Friday, November 30, 2018

சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்த இடம், காலாராம் மந்திர் - ஷீரடி பயணம்

அப்பாவின் உடல்நிலை, பண்டிகைன்னு வந்த  காரணத்தால் தடைப்பட்டுப்போன தொடர்பதிவான  ஷீரடி பயணத்தை தொடரலாம் வாங்க!! பஞ்சவடி யாத்திரையில் நாம இப்ப பார்க்கபோறது பழமை வாய்ந்த காலாராம் மந்திர். இங்கிருக்கும் இராமர் இலட்சுமணன் மற்றும் சீதாதேவி, அனுமன் ஆகியோரது சிலைகள் மற்றும் கோவில் எல்லாமே கருப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டவை. நாங்கள் சென்ற தினம் ஏதோ விசேஷ தினம் போல!   எல்லா இடத்திலும் கூட்டம் கூட்டமா வரிசையில் போய்க்கிட்டு இருந்தாங்க. இந்த கோவிலை பத்தி சொல்லணும்ன்னா கோதாவரி கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆலயம். நாசிக்கிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்குது.  இந்த கோவிலை சர்தார்  ராணாராவ்  தாத்தா என்பவர்தான் 1782-ல்  முதலில் புணரமைத்து விரிவாக கட்டினார்ன்னு சொல்லப்படுது. அதற்கு காரணம் ஒருமுறை இராமர் இவருடைய கனவில் வந்து,  தான் கோதாவரி ஆற்றில் மூழ்கி இருப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து கோவிலை விரிவாக்கம் செய் என சொன்னதாகவும் சொல்லப்படுது. பின்னர் அவர் சிலையை கண்டெடுத்து கோவிலை பெரியதாக கட்டினார் எனச் சொல்லப்படுது.
மேலும் ஒரு சிலரோ, நாதசைவ முனிவர்கள் பழங்காலத்தில் இங்கு தங்கிருந்தாக சொல்லப்படுகிறது. நாத சைவம்  என்பது சித்த சித்தாந்தம் என்றும் அழைக்கப்படும்  சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்று. நாஸ்தம், கோரக்க பந்தம், சித்தயோகி செம்பெருந்தாயம், ஆதிநாத செம்பெருந்தாயம், நாத மதம், சித்த மார்க்கம் என்றும் இதை சொல்லுவார்கள். கோரக்கர், மச்சேந்திரர் ஆகியோர் இந்த குரு பரம்பரையில் இருக்கிறார்கள். இது திருக்கயிலையிலிருந்து நந்திநாதரிடம் கற்ற எட்டுச் சீடர்களின் வழியே பரப்பப்பட்ட மூலசைவத்தின் இன்னொரு வடிவம் என்றும் சொல்லப்படுது. ஆதிநாதனான சிவனை குருவாகக்கொண்டுதான் சித்தர்கள் வந்தார்கள் அவர்கள் மூலமாக வந்ததுதான் இந்த நாத சைவஞானம் எனவும்,  இறுதியில் கோரக்கர் மற்றும் மச்சேந்திரர் ஆகியோர் மூலம், நவநாத சித்தர்கள் எனும் ஒன்பதுபேரால்  உலகுக்கு சொல்லப்பட்டதாக நம்பப்படுது .
எதுக்கு இதுலாம் சொல்றேன்னா  முக்திதாம் கோவிலில் பார்த்த நவசித்தர்கள் சிலைகளான மச்சேந்திர நாதர், கோரக்க நாதர், சலந்தர நாதர், இரேவண நாதர், நாகநாதர், ககினிநாதர், கனிபநாதர், சரபதிநாதர் என்னும் இந்த ஒன்பது பேர்கள்தான். நம்மூரில் பாம்பாட்டி சித்தர், போகன், காகபுஜண்டர் மாதிரி வடஇந்தியாவில் இவர்கள் பிரபலமான சித்தர்கள். கோரக்கரையும் மச்சமுனிவரையும், "மகாசித்தர்"ன்ற பெயரில் திபெத்திய மற்றும் பௌத்தர்கள் வணங்குகின்றனர் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். இந்த சித்த புருஷர்கள் அருணா-வருணா நதியிலிருந்து இங்கிருக்கும் இராம, லட்சுமண, சீதாதேவியரின் சிலைகளை கண்டெடுத்ததாகவும், முன்பு இது மரத்திலான கோவிலாக இருந்ததாகவும் அங்க வைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுது. பின்னர் 1780ம் ஆண்டு மாதவ்ராவ் என்னும் பேஷ்வாவின் தாயாரான கோபக்காபாய் அந்த காலத்தின் மதிப்புபடி 23 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததாக சொல்லப்படுது.
இந்த கோவில் முழுக்க முழுக்க கருப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டு பார்க்க ரொம்ப அழகா இருக்குது. இந்த கோவிலை கட்ட உபயோகப்படுத்தப்பட்ட கற்களை பாலில் கொதிக்கவைத்து அதன் உறுதித்தன்மையை பரிசோதித்து கட்டினார்களாம்!! இந்தக் கோவில் சுமார் 75 மீ நீளமும், 34 மீ அகலமும், 70 மீ உயரமும் கொண்டதாக இருக்குது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாதிரி நான்கு திசைகளுக்கும் நான்கு வாசல்கள் இருக்கு. கோபுர கலசங்கள் தங்கத்தால் ஆனவைன்னு  சொல்றாங்க. இங்க இருக்கும் முன்புற மண்டபம் 12 அடி உயரம் உள்ள 40 தூண்களால் அமைக்கப்பட்டிருக்கு. இங்க இராமநவமி மிகவும் விசேஷமாக கொண்டப்படும் .
இந்த கோவிலின் இன்னொரு  விசேஷம் என்னன்னா, சத்யயுகத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசம் செய்த 14 வருடங்களில் இரண்டரை வருடம் இந்த தண்டகாரண்ய வனத்தில் இப்ப இந்த காலாராம் கோவில்  இருக்கும் இடத்தில்தான் குடிலிட்டு வசித்து வந்ததா சொல்றாங்க. வால்மீகி இராமாயணத்தில் இந்த நாசிக் பகுதியை பற்றி குறிப்பிடும்போது, மிகவும் அமைதியான அனைத்து விலங்குகளும் வசித்துவந்த ஒரு அற்புதமான வனமாக இது  இருந்திருக்கு. இங்க வசித்து வந்த அனைத்து உயிர்களின் தேவைகளையும் இந்த வனம் தீர்த்தது எனச்சொல்லி இருக்கிறார் முனிவர்களுக்கு சிறந்த தபோவனமாகவும், வேடர்களுக்கு வேட்டைக்களமாகவும், விலங்கினகளுக்கு வாழ்வாதாரமாகவும் செழிப்புற்று இந்த வனம் இருந்தது என இந்த இடத்தை பத்தி விவரிக்கின்றார் .
மேலும் இந்த வனத்தில் மிகக்கொடிய அசுரர்களும், பிரம்மராட்சதர்களும் இருந்தார்களாம்.  அவர்கள் அங்கு தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்களுக்கு பலவித தொல்லைகளை தந்து அவர்களை பயமுறுத்தி தவத்தை கலைக்கவும் செய்தனராம். அந்தச்சமயத்தில்தான் அவர்கள் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்து தியானித்தனர். முனிவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த வனத்திற்கு வந்த இராமர் தன்னுடைய உருவத்தை மிகப்பெரிய கருப்பு உருவமாக மாற்றி அந்த ராட்சதர்களுடன் சண்டை இட்டாராம்.  அதனால்தான் இங்கிருக்கும் இராமர் மட்டும் கருப்பு வண்ணத்தில் அங்கிருந்த முனிவர்களால் வணங்கப்பட்டது என்றும் சொல்லப்படுது .
கோவிலின் உள்பக்க மணடபத்தை தாண்டித்தான் மூலவர் இருக்கும் கோவிலுக்கு போகனும். மாலையானதும் அங்கிருக்கும் வேலையாட்கள்  பைப் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்துவாங்க. கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். பக்தர்கள் எல்லோரும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தவுடன் நாங்களும் உள்ள போனோம். சில படிக்கட்டுகள் ஏறித்தான் கருவறைக்குள் போகனும். நாம் வாசலிலிருந்து உள்ள போகும்போதே உள்ள பிரகாசமான ஒளியில் காலாராம் சீதாதேவி சமேத இலட்சுமணன் துணையுடன் ராமர் கம்பீரமாக காட்சிகொடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார் . 
எல்லா கோவில்களையும்போல் இங்கயும் போட்டோ எடுக்காதீர் என்ற போர்ட் இருக்குதுதான். ஆனா, நமக்குதான் அட்வைஸ் பண்ணா பிடிக்காதே! அதையும்மீறி சிலர் படம்  எடுத்துக்கிட்டுதான் இருந்தாங்க.  உண்மையில் விளக்கொளியில் அழகான அலங்காரத்தில் காலாராம் காட்சிகொடுத்தார் இந்த விக்கிரகம் சுயம்புவாக தோன்றியது எனவும் சொல்லப்படுது. விசேஷ  தினங்களிலும், விடுமுறை தினங்களிலும் இங்க செல்வதை தவிர்க்கலாம் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், நின்று நிதானமா தரிசனம் செய்யமுடியாது.  கூட்டத்திற்குள் போக  பயந்து சிலர் வெளியில் நின்றே கும்பிட்டு போவாங்கன்னு அங்க இருக்கவுங்க சொன்னாங்க. .
அலங்கார ரூபத்தில் ஸ்ரீராமர்,  தம்பி லட்சுமணன், சீதா தேவியுடனும் அழகாக காட்சியளித்தார். நம்மூர்போல் அர்ச்சனை செய்ய புரோகிதர் யாருமில்லை. நம் பாட்டுக்கு போய் கும்பிட்டுக்கவேண்டியதுதான். அதேப்போல் சத்திரபதி சிவாஜியின் அரசியல் ஆலோசகரும் ,ஆன்மீக குருவுமான சுவாமி ராம்தாஸ் ராமபிரானின் தீவிர பக்தராம். அவர் 1620 முதல் 1632வரை நாசிக் வந்து 12 வருடங்கள் தவம் செய்தாராம். அப்பொழுது தினமும் காலை, மாலை  இந்த கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். அவர் இங்கிருக்கும் இராமரின் தரிசனமும் அருளும் கிடைக்கப்பெற்றவர் எனச் சொல்லப்படுது.
உள்ளே சிலர் ஸ்ரீராம்!! ஜெய்ராம்!! ஜெய் ஜெய் ராம்!! எனச் சொல்லி பக்திப்பரவசத்துடன்  சொல்லிக்கிட்டிருந்தாங்க. இந்த தண்டகாருண்ய வனத்தில்தான், தபசு செய்யும் முனிவர்களும், ரிஷிகளும் செய்யும் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த  14000 எண்ணிக்கையிலான ஆட்களைக்கொண்ட  ராட்சசபடைகளையும், அசுரர்களையும் இராமர் வதம் செய்து, அவர்களுக்கு அருள் செய்தார். எல்லா சம்பவங்களும் நடந்த இந்த இடத்தில்தான் கோவில் எழுப்பப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுது. சாமி தரிசனம் முடித்ததும் தஞ்சை பெரியகோவில் மாதிரி  பக்கவாட்டு வாசல் வழியேதான் வெளியே வரனும் .
காலையில் 5:30க்கு நடைதிறந்தது முதல் பூஜை ஆரம்பிக்கப்படும் முடிந்தவுடன் மதியம் 11 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடைபெறும். ஏகாதசி ராமநவமி போன்றவைலாம் இங்க சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும். இங்க போகனும்ன்னு ஆசைப்படுறவங்க இந்த திருக்கோவிலின் பூஜை விவரங்களையும் தெரிஞ்சுகோங்க . காலையில் நடைதிறந்ததும் அதிகாலை 5:30 தொடக்கி  6::30 வரை ஆரத்தி... காலை 7:00 மணியிலிருந்து 8:00 சனி வதன் மற்றும் பூப்பலி.. காலை 8:00 ல இருந்து 10:00 வரை மக்களை ஆரத்தி.. முற்பகல்10:30 ல இருந்து 1:00 மணிவரை மகனாஜ் பூஜை மற்றும் மகா ஆரத்தி பிற்பகல்3:00 மணிக்கு தொடக்கி மாலை 5:00 மணிவரை பஜனை மற்றும் சிறப்பு வழிபாடு.. மாலை7:00 ல் இருந்து இரவு 8:00 வரை மீண்டும் ஆரத்தி . இரவு 8:00 ல இருந்து 10 மணிவரை ராம நாம கீர்த்தனைகள் பஜனைகள் பாடப்படும் .
ஒருவழியாக காலாராம் மந்திர் போயிட்டு நல்ல சாமிதரிசனம் செய்திட்டு வந்தாச்சு. இனி,  ட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடம்.  இதில் யுகம் யுகமாக நிற்கும் ஆலமரத்தின் கீழ்தான் ட்சுமணனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலமரத்தின்கீழ் அதற்கான  குறிப்பும் வச்சிருக்காங்க.  இந்த கோவிலுக்கு செல்லும்போது முதலில் ஒரு கலர் புல் கணபதி வீற்றிருக்கிறார். அவரை தரிசனம் செய்துட்டுதான் படியேறிப்போகனும் இந்த ட்சுமணன் கோவிலுக்கு.....
இங்கேதான் ட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடம். அதுக்கு சாட்சியா யுகம் யுகமாக ஆனாலும் யாதொரு பழுதுமின்றி  நிற்கும் ஆலமரம் இருக்குது. அதனடியில் ட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த சிலையும் வைக்கப்பட்டிருக்கு. இந்த இடத்தில ட்சுமணனது சிலை தனியா வைக்கப்பட்டிருக்கு. அங்க லட்சுமண்சேஷ் நாக் அவதார்ன்னு போர்டு வச்சிருக்காங்க. அதனருகில் சிவபெருமானின் சன்னதியும் தனிச்சன்னதியாக இருக்குது. இங்கிருக்கும் ஆலமரம் யுகங்கள்பல  கண்டதுன்னு  சொல்றாங்க.
விநாயகரை தரிசனம் செய்துவிட்டு இந்த படிகள் வழியாகதான் மேலே ஏறி லட்சுமணன் கோயிலுக்கு போகனும். நாம் உள்ள போனதும் மிக பிரம்மாண்டமான  சிலை ஒன்று காணப்படுது.   அதில் லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த சிற்பம்  இருக்குது.  அதை சுற்றிவந்தால் யுகங்களை கண்ட அந்த புனிதமான அந்த மரம் தென்படுது. .அதையும் தொட்டு வணங்கி நின்றோம்.  இராமனும், லட்சுமணனும்  சீதையும் ஒரு யுகத்திலே இந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தனர், அந்த இடத்திலேதான் நாம இப்ப இருக்கோம்ன்னு நினைக்கும்போதே தேகம் சிலிர்த்தது. இந்த மரத்தின் கீழதான் இளவல் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததாக ஐதீகம் .
அம்மரத்தை  கடந்து சுற்றி வந்து பயபக்தியுடன் வணங்கினோம்.  இங்க லட்சுமணனுக்கு தனி சன்னதி இருக்குது. இங்க லட்சுமணன் சேஷ்நாக் அவதார்ன்னு எழுதி இருக்காங்க.  பக்கத்தில சிவன் சன்னதிஒன்று  இருக்கு இங்கே, எல்லா  கோவிலையுமே மிகவும் சுத்தமாகவும் பரமரிக்கிறாங்க. தூரத்திலிருக்கும் அந்த இராமாயணகாலத்து மரத்தில் ஏதோ எழுத்திருக்கிறாங்க.   வாங்க! போய் பார்க்கலாம் . உனக்குதான் இந்தி தெரியாதேன்னு நீங்க சொல்லலாம். ஆனா, வெங்கட் அண்ணாக்குதான் இந்தி தெரியுமே! அவர் படிச்சு எனக்கு சொல்வாரு. சொல்வீங்கதானேண்ணே!!!???
 ஒருவழியாக கோவிலை தரிசனம் செய்து அடுத்து எங்கே போறோம்ன்னு எங்களை வழிநடத்தி சென்றவரிடம் கேட்டேன். அதற்கு அவர்  கபில கோதாவரி சங்கமத்திற்கு போகிறோம்ன்னு சொன்னாரு. அங்க என்ன விசேஷம்ண்ணான்னு கேட்டதுக்கு,  இந்த இடத்தை தபோவனம்ன்னுசொல்லுவாங்க. இந்தியில்  இதுக்கு தபோவன்ன்னு பேரு.  ராமாயணத்தில் இது  மிக முக்கியமான இடம். பண்டையகாலத்தில் இந்த தபோவனமான தண்டகாரண்ய வனத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தவம்  செய்துவந்திருக்கின்றனர்.  இங்க நாம பார்க்கவேண்டிய இடங்கள்ன்னு ஒரு லிஸ்ட் கொடுத்தார் .
அதில் முக்கியமாக 
Lakshman Sheshnag Avatar .. லக்ஷ்மன் சேஷ்நாக் அவதார் நாம பார்த்தாச்சு.  இனி 
Sitha Haran .. சீதாஹரன்
Lakshmana Rekha .. லக்ஷ்மன்ரேகா
Lambe Hanuman .. லம்பேஹனுமான்
LakshmiNarayan Mandhir .. லக்ஷ்மிநாராயன் மந்திர்
Surpanaka Nak Kati .. சூர்ப்பனகை நாக் கடி
Lakshman Tapsya Mandhir .. லக்ஷ்மன் தபஸ்ய மந்திர்
Kapila Godavari Sangham .. கபில கோதாவரி சங்கமம்
Brahma Vishnu Mahesh Dhinkunt .. பிரம்மா விஷ்ணு மகேஷ் தின்குண்ட்
SitaMatha Agnikunt .. சீதாமாதா அக்னிகுண்ட்
Sriram Parankuti .. ஸ்ரீராம் பரண்குடி
தூரத்தில் கோதாவரி சங்கமத்தில் நதிகளில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. .ஆற்றுகரைகள்ல்லாம் பச்சைபசேலென பார்க்கவே அழகா இருந்துச்சு. தூரத்தில் இராம லட்சுமண மற்றும்  சீதா உருவங்கள் இரும்பினால் ஆன தகடுகளினால் பிரமாண்டமாக மலையின்மேல் வைத்திருந்தனர்.  இனி மீதி இருக்கிற இடங்களை கபில கோதாவரி நதிகளின் சங்கமத்திலிருந்து  அடுத்தவாரம் பார்க்கலாம்....

