Wednesday, November 08, 2017

சிட்டுக்குருவி லேகியம் தெரியும்.. கனடாவின் ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் பத்தி தெரியுமா?! - மௌனச்சாட்சிகள்

நாட்டுக்கு நாடு, அங்கு இருக்கும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆளுக்காள் உணவு பழக்கம் மாறுபடுது. உணவு பழக்கத்துக்கு இன்னொரு காரணம் அங்கு விளையும்  காய்கறிகளும், தானியமும்கூட.   ஒருவருக்கு பிடித்தமான உணவு, மற்றொருவருக்கு வாந்தி எடுக்கும் உணவாக அமைகிறது .உதாரணமாக இங்கே  மாலையில் நாம் சாப்பிடும் எண்ணெயில் போட்டு எடுக்கும் பஜ்ஜி, போண்டா, வடை  மாதிரி தாய்லாந்து நாட்டில் வறுத்த வெட்டுக்கிளிகள், விட்டில் பூச்சிகள்  பட்டு புழுக்கள், நீர் வண்டுகள்,  மூங்கில் புழுக்கள், சிவப்பு எறும்புகள், போன்றவற்றை நொறுக்கு தீனிகளா சாப்புடுறாங்க.அவர்களிடம் நம்முடைய பஜ்ஜி, சொஜ்ஜியை கொண்டு போனா ஓட்டமாய் ஓடிடுவாங்க. நம்மை அந்த பொறித்த எட்டுக்கால் பூச்சியை சாப்பிட சொன்னால் நாலுகால் பாய்ச்சலில் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்திருவோம்.  உலகில் இருக்கும் மனிதர்களின் சில அருவருக்கத்தக்க உணவு வகைகளை இங்கு பார்க்க போகிறோம். மதியத்திற்கு 2 குண்டு புல்பும் .தொட்டுக்க சீரியல் பல்பும் சாப்பிடுவேன்ன்னு சொல்லுற சினிமா காமெடி மாதிரியான வித்தியாசமான உணவுகளை இன்றைய மௌன சாட்சிகளில் நாம் பார்க்கப்போகிறோம் ....

ஜப்பானிய உணவுவகையான ஃபுகு (Fugu).. இதை சிலர் வினோதமாக உங்களை கொல்லும் உணவுகளை உண்ண வாருங்கள்ன்னு அர்த்தம் சொல்றாங்க. அதில் ஒருவகைதான் இந்த விஷமுள்ள  ஃபுகுமீன். வேட்டையாடும் மற்ற மீன்களில் இருந்து பாதுகாக்கவே இந்த மீனுக்கு இறைவன் டெட்ரோடோகொக்ஸின் என்னும் விஷத்தை தோல், எலும்புக்கூடு, கருப்பைகள், குடல் மற்றும்   கல்லீரலில் அதிக அளவு வைத்துள்ளான். மிகக்கொடிய விஷம் கொண்டது இந்த  ஃபுகு மீன் தற்போதைய புள்ளிவிவரப்படி ஜப்பானில் மட்டும் 3800  ஃபுகு மீன் ரெஸ்ட்ராரெண்ட்கள் இருக்கிறதாம். ஆனா, ஐரோப்பிய நாடுகளில் இந்த மீன் தடை செய்யப்பட்டுள்ளது. .
இந்த மீனில் 30 பேரை ஒரே நேரத்தில் கொல்லக்கூடிய அளவு விஷம் இருக்கு. இந்த மீனை நாம் சாப்பிடனும்ன்னா, முதலில் அதை செய்யும் குக்கின் அனுபவம் எவ்வுளவுன்னு தெரிஞ்சுக்கனும். அப்பதான் ஒரு  சின்ன தப்பு நடந்தாலும் இந்தமீனை .சாப்பிடுறவங்களுக்கு ஊஊஊஊஊ.. சங்குதான். இந்த மீனும், எல்லா மீன்களைப்போல விதம் விதமா சமைக்கப்படுது.  சயனைடு விஷத்தைவிட கொடிய விஷத்தை தன்னுள் கொண்டிருந்தாலும் இதன் சுவையானட்து அபாரம்ன்னு இதை சாப்பிட்டவங்க சொல்றாங்க.  2000ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்த மீனை சாப்பிட்டு23 பேர் இறந்திருக்காங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது. இந்த உணவை தயார் செய்யும் குக் குறைந்தது 3 வருடம் இதை பத்தி படிக்கனுமாம். அதன்பிறகு வைக்கும் டெஸ்ட்ல 3 க்கு 2 ல் பாஸ் பண்ணனுமாம். இதேபோல் ஒரு பிரபல குக் சமைத்தும்,  இந்த உணவில் விஷத்தின் அளவு அதிகமா இருந்ததால  அவருடைய உரிமம் பறிக்கப்பட்டதாம்.  இந்த மீனை சாப்பிடனும்ன்னு ஆசைப்படுறவங்க இப்பவே விசா எடுக்க கிளம்புங்கப்பா. ஏன்னா, அக்டோபர்ல ஆரம்பிச்சு மார்ச் வரைதான் இந்த மீன் கிடைக்கும். வறுவல், சூப், பிரியாணி, கட்லட்ன்னு விதம் விதமா வெளுத்து கட்டலாம்..

சிலந்தி,  பூச்சிகளோட வகைகளை  நாம விலங்குகள்  சரணாலயத்தில் தான் பார்த்திருப்போம். பார்க்காதவங்க, வண்டலூருக்கு ஒரு விசிட் அடிங்க. இதுலாம் பார்க்க ஆசைப்படுறவங்க தனியா போங்கப்பா. யரையாவது துணைக்கு கூட்டி போனா, சைஸ்ல பெரிய ஒட்டகம், யானை மாதிரியான பெரிய உருவம்கூட மைண்ட்ல நிக்காது.   ஒருவகையான சிலந்தியை  பிரை பண்ணி நொறுக்கு தீனியாக சாப்பிடுறாங்க ஒரு ஊர்ல.... இந்த பிரை வேணும்ன்னா  கம்போடியாவுக்குதான் போகனும். பூண்டு எண்ணையில் பொரித்து எடுப்பாங்களாம். ஆசியாவுக்கு சுற்றுலா வரும் சில சுற்றுலாப்பயணிகள் கம்போடியா போன்ற நாடுகளுக்கு சென்று வெட்டுக்கிளி, பூச்சி இவற்றை சாப்பிடுவதை படம் எடுத்து என்னமோ பெரிய அனகொண்டாவை சாப்பிட்ட மாதிரி மூஞ்சி புக்ல போடுவாங்க. ஆனா, உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடமாட்டாங்களாம். அது ஒரு சுற்றுலா யுக்தி என்று சொல்லப்பட்டாலும்  அந்த சிலந்தி பிரை எப்படி  செய்றாங்கன்னு பார்க்கலாம் .

ஒரு நீளமான மர குச்சியில் பூச்சியை குத்தி, அதை நன்றாக கொதிக்கும் நீர் இல்லன்னா, பூண்டு எண்ணையில் வைத்து உயிருடன் பொரித்து,  குளிர்ந்த பீர், வைன் அல்லது அரிசியினால் செய்யப்பட்ட பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவாங்க. இது 1 டாலர் முதல் உருவத்திற்கேற்ப 6 டாலர் வரை விற்பனை செய்யப்படுது. அந்த வகை உணவுக்கு செலவு அதிகம் இருப்பதால் .பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே இது பரிமாறப்படுகிறது. இந்தவகை உணவுகள் கம்போடியா மக்களின் உணவுப்பழக்கத்தில் இல்லையாம். 1970 ம் ஆண்டு கம்ம்யூனிஸ்ட்களின் பிடியில் இருந்த கம்போடியா  கடுமையான பஞ்சத்தில் இருந்தது. அப்ப, அந்நாட்டு மக்கள் உணவுக்கு வழி இன்றி தவித்தனர். உயிர்வாழ்வதற்காக கையில் கிடைச்சதுலாம் சாப்பிடத் தொடங்கினர். அப்படி வந்தவைதான் இந்த சிலந்தி, பட்டுப்புழு, தேள் மற்றும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் பழக்கம்.  

இதுவரை விஷமுள்ள உணவு பழக்கங்களை பார்த்தோம் இனி அடுத்தவகை  உணவுதான் கொஞ்சம் கிளுகிளுப்பானது. சிட்டுக்குருவி லேகியம் ‘அந்த’ விசயத்துக்கு உகந்ததுன்னு நம்ம ஊர் பெருசுங்க கதைக்கட்டி விட்டதுபோல,  கனடாவில் உள்ள பெரிசுங்க சொல்லி இருக்கும்போல....அத அந்த ஊரு பயபுள்ளைங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கனு நினைக்கிறேன். இந்த உணவுக்கு பேரு  ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் (Prairie Oysters) இவை காளையின் விதைப்பையைக் கொண்டு சமைத்து பரிமாறப்படும் ஒரு வகையான டிஷ். இது கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருளும் கூட.
சில குளிரான பிரதேசங்களில் உணவுகள் கிடைப்பதே அரிது. அந்த இடங்களில் உள்ளவங்களாம், அங்க கிடைக்கும் எதையும் வீணாக்குவது இல்லை. அந்தவகையில் வந்ததுதான் இந்த ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ். கனடாவில் உள்ள பெரிய பண்ணைகளில் காளைகளின் விதை நீக்கம் மற்றும் இறைச்சிக்காக வெட்டப்பட்டு கழிவுகளில் தூக்கி எறியப்படும் விதைகளை எடுத்து பலவகையான டிஷ்களை செய்றாங்க.   இவைகள் வறுத்து இல்லன்னா அவித்து  நல்லமிளகு, உப்பு  சேர்த்து விதம் விதமா பரிமாறப்படுது.  சில இடங்களில் காக்டைல் சாஸுடன் கலந்தும் பரிமாறப்படுகின்றன. இந்த உணவு பெஸ்டிவல் போன மாசம்தான் முடிவடைஞ்சதாம் .   இந்த ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் உணவை  சாப்பிடணும்னா  அடுத்த வருடம் நடக்கும் புட்  பெஸ்டிவலுக்காக காத்து இருக்கணும் .


அடுத்து   நாம பார்க்கபோறது ,மிகவும் கொடுமையான ,அதேசமயம் அருவருக்கத்தக்க ஒரு உணவு பால்ட் (Balut) - பிலிப்பைன்ஸ் நாட்டில் வழக்கத்தில் உள்ள ஒரு உணவு .நாம பொதுவா முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடுவோம். ஆனா, இவங்க சாப்பிடுற பக்குவ முறையை பார்த்தோம்னா.குஞ்சு பொரிக்கும் நிலையில் இருக்கும் வாத்து முட்டைகளை மிளகாய், பூண்டு, வினிகர் ,போன்றவற்றை சேர்த்து பரிமாறப்படும் ஒரு உணவே இந்த பால்ட் . பொதுவாக இந்தவகை உணவிற்கு வாத்து முட்டைகள்தான்  பயன்படுத்தப்படுகின்றன. வாத்து முட்டையின் கருகாலம் 16 லிருந்து 25 நாட்கள் .. இந்த சமயத்தில் அந்தவாத்து குஞ்சிகள் முட்டையினுள் வளர்ந்தும் வளராமலும் இருக்கும் பருவத்தில் அதை அவித்து சூப் போன்றோ இல்லை  வேறு வகையான ரெசிபி போன்றோ செய்யப்படுகிறது .


