Saturday, January 13, 2018

புது மனிதனாய் அவதாரமெடுக்க உகந்த நாள் - போகி பண்டிகை


பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரங்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.  இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. 



போகி அன்னிக்கு நம்மோட பித்ருக்கள் நம் வீட்டுக்கு வருவதா சாஸ்திரம் சொல்லுது. அதனால, அவர்களுக்குப் பிடித்த உணவைப்   படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்கனும்.  இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட வழக்கம். ஆனா, இப்ப அதிகாலையில் எழுந்து குப்பைகளை கொளுத்துவதோடு முடிஞ்சு போச்சுது. வெறும் குப்பைகளை மட்டும் எரிக்குறதில்லை இந்த பண்டிகையின் நோக்கம்.   இன்றைய தினத்தில் நம் தீய எண்ணங்கள், குணங்கள் எரித்து,   தைப் பிறக்கும் நாள் புதிய எண்ணங்களுடன் ஒரு புதிய மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்பதே இப்பண்டிகையின் நோக்கம். 




இந்திரனுக்கு 'போகி' என்றொரு பேரு இருக்கு. இந்திரன் மழைக்குரிய கடவுளா நம் புராணங்கள் சொல்லுது. அதனால,  அவரை வழிப்பட்டால், மழை பொழிந்து பயிர்கள் செழிக்கும் என  மக்கள் நம்பினர். நீரின்றி அமையாது உலகுங்குறதால, உலக இயக்கத்துக்கு முக்கிய காரணியான வருணபகவானுக்கு முதல் நாள் நன்றி சொல்லி கொண்டாடுகின்றனர். 


 பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து வாங்கி வருவதுன்னு சகலரும்  பிசியா இருப்பாங்க. விவசாயிகள் விளைப்பொருட்களின் அறுவடையிலும், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்வோர், நகை செய்வோர்ன்னு சகலரும் தங்கள் தொழிலை கூடுதல் நேரமெடுத்து செய்வதால் அவர்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது



போகி பண்டிகை கொண்டாடும் வழக்கம், நம்ம ஊர், ஆந்திரா, தெலுங்கானா, வடநாடுகளிலும் உண்டு. இன்றைய தினத்தில் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூவை சொருகி வைப்பர். வைகறையில் 'நிலைப்பொங்கல்' வைப்பாங்க.  வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றை நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். இதை வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் செய்து படைப்பாங்க. ஒருசிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்தும் வழிபடுவாங்க.  போகி எரிக்கும்போதும், நிலைப்பொங்கல் வைக்கும்போதும் சிறுவர்கள் பறை மாதிரியான மேளத்தை அடிப்பாங்க. 

ஆனா, இன்னிக்கு பண்டிக்கைக்கான நோக்கம் மறைந்து வெறும் கொண்டாட்டமே மிச்சம் நிக்குது. போகி கொண்டாடுகிறேன்ன்னு சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துறது வழக்கமாகி போச்சு. இப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி, ஈகோ இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம்.   போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறாம பார்த்துப்போம்.  நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கலாம்.  போனது போகட்டும். இனி வரும் காலம் நல்லதாய், சந்தோசமாய் அமையட்டும். 

எல்லோருக்கும் போகி தின வாழ்த்துகள்.

நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. போகியைப் பற்றி அறியாதன பல அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  2. நிறைய தகவல்கள் இது வரை தெரியாதது பல...ராஜி..

    கீதா

    இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

    துளசி. கீதா

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    சிறந்த கருத்துக்களுடன் கூடிய அருமையான பதிவு தெரியாத பல தகவல்கன் அருமை.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம+1

    ReplyDelete
  5. //இப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி, ஈகோ இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம். // மிகச்சரி!!
    இனிய பொங்கல் வாழ்த்துகள் ராஜிக்கா

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete