Saturday, June 30, 2018

ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் - அறிவோம் அர்த்தங்கள்


 அச்சு முறிந்த தேரை  பாடல் பாடி மீண்டும் ஓட வைத்த ஊர், பண்+உருட்டி= பண்ருட்டி.  பண்ன்னா பாடல், பாடல் பாடி தேரை உருட்டினர் என பொருள்படும். உருட்டிங்குறது ஒருவித ராகம்ன்னும் சொல்றாங்க. உருட்டி ராகத்தால் பாடப்பட்ட பாடலால் தேர் நகர்ந்ததால் இந்த ஊருக்கு இப்பேர் உண்டானதுன்னும்  உருட்டி ராகத்தில் பண் இசைக்கும் பாணர்ன்ற மரபினர் வாழ்ந்ததாலும் இவ்வூருக்கு பண்ருட்டின்னு பேர் வந்ததாகவும் சொல்வாங்க,. மண்ணை உருட்டி பொருட்கள் செய்யும் மரபினர் இந்த பகுதியில் வாழ்ந்ததால் மண்+உருட்டி என்பது மண்ணுருட்டி என்றாகி, பின்னர் பண்ருட்டி ஆனதாம். பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கு பேர் போனது. பண்டாரெட்டி என்பவரது எஸ்டேட் இருந்த இந்த பகுதி பின்னாளில் பண்ருட்டி ஆனதாகவும் சொல்றாங்க. 
விருத்தம்ன்ற வார்த்தைக்கு ’பழைய’ன்னு அர்த்தம்.  அசலம்ன்னா மலைன்னு அர்த்தம். இரு வடமொழி சொற்கள் சேர்ந்ததே விருத்தாசலம்ன்னு ஆனது. இந்த ஊருக்கு திருமுதுகுன்றம், பழமலைன்னு வேற பேர் இருக்கு.  திருமுதுகுன்றம் என்பது தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சம்ஸ்கிருதப் பேர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது. இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) 



எட்டி மரங்கள் நிறைந்த பகுதின்றதால விஷ விருட்ச வனம்ன்னு அழைக்கப்பட்டு இப்ப விஷாரமென அழைக்கப்படுது. ஊர் பெருசாகிட்டதால தனித்து தெரிய வேண்டி மேல்விஷாரம், கீழ்விஷாரமென ஊர் பிரிந்தது.

பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்த ஊருக்கு இரு+ஓடை=ஈரோடைன்னு அழைக்கப்பட்டு இப்ப ஈரோடுன்னு அழைக்கப்படுது. அதுமில்லாம, இங்குள்ள கடவுளுக்கு, கபாலீஸ்வரர்ன்னு பேரு. அதனாலும், ஈர ஓடைன்னு அழைக்கப்பட்டு நாளடைவில் ஈரோடுன்னு மாறியதாம். 
ஒருமுறை சுந்தரர்,  திருச்சுழின்ற தலத்தில் உள்ள திருமேனிநாதரை தரிசித்தபின், அங்கிருந்து காளையார்கோவிலுக்கு சென்றார். அந்த ஊரின் எல்லைக்கு வந்தவுடன் அவ்வூர் மண்ணுக்கடியில் முழுக்க முழுக்க சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார் சுந்தரர். எல்லைப் பகுதியில் நின்றபடியே, இறைவா! உன்னைக் காண உன் இருப்பிடம் வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி வருந்தி, தேவாரப்பாடல் பாடினார்.  தன் தோழனான சுந்தரர்மீது இரக்கம் கொண்ட சிவபெருமான் தனது காளையை அங்கு அனுப்பி வைத்தார். அது சுந்தரர் நின்றிருந்த இடம்வரை வந்து மீண்டும் கோவிலை நோக்கித் திரும்பிச் சென்றது. அப்போது, காளையின் கால்தடம் பதிந்த இடங்களில், லிங்கம் இல்லை. எனவே அந்த இடம் வழியாக நடந்து வந்து தன்னை தரிசிக்கலாம், என அசரீரி ஒலித்தது.  இதையடுத்து சுந்தரர், காளை நடந்து சென்ற இடம் வழியாக சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் காளையார்கோவில் என பேர் பெற்றது.
அருப்புக்கோட்டையின் பழைய பேரு செங்காட்டு இருக்கை இடத்துவழி.  விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்குமொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி விவசாயம்  செய்து பிழைப்பு நடத்தி வந்ததால் இந்த இடத்துக்கு  'அரவகோட்டை' என அழைக்கப்பட்டு, காலமாற்றத்தில் அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை சுத்தி இருக்கும் ஊர்கள்  மல்லிக்கைக்கு பேர்போனது. இங்கு அரும்புகள் பறிக்கும் தொழிலுக்கு மற்ற ஊர்காரர்கள் செல்லும்போது  அரும்புகோட்டை என அழைக்கப்பட்டு அருப்புக்கோட்டை என  ஆனதாகவும் சொல்லப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் கால் ஆட்டிக்கிட்டு உக்காந்தால் கஞ்சி வரும்ன்னு ஒரு சொலவடை உண்டு. அதைக்கேள்விப்பட்டு, இந்த ஊருக்கு வந்த சோம்பேறி ஒருத்தன் திண்ணையில் உக்காந்துக்கிட்டு கால் ஆட்டிக்கிட்டு நாள் போக்கி இருக்கான். ஆனா, கஞ்சி கிடைக்கல. அந்த ஊர்க்காரவுங்களை கேட்டதுக்கு,  தம்பி! இந்த ஊரில் நெசவு தொழில் செய்பவர்கள்  காலினால் ஒரு கட்டைய மிதிச்சாதான் தறி வேலை செய்ய தொடங்கும். தறி வேலை செஞ்சா துணி உற்பத்தியாகி, அதன்மூலம் வருமானம் வந்து குடிக்க கஞ்சி கிடைக்கும்ன்னு விளக்கம் சொல்லி கஞ்சி வரம் கிடைக்கும் ஊர் என்பதால் கஞ்சிவரம் என அழைக்கப்பட்டு இப்ப காஞ்சிபுரம் என்றானது.  காஞ்சி என்னும் மரங்கள் சூழ்ந்த இடமாக இந்த இடம் இருந்ததால் இதற்கு காஞ்சிபுரம்ன்ற பேர் உண்டானதாகவும் சொல்லப்படுது. அகநானூற்றில் காஞ்சீயூர! என்ற சொல் குறிக்கப்பட்டிருக்கும். அதேமாதிரி, காஞ்சியூரன் ன்ற சொல் குறுந்தொகையில் இருக்கு. 

