Wednesday, March 26, 2014

காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) - மௌனச்சாட்சிகள்

போன வாரம் செஞ்சிக் கோட்டைக்கு வெளியே இருக்கிற இடங்களெல்லாம் பார்த்தோம்.  பார்க்காதவங்க ஒரு எட்டு இங்கிட்டு போய் பார்த்துட்டு வந்ததக்கப்புறம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்று முக்கியம் வாய்ந்த ராஜா கோட்டைக்குள் செல்லலாம். வாங்க!!

இதுதான் ராஜகிரி கோட்டைக்கு செல்லும் நுழைவாயில். இங்கே காலைலப் போறது நல்லது. ஏன்னா, பாறைகளா இருக்குறதுனால சூடு அதிகம் இருக்கும். அப்புறம் தண்ணீர் பாட்டில்கள் தேவையான அளவு எடுத்துக்கோங்க. ஏன்னா மலைமேலே ஏறும் போது உடம்பில் வியர்வை அதிகமாகி நீர் இழப்பு அதிகம் இருக்கும். அதனால தண்ணித் தாகம் நிறைய எடுக்கும். அதையும் பிளாஸ்டிக் கவர்லையோ இல்ல கேரி பேக்லயோ எடுத்து செல்லாதீங்க. குரங்குகள் அதிகம் இருப்பதால் கையில் இருப்பதை பறித்து கொண்டு சென்றுவிடும். முதுகில் மாட்டிக்கொள்ளும் டிராவல் பேக்ல எடுத்து செல்லுங்க. கையில் ஒரு குச்சியையும் வச்சுகோங்க. ஏன்னா அது குரங்குகளிடம் இருந்து ஒரு நம்மைப் பாதுகாத்துக்க உதவும். எல்லாம் எடுத்துக்கிட்டாச்சா!? போலாமா!?
 நாம இப்ப ஏறி செல்கிற பாதை நமக்கு முன்னே பல்வேறு அரசாங்கங்களையும், பல அரசர்களையும், பலப் போர்களையும் சந்தித்த இடங்களாகும். இந்தக் கோட்டையின் வரலாற்றைப் பார்த்தோம்னா கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 6ம் நூற்றாண்டு வரை சமண துறவிகளின் வாழ்விடமாகவே இருந்திருக்கு. அதற்கு ஆதாரமாக செஞ்சிக்குப் பக்கத்தில இருக்கிற சிருகடம்பூர் என்கிற ஊர்லயும், ராணி கோட்டையில் இருந்து எடுக்கப்பட்ட சமணர் படுக்கையிலிருந்தும் அவங்க காலம் தெரியவந்தது. 

அதன் பிறகு பல்லவர்கள் ஆண்டதாக தெரிகிறது. இங்கிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் உள்ள கல்வெட்டுகளில் இந்த இடத்தை விசித்திரசித்தன் என்னும் மகேந்திரவர்மன் என்ற பல்லவமன்னன் கி பி 580-639 வரை இந்த இடத்தை ஆட்சி செய்தற்கான சான்றுகள் இருக்கிறதாம் மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில்களில் இருந்து கிடைத்த கல்வெட்டுகள் மூலம் செஞ்சி பல்லவர்களின் அரசாட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது.

இந்த இடம் மேலிருந்து பார்க்கும் நுழைவு வாயிலின் உள்பக்க தோற்றம். இனி இதன் வரலாற்றைப் பார்க்கலாம். பல்லவ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பின் இது சோழர்கள் வசம் வந்தது. செஞ்சியின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஊரான ஆனான்ங்கூரில் உள்ள பாறை கல்வெட்டுகள் மூலம் இந்த இடத்தை முதலாம் ஆதித்தசோழன் என்னும் சோழமன்னன் கிபி 871-907 -ல் ஆண்டதாகவும், அதன்பின் இடண்டாம் ஆதித்தசோழனும் அதன் பின் அவர் சகோதரர் ராஜராஜ சோழனும் கிபி985-1013ல் சிங்கபுரநாடு என்னும்  இதன் அந்த நூற்றாண்டு பெயரில் வழங்கப்பட்டு சோழர்களின் ஆட்சியின் வசம் இருந்தது.  தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தததாகவும் சொல்லபடுகிறது. வாங்க! இன்னும் கொஞ்சம் மேலே ஏறி செல்லலாம். 
    
வெயில் வேற அதிகமா இருக்கு. நாம செல்லவேண்டிய தூரம் அதோ மலை மேலே தெரிகிற கோட்டைக்கு அதனால வேகமா போகலாம். முடியாதவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கூட வாங்க. சரி, அடுத்தது இந்த இடத்தை யார் ஆண்டாங்கன்னுப் பார்த்தால் சோழ மன்னர்களுக்கு பிறகு பாண்டிய மன்னர்கள் கி பி 1014-1190 ஆண்டுகளில் ஆட்சி செய்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆதாரமாக ஆங்கில ஆராய்ச்சியாளர் மேக்கன்ஸ் தன்னுடைய குறிப்புகளில் கர்நாடக ராஜாக்களின் சவிஸ்திர சரிதத்தில் குறிபிடபட்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்.

