Wednesday, June 11, 2014

பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம் - மௌனச்சாட்சிகள்




புராண கதைகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போகும்போதெல்லாம் அந்த கதை மாந்தர்கள்லாம் கூடவே நடந்து வர்ர மாதிரி எனக்கொரு நினைப்பு. அதனால அதுப்போன்ற இடங்களுக்குப் போகனும்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். பூம்புகாருக்கு பத்து வருடங்களுக்கு முன் போயிருக்கேன். ஆனா, கடற்கரையில் கால் நனைத்ததோடு சரி. வேற எங்கும் சுத்திப் பார்க்கல. ஆனா, இந்த முற்றை அப்பாவோடு போகும்போது என்னை பூம்புகார்ல கொஞ்ச நேரம் விடனும்ன்னு கேட்டுக்கிட்டேன். இந்த முறை பொறுமையாய் எல்லா இடத்துலயும் சுத்திப் பார்த்துட்டுதான் வந்தேன். 

சிலப்பதிகார கதையை உங்களுக்கு நான் சொல்லனும்ன்னு அவசியமில்ல. இருந்தாலும் எனக்கு தெரியும்ன்னு  நீங்க தெரிஞ்சுக்கனுமேன்னு சுருக்கமாய்....,

வணிகக் குலத்தில் பிறந்த கோவலனுக்கும், கண்ணகிக்கும் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்து தனிக்குடித்தனம் வைக்குறாங்க. கடல் கடந்து வாணிபம் செய்து கண்ணகியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். மாதவியின் ஆடல் நிகழ்ச்சிக்கு செல்லும் கோவலனின் கழுத்தில் மாதவி வீசிய மாலை விழுது. தாசிக் குலத்தில் பிறந்தாலும் நல்லவளான மாதவியின் அன்பிலும், கூடவே அவள் தாயின் சூதிலும் விழுந்து மலையென இருந்த செல்வத்தை இழக்கிறான் கோவலன்.

இந்திரவிழாவில் பாடிய பாடலை தவறாய் புரிந்துக் கொண்டு கண்ணகி இல்லம் நோக்கி வருகிறார்ன். வீடு வந்தபின் தான் தெரியுது தான் பாடுப்பட்டு சேர்த்த அத்தனை செல்வமும் இழந்துட்டோம்ன்னு. நல்லா வாழ்ந்த ஊரில் இனி வறுமைக்கோலத்தில் இருக்கக்கூடாதுன்னு  முடிவு செய்து பாண்டிய நாட்டிற்கு கண்ணகியுடன் செல்கிறான். அங்கு கண்ணகியின் கால் சிலம்பை கொண்டு சென்று அரண்மனை பொற்கொல்லரிடம் தந்து அதை விற்றுத் தரச் சொல்கிறான்.

அதற்கு முன்பே, பாண்டிய மன்னனின் பட்டத்து ராணியின் சிலம்பு பழுதுக்கு வர, அதை களவாடிக் கொண்ட பொற்கொல்லன், கோவலந்தான் அதை திருடிக்கொண்டான் என மன்னனிடம் சொல்ல. ஆராயமல் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இதைக்கேட்டு வெகுண்ட கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவைக்கு வந்து முறையிட, தன் சிலம்பின் பரல்கள் மாணிக்கம் என உரைத்து, பாண்டிய ராணியின் கால்களில் இருந்த தன் சிலம்பை உடைத்து கோவலன் நிரபராதி என நிரூபித்து மதுரையை எரித்து பழித்தீர்த்துக் கொள்கிறாள்.

இளங்கோவடிகளின் திருவுருவ சிலை.

கால்நடையாகவே 14 நாட்கள் நடந்து வந்து சேர நாட்டு செங்குன்றம் மலை மீது இருந்து தெய்வமானவளின் கதையை வேட்டைக்கு வந்த செங்குட்டுவன் கேள்வியுற்று, அவளுக்கு கோவில் எழுப்ப இமயமலையில் இருந்து கல் கொண்டுவந்தான் என புராணங்கள் சொல்லுது. 