இன்னமும் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

Friday, June 29, 2018

விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பேரூர் பட்டீஸ்வரர் -அறிவோம் ஆலயம்


கற்காலம், கணினிக்காலம், கலிகாலமென எந்த கலத்திலும் மனிதனுக்கு எல்லாவற்றையும்விட உடுக்க உடை, இருக்க இடம், உண்ண உணவு என இந்த மூன்றும் அவசியமானது.  உடை இல்லாமலும், இடம் இல்லாமலும்கூட வாழ்ந்து விடலாம். ஆனா, உண்ண உணவு இல்லாமல் உயிர்வாழவே முடியாது. உணவு மனிதனுக்கு மட்டுமல்ல ஈ, எறும்பு முதல் யானை வரை அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியம். அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவு பெரும்பாலும் விவசாயத்தின்மூலமே கிடைக்குது. அனைத்து உயிர்களுக்கும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயி  கடவுளுக்கு ஒப்பானவர். 
அப்படிப்பட்ட விவசாயியை நாம் போற்றி பாதுகாக்குறோமான்னு பார்த்தால் இல்லன்னுதான் சொல்லனும். இப்படிலாம் நாம செய்வோம்ன்னு உணர்ந்த கடவுள்கள் தங்கள் அவதாரங்களில் இதை உணர்த்தவே செய்கின்றனர்.  அக்காலத்தில் சிவபெருமான் விவசாயியாகவும், அன்னை பார்வதிதேவி விவசாயப் பெண்ணாகவும் வந்து சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து, நாற்று நட்டு விவசாயம் புரிந்த நிகழ்வு நடந்துள்ளது. அது என்ன கதைன்னு பார்ப்போம். வாங்க!

ஒருமுறை மகாவிஷ்ணுவிடம் பிரம்மனின் படைப்புத்தொழில் ரகசியத்தை காமதேனு கேட்டது. அதற்கு விஷ்ணு, தட்சிண கயிலாயமாக விளங்கும் பேரூர் ஆலய ஈசனை வழிபட்டு வர பணித்தார். காமதேனுவும் தனது கன்று பட்டியுடன் பேரூர் வந்து அங்கே காஞ்சி நதி என்னும் நொய்யல் நதிக்கரையில் இருந்த புற்று சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. ஒருநாள் விளையாட்டாய் காமதேனுவின் கன்று பட்டி, புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தை கலைத்துவிட்டது. கன்றின் குளம்படி ஈசனின் திருமுடியில் அழுத்தமாகப் பதிந்து விட்டது. பதறிப்போன காமதேனு வருந்தியது. காமதேனுவின் வருத்தத்தைப் போக்க ஈசன் அங்கு தோன்றி, ‘பார்வதியின் வளைத்தழும்பை எம் மார்பினில் ஏற்றதுபோல, உன் கன்று பட்டியின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்றார்.  மேலும், ‘பேரூர்  எனப்பெயர்கொண்ட இத்தலம், முக்தித் தலம் என்பதால், நீ வேண்டும் படைப்பு ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதனைக் கருவூர் (கரூர்) திருத்தலத்தில் அருள்கிறேன். இங்கு பேரூரில் எமது நடன தரிசனத்தை கண்டிடுக' என்றருளி மறைந்தார்.

