Saturday, October 29, 2011

நிறைகுடம் தளும்பாது...,



                                                    
மலை முகப்பை முத்தமிடும்
தொடு வானம்...,
அதனருகே தென்றல் தாலாட்டும் 
சோலை..,
சில்லென்று வீசிடும் பூங்காற்று..,
ரீங்காரமிடும் வண்டுகள்..., “சோ”வென்று 
கொட்டும் தேனருவி
நெளிந்து ஓடும் சிற்றாறு..., தேனருவிக்
காற்றுக்கேற்ப தலையை ஆட்டும்
நெற்கதிர்கள்..,
அருகாமையில் உள்ள வயல்வெளிகள்...,
அப்பப்பா..., என்னவென்று சொல்வது
இறைவன் படைப்பை!!!

என்று இறைவனை எண்ணி, எண்ணி வியந்தவாறு வயல் வெளியின் ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்..,
“கிரேக்க அறிஞன் சாக்ரடீஸ்”....,

எதிர் திசையில் கிரேக்க தளபதி
இவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்..
அருகே வந்ததும் இருவரும் எதிர் எதிரே...,
எவரும் எவரையும் முந்த முடியாதவாறு
நின்றுக் கொண்டிருந்தனர்...,

ஆணவத்தின் மொத்த உருவமான
கிரேக்க தளபதி சொன்னான்..,
”முட்டாள்களுக்கு வழிவிட்டு
எனக்கு பழக்கமில்லை” என்று!!??

அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த சாக்ரடீஸோ...,
வரப்பை விட்டிறங்கி...,
“என் பழக்கம் வழி விடுவது” என்றான்.

 

Wednesday, October 26, 2011

தீபாவளி


பிள்ளையார் பண்டிகை என்னிக்குன்னு பார்க்க காலண்டரை அம்மா கேட்கும்போதே.., தீபாவளி என்னிக்குன்னு பார்த்துடுவேன். அன்னியிலிருந்து கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடும். இன்னும் 100  நாள் இருக்கு, இன்னிலிருந்து 45வது நாள் தீபாவளி ன்னு கணக்கு பார்ப்பேன். தோழிக்கிட்டலாம், இந்த கலர் டிரெஸ் எடுப்பேன், இவ்வளவுக்கு பட்டாசு வாங்குவேன்னு போட்டி வச்சுக்குவோம். எல்லாரும் வெவ்வேறு தெருவுல இருக்கோமே எப்படி யார் அதிக பட்டாசை கொளுத்துனதுன்னு தெரிஞ்சுக்குறதுன்னு ஒரே குழப்பம்.

அப்புறம், ரொம்ப புத்திசாலித்தனமா(?!) யோசிச்சு யார் வீட்டு வாசல்ல அதிக பேப்பர் இருக்கோ அவங்கதான் ஜெயிச்ச மாதிரினு முடிவெடுத்தோம். ராத்திரி 8மணிக்கு எல்லார் வீட்டுக்கும் விசிட்டுன்னும் முடிவு பண்ணினோம்.


தீபாவளி கிட்ட நெருங்கி,  வர வர அப்பா,  இன்னிக்கு கடைக்கு கூட்டிபோய் டிரெஸ், பட்டாசு வாங்கித் தருவார்ன்னு தினம் தினம் எதிர்பார்த்து ஏமாறுவேன். அவரும் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரிச்சு குடுக்க, நாட்களை கடத்துன மாதிரி நாட்களை கடத்தி, தீபாவளிக்கு முதல் நாள்   கடைக்கு கூட்டி போவார். அங்க போனா மனசுக்கு பிடிச்ச கலர், டிசைன்லாம் தீர்ந்து போயி, அப்புறம் நாலு கடை ஏறி இறங்கி அப்பா டென்ஷனா முறைக்கும்போது, மனசுல நினைச்ச மாதிரி கலர்ல டிரெஸ் எடுத்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி...,

காலைல 4 மணிக்கு எழுந்து தலைக்கு குளிச்சு, புது டிரெஸ் போட்டுக்கிட்டு பட்டாசை கொளுத்தனும்னு கனவு கண்டுக்கிட்டே விடிகாலை 3மணிக்கு  தூங்கி..., எழுந்துப் பார்த்தால்.., மணி ஏழு ஆகியிருக்கும். சரின்னு அவசர அவசர குளிக்க ரெடியாகும்போது, அம்மா 1/2லிட்டர் எண்ணெயை தலையில கவுத்து, சீயக்காத்தூளை கொட்டின்னு தடபுடலா எண்ணெய் குளியல் போட்டு வந்து பார்த்தால்...,
பிடிச்ச மாதிரி ஆட்டுக்கறி குழம்பும், தோசையும், வடையும் நம்மளை முறைச்சு பார்க்கும். சில தோசைகள், பல வடைகளை உள்ளிறக்கி ஒரு வழியாய் பட்டாசை கொளுத்த தெருவுக்கு வந்து பார்த்தால்....,

அடைமழை வந்து உயிரை வாங்கும்.  அப்படி இப்படின்னு பட்டாசை கொளுத்திக்கிட்டு இருக்கும்போது.., அம்மா தொணதொணன்னு இந்த மாவை பிசைஞ்சு குடு, அரிசியை ஊற வை, வீட்டை கூட்டு,  பலகாரத்தை கொண்டு போய் அத்தை வீட்டில் குடு, கோடி வீட்டு மாமிக்கிட்ட குடுன்னு கடுப்பை கெளப்புவாங்க. போட்டியில பொண்ணு ஜெயிக்கனும்ன்னு எங்காவது அக்கறை இருக்கா பாருங்க அம்மாவுக்கு.
                                                   

எப்படியோ ஒரு வழியா பட்டாசை கொளுத்தி, வாசலை கூட்டி, பட்டாசு கொளுத்துன பேப்பரையெல்லாம், சேர்த்து வச்சுட்டு பலகாரம் தின்னுட்டு வரலாம்ன்னு உள்ளே போயிட்டு வந்து பார்த்தால், அம்மா அந்த பேப்பரையெல்லா கொளுத்திட்டு இருக்காங்க. அதை பார்த்ததும் உசிரே போயிடுச்சு.
மணி 7.30ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல பிசாசுங்களாம் சாரி தோழிங்களாம் வந்துடுவாங்களேன்னு இல்லாத மூளையை யூஸ் பண்ணி சிந்திச்சுக்கிட்டே இருந்தேன். அப்பதான் சூப்பர் ஐடியா தோணுச்சு..., நேரா ஒரு மஞ்சப்பையை கொண்டு போனேன். அக்கம் பக்கம் வீடுகளில் சேர்த்து வச்ச பேப்பர்களை பொறுக்கி எடுத்து வந்து அம்மாவுக்கு தெரியாமல் ஒரு ஓரமா குவிச்சு வச்சேன்.
மணி 8ஐ தாண்டி போயி 10ஐ நெருங்கியும் யாரும் வரலை. என்னன்னு தெரியலையேன்னு யோசனையிலேயே தூங்கி எழுந்து, மறுநாள் ஸ்கூலில் போய் கேட்டால் சொன்னாளுங்களே ஒரு பதில்.  நான் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன்.
”லூசு அந்த குப்பையெல்லாம் வந்து ஆராய்ச்சி பண்றதுதான் எங்களுக்கு முக்கியமா? கேபிள் டிவில அண்ணாமலை படம் போட்டாங்க அதை பார்த்துக்கிட்டு இருந்தோம்னு..,
கிர்ர் டமால்..., வேறென்ன? நான் மயங்கி விழுந்த சத்தம்தான்...,

இப்படிலாம் பெற்றோர், உறவினர், சுற்றத்தார், தோழிகள்ன்னும்,  பலகாரங்களை மத்தவங்களுடன்  ரொம்ப மகிழ்ச்சியாய் தீபாவளியை கொண்டாடினேன் நான்.
                                        

ஆனால், இன்று என் பிள்ளைகள், ஒரு மாதத்திற்கு முன்னே டிரெஸ் எடுத்து, தீப்பாவளியன்று முக்கி முனகி, என்னிடம் திட்டு வாங்கி எண்ணெய் குளியல்..., 1 இட்லி, 1/2 தோசைன்னு சாப்பிட்டு செல்போனிலும் மெயிலிலும் வாழ்த்துக்களை சொல்லிக்குதுங்க.  அப்புறம் பலகாரம் சுட கூப்பிட்டால்.., உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொல்றது? கடையில வாங்காமல் நல்ல நாளும் அதுவுமா ஏம்மா எங்க உயிரை எடுக்குறீங்கன்னு டிவிப்பொட்டியை விட்டு எழுந்துக்காமல், விடிகாலையும், சாயந்தரம் 6 மணிக்கும் ஏதோ சடங்குக்காய் சில பட்டாசுகளை கொளுத்திட்டு மீண்டும் டிவியில உக்காந்துக்குதுங்க...,
அன்று பண்டிகைகளை உண்மையான நோக்கில உற்றார் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.
இன்று? நம் பிள்ளைகள் நிஜமான அர்த்தங்களுடந்தான் கொண்டாடுகிறார்களா?!




வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

Saturday, October 22, 2011

அதையும் தாண்டி புனிதமானது....,



இதயம் வெடித்து விடுமோ
மூளை சிதறி விடுமோ
எனும் அளவுக்கு
நான் பயந்து பயந்து யோசித்த
என் சந்தேகத்தை வழக்கம் போல்
உன்னிடமே தூக்கி கொண்டு ஓடிவருகிறேன்....,

ஒரு கப் காபி கொடுத்து
ஓரிரு கதைகளை சிரித்து பேசி
ஒரு sms , ஒரு phone செய்யும்
ஒரு சாதாரண நண்பனாய்
ஒரு போதும் உன்னை நினைக்க முடியவில்லை.