இந்த மாதிரி கோட்டைகளில் மன்னர்கள் கல்வெட்டுகளில் குறிப்பு எழுதுறாங்களோ இல்லையோ நம்மாளுங்க ஏகப்பட்ட குறிப்புகளை இங்கிருக்கும் சுவர்களில் எழுதிடுறாங்க. இங்கே வரும் பொதுமக்களுக்கு சொல்வது என்னன்னா இதெல்லாம் அழிந்து கொண்டு இருக்கும் புராதான சின்னங்கள். நம்மால பாதுகாக்க முடியலைன்னாலும் பரவாயில்ல.அதை அலங்கோலப்படுத்தாமலாவது இருக்கணும்.

சரி, இனி வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், இப்படி பல படை எடுப்புகளை கண்ட செஞ்சி கிபி 11ம் நூற்றாண்டில் அனந்தகோன்என்னும் கோனார் பரம்பரை சிற்றரசர் தான் முதலில் இங்கு ஒரு கோட்டையை கட்டினாராம். பிறகு அனந்தகோன் 1190-1240 வரையிலும் அதன்பிறகு கிருஷ்ணா கோன் கி பி 1240-1270 வரையிலும் அதன்பிறகு கோனேரி கோன் கி பி 1270-1290 வரையிலும் அதன்பிறகு கோவிந்த கோன் கி பி 1290-1310 வரையிலும் அதன்பிறகு வலிய கோன் அல்லது புலிய கோன் கி பி 1310-1320 வரையிலும் இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர் என்றும் அதன்பிறகு கோபிலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320-1330 ல் ஆண்டதாதாகவும் ஆக மொத்தம் இவரது பரம்பரையினர் செஞ்சியை 300 வருடம் ஆண்டதாக சொல்லபடுகிறது.

சரி, வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கிறதுக்கு முன்னாடி இங்கே ஒரு பீரங்கி இருக்கிறது பாருங்க. இது கோட்டையின் மையப்பகுதியில் பாதுக்காப்பு கருதி வைக்கப்பட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கிருந்து பார்க்கும் போது கீழ்பக்க நிலப்பரப்பு எல்லாம் இந்த இடத்துல இருந்து பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது. அதனால இங்கிருந்து எதிரிகளை துல்லியமாகத் தாக்குவதற்கு பிரஞ்சுக்காரர்களால் இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்ல்கிறாங்க.
  
பீரங்கியைப் பார்த்து விட்டு மேலே செல்லலாம் வாங்க. இனி,  கோட்டையோட வரலாற்றை விட்ட இடத்திலிருந்து பார்க்கலாம். அனந்தகோன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அந்தகிரி எனவும் அழைக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில் ராஜகிரி என அழைக்கப்பட்டதாகவும், அவர்மகன் கிருஷணகோன் கட்டிய கோட்டை கிருஷ்ணகிரி என அழைக்கபடுவதாகவும் சொல்றாங்க. இவர்களது 300 வருஷ ஆட்சிக்குப் பின்னர்,  14ம் நூற்றாண்டில் இந்த கோட்டை விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ்வந்தது.  இதை கோபண்ணராயர் என்பவர் ஆட்சி செய்தார் .விஜயநகரத்து மன்னன் தெற்கில் பெரும்படையுடன் வந்து போர் புரிந்தபோது விஜயநகர பேரரசின் தளபதியாக இருந்தவர் இந்த கோபண்ணராயர்.  இவர் சிறப்பாக போர் புரிந்து, போரில் வெற்றிப் பெற உதவியதால் அவரையே செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி செய்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
   
வாங்க! இந்தவழியாதான் மலை உச்சில இருக்கிற கோட்டைக்கு செல்லனும்.  இதன் வராலாற்று பின்னணியை மலை ஏறிக்கொண்டே பேசலாம். அப்பதான் களைப்பு தெரியாது.

 கிபி 1509-1529 ம் ஆண்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சி இங்கே நடந்துக்கொண்டு இருந்த சமயம்...,  அவர் கிரிஷ்ணப்ப நாயக்கரை செஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யுமாறு ஆணை பிறாப்பித்தாராம். இந்த நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் தான் கருங்கற்களால் ஆன நீண்ட வலிமை மிக்க கோட்டைகளையும், கற்சுவர்களையும் கீழ்பகுதியில் கருங்கற்களையும், மேல்பக்கம் செங்கல்களையும் கொண்ட வேலைப்பாடுடைய கோவில்களையும் கட்டினர்.  நாயக்கர்களின் வம்சம் இவர் காலத்தில் தான் கல்யாணமஹால் உடற்பயிற்சி கூடம் ,நெற்களஞ்சியம் அரண்மனைகள் எண்ணைக்கிணறு, நெய் கிணறு முதலியவை கட்டப்பட்டது.  இந்தக் கோட்டையை நூறாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தனராம்.
      
நாமப் பயணம் செய்த வழியை இங்கிருந்துத் திரும்பிப் பார்க்கும்போது அழகான கல் மண்டபமாக தெரிகிறது.  வெயிலில் களைத்து வரும்போது இது போன்ற மண்டபங்களில் ஓய்வு எடுத்துகொண்டு செல்ல, முன் கூட்டியே யோசனை செய்து கட்டி இருக்காங்க. அதனால, நம் களைப்பு போக, நாமும் கொஞ்சம் ஓய்வு எடுத்துகொண்டு இதன் வரலாற்றை திரும்பி பாப்போம். 

நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்கர்மதுரை நாயக்கர் ,செஞ்சி நாயக்க மன்னர்களுக்குள் ஒற்றுமை இல்லாதாதால், அவங்களுக்குள் உட்பூசல், கலவரம்லாம் நடந்தன. இந்தச் சூழ்நிலையை  பயன்படுத்திக் கொண்ட முகமதிய வம்சத்தின் பிஜப்பூர் சுல்தான்கள் 16 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செஞ்சியின் மீது படையெடுத்தனர்.  அதில் கோல்கொண்டா படைத்தளபதியான மிர்ஜில்லா என்பவர் கிஷ்ணப்ப நாயக்கரை தோற்கடித்து, செஞ்சியை பிஜபூர் ராஜ்யத்துடன் இணைத்துக்கொண்டார். இவர்களுடையக் காலத்தில் கோயில்களையும், சிற்பங்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அந்த சிதிலமடைந்துள்ள கோயில்களையும், சிற்பங்களையும் நாம மேலே செல்லும் போதுப் பார்க்கலாம்.
      
அதோ உயரத்தில் தெரியும் அந்தக் கோட்டைதான் நாம செல்லவேண்டிய இடம். இந்த பயணப் பாதை எத்தனை போர்கள்!? எத்தனை அழிவுகள்!? எத்தனை உயிர் கொலைகள்!? எவ்வளவு ஆடம்பர அணிவகுப்புகள்லாம் சந்தித்திருக்கும்!? ஆனால், இன்று எல்லாமே மறைந்து அவையாவையும் தன்னுள் அடக்கி, அடங்கி, ரொம்பவும் ஆடாதீங்கப்பா! அப்புறம் என்னை மாதிரி கேக்க நாதியில்லாம அழிஞ்சுப் போய்டுவீங்கன்னு சொல்லாம சொல்லி நம்முன் மௌனச்ச்சாட்சியாக நீண்ட நடைபாதையாக நமக்கு வழிக்காட்டி செல்கிறது. அதில்தான் நாம், நம் தவறுகளை உணராமல் இன்னைக்குப் பயணிக்கிறோம்...,

இனிக் கோட்டையின் வரலாற்றைப் பாப்போம். முகம்மதியரின் ஆட்சியின் கீழ் கி பி 1649 முதல் 1677 வரை ஆண்டனர். அதன் பின்னர் முகம்மதியரின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்திய வரலாற்றில் அழியா இடம் பிடித்த மராட்டிய மன்னன் வீர சிவாஜி 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகமதியர்களை வென்று செஞ்சியை கைப்பற்றினார் பின்னர் தன்னுடைய சகோதரர் சம்பாஜியை  கிபி 1690 ல் செஞ்சியில் ஆட்சி செய்யும்படி நியமித்தார் அதன்பிறகு சம்பாஜியினுடைய தம்பி ராஜாராம் என்பவரை ஆட்சி செய்யும்படி சாம்பாஜி மகராஜா கூறினார்.

அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆண்டு 1687 ஆகும்.  அந்த சமயத்தில் ஔரங்கசீப், சல்பீர்கான்ன்ற தளபதி மூலம் பெரும்படையை அனுப்பி செஞ்சியை முற்றுகை இட்டான். அப்பொழுதுகூட அவனால் மராட்டியர்களைத் தோற்கடிக்க முடியாததால் ஔரங்கசீப் படைகள் 7 ஆண்டுகளாகக் கோட்டையை முற்றுகையிட்டு, அங்கே உணவு பஞ்சம் ஏற்படுத்தி, அதன்பிறகு கோட்டையை பிடித்தனர். ஒட்டுமொத்தமாக மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலம் கிபி 1677 லிருந்து 1697  வரை இருந்தது.
இங்க ஒரு அழகான கோவில் இருக்குவாங்க அருகில் சென்று பார்க்கலாம் இது பாலரங்கநாதர் ஆலயம். நாமப் போறப் பாதையில மலை அடிவாரத்தில் பாதையின் வடக்கு பக்கத்தில்,  கிழக்கு நோக்கியபடி சிதைந்த நிலையில் காணப்படுவதுதான் இந்த பாலரங்கநாதர் ஆலயம் கீழ்பக்கம் கருங்கற்களாலும், மேல்பக்கம் செங்கற்களாலும் கட்டப்பட்டு ரொம்ப அழகா கலைநயத்துடன் இருக்கு. ஆனா இதில் பூஜையோ புனஷ்காரமோ கிடையாது. குரங்குகளின் வசிப்பிடமாக அழிவுற்ற நிலையில் இருக்கு இக்கோவில்.

