Monday, October 07, 2013

நவராத்திரி விரதம் கொண்டாடுவது ஏன்!? - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! பக்கத்து வீட்டக்கா, நவராத்திரிக்காக கொலு வச்சிருக்காங்க, என்னை கூப்பிட்டாங்க. நாமளும் நம்ம வீட்டுல கொலு வைக்கலாமா?!

சரி புள்ள! ஆனா, நவராத்திரி ஏன் கொண்டாடுறங்கன்னு தெரியுமா!?

தெரியாதே மாமா!!

ஒரு விசயத்தை செய்யும் முன் ஏன் எதுக்குன்னு யோசனை பண்ணி அதுக்கான காரணத்தை புரிஞ்சுக்கிட்டு செய்யனும் புள்ள. சரத்ருது  (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில்தான் நவராத்திரி கொண்டாடனும்ன்னு பஞ்சாங்கம் சொல்லுது. இந்த மாசங்கள மட்டும் குறிப்பிட்டி சொல்ல என்ன காரணம்ன்னா..., இந்த மாசம்லாம் எமனின் கோரைப்பற்கள்ன்னு நம் புராணங்கள்ல சொல்றாங்க. 
நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம்ன்னு சொல்றாங்க. . இதுல  சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாசத்துல புதனுக்குரிய கன்னிராசியில இருப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திசாலித்தனம், நல்ல குணத்துக்குரியவரா சொல்றாங்க,  அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாசத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குறாங்க. புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி ன்னும் அக்காலத்தில் சொல்லி இருக்காங்க. . சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு. கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அதனை பெறாவே கலைமகள், அலைமகள், மலைமகள்ன்னு மூணு பேரையும் இந்த நாட்களில் வணங்குறோம்.

. இந்த மாசங்கள்ல உயிரினங்களுக்கு கடுமையான உயிரை பலிவாங்க கூடிய  நோய்கள்ல்லாம் வரும்.  இதிலிருந்து மீளனும்ன்னா சண்டிகை பூஜை செய்யனும்,  அதனால, பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் வந்துச்சாம். வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுது. நம்மோட வாழ்க்கையில நான்கு வகையான வசதிகளை வேணும்ன்னு நினைக்குறவங்க, நவராத்திரி பூஜையை  அவசியம் செய்யனுமாம். அந்த நாலு வசதிகள் என்னன்னா, கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள்,  சுகமான வாழ்வு வேண்டுபவர்ககள்ல்லாம் நவராத்திரி விரதம் அனுஷ்டிச்சா கிடைக்குமாம்.

 இவங்க அவங்க வீட்டுல. அவங்கவங்க வசதிக்கேற்ப சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்கனும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்யனும்ன்னு ஐதீகம்.. நவராத்திரியை மூணு, மூணு நாளா பிரிச்சு கொண்டாடுறாங்க.

முதல் மூணு நாள் லட்சுமி தேவிக்கும், அடுத்த மூணு நாட்கள் சக்திக்கும், கடைசி மூணு நாட்கள் சரஸ்வதிக்கும் என விழா எடுத்து கொண்டாடுறோம். அது ஏன்ன்னா, வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். அந்த பணத்தை தர வேண்டி லட்சுமியை முதலில் கும்பிடுறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்கனுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்தனும் ன்னு தெரியனுமே! அதுக்குத்தான் கல்வி. இது மாதிரியான காரணத்துலதான் நவராத்திரி விரதத்தை கொண்டாடுறாங்க.
                                    
விரதம்லாம் சரி. ஆனா, ஏன் மாமா கொலு வைக்குறாங்க!?

 தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம்ஆட்சி செய்கிறாள்.  புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் ன்னு எல்லாவித உயிர்களுமா விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளை பார்க்கனுன்றாதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளனும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் ன்னு குழந்தைகளுக்கு வேசம் போட்டு கொலு வச்சிருக்கும் வீட்டுக்கு போவாங்க. அந்த கடவுளே குழந்தைகள் ரூபத்துல அந்த வீட்டுக்குள் வர்றதா நினைச்சுப்பாங்க. இதான் கொலு வைக்குறதுக்கான காரணம்.
நவராத்திரி விரதம் பத்தி புரிஞ்சுக்கிட்டேன் மாமா!  நேத்து டிவில எதோ ஒரு சினிமா ஃபங்கஷன் போட்டாங்க. 

ம்ம் நானும் பார்த்தேன். டிவி பக்கம் அதிகமா போகாத நீயே, பொறுமையா உக்காந்து பார்த்துட்டு இருந்தியே என்னது!?