நன்றியுடன் ,
ராஜி .

Thursday, November 29, 2018

வேண்டியது வேண்டியபடி அருளும் காலபைரவாஷ்டமி


ஆண்டவா! எனக்கு பொறுமையை கொடு.. பொறுமையை கொடு..  எனக்கு பொறுமையை கொடு.. அட சட்டுன்னு பொறுமையா கொடுய்யான்னு வேண்டிக்கும் கதை மாதிரி பொறுமையில்லாத  என்னை போன்றோருக்கு இன்ஸ்டண்டா வரம் கொடுக்கும் கடவுள் எதுன்னு கேட்டா, அது கால பைரவர்.  உயரமென்றால் பயமெனக்கு. சின்னதா ஒரு ஸ்டூல்லகூட ஏறமாட்டேன். அதுமாதிரி இரவில் மாடிப்படிகட்டில் இறங்க பயம். நட்டநடு நிசியில் பேய், பிசாசுக்கு போட்டியா  மொட்டைமாடில குடித்தனம் நடத்தும் ஆளு. ஆனா, இருட்டில் மாடிப்படிக்கட்டில் இறங்க பயம்.  கடைசி நாலு படிக்கட்டில் பின்கழுத்தில் யாரோ கை வச்சு இழுக்குற மாதிரி ஒரு உணர்வு வரும்.  அதேமாதிரி,  நீச்சல் தெரியலைன்னாலும், ஆழமான இடத்தில் இறங்க  பயப்படமாட்டேன். ஆனா, நீருக்கடியில் கண்ணாடி சில்லு இருக்குமோன்னு பயம்.  இந்த மாதிரி விசித்திரமான பயம் பலருக்கு இருக்கும்.   அந்த பயம்லாம் தீர வணங்க வேண்டிய கடவுள் கால பைரவர். அதிலும் எம பயம், எதிரி பயம் தீர இவரை வணங்கலாம்ன்னு  பெரியவங்க சொல்றாங்க. 
கால பைரவர்   சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர்ன்னு சொல்றாங்க. ‘பைரவர்’ன்ற. ‘பீருன்ற சொல்லிலிருந்து இருந்து வந்தது  ‘பீரு’ன்னா ‘பயம் தரக்கூடியவர், எதிரிகளை அஞ்ச வைப்பவர்’ன்னு பொருள்படும்(பீருன்னதும் அந்த பீரு நினைவுக்கு வந்தா நான் பொறுப்பல்ல! இது சாமி பதிவு. அப்புறம் உம்மாச்சி கண்ணை குத்திடுமாக்கும்). பைரவரின் வாகனம் நாய்.  அதனால்தான், நாயை பைரவர்ன்னு சொல்லி கூப்பிடுறாங்க.  எல்லா சிவன் கோவிலிலும் ஈசானிய மூலையில் தெற்கு நோக்கி அருள் புரிபவர். புண்ணிய பூமியான காசி நகரின்  காவல் தெய்வம் இவர்தான்.  சிவன் கோவிலின் காவல்தெய்வமும் இவரே. முன்னலாம், கருவறையை பூட்டி, பைரவர் சன்னிதானத்தில் சாவியை வச்சிட்டு போவாங்களாம். கால மாற்றத்தில் கடவுளைகூட நம்பமுடியாமல் போனது. அதனால், கோவில் மணியையோ அல்லது ஒரு பித்தளை சொம்பையோ மட்டும் காலபைரவர் சன்னிதியில் ஐதீகம் தெரிஞ்ச மிகச்சிலர் வச்சிட்டு போறாங்க.  பெரும்பான்மையான கோவில்களில் அதுகூட கிடையாது :-( 
செவ்வரளி பூக்கள்ன்னா இவருக்கு கொள்ளை பிரியம். இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசுநெய், விளக்கெண்ணெய்களால் தனித்தனி தீபமேற்றி  வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பூசணிக்காயில் விளக்கேற்றினாலும் விரும்பியது கிடைக்கும். தேங்காய், எலுமிச்சை, பாகற்காய்ன்னு விதம் விதமா விளக்கேற்றி வழிப்படுவது வழக்கம். வேண்டுதல் பெருசா இருந்தால் கல்யாண பூசணிக்காயில் விளக்கேற்றனும். ஏன்னா, அப்பதான் ரொம்ப நேரம் தீபம் எறிந்து நம்ம வேண்டுதலை சாமிக்கு நினைவுப்படுத்துமாம். தயிர்சாதம், உளுந்து வடை, பாசிப்பருப்பு பாயாசம் நைவேத்தியம்லாம் இவருடைய ஃபேவரிட் அயிட்டங்கள்.  அஷ்டமி திதி, அதிலும் தேய்பிறை அஷ்டமியில் இவரை வழிபட நல்லது நடக்கும். சுவாதி, ஆயில்யம், மிருகசீரிஷம் நட்சத்திரத்திலும் வழிபடலாம். சனிப்பிரதோஷத்தன்னிக்கு தயிர்சாதம் கொண்டு வழிபட்டால் வழக்குகளில் வெற்றி பெறலாம்.
தை மாத முதல் செவ்வாய் தொடங்கி பைரவருக்கு விரதமிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கும் பைரவர் அஷ்டகம் படித்து வர பயமின்றி வாழலாம். காலபைரவர் நிர்வாண கோலத்தோடு,  நீல நிறத்தோடும், இரு கோரை பற்கள்,  பன்னிரு கைகளுடன்,  நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி, நாய் வாகனத்தின்மீது காட்சி தருபவர்.  சிவனின் அம்சமென்பதால் மூன்று கண்களுண்டு. காலபைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் இருக்கிறார். காலபைரவரின் உடலில் நவக்கிரகங்களும் அடக்கம்.
ஆரம்பத்தில் சிவனைப்போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததினால் பிரம்மன் அகங்காரம் கொண்டான்.ஒருமுறை பரபிரம்மன் யாரென கேள்வி எழும்ப, வேறு யார்?! நானேதான் பரபிரம்மன். ஐந்து தலையுடம் உள்ளேன்.ஆக்கல் தொழிலை செய்கிறேன்.அத்தோடு, பரபிரம்மன் என்ற வார்த்தையிலேயே பிரம்மன் இருக்க என்னைதவிர வேறு யார் பரப்பிரம்மன் யார் என ஆணவத்தோடு கூறினான்.  இதைக்கேட்ட, விஷ்ணு, பரப்பிரம்மன்ன்னா பிறப்பு, இறப்பு இல்லாதவன்னு அர்த்தம். அப்படி பார்த்தால் என் நாபிக்கமலத்திலிருந்து பிறந்தவன் நீ. பிறப்பு இப்படி இருக்க நீ பரபிரம்மனில்லை. பிறப்பு, இறப்பு அற்ற நானே பரபிரம்மன் என விஷ்ணு கூற அங்கே யார் பெரியவன் என வாக்குவாதம் தோன்றியது.  இருவருக்கும் பாடம் புகட்டும்படி ஜோதி வடிவெடுத்து அடிமுடி காண  சொன்னார் சிவன். விஷ்ணு வராக அவதாரமெடுத்து தன் முயற்சி பலிக்காமல் போக சிவனே பரபிரம்மன் என சரணடைந்தார். ஆனால், தன் முயற்சி தோல்வியுற்றும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தாழம்பூவின் சாட்சியோடு பொய்யுரைக்க சிவன் கோவம் கொண்டார்.  அவர் கோவத்திலிருந்து பைரவர் தோன்றினார். எந்த நடுசிரசு ஆணவம் கொள்ள செய்ததோ அந்த சிரசை நகக்கண்ணால் கிள்ளி எறிந்தார்.
பைரவரே!  நான் செய்த தவறுக்கு தண்டனையாக நீங்கள் என் தலையை கிள்ளி எறிந்தீர்கள். அந்த தலையை இனி என்றும் உங்கள் கைகளில் இருக்கட்டும். உங்கள் கையிலிருக்கும் என் தலையை பார்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். ஆணவம் கொண்டு ஆடினால் இதுதான் கதின்னு புரிந்து ஆணவத்தை விட்டொழிக்கட்டுமென பிரம்மன் வேண்ட, அதுப்படியே பிரம்மனும் அருளி, பிரம்மனின் கபாலத்தை கையில் ஏந்திக்கொண்டார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தேவலோகமே பைரவரை கண்டு பயந்தது. சிவபெருமானால் உருவானதால் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுபடுபவராக இருக்கார் பைரவர். பிரம்மனின் தலையை கொய்ததால் பைரவரை பிரம்மதோஷம் பீடித்தது.  அகிலமெங்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அலைந்து திரிந்தார். காசியில் அன்னபூரணி கையால் உணவு வாங்கி உண்டபின்னே அவர் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து காசியின் காவல் தெய்வமானார் பைரவர்.  
பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களால் தன்னை கொல்ல இயலாது என நினைத்த தானாகசூரன் பெண்களால் தனக்கு மரணம் நேரக்கூடாதுன்னு வரம் வாங்கி உலகையே ஆட்டி படைத்து வந்தான். எல்லாரும் சிவன்கிட்ட போய் முறையிட, தனது அம்சமான காளிதேவியை தானாகசூரனை வதம் செய்ய ஆணையிட்டார். சிவனின் கட்டளைப்படியே தானாகாசுரனைக் காளி அழித்ததுடன், கோபம் தீராமலே கோபத்தீயுடனே உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளுடைய கோபத்தீயினால் உலக உயிர்களெல்லாம் வருந்தின. காளியின் கோபத்தீயைப் பருகுவதற்கு மாயையாய் பாலகன் உருக்கொண்டு இடுகாட்டில் குழந்தையாய்க் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையைக் கண்ட காளி அதனைத் தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தீயையும் சேர்த்துப் பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்தது. உலகமும் காளியின்  அழிவிலிருந்து காக்கப்பட்டது. குழந்தையாய் அவதரித்து காளியின் கோபத்தைத் தணித்த குழந்தைதான் ஷேத்திரபாலர். இந்த ஷேத்திரபாலர் சிவனுடைய மூர்த்தங்களில் ஒன்று என்றும் நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அவரே பைரவரின் திருவடிவம் என்று இலிங்க புராணம் சொல்லுது.
சிவனிடமிருந்து இருள் என்னும் பெரும் சக்தியை வரம் பெற்ற மமதையில் தேவர்களையெல்லாம் பெண்ணுரு கொண்டு ஏவல் செய்ய பணித்தான் அந்தகாசூரன். மேலும் உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் சொல்லுது. அசிதாங்க பைரவர்,  ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என எட்டு பைரவர்கள் உண்டு. காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாட்சி ஆலயம், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - அனுமன் காட்டில், கபால பைரவர் - லாட் பஜாரில், சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில், பீஷண பைரவர் - பூத பைரவத்தில், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கமென தரிசிக்கலாம்.