பேரூர் தலத்தில் சுந்தரருக்கும் ஈசன் தமது ஆனந்த நடனத்தை காட்டியருளி உள்ளார். கோமுனி எனும் பசுவாக பிரம்மனும், பட்டி முனி என்னும் இடையனாக மகாவிஷ்ணுவும் பேரூரில் ஈசனை வழிபட்டு அவரது ஆனந்த திருநடனத்தை கண்டு தரிசித்து பேறுபெற்றுள்ளனர். அதற்கேற்றாற்போல் பேரூர் வெள்ளியம்பலத்தில் நடராஜரின் இரு புறமும் பிரம்மனும், விஷ்ணுவும் இருப்பது சிறப்பு. தில்லை சிதம்பரத்தில் தாம் ஆடும் ஆனந்த திருத்தாண்டவத்தை, மேற்கிலுள்ள பேரூரில் ஈசன் காட்டியருளுவதால் இத்தலத்தை ‘மேலைச் சிதம்பரம்' என அழைக்கின்றார்கள்.

ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாஷ்யத்தில் இக்கோவில் பற்றி கூறப்பட்டிருக்கு. வெள்ளியங்கிரி மலையை ஈசனின் சிரசாகவும், பேரூர் திருத்தலத்தை திருப்பாதமாகவும் குறிப்பிடுகிறார்கள். இங்கு ஆலயத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு சன்னிதிகள் இருக்கு.  பரசுராமர், பஞ்சபாண்டவர்களும் இத்தலம் வந்து ஈசனைப் பணிந்து அருள்பெற்றதாக தலவரலாறு சொல்லுது. 

ஒருமுறை சமக்குறவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனிடம் திருப்பணிக்காக பொருள் வேண்டி, பேரூர் திருத்தலம் வந்தார். அப்போது சுந்தரரிடம் விளையாட விரும்பிய ஈசன், அம்பிகையுடன் விவசாயி வேடம் பூண்டு அருகிலுள்ள வயலுக்குச் சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்தார். பேரூர் ஆலயத்திற்கு சென்ற சுந்தரர், அங்கு சுவாமியையும், அம்பாளையும் காணாது திகைத்தார். அவரது திகைப்பைக் கண்ட நந்தி, ஈசன் வயலில் நாற்று நடும் இடத்தைக் காட்டிக்கொடுத்தார். சுந்தரர் வயலுக்குச் சென்று அங்கு ஈசனும், அம்பாளும் விவசாயி கோலத்தில் சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து நாற்று நட்டுக் கொண்டிருப்பதையும், கூடவே இந்திரன், பிரம்மன், விஷ்ணுவும் வயலில் நீர் பாய்ச்சி, வரப்புகளை சீர்செய்வதையும் கண்டார்.
அப்போது பார்வதிதேவி பச்சை ஆடை உடுத்தி இந்திராணி, சரஸ்வதி, லட்சுமியுடன் சேர்ந்து கும்மியடித்து நாற்று நடவுப்பாடல்களை  பாடியபடி நாற்று நட்டுக்கொண்டிருப்பதையும் கண்டு துதித்து நின்றார். விநாயகரும், முருகரும் விவசாயக் குழந்தைகளாய் வந்து அங்கே வயலில் உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து வயல்வெளியில் வீசி குறும்பாக விளையாடிக்கொண்டிருப்பதையும் கண்டார். 

பின்னர் சுந்தரர் வயலினுள் இறங்கி நாற்று நட்டுக்கொண்டிருந்த பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனை  வணங்கி மீண்டும் ஆலயத்திற்குள் வருமாறு அழைத்து நின்றார். அம்மையும், அப்பனும் சுந்தரருடன் வரமறுக்க, ஈசனின் ஜடாமுடியை பிடித்திழுத்து வந்து ஆலயத்தினுள் சேர்ப்பித்தார். பின்பு ஈசனை துதித்து பதிகம் பாடி பொன், பொருள் வேண்டி நின்றார். அப்போது ஈசன், ‘சுந்தரா! இத்தலத்தில் உனக்கு எமது ஆனந்த திருநடனம் காட்டுகிறேன். சேரமான்பெருமான் உனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். நீ வேண்டும் பொன், பொருளை அங்கு அவன் உனக்கு அளித்திடுவான்' என்று அருளி மறைந்தார். இந்த நிகழ்வு பேரூர்ப் புராணத்தின் 19-வது படலமான பள்ளுப்படலம் பகுதியில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு ‘பச்சை நாயகி’ன்னு பெயர். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் செழிப்பாக வளரவும் இவளது சன்னிதியில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். இங்கு சுந்தரருக்கும், சேரமான் பெருமாளுக்கும் தனி சன்னிதிகள் இருக்கு. அன்று சுந்தரர் பொருட்டு ஈசன் வயலில் இறங்கி நாற்று நட்ட நிகழ்வு அதன் தொடர்ச்சியாய் இன்றும் பேரூர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் நாளின் முந்தைய தினம் நடைபெற்று வருகிறது.  இந்த வருடத்தைய நாற்று நடவு திருவிழா கடந்த 10/6/2018 அன்று கோலாகலமாக நடைப்பெற்றது..

