Wednesday, April 30, 2014

செஞ்சி கிரிஷ்ணகிரி கோட்டை என்னும் ராணிகோட்டை -மௌன சாட்சிகள்

கடந்த சிலவாரங்களா செஞ்சி கோட்டையையும் அதை சுத்தி உள்ள பகுதிகளையும் பார்த்து வருகிறோம்.  அந்த வகையில் நாம இன்னைக்கு பார்க்கப்போறது ராணிக்கோட்டை என அழைக்கப்படுகிற கிருஷ்ணகிரி கோட்டை. இதுதான் அதன் முழுத்தோற்றம்.

சுமார் 500 அடி உயரம் உள்ள குன்றின் மீது உள்ள கிருஷ்ணகிரி கோட்டை 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆனந்தகோன் என்னும் அரசனின் வழிவந்த அவரது மகன் கிருஷ்ணகோன் என்பரால் கட்டப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணகோன் பிள்ளைகளான கொனேரிகோன் கோவிந்தகோன் அவர்களது ஆட்சிக்காலத்தில் படைவீரர்கள், குதிரைகள், காவல்வீரர்கள் செல்வதற்கு கோட்டைச் சுவரை ஒட்டி உள்ள படிக்கட்டுகள் கட்டப்பட்டன. சரி, இனி நாம கோட்டைக்குள் செல்லலாம்.


இங்கே நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மொபைல் கேமராவிற்கு அனுமதி இலவசம். டிஜிட்டல் கேமராவிற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறாங்க. இனி, மலை ஏறத் தொடங்கலாம். ராஜகிரி கோட்டையை விட அளவில் சிறியது என்பதால் விரைவாக சென்றுவிடலாம்....  
 
அதோ அங்க தெரிகிற மலை உச்சிக்குதான் செல்லவேண்டும். திடீரென மழைமேகம் வருவதால சீக்கிரம் போகலாம். வழியினில்  கல்லினாலான நுழைவு மண்டபங்களும் இருக்கு. இப்ப நாம நிக்கிற இடம் சுழலும் பீரங்கி மேடை. ராஜகிரி கோட்டையை போல பாதுகாப்பு பணிகளுக்காக இந்த சுழலும் மேடை உபயோகப்படுத்தி இருக்கிறாங்க.


மலையேறி வரும் போது  தூரத்தில் தெரிவதுதான் முதல் நுழைவு மண்டபம்.  அதனை ஒட்டி வலதுபுறத்தில் இருப்பது சுழலும் பீரங்கிமேடை. இது பாதுகாப்பு காரணங்களுக்காவே பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது .இதன் விட்டம் சுமார் 9 மீட்டர் நீளம் உள்ளதாக அமைக்கபட்டு இருக்கு. மேலும் கூடுதகவல் வேணுமின்னா இந்த பீரங்கி மேடையில் பீரங்கி சுற்றும் கால்வாய் 0.70 மீ அகலம் உடையதாகவும் , 13 மீ உள்சுற்று இருப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், இதன் உயரம் 4 மீட்டர் வட்டவடிவமாக கற்பாறைகள் கொண்டு கட்டப்பட்டு இருக்கு. இந்த மேடையின் மைய அச்சில் இருக்கும் துளையின் மீது பொருத்தப்பட்ட பீரங்கி சக்கரம் எண்திசைகளிலும் சுற்றி எதிரிகளை தாக்குமாறு வடிவமைக்கபட்டுள்ளது. ஆனா இப்ப பீரங்கி இல்ல வெறும் மேடை மாத்திரமே இருக்கு !!
    
அதைத் தாண்டி சென்றால் வருவது இந்த இரண்டாம் கட்ட நுழைவாயில். முழுவதும் கற்களால் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. அதையும் தாண்டி சென்றால் வருவது தானியகளஞ்சியம்.

ராஜகிரி கோட்டையில இருப்பதுபோல இங்கேயும் பெரிய தானிய களஞ்சியம் இருக்கு. அதில கீழ்பாகம் முழுவதும் நிரம்பின உடனே மேல்பாகத்தில இருந்து நிரப்புவதற்கு ஏற்ப படிக்கட்டுகள் அமைச்சு இருக்கிறாங்க.

இந்த தானிய களஞ்சியதுக்கு பக்கத்துல இருக்கிற பாறையின் மீது சின்னதா சதுரவடிவில் ஒரு மேடை இருக்கு.  அதுல இரண்டு அறைகள் இருக்கு. அதற்கு பேரு எண்ணெய் கிணறு. இது தானிய களஞ்சியத்திற்கு அருகிலேயே இருக்கு. இது 32 அடி நீளமும், 16 அடி அகலமும், 10 அடி ஆழமும் உள்ள கட்டிட அமைப்பு முற்றிலும் சதுரவடிவில் கருங்கற்களால் கட்டப்பட்டு இருக்கு. இது இரண்டு பாகங்களாக பிரித்து கட்டப்பட்டு இருக்கு. ஒரு பகுதியில் எண்ணெயும், மற்றொரு பகுதில் நெய்யும் சேமிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் மேற்பகுதி சின்ன  திறப்பு இருப்பதால் அதன்வழியே சூரியஒளி உள்ளே விழுவதாலும் அங்கே இருக்கும் எண்ணையும், நெய்யும் கெட்டுபோகாமல் இருந்ததாக கூறப்படுகிறது இப்பொழுது அதனுழள் மழைதண்ணி மாத்திரம் தேங்கி கிடக்கு!!


தானிய களஞ்சியம் எண்ணெய் கிணறு எல்லாம் தாண்டி வரும்போது கல்லினால் ஆன நுழைவாயில் இருக்கு. அதன் வழியே சென்றால் வருவது அரங்கநாதர்கோவில்.  அந்தக்காலங்களில் வாழ்ந்த மன்னர்கள் அரங்கநாதரையே பெரிதும் விரும்பி வழிப்பட்டு இருக்கிறார்கள். எல்லா கோட்டைகளிலும்  அரங்கநாதருக்கு சன்னதி இருக்கு. இந்த ஆலயம் இந்த கோட்டையை ஆண்ட மன்னர்களுக்கென தனி வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
இந்த ஆலயத்தினுள் நுழைவாயிலிலும், மற்ற இடங்களிலும் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டு  இருக்கு. ஒரு முன்மண்டபம் தூண்களுடனும், சிற்ப வேலைபாடுகளுடனும் அழகாக இருக்கு. அதில் இந்தக் கோவிலை நிர்வாகம் செய்த மன்னர்களின் சிலைகளும், கடவுளர்களின் சிலைகளும், மகாலக்ஷ்மி யானை பரிவாரங்களுடன் இருக்கும் சிற்பங்களும், மூலவர் சன்னதி மேடையில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது .
சன்னிதியில் மூலவர் இல்லை. அங்கே வெற்றிடமாக இருக்கு. இந்த மண்டபத்திற்கு கிழக்கில் இருந்து நல்ல வெளிச்சம் கிடைப்பதற்கும் கிழக்கு பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்டு இருக்கு. உள்பக்கம் ஒரு படிக்கட்டு இருக்கு. அதன்வழியே சென்றால் கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்லலாம்.

அழகிய கோபுரம், சிறந்த உள்பிரகாரம், சுற்றுகட்டு மண்டபங்கள், உயரமான மூலவர் பீடம் என பார்ப்பதற்கு அழகாக காணப்படும் இந்த ஆலயத்தின் மேற் கூரைகள் வரிகற்களால் அழகுற அடுக்கப்பட்டு சிதைலமைடந்த நிலையிலும் அழகு குறையாமல் காட்சியளிக்கிறது   .

மேலும் சில மொட்டை கோபுரங்களும், பாழடைந்த மண்டபங்களும் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் இங்கே இருக்கிற கோவில்களை சிதைத்தது மட்டுமில்லாமல் 1905 ல் வீசிய சூறைக்காற்றில் நிறைய மண்டபங்கள் பாழ்பட்டுவிட்டதாம். அப்போதிருந்தே இதை பராமரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டனராம்.

அடுத்து நாம பார்க்கப்போறது ஒரு வற்றாத நீர் ஊற்று. கோவிலுக்கு கொஞ்சம் மேற்கே ஒரு சுழலும் பீரங்கி மேடையின் அருகே இருப்பது ஒரு நீர் ஊற்று. அவ்வளவு உயரமான இடத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்று. அங்கே சுற்றுலா வருபவர்களும், உள்ளூர் மக்களும் மேலே வந்து இந்த தண்ணீரில் சமைத்து உண்டு மாலை வேளையில் கீழே செல்கின்றனர்
அடுத்து நாம பார்க்கப்போறது தர்பார் மண்டபம். இது இந்து இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்ட மண்ட்பமாகும். கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் கோட்டையினுள் இருக்கும் பெண்கள் ஓய்வு எடுக்கவும் இந்த மண்டபங்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலே டூம் போன்ற அமைப்பில் இஸ்லாமிய முறைப்படி அமைந்த கட்டிடம் இது. இதன் சுவர்கள் எல்லாம் சுண்ணாம்பு கலவை கலந்த செங்கற்களை கொண்டு கட்டப்பட்டது. இதில் ஒரு ஊஞ்சல் மணடபமும் உள்ளது.
  
மிகப்பெரிய தூண்களுடன் மைய மண்டபத்தில் சூரிய ஒளி நேரடியாக விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு மண்டபத்தின் அழகை மேலும் வெளிச்சமாக காட்டுகிறது. மையப்பகுதியில் ஒரு மேடை அமைச்சு இருக்கிறாங்க.

தர்பார் மண்டபத்திற்கு அருகில் சிறிது தூரத்தில் தெரிவது கிருஷ்ணன் கோவில். இங்கே மன்னர்கள் வழிபாடு செய்வார்களாம். இந்தக் கோவில் இப்பொழுது முழுவதும் அழிந்து காணப்படுகிறது. இந்தக் கோவிலை சுற்றி சிறிய சிறிய சிலைகளும், பீடங்களும் அழகாக அமைச்சு இருக்கிறாங்க.


இந்தக் கோவிலின் மண்டபங்கள் பெரியதாக இருக்கிறது. உள்பிரகாரம் எல்லாம் கருங்கற்களால் கட்டப்பட்டு,மூலவர் கோபுரங்களுடன் இருக்கு. எல்லாம் இப்போ பாழடைஞ்சு இருக்கு. பலிபீடம், கோவில் முற்றங்கள் எல்லாம் வடிவமைக்கபட்டவிதம் அழகா இருக்கு.  அந்த கோவிலின் முற்றத்தில் இருந்து பார்க்கும் போது கோட்டையின் எல்லாப் பகுதிகளும் தெளிவாக தெரியும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் கோவிலின் சற்று தொலைவில் காவல் கோபுரமும், சுழலும் பீரங்கி மேடையும் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருக்கு.

இங்கே தெரியும் இந்த பெரிய படிக்கட்டு கிருஷ்ணகோன் காலத்தில்  படைவீரர்கள், குதிரைகள், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஏறிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. மற்றவர்கள் ஏறிச் செல்ல ஒரு பாதையும் ஏற்படுத்தப்பட்டது. அந்த சாதாரண மக்கள் பயன்படுத்திய வழிதான் இன்று பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கு.


ஒருவழியாக பல வரலாற்று நிகழ்வுகளையும், பல போர்களையும், பல சாம்ராஜ்யங்களின் ஆட்சி, கலை, கலாச்சாரம், காதல், வீரம் போன்றவற்றை தன்னுள் கொண்டு மௌன சாட்சியாய் கம்பீராமாய் நிற்கும் செஞ்சி கொட்டையிலிருந்து விடை பெற்று மீண்டும் அடுத்த ஒரு இடத்தில சந்திக்கலாம்!!!

நன்றி! வணக்கம்!! 

Tuesday, April 29, 2014

தக்காளி ஊறுகாய் - கிச்சன் கார்னர்

கோடைக்காலம் வந்தாலே  பொண்டுங்க, பொட்டு பொடுசுங்கலாம் ஊறுகாய், வத்தல்லாம் போடுற வேலைல இறங்கிடுவாங்க.  மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய்லாம் இப்போ விலைக் குறைவா கிடைக்கும். அதனால வத்தல் போட்டு சேமிச்சு வச்சு வருடம் முழுக்க பயன்படுத்திக்குவாங்க.  அதே நேரத்தில் தக்காளி, பூண்டு மாதிரியானலாம் விலைக் குறைவான நேரத்துல ஊறுகாய் செஞ்சு சாப்பிடுவாங்க. என்ன இதுலாம் பத்து இல்ல ஒரு மாசம்தான் தாங்கும்.  வருசம் முழுக்க சேமிச்சு வச்சுக்க முடியாது அதான் இதுல இருக்கும் மைனஸ் பாய்ண்ட்.

தேவையானப் பொருட்கள்:
நல்லா பழுத்த தக்காளி - 1 கிலோ
மிளகாய் பழம் அல்லது காய்ந்த மிளகாய் - 100கிராம்
புளி - 100கிராம்
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - 100 மிலி
பெருங்காயம் -  சிறிது
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது.
 தக்காளியை நல்லா கழுவி ஈரம் போக துடைச்சு நாலு துண்டா வெட்டி பீங்கான் ஜாடி இல்ல பிளாஸ்டிக் டப்பாவுல போட்டு உப்புப் போட்டு ஒரு நாள் முழுக்க ஊற விடுங்க. 

மறுநாள் காலைல ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல தக்காளியை மட்டும் காய வைங்க. தக்காள் ஜூஸை தனியா வெயிலில் வைங்க. 

தக்காளி நல்லா காய்ந்ததும் ட்வெயிலி வைத்த தக்காளி ஜூசில் தக்காளி, மிளகாய், புளி போட்டு ஊற வைங்க. ஊறினாதான் அரைக்க முடியும். இல்லன்னா நைசா அரையாது. தக்காளிலாம் ஊறினதும் உரலில் இல்ல மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க. தண்ணி பத்தலைன்னா ஆறின சுடுதண்ணி சேர்த்து அரைக்கலாம். 

ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகுப் போட்டு பொரிய விடுங்க. 

கடுகு பொரிந்ததும் தக்காளி, மிளகாய் அரைத்த விழுதைக் கொட்டி வதக்குங்க. 



எண்ணெயும், தக்காளி விழுதும் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க. ஊறுகாய் ஆறினதும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் பெருங்காயத்தை வறுத்து பொடிப் பண்ணி ஊறுகாய்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க. இப்படி ரெடியான ஊறுகாயை ஒரு நாள் முழுக்க வெயிலில் வைங்க.   

காரசாரமான  தக்காளி ஊறுகாய் ரெடி.காத்து புகாத மாதிரிலாம் டப்பாவுல வைக்காம லேசா திறந்து வச்சுக்கோங்க. இல்லாட்டி பூரணம் பிடிச்சுடும்.   (ரெடியான தக்காளி ஊறுகாய் படமெடுக்க மறந்துட்டேன்.  ஒரு வாரம் கழிச்சுதான் படமெடுக்காதது நினைவு வந்து மிச்சம் மீதியைதான் படமெடுத்தேன். அதான் காய்ஞ்சு போன மாதிரி இருக்கு.) 

மோர் சேர்த்த பழைய சாதம் , கூழ்க்குலாம் இந்த ஊறுகாய் மேட்ச் ஆகும். அடுத்த வாரம் என்ன செய்யலாம்!?

லீவுக்கு வரும் சொந்தக்காரங்க தலைத்தெறிச்சு ஓட வைக்குற மாதிரி பஜ்ஜி செய்யலாமா!?

Monday, April 28, 2014

குழந்தைகளுக்கு உணவு ஊட்டப் போறீங்களா!? -ஐஞ்சுவை அவியல்

ஏண்டி புள்ள! என்ன அங்க கலாட்டா!?

ம்ம்ம்ம் உங்க புள்ளைக்கு சோறு ஊட்டுறேன். அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்து என்னைப் படுத்தி எடுக்குது. 

சாப்பிடுறதுக்கா சின்ன மண்டையனை போட்டு இப்படி படுத்துறே! பசிச்சா அவனே சாப்பிடுறான். அதை விட்டுட்டு இப்படி திணிக்குறியே!!

ஒரு நாளைக்கு நீங்க சாப்பாடு ஊட்டிப் பாருங்க அவனுக்கு! அப்புறம் எனக்கு அட்வைஸ் பண்ணலாம்!!

குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட பொறுமை ரொம்ப அவசியம் புள்ள! சீக்கிரம் சாப்பிடு உனக்கு சாக்லேட் வாங்கித்தரேன்ற மாதிரியாலாம் சொல்லி பசங்களுக்கு சாப்பாடு ஊட்டுறது தப்பு. குழந்தைங்க சாப்பாட்டுல 90 சதவீதம் காய்கறிகள், பழங்கள், தானியங்கலாம் இருக்குற மாதிரி பார்த்துக்கனும். ஒரே மாதிரி இல்லாம பூரி, தோசை, சப்பாத்திலாம் விதம் விதமான வடிவத்துல செஞ்சு கொடுத்தா சாப்பிடுவாங்க. அதுப்போல செஞ்சுக் கொடுக்குறதால பசங்களுக்கு சாப்பாட்டு மேல ஆர்வத்தை உண்டாக்கும். 

வீட்டுல எப்பவும் பழங்கள் வச்சுக்கலாம். குழந்தைங்க கேட்கும்போது நொறுக்குத்தீனிக்கு பதிலா விதம் விதமான வடிவத்துல கட் பண்ணி கொடுக்கலாம். அதைவிட்டுட்டு பாக்கட்ல வர்ற சிப்ஸ், லேஸ், குர்குரே மாதிரியானதுலாம் வாங்கிக் கொடுத்து ருசி காட்டாம பார்த்துக்கனும். அதேப்போல டிவில விலம்பரங்களை நம்பி உயரமா வளர, புத்திசாலியா வளருவாங்கன்னு நம்பி ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாங்கி காசை கரியாக்காம, நாமளே வீட்டுல கம்பு, சோளம், சாமை, தினை மாதிரியான உணவுகளையும், பழங்கள், கீரைகள் கொடுத்தால் பசங்க ஆரோக்கியமாவும், புத்திசாலியாவும் வளருவாங்க. ராஜா, கண்ணுன்னு சாப்பாடு ஊட்டனுமே தவிர திணிக்கக்கூடாது.

இனி நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்குறேன் மாமா. சாப்பாட்டைப் பத்தி பேசுனதால,    பசிக் கொடுமையை போக்க தன்னாலான உதவிகளை செய்யும் ஒருத்தர் பத்தி சொல்றேன்.



வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஏலகிரின்னு ஒரு ஹோட்டல் இருக்கு.  அங்க காலைலயே வயதானவங்க, மனநிலை சரியில்லாதவங்கன்னு நிறையப் பேர் சாப்பிட்டுட்டு காசேக் கொடுக்காம போறாங்க.  அதுமட்டுமில்லாம கூலி வேலை செய்றவங்க,  ஏழை மாணவர்களுக்குலாம் பாதி விலைதான் இந்த ஹோட்டலில். கைக்குழந்தையோடு வர்றவங்க குழந்தைக்கு பால் வாங்கிக்கிட்டு காசு கொடுத்தால் வாங்கிப்பாங்க. காசு தரலைன்னாலும் ஒண்ணும் சொல்ல மாட்டார் இந்த ஹோட்டல் வச்சு நடத்தும் நாகராஜ்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த நாகராஜ் ஏழாவதுக்கு மேல படிக்கல. குடும்பத்துக்கு உதவியாய் இருக்கட்டுமேன்னு ஒரு ஹோட்டல்ல வேலைக்குப் போனார். அங்க வேலைச் செய்ததால ஹோட்டல் நெளிவு சுளிவுலாம் அத்துப்படியாந்தால் தனியா ஹோட்டல் ஆரம்பிச்சார். தரமான பொருட்களைக் கொண்டு செய்யுறதால இவரோட ஹோட்டல்ல எல்லாப் பண்டமும் ருசியாய் இருக்கும். அதனால வியாபாரமும் நல்லா நடக்குது. 5 மணி நேரம் தூக்கம் தவிர மிச்சம்லாம் ஹோட்டல் தொழில்லயே இருப்பார். இப்படிலாம் செய்யுறிங்களே! எப்படி சமாளிக்குறீங்க!? எப்படி கட்டுப்படியாகுது!?ன்னு கேட்டா பசியோட கொடுமை எப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் இல்லாதவங்களுக்கு செய்யுறேன். இதுக்கு பக்க பலமா இருப்பது என் மனைவிதான். குடும்ப செலவுக்குத் தவிர, நகை, புடவைன்னு எதையும் என்கிட்ட கேட்டு நச்சரிக்க மாட்டாங்க. பணத்திற்காக வாழக்கூடாதுன்றதுல ரெண்டுப் பேரும் உறுதியா இருக்கோம். என் மனைவி வேலைக்குப் போக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு வேலைக் கிடைச்சதும் அவங்க வருமானத்துல குடும்பத்தைக் கவனிச்சிட்டு, ஹோட்டல் வருமானத்துல உதவி தேவைப் படுவோருக்கு உதவி செய்யனும். அதனால  எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும்  நாகராஜ் சொல்றார். நானும், ராஜியும் அவர்கிட்ட ஃபோன்ல்ல பேசிட்டோம். நீங்களும் அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிடுங்க.9944565814.

கண்டிப்பா போன் போட்டு பேசுறேன் புள்ள!  வண்டி பாக்சுல மாம்பழம் வச்சிருகேன் போய் எடுத்து வந்து கழுவி கட் பண்னி கொடுப் புள்ள! 

அடிக்குற வெயிலுக்கு மாம்பழம் அவசியம்தான். நீங்க சாப்பிடுங்க என் புள்ளைக்கு நான் தர மாட்டேன். அப்புறம் கட்டி வரும்! 

அதெல்லாம் ஒண்ணும் வராது.மாம்பழம் சாப்பிட்டா உடல் சூடு தணியும். இதய நோய், புத்து நோய், ரத்த அழுத்தம்லாம் கட்டுப் படுத்தும், சுகர் ஃபேஷண்ட்லாம் கூட மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழம் சாப்பிட்டாதோல் சுருக்கம் வராது. மாம்பழத்தில் இருக்கும் வைட்டிமின் ஏ தெளிவான பார்வைக்கு உதவுது.  மாம்பழத்தில் ஆண்டி ஆக்சிடண்டும், வைட்டமின் சி யும் இருக்கு. அதனால நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்புக்கு கிடைக்கும். 

                           

சரிங்க மாமா. இனி மாம்பழம் சாப்பிட குழந்தைக்கு பழக்குறேன். அப்புறம் நம்ம ராஜியோட அப்பா, தன் பேரன்கிட்ட அவன் எல்.கே.ஜி படிக்கும்போது , பெரியவங்க பேச்சை கேளு,  பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா குதிக்கனும்ன்னு அடிக்கடி  சொல்லி வளர்த்திருக்கார். 

ஒரு நாளைக்கு ஒன்பது தரம், பெரியவங்க நிக்க சொன்னா நிக்கனும், உக்கார சொன்ன உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா....,ன்னு கேட்டு கேப் விட்டா, கிணத்துல குதிக்கனும் தாத்தான்னு அழகா அப்பு பதில் சொல்வான்.  ஒரு நாள் அப்பு என்ன டென்சன்ல இருந்தானோ தெரியலை! ராஜி அப்பா எதோ  சொல்ல, அப்பு முரண்டு பிடிக்க, அப்பு, பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதினான்னு சொன்னா...., ந்னு கோவமா கேட்டு கேப் விட, 
                                 
அப்பு கோவமா, ம்ம்ம்ம் பக்கத்துல நின்னு சொல்றவங்களை பிடிச்சு கிணத்துல தள்ளி விட்டுடனும்ன்னு சொன்னதை கேட்டு ராஜி அப்பா கோவம் மறைஞ்சு சிரிச்சுட்டாராம். இதை அடிக்கடி என்கிட்ட ராஜி சொல்லி சிரிப்பா.
ரொம்ப நேரம் பேசிட்டோம் நான் ஒரு விடுகதை சொல்லிட்டுப் போறேன். நீ பதில் யோசிச்சு வை. நான் குளிச்சுட்டு சாப்பிட்டு வந்து விடையைக் கேட்டுக்குறேன்..

அண்ணனின் தயவில் ஆட்சி அமைக்கும் அழகான தம்பி யார்!?

Saturday, April 26, 2014

விஜய் டிவிக்கு என்ன ஆச்சு!? - கேபிள் கலாட்டா

ஜீ தமிழ் தொலைக்காட்சில திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2  மணிக்கு ஹோம் மினிஸ்டர்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பெண்களின் ஆளுமைத் திறனையும், அறிவாற்றலையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமா பல விளையாட்டுக்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகுது. தங்களின், வயசு, கவலைலாம் மறந்து சிறு குழந்தையாய் மாறி, தன் குடும்பத்தினர் முன் திறமை வெளிப்படுவத்த   பெண்கள் விளையாடுவது  ரசிக்க வைக்குது.
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயித்துக்கிழமைல  11.30 மணிக்கு “அச்சம் தவிர்”ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. எதையாவது சாதிக்கத் துடிப்பவர்களின் வித்தியாசமான திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாய் இது இருக்கு. பல்லால் காரை இழுப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு வண்டி ஓட்டுவது, மொசைக் கற்களை வெறும் கையால் உடைப்பது என நிகழ்ச்சி சுவாரசியாமாய் செல்லுது. சுவாரசியமாய் இருந்தாலும் பல சமயம் நம் இதயத்துடிப்பை எகிற வைக்குது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாம இதுப்போல முயற்சி செய்ய வேணம்ன்னு அவங்களே எச்சரிக்கையும் கொடுத்துடுறாங்க. பெரும்பாலும் இந்நிகழ்ச்சில கிராமத்து இளைஞர்கள்தான் தங்கள் திறமைகளை காட்டுறாங்க.
கேப்டன் தொலைக்காட்சியில் பயணம்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல நம்ம கடல் பயணங்கள் சுரேஷ்குமாருக்கு போட்டியா ”கருணா”ன்ற ஒருத்தர் இந்தியாவில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்குலாம் போய் அங்க இருக்கும் மக்களின், கலை, கலாச்சாரம், அந்த இடத்தின் சிறப்பு, சாப்பாடு, ஹோட்டல்ன்னு விளக்கமா சொல்லி நம்மை அந்த இடத்துக்கு போகும் ஆசையை தூண்டுறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை சன் தொலைக்காட்சியில் காலை 6.55க்கு ஆன்மீக கதைகள்ன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல ஜோதிட சிகாமணி சிவக்குமார் என்பவர் எளிய நடையில் ஜென் கதைகள் முதல் கீதாச்சாரம் வரை அழகா சொல்றார். பரபரப்பான காலை வேளையிலும் அந்த அஞ்சு நிமிசம் ஒதுக்கி நிகழ்ச்சியை விடாமல் பார்க்க வைக்குது அவரின் பேச்சு. நீங்களும் ஒரு முறை பாருங்க..., தொடர்ந்து பார்க்கவும், யோசிக்கவும் செய்வீங்க.
முன்னலாம் நீயா நானா, காஃபி வித் அனு, தமிழ் பேசுங்க ஒரு லட்சம் வெல்லுங்க, நம்ம வீட்டு கல்யாணம் மாதிரியான நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளும்  விஜய் டிவில வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா இந்த நிகழ்ச்சிகளும் இப்பலாம் எரிச்சலைத் தருது.  சேனல் மாத்திக்கிட்டு வரும்போது என்ன நிகழ்ச்சின்னு தெரியல ரோபோ சங்கர்லாம் இருந்ததால கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு பார்த்தேன்.

நீங்க ஃபர்ஸ்ட் நைட்டுக்குப் பால் கொண்டுப் போனீங்களா!?ன்னு அறிவார்த்தமா  நடுவரா வந்தவர் கேட்க, பால்லாம் கொண்டு போகலை நானே போய்ட்டேன்னு நிகழ்ச்சில பங்கு பெற்றவர் திறமையா பதில் சொல்ல, சுத்தி இருந்தவங்கலாம் ஆஹா! ஓஹோ!ன்னு கைத்தட்ட, ஒருதரம் எப்படி ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ளப் போனீங்கன்னு நடிச்சுக்காட்டுங்கன்னு நடுவர் சொல்ல...., அதுக்கு மேல எதாவது சொல்லிடுவாங்களோ!! பசங்களாம் டிவி பார்க்குதுங்களேன்னு நான் சேனலை மாத்திட்டு வந்துட்டேன். இந்த விஜய் டிவிக்கு என்ன ஆச்சு!?

Friday, April 25, 2014

அழகிய நம்பிராயர் திருக்கோவில் திருக்குறுங்குடி - புண்ணியம் தேடி

புண்ணியம் தேடிப் போறப்  பயணத்துல இந்த வாரம் நாமப் பார்க்கப் போறது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் திருக்கோவில். இது திருநெல்வேலி, நாகர்கோயில் வழித்தடத்தில் உள்ள வள்ளியூரில் இருந்து சுமார் 5 மைல் தொலைவில் இருக்கிறது இந்தத் திருத்தலம் .இங்கே உள்ளவர்களால் நம்பிகோவில் என அழைக்கப்படுகிற திருக்குறுங்குடி  அழகிய நம்பிராயர் திருக்கோவில்.
இந்த ஊரைப் பத்தினப் பெயர் காரணங்கள் சொல்லனும்னா திருபாற்கடலில் பள்ளிக் கொள்ளும் நாராயணன், வராஹ அவதாரம் கொண்டு, தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கிதனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் "குறுங்குடிஅப்படின்னு சொல்லப்படுகிறது.மேலும் திருமால், வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது அவரது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாகப் புராணத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள்  குறுகிய மன்னன் ஒருவன் குடி இருந்த இடம் என்பதால் ”குறுங்குடி” என்று பெயர் வந்ததாகவும், இந்த ஊர் தெய்வ ஸ்தலங்கள் அமைந்த இடமாக இருப்பதால்குறுங்குடிக்கு முன்னால் திரு சேர்த்து ”திருக்குறுங்குடி” என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தத் திருக்கோவில் சுற்றளவு மிகப்பெரியது. இது திருக்கோவிலின் நுழைவு வாயில். சுவர்கள் எல்லாம் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிலைகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அழகிய நம்பிராயர் கோவில், தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முந்தையதுன்னும் சொல்லப்படுகிறது. மேலும் 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று . மகேந்திரகிரியின் அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவில் ”திருமங்கை ஆழ்வார்” கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. 
நுழைவு வாயிலைத் தாண்டி உள்புறம் வரும்போது ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதன் பக்கவாட்டில் ஒரு குட்டி யானை கட்டபட்டு இருக்கு. அதையும் தாண்டி சித்திரகோபுரம் இருக்கு. இந்த சித்திரக் கோபுரத்தில் கல்லிலும், மரத்திலும் மிக நுட்பமான வேலைப்பாடுகளுடைய அமைப்பு காணப்படுகிறது.  அதுக்கு முன்னாடி ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் அழகிய பெரிய சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கு.  ராமாயணக் காலத்தில் ராமரும், லட்சுமணரும், ராவணனுடன் போர் புரிவதற்காக வானரப் படைகளுடன் தங்கிய இடம் இந்த மகேந்திரகிரி மலை என்று கூறப்படுகிறது.
யானையைக் கட்டி இருக்கும் மண்டபத்தின் முன்வாயில் இது. சிற்பங்களெல்லாம் பெரிய அளவில் துல்லியமாக ஒரு சிற்ப கூடத்திற்கு வந்ததுப் போல பிரமிப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கு. அதற்கு நேரே கோவிலின் இரண்டாம் நிலை பிரகாரம் இருக்கு. இந்தத் திருக்கோவில் ஜீயர் மடம் பராமரிப்பில் இருக்கிறது. 
இதுதான் இரண்டாம் நிலை நுழைவாயில். உள்ளே நுழையும் போது ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சதிலுள்ள அவருடைய தியான ஸ்லோகமான
 ஸ்ரீமத் க்யாத குரங்க நகரே திஷ்டந் ஸ்வபந் ஸஞ்சரந்
ஆஸீநச்ச தராதராக்ர விலஸத் தேவஸ்ஸ பூர்ணாஹ்வய:
தாத்ருங் மந்திர நாயிகாஞ்சந ஸரஸ் தீர்த்தம் சபஞ்சக்ரஹா
க்யாதம் தத்ர விமாந மீசகஜ யோஸ் ஸாக்ஷாத் க்ருத: ப்ராங் முக:
ன்னு உச்சரித்துக்கொண்டே உள் நுழைவோம்.

இதன் பொருள்  ”திருக்குறுங்குடி என்னும் இத்திவ்யத் தேசத்தில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, மலைமேல் நம்பி, பூர்ண நம்பி ஆகிய திருப்பெயர்களுடன் திகழும் எம்பெருமானே நமஸ்காரம். குறுங்குடிவல்லி நாச்சியாருடன், பஞ்சக்கிரஹ விமான நிழலில், அஞ்சன புஷ்கரணிக் கரையில் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் திகழும் பெருமாளே நமஸ்காரம். சிவபிரானுக்கும், கஜேந்திரனுக்கும் காட்சி கொடுத்தருளியதுபோல எங்களுக்கும் காட்சி நல்கி வாழ்வளிக்கும் பெருமாளே நமஸ்காரம்” என்பதுதான் அச்சுலோகத்தின் பொருள், மனதார ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டே பெருமாளை சேவிக்கஉள்ளே செல்லலாம்.
இதுதான் நம்பியை தரிசிக்கச் செல்லும் பிராதான வாயில். இங்கே  திருநம்பியை மூன்று வடிவில் தரிசிக்கலாம். நிற்கின்ற கோலத்திலும், அமர்ந்து இருக்கிற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசிக்கலாம். இந்த மூவர் தவிர, இங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாற்கடல் என்ற ஒரு தலம் உள்ளது. இங்கே திருப்பாற்கடல் நம்பி அருள்பாலிக்கிறார். ஒரு அரக்கன், தன்னை உணவுக்காகக் கொல்ல முயன்றபோது, அந்தணன் ஒருவன் அவ்வாறு செய்வது அதர்மம் என்று முறையிட்டான். ஆனால், ‘அதுதான் என் தொழில், என்னைப் பொறுத்தவரை அதுவே என் தர்மம்,’ என்று அரக்கன் வாதாடினான். இருவரும் இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தபோது, திருமால் ஒரு வேடனாக அவர்களிடம் வந்து, அவர்களை சமாதானப்படுத்தி, அவ்விருவருடைய கடமைகளை அறிவுறுத்தினார். இருவருக்கும் ஜன்ம சாபல்யம் கொடுக்க விரும்பிய அவர், அவர்களை திருப்பாற்கடலில் நீராடுமாறு பணித்தார். அவ்வாறே அவர்கள் செய்து மோட்சம் ஏகினார்கள். பெருமாளும் அங்கே கோயில் கொண்டார். இதுதான் திருப்பாற்கடல் நம்பியின் தலத்தின் புராணம். திருப்பாற்கடல் எனப்படும் இந்த ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறையும் அதன் மீது ராமானுஜர் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தப் பாறை வட்டப்பாறை என்றழைக்கப்படுகிறது.
நுழைவாயிலைத் தாண்டி இருக்கும் வாயிலின் சுவரில் செதுக்கப்பட்டு இருக்கும் சித்திரங்கள் இவை.  அதேப்போல ஐந்தாவது நம்பி திருக்குறுங்குடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் காணப்படும் ஒரு குன்றின் மீது அருள்பாலிக்கிறார். இவர் திருமலை நம்பி. இந்த ஐந்து நம்பிகளின் உற்சவ மூர்த்திகளை பிரம்மோற்சவ திருவிழாவின் போது ஒன்றாக .தரிசிக்கலாம்.  
சித்திரக் கோபுரத்தைத் தாண்டி சன்னதிக்குள் செல்லும் வழி இது. கோபுரத்தில்தான் எத்தனை வகையான நுணுக்கமான சிற்பங்கள்!!?? அதெல்லாம் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோபுரத்தைக் கடந்துச் சென்றால் கோயில் கொடிமரம்.  சன்னிதிகு நேராக இல்லாமல் பலிபீடத்தில் இருந்து நகர்ந்த நிலையில் இருக்கு. இது ”நம்பாடுவான்”ன்ற பக்தன், பெருமாளைத் தரிசனம் செய்ய இடையூறாக இருப்பதைக் கண்டு விலகி நின்ற கொடிமரம், இன்னமும் அப்படியே இருக்கு. இது கோவில் முதல்நிலை உள்பிரகாரம் ஆகும்.  இந்த திருஸ்தலத்தை பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், பிள்ளைப்பெருமாள்  தவிர, புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தரும்கூட இந்தத் திருக்குறுங்குடித் தலத்தைப் பற்றி பாடல்கள் பாடி இருக்கிறார்கள்.
     
இது மணவாள மாமுனிகள் சன்னதி. பொதுவாக சிவன் கோவில்களில்தான் சித்தர்கள் காட்சியளிப்பார்கள். இங்கே அதிசயிக்கும் வகையில் இககோவிலினுள்ளும், மலைமேலும் பல்வேறு சித்தர்களின் சிலைகள் இருக்கு. அங்கே இருப்பதாகவும் சொல்லபடுகிறது மணவாள மாமுனிகள் சன்னதியில்  உள்புறம் ஒரு பெரிய மண்டபம் இருக்கு. அதன் தூண்களஎல்லாம் சிற்ப வேலைபாடுகளுடன் அழகாக இருக்கு இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்யவதம் நுணுக்கமான சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .   
பெருமாள் கோவிலில் காணமுடியாத பல அம்சங்கள் இந்த திருக்கோவிலினுள் காணலாம். இங்கே ஈசானிய மூலையில் ஊர் எல்லைக் காளியாக ”குறுங்குடி அம்மன் சன்னதி” இருக்கு. மேலும், இந்த திருகுறுங்குடியைப் பற்றி சொல்லும்போது  வராகரின் மடியில் அமர்ந்தபடி, கைசிக புராணத்தை வராகர் சொல்லக்கேட்டுப் பெரிதுவந்து, தானும் பூலோகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பரந்தாமனின் புகழ் பரப்ப வேண்டுமென்று விரும்பினார் தாயார். அதனாலேயே ஸ்ரீவில்லிப்புத்தூரில், பூமித்தாயின் குழந்தையாக, ஆண்டாளாக அவதரித்தார் ஆகவே ஆண்டாளின் பிறப்புக்கு இந்த திருகுருங்குடியே காரணம் என்றும் சொல்லபடுகிறது
சிவபெருமானுக்காக இங்கே ஒரு தனி சன்னதியே இருக்கு. மகேந்திர மலையின் அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் மகேந்திரகிரீஸ்வரர் ன்னு அழைக்கபடுகிறார். இந்த சன்னதி,  நின்ற நம்பி சன்னதிக்கும், கிடந்த நம்பி சன்னதிக்கும் இடையில் இருக்கிறது. இந்தக் கோயிலில் இருக்கும் மடப்பள்ளியில் பெருமாள், பரமசிவன் இருவருக்கும் சேர்த்தே நிவேதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றதாம். பெருமாள் பிரசாதங்கள், சிவ பக்தர்களுக்கும். சிவன் பிரசாதங்கள் பெருமாள் பக்தர்களுக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும் வழக்கம் இருப்பது இந்த கோவிலின் மேலும் ஒரு சிறப்பு.
இந்தத் திருக்கோவில் மிகவும் பிரம்மாண்ட அளவில் இருக்கிறது. கோவிலின் முதல் வெளிப்பிரகாரச் சுற்றிலே திருக்குளம் அமைந்து இருக்கிறது.  இது மகேந்திரகிரீஸ்வரர் சன்னதியின் முன்பக்கம். இங்கிருந்து பார்த்தால் தெரிவது சித்திரக் கோபுரம். இப்பொழுது அதில் பராமரிப்பு பணிகள் நடந்துகிட்டு இருக்கு. அடுத்து நாம தரிசிக்கப்போறது இந்த ஸ்தலதின் வயதான யானை.  
இதற்கு சுமார் 25 வயது இருக்கலாம்னு சொல்லப்படுகிறது . மகேந்திரகிரீஸ்வரர் சன்னதிக்கு பக்கத்தில் இருக்கிறது இந்த யானை. அழகாக திருநாமம் இடப்பட்டு சாதுவாக காட்சியளித்தது பொதுமக்கள் இந்த யானையை பார்வை இடும்போது வாழை பழங்கள் போன்ற பொருட்களை கொடுக்கின்றனர். யானைகளை கேமராவில் படம் பிடிக்கும்போது, பிளாஷ் இட்டு படம் எடுக்காதீர்கள் யானை மிரளும் வாய்ப்பு உண்டு. அமைதியாகப் பார்த்துவிட்டு செல்வோம். இனி  பிரகாரம் வலம் வரத் தொடங்கும் முன் இந்த திருக்கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்....,
உள்பிரகாரத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கு. அதைவிட அதன் கலைநுணுக்கம ஆச்சர்யமளிக்கும் விதமா இருக்கு.  இந்த ஸ்தல புராணத்தின் சிறப்பு இசையாலும் இறைவனை அடையலாம் என்ற வராக புராணத்தின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த திரு ஸ்தலத்திற்கு மேற்கே இருக்கும்  ”மகேந்திரகிரி”அடிவாரத்தில் வசித்து வந்த பாணர் குடியில் பிறந்த ”நம்பாடுவான்” இந்த ஸ்தலத்து பெருமாள் மீது மிகவும் பக்தியுடையவனாக இருந்தாராம். இவர் எப்பொழுதும்  ”கைசிகம்” என்ற பண்ணை இசைத்து ஆண்டு தோறும் கார்த்திகை மாதம்,  சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டு எம்பெருமானை பாடிப்பரவசித்து வந்து, தொழுது செல்வதையே தொண்டாகக் கொண்டு இருந்தாராம். 


அப்படி பாடித் தொழுவதற்கு ”மகேந்திரகிரி” மலை காட்டுப்பாதையை கடந்து வரும்போது அங்கிருந்த பிரம்மராட்சசன் ஒருவன் ”நம்பாடுபவனைப்” பிடித்துக்கொண்டு சாப்பிட முயற்சித்தானாம். அதற்கு நம்பாடுவான் நான் தற்போது விரதம் பூண்டுள்ளேன். விரதம் முடித்துப் பெருமாளை வணங்கிவிட்டு மீண்டும் இவ்வழியேவரும்போது உனக்கு உணவாகிறேன் என்று சொல்ல ராட்சசன் இதை நம்ப மறுத்த போது  நான் திருமாலின் தூய பக்தன் பொய் சொல்லமாட்டேன் என்று சத்தியம் பண்ணிக்கொடுக்க அவனும் சம்மதித்து அனுப்பினான் .
திருக்கோவில் பிரகாரங்களை வலம் வந்தவாறே ஸ்தல புராணத்தை தொடர்ந்து பார்க்கலாம்.., அப்படி ”நம்பாடுவான்” பிரம்ம ராட்சஷனுக்கு கொடுத்த வாக்குப்படி இதுவே நமக்கு கடைசி யாத்திரை என எண்ணி பாணர் இனத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பதால் வழக்கம் போல கோவிலின் கொடிமரத்து முன்பு இனி இந்த ஸ்தலத்து எம்பெருமானைப் பார்க்கமுடியாதே என்ற வருத்தத்தில்  ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தபோது திடீரென துவஜஸ்தம்பம் விலகி, எம்பெருமான் காட்சி தெரிய பரவசப்பட்டு விரதம் முடித்து சந்தோஷமாக ”நம்பாடுவான்” திரும்பினான். நம்பாடுவனுக்காக விலகிய நகர்ந்த கொடிமரம் இன்னமும் அப்பயே விலகி இருப்பதை இங்கு காணலாம்.
அப்படி தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது பிரம்மராட்ஷசனை பார்க்க செல்லும் காட்டு வழியில் ”திருக்குறுங்குடி” பெருமான் ஒரு கிழ பிராமண  வேடம் கொண்டு இந்த வழியே செல்லவேண்டாம் இங்கே ஒரு பிரம்மராட்ஷசன் இருக்கிறான். நீ சென்றால் அவன் உன்னை பிடித்து தின்று விடுவான் என சொன்னார். அதற்கு நம்பாடுவான் இறைவன் பெயரால் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறேன். நான் சத்தியம் தவறமாட்டேன் என சொன்னாராம் ”நம்பாடுவான்”.  அப்பொழுது மாயக்கண்ணன் தன மாயலீலையாக ”நம்பாடுவானிடம்” ஆபத்து நேரிடும் காலங்களிலும் பெண்களுக்கு விவாகம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும் பொய் சொன்னாலும் சத்தியம் செய்து கொடுத்தாலும் அது பாவமாகாது என்று உபதேசிக்க ”நம்பாடுவானோ” உயிர் போகும் சந்தர்பத்திலும் கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என உறுதிப்பட சொல்ல அதைக்கண்டு மகிழ்ந்த  பெருமாள் தன் சுயரூபம் காட்டி மறைந்தாராம்.
பிறகு பிரம்ம ராட்சஷனை சந்தித்த நம்பாடுவான் தன்னை உணவாக உட்கொள்ளும்படி சொல்ல என்ன மாயம் செய்தாய் என் பசி என்னைவிட்டு போயிற்று எனக்கு பாவவிமோசனம் பெற நீ பெற்ற விரதத்தின் புண்ணியத்தின் கால்பாகமாவது கொடு என சரணடைந்தான்.  
அவனை அன்போடு அரவணைத்த நம்பாடுவான் உனக்கு ஏன் இந்த பிரம்மராட்சஷ உருவம் வந்தது எனக் கேட்க...,அந்த ராட்சஷன் தான் முற்பிறவியில் யோகஷர்மா என்னும்  பிராமணனாக இருந்தபோது யாகம் செய்வதை இழிவாக பேசியதாகவும், அதை உண்மையான பற்று இல்லாமல் செய்தமையாலும் இந்த கதிக்கு ஆளானேன். அதனால் இங்கே அலைந்து திரிந்து, உன்னைப்போன்ற உண்மையான பக்தர்களின் தரிசனத்தாலும், ஸ்பரிசத்தாலும் எனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்பதால் காத்திருந்தேன். நீ உண்மையான பக்தி உள்ளவன் என நிருபித்து விட்டாய். அதனால் நீதான் எனக்கு சாபவிமோசனம் கொடுக்கவேண்டும் என வேண்டி நிற்க...., ”நம்பாடுவானும்” மனமுவந்து நான் ”திருக்குறுங்குடி” நம்பியை கைசிகம் என்ற பண்ணினால் பாடி தொழுதேன். அதனால் நான் பெற்ற பலத்தில் பாதியை உனக்குத் தருகிறேன் என்று சொல்ல அப்பொழுதே பிரம்மராட்ஷனின்  சாபம் நீங்கியதாம்.  இந்த வரலாற்றை வராக மூர்த்தியே தன மடியில் இருக்கும் பிராட்டியிடம் சொல்வதாக கைசிக புராணத்தில் கூறப்படுகிறது.
இது வெளிப்புறம் இருக்கும் மண்டபத்தின் தூண்கள்.  எல்லாம் நுணுக்கமாக செதுக்கப்பட்ட பிரமாண்ட சிலைகள். இங்கே மிகவும் சிறப்பு அம்சம் என்னானா எங்கேயும் பார்க்கமுடியாத சில அதிசயங்கள் இந்த திருகோவிலில் இருக்கு.


உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது அளவில் பிரமாண்டமாக இருக்கும் காலபைரவர் பெரும்பாலும் சிவன்கோவில்களில் மட்டுமே காலபைரவர் அருளாட்சி புரிவார். இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்கவகையில் இருக்கிறார். இந்த திருமேனி முக்கால்பாகம் கல்லினாலும், கால்பாகம் சுதையினாலும் உருவாக்கப்பட்ட  இச்சிலை 300 வருடங்களுக்கு முன்னால் மூலிகை வண்ணத்தால் அழகுப்பட வண்ணம் தீட்டியது இன்னமும் மெருகுக் குலையாமல் அழகாக இருக்கிறது. திருமண வரம் வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும் இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கிறதாம். இவருக்கு தயிரன்னமும், வடமாலையும், பூசட்டையும் படைக்கப் படுகிறது.
இதைவிட இங்கே பெரிய அதிசயம் என்னனா,  இவருக்கு இடதுபக்கத்தில் இருக்கும் விளக்கு, தூணில் மேல்பகுதியில் ஒரு விளக்கு, கீழ் பகுதியில் ஒரு விளக்கு. இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கு. இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாக காட்சியாளித்தாலும்,  மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசையும் இது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூசை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூசு விடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவது காலபைரவரின் மூச்சு காற்று ஏற்படுத்தும் அசைவு . எங்கேயும் காற்று வருவதற்கான வாய்ப்பு இல்லாத அமைப்புக் கொண்டது இவ்விடம். 
இதையும் தாண்டி நாம உள்பிரகாரம் சென்றால் அங்கே இன்னும் ஒரு அதிசயம் காத்து இருக்கு. உள்பிரகாரத்தில படம் எடுக்க அனுமதி இல்ல மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் விமானம் பஞ்சகேத விமானம்ன்னு சொல்லப்படுது.  இங்கே மோட்சம்  வேண்டி நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை  செய்யப்படுகிறது. ஆனா எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய அதிசயம் அது இங்கே இருக்கும் மூலவரை தரிசனம் செய்வது ஒரு உயிரோட்டமான தரிசனமாக இருக்கும்.  பட்டர் அந்த சிலையின் முகத்தில் தீபாராதனை காட்டும்போது அந்த விழிகள் அப்படியே அசைவது போல தோற்றமளிக்கும் காட்சி அதிசயத்திலும் அதிசயம்.


இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக தீபம் காட்டுவதற்கேற்ப அந்த விழிகள் அசையும். அதை பார்க்கும்போதுஉயிரோட்டமாக இருக்கிறது. அது தீபத்தின் அசைவினால் அப்படி தெரிகிறது எனவும், இல்ல சிலை அமைப்பு அப்படி வடிவமைக்கப்பட்டது எனவும் இரு வேறு பேச்சுக்கள் நிலவுது. ஆனால் எனக்கென்னவோ உண்மையில் எம்பெருமான் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என தோன்றுகிறது.  அவர் அருட்பார்வை பூரணமாக கிடைக்கும் என்ற எண்ணம் நமக்குள் வருகிறது  .
இங்கே மற்றொரு சிறப்பு அம்சம் என்னனா இங்குள்ள அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு "குறை ஒன்றும் இல்லை' என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இந்த சம்பிரதாயம் இன்னமும் நடைமுறையில் இருக்கு.


தாயார் ”குறுங்குடி வல்லி நாச்சியார்” என்ற பெயரில் தனியே சன்னதி  கொண்டிருக்கிறார். மேலும் குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இங்கே வந்து வழிபாடு செய்ததால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயரும்  உண்டு என சொல்றாங்க. அடுத்து நாம கோவில் சுற்றுக்குள்ளேயே இருக்கும் தீர்த்தக்குளத்தை பார்க்கலாம்.
இங்கு இருக்கும் தீர்த்தகுளம் திருப்பாற்கடல் மற்றும் பஞ்சதுறை என்று அழைக்கபடுகிறது.   இந்த ஸ்தலத்தைப் பற்றி சொல்லும் திருமழிசையாழ்வார் 
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு 
வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய் திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துண்ணையே எனக் குறிப்பிடுவார்
கறவையினங்கள் (பசுக்கூட்டங்கள்) நிறைந்து விளங்கும் பொய்கையில்,
அப்பொய்கை கரையோரத்தே வளர்ந்தோங்கியுள்ள கரிய தோற்றமுடைய
பனைமரங்களிலிருந்து பனம்பழங்கள் வீழ்கின்றன. அவ்வாறு வீழும் பனம்பழங்களை அப்பொய்கையில் வாழும் வாளைமீன்கள் பிடித்து தின்பதன் பொருட்டு எகிறிப் பாய்கின்றன. இத்தகைய வளம்வாய்ந்த குறுங்குடியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே! திரண்ட தோள்களை உடைய இரண்யனை இரண்டு கூறுகளாக பிளந்து போட்ட நரசிங்கனும் நீதானே! என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
இது கோவிலின் உத்திரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஒரு ஜீயரின் சிலை. இங்கே இருக்கும் ஜீயர் மடத்தை நிறுவியவர் ”ராமானுஜர்”. ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் வைஷ்ணவதை போதிக்க திருவனந்தபுரம் சென்றாராம். அப்பொழுது அவரால் தன் தொழிலுக்கு ஆபத்து வரும் என அஞ்சிய நம்பூதிரிகள் அனந்தபத்பனபனிடம் முறையிட, அவரும் தன எதிரே இருந்த கருடாழ்வாரை நோக்கி, இவரைக் கொண்டு சென்று திருக்குறுங்குடியில் விட்டு வா! எனச் சொல்ல, கருடனும் அவரை திருக்குறுங்குடியில் விட்டாராம். அதனால்தான் இன்றும் திருவனந்தபுரம் அனந்தபத்பநாபபுரம், ஷேத்திரத்தில் கருடன் இல்லை என சொல்லப்படுகிறது.

ராமானுஜரும் காலையில் பார்த்தபோது திருகக்குறுங்குடியில் இருந்ததால் இது அவன் லீலை என நினைத்து தன் சீடன் ”வடுகநம்பியை”தின பூஜைக்காக அழைத்தாராம். திருக்குறுங்குடி எம் பெருமானே வடுகநம்பியாய் வந்தாராம். பின்பு, இராமானுஜரும் திருமண் காப்பிட்டு விட்டு, திருமண் பெட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு வடுகநம்பி இராமானுஜரின் பின்னேவர, பெருமாளை வணங்க திருக்குறுங்குடிக்கு வந்தாராம். கோவிலின் உள்ளே நுழைந்ததும் துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு, இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டாராம். அப்பொழுது வடுகநம்பிக்கு ராமாநனுஜர் இட்ட திருமண் பெருமாளுடைய நெற்றியில் இருப்பது கண்டு வடுகநம்பி வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என நினைத்து இப்பெருமானுக்கு வடுகநம்பி என அழைத்தாரம் இராமானுஜர். இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்த வடுகநம்பியின் கனவில் தோன்றிய பெருமாள் இராமானுஜர் திருக்குறுங்குடியில் இருப்பதாக உணர்த்தினார் என்றும் இப்பெருமாளின் அற்புதங்களை சொல்வார்கள் 
இத்திருகோவிலுக்கு  உதயமார்த்தாண்ட வர்மா என்னும் சேர மன்னன், ராமவர்மா என்னும் அரசன் மற்றும் திருவிதான்கோட்டு மன்னர்கள் இந்த திருக்கோவிலுக்கு பல நன்கொடைகள் மற்றும் களப்பணிகள் எல்லாம் செய்து இருகின்றனர். நம்பாடுவான் வேடமும், கிழபிரமணன் வேடமும் இட்டு இயல், இசை, நாடக அம்சங்கள் நிறைந்த கைசிக புராணம் இன்றும் நாடகமாக நடிக்கப்படுகிறது. இதில் நடிப்பவர்கள் அதற்கு முன் 45 நாட்கள் கடுமையான விரதத்தை அனுசரித்து அப்புறம்தான் நடிப்பார்களாம். இனியும் நிறைய பல பெருமைகளைக் கொண்ட இந்தத் திருத்தலத்தின் சிறப்புகளை எழுதினால் இந்த பதிவு நீண்டதாக ஆகிவிடும் என்பதால் இங்கிருந்து விடைபெற்று மலைமேல் இருக்கும் நம்பியைக் காண அடுத்தவாரம் செல்லாம்....,