தட்சனின் மகளாய் அவதரித்த பார்வதிதேவி சிவனுக்குரிய அவிர்பாகத்தை கொடுக்காமல் தட்சன் நடத்திய யாகத்தை தடுக்க போய் முடியாமல் அவன் நடத்திய யாகத்தீயில் விழுந்து உயிர்துறந்தாள். அவளின் உடலை கையில் கொண்டு ருத்ர தாண்டவமாடி பித்து பிடித்து போய்  உலகை வலம் வந்திருந்தார் சிவன். சிவனின் நிலையை கண்ட விஷ்ணு, தன் கையிலிருந்த சக்ராயுதத்தை வீசி பார்வதிதேவியின் உடலை துண்டாக்கி பூமியில் விழச்செய்தார். அப்படி பார்வதிதேவியின் உடல்பாகங்கள் விழுந்த இடங்கள் 64 சக்தி பீடங்களாய் மாறின. அந்த பீடங்களை தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவர் என 64 பைரவர்களை உருவாக்கி காவல் தெய்வமாகநியமனம் செய்தார்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் , 27 நட்சத்திரங்களும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், பாதத்தில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் சொல்லுது. அதனால், அந்தந்த ராசிக்காரர்கள் அந்தந்த பாகத்தை பார்த்து வணங்குதல் கூடுதல் பலனை தரும்.

அஷ்டமி தினத்தில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டாங்க. ஏன்னா, அன்றைய சுபக்கிரகங்கள், அஷ்டலட்சுமிகள் தங்கள் பலத்தினை புதிப்பித்துக்கொள்ள பைரவரை நோக்கி விரதமிருப்பாங்க. அதனாலாயே சுபக்காரியங்களை அஷ்டமி திதியில் செய்வதில்லை. அன்றைய தினம் இந்த கடவுளை வணங்குவதைவிட அவங்களுக்குலாம் வரம் கொடுக்கும் பைரவரையே நேரடியா வணங்கி பலன் பெறலாமே! அதனால்தான், இடைத்தரகர்கள்லாம் இல்லாம நேரடியா விவசாயிக்கிட்டயே கொள்முதல் செய்யுற மாதிரி... 


தேய்பிறை அஷ்டமி திதி, அதிலும் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்கியங்கள் கூடிவரும்.இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.


கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியே காலபைரவாஷ்டமின்னு சொல்லப்படுது. அன்றைய தினம், தேங்காயை உடைத்து, குடுமி இருக்கும் பக்கம், அதாவது முக்கண் இருக்கும் தேங்காய்மூடியில் நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய் இதில் எதாவது ஒன்று ஊற்றி, மிளகினை சிறு மூட்டையா கட்டி விளக்கேற்றி, கால பைரவருக்கு சிவப்பு ஆடை சாற்றி, சிவப்பு அரளி அல்லது சிவப்பு தாமரை மலர் மாலை சூட்டி, வெல்லம், பாசிப்பருப்பு பாயாசம் செய்து வடை மாலை அணிவித்து 21 முறை வலம் வந்து வணங்கினால் நினைத்த வரம் கிடைக்கும். 
கால பைரவர் காயத்ரி மந்திரம்...
ஓம் கால காலாய வித்மஹே
 கால தீத்தாய தீமஹீ 
 தந்நோ கால பைரவ பிரசோதயாத்
காலபைரவர் மூல மந்திரம்..
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி பைரவர் சன்னிதியை வலம் வருதலும் சிறப்பு.  இந்த வருடத்தைய காலபைரவாஷ்டமி நாளைய தினம்(30/11/2018). யாருக்காவது உடனே எதாவது காரியம் ஆகனும்ன்னா விரதமிருந்து வரம் வாங்கிக்கோங்கப்பா!

நன்றியுடன், 
ராஜி

Friday, November 23, 2018

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே - திருக்கார்த்திகை தீபம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி, ஆனா திருவண்ணாமலையை நினைச்சாலே முக்தி. அதுக்காக,  திருவண்ணாமலை ஊரை நினைச்சதுமே முக்தி கிடைச்சுடாது. தூய்மையான இறை அன்போடு, அவனை நினைச்சால் முக்தி கிடைக்கும். திருவண்ணாமலையின் சிறப்புகளை ஒரு பதிவில் சொல்லிட முடியாது. திருவண்ணாமலை கோவில் பத்தியும், உள் கிரிவலம், வெளி கிரிவலம், ஆசிரமங்கள், சித்தர் ஆசிரமம், சாமியார்களின் பெயரால் நடக்கும் ஏமாத்து வேலைகள்ன்னு பலவிதமா பதிவு போட்டாச்சுது.  
“செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே”
அப்பர் பெருமானின் இந்த வாக்கியமே திருவண்ணாமலையின் புண்ணியத்தினை எடுத்து சொல்லும். 
ரமண மகரிஷியை காண வந்த சாமியார் ஒருவர், கயிலாய மலைக்கு போகலாம் என ரமணரை அழைத்தார். எதுக்கு அங்க போகனும்ன்னு மகரிஷி கேட்க, ‘திருக்கயிலாய மலை சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான்., பூத கணங்கள், ரிஷிகள் சூழவும் அருள் புரியும் இடமென பதில் சொன்னார் அந்த சாமியார். அதற்கு மகரிஷி, நண்பரே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலையில் இருக்கும் மலையே சிவன்தான். சிவபெருமான் இங்க இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' என பதில் அளித்தார்.  இதை எதுக்கு சொல்றேன்னா, இங்க மலையே சிவனாய் காட்சியளித்து அருள்பாலிக்குது. இது பெரிய சைஸ் சுயம்பு லிங்கம்ன்னு சொன்னால் மிகையாகாது. 
தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் இந்த கார்த்திகை தீபத்திருவிழா ஒரு சிறிய தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுது. இன்று இந்த விழா மிகச்சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுது.    நினைத்தவுடனே முக்தி அளிக்கமளவுக்கு கருணை கொண்டவர்தான் இங்கு குடிக்கொண்டிருக்கும் “அண்ணாமலையார்”. அவர் ஜோதிமயமாய் எழுந்தருளிய நாளான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தையே  “தீபத்திருநாளாய்” கொண்டாடப்படுது.

ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன்ன்ற மமதைக்கொண்டு  சண்டையிட்டனர். தங்கள் ஐயம் தீர்க்க சிவப்பெருமானிடம் வந்து நின்றனர். ”மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதிப்பிழம்பாய் உருவெடுத்து , சிவனின் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கிறீர்களோ , அவர்களே உயர்ந்தவர்” என அசரீரி ஒலித்தது.சிவனின் அடியைக் காண விஷ்ணு வராக அவதாரம் கொண்டு பூமியை துளைத்துச் சென்றார். முடியைக்காண பிரம்மா பறவை உருக்கொண்டு விண்ணில் பறந்தார். யுகம் யுகமாய் பயணித்தும் அடியைக் காண முடியாமல் தன் தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டு சிவனிடம் சரணாகதி அடைந்தார்.

இதற்கிடையில், சிவனின் சடாமுடியிலிருந்து விழுந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த தாழம்பூவிடம் இன்னும் எவ்வளவு தூரம் எனக்கேட்க, இன்னும் பல யுகம் பயணிக்க வேண்டும் எனச் சொன்னது தாழம்பூ. அப்படியெனில் எனக்கொரு உதவி செய். ன் சிவனின் முடியை நான் கண்டதை நீ கண்டதாக சொல் என பூமிக்கு அழைத்து வந்து இருவரும் சிவனிடம் பொய்யுரைத்தனர். அதனால், கோவம்கொண்ட சிவன், இனி தன் பூஜைக்கு தாழம்பூ ஆகாது எனவும், பிரம்மாவுக்கு தனியான சந்நிதி இனி கிடையாது என சாபமிட்டார்.
தங்கள் தவறை உணர்ந்த மூவரும் சிவனிடம், ‘பரம்பொருளே! யாரும் நெருங்க முடியாத அண்ணலாகிய தாங்கள், எங்கள் பொருட்டு இங்கு அக்னிமலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலைதான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால்தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என வேண்டி நின்றனர்.
உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாசலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். இதையடுத்து தேவ சிற்பியான தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங் களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.  அதனால்தான், மலையே லிங்கமாய் உருவகப்படுத்தி மக்கள் கிரிவலம் வருகிறார்கள் என புராணங்கள் சொல்கிறது.  அண்ணுதல்ன்னா நெருங்குதல்ன்னு பொருள். அண்ணா என்றால் ”நெருங்கவே முடியாத” எனப்பொருள். பிரம்மா, விஷ்ணு இருவராலும் அடி, முடியை நெருங்கவே முடியாத மலையானதால் ”அண்ணாமலை” என அழைக்கப்படுது.

திருவண்ணாமலை ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு, மலையை வலம் செய்வது சிறப்பானதாகும். திருவண்ணாமலையை கிரிவலம் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள், திருவண்ணாமலை ஆலயத்தின் தலமரமான மகிழமரத்தையும், அதனுடன் திருவண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மன் எழுந்தருளி இருக்கும் கருவறையையும் இணைத்து ஏழு முறை ஆலய வலம் வந்தால், கிரிவலம் வந்த பலனை அடையலாம். 

சிவப்பெருமானின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாய் மூட பூலோகம் முழுக்க இருள் பரவியது. அதனால கோவம் கொண்ட சிவன், தன்னை நீங்கி பூலோகம் சென்று தன்னை வழிப்பட்டு வரவேண்டுமென சாபமிட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்து மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்படுகிறாள். அங்கிருந்து திருவண்ணாமலை வந்து, கௌதம புத்தரின் வழிக்காட்டுதல்படி சிவபூஜை செய்து, “மடக்கு” என்றழைக்கப்படும் மண் பாத்திரத்தில் விளக்கேற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிப்படுகிறார். அம்மையாரின் பக்திக்கும், தவத்துக்கும் மனமிரங்கி ஈசானலிங்கத்தை நெருங்கும்போது இறைவன் ரிஷப வாகனத்தில் வந்து அம்மையை இடப்பாகமாக ஏற்றுக்கொள்கிறார்.

உலக மக்களையெல்லாம் காப்பவளாயிற்றே அன்னை! தன் மக்களுக்காக  “தாங்கள் எனக்கு மட்டும் காட்சியளித்தால் போதாது. அனைவருக்கும்  காட்சியளிக்க வேண்டுமென வரம் கேட்கின்றாள். ஆண்டுக்கு ஒருநாள் தான் இங்கு ஜோதி சொரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தர்சிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும் . அந்த நாளில் தன்னை தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியடையும் என அருள்கின்றார். இறைவன் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் நாளே கார்த்திக மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் மகாஜோதியாகும்.

திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைப்பெறும் இத்தீபத்திருநாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  அன்று அதிகாலை சுயம்புலிங்கமான அருணாச்சலேஸ்வரருக்கு “பரணி தீபம்” ஏற்றப்படுகிறது. மாலையில்  ஒருசில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிப்பார். மலைமீது தீபமேற்றிய பிறகே கோவிலில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் முழுவதும் வீடு, கோவில்களில் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அக்னியின் அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்துக்குண்டான பலனை அளிக்கவல்லது திருவிளக்கேற்றி வழிப்படுவது.  தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி, பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது விளக்கேற்றி வழிப்படலாம்.
அசுரனை அழிக்க  அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 
புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ்லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனால, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து பஞ்சு திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வளர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கேத்துற பழக்கம் வந்துச்சாம்!!.

சிறப்புமிக்க இந்நாளில் மட்டுமல்லாமல், தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர். தீபத்திலிருந்து வெளிப்படும் சுடரில் செல்வ வளம் தரும் அன்னை மகாலட்சுமியும், அதன் ஒளியில் அறிவுச்சுடர் பரப்பும் அன்னை சரஸ்வதியும், சுடரில் இருந்து வெளிப்படும் வெப்பத்தில் வீரத்தை தந்து ஆரோக்கியம் தரும் அன்னை பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகவேதான் ஒரு வீடு எல்லா நலன்களும் பெற தினமும் விளக்கேற்றி வைப்பது சிறந்தது என பெரியவங்க சொல்றாங்க.
16 வகை தீபங்கள்
 தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் இருக்கு.

தீபத்திற்கான எண்ணெய்கள்...
எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, பசு நெய்,  சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்.  ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதேப்போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. இல்லத்தில் இறைவனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப் ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் கடனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.
இனி தீபம் ஏற்றும் முறை...
வீட்டின் முன்கதவை திறந்து பின்புறக்கதவை  சாத்தியபிறகே விளக்கேத்தனும். பின்கதவு இல்லாதவர்கள் ஜன்னலையவது சார்த்திய பிறகே விளக்கேற்றனும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 

விளக்கேற்றுவதன் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம்.  அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றது.
இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் பார்க்கலாம்..., 
விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய

ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலைதிருமேனி

திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைய் முழ

வதிரும் அண்ணாமலை தொழுவார் 

வினை வழுவாவண்ணமறுமே.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

நன்றியுடன்,
ராஜி.