Friday, September 20, 2019

ஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள்- பாண்டிச்சேரி சித்தர் சமாதிகள்.

புதுவை சித்தர்கள் வரிசையில்  சில சித்தர்களை பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இந்தவாரம் நாம பார்க்கப்போறது ஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள். பெரும்பாலும் சித்தர்கள் அவதரிக்கும்போதே அவர்களுடைய பாதைகளும், பயணங்களும் அந்த ஆதிபரம்பொருளால் தீர்மானிக்கப்பட்டவை. இதேப்போல்தான் சாதா மனிதர்களையாகிய நம் வாழ்க்கையையும் எப்படி வாழ்ந்து இறைவனை அடையவேண்டும் என்று கர்மவினை தீர்மானித்தாலும், உலகமாயையில் சிக்கிக்கொள்ளும் நம்மால் அறியமுடியாமல் போய்விடும். ஆனா, சித்தர்களெல்லாம் தங்கள் சித்தமெல்லாம் சிவனை மட்டுமே நினைப்பவர்கள். அவனது அன்பு வடிவில் திளைப்பவர்கள். அதனால் அவர்களுக்கு முக்காலமும் உணரமுடியும்அன்னையின்மீது பக்திகொண்ட நாராயணன் என்ற பக்தரின் கனவில் அன்னை பராசக்தி தோன்றி எனக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டுவாஉனக்கு வழிக்காட்ட குருவாய் சித்தன் ஒருவன் உன்னை தேடிவருவான் என்று கூறி மறைந்தாள். அவரும் அன்னைக்கு கோவில் எழுப்பினார். அன்னை அவரின் கனவில் சொன்னதுப்போல் சித்தர் ஒருவர் அந்த கோவிலை தேடிவந்தார்அவர்  அக்கோவிலுக்கு வந்து சேர்ந்த அன்றுமுதல் வைத்திக்குப்பம் என்னும் அந்த இடமே சித்தரின் ஆசியில் மக்கள் சுபீட்சமுடன் வாழ்ந்தனர்.
சரி, யார் இந்த அக்கா சுவாமிகள் எனப் பார்க்கலாமா?! இவரது பிறந்த வருடம் சரியாக தெரியவில்லை. ஆனா, 1800 களின் தொடக்கத்தில் இருந்து இவர்  அறியப்படுகிறார். இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வார்கோவிடை  என்னும் நகரத்தில் செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் மாசிலாமணி என்னும் கண்ணையன். தன்னுடைய சிறுவயதில் பணம், செல்வச்செழிப்பு இருந்தபோதிலும் சுகபோக வாழ்க்கைமீது நாட்டம் கொள்ளாமல் சதா சிவனை நினைத்தே வழிபாடு செய்வாராம். சிறு வயதில் தங்களுடைய மாடுகளை மேய்க்க செல்வது இவரது வழக்கம். அப்படி செல்லும்போது,  மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, தானே களிமண்ணால் பிள்ளையார் செய்து, காட்டில் கிடைக்கும் பூக்களால் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்து, பின்னர் கிடைக்கும் கனிகளைக்கொண்டு பூஜை செய்து மகிழ்வார். அப்படி பிள்ளையாரை வணங்கி வந்த ஒருநாளில், இவர் வணங்கி வரும் அதே பிள்ளையாரை ஒரு பெண் வணங்கினாள். கண்ணையனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் கையால் செய்து, தான் வணங்கி வரும் பிள்ளையாரை ஒரு பெண்ணும் வணங்குவதைக் கண்டு மகிழ்ச்சி பொங்க அந்த பெண்ணின் கையை பிடித்து பக்தியின் பரிசாக முத்தமிட்டார். அப்பெண் கோபங்கொண்டு உன் அக்கா வயதிருக்கும் என் கையை பிடித்து முத்தம் கொடுக்கிறாயா!? “ எனக்கோபித்து கடுமையாக பேசி அவ்விடம் விட்டு சென்றாள். அப்பெண் கோபமாய் பேசியதை சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதையே நினைத்து நினைத்து மருகினார். பெண் இன்பத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதற்காக வேண்டி எல்லா பெண்களையும் தன் சகோதரிகளாக கருதினார். எந்த பெண்ணைக் கண்டாலும் அக்கா” “அக்காஎன்றே கூப்பிடுவார். அதனால் எல்லோரும் இவரை "அக்கா சாமியார்என்றும்  பின்னாளில் அக்கா பரதேசி சாமியார் என்றும் அக்கா சித்தர் என்றும் அழைத்தனர். கடைசியில் குரு அக்கா சுவாமிகள்என்ற பெயரே கண்ணையனுக்கு நிலைத்து விட்டது.
ஆன்மீகத்தில் இருந்த நாட்டம் காரணமாக யோகநிலையை அடைய, ஒரு யோகியிடம் சென்று யோகமார்க்கங்களை பயின்றார். அப்பொழுது தன் குருவுக்கு ஏற்பட்ட தீவினையை அகற்றி தன் குருவுக்கே போதனை செய்து அவருக்கும் மிஞ்சி விளயங்கியதால், அவருடைய குரு இவரை சற்குருநாதர் என அழைத்தார். இறைவன் அருளால் நாம் ஒருபடி உயர்ந்தால் போதும். நம்முடைய பெருமையை உணரவைக்க இறைவன் பல சோதனைகளை நமக்கு வைப்பான். ஆனால் முடிவில் நம்மை காப்பாற்றி தன்னுள் அழைத்துக்கொள்வான். அதேப்போல் ஒரு சோதனை இவருக்கும் வந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பெரும் செல்வந்தர் சுவாமிகளின் பெருமையை நம்பாமல், கேலி செய்தார். சுவாமிகள் என்ன, அபிஷேகம் செய்து கொள்ளுமா!? ” என்று ஏளனம் செய்தார். சுவாமிகளும் சிரித்துக்கொண்டே ஓ தாராளமாக செய்யலாமேஎன்று பதிலளித்தார். சுவாமிகளை அமரச் செய்து, வேண்டுமென்றே அவர்மேல், சுடச்சுட அன்னத்தை வடித்துக் கொட்டினார்கள். சுவாமிகள் அமைதியாக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அன்னாபிஷேகம் முடிந்தது. சிறிது நேரம் கழித்து சாதத்தின் சூடு ஆறியதும், “சுவாமிகள் உடல் வெந்து சுடுகாயங்களுடன் பரலோகம் சென்றிருப்பார் என கேலி பேசியவாறு. அவர் மேலிருந்த சாதத்தை விலக்கிப் பார்த்தனர். சுவாமிகள் ஆடாமல், அசையாமல் யோகத்தில் இருந்ததைப் பார்த்து அவரின் சக்தியை உணர்ந்தனர். தங்கள் தவற்றை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் அன்னாபிஷேகம் செய்தவரின் பார்வை பறிபோய் விட்டது.
மீன்,மாமிசங்களை தன கையாலே தொடாத சற்குருநாதரிடம்ஒருநாள் அவரின் மேலதிகாரி மீனைவாங்கி துண்டுத்துண்டாக வெட்டி, தனது வீட்டில் கொண்டுபோய் கொடுத்துவர  சொன்னார். சற்குருநாதர் மனம் வருந்தி அதை, சாப்பிடுகின்ற ஒரு பெரியம்மாள் வீட்டில் கொடுத்து விட்டு வந்து விட்டார். அன்றிரவு, அம்மேலதிகாரி தன்னுடைய வீட்டிற்கு மீன் வராததைக் கண்டு கோபங்கொண்டு, சற்குருநாதரை தேடி அவர் இருப்பிடம் சென்றார். அங்கு சற்குருநாதர் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, மறுநாள் அவரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்து, வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் அதிகாரி சற்குருநாதரிடம் மீனைப் பற்றி விசாரித்தார். மீன் பத்திரமாக இருப்பதாகக் கூறி அப்பெரியம்மாளிடமிருந்து வெட்டிவைத்த துண்டு துண்டான மீனை வாங்கிக் கொண்டு வந்து காட்டினார். அதைக் கண்ட அதிகாரிக்கு கோபம் அதிகமானது. இரவு மீனை சாப்பிடவிடாமல் கெடுத்துவிட்டானே என்று கொதித்தார். மேலதிகாரியின் கையிலிருந்த செத்த மீன்கள் உயிர்பெற்று துள்ளிக் குதித்தன. அதைக்கண்ட மேலதிகாரி அதிர்ச்சியடைந்தார். உடனே சுவாமிகள், தம்முடைய உடுப்பைக் கழற்றி வைத்து விட்டு சந்நியாசிகளுக்கே உரித்தான கோமணத்தை (கவுபீணம்) அணிந்துக்கொண்டு, நள்ளிரவில் மேலதிகாரி வீட்டில் நடந்தவைகள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அரசாங்கத்திடம் சொல்லி, .“ நாளை சாகும் பிணங்கள் இன்று செத்த பிணத்தை தின்னும் மனிதரிடம் சேவகம் செய்ய விரும்பேன் என்று கூறிவிட்டு மறைநிரந்த வேதபுரி என்று அழைக்கப்பட்ட புதுவையை நோக்கி புறப்பட்டார்.
புதுவைக்கு வந்த சுவாமிகள் வாழைக்குளம் என்னும் பகுதியில் தங்கியிருந்து சிவத்தியானம் செய்து வந்தார். ஆத்ம சாதனையில் வெற்றியும் கண்டார். அப்பொழுது புதுவையில் ஆத்ம ஞானிகளின் பலர் இருந்து சாதனைகள்  பல செய்துவந்தனர். மண்ணை உருட்டிக்கொண்டே ஒரு சித்தர்  ஆத்ம சாதனை செய்தார். அவர் பெயர் மண்ணுருட்டி சுவாமிகள். அவரைபற்றியும் அடுத்தப்பதிவுகளில் பார்க்கலாம். காஞ்சிபுரத்தில் ஒரு சித்தர் இரு கைகளையும் மேலே தூக்கி ஆட்டிக்கொண்டே ஆத்ம சாதனை செய்து வந்தார். சற்குருநாதரோ  பனை ஓலையை மிக மெல்லியதாக கிழித்துக்கொண்டே ஆத்ம சாதனை செய்து வந்தார். சுவாமிகளுக்கு சாப்பாடு கொடுக்க பல அன்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.  யாராவது தங்கள் வீட்டில் சுவாமிகள் சாப்பிட வேண்டுமென்று விண்ணப்பித்தால், ஒரு ரூபாய் கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் சாப்பிடுவார். அந்த ஒரு ரூபாயை கொண்டு வந்து  சோலைத்தாண்டவ குப்பத்தில் வசித்த ஒரு அச்சுக்கூடத்தார் வீட்டில் கொடுப்பார். இப்படியாக பல மாதங்கள் கொடுத்து வந்தார். திடீரென்று ஒருநாள், ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு இன்றோடு முன்பட்ட கடன் தீர்ந்து விட்டது என்று சொல்லி சென்றார். சுவாமிகள் தன் ஊழ்வினையை எப்படி அழிப்பது என்று அறிந்திருந்தார்
சுவாமிகள் புதுவையில் அற்புதம் செய்வதறிந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்பார்வை பறிப்போன அந்த செல்வந்தரும் புதுவைக்கு புறப்பட்டு வந்தார். ஒவ்வொரு நிமிடமும், தான் செய்த பெரும் பிழையை நினைத்து நினைத்து வருந்தினார். இப்படியே சிலகாலம் சென்றது. ஒருநாள், சுவாமிகள் திடீரென்று அதோ தெரியும் திருமுருகனைப் பார்’’ என்று குருடரிடம் சொன்னார். “எனக்குதான் பார்வையில்லையே எப்படிப் பார்ப்பதுஎன்றார் அந்த குருடர்.நன்றாகப் பார் தெரியும் எனச் சுவாமிகள் சொல்ல, சுவாமிகள் சொன்னபடியே, அவர் சொன்ன திசையில்   ஆழ்ந்து நோக்க கண் பார்வை வந்த முருகன் திருவுருவம் தெரிந்தது. ஆத்ம ஞானிகள் சத்தியப் பொருள். அவர்களை கெடுக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள் என்பது கண்கூடான உண்மை. அதற்கு உதாரணமாக  ஒருநாள், தாசிகள் இருவர் சுவாமிகளை எப்படியாவது தங்கள் வலையில் விழவைத்து விடவேண்டும் என்று எண்ணி அவரிடம் நயவஞ்சகமாக பேசி புதுவை, மாதாக்கோவில் வீதியிலுள்ள தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.வீட்டின் கடைசி பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று அவர்மேல் கை வைக்க முயன்றனர். சுவாமிகள், சிரித்துக்கொண்டே வேகமாக வெளியே வர வீட்டின் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுந்தது.வீடே நாசமாகியது.
சுவாமிகள் முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் உள்ள குதிரைகுளத்திற்கும் செங்கேனியம்மன் கோவிலுக்கும் இடையே தமிழ் ப்ரமோதூக ஆண்டு ஆனி மாதம், ஆங்கில வருடம் 1872  ஜூன் மாதம் ஜீவ  சமாதி அடைந்து பரம்பொருளோடு ஐக்கியமானார். இவர் எல்லோரையும் அக்கா அக்கா என்று அழைப்பதை பார்த்தவர்கள் இவரை அக்கா சாமியார் என்றும், அக்கா பரதேசி  அழைத்தனர். அந்த சமாதியின்மேல், லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவாலயம் எழுப்பபட்டுள்ளது. சுவாமிகளின் சிஷ்யரான குரு நாராயண பரதேசி சுவாமிகளின் சமாதியும் அத்திருகோவிலினுள் இருக்கிறது. அந்தக்கோவில் அமைந்துள்ள தெருவிற்கு குரு அக்கா மடத்து வீதி எனப்பெயர். சுவாமிகள், தன் கையினால் செய்து பூஜித்து வந்த விநாயகர் புதுவைகந்தன் தியேட்டர் (வணிக வளாகம்) அருகில், 45 அடி ரோடு திருப்பத்தில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அந்த விநாயகரை சாலை விநாயகர்என அழைக்கிறார்கள். மண் பிள்ளையார் சிறுகச் சிறுக வளர்ந்து வருவதாக வயதான பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அனைத்து குணமும் கொண்டவரே போற்றி
காலங்கள் மூன்றையும் வென்றவரே போற்றி
தீவினையவும் தீர்ப்பவரே போற்றி
வெற்றிகள் பலவும் தருபவரே போற்றி
எண் இரு செல்வங்கள் அளிப்பவரே போற்றி
அருட்குரு அக்கா ஸ்வாமிகளே போற்றி போற்றி
நின்றன் புகழினை போற்றுகின்றோம்

நித்தம் நித்தம் உன்னை வணங்குகின்றோம்
ஜீவ சமாதிக்கோவில் முகப்பு வாயிலில் மூன்று கலசங்களுடன் கூடியதாகவும், தெய்வ பரிவாரங்களும் வீற்றிருக்கும் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தினுள் விநாயகர் ஞானகணபதியாகவும், பழனியாண்டவர் தண்டத்தினை  கையில் வைத்தபடி ஆண்டிக்கோலத்திலும்நடராஜர் சமேத சிவகாமியம்மனுடனும் காட்சிதரும் சன்னதிகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. நவகிரகங்கள் சந்நிதியும் இங்கு உள்ளன. சுவாமிகள் இங்கே முக்கியமாக மனோன்மனி அம்மையை வழிபட்டுவந்தாராம். ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்தார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் பலருக்கு வைத்தியங்களும் செய்துவந்தாராம். சுவாமிகள் இங்கே வைத்தியம் செய்துவந்தால் இந்த இடம் ஆரம்பத்தில் வைத்தியகுப்பம் என்றுதான் அழைக்கப்பட்டதாம். பின்னர் மருவி வைத்திக்குப்பம் என மாறிவிட்டது. சுவாமிகள் முதன்முதலில் புதுவைக்கு வந்து தங்கின இடம் இப்பொழுது அரசுப்பள்ளிக்கூடமாகவே இருக்கிறது. அந்த பள்ளிக்கு பெயரே அக்கா சுவாமிகள் அரசு நடுநிலை பள்ளி என்றே அழைக்கப்படுகிறதாம். இந்த ஜீவசமாதியில் வந்து மனதை ஒருநிலைப்படுத்தி வணங்கிவந்தால் சித்தரின் அருள் கிடைத்து துன்பங்கள் எல்லாம் விலகும் என்பது இங்கு வந்து வணங்கி செல்பவர்களின் அனுபவமாக இருக்கிறது. மீண்டும் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
நன்றிடன் 
ராஜி 