கNணகி, கோவலன் வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினம் நகரத்தின் 7 தெருக்களை நினைவுப்படுத்தும் விதமாக 7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கு இந்த சிலப்பதிகாரக் கலைக்கூடம். சிலப்பதிகாரத்தையும், கண்ணகியையும், தமிழையும் கௌரவப்படுத்தும் விதமாக பூம்புகாரில் அப்போதைய அரசால்  1973ல் சிலப்பதிகார கலைக்கூடம் என்ற பெயரால் ஒரு நினைவுக்கூடம் எழுப்பப்பட்டுள்ளது.  மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்டது.
கலைக்கூடத்தின் நுழைவு வாயிலில் கோவலன் மற்றும் கண்ணகி  சிலைகள்  வாசலிலேயே நம்மை வரவேற்கும் விதமாக வச்சிருக்காங்க. இக்கலைக்கூட மாளிகையின் கோபுர வடிவமைப்பு 50 அடி உயரம் கொண்டது. இக்கோபுரத்தின் கலசங்கள் 8 அடி கொண்டதாகும்.

இக்கலைக்கூடத்தின் சுவற்றில் சிலப்பதிகார கதையின் முக்கிய நிகழ்வுகளை 49 சிற்பங்களாக வடிக்கப்பட்டு கண்ணாடிக்குள்  பார்வைக்கு வச்சிருக்காங்க. 


(கண்ணகி பத்தினி தெய்வமாக போற்றப்பட முக்கிய காரணமான அவளின் காற்சிலம்பு)

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில்  பூம்புகார் அமைந்திருக்கு.  சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் பூம்புகார் இருக்கு.  சென்னைல இருந்து சீர்காழி, அல்லது சிதம்பரம் வந்து அங்கிருந்து பூம்புகார் வரலாம்.

(கண்ணகியும், கோவலனும் சந்தோசமாய் இருந்த காலத்தை விளக்கும் சிற்பம்)

(மாதவியை தவறாய் புரிந்துக்கொண்டு அவளைப் பிரிந்துச் செல்லும் காட்சி)

(கண்ணகி கையால் கடைசியாய் உணவருந்தும் காட்சி)


(பொற்கொல்லரிடம் கண்ணகியின் சிலம்பை கோவலன் கொடுக்கும் காட்சி)

(கோவலனின் படுகொலைக் காட்சி)


(பாண்டிய மன்னன் அரசவையில் கண்ணகி சிலம்பொடித்து கோவலன் நிரபராதி என நிரூபிக்கும் காட்சி)

(சேர மன்னன் செங்குட்டுவனும், அவன் சகோதரன் இளங்கோவடிகளும் கண்ணகிக்கு  கோவில் எழுப்ப இமயமலையிலிருந்து கல் கொணரும் காட்சி)

(சிலப்பதிகார கலைக்கூடத்தின் மேற்கூரையில் வடிவமைக்கப்பட்ட வண்ணச் சிற்பம்)


(சிலப்பதிகார காலத்தில் இசைக்கப்பட்ட இசைக்கருவிகளின் மாதிரிகள்)


காவிரி ஆறு இப்பூம்புகார் கடலில்தான் கலக்கின்றது. இப்பூம்புகார் நகரம் சோழ நாட்டின் தலைநகராய் அக்காலத்தில் விளங்கியது.

வரலாற்று புகழ்பெற்ற எல்லா இடங்களிலும் சுற்றிக்காட்ட கைடுகள் இருப்பாங்க. ஆனா, எவ்வளவு தேடியும் பூம்புகார் பற்றி விளக்க ஒருத்தரையும் காணோம். 

காவிரிப்பூம்பட்டிணம் மிகப்பெரும் துறைமுகமாக விளங்கியது. உலக நாடுகள் பலவற்றிலிருந்து வந்தப் பொருட்கள் இங்கு கடைவிரிக்கப்பட்டதற்கு பட்டிணப்பாலை நூலே சாட்சி. முத்தும், பவளமும், பட்டும், ரத்தினமும் கடைவிரிக்கப்பட்ட இடத்தில் கருவாடும், மீனும். காலத்தின் கோலம் இதுதான் போலும்!!