இங்கத் தெரிகிற இந்த மண்டபம் இது பாலரங்கநாதர் சன்னதிக்கு நேரே இருக்கு.  அதன் முன்னே ஒரு தெப்பக்குளமும், படிக்கட்டுகளுடன் இருக்கு. முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த குளத்தில்தான் பழையக்காலத்தில் பாலரங்கநாத சுவாமியின் உற்சவ மூர்த்தி சிலை சிங்கபுரம் என்னும் ஊரில் இருந்து கொண்டுவந்து, இங்கத் தெரிகிற குளக்கரை மண்டபத்தில் வைத்துதான் அலங்காரம் செய்து, தெப்பத்தில் வைத்து விழா எடுத்து ரொம்ப கோலாகாலமா கொண்டாடுவார்க.ளாம் அதனால இந்த மண்டபத்திற்கு அரங்கநாதர் மண்டபம்ன்னு பெயர் வந்ததுன்னு சொல்றாங்க .. அதெல்லாம் இப்ப அழிஞ்ச நிலையில இருக்கு.
  
குளத்தையும், மண்டபத்தையும் பார்த்தாச்சு.  இனி, மேலே போகலாம் வாங்க! இப்ப இந்தக் கோட்டையின் வரலாற்றைத் தொடர்ந்து பார்க்கிறதுக்கு முன் இங்கே இருக்கும் ஒரு கோவிலைப் பத்தி தெரிந்துகொள்வோம்.

இதுதான் கமலகன்னியம்மன் கோவில். இந்த அம்மன் கோவிலை துர்காதேவி கோவில் ன்னும் இங்கே உள்ளவங்க சொல்றாங்க. இந்த அம்மனை இன்றும் இவ்வூரின் தேவதையாக வணங்கி வருகின்றனர்.  இந்தக் கோவிலுக்கு முன்னால ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு ஒரே பாறையில் ஒரு பலிபீடம் செதுக்கப்பட்டுள்ளது.  பழையக் காலத்தில் இங்கே திருவிழாக்கள் விசேஷமாக கொண்டப்படுமாம்.  அப்ப இந்த பலிபீடத்தில் தான் அம்மனுக்கு எருமைகடா பலிகொடுப்பாங்களாம். இந்த கோவிலுக்கு பின்னால் இருக்கிற பாறையில் பல வண்ணங்களில் 17 ம் நூற்றாண்டில் உள்ள நாயக்கர் கால ஓவியம்  வரையப்பட்டு இருக்கு.  இதில் திருமால், பூதேவி ஸ்ரீ தேவியோடு காட்சி கொடுக்கிறார்.

இனி, இதனை அடுத்து ஒரு  பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதனைப் பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவங்க சொல்லுங்க. நாங்க தெரிஞ்சுக்குறோம்!

சரி, வாங்க நாம மேலே செல்லலாம். இன்னும் நாம போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கு. மேலும், இங்க மலை மேலிருந்து 4 மணிக்குள்ளே திரும்பி மலையடிவாரத்திற்கு வந்துடனுமாம். அதனால சீக்கிரம் மேல கோட்டைக்கு போகலாம். வாங்க!

நாம பாலரங்கநாதர் ஆலயமும், கமலகன்னியம்மன் கோவிலையும் பார்த்ததால, நாமக் கோட்டையின் வரலாற்றை மராட்டிய மன்னர்களின் அரசாட்சி வரை பார்த்தோம்.  மாராட்டியர்களின் ஆட்சி வீழ்ச்சியுறத் தொடங்கியபோது மொஹலாய தளபதி ஜோல்பீர்கான் 1697-98 ல் மிகவும் போராடி இந்த கோட்டையை மீட்டார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தது ராஜபுத்திர பண்டேல்கணட் தளபதியான சொருப்சிங்.  அதன்பிறகு இந்தக் கோட்டை முகலாயர்கள் வசம் வந்தது அப்பொழுது முகலாய மன்னராக இருந்தவர் ஒவ்ரங்கசீப்.  இவர்1707 ல் இறந்தபிறகு அவரது இரண்டாவது மகன் ஷாஆலம் பதவி ஏற்றார். அவர் சததுல்லாகான் என்பவரை ஆற்காடு நவாப்  ஆக நியமித்து பண்டேல்கண்டில் படைத்தளபதியாக இருந்த சொருப்சிங்கிடம் செஞ்சியை ஆளும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இங்கிருந்து வரிவசூல் செய்து ஆட்சி நடத்த நிபந்தனை விதித்தார். இதன் மேற்பார்வையாளராக சததுல்லாகான் நியமிக்கபட்டார் சொருப்சிங்கும் சததுல்லாகானுக்கு திரை செலுத்தி ஆட்சி நடத்தினார். இந்த சொருப்சிங்கின் மகன்தான் செஞ்சியின் வீரத்திருமகன் தேசிங்குராஜா இந்தக்கதையை விரிவாக சொல்கிறேன். கேட்டுகோங்க...
   