ம்ம்ம் நான் ஒண்ணும் நிகழ்ச்சியை ரசிச்சு பார்க்கல, மனசு கொந்தளிச்சு போய் பார்த்துட்டு இருந்தேன். கோடி, கோடியாய் சம்பாதிக்கும் நடிகைகள் அத்தனை பேரும் அங்கங்க கிழிஞ்ச ட்ரெஸ் போட்டுக்கிட்டு, அதுலயும் கமல் மகள் ஸ்ருதி போட்டுட்டு வந்து விருது வாங்குன ட்ரெஸ் இருக்கே. ஓங்கொ ஒரு அப்பு அப்பலாம்ன்னு தோணுச்சு, அதுமட்டுமில்லாம எல்லோரும் தலையை பப்பரப்பான்னு விரிச்சு விட்டுக்கிட்டு வந்துச்சுங்க. 24 மணி நேரமும் அந்த தலைமுடியை ஒதுக்கிவிட்டுக்கிட்டே இருக்காங்களே! அதைவிட ஒரு அஞ்சு நிமிசம் செலவு பண்ணி ஒரு க்ளிப் மாட்டிக்கிட்டு வந்தா நல்லா இருக்குமே!

ம்ம் யோசிக்க வேண்டிய விசயம்தான் புள்ள! ஒரு ஜோக் சொல்றேன் கேளு
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


ஹா! ஹா! ஜோக் நல்லாதான் இருக்கு நான் கேக்குற விடுகதைக்கு விடை சொல்லுங்க பார்க்கலாம்...,

வாயில்லை, பல் இல்லை, ஆனா கடிக்கும்! அது என்ன?
கை இல்லை, விரல் இல்லை, ஆனா அடிக்கும்! அது என்ன?
கால் இல்லை, சிறகில்ல, ஆனா ஓடும்! அது என்ன?
அது வந்து.., எனக்கு வயக்காட்டுக்கு போகனும். டைமாச்சு.
இந்த டபாய்க்குற வேலைலாம் வேணம். முதல்ல பதிலை சொல்லுங்க. எனக்கும் பதில் தெரியும். ஆனா, உன் அண்ணன், தம்பிலாம் செம புத்திசாலின்னு சொல்லி பெருமையடிப்பியே!! அவங்கள்ல யாராவது சொல்லட்டும் நான் அப்புறமா விடை சொல்றேன்.
என் சகோதரர்கள்கூட போட்டி போடுறீங்களா!? யார் மூக்கு உடையுதுன்னு பார்க்கதானே போறேன்!!

12 comments:

  1. நவராத்திரி பற்றிய தகவல் அருமை

    Typed with Panini Keypad

    ReplyDelete
  2. நகைச்சுவையுடன் அவியல் நல்லா இருக்கு சகோ...

    ReplyDelete
  3. நல்ல அருமையான பதிவு.
    ஏனோ இயல்பாக இல்லாமல் போலி நாகரீகம்
    'தலை விரித்து ' ஆடுகிறது. எனக்கும் எரிச்சலாகத் தான்
    வரும். பல்லைக் கடித்துப் புலம்புவதைத் தவிர
    வேறென்ன செய்ய முடியும் ?
    புதிர் விடை :
    1. செருப்பு
    2. அலை
    3. தண்ணீர்
    சரியா புள்ள ?


    ReplyDelete
    Replies
    1. முதல் விடை சரி, இரண்டாவது விடை அலை இல்லாட்டியும் கேள்வியோடு பொருந்தி போகுது. மூணாவது தப்புங்க.

      Delete
  4. ஆறு என்றும் சொல்லலாமோ ?

    ReplyDelete
  5. நவராத்திரி தகவல்கள் அருமை! டி.வி நிகழ்ச்சிகள் பார்ப்பதை குறைத்து விட்டேன்! எதேச்சையாக நேற்று சிமா விருது நிகழ்ச்சி ஒரு நிமிடம் பார்த்து நொந்து போனேன்! விடுகதை விடைகள் 1 செருப்பு, 2. மணி 3. கடிகாரம்

    ReplyDelete

  6. ///ஏனுங்க மாமா! பக்கத்து வீட்டக்கா, நவராத்திரிக்காக கொலு வச்சிருக்காங்க, என்னை கூப்பிட்டாங்க. நாமளும் நம்ம வீட்டுல கொலு வைக்கலாமா?!///

    வைக்காலமுடி என் செல்லம் நான் கொலுக்கு படிக்கட்டு அமைச்சு தரேன் அதுக்கு அப்புறம் உன் பதிவுலக சகோதர்களை எல்லாம் பேசாம வாய் மூடி உட்காரச் சொல்லு

    ReplyDelete
  7. What happened to பால் போண்டா?

    ReplyDelete
  8. நவராத்திரியுடன் அவியல் சுவைத்தது.

    ReplyDelete
  9. navarathi vibaram arumai

    ReplyDelete
  10. ஸூப்பர் அவியல்
    அறியாதன அறிந்தோம்

    கடிப்பது செருப்பு
    அடிப்பது காற்று
    ஓடுவது ஆறு
    என நினைக்கிறேன்

    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete