Wednesday, May 31, 2017

அம்மா பகவான் ஆசிரமம் வரதையாபாளம் - மௌனச்சாட்சிகள்

அப்பப்ப கடவுள் இருக்கா?! இல்லியான்னு சஞ்சலம் மனசுல எழுந்தாலும் சாமியார், ஆசிரமம்ன்னாலே அறவே  பிடிக்காது  எனக்கு. எனக்குதான் சாமியார்களை பிடிக்காதே தவிர அதுக்காக மத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுக்கனுமேன்னு அவங்க விருப்பத்திற்கிணங்க காளகஸ்தி கோவிலுக்கு போய்வரும்போது அம்மா பகவான் ஆசிரமத்துக்கு போய் வந்தோம். எல்லா சாமியார்கள், அவர்களின்  ஆசிரமங்களைப்போலவே இந்த ஆசிரமமும் சர்ச்சைக்குள்ளானதுதான். ஆனாலும், ஆசிரமம் பார்க்க கொள்ளை அழகு. வெள்ளை வெளேர்ன்னு பரந்து விரிந்த அந்த கால அரண்மனைக்கு ஒப்பான இடம். பக்தியோடு போகலைன்னாலும் கட்டிட வேலைப்பாட்டையும்,  அவ்வளவு பெரிய இடத்தை  சுத்தமா பராமரிக்குறதை பார்க்குறதுக்காகவது போகலாம். வாய்ப்பு கிடைச்சா  போய் வாங்க.

முன்னயே ஒருமுறை இந்த ஆசிரமத்துக்கு போய் இருந்தேன். அப்பதான் இந்த இடம் சர்ச்சைல சிக்கி இருந்துச்சு.  இப்ப இருக்குற மாதிரியான பெரிய பெரிய மதில்சுவர் இல்ல. இப்ப அதெல்லாம் கட்டி எங்களை சுத்தல்ல விட்டுட்டாங்க. கால்முட்டி வலியெடுத்திடுச்சு. இது சுத்தி சுத்தி வந்ததாலயா இல்ல ராஜிக்கு வயசாகிட்டுதான்னு தெரில.அப்பாவால ரொம்ப தூரம் நடக்க முடியாது அதனால அப்பா நான் கார்லயே இருந்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. என் இம்சை தாங்க முடியாதுன்னு நினைச்சதாலோ என்னமோ அம்மாவும் கழண்டுக்கிட்டாங்க. இவங்க வந்தா போட்டோலாம் எடுக்க முடியாதுன்னு நானும் அமைதியா விட்டுட்டேன்.  

சாமியார் ஆசிரமம்ங்குறதை நிரூபிக்குற மாதிரி கேட்டுலயே நுழைவுக்கட்டணமா 50ரூபா புடிங்கிக்கிட்டாங்க.  சரி பதிவு தேத்த உதவும்ன்னு மனசை தேத்திக்கிட்டு உள்ள போனா, செல்போன், கேமராவுக்கு அனுமதி இல்லைன்னு பதிவு ஆசைல ஒரு லோடு மண் அள்ளி போட்டுட்டாங்க.  சரி, முன்ன வந்தபோது எடுத்த படத்தை வச்சு பதிவு தேத்திக்கலாம் இல்லன்னாலும் கூகுளாண்டவர்க்கிட்ட கேட்டு வாங்கிக்கலாம்ன்ற ஐடியாவோடு  ஆசிரம அமைப்பு, அங்கு நடக்குறதுலாம் பதிவுக்காக தெரிஞ்சுக்கலாம்ன்னு உள்ள போனேன்.


இராஜபாளையத்தில் செல்லப்பா என்று ஒரு ஆன்மீகவாதி உண்டு. நம்முடைய விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவில்  இருக்கிற கிராம மக்கள் அவரை செவிட்டு சாமியார் என அழைப்பார்கள். அவருக்கென்று ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அவர் பெயரில் தாம்பரத்தில் கூட டிரஸ்ட் வைத்திருக்கிறார்கள். அவரை மிஸ்டிக் செல்வம் என்றும் அழைப்பார்கள். 1986 காலங்களில்  அவர் எழுதிய ஆன்மீக திறவுக்கோல் என்னும் நூலில் அவர் பார்த்தவரை கல்கி பகவான்கள் இருந்ததாக கூறியிருக்கிறார். அப்ப யார் ஒரிஜினல் கல்கி பகவான் என தெரியவில்லைன்னு சொல்லி இருக்கார்.
அதேப்போல, இப்பொழுதும் சென்னை உட்பட பல இடத்தில் கல்கின்ற பேர்ல குறி சொல்லுறதா டிவி, பிட் நோட்டீஸ்ல பார்க்குறேன். அட நாராயணா! ஆக மொத்தம் நீ எத்தனை அவதாரம் தான் எடுத்ததே??! விஷ்ணுதான் பல அவதாரங்கள் எடுத்தான்னா நீயும் அவரைப்போலவே பல அவதாரம் எடுத்தியா?! எது போலி எது அசல்ன்னு உனக்கே வெளிச்சம்ன்னு ஜிந்திச்சுக்கிட்டே இருந்ததுல அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னே தெரில. சுயநினைவுக்கு வந்தப்பின் பார்த்தால் நான் வெளிநாட்டில் இருக்கேன்.   என்னை சுத்தி வெள்ளைக்காரங்க போவதும் வருவதுமாய் இருக்காங்க. சனியனே! முழிச்சுக்கிட்டே தூங்குறியான்னு என்னவர் குரல் கேட்டதும்தான் இவருக்கு பாஸ்போர்ட்லாம் கிடையாதே! இவரு எப்படி வெளிநாட்டுக்கு வரமுடியும்ன்னு நிகழ் உலகத்துக்கு வந்தா.....  கல்கி பகவான் ஆசிரமத்திலிருக்கேன். 

சூதனமா இருக்கும் என்னையே!! வெளிநாட்டுல இருக்குறதா நம்புமளவுக்கு வெளிநாட்டவர் கூட்டம். நம்முடைய சனாதன தர்மம் வெளிநாடுகளிலும் பரவுது போல. இங்கே பலவாறாக மதம் மாற்றுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் உணர்ந்து வருகின்றனர் என்றால் இது கண்டிப்பா பாராட்டப்படவேண்டிய விஷயம்.இப்படியே உக்காந்திருந்தா வேலைக்காகாதுன்னு   வரிசையில் நடக்க தொடங்கினேன். வழியெங்கும் ஒலிபெருக்கியில் மந்திரங்களை ஒலிக்கவிட்டு இருந்தனர்.  வண்ண சீருடை அணிந்த சேவர்த்திகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இருந்தனர்..நடந்துக்கிட்டே இந்த அம்மா பகவான் யார்ன்னு அவர் கதையை தெரிஞ்சுக்கலாம் வாங்க...
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் மார்ச் 7,1949 ஆம் வருடம் பிறந்தவர்தான் விஜயகுமார் நாயுடு. ஆரம்பத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். பின்னர் தானே ஒருகுருகுலம் ஒன்றை ஆந்திராவில் இருக்கும் குப்பத்தின் அருகில் தொடங்கினார் என சொல்லப்படுகிறது. இவரை பற்றி தேடித்தேடி படித்தால் ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு தகவல் கிடைக்குது. எல்லாமே முரண்பட்ட தகவல்கள்.    சோ கும்முறவங்க கும்மலாம். ஏன்னா நாம போற இடம் அத்தைனையும் புகையும். ராசி அப்பிடி...


ஆசிரமத்துல இருக்கோமா இல்ல ஷாப்பிங்க் மால்ல இருக்கோமான்ற சந்தேகத்தை உண்டு பண்ணுது இங்கிருக்கும் கடைகள். துணிக்கடைங்க, பூஜை பொருட்கள், அம்மா பகவான் படம் போட்ட கீச்செயின், பேனா, படங்கள் விற்கும் கடைகள், கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகள்ன்னு ஷாப்பிங்க் மால் மாதிரி ஜொலிக்குது. இதுலாம் அம்மா பகவான் ஆசிர்வதித்து தந்த பொருட்கள்ன்னு சொல்லி செமையா கல்லா கட்டுறாங்க. நம்ம ஆட்களைவிட வெளிநாட்டுக்காரங்க இதையெல்லாம் அள்ளிக்கிட்டு போறாங்க. ஆண், பெண்ன்னு தனித்தனி வரிசையில அனுப்புறாங்க.

மெட்டல் டிடெக்ட்டர்லாம் வச்சு நம்மளை செக் பண்றாங்கன்னு பெருமிதப்படுறதா இல்ல அந்தளவுக்கு நான் வொர்த் இல்லன்னு வடிவேலு மாதிரி சொல்லலாமான்னு ஒரு சிந்தனை. இதையெல்லாம் கடந்து முதல் நிலைக்கு வந்துட்டோம். இது சில வருசங்களுக்கு எடுத்த படமிது. இப்ப நிறைய மாற்றங்கள் இங்கு வந்திடுச்சு.

இதுதான் முதல்தளம். இந்த வழியாகத்தான் பிரதான தியான மண்டபத்திற்குள் செல்லவேண்டும். மிகவும் பிரம்மாண்டமான இந்த மண்டபத்துல தூண்கள் இல்லையென்பது கட்டட சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்ப இங்க  அலங்கார சேர் ஒன்னு இருக்கு. இங்கிருந்துதான் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அதேசமயம், பெரிய திரையில் அவர்களது தரிசனமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நானும் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு அங்கே நடப்பவற்றை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு அரங்கமும் சினிமா செட்டிங்க் மாதிரி ரொம்ம்ம்ம்ம்ப பிரம்மாண்டம்.

அந்த அரங்கின் நுழைவாயிலின் மேலலாம் தங்களின் பிரத்யேக சின்னங்களை  வரைஞ்சிருக்காங்க.  இப்பலாம் நீங்கள்  இந்த இடத்தில நின்று பொறுமையாக பார்க்கமுடியாது. ஏன்னா இதுவழியாகத்தான் எல்லா இடத்துக்கும் போகனும். யாரோ ஒருத்தங்க போட்டோ எடுக்க முயற்சி செஞ்சார். அங்கிருந்த சேவார்த்தி ஓடிவந்து இங்குலாம் படமெடுக்கக்கூடாதுன்னு சொல்லி போனை வாங்கி வச்சுக்கிட்டார். அப்படின்னா ஏன் இந்த மண்டபம்ன்னு ஒரு பக்தர் முணுமுணுத்தார். மனிதர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கட்டப்பட்டது எனவும் இந்த இடத்தில பழங்காலத்தில் பல ரிஷிகள் தவம் செய்ததாகவும், அதுலாம் உங்களுக்கு சொன்னா புரியாது அப்படின்னு  பதில் சொல்லிக்கிட்டிருந்தார் இப்படிதான் சொன்னா புரியாது ,புரியாதுன்னு  சொல்லி சொல்லியே பல நல்ல விசயங்கள் வெளிய வராம போய்டுச்சுன்னு ஓங்கி சொல்லனும்போல இருந்ததை எப்பயும் போல வார்த்தைகளை முழுங்கிட்டேன்.
அப்படியே நடந்து முதல் தளத்தின் மைய பகுதிக்கு வந்துவிட்டேன் .இங்கிருந்து பார்க்க தூரத்தில் ஒரு நீர்நிலை அழகாக இயற்கை அழகுடன் அழகாக தெரிகின்றது .இந்த இடம் முழுக்க முழுக்க வெள்ளை மார்பிள் கொண்டு அழகாக வடிக்கப்பட்ட ஜன்னல்கள், தூண்கள்ன்னு எல்லாமே செம அழகு தூண்களே இல்லாத 22,500 ச.மீ பரப்பளவுள்ள தியான மண்டபம் ஆசியாவிலேயே இங்குதான் உள்ளது. இது நவீன கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு.  இங்கிருக்கும் தூண்கள் ஒவ்வொன்றும் 50மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த ஆசிரமம் மூன்று நிலைகளை கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் பெரிய தியான மண்டபங்களை கொண்டது. ஒரே சமயத்தில் ஒவ்வொரு மண்டபத்திலும்  8000 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து  தியானம் பண்ண முடியும்.

தரை மற்றும் முதல்தலை  தியான மண்டபம் 6700 மீ   ஆகும். அதற்கு மேல் இருக்கும் மண்டபம் 2500 மீ  பரப்பளவு கொண்டது . இதன் உயரம் 35.85 மீ. இந்த ஆஸ்ரமம்  130 மீ x 106 மீ உயர மேடையில் கட்டப்பட்டு 4  பக்கங்களும் நீரினால் சூழப்பட்டு இருக்கிற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.அதாவது ஒரு நீரோடை போல் அமைத்து உள்ளனர்  இந்த அமைப்பு வளிமண்டலத்தை நோக்கி இருப்பதாக அமைக்கப்பட்டு இருப்பது மனித உடலில் உள்ள பஞ்சபூத சக்திகளை பெருக்கி மனஒருநிலைப்பாட்டையும் தியான  எண்ணங்களை பெருக்கவும்  உதவுகின்றது என சொல்லப்படுது .

நடு தளத்தில் இருக்கும் மண்டபம்  அர்த்தகர்மா  ஹால் என அழைக்கப்படுது. இங்கு தியானிப்பதன் மூலம் ஒருவரது நியாயமான ஆசைகள் நிறைவேறும் வகையில் வடிவமைக்கப்பட்டதுன்னு சொல்லப்படுது. அதற்கு மேலே தூண்களே இல்லாத மண்டபம் தர்ம மோட்ஷம் என்று அழைக்கப்படுகிறது .இங்குதான் 36 இன்ச் விட்டமுள்ள தங்க உருண்டை வைக்கப்பட்டுள்ளது. இந்த உருண்டையின் முன்பு அவரவர் கடவுளையோ குலதெய்வத்தையோ பிராத்தனை செய்யனும்ன்னு  சொல்லப்படுது. நானும் அங்கே  எனது குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டேன்,.நாம என்னிக்கு அறிவு சொல்லுறதை கேட்டிருக்கோம்?!

இந்த தங்க உருண்டை  பாண்டிச்சேரி ஆரோவில் கோல்டன் க்ளோப் வடிவமைத்த பிரபாத் போடர் என்பவரால் வடிமைக்கப்பட்டது. தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். நாமும் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த கட்டிடக்கலையின் அமைப்பை வியந்து பார்த்து வீட்டுக்கு திரும்பினோம். நம்பிக்கை என்பது அவரவரது சொந்த விருப்பம். நமக்கு அதில்  கருத்து  சொல்ல உரிமை இல்லை. எப்பொழுது அது நம்மை அல்லது நம் சமுதாயத்தை பாதிக்கிறதோ  அப்ப நிச்சயம் நம்முடைய கருத்துக்களை நாம் பதிவு செய்யவேண்டும் .

ஒரு வழியாக எல்லா இடத்தையும் சுத்திபார்த்துட்டு  அங்கிருந்து வெளியே வந்தோம்.  சூப்பரான கேன்டீன் இங்க இருக்கு. நமக்கு இதானே முக்கியம். இதுமட்டுமில்லாம  சுத்தமான கழிப்பறை, குளியல் வசதியுமிருக்கு. அதேப்போல் வாகன நிறுத்தும் வசதி, ஓய்வெடுக்க நல்ல புல்தரையும் இருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய இடம்.  ஆன்மீகம், சர்ச்சைக்குள்ளான இடம்ங்குறதை தாண்டி பார்த்து ரசிக்க வேண்டிய இடம்ங்குறதால போகலாம். கட்டிடங்களின் மேல் காதல் கொண்டவங்க அவசியம் பார்க்கனும்.

இந்த ஆஸ்ரமத்தின் வாசலில் இருந்தே சென்னைக்கு நேரடியாக பஸ் வசதிகள் இருக்கு. அதுக்கடுத்து அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து தடா வந்துவிட்டால் தடா  -சென்னை வழித்தடத்தில் நிறைய பஸ் வசதிகள் இருக்கு.பக்கத்தில் தடா ரயில் நிலையமும் இருக்கு இங்கிருந்து எலக்ட்ரிக் ட்ரைன் வசதியும் இருக்கு .அதைத்தவிர  தமிழ்நாடு அரசு போக்குவரத்து பஸ்களும் இருக்கு. திருப்பதி, காளகஸ்தி செல்லும் வழித்தடங்களில் இருக்கும் பஸ்கள் தடா மூலமும் சென்னைக்கு வரலாம். இதன் அருகில் ஒரு அருவி இருக்கிறது இங்கே தண்ணீர் எப்பொழுதும் வருவதில்லை. இதற்கு உப்பலமடுகு நீர்வீழ்ச்சின்னு பெயர். வாங்க,  அதையும் ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாம் .
File:Tada forest map.jpeg

இந்த அருவிக்கு தடா, கம்பகம்,  உப்பலமடுகுன்னு பல பேரு. இந்த இடம் புச்சிநாயுடு கன்ரிகா மற்றும் வரதபாளையம் என்று சொல்லப்படுகிற வரதையாபாளம் மண்டலத்தின் கீழ்வரும் ஸ்ரீசிட்டிக்கு வடக்கே இருக்கு. இது சித்தூர் மாவட்டத்துல சேர்ந்தது. சென்னையிலிருந்து இது 80 கிமீ தொலைவில் இருக்கு. அதேச்சமயம் காளகஸ்தில இருந்து போறவங்க அங்கிருந்து 35 கிமீ தொலைவில் பயணம் செய்தா இந்த அருவிக்கு போய்டலாம். இந்த நீர்வீழ்ச்சி காம்பகம் காடுன்னு சொல்லப்படுகிற  சித்துலியா கோனா என்ற காட்டுப்பகுதியில் உள்ளது. இங்கே ஒரு சிறிய சிவன் கோவிலும் உள்ளது மகா சிவராத்திரி அன்று நிறையபேர் வருவாங்க.  இது ஒரு சின்ன அருவியே. மத்தபடி  இங்கே பசுமையான நீர்வீழ்ச்சி, சின்ன சின்ன பற்றைகள் அதில் நெளிந்தோடும் சின்ன நீரோடைகள் என இந்த இடம் மலையேற்றம் மற்றும் விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடமாகும். முக்கியமான விஷயம் கவனிக்க இங்கேயும் குடிமக்கள் தொல்லை இருக்கு அதுனால கூட்டமாக செல்வது நலம்.

இந்த அருவிக்கு செல்ல வரதையாபாளம் கிராமத்தின் வழியாக சுமார் 12 கிமீ தொலைவு போகனும். அதில் 7 கிமீ அளவுதான் ரோடு இருக்கு. மத்தபடி சாலை எல்லாம் சரியான வசதியில் இல்ல. மக்கள் கூட்டம் கூட சிவராத்திரி அன்று தான் அதிகமாக காணப்படும். மத்தபடி குடிமக்களும், லவ்வர்சும்தான் அதிகமாக போவாங்கன்னு சொல்றாங்க. அப்படி தனியா போகும் லவ்வர்சை மிரட்டி தங்களுக்கு ‘தேவையானதை’ பறிச்சுக்குவாங்க. அதனால, குடும்பத்தோடு தக்க துணையோடு போவது நல்லது.  பக்கத்தில எந்தக்கடைகளும் கிடையாது. ஏதாவது வாங்கணும்ன்னா காள்கஸ்தி, வரதபாளையம், தடாவிலிருந்து  தேவையானவற்றை வாங்கி செல்வது நலம். 3 மணி ஆகிவிட்டது என்றால் கட்டாயம் இந்த அருவி இல்லை காட்டுப்பகுதியில் இருந்து கிளம்பிவிடுங்கள். அதுக்கு மேல இருந்தா வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்ன்னு அங்கிருக்கும் போலீஸ்க்கார் எச்சரிக்குறார். 

இங்கே செல்வதற்கு மலையேறுன பயிற்சி இருந்தா ரொம்ப நல்லது. கற்களும், பாறைகளும் கால்களை பதம் பார்க்கலாம். மேலும் இங்கே பலமுறை சென்றவர்களுடன் செல்வது நலம்.  ஏன்னா இங்கே எந்த வழிகாட்டி குறியீடுகளும் இல்ல. வழிமாறி செல்லாமல் இருக்க இது அவசியம். உடல்நல குறைவு உள்ளவர்களை இந்த பாறைகளின் மேல் மூச்சுவாங்க ஏற்றி இறக்கி பயணம் செய்யவைப்பது நல்லதல்ல . போகும்போது க்ளுக்கோஸ்,பிஸ்கெட், பர்பி, எள்ளுருண்டை மாதிரியான உடலுக்கு சக்தி தரும் நொறுக்ஸை கொண்டு போகலாம். மறக்காம கொண்டு போற பிளாஸ்டிக் கவரை பைல போட்டு எடுத்து வந்து மலை அடியில் இருக்கும் குப்பை தொட்டில போடுங்க. 
File:Tada falls area.jpeg
நாங்கள் சென்றிருக்கும்போது சென்னையில் இருந்து சிலர் தங்கள் தோழிகளுடன் குரூப்பாக வந்திருந்தனர்.அவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தடா ரயில் நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் வந்ததாக கூறினர் . இங்கே 4 கிமீ கடினமான கற்பாறைகள் ஒருக்கும். அதில் கவனமாக செல்லவேண்டும். வழியில் இருக்கும் நீரோடைகள் பச்சைபசேலென காடுகள் என பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது .
Image result for tada falls images

நாங்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்றோம் .சுமார் 150 மீட்டர் மலையேற்றத்திற்கு பிறகு சிறு ஓடையொன்று வந்தது.  அதையும் கடந்து மீண்டும் ஒரு மலைப்பாதையில் சென்றோம். இதற்கே ஒன்றரை மணிநேரத்துக்கு மேலாக ஆகிவிட்டது . அங்கே  இரு சிவன் கோவில் இருந்தது. எங்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்கள் கூறினார்கள். அப்படி ஒன்றரை மணிநேரத்திற்குள் இந்த சிவன் கோவில் வரவில்லை என்றால் நாம் வேறு பாதை வழியாக வந்திருக்கிறோம் என்று அர்த்தம். அப்படி வழிமாறும் பட்சத்தில்  அருகிலுள்ள ஓடையை தேடி அதன் கரையோரமே மலையேறுவது நல்லது.  இந்த கோவிலுக்கு பிறகு  பாதை மிகவும் கடினமானதாக இருக்கும்.  சில நேரங்களில் 10 அடி பாறைகளையும் பிடித்து  ஏறவேண்டிவரும். மலையேற்றத்தின் முடிவில் இரண்டு நீர்வீழ்ச்சிகளை காணலாம். கோடைக்காலங்களில் ஒன்றில் மட்டுமே நீர் இருக்கும்.  ஆனால் இப்பொழுது அங்கு எந்த அருவியில் தண்ணீர் இல்லை .

ஆனால் சிறு சிறு நீரோடைகள் ஆங்காங்கே ஓடிக்கொண்டு இருக்கின்றன. சுற்றிலும் இயற்கை வளம்லாம் கண்டுகளித்து கரடு முரடான பாறையின் மேல் நடந்து சென்றோம். இங்கே வருபவர்களில் 90%தமிழர்களே ஏன்னா அவர்கள் போதையில் பேசிய வார்த்தைங்கள் கேட்கமுடியவில்லை மலையெங்கும் எதிரொலிக்கிறது.சொற்பமான ஆந்திராக்காரர்கள் மற்றும் வாகனங்களை பார்க்கமுடிந்தது. மீதி எல்லாம் தமிழ்நாட்டு வண்டிகளும் பைக்குகளும்தான்.  அங்கே வந்த சில தமிழ் இளைஞர்கள் அருவில் தண்ணி இல்லை மேலும் அங்கே இப்பொழுது செல்லவேண்டாம் என்று நல்லுள்ளதோடு சொன்னதால் எங்கள் பயணத்தை அருகில் இருந்த சிறிய நீரோடையில் கை கால்கழுவி இறைவனை தியானித்து முடித்துக்கொண்டோம்.
தமிழகத்து சிவனடியார்களுக்கு  எப்படி சதுரகிரி, வெள்ளியங்கிரி, பர்வதமலை  புண்ணியஸ்தலமோ அதுமாதிரி  ஆந்திர எல்லை மாநில எல்லை மக்களுக்கு இந்த இடம். இந்த இடத்துக்கு சின்ன வயசுல ஒருமுறை சென்றிருக்கிறேன். கனவு கண்டது மாதிரி இருக்கு. ஆண் பிள்ளை வரம் வேண்டி என் அப்பா அம்மா ஒருநாள் பௌர்ணமி இரவை இந்த காட்டுல இருக்கும் சிவனை நோக்கி விரதமிருந்து வேண்டிக்கிட்டாங்க. அந்த பௌர்ணமி இரவு முழுக்க இங்குதான் இருந்தோம். அங்கயே சமைச்சு சாப்பிட்டு தங்கினோம். அப்பா, அவங்க நண்பர்கள், அவங்க குடும்பம்ன்னு மகிழ்ச்சியா இருந்தது புகைமூட்டம் போல நினைவுக்கு வந்தது.  இதுக்கு பெரிய கோண மலைன்னு பேரு. இதே சித்தூர் மாவட்டத்துல இன்னொரு கோணை மலை இருக்கு. அதுக்கு சின்ன கோணை மலைன்னு சொல்வாங்க. அங்கயும் சின்னதா ஒரு சிவன் கோவில் உண்டு.  அங்கயும் குடிமக்கள் நடமாட்டம் உண்டு. அங்கு இப்படிலாம் கஷ்டப்பட்டு நடக்கவேண்டாம். அருவிக்கிட்டயே நம்ம வாகனத்துல போகலாம். பஜ்ஜி, போண்டா, கூல்ட்ரிங்க்ஸ்ன்னு விக்கும் சின்ன சின்ன கடைகள் சின்ன கோணைமலைல இருக்கு.

இந்த மாதிரியான இடங்களுக்கு போகும்போது நாம் கொண்டு போகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை அங்கங்க வீசி எறியாம வனப்பகுதிக்கு கீழ கொண்டுவந்து குப்பைத்தொட்டில போடுற பழக்கத்தை வச்சுக்கனும். ஏன்னா நம்மை போலவே மத்த இனங்களும் உயிர் பிழைக்கனுமே. நம்ம வீட்டுக்கு வந்து யாராவது விஷத்தை கண்ட இடத்துல போட்டு போனா நம்ம கதி?! குடிமக்களும் சரக்கடிச்ச பாட்டில்களை கண்ட இடத்துல உடைக்காம இருக்குறது நலம். இது மனுஷங்க காலை மட்டுமல்ல காட்டு விலங்கு காலையும் பதம் பார்க்கும். இந்த காயம் சிலநேரம் உயிருக்கே ஆபத்தை உண்டு பண்ணும்..  

அதனால, வாழ்வோம்.... அடுத்த உயிரையும் வாழவிடுவோம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461767
 நன்றியுடன்     
ராஜி . 

Tuesday, May 30, 2017

கடவுளை நம்ம வீட்டுக்கே வரவைக்கும் கோவில் புளி சாதம் - கிச்சன் கார்னர்




உணவில் புளிப்பு சுவை கூட்ட தக்காளி, எலுமிச்சைன்னு பயன்படுத்தினாலும் புளியம்பழத்தைதான் அதிகம் பயன்படுத்துறோம். அதிலும் தென்னிந்திய சமையலில் புளியம்பழம் அதிகம் இடம்பெறுது. இந்த புளியம்பழம் பேபேசி இனத்து முடிச்சு மரமாகும்.    நம்மூர்ல தேவை அதிகமிருக்குறதால அதிகமா பயிரிடப்படுதா இல்ல அதிகம் பயிரிடப்படுறதால நாம அதிகமா பயன்படுத்துறோமான்னு தெரில. தமிழகத்துல பரவலா இது விளையுது. அதிகம் நீரும், கவனமும் தேவை இல்லை. 

புளிய மரத்தின் கீழ் எந்த தாவரமும் வளராது. இரவில் புளிய மரத்தின்கீழ் உறங்கக்கூடாது. ஆடு, மாடுகளைக்கூட கிராமங்களில் கட்ட மாட்டாங்க. ஏன்னா, புளியமரம் தன் சுற்றுப்புறத்தை சூடாக்கும் தன்மைக்கொண்டது.   பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய்ன்னு சொல்வாங்க. புளி அதிகம் விளைந்தால் அந்த வருடம் மாங்காய் விளைச்சல் குறைச்சலா இருக்கும். புளி விளைச்சல் குறைவா இருந்தா மாங்காய் விளைச்சல் அதிகமாய் இருக்கும்.  புளி அதிகம் விளைஞ்சா அந்த வருசம் சுபிட்ஷமா இருக்கும். 


ஒன்னா இருந்தாலும் ஒட்டாத உறவை புளியம்பழமும் ஓடும்... போலன்னு உதாரணம் சொல்வாங்க.  என்னதான் பிசுபிசுப்பா இருந்தாலும் புளி அதன் ஓட்டோடு ஒட்டுவதில்லை, அதுப்போல என்னதான் அன்பா இருந்தாலும் சில உறவுகள் நம்மோடு ஒட்டாமயே இருக்கும். 


புளியிலிருக்கும் சத்துகள்..
இதில் அதிகளவு இரும்பு சத்தும்,  கால்சியம், வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்,   தாது உப்புகளும் இருக்கு.  புளியங்கொட்டையில் மாவுச்சத்தும், ஆல்புமினும், கொழுப்பு சத்தும் உண்டு.  புளியங்கொட்டையை வறுத்து தோல் நீக்கி உப்பு தண்ணில ஊற வெச்சு சாப்பிடுவோம். சின்ன வயசு ஸ்னாக்ஸ்ல இதும் ஒன்னு.


புளிய இலையின் பயன்கள்...
இது வயிற்றை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியா செயல்படுது. புளிய இலை சித்த மருத்துவத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுது. இரைப்பை பிரச்சனை, செரிமான பிரச்சனைக்கும் இதயத்துடிப்பை பாதுகாக்கவும் இவ்விலை பயன்படுது. புளிய இலையை தேனீராக்கி குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம்.  புளிய இலைகளை காஃபி கொட்டையோடு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும். இந்த காபி குழந்தைகளின் வயிற்றிலுள்ள பூச்சியை அழிக்கும். புளியங்கொழுந்துடன் துவரம்பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.


புளியின் பயன்பாடு...
உணவுக்கு ருசியூட்டும் அதேவேளையில்  மலமிலக்கியாகவும் பயன்படுது.  கெட்டியாக கரைத்த புளிதண்ணியில் உப்பு, செம்மண் சேர்த்து பற்றுப்போட ரத்தக்கட்டு கரையும். புளித்தண்ணியோடு சுண்ணாம்பு கலந்து குழப்பி இளம்சூடாய் பற்றுப்போட தேள் விசம் இறங்கும்.  புளியம்பூக்களை துவையல் செய்து சாப்பிட்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். 


நல்லதுலயும் ஒரு கெட்டது...
அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல என்னதான் மருத்துவ குணம் அதிகமிருந்தாலும் வயிற்றில் அமிலத்தன்மையை சுரக்க வைக்கும் கெட்ட குணமும் இதற்குண்டு.  ரத்தத்தை சுண்ட வச்சிடும்ன்னு எங்கூர் பக்கம் சொல்வாக. அதனால புளிப்பு தூக்கலா இல்லாம பார்த்துக்கோங்க.   இப்ப நாம யூஸ் பண்ணுற புளிய விட குடம் புளி நல்லது. இதைதான் கேரள மக்கள் அதிகம் யூஸ் பண்ணுவாங்க.

முன்னலாம் எங்காவது ஊர்பயணம் போகும்போது எடுத்துக்குற சோத்துமூட்டைல புளிசாதம்தான் முதல்ல இருக்கும். இதுக்கு மிக்சர், சிப்ஸ், அப்பளம்லாம் தொட்டுக்கிட்டா செம.  இது எதுமே இல்லாட்டி புளிசாதத்துல இருக்கும் மிளகாயை கடிச்சுக்கிட்டாலும் செமயா இருக்கும். மூணுவேளை தின்னாலும் உடம்புக்கு ஒன்னும் பண்ணாது. 


என்னதான் நம்ம வீட்டுல  புளிசாதம் செஞ்சு சாப்பிட்டாலும் கோவில்ல கொடுக்கும் புளிசாதத்துக்கு தனி ருசி அதிகம். அது சாமி பிரசாதம்ங்குறதாலன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம்தான் இதன் செய்முறைய தெரிஞ்சு செஞ்சபோது கோவில் டேஸ்ட் வீட்டுலயே.... 

இனி கோவில் புளிசாதம் செய்யும் முறையை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்..
புளி,
எண்ணெய்,
கடுகு,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு, 
தனியா,
மிளகு,
வெந்தயம்,
எள்,
காய்ந்த மிளகாய்,
உப்பு,
பெருங்காயம்,
மஞ்சப்பொடி,
வெல்லம்.
உப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்சு ஆற வெச்ச சாதம்.


புளியை ஊற வச்சுக்கோங்க... புதுப்புளியா இல்லாம பழைய புளியா இருந்தா நல்லது.  புளி ஊறினதும் கரைச்சு ஓடு, நார் இல்லாம வடிகட்டிக்கோங்க..


வெறும் வாணலி சூடானதும் எண்ணெய் இல்லாம ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்துக்கோங்க. 


அடுத்து தனியாவையும் வறுத்து எடுத்துக்கோங்க.


அடுத்து மிளகை வறுத்துக்கோங்க....


அடுத்து மிளகாயை வறுத்து எடுத்துக்கோங்க..  அப்படியே எள்ளையும் வறுத்தெடுத்துக்கொங்க. நான் படமெடுக்க மறந்துட்டேன். நீங்க மறந்துடாதீக.

வறுத்த பொருட்கள்லாம் ஆறினதும் பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா தூளாக்கிக்கோங்க...


வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலையை வறுத்துக்கோங்க. வசதி இருக்கவங்க முந்திரிப்பருப்பு சேர்த்துக்கலாம்.


வாணலி சூடானதும் எண்ணெய் ஊத்திக்கோங்க. 



கடுகு போட்டு வெடிக்க விடுங்க...


கடுகு வெடிஞ்சதும் காய்ஞ்ச மிளகாயை போடுங்க...


மிளகாய் சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க...


கரைச்சு வெச்ச புளியை ஊத்துங்க...


மஞ்சப்பொடி சேருங்க..


உப்பு சேருங்க...


பெருங்காயம் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க...


மாமியார் மாமனார்க்கிட்ட கோவிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போகும் பொண்ணுபோல எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்துல வெல்லத்தை சேர்த்து இறக்கிடுங்க. வெளில இருந்தாலும் பத்து நாள் வரை இந்த குழம்பு தாங்கும். பொடி ரெண்டு மூணு மாசம் வரை தாங்கும். 