 பிரமிக்கவைக்கும் விதமாக இந்த கல் கோட்டைகள் இருக்கு கவனமா நடந்து மேல் நோக்கி செல்வோம். இனி இந்த கோட்டையின் வீர வரலாறான ராஜா தேசிங்கு ஆட்சிப் புரிந்தப் காலத்தைப் பார்க்கலாம்.

மராட்டிய மன்னர் ராஜாராம் 7 ஆண்டு முற்றுகைக்கு பின் மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேறிய பின் கோட்டை முகலாயர் வசமானது. அதன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பண்டேல்கண்ட் தளபதியாக இருந்து செஞ்சியின் வெற்றிக்காக போராடிய சொருப்சிங் என்னும் ராஜபுத்திர வீரர் அவரால்தான் வெற்றி கிடைத்தது என்பதால் அவரையே இந்த கோட்டைக்கு ராஜாவாக நியமிக்கபட்டார். அவருடைய மனைவி ரமாபாய். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு தேஜ் (தேசிங்கு ராஜா ) என பெயர் வைத்தனர். தேஜ் என்றால் ஒளி பொருந்தியவன் என்று அர்த்தம். இந்த சமயத்தில்தான் நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது போல ஔரங்கசீப் மறைவுக்குப்பின் அவரது இரண்டாம் மகன் ஷாஆலம் டெல்லியின் பாதுஷாவாக முடிசூட்டி கொண்டார். அப்பொழுது அவருக்கு குதிரை ஒன்று பரிசாக கிடைத்தது.  அதன் பெயர் நீலவேணி. அந்த குதிரை மிகவும் வலிமையாக உயரமாக இருந்தது அதை யாராலும் அடக்க முடியவில்லை.    

 டெல்லி பாதுஷா ஷாஆலம் குதிரையை அடக்க நாடு முழுவதும் உள்ள மன்னர்களுக்கு ஓலை அனுப்பினார். அதில் செஞ்சியில் கப்பம் கட்டும் சொருப்சிங்கும் ஒருவர். அவரும் டெல்லி சென்று குதிரையை அடக்க முயன்று தோல்வியைத் தழுவினார். அதனால் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன தந்தை டெல்லி சிறையில் இருப்பது 3 ஆண்டுகள் கழித்துதான் ராஜா தேசிங்குவிற்கு தெரியவந்தது.

அப்பொழுது தேசிங்குவிற்கு 15 வயதுதான் ஆயிற்று. அப்பொழுது தாயிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தன் உயிர் தோழன் மகமதுகானையும் அழைத்துக்கொண்டு குதிரையில் டெல்லி புறபட்டார். டெல்லி சென்ற தேசிங்குவை பார்த்த ஷாஆலம் நீ சிறுவனாக இருப்பதால் உன்னால் குதிரையை அடக்கி வெற்றி கொள்ள முடியாது. உன் நாடு நோக்கி செல் என எச்சரித்தார்.  எதற்கும் அஞ்சாத தேசிங்கு குதிரையை அடக்குவதில் தீவிரமாக இருந்ததால் போட்டிக்கு ஏற்பாடு செய்தார் டில்லி பாதுஷா.

நம் தமிழகத்து இளம்சிங்கம் குதிரையை ஆய்வு செய்து தன் நிழலை கண்டுதான் குதிரை மிரள்கிறது என தெரிந்துக் கொண்டு, தேசிங்கு தன் நிழல் கீழே விழாதவாறு எதிர் திசையில் குதிரையை ஒட்டினார். மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, வாயில் நுரைத் தள்ளிக் கீழே விழுந்து விட்டது அந்தக் குதிரை.

நாம் பேசிக்கொண்டே கோட்டையின் முக்கால் பாகத்திற்கு வந்துவிட்டோம்.  இனி கோட்டையின் உச்சிப் பகுதிக்கு தொடர்ந்து செல்லலாம்.  கூடவே தேசிங்குவின் வரலாற்றையும் தொடரலாம்....,

குதிரையை அடக்கிய தேசிங்குவின் வீரத்தைப் பாராட்டி அவனுக்கு ராஜா ஜெயசிங்கு என பட்டமும் கொடுத்து, அவனது தந்தை சொருப்சிங்கையும் சிறையிலிருந்து விடுவித்தார் டெல்லி பாதுஷா. பின்னர் அந்தக் குதிரையையும் அவருக்கேப் பரிசாகக் கொடுத்து,  இனி செஞ்சி அரசு டெல்லிக்கு கப்பம் கட்டத் தேவை இல்லை எனவும் உத்தரவு பிரபித்தார்.  பாதுஷாவின் படை தளபதியாக இருந்த பீம்சிங் என்பவர் தேசிங்குவின் வீரத்தை பாராட்டி அவரது மகள் ராணிபாயை திருமணம் செய்து கொடுத்தார். தன் தந்தைமனைவிநண்பனுடன் தான் வெற்றிப் பெற்ற குதிரையோடு நாடு திரும்பினார் ராஜா தேசிங்கு.  

