Saturday, March 28, 2020

முட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா?! - கிராமத்து வாழ்க்கை

என்னதான் இன்னிக்கு வீட்டிலிருந்தே ஆர்டர் பண்ணி நினைச்சதை வாங்கமுடியும்ன்ற நிலை இருந்தாலும், அன்னிக்கு நாலனா கொடுத்து வாங்கி அனுபவிக்க முடியாமால் போன நிறைய விசயங்கள் இருக்கு. மத்திய வயதினர் அனுபவித்த அல்லது அனுபவிக்காமல் விடுபட்டவற்றின் தொகுப்பே இந்த கிராமத்து பதிவு தொடர்...

 கைக்கு கிடைக்கும் அனைத்துமே விளையாட்டு பொருளா மாத்தும் கெப்பாக்குட்டி 70/80 கிட்ஸ்க்கு உண்டு.  நிலைமை இப்படி இருக்க நாம மிட்டாயை மட்டும் விட்டுடுவோமா?! படத்துல பார்க்குற இந்த மிட்டாய் பத்து காசு கொடுத்து வாங்கி இருக்கேன். கயிற்றின் ஒரு முனை இடது ஆட்காட்டி விரல்லையும், இன்னொரு முனையை வலது ஆட்காட்டி விரல்லயும் சுத்திக்கிட்டு சுழட்டி, சுழட்டி விளையாடுவோம். மிட்டாய் உடைஞ்ச பிறகுதான் அதை சாப்பிடுவோம். இதேமாதிரி கோல்ட் ஸ்பாட் மூடி, மருந்து பாட்டில் மூடிலயும் செய்து விளையாடி இருக்கோம்.
உடல்வலி, மூட்டு வலி, சிறுநீர் பெருக்கியாக, புற்றுநோய்க்கு மருந்தாக.. இப்படி பலவகைகளில் பயன்படும் மூலிகை வகையை சேர்ந்ததுன்னு தெரியாது. இதுக்கு பேரே இத்தனை நாள் தெரியாது. சொடக்கு தக்காளின்னு இன்னிக்குதான் தெரியும்.  இந்த காயை உடைச்சு விளையாடுறதும், பழத்தை சாப்பிடுறதுன்னு இருந்திருக்கோம்.  இதோட இலையை பறிச்சா ஒரு திரவம் சுரக்கும். அதை ஊக்குல நிரப்பி ஊதினா பப்பிள்ஸ் வரும். 
வசதியானவங்க மட்டுமே குடிச்சுட்டு வந்த கூல் டிரிங்கை ஏழை மக்களும் சாப்பிட ஆரம்பிச்சது இந்த ரஸ்னாவிலிருந்துதான். மேங்கோ, ஆரஞ்ச், லெமன்னு மூணு தினுசா வந்துச்சு. ஐஸ் போடலைன்னாலும் பானை தண்ணில கலந்து  குடிச்சிருக்கோம்.  ரஸ்னாவின்  துணையோடு ரஸ்னா விளம்பரத்துல வந்த பாப்பாவின் கண் இன்னும் நினைவில் இருக்கு. 
ரஸ்னா விளம்பரம்...
புவியியல் பாடத்தில கொஸ்டின் பேப்பரோடு உலக /இந்தியா மேப் கொடுப்பாங்க. கண்டங்களை/ மாநிலங்களை குறிக்க சொல்வாங்க. இருக்குறதுலயே ரொம்ப ஈசியான கேள்வி. இதுக்கு பத்து மார்க்.  