பூம்புகார் நகரின் கடற்கரை. துறைமுகம் வரப்போகுது. அதனாலதான், கற்களால் கரைக் கட்டுறாங்கன்னு அங்கிருந்தவங்க சிலர் சொன்னாங்க. இன்னும் சிலர் சுனாமி தாக்குதலிலிருந்து அதிக பாதிப்பு வராம இருக்க தடுப்பணை கட்டுறாங்கன்னு சிலர் சொல்றாங்க. எது உண்மை!?

அரசியல் காழ்ப்புணர்ச்சியா!? இல்ல எதாவது செண்டிமெண்டான்னு தெரியல. இக்கலைக்கூடம் போதிய வெளிச்சமில்லாம, சரிவர துப்புறவு கூட செய்யாம இருக்கு. நுழைவுக்கட்டணம் கூட பலகையில் போட்டிருப்பது போல் வாங்காம 7 பேரா!? 29 ரூபா கொடுத்துட்டுப் போங்கன்னு சொன்னார். இதென்ன கணக்குன்னு எனக்கு புரியல. 

கலங்கரை விளக்கம், அருங்காட்சியம் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்...,


20 comments:

  1. என்னுடைய ரொம்ப நாள் ஆசை பூம்புகார் போகணும்னு..சீக்கிரம் போகணும்

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் போய் பார்த்து வா சீனு. இல்லாட்டி அரசியல் சித்து விளையாட்டில் இருக்குறதும் அழிஞ்சுப் போகலாம்:-(

      Delete
  2. சின்ன வயசுல ஸ்கூல் டூர் போனபோது போனது... அப்புறம் போகவே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒரு முறை போய் வாங்க சகோ!

      Delete
  3. படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  4. விளக்கங்கள் அருமை சகோ. கண்டிப்பாக ஒரு முறை செல்ல வேண்டும் என்று தூண்டுகிறது தங்களின் இந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை இந்தியா வரும்போது பூம்புகார் போற மாதிரி பிளான் போட்டு வாங்க சகோ!

      Delete
  5. படங்கள்&விளக்கம் அருமை.நாங்கள் சிறு வயதில் கோவலன்+கண்ணகி கதை படித்திருக்கிறோம்.பாடப் புத்தகத்தில் "அந்த" நாட்களில் இருந்தது.இப்போ.................ஹூம்!

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து வீட்டில் 12வது படிக்கும் பென் இருக்கு. அந்த பெண்கிட்ட சிலப்பதிகார கதை தெரிய்மான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லுது. ஐப்பெருங்காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தையே அறிய வைக்காத நம் கல்வி முறையை என்னச் சொல்வது!?

      Delete
  6. விளக்கமும் படமும் அழகு எனக்கும் போகும் ஆசை உண்டு பார்க்கலாம் வழி பிறந்தால்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள் சகோ!

      Delete
    2. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள் சகோ!

      Delete
  7. படங்களும் தகவலும் அருமை சகோதரியாரே
    தம9

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  8. அரசியல் காழ்ப்புணர்ச்சியா இருக்க சான்ஸே இல்லை.

    நாங்க 2009 லே போய் வந்தோம். அப்ப இதைவிடமோசமா இருந்துச்சு:(
    ஆட்சி மாறாத காலம் அது,

    ஆரம்ப நாட்களில் தனி மாடத்தில் இருந்த மாதவியை இப்போ ரெண்டு வீட்டுக்கும் சம மதிப்புன்னு கோவலனுக்கு ரெண்டு பக்கமும் கொண்டு வந்து வச்சுருந்தாங்க.:(

    ReplyDelete
    Replies
    1. ஓ! இப்போ போதிய வெளிச்சமில்லாம தூசும், தும்புமா இருக்கும்மா!

      Delete
  9. பல முறை போக நினைத்தும் போகாத இடம்.....

    உங்கள் பதிவு போகும் ஆசையைத் தூண்டிவிட்டது.

    ReplyDelete

  10. ​முன்பு வாரம் ஒரு முறை கடற்கரையை ரசிபதர்ககவும், மன அமைதிக்காகவும் நன்பர்களோடு கூட்டாய் செல்வேன். பின்பு வேலைக்காக பெங்களூர் வந்ததுடன், ​மாதம் ஒருமுறை செல்கிறேன். அப்போதெல்லாம் கோவலன் பற்றியோ கண்ணகி பற்றியோ யோசித்ததில்லை. அனால் உங்கள் பதிவை படித்தவுடன் பூம்புகாரின் அருமைகளை இன்னும் தெரிந்து கொள்ள ஆசை வந்துள்ளது.

    அழகான பதிவிற்கு நன்றி, சகோதரி!

    எதுவும் கிட்ட இருந்தா அதோட அருமை தெரியாதுன்னு சொல்லுறது சரிதான்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்... காவிரிப்பூம்பட்டிணம் பற்றி எழுதியதற்காக உங்களுக்கு மிக்க நன்றி. பூம்புகார் வாசி என்றவகையில் எனக்கும் அதே ஆதங்கம் உள்ளது. பல சிறப்புகளை கொண்டிருக்கிறது பூம்புகார். அதன் எச்சங்கள் மட்டுமே இப்போது உள்ளது. அதன் அருமைகள் உள்ளூர் வாசிகள் பலருக்கு தெரிவதில்லை. நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், சிலப்பதிகார கலைக்கூடம், நீச்சல் குளம் என ஒவ்வொன்றுக்கும் வரலாறுகள் உள்ளன. நவகிரக ஸ்தலங்களில் கேது, புதன் ஆகியவை பூம்புகார் அருகில் உள்ளன. குறிப்பாக 3 குளங்கள் அமையப்பெற்ற கோவில் என்ற சிறப்பை திருவெண்காடு புதன் கோவில் பெற்றுள்ளது. பட்டினத்தார் கோவில் இங்குள்ளது. காரைக்குடி நகரத்தார் சமூகத்தினரின் பூர்வீகம் பூம்புகார். கடல்கோள் காரணமாக மேடான பகுதியான காரைக்குடிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்(குறிப்பு - அதன் காரணமாகவே அவர்களின் வீடுகள் உயரமாக உள்ளன). இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை பூம்புகார் வந்து பட்டினத்தாருக்கு விழா நடத்துகிறார்கள். அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டில் இருந்தும் இதில் பங்குகொள்கிறார்கள். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள பல சிலைகள் பூம்புகார் சுற்றுவட்டாரத்தில் கிடைக்கப்பெற்றவை. குடகு மலையில் தோன்றிய காவிரி ஆறு பூம்புகாரில் தான் கடலில் முத்தமிடுகிறது. கண்ணகி காலத்தில் இருந்த சம்பாபதி அம்மன் கோவில் சிதிலமடைந்த நிலையில் வயல் நடுவே இன்றும் உள்ளது ... ஊர் மக்கள் பலருக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்திர விழா சுற்றூலாத்துறை சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டது நான் பள்ளியில் 5-ம் வகுப்பு (2005) படித்த போது. அதன் பின்னர் கைவிடப்பட்டது.கிளிஞ்சல் இல்லம், சிற்பி இல்லம் ஆகியவையும் பாராமரிப்பின்றி போயுள்ளன. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன பூம்புகார் பற்றி சொல்வதற்கு. அடுத்த முறை எங்கள் ஊருக்கு வரும் பொழுது சொல்லுங்கள். எம் மக்களின் வாழ்வியலை விளக்குவதற்கு நான் உதவுகிறேன். நன்றி....
      இப்படிக்கு,
      பி.ஆர்.ஸ்ரீராம், செய்தி வாசிப்பாளர், பாலிமர் தொலைக்காட்சி (9597866984)

      Delete