ஆறின சாதத்துல முதல்ல வறுத்த பருப்புகளை சேர்த்து எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி கிளறுங்க.  அடுத்து பொடி சேர்த்து எல்லா இடத்துயும் இருக்குற மாதிரி கிளறி கடைசியா புளிக்குழம்பை ஊத்தி கிளறுங்க.. தேவைப்பட்டா கொஞ்சம் ந. எண்ணெய் சேர்த்துக்கலாம். எண்ணெயை சூடு செய்யனும்ன்னு அவசியமில்ல. 


கமகமக்கும் கோவில் புளிசாதம் ரெடி. இந்த வாசத்துக்கு கடவுளே நம்ம வீட்டுக்கு வருவார். அப்படியும் வரலியா?! நாலு பேருக்கு இந்த சாதத்தை கொடுங்க. அப்ப கண்டிப்பா வருவாரு..

வருவார்தானே?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461680

நன்றியுடன்,
ராஜி.

Monday, May 29, 2017

பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும்போது கவனிக்க வேண்டியவை -ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள டல்லா இருக்கே! என் ஃப்ரெண்ட் ராஜி பையன் ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டான்.. மார்க் கம்மியா எடுத்திருக்கான்.

உடனே உன் ஃப்ரெண்ட் அவனை திட்டி அடிச்சிருப்பாளே! டிவி, ஃபேஸ்புக்ன்னு சுத்த தெரியுமே தவிர நல்ல விசயங்களை புரிஞ்சுக்குற கெப்பாசிட்டி அவளுக்கு கிடையாதே!
ம்க்கும். அவங்க வீட்டுல கரிச்சு கொட்டுறது போதாதுன்னு நீங்களும் அவளை கரிச்சு கொட்டுங்க. அவ ஒன்னும் புள்ளைய திட்டல. ஆனா, எந்த காலேஜ்ல சேர்க்கலாம், என்ன கோர்ஸ் சேர்க்கலாம்ன்னு குழம்பி போய் நிக்குறா. அவங்க வீட்டுல சொல்லுற படிப்பை சேர்க்கலாமா?! இல்ல எல்லாரையும்போல இஞ்சினியரிங், பிஸினெஸ் மேனேஜ்மெண்ட்ன்னு சேர்க்கலாமான்னு அல்லாடி போய் நிக்குறா. 

அவனுக்கு என்ன விருப்பமோ அந்த கோர்ஸ்ல சேர்க்க சொல்லுறதுதானே?! 

அவன் தனக்குன்னு எந்த விருப்பமுமில்லை. எது நல்லதோ அதுல சேருங்க. படிக்குறேன்னு சொல்லிட்டான். அதனால, எந்த பக்கம் போறதுன்னு அவளுக்கு புரிபடலையாம். சொல்லி கஷ்டப்பட்டா. 
இப்பலாம் மார்க் கம்மியான பசங்கதான் பின்னாளில் நல்லா சாதிக்குறாங்க. அதனால, மனசை தளர விட வேண்டாமுன்னு சொல்லு.  எல்லாரையும் போல இஞ்சினியரிங்க், பிஸினெஸ், ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ன்னு போய் விழாம ப்யூச்சர்ல எந்த துறைல வேலை வாய்ப்புன்னு பார்த்து முடிவெடுக்க சொல்லு. இப்ப மருத்துவத்துறைக்கு நல்ல எதிர்காலமிருக்கு. பாராமெடிக்கல் சம்பந்தமான படிப்புல சேர்க்க சொல்லு. அதுக்கடுத்து காமர்ஸ் மாதிரியான ஆர்ட்ஸ் படிப்புக்கும் மதிப்புண்டு. மூணு வருசம் படிச்சு டிகிரி வாங்கி மேற்படிப்பு படிச்சுக்கிட்டே க்ரூப் 1,2,3,4 மாதிரியான பரிட்சை எழுதி அரசு வேலைக்கு போகலாம். இல்ல பி.பார்ம், ரேடியாலஜி, லேப்டெக்னீசியன் மாதிரியான படிப்புகளை படிச்சு லோன் வாங்கி சுயதொழில் செய்யலாம். 

சரி இதுலாம் அவக்கிட்ட சொல்லுறேன் மாமா.
இரு. படிப்புலாம் தேர்ந்தெடுக்குற நேரத்துல சேர்க்குற காலேஜ் பத்தியும் நல்லா விசாரிக்க சொல்லு.  ஏன்னா, லோன் கிடைக்குறது முதற்கொண்டு வேலை கிடைக்குறது வரை பல விசயங்கள் எந்த காலேஜ்ல படிக்கிறோம்ன்றதுதான் தீர்மானிக்கும்.  அதனால, மாமன் சொன்னான், மச்சான் சொன்னான்னும், டிவி, பேப்பர் விளம்பரத்துல வருதுன்னும் கண்ட காலேஜ்ல சேர்த்து லோல்படவேணாம்.  எந்த படிப்பா இருந்தாலும் அந்தந்த துறை சார்ந்த அனைத்து தரச்சான்று அங்கீகாரம் வாங்கி இருக்காங்களான்னு பார்க்கனும். காலேஜ்ல சிறப்பான வசதி இருந்தா அதுக்கான அங்கீகாரத்தையும்  வாங்கி இருக்காங்களான்னும் பார்க்க சொல்லு.   காலேஜ்ல லேப், ப்ரொபஷர்ஸ், கழிவறை, சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல்ன்னு அடிப்படை வசதிகளை நேரில் பார்த்து சேர்க்கச்சொல்லு.  இந்த விசயங்கள் நமக்கு மட்டும் புடிச்சா போதாது. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கான்னும் பார்க்கனும்.  காலேஜ் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்கள் வெப்சைட்டுலயும்,  காலேஜ் ஆண்டுமலரில் வந்திருக்கான்னு பார்க்க சொல்லு. அப்படி இருந்தாலும் அதை ஒருமுறை கிராஸ் செக் பண்ணிக்க சொல்லு. பேருந்து வசதி எப்படி இருக்குன்னு பார்க்கனும். ஹாஸ்டல்ல தங்கினாலும் போக்குவரத்து, மருத்துவ வசதி இருக்கான்னு பார்க்கனும்.
ஒவ்வொரு காலேஜ்க்கும் அந்தந்த துறை சார்ந்த அமைப்பு அங்கீகரிக்கப்பட்டு அதுக்குன்னு ஒரு நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். அதை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு விசாரிக்கலாம்.  வெப்சைட்டுல இல்லன்னா ஆண்டு மலர்ல எல்லா புரொபசர்ஸ், அவங்க படம், அவங்க படிச்ச காலேஜ், அனுபவம், வாங்கின பட்டங்கள் இருக்கான்னும் பார்க்கனும். காலேஜ் மேனேஜ்மெண்ட்ல இருக்கும் மெம்பர்ஸ்  யார் அவங்க பேக்ரவுண்ட் என்னன்னும் விசாரிக்கனும். குறைஞ்சது மூணு வருசம் அந்த காலேஜ்ல படிச்சவங்க, எத்தனை பேருக்கு வேலை கிடைச்சதுங்குற விவரம் பொதுவுல சொல்லி இருக்காங்களான்னு பார்க்கலாம், இல்லன்னா விசாரிச்சும் தெரிஞ்சுக்கலாம்.  மார்க், பணம், சாதி..ன்னு எந்த அடிப்படையில் பசங்களை சேர்த்துக்குறாங்கன்னும் கவனுக்கனும்.

காலேஜ்ல போதுமான கிளாஸ் ரூம் இருக்கா?! ரூம் காத்தோட்டமா, வெளிச்சமா இருக்கான்னும் கவனிக்கனும். ஹாஸ்டல்ல தங்குறதா இருந்தா ரூம் எப்படி இருக்கு, கழிவறை எப்படி இருக்கு, வெளிச்சம், காத்து வசதி இருக்கான்னும் பார்க்கனும். ஹாஸ்டல் சமையலறை, டைனிங் ஹாலையும் நல்லா பார்க்க சொல்லு. அதைவிட்டு அங்க போயும் போனை நோண்டிக்கிட்டு இருக்க வேணாம்ன்னு உன் ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லு. அதேமாதிரி ஒரே காலேஜ்ல போய் சேர்த்துட்டு வராம ரெண்டு மூணு காலேஜை நல்லா பார்த்துட்டு சேர்க்க சொல்லு. இந்த விசயத்துல சோம்பேறித்தனம் கூடாது. இப்படி நல்லா அலசி ஆராய்ஞ்சு காலேஜ்ல சேர்த்துட்டு  வேற காலேஜ் பார்த்து ஆசைப்படக்கூடாது. நாம படிக்கப்போற காலேஜ்தான் பெஸ்ட் காலேஜ்ன்னு பசங்க மனசுல பதிய வச்சு படிக்க அனுப்ப சொல்லு.
Related image
அப்பாடி! இந்த கஷ்டமெல்லாம் நானும், ராஜியும் எங்களை பெத்தவங்களுக்கு வைக்கக்கூடாதுன்னுதான் ப்ளஸ்டூவுல பெயிலாயிட்டோம்.

ம்க்கும். மேய்க்குறது எரும. இதுல பெரும வேற.....

எருமைன்னு சொன்னது உங்களைத்தானே மாமா?!
என்கிட்ட வந்திடு. ஒன்னும் தெரியலைன்னாலும் வாய் மட்டும் காது வரை கிழியுது. தினமும் ரெண்டு வேளை சாமி படத்துக்கு பூ போட்டு விளக்கேத்தி சாமி கும்பிடுறியே! முருகா முருகான்னு அம்மன் கோவில்ல நின்னுக்கூட லூசு மாதிரி கும்பிடுறியே! முருகன் பக்கத்திலிருக்கும் ரெண்டு பேர்ல யார் வள்ளி எது, தெய்வானை எதுன்னு கரெக்டா சொல்வியா?!

ம்ம்ம் சொல்வேனே! முருகனுக்கு  வலப்புறம் இருக்குறது வள்ளி, இடப்புறம் இருக்குறது தெய்வானை. முருகன் தெய்வானையை கட்டிக்கிட்டு எல்லா தம்பதிகளையும் போல தெய்வானைக்கு இடப்பாகத்தை கொடுத்தார். பின்னாடி வள்ளியை கட்டிக்கிட்டதால அவளை வலப்புறம் வச்சுக்கிட்டார். வள்ளி பூமியில் பிறந்த பொண்ணுங்குறதால தாமரை பூ வச்சிருப்பாங்க. கூடவே வேடுவ குலத்து பெண்ணுங்குறதால மரவுறி தரித்திருந்ததால பச்சை நிற புடவை கட்டி இருப்பாங்க.  தெய்வானை இந்திரலோகத்து பெண்ங்குறதால கையில் நீலோத்பலர் மலர் வச்சிருப்பாங்க. சிவப்பு புடவை கட்டி இருப்பாங்க.

அடடே! உனக்கு நல்லன் விசயம்லாம்கூட தெரிஞ்சிருக்கே! எப்படி புள்ள?!  போன வருசம் மே முதல் வாரம் வள்ளிமலை கோவிலுக்கு டூர் போகும்போது அங்க கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.

எப்படியோ நல்லது தெரிஞ்சுக்கிட்டா சரி..  லீவுல ஊர் சுத்த நம்ம பசங்க என்னலாம் ஐடியா பண்ணுறாங்கன்னு பாரு.. அத்தோடு
வாட்ஸ் அப்ல வந்த இந்த படம் யோசிக்கவும், மனசை பாதிக்கவும் வச்ச படம் இதையும் பாரு.  கூடவே,

என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்?!


இதுக்கு பதிலும் யோசிச்சு வை... கொஞ்சம் வேலை இருக்கு வெளில போய் வரேன்...


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு...

நன்றியுடன்,

ராஜி