கட்டில் மேல் படுத்து
விடிய விடிய சுகம் அனுபவிக்கும்
ஈருடல் ஓர் உயிராய் வாழும்
கணவன் நிலையிலும்
என்னால் உன்னை நினைக்க முடியவில்லை.

நீ எனக்கு யார்?
நான் உனக்கு யார்?
நமக்குள் என்ன உறவு?
நான் தவறான பெண்ணா?
நான் உன்னை பிரிந்து விடட்டுமா?
என்னிடம் கேள்விகள் மட்டுமே.

அதே பதட்டமில்லாத வார்த்தைகள்
அதே மென்மையான பேச்சுகள்
வழக்கம் போல் உன்னிடம்.

ஒரு புறம் கோபமும், ஒரு புறம் குழப்பமுமாய்
புரியாத நிலை என்னிடம்.
நான் உன்னை பிரிந்து விடட்டுமா? என்றேன்.
உன் விருப்பம் அதுவாயின் செய் என்றாய்.

நான் தவறான பெண்ணா? கேட்டேன்.
என்னவள் நீ!
உன்னிடம் களங்கம் காண முடியாது என்றாய்.

ஏன் நான் உன்னை விரும்ப கூடாதா?
அப்பாவி தனமாய் கேட்டேன்.
விரும்புதல் என்றால் என்ன? திரும்ப கேட்டாய்?
 விழித்தேன் விடை தெரியாமல் வழக்கம்போல்.

காதலா? ஊஹும். காமமா? ஊஹும்.
விளக்கி சொல்ல சொன்னாய் என் நிலையை.
பொறுமையாய் அனைத்தையும் கேட்டாய்.
வசீகரமாய் சிரித்தாய், என் நெஞ்சை பறித்தாய்.

முட்டாள் பெண்ணே!
இதே நிலையில் தான் நானும் என்றாய்.
என் வாழ்க்கை துணையை விட மேலானவள் நீ என்றாய்.
அந்த வார்த்தைகள் என் உயிரை தீண்டியதை அறியாமல்!

புனிதமான உறவுகளை பட்டியலிட சொன்னாய்.
தாய்க்கும், சேய்க்குமான உறவு,
கணவன் , மனைவிக்கான உறவு,
கடவுள், பக்தர்களுக்கான உறவு.
உன் ஓர் ஒரு வார்த்தையில்
என் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைத்தாய் !

அடி பெண்ணே! 
” நம் உறவு அவைகளை விட புனிதமானது “
 
 



Monday, October 03, 2011

அம்மா செல்லமான அப்பா செல்லம்

                                                     
எப்படி எப்படி 
எல்லாமோ 
தன பாசம் உணர்த்துவாள் அம்மா.
ஒரேயொரு கையழுத்தலில்
எல்லாமே உணர்த்துவார்
அப்பா...,

முனனால் சொன்னதில்லை   
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்!
என்னைப் பற்றி
பெருமையாக அப்பா
பேசிக் கொண்டிருந்ததை..,

அம்மா எத்தனை முறை
திட்டினாலும்
உரைத்ததில்லை..,
உடனே..,
உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பா
முகம் வாடும்போது...,

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா!? என
என் தோழிகள் 
என்னிடமே சொல்லும்போதுதான் 
தெரிகிறது யாருக்கும் 
கிடைக்காத 
தந்தை எனக்கு 
கிடைத்திருக்கிறார் என்று...,

எதையும் கேட்ட உடனே
தன்னால் கொடுக்க இயலாது 
என்பதால்தானோ
அப்பாவை என்னுடன் 
அனுப்பி இருக்கிறார் கடவுள!?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைப்பயில
சொல்லிக்குடுத்த
அப்பா...,
என் கரம்
பிடித்து நடந்தபோது
என்ன நினைத்திருப்பார்!?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார்
அப்பா..,
அவர் தடுமாறியபோது
அருகில் ...,
நான் இல்லை!!??  

அம்மா செல்லமா?
அப்பா செல்லமா?
என கேட்டபோதெல்லாம்..,
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்..,
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என!!??..,  
 
எத்தனையோ பேர்
"நானிருக்கிறேன்."
எனச் சொன்னாலும்  
அப்பாவைப் போல்
யார் இருக்க முடியும்???
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை..,
இருந்தும்,
காட்டிக் கொடுக்கும்  கண்ணீரை
துடைக்க  இன்று
அப்பாவும் அருகில் இல்லை...,

அம்மாவிடம் பாசத்தையும்..,
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்திவிடுங்கள்.
சில நாளைகள்
 அவர்கள் அருகில் 
நீங்கள்,
இல்லாமலும் போகலாம்..