Sunday, September 15, 2019

எங்க வீட்டு தேவதைக்கு பிறந்த நாள்

உயிர்வலி கண்ட அந்த
ஐந்து மணிநேரப் போராட்டம்..
நெஞ்சுக்கூட்டுக்குள் யாரோ
கைவைத்து அழுத்தியது போன்ற ஒரு உணர்வு...

செத்துவிடலாம் எனத் தோன்றிய 
அவநம்பிக்கைக்கையின் இருளுக்கு
உன்முகம் பார்க்கப்போகும் துடிப்பு ஒன்றே
ஒளிக்கீற்று...

உன் அழுகைச்சத்தம் கேட்ட அந்த நொடி
பட்ட துன்பமெல்லாம் பறந்துப்போக
மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ...
என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்...

மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல
ரௌத்திரமும் பழகவேண்டுமென
கற்றுக்கொடுத்த ஆசான் நீ!! 
எனக்குள்ளிருந்த குழந்தைத்தனத்திலிருக்கும்
வைராக்கியத்தை உணர வைத்தவள்....

உலகம் புரியாமல் வளர்ந்த எனக்கு
உலகத்தின் கோரமுகத்தை காட்டிய முதல் ஆள் நீ...
அந்த கோரமுகத்திலிருந்து இன்று
என்னை மீட்பவளும் நீயே!

என் இரண்டாம் தாய் நீ....
அதனால்தானோ என்னமோ சித்தியாய்
சிலசமயம் என்னை இம்சிக்கிறாய்...
ஆழ்கடலாய் அமைதியாய் இருந்தாலும்...
உனக்கென லட்சியம் கொண்டவள்
உன் லட்சியம் நிறைவேற வாழ்த்துகள் மகளே!

இரண்டாவதும் பெண்ணாய் பிறந்ததால் அத்தனை உறவுகளும் விலகிச்செல்ல, அம்மா கலங்கி போய் எல்லாரும் செத்துடலாமா?!ன்னு கேட்க, அதுவரை அம்மாவை எதிர்த்து பேசாதவ, நீ வேணும்ன்னா செத்து போ. நான் வரமாட்டேன்... எனக்குதான் கைக்கொடுக்க நாதியில்ல. ஆனா, என் பெரிய மகளுக்கு  இவ இருக்கா. இவளுக்கு பெரியவள் இருக்கா, என் பிள்ளைகளை வளர்த்துக்க எனக்கு தெரியும்ன்னு சொல்லி வீம்பாய் நின்னேன். என் ஆசை இன்னிய வரைக்கும் நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு. பெரியவளும், சின்னவளும் அத்தனை நெருக்கம்.. என்னையும்கூட சின்னவள் விட்டுக்கொடுப்