Saturday, July 28, 2018

பல்வலியை குணப்படுத்தும் சங்கரநாராயணன் கோவில் - அறிவோம் ஆலயம்

ஒரு பொண்ணுக்கிட்ட போய் பொறந்த வீடு பெருசா?! இல்லை புகுந்த வீடு பெருசான்னு  கேட்டா, 100க்கு 90% பெண்கள் பொறந்தவீடுதான் உசத்தின்னு சொல்லும். அப்படி சொல்லிட்டாலும் மனசுக்குள் ஒரு குழப்பம் வரும்.   யாரை உயர்த்தி சொல்லுறது?! யாரை விட்டுத்தர்றதுன்னு. இதுமாதிரியான ஒரு இக்கட்டான நிலை பார்வதிதேவிக்கு வந்தது. அம்பாள் அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிச்சாங்கன்னு இன்னிக்கு பதிவில் பார்ப்போம். 
நெல்லை மாவட்டத்தின் சங்கரன் கோவிலில் கோமதி ஆலயத்தின் இப்போதிருக்கும் அம்பாள் சன்னிதி முன், நடுமண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கு. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள். இருவருக்கும்  சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என வாக்குவாதம் வந்தது. இதன் முடிவை அறிந்துக்கொள்ள பார்வதிதேவியிடம் சென்று   முறையிட்டனர்.  சிவனுக்கு புலிதோலும்திருவோடும்தான் சொந்தம்.  மயானமே அவன் இருப்பிடம்.அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தான் பதுமன்.  பெரும் செல்வந்தனாய் இருந்தாலும்   குபேரனிடம் கடன் வாங்கி இன்றுவரை வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு கடங்காரன் என்ற பெயரோடு இருப்பவர். அதுமட்டுமல்லாம முனிவரின் காலால் உதை வாங்கியவர்தானே விஷ்ணுஇப்படிப்பட்ட பெருமாள் நம் ஈசனுக்கு இணையாவாரா?” என சங்கன் வாதிட்டான்.  


குழப்பம் தீராத பார்வதிதேவி சிவனிடம் முறையிட்டாள். சுவாமி! தாங்கள் எனக்கொரு வரம் தரவேண்டுமென வேன்டி நின்றாள். பார்வதிதேவியின் வரத்தினை கேட்ட மாத்திரத்தில் சிவன் ஆடிப்போனார். தேவி, யோசித்துதான் வரம் கேட்கிறாயா?! என மீண்டும் கேட்டார். ஆமாம் சுவாமி, நீங்கள் இருவரும் சமமென உலக்குக்கு உணர்த்த உங்கள் உடலின் இடப்பாகமான எனது இடத்தை என் அண்ணனுக்கு தர முடிவு செய்துள்ளேன் என சொன்னாள். அம்பிகையின் வேண்டுதல் நிறைவேற ஈசன் ஒரு யோசனை சொன்னார். ஈசனின் யோசனைப்படி,  பொதிகை மலையில் உள்ள புன்னைவனத்தில் பார்வதிதேவி  ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்தாள். பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின்  தவத்தை ஏற்று ஹரியும் ரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள்.பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம்.?  நாங்கள்  இருவரும்  சமமானவர்கள்தான்உடல் இல்லையெனில் ஆத்மாவுக்கு மதிப்பில்லைஆத்மா இல்லையெனில் உடலுக்கு மதிப்பில்லைஇரண்டும் சேர்ந்து இருக்கும்வரைதான் நல்லது.   அதுபோல உடலும் ஆத்மாவும் போன்றதே நாங்கள்.
எங்கள் இருவரின் துணை உள்ளோரே வளம் பெறுவர்அதனால் உன் வீணான சந்தேகத்தை இன்றோடு  ஒழி என்றார் ஈசன். “ஹரனாகிய உன் கணவனும்,  உன் அண்ணனான இந்த ஹரியும் சம உயர்வு கொண்டவர்களே! என்பதை உணர்ந்தாயா என் தங்கையே.” என்றுக்கூறி  புன்னகைத்தார் விஷ்ணு. பார்வதிதேவியும்  ஹரியும் சிவனும் ஒன்று என்பதை தானும், உலக மக்களும் அறியவேண்டியே தவம்செய்து சங்கரநாராயணராக  இருவரையும் காட்சிகொடுக்கும்படி செய்தேன் என வணங்கி நின்றார். அதனால், கையில் விபூதி பையுடன், தவம் செய்யும் கோலத்திலிருக்கும்   அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும். ஆடிமாதம் பௌர்ணமியன்று அம்மனின் தவக்கோலத்தை வணங்கினால் மிகச்சிறப்பு.  

தபசு என்றால் தவம் என பொருள். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற  நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா நெல்லை சங்கரன்கோவிலில் 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில்  எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.  மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன்  இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.
சங்கரன்கோவில்வாழ் அம்மனுக்கு கோமதி அம்மன் எனப்பெயர்.  சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக  மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு  பெயர் உண்டு. ஆ என்றாலும் பசு தான். பசுக்களாகிய உயிர்களை ஆள்பவள் என்ற பொருளில் இவ்வாறு சொல்வர். திங்கள்கிழமைகளில்  இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி  முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த  சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கிருக்கும் வினாயகருக்கு ஆக்ஞா வினாயகர்ன்னு பேரு.

சங்கரநாராயணர் சன்னிதி சிவன், அம்பாள் சன்னிதிக்கு நடுவில் அமைந்துள்ளது.   சிவனுக்குரிய வலப்பாகத்தில்  தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை  இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில்  மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள  திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில்  விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர்.  எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.  இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில்  உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.
இந்த  ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜக்கோபுரம் 125 அடியில் ஓங்கி நின்று மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச், செப்டம்பர் மாதங்களின் 21, 22,23தேதிகளில்  சங்கரலிங்கம்மீது சூரிய ஒளி விழுகின்றது.  சங்கரநாராயணர்  அபிஷேகங்கள் கிடையாது என்பதால்,  ஸ்படிக லிங்கமாய் காட்சியளிக்கும் சந்திரமௌலீஸ்வரருக்கே அபிஷேக ஆராதனைலாம் நடத்தப்படுது. 
மூலவர் சன்னிதி பிரகாரத்தில், புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும்.  பல்வலி இருப்பவர்கள் யோக நரசிம்மரை வணங்கினால் நோய் தீரும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார். சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. 
மாத சிவராத்திரி மற்றும் மாத  ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்? அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
ஆடி மாத பௌர்ணமியன்று ஆடிப்பூர திருவிழா நடக்கும். இந்த திருவிழா நேத்து வெகு விமர்சையாக சங்கரநாராயணன் கோவிலில் நேற்று நடந்தது.  இந்த விழாக்காட்சிகளை காண திருநெல்வேலியே திரண்டுவந்தது.  கோமதியம்மன்முன் உள்ள ஸ்ரீசக்கரமருகே மாவிளக்கேற்றி வைத்து சக்கரத்தின் மேலமர்ந்து தவம் செய்தால் பிணிகள் அனைத்தும் நீங்கிடும் என்பது நம்பிக்கை. 

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. ஹரியும் சிவனும் ஒன்று அறியாதார்வாயில் மண்ணு என்பார்கள் கர்நாடகாவில் ஆகும்பே வழியாக சிருங்கேரிசெல்லும்போது ஒரு சங்கர நாராயணர் கோவில்வரும் சின்ன கோவில்தான் என்றாலும் பிரசித்தி பெற்றது

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! எனக்கு தெரியாதுப்பா

      Delete
  3. படங்கள் அழகு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே சுட்டதுண்ணா

      Delete
  4. அருமை.....ஆடித் தபசு வரலாறு அறிந்ததில் மகிழ்ச்சி.அழகான நிழற் பிரதிமைகள்.. நன்றி தங்கச்சி,பதிவுக்கு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete