உலகுக்கு உணர்த்தினாள்.  கண்ணகி பாதுகாப்பான இடத்தில் பிறர் நெருங்க முடியாத அரணுக்குள் வாழ்ந்தவள். ஆனால், மாதவி கற்பு நெறி தேவையற்ற குலத்தில் பிறந்து யாரும் நெருங்கலாம் என்ற சூழலில், கோவலனை மட்டுமே நேசித்து வாழ்ந்த காரணத்தினால் மாதவியும் கற்புக்கரசியே. கண்ணகி அளவுக்கு அவளது பாத்திரம் பேசப்படவே இல்லை என்பது வேதனையே!

அதிகம் பேசப்படாத கதாபாத்திரத்தோடு வருவேன்....

நன்றியுடன்,
ராஜி

4 comments:

  1. மாதவியின் பாத்திரம் மனதில் நிற்கும் பாத்திரம்.

    கண்ணகி மட்டும் விட்டுக்கொடுக்காமல் சாதி லீலாவதி மாதிரி இருந்திருந்தால்....!

    ReplyDelete
    Replies
    1. ஒன்னும் பண்ணி இருக்கமுடியாது. இந்த மாதிரி ஆளுங்கலாம் தானா மாறினால்தான் உண்டு..

      Delete