இது கோட்டைக்கு செல்லும் வழிகளில் ஒன்று.... தேசிங்குவின் கதையை பார்க்கலாம்...,

இந்த வீரக் கதை இங்கே நாட்டுப்புற பாடலாக படிக்கபடுகிறது. அவங்க மூலமாதான் இந்த கதைகள் தெரிந்துக் கொண்டேன்.அந்த நாட்டுப்புற பாடல்கலை வேற ஒரு பதிவில் பார்க்கலாம். சரி, நாம மீண்டும் தேசிங்குவின் வரலாற்றுக்கு வருவோம். இவங்க நாடு திரும்பின சில நாட்களிலே 1711 ம் ஆண்டு ஷாஆலம் இறந்துவிட, அவரது 4 மகன்களில் ஒருவரான ஜகந்தர் மற்ற மூவரையும் வென்று ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றினார். ஜகந்தரை தொடர்ந்து டெல்லியில் ஆட்சி மாற்றங்கள் நடந்துகிட்டே இருந்தது. இந்த நிலமையில்தான் இங்கே சொருப்சிங் மரணமடைந்தார். இந்த சூழ்நிலையில் 1717 ம் ஆண்டு ராஜாதேசிங்கு தனக்குதானே முடி சூட்டி கொண்டார். டெல்லியின் பிரதிநிதியாக தென் பகுதியை ஆண்டுவந்த ஆற்காடு நவாப் சதத்துல்லாகானுக்கு தேசிங்கு அரசனது பிடிக்கவில்லை அதுனால ஷாஆலம் தேசிங்குவின் வீரத்தை மெச்சி வழங்கிய கப்பம் கட்ட வேண்டியதில்லை என்கிற சலுகையையும் செல்லாது எனக்கூறி மொத்தமாக அந்தக் காலத்தினுடைய பணம் 70 லட்சத்தைக் கட்டச் சொன்னான்.  அடிமைத்தனத்தைப் பிடிக்காத தேசிங்கு கப்பம் கட்டுவதை மறுத்ததன் விளைவு. போர்!!!

அந்தச் சமயத்தில தேசிங்குவின் நண்பன் மகமதுகானுக்கு வழுதாவூரில் திருமணம் நடந்துக் கொண்டு இருந்தது. விஷயம் கேள்விப்பட்டவுடன் கல்யாணத்தை நிறுத்திவிட்டு போரில் இறங்கினான் மகமதுகான். வெறும் 350 குதிரைப்படைகளும், 500 காலாட்படைகளுடன் போருக்கு கிளம்பினான் மகமதுகான். ஆனால் நவாபிடம் 10,000 காலாட்படை, 8000 குதிரைப்படை மற்றும் பீரங்கிப்படைகள் இருந்தது. மகமதுகான் இவங்களை எதிர்த்து ஆவேசமாகப் போரிட்டுப் பெரிய அழிவை எற்படுதினான். அந்தச் சமயத்தில் நவாபினுடைய ஆட்கள் மறைந்து இருந்து மகமதுகானை தாக்கி,  வீரமரணம் அடைய வைத்தனர் என்று கேள்விப்பட்ட தேசிங்கு ராஜா தன் நண்பனின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போருக்குப் கிளம்பினான்.

தேசிங்குவின் வருகையைத் தடைச் செய்ய மலையனூர்மேலச்சேரி, தேவனூர் இந்த இடங்களில் உள்ள ஏரிகளை எல்லாம் உடைத்து விட்டு ஊரையே வெள்ளக்காடாக ஆக்கினார்கள் ஆற்காடு நவாப் படையினர்.  தேசிங்குவின் நீலவேணி குதிரை கலங்காது தண்ணீரில் நீந்தி எதிரியை நோக்கி சென்றது. அப்பொழுது தண்ணீருக்கு அடியில் நீலவேணியின் கால்களை வெட்டி சாயத்தனர் நாவாபினுடைய படைகள். தனியாளாக நின்ற தேசிங்கு, தன் வாள்வீச்சிமேல் நம்பிக்கைக் கொண்டு கடலி என்னும் இடத்தில எதிரிப்படையை தனியாளாய் எதிரிகொண்டு நாலாயிரம் குதிரை படையை வெட்டி சாயத்தான்.  தேசிங்குவின் வீரத்திற்கு முன்னால் ஈடுக் கொடுக்க முடியாத நவாப் படைகள் பின் வாங்கினர்.

நவாப் படையில் உள்ள சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து பின்பக்கமாக துப்பாக்கியால் சுடப்பட்டான்.   முதுகில் காயம் பட்டு இறக்க விரும்பாத தேசிங்கு, துப்பாக்கி குண்டில் அடிப்பட்டு விழும்போது  தன் வாளையே ஆகாயத்தில் எரிந்து மார்பில் வாங்கி வீர மரணம் அடைந்தான் ராஜாதேசிங்கு.   
   
அதோ தூரத்தில் தெரிவது இழுவை பாலம். எதிரிகள் உள் நுழையாதவாறு இதை இழுத்து கொள்ளவும் முடியும்.  நாம இப்ப இந்த இழுவை பாலத்தை தாண்டிதான் மலை உச்சிக்கு போகணும். ..சரி இனி நாம தேசிங்குவின் கதையின் இறுதி பகுதியை பார்க்கலாம் 

தேசிங்கு இறந்தபோது அவனுக்கு பதினெட்டே வயசு. வெறும் பத்து மாதங்கள் தான் ஆட்சி பொறுப்பில் இருந்தான்.  தேசிங்கு இறந்த பின், அவன் உடலை செஞ்சிக்கு கொண்டு வந்து எரியூட்டினானாம் நவாப். அதே நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறி இறந்துப்போனாள் ராஜபுத்திர இளம் ராணி ராணிபாய். செஞ்சி மக்கள் நவாபின் மேல் கடுங்கோபம் கொண்டனர். செஞ்சி மக்களை சமாதானப்படுத்த ஆற்காடு பக்கத்தில் உள்ள ஊருக்கு ராணிபேட்டை என்று  பெயர் வைத்தார். தேசிங்கு வீரமரணம் அடைந்த நீலம்பூண்டி என்னும் கடலியில் ராஜாதேசிங்குவும் அவன் மனைவி ராணி பாயும் குதிரையில் இருப்பது போல நினைவு சின்னம் எழுப்பினார் ஆற்காடு நவாப்.  அந்த இடம் இப்பொழுது வெறும் சமாதி போல் காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். வாய்ப்புக் கிடைப்பின் பிறிதொரு சமயம் சென்று பார்க்கலாம்.

இப்படி தேசிங்குவின் கதை முடிந்தது.  இன்னும் இந்தக்கதைகள் நாட்டுப்புறப்பாடலாக செவிவழி கதையாக இன்னும் பாடப்பட்டு வருகின்றன. நாம மலையில் இருந்து இறங்கி வரும்போது அடுத்த பதிவில் தேசிங்கு ராஜன் எரியூட்ட பட்டு, கூடவே  ராணிபாய்  உடன்கட்டை ஏறி தீக்குளித்த இடம் இதெல்லாம் பார்க்கலாம்.. ஒரு வழியாக தேசிங்குவினுடைய சகாப்தம் செஞ்சியில் முடிந்தது.  அதன் பிறகு ஆங்கிலேயர் ஆதிக்கம் தொடங்கியது ..அந்த வரலாற்று நிகழ்வுகளை அடுத்தவாரம் பதிவில் பார்க்கலாம் .. ..

21 comments:

  1. நான் ரொம்ப நாளா போக நினைக்கும் ஒரு இடம்.. இந்த பதிவு நிச்சயம் எனக்கு உதவியா இருக்கும்.. மராட்டிய சிங்கம் இங்க வரைக்கும் வந்து ஆட்சி செஞ்சிய ஆட்சி செஞ்சி இருக்காரு என்பது புதிய தகவல்..
    என்ன ஒன்னு ரெண்டு பதிவா போட்டு இருக்கலாம் :-)

    எழுத்து நடை பிரமாதம்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஒரு பதிவு(http://rajiyinkanavugal.blogspot.in/2014/03/blog-post_12.html) போட்டாச்சு! இனியும் ஒரு பதிவு போடப்போகுது! அதான் ஒரேப் பதிவில் தேசிங்கு ராஜாவின் கதையைச் சொல்லியாச்சு.

      Delete
  2. இனி செஞ்சிக் கோட்டை செல்வதென்றால் உங்களின் யோசனைகள் கண்டிப்பாக ஞாபகம் வரும்... ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே சென்ற விதம், கூடவே நாங்களும் பயணித்த உணர்வு... ஆண்டுகள் உட்பட தகவல் சேகரிப்பிற்கு பாராட்டுக்கள் சகோதரி...

    அது என்ன பழக்கம் என்று தெரியவில்லை... புரியவில்லை... சுவரைக் கண்டால் போதும் - கிறுக்க ஆரம்பித்து விடுவது...! ம்...