சீயக்காய், பச்சை பயறு, அரிசி, வேப்பம்பூ, வெந்தயம், எலுமிச்சை/ஆரஞ்சு தோல், பூவந்தி கொட்டை, செம்பருத்தி இலை/பூ... இதுலாம் காய வச்சு அரைச்சு தலையில் தேய்ச்சு குளிச்ச காலத்தில் எங்கோ ஒருத்தருக்கு இருந்த பொடுகும், முடி உதிரும் பிரச்சனையும் எல்லாருக்கும் கொண்டு வந்ததில் இந்த ஷாம்புக்கு முதலிடம் உண்டு.  கறுப்பு, மல்லிகை, ரோஜான்னு தினுசு தினுசா வந்துச்சு.  மக்களின் சோம்பேறித்தனத்தை  நல்லா பயன்படுத்திக்கிட்டாங்க. விளைவு வீடு முழுக்க தலை முடி, எலிவால் பின்னல், வழுக்கை தலை... சீயக்காய் போட்டு குளிச்சா பட்டிக்காடுன்னு சொன்ன காலம் போய் எங்க ஷாம்புவில் சீயக்காய் இருக்கு, எலுமிச்சை இருக்குன்னு கூவுறாங்க.
ராஜா ராணி, செட் சீட் மாதிரி நோட் புக்கில் இருவர் விளையாடும்  விளையாட்டு.. 10,20,30,45, 60ன்னு எதாவது ஒரு எண்ணிக்கையில் புள்ளியை தேர்ந்தெடுப்பாங்க. உதாரணத்துக்கு 25 புள்ளி 25 வரிசைன்னு வச்சுக்கிட்டு, முதல்ல ரெண்டு புள்ளிக்கு இடையில் முதல் ஆள் நேர்கோடு போடுவாங்க..  அடுத்த ஆள் இன்னொரு கோடு போடுவாங்க. இப்படியே போட்டுக்கிட்டு வர நாலு பக்கமும் கோடு போட்டு பெட்டி வந்தால் அதில் அவங்க பேரை எழுதினா ஒரு பாயிண்ட். கோடு போடும்போது பாக்ஸ் போட்டால் அதுக்கடுத்து அவங்களேதான் கோடு கிழிக்கனும். இல்லன்னா அடுத்தவங்க போடுவாங்க. 
எங்க வீட்டில் நாய், பூனை, மாடு, ஆடுன்னு எதும் வளர்த்ததில்லை. ஆனா, எப்பவாவது அம்மா, கோழி மட்டும் வாங்கி வளர்த்திருக்காங்க. கோழி காலில் நூல் கட்டி நாலு இல்ல அஞ்சி நாள் வீட்டிலேயே கட்டி வைப்பாங்க.  பிறகு கோழியை அடுப்பை மூணு  முறை சுற்றி வெளியில் விடுவாங்க. மாலையில் கரெக்டா வீட்டுக்கு வந்திரும். இருட்டின பிறகும் வரலைன்னா கோழிய நாம மறந்திடனும். கோழி முட்டை போடும் நாள் வரும்போது, வெளியில் போகவே போகாது. எதாவது ஒரு மூலையில் உக்காந்துக்கும். அப்பவே புரிஞ்சுக்கிட்டு கூடையை பாதி கவுத்தி வச்சால் அதுக்குள் போய் முட்டை போடும்,

கோழியை பத்தி விட்டுட்டு அந்த முட்டையை கையில் எடுக்கும்போது முட்டை இதமான சூட்டில் இருக்கும். இப்படியே பத்து இல்ல பதினைஞ்சு முட்டைகளை போடும். தின்னது போக அம்மா கொஞ்சம் முட்டைகளை சேமிச்சு வைக்கும். முட்டை இட்டு முடிச்சதும்  ஓரிடத்தில் மண்ணை குமிச்சு, அதன்மேல் லேசா வைக்கோல் வச்சு, அதன்மீது முட்டைகளை வச்சா, கோழி அதன்மேல் உக்காந்து அடை காக்கும். கோழி எங்காவது போகும்போது நாம அந்த பக்கம் போனாலே நம்மை தாக்க வரும். முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வந்தால் அது கீச்கீச்ன்னு கத்துற சத்தமிருக்கே! அடடா!! ஹூம்ம்ம்ம்ம் அதுலாம் ஒரு பொற்காலம்!!

கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி


13 comments:

  1. அருமையான நிகழ்வுகள்...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றிண்ணே

      Delete
  2. இனிமையான நினைவுகள்....

    நெய்வேலியில் பக்கத்து வீட்டில் கோழி, மாடு அனைத்தும் உண்டு. அவர்கள் வீட்டில் இப்படி அடைகாப்பது பார்த்து இருக்கிறேன். விளையாடியதும் உண்டு.

    ஆஹா... இன்றைக்கு பிறந்த நாளா? மனம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. நாங்கள் சோடா பாட்டில் மூடியை அப்படி நூலில் சுற்றி இழுப்போம்.  விஸ் விஸ் என்று அது சுற்றும்போது சுவாரஸ்யமாய் இருக்கும்.  என்னதான் ட்வைன் நூலில் கட்டினாலும் ஒரு கட்டத்தில் அது அறுந்துபோகும்!  அந்த சொடக்குத் தக்காளியை நெற்றியில் குத்தி பட்பட்டென்று உடைப்பார்கள்!

    சுவாரஸ்யமான நினைவுகள்தான்.

    ReplyDelete
    Replies
    1. நானும் செஞ்சு விளையாடி இருக்கேன் சகோ..

      Delete
  4. பதிவு ஸூப்பர் ரஸ்னா மறக்க முடியுமா ?

    இன்றைக்கு பிறந்த நாளா ?

    இந்த நேரத்துல ஜூவல்லர்ஸ் பூட்டிட்டாங்களே... என்ன செய்யிறது சகோ ?

    ReplyDelete
    Replies
    1. விலை மதிப்பற்றது உங்க அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும். அதுவே போதும்ண்ணே. அதைவிட்டு நிலையற்ற நகைகள் எதற்கு?!

      Delete
  5. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது முட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா?! – கிராமத்து வாழ்க்கை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. பதிவை இணைத்தமைக்கிற்கு நன்றி சகோ

      Delete
  6. இவ்வாறாக நினைத்துப்பார்ப்பதில் உள்ள சுகத்திற்கு இணை எதுவுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. நினைத்தாலே இனிக்கும்ப்பா

      Delete