இந்த பால்ட் உணவு தெருவோர கடைகளில் இருந்து பெரிய மால்வரை கிடைக்கும். 1885ம் ஆண்டு சீனாவின் ஆதிக்கம் இங்க இருந்தபோது அவர்கள் மூலம் இந்த உணவு பிலிப்பைன் நாட்டில் வழக்கத்தில் வந்தது என்று சொல்லப்படுது. முதலில் வாத்து முட்டைகளை சேகரித்து சூரிய ஒளியினிலோ இல்லை ,மண்ணுக்குள்ளேயோ புதைத்து வைக்கிறார்கள். 10 நாட்கள் கழித்து அதை வெளியில் எடுத்து அறை வெப்பநிலையில் இருக்குமாறு பதப்படுத்துகிறார்கள். பல்வேறு வெப்பநிலைகளில் கருவூட்டப்பட்ட அந்த முட்டைகளின் மேற்பரப்பில் இருக்கும் விரிசலை பார்த்து ,இவர்கள் அதை பக்குவமாக எடுக்கிறார்கள். இது சில இடங்களில் 14 லிருந்து 18 வரை உள்ள கருமுட்டையை  விரும்புகிறர்கள். கம்போடியாவில் 18 முதல் 20 நாட்கள் உள்ள கருமுட்டையை விரும்புகிறார்கள் .வியட்நாமில் 19 முதல் 21 நாட்கள் உள்ள கருமுட்டையை விரும்பி உண்கிறார்கள். இதில் 21 நாட்கள் ஆகும் போது சிறிய குருத்து எலும்புகள் வளர ஆரம்பித்து இருக்கும் .அதை மென்று சாப்பிடுவதையும் சிலர் விரும்புகிறனர். இந்தவகையான உணவை உண்பதற்கு சீசன் ஏதும் இல்லை.  நீங்க எப்போ பிலிப்பைன்ஸ் போனாலும் இதுகிடைக்கும் .

அடுத்ததா நாம பார்க்க போறது ஹாக்கிஸ் (Haggis) ஸ்காட்லாந்தின் ஒரு தேசிய உணவாக இந்த ஹக்கிஸ் என்னும் டிஷ்ஷை சொல்லலாம். ஏனெனில் இந்த டிஷ்ஷானது செம்மறி ஆட்டின் இறைப்பையில் வெங்காயம், ஓட்ஸ், மசாலாக்கள் மற்றும் ஸ்டாக் ஆகியவற்றை ஸ்டஃப் செய்து சாப்பிடுவாங்க. .ஸ்காட்லாந்து போனீங்கன்னா இதுக்கு விளம்பரம் வேறே.  திருநெல்வேலியில் ஹிந்திகாரகள் நிறையபேர் வசித்த இடத்தில ஒருவர் அல்வா செய்ய ஆரம்பித்தார். அவரை அண்ணா ஜி என்று அழைத்து இன்று அண்ணாச்சி கடை அல்வா என்று சொல்லப்படுவதாக ஒரு குறிப்பு எங்கேயோ படித்து இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையிலே நெல்லையப்பர் கோவிலின் எதிரே உள்ள இருட்டுக்கடை ,அல்வா செய்பவரை பார்த்தால் நார்த் இந்திய குடும்பத்தில் உள்ளவரை போல்தான் தோற்றமளிக்கிறார். நம்ம ஊர் அல்வாவின்  வரலாற்றை இன்னொரு   பதிவில் பார்க்கலாம் .
சரி ஆட்டுக்குடலை பார்க்க வந்து அண்ணாச்சி, அல்வான்னு பதிவு ட்ராக் மாறுது. இந்த உணவு 18 ம் நூற்றண்டின் பிற்பகுதியிலிருந்தே மிகவும் பிரபலமாக ஸ்காட்லாந்தில் இருந்ததுன்னாலும்  இங்கிலாந்தின் எழுத்தாளர் கர்சேஸ் மார்க்கம் (. 1568-1637) த இங்கிலிஷ் ஹவுஸ் வாய்ப் என்னும்  (1615) என்ற குறிப்புகளின் மூலம் பிரபலமானது. இந்த வகையான உணவு மார்கஸ் அபிக்சஸ், அரிஸ்டோபேன்ஸ் மற்றும் ஹோமர் போன்ற உணவுகளையே ஒத்துள்ளதுன்னாலும், இந்த ஹாக்கிஸ் (Haggis) ன்ற பெயர் எப்பொழுது வழக்கத்தில் வந்ததுன்னு தெரிலை. ஒருவேளை 15  ம் நூறாண்டில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது . 
பதிவு இப்பவே பெருசாகிட்டுது. எனக்கு எதையுமே சொல்ல தெரியாதுன்னு நீங்க தப்பா நினைப்பீங்க. அதனால இன்னும் பலவிதமான, வித்தியாசமான உணவு பழக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் ..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை,

நன்றியுடன்,
ராஜி.

9 comments:

  1. உணவுக் களஞ்சியம்......பல்வேறு வகைப்பட்ட சுவையான உணவுப் பகிர்வு.......உவாக்......//// நன்றி,தங்கச்சி.....

    ReplyDelete
  2. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள் போல! அப்படியாவது ரிஸ்க் எடுத்து அந்த மீனைச் சாப்பிடவேண்டுமா! தமிழ்நாட்டிலேயே ஏதோ ஒரு ஊர்ப்பக்கம் - உசிலம்பட்டியோ? - ஈசல்களை வறுத்து சர்க்கரை தூவிச் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    நம்ம நாடார்க்கடை அண்ணாச்சியை நாம் அண்ணாஜி என்று அழைத்து அவரை வட இந்தியர் ஆக்கி விடுவோமா?!!!!

    சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
  3. சில உணவுகளை எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ
    தம +1

    ReplyDelete
  4. ஆத்தாடி சின்னப்புள்ளைங்களை பயமுறுத்துவது போல இருக்கிறதே உங்க பதிவு.

    கடந்த சில தினங்களாக வலைப்பதிவுக்கு சரியாக வர இயலவில்லை வெளியூர் பயணம் இனி தொடரும்.

    ReplyDelete
  5. பார்க்கவே என்னன்னவோ செய்கிறதே? அவர்கள் சாப்பிடுவதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. விஷம் டேஸ்ட்டா இருந்தா சாப்பிட தாயாரா இருக்காங்க பல விஷயங்களை தேடி பகிர்ந்து இருக்கீங்க பாராட்டுக்கள் ராஜி

    ReplyDelete
  7. சைவ உணவையே சாப்பிடும் எனக்கு இவைஎல்லாம் தகவ;ல்கள் என்மகன் சீனாவுக்குச் சென்றபோது ஊர்வன நடப்பன நீந்துவன பறப்பன என்று எதையும்விட்டு வைக்காமல் சமைக்கிறார்கள் சாப்பிடுகிறார்கள் என்று வியந்துசொன்னான்

    ReplyDelete
  8. வணக்கம்

    இவை எல்லாம் நமக்கு சரி வராது இப்படியான உணவுகள்... இருந்தும் உண்டும் நாடுகள் பற்றியும் அதன் மகின்மை பற்றியும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -த.ரூபன்-

    ReplyDelete
  9. சும்மா தலைக்கு மேல ஏதாச்சும் ஜீவன் பறந்தாலே அதை அப்படியே கையால பிடிச்சு தின்னுடுவாங்க...டிஸ்கவரி சேனல்லயோ இல்ல அனிமல் ப்லானட் எதோ ஒன்னுல கூட ஒருத்தர் போவாரே அவரும் அப்படித்தான் எல்லாத்தையும் திம்பாரு அப்படியே!...

    இருட்டுக்கடை அல்வாதான் முதல்ல அதான் அந்த வட இந்தியர் தான் பிதாமகர்...
    இப்பவும் நான் வீட்டுல பஞ்சாம் சம்பா கோதுமை வாங்கித்தான் அல்வா செய்யறது...நல்லா வரும்

    நிறைய தகவல்கள்...

    கீதா

    ReplyDelete