    /// ஆனால், இன்று எல்லாமே மறைந்து ......... அழிஞ்சுப் போய்டுவீங்கன்னு சொல்லாம சொல்லி... /// அப்படிச் சொல்லுங்க சகோ...!

    ReplyDelete
  3. மிகவும் அற்புதம் இதுவரை இந்த செஞ்சி கோட்டையை பத்தி இவ்வுளவு விரிவான பதிவை பார்த்ததில்லை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. போட்டோஸ் இன்னும் நல்லா எடுத்துருக்கலாம் ...

    ReplyDelete
  5. உங்களுடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்! அருமையான பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி! தொடருங்கள்!

    ReplyDelete
  6. ரொம்ப நீளம்மா... இருக்கு! ரெண்டு பகுதியா தந்திருக்கலாம்னு தோணுது! வழக்கம் போல விரிவான தகவல்கள்! விஜய சாரதி பாணில அசத்திட்டீங்க!

    ReplyDelete
  7. நல்ல கட்டுரை.... விவரங்கள் எல்லாம் தொகுத்து கொடுத்திருப்பது நன்று. ஒரே ஒரு விஷயம் - பண்டேல்கணட் என்று எழுதியிருப்பது தவறு என்பது என் எண்ணம். வட இந்தியாவின் ஒரு பகுதி இது. அதை [B]புந்தேல்கணட் என்று தான் சொல்வார்கள். இவர்களும் தனி மாநிலம் கேட்டு போராட்டங்கள் நடத்தினார்கள். மத்தியப் பிரதேசம் - உத்திரப் பிரதேசம் என இரண்டு மாநிலங்களிலும் இருக்கிறது [B]புந்தேல்கண்ட்.

    ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் எழுதியிருப்பதால் இப்படி நீங்கள் எழுதி இருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அண்ணா! திருத்திடுறேன்

      Delete
  8. செஞ்சிக்கு சென்றிருக்கிறேன். கல்யாண் மஹால் மட்டுமே மேல் ஏறி பார்த்திருக்கிறேன். ராஜா கோட்டை, ராணி கோட்டை வரை சென்றது இல்லை. உங்களது விவரங்கள் உபயோகமானவை.

    ReplyDelete
  9. தகவல் களஞ்சியம்!மிக நன்று

    ReplyDelete
  10. எப்பா.... எவ்வளவு பெரிய புதிவு...!!

    ஆனால் படிக்க படிக்க அலுக்கவில்லை. படங்களும் அருமை.
    பிற்காலத்தில் இந்த பதிவே நிறைய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  11. மொரட்டு மலையால்லா இருக்கு, தெரியாத விஷயங்கள் தெரிய வைத்தமைக்கு நன்றி...

    படங்கள் யாவும் சரித்திரம் !

    ReplyDelete
  12. //இங்கே வரும் பொதுமக்களுக்கு சொல்வது என்னன்னா இதெல்லாம் அழிந்து கொண்டு இருக்கும் புராதான சின்னங்கள். நம்மால பாதுகாக்க முடியலைன்னாலும் பரவாயில்ல.அதை அலங்கோலப்படுத்தாமலாவது இருக்கணும்.// நல்லாச் சொன்னீங்க...
    கண்டிப்பா போகணும்னு என் கணவர்கிட்ட பாட்ட ஆரம்பிச்சுட்டேன்.. :)
    பதிவு பெரிசா இருக்கறதுனால திரும்ப ஒரு தடவ படிக்கணும்..
    நன்றி ராஜி...

    ReplyDelete
  13. சிறு வயதில் பார்த்தது. அதனை அப்படியே என் கண் முன் கொண்டுவந்தீர்கள். நன்றி.

    ReplyDelete
  14. ஊர் சுற்றுவதில் விருப்பமுள்ள என்னைப் போன்றவர்களுக்கு மௌன சாட்சிகள் எப்பொழுதும் விருப்பமான பதிவு.... புத்த்கமாய் போடும் எண்ணம் இருக்கிறதா அக்கா?.. போட்டால் எனக்கு ஒரு புத்தகம் இப்பொழுதே பதிவு செய்து விடுகிறேன்....

    ReplyDelete
  15. பல முறை நண்பர்களோடு போய் பார்த்த இடம் என்ற போதும், அதன் பின்னால் இருந்த இவ்வளவு தகவல்களையும் அள்ளி அள்ளி அளித்து அதற்கிணையான புகைப்படங்களையும் சேர்த்து ஒரு மெகா பதிவு என்றே சொல்லலாம். இப் பதிவு நிச்சயம் புக்மார்க் செய்து வைக்க வேண்டியதொரு உன்னத பதிவு என்பதில் ஐயமில்லை.

    :)

    ReplyDelete
  16. nice placa it

    lic agents tour (SBA TEAM KANCHIPURAM ) on 01/05/2016 that place super place we enjoy it sunai water good taste by licmani 9994828991

    ReplyDelete
  17. உபயோகமான தகவல்கள்! அருமை!

    ReplyDelete