அன்றையதினம் ஆலயத்தின் அருகில் உள்ள வயலில் ‘நாற்று நடும் விழா' எனும் பெயரில் பத்துநாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மறுநாள் காலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஈசனும், அம்பாளும் நாற்றுநடும் வயலில் உள்ள மண்ணெடுத்து வந்து வயலிலோ, தோட்டத்திலோ சிறிது தூவினால் மகசூல் நிறையக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மண்ணில் சிறிது எடுத்துவந்து வீட்டின் முகப்பில் ஒரு பச்சை நிறத் துணியில் கட்டித் தொங்கவிட்டால் தீய சக்திகள், வாஸ்து கோளாறுகள்லாம்  நீங்கும் என்பது ஐதீகம் .  இங்கு தல விருட்சமாக சித்தேச மரம் எனும் அரச மரம் இருக்கு .

விவசாயம், விவசாயிகளின் பெருமை பேசும் தலம் மட்டுமல்ல. இன்னும் ஐந்து அதிசயங்களை தன்னகத்தே  கொண்டது இத்தலம். அது என்னன்னு பார்க்கலாமா?!
பிறவாப்புளி
பேரூரில் தல விருட்சமாக அரச மரமாக இருந்தாலும், பனையும், புளியமரமும்கூட தலவிருட்சமாக கருதப்படுது.   தலவிருட்சமாக உள்ள புளியமரத்தின் விதைகளை உலகத்தின் எந்த மூலைக்கு கொண்டு சென்று விதைத்தாலும் முளைப்பதில்லை.  அதனால் இம்மரத்துக்கு ‘பிறவாப் புளி’ன்னு பேரு. இந்த ஒரு பிறவி மட்டுமே போதுமென, இந்த புளியமரம் ஈசனிடம் வரம் வாங்கி வந்ததாக சொல்கிறார்கள். இதன் மூலமாக, இத்தல ஈசனை பணிந்தால் மறுபிறப்பில்லை என்பதை ஈசன் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இங்கு இறப்பவர்கள் காதுகளில், ஈசனே ‘நமசிவாய’ மந்திரம் சொல்லி சிவலோகம் அழைத்துச் செல்வதாக ஐதீகம்.  பல அறிவியலாளர்கள் பலமுறை பல இடத்தில் முயற்சி செஞ்சும் இம்மரத்தின் விதைகள் முளைக்கலியாம். 

இறவாப்பனை...
பல ஆண்டுகள் கடந்தபின்னும் இன்னமும் பசுமை மாறாம இளமையாகவே இருக்கிறது தலவிருட்சமான  பனைமரம், இந்த மரத்திற்கு இறப்பென்பது எப்போதுமே கிடையாதாம். இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால் தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள்.  வியாதிகளை தீர்த்து நீண்டகாலம் நம்மை வாழ வைப்பதால் இந்த மரத்திற்கு "இறவாத பனை"ன்னு பேர். 

புழுக்காத சாணம்.
பொதுவா ஓரிரு தினங்களில் மாடு, ஆடு இடும் சாணத்தில் புழு வைத்து, மக்கி மண்ணோடு மண்ணாகும். ஆனா, இந்த ஊர் எல்லைக்குள் ஆடு மாடு இடும் சாணத்தில் புழு வைப்பதில்லை. நாளடைவில் மண்ணோடு மண்ணாய் மக்கிவிடுது. 
மனித   எலும்புகள் கல்லாகும் அதிசயம்... 
இந்த   பகுதிகளில் இறந்து விட்டவர்களின்  உடலை எரித்த‍ப்பின்  மிச்ச‍மாகும் எலும்புகளை,  இறந்தவர்களின்  ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யல் ஆற்றில் விடுவார்களாம். அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறிடும். 
வலது காது மேல் நோக்கி இருக்கும் அதிசயம்..

பேரூர்  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யாரேனும் இறந்துவிட்டால் அவரின் வலதுகாது மேல்நோக்கியே இருக்கும். அதுக்கு காரணம், இறந்தவரின் காதுகளில், சிவனே பிரணவ மந்திரம் சொல்லி,  முக்தி அளித்து கைலாயத்துக்கு அழைத்து செல்வதாகவும் நம்பிக்கை. 
கோயம்புத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் 8 கிமீ தூரத்தில் இருக்கு பேரூர்.   இத்தனை அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பட்டீஸ்வரர் அமைதியாய் இத்தலத்தில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறார். இப்போது கோவில் இருக்கும் இப்பகுதியானது அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.  அப்போது அங்கு பல பசுமாடுகள் இங்கு மேய்ச்சலுக்கு வருமாம். அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது "பட்டீஸ்வரர்."  அப்படி கிடைக்கும்போதே  பல அதிசயத்துடன் கிடைத்தார். 

இவரின் திருமேனியில் தலையில், படமெடுத்தாடும்  ஐந்து தலைப்பாம்பு, மார்பில் பாம்பின் பூணூல்,  தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள், இவைகளோடு " பட்டீஸ்ரர்" தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்தார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன.

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றார் மன்ன‍ன் திப்பு சுல்தான்.  இந்தக் கோயிலின் அதிசயத்தை எல்லாம் இங்குள்ளவர்கள் சொல்லக்கேட்டுக்கொண்டு வந்தவன், இங்கிருக்கும் சிவலிங்கம் அடிக்கடி அசையுமென சொல்வதை கேட்டு நம்பாமல் சிவலிங்கத்தின்மீது கைவைத்து, அசைத்து பார்த்திருக்கிறார்.  நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன்,  சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது "பட்டீஸ்வரரிடம்" தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான். பின்னர்  பட்டீஸ்வரனின் மகிமையை உணர்ந்து கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே "ஹதர் அலியும் " நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. 
இறைவனின் ஐந்து அதிசயங்களோடு, சிற்பக்கலை அதிசயத்தையும் இக்கோவிலில் பார்க்கலாம், இந்த ஆலயத்தின் முன், சிங்கத்தின் வாயினுள்  அத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. எத்தனை உருட்டினாலும் கல் வெளியில் வருவதில்லை. ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழலும் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள் என கல்லால் ஆன அதிசயங்கள் எத்தனையோ!!  இந்த ஆலயத்தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி, கோமுனி, பட்டிமுனி , போன்றவர்கள்  வணங்கி உள்ளனர்.  அருணகிரிநாதரால் பாடல் பெற்றுள்ள‍ முருகன் பழனியில் உள்ள‍தை போன்றே மேற்கு நோக்கி தண்டபானித் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான். 

காமதேனுவின் கன்றான பட்டி மிதித்து, பட்டியின் குளம்பின் தடயத்தை தாங்கியதால் இத்தல இறைவனுக்கு பட்டீஸ்வரர்ன்னு பேர் வந்தது... இந்த நாற்று நடும் திருவிழா போன வாரம் நடந்துச்சு.

திருச்சிற்றம்பலம்..

நன்றியுடன்,
ராஜி

Thursday, June 28, 2018

டிஸ்போசபிள் டம்ப்ளரை இப்படியும் மாத்தலாமா?! - கைவண்ணம்

எங்க வீட்டில் பிளாஸ்டிக் கப், டம்ப்ளர்களை வாங்காம  பேப்பர்ல செஞ்ச கப், டம்ப்ளர்தான் பயன்படுத்துறது.  பக்கத்து வீட்டில் புதுசா குடிவந்தவங்க,  பிளாஸ்டிக்  டிஸ்போசபிள் டம்பளர்ல  ஸ்வீட் போட்டு கொடுத்தாங்க. ஸ்வீட்டை  எடுத்துக்கிட்டு, டம்ப்ளரை என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும்போது, சமையலறை மேடைல கத்தி, ஸ்பூன்லாம் போட்டு வைக்க  ஒரு ஆர்கனைசரை இந்த கப்ல செஞ்சதை யூட்யூப்ல பார்த்த நினைவு. உடனே நானும் செஞ்சாச்சு. 


தேவையான பொருட்கள்...
பிளாஸ்டிக் டிஸ்போசபிள்  டம்ப்ளர்
வுல்லன் நூல்  மூணு கலர்
காட்போர்ட் அட்டை
ஃபேப்ரிக் க்ளூ
கத்திரிக்கோல்
மணிகள்

மூணு கலர் நூலுல ரெண்டு கலர் நூலை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு கலர்லயும் ரெண்டு இழைகளை கொண்டு  முடி போட்டுக்கிட்டு..
 தலைமுடிய பின்னுறது மாதிரி பின்னிகனும்....
முழுசா பின்னிக்கிட்ட வுல்லன் நூல்......
டிஸ்போசபிள் டம்ப்ளர்ல பின்னி வச்ச நூலை  க்ளூ போட்டு ஒட்டிக்கனும். 
பசை காய்ஞ்சு நூலு, டம்ப்ளர்ல நல்லா ஒட்டிக்கிட்டதும், டம்ப்ளர் முழுக்க பின்னி வச்ச நூலை சுத்திக்கிட்டு வரனும். 
 ரொம்ப டைட்டா நூலை சுத்திக்கிட்டு வந்தால் டம்ப்ளர் உருவம் மாறிடும். நூல் சுத்தி நல்லா காய விடுங்க. 
 நூல் சுத்திய டம்ப்ளர் விளிம்புல முத்து இல்லன்னா கற்களால் ஆன செயினை க்ளூ வச்சு ஒட்டி, காய விடுங்க. 
 காட்போர்ட்ல வட்ட வடிவமா கட் பண்ணிக்கிட்டு நல்லா க்ளூ தடவி...

 நூல் சுத்திய டம்ப்ளரை ஒட்டிக்கனும்... டம்ப்ளரை நல்லா காய விடனும்..
ஒவ்வொரு கலர் நூலிலும் இரண்டு இழை எடுத்துக்கிட்டு தலைமுடி பின்னுற மாதிரி  பின்னிக்கனும்.
 கார்ட்போர்ட்ல டம்ப்ளர் இருக்கும் இடம் போக மிச்ச இடத்துல இந்த பின்னி வச்ச நூலை கம் கொண்டு ஒட்டிக்கனும். 
 கடைசில முத்து, இல்லன்னா கற்களை ஒட்டிக்கனும்...

 அழகான பிளவர் வாஷ் இல்லன்னா ஸ்பூன், கத்தி, சீப்பு, பேனா பென்சில் ஆர்கனைசர் ரெடி. 
எங்க வீட்டு ஃப்ரிட்ஜ் மேல ஸ்பூன், கத்திலாம் சுமந்துக்கிட்டு ஜோரா உக்காந்திருக்கு. 

நன்றியுடன்,
ராஜி

Wednesday, June 27, 2018

காரைக்காலில் மாங்கனி திருவிழா - அறிவோம் திருவிழா


அனைத்து உயிர்களுக்கும் முதல் உறவாகவும் முதன்மை உறவாகவும் திகழ்பவள் அம்மா!  எல்லோருக்கும் அம்மாதானே முதல் தெய்வம். ஆனால், இப்படி ஓர் உன்னதமான தெய்வமான அம்மா, ஒரே ஒருவருக்கு மட்டும் வாய்க்கவில்லை. காரணம், அவர் பிறப்பில்லாதவர். நமக்கெல்லாம் அன்பு செலுத்தி அரவணைக்க ‘அம்மா’ என்னும் புனித உறவு இருப்பதைப் பார்த்து, தனக்கும் ஓர் அம்மா வேண்டும் என்ற ஆசை அந்தப் பிறப்பிலிக்கும் ஏற்பட்டு விட்டது. இப்படி ஆசைப்பட்ட அந்தப் பிறப்பிலி யார் தெரியுமா? வேறு யார்? சாட்சாத் சர்வேஸ்வரனான அந்த சிவபெருமான்தான்! சகல லோகங்களுக்கும் நாயகனான அந்த சர்வேஸ்வரனுக்குத் தாயாக இருக்கவேண்டுமானால், அந்த ஈசனைப் போலவே மிக மிக மேன்மையும் புனிதத்துவமும் கொண்ட ஒரு பெண்ணால்தானே முடியும்?! தனக்கு ஒரு தாய் வேண்டும் என்று விருப்பம் கொண்டுவிட்ட சிவபெருமான், தனக்கான அன்னையை தோன்ற வழிவகை செய்தார்.
தேவர்களில் ஒருவரான தும்புரு வீணை வாசிப்பதில் மிகச்சிறந்தவர். அவரின் மகளான சுமதி சிவன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிவனை நினைத்து, தவமிருந்த நேரத்தில் அங்கு வந்த துர்வாச முனிவரை கவனிக்க தவறிவிட்டாள். துர்வாசருக்கு வந்ததே கோபம் ..  உடனே, மானிடப்பெண்ணாய் பிறந்து அவதிப்பட்டு கைலாயம் வந்துசேர் என சாபமிட்டார்.
அப்போதைய காரைவனம் என்றழைக்கப்பட்ட இப்போதைய புதுச்சேரி, காரைக்காலில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளான புனிதவதியாய் பிறந்தாள் சுமதி. சிவ வழிபாட்டிலயும், சிவனடியாருக்கு தொண்டு செய்வதிலயும் காலம் சென்றது. திருமணம் பருவம் வந்ததும், பெரும் வணிகனான பரமதத்தனுக்கு மணமுடித்தனர். சிறந்த சிவ பக்தைக்கு, இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாத மணாளன் அமைந்தாலும், புனிதவதியாரின் சிவத்தொண்டுக்கு எந்தவொரு தடையையும் பரமதத்தன் விதிக்கவில்லை. இனிமையாகவே அவர்களது இல்லறம் நடந்துக்கொண்டிருந்தது.

தனது கடையிலிருந்த வேளையில் பரமதத்தனுக்கு இரு மாங்கனிகளை பரிசளித்தான் மற்றொரு வணிகன்.  அதை தன் மனைவி புனிதவதியாரிடம் சேர்ப்பிக்கச்சொல்லி கடையில் சேவகனிடம் கொடுத்தனுப்பினான். அவனும் அவ்வாறே பழங்களை புனிதவதியாரிடம் சேர்ப்பித்தான். மாம்பழங்களை வாங்கி பத்திரப்படுத்திவிட்டு சமையல் வேலையில் மூழ்கிப்போனார் புனிதவதியார். அப்போது  சிவனடியார் ஒருவர் வாசலில் வந்து நின்று பிட்சை கேட்டார். இன்னும் சமைக்கவில்லை. கொஞ்சம் பொறுங்கள்ன்னு புனிதவதியார் சொல்ல பசிக்கிறதம்மா. சாப்பிட்டு வெகுநேரமாச்சு  சமைச்சு முடியும்வரை என்னால் தாங்க இயலாது வேற எதாவது சாப்பிட கொடு என்றார். சிவனடியாரின் பசியை போக்க கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை கொடுத்தனுப்பினார்.
மதிய உணவிற்கு வந்த கணவர் பரமதத்தனுக்கு உணவு பரிமாறி, கணவர் கொடுத்தனுப்பிய மாம்பழத்தையும் வைத்தார். மாம்பழத்தை ருசித்த பரமதத்தன், மாம்பழத்தின் ருசியில் மயங்கி, மற்றொரு மாம்பழத்தையும் எடுத்து வர சொன்னான். மாம்பழத்தை சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன் எனச் சொன்னால், எங்கே கணவர் கோவித்துக்கொள்வாரோ என எண்ணி, தயங்கிய புனிதவதி, உள்ளே சென்று இறைவனிடம் அழுது முறையிட்டார். புனிதவதியார் கைகளில் மாம்பழம் தோன்றியது. அதை கொண்டு போய் கணவனின் இலையில் வைத்தாள். அதை சாப்பிட்ட பரமதத்தன் அந்த பழத்தைவிட இந்த பழம் மிகுந்த ருசியுடையதாய் உள்ளது. ஒரு மரத்தில் காய்த்த இருவேறு பழங்கள் எப்படி ருசியில் மாறுபடுமென வியந்தான். கணவனிடம் உண்மையை சொன்னார் புனிதவதியார்.
அதை நம்ப மறுத்தான் பரமதத்தன். வாதங்கள் வலுத்தது. எங்கே இன்னொரு கனியை வரவை பார்க்கலாமென்றான். இறைவனை வேண்ட, அதேப்போன்ற இன்னொரு மாம்பழம் புனிதவதி கைகளில் தோன்றியது. பரமதத்தன் வியந்தான். தன் மனைவி தெய்வப்பெண் என்று எண்ணி புனிதவதியாரிடமிருந்து விலகியதோடு.. கப்பல் நிறைய பொருளோடு வாணிப செய்ய புறப்பட்டான்...

நாட்கள் நகர்ந்து வருடங்களானது. பரமதத்தன் திரும்பவே இல்லை. பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி புனிதவதியாருக்கு தெரியவந்தது. கணவனை தேடி பாண்டிய நாட்டிற்கு சென்றார். ஊருக்கு வெளியே ஒரு மண்டபத்திலிருந்துக்கொண்டு ஆட்களிடம் தன் வரவை சொல்லி அனுப்பினாள். பரமதத்தனோடு அவன் இரண்டாவது மனைவியும், அவன் மகள் புனிதவதியும் வந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியுற்றார் புனிதவதியார். இந்த அதிர்ச்சி போதாதென புனிதவதியார் கால்களில் பரமதத்தனும், அவன் குடும்பத்தாரும் விழுந்து வணங்கினர். இவர் தெய்வத்தன்மை வாய்ந்தவர். இவரை வணங்குங்கள் என ஊராரிடமும் சொன்னான் பரமதத்தன்.  நொறுங்கிய இதயத்தோடு திரும்பிய புனிதவதியார், இறைவனிடம் கணவனே வெறுத்தப்பின் எனக்கு இந்த இளமை வேண்டாமென வேண்டி பேய்க்கோலம் பூண்டு சிவயாத்திரை மேற்கொண்டார்.  அன்றிலிருந்து புனிதவதி காரைக்கால் அம்மையானார்.

முக்தியடையும் நேரம் வந்ததும் இறைவனை சந்திக்க கயிலாயம் சென்றார். இறைவனின் அருள் நிறைந்த இவ்விடத்தில் தன் கால்படலாகாது என எண்ணி தலைக்கீழாய்  கைகளால் நடந்தே கைலாயம் மலையை ஏறினார். தலைக்கீழாய் ஏறிவரும் காரைக்கால் அம்மையாரை கண்ட பார்வதி சிவனிடம், யாரிவர் என வினவினார். நம்மை பேணும் அம்மை இவர் எனக்கூறியதோடு, சிவப்பெருமான் காரைக்கால் அம்மையாரை நோக்கி, அம்மா! நலமோடு வந்தனையோ எனக்கேட்டு தாயில்லாத தனக்கு தாயாய் அவரை ஏற்றுக்கொண்டு, தாங்கள் வேண்டுவது என்னவென வினவினார்.
இறைவா! இப்பிறவி போதும்.... அதனால், பிறவாமை வரம் வேன்டும். ஒருவேளை அவ்வாறு பிறந்தால் உன்னை மறவாத மனம் வேண்டுமென அறுள்வாய்!  இறைவா! நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்கவும் அருளவேண்டுமென " என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்ட திருவாலங்காட்டிற்கு வரப்பணித்தார். சிவனின் சொல்படி திருவாலங்காட்டிற்கு செல்ல சுடுகாட்டை கடக்கையில் அம்மையினை பரிசோதிக்க பேய்களை அனுப்பி பயமுறுத்தினார் சிவன். இறைவனின் மீதுகொண்ட பக்தியால் அப்பேய்களுக்கு முக்தியளித்து ஆலங்காட்டு கோவிலுக்கு சென்று சேர்ந்தார். அங்கு, தன் தேவியோடு ஆனந்த தாண்டவமாடி அம்மையை   தன் திருவடிக்கீழ் என்றும் இருக்க அருளினார் இறைவன். அம்மையார் முக்தியடைந்த நாள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரம். 

காரைக்காலில் வாழ்ந்து சிவத்தொண்டாற்றியவருக்கு காரைக்காலில் இவருக்கொரு கோவில் உண்டானது. இங்கு அமர்ந்த கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனிமாதம் பௌர்ணமி தினத்தில் மாங்கனி திருவிழா நடத்துவது வாடிக்கையானது. இவ்விழா 5 நாட்கள் நடைப்பெறும். முகூர்த்தக்கால் நடப்பட்டு மாப்பிள்ளை அழைப்புடன் இவ்விழா ஆரம்பமாகும்.

பிட்ஷாடண மூர்த்தி ரூபத்தில் வெள்ளை அங்கி சார்த்தி,  பவழக்கால் சப்பரத்தில் வலம் வருவார். அப்போது புனிதவதியார் சிவனுக்கு மாங்கனி கொடுத்ததை நினைவுக்கூறும் விதமாக நேர்த்திகடனுக்காக தங்கள் வீட்டின் மாடியிலிருந்து கூடைக்கூடையாய் மாங்கனிகளை வீசுவதோடு இத்திருவிழா முடிவுறும். 
(மாங்கனி திருவிழா 

பிட்சாடனாருக்கு அமுது படையல் தீபாராதனை  இன்று நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது )
அப்படி  வீசப்படும் மாங்கனிகள் இறைவனின் பிரசாதம் எனவும்,  அந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும்.  இதற்கு மறுநாள் அம்மையார் பேயுரு கொண்டு திருவந்தாதி இரட்டை மணிமாலை பாடியபடி  கைலாயம் செல்லும் நிகழ்ச்சி நடைப்பெறும்.   அன்றைய தினம் வீதிகளில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு தீவட்டி வெளிச்சத்துடன் பேயுருவாக அம்மை வீதியுலா வருவது கண்ணீர் வரவைக்கும். அதேசமயம் சிவனும், பார்வதியும் அம்மையாரை எதிர்கொண்டு காட்சி தருவர். 
காரைக்கால் மட்டுமல்லாமல் மற்ற சில கோவில்களிலும் இவ்விழா கொண்டாடப்படுது. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், குலசேகரன்பட்டி காரைக்கால் அம்மையார் கோவிலிலும், கோவில்பட்டி சென்பகவள்ளி கோவிலிலும் இவ்விழா நடைப்பெறும். இவ்வாறு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் மாங்கனி விழா இன்று நடைப்பெறுகிறது .
காரைக்கால் அம்மையார், சமயக்குரவர்கள் என்றழைக்கப்படும் நால்வரான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கெல்லாம் மூத்தவர். மூன்று பெண் நாயன்மார்களில் முதன்மையானவர், நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பவர் இவர் மட்டுமே. சிவனாலேயே அம்மா என அழைக்கப்பட்டவர். அம்மையாரின் பாடல்கள் மட்டுமே மூத்த திருப்பதிகமென அழைக்கப்படுது. திருவாலங்காட்டில் அம்மை முக்தியளித்ததால் திருஞானசம்பந்தர் அவ்வூரில் கால்பதிக்க தயங்கினார். நாயன்மார்களில் தனிக்கோவில் கொண்டவர் இவர் மட்டுமே. 
காரைக்காலில் இன்று காலை 7 மணி முதல் மாங்கனி திருவிழா கோலாகலமாய் தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. 

காரைக்கால் அம்மையாரின் ஜீவ சமாதி ,பண்டுருட்டியிலுள்ள திரு அதிகை வீடானேஸ்வரர் திருகோயிலில் இருக்கிறது .என்பது கூடுதல் தகவல் . 

ஆதியும்  அந்தமும் இல்லாத இறைவனின் அன்னை ஸ்தானத்தில் இருப்பவரை வணங்கி சிவன் அருள் பெறுவோம்
நன்றியுடன்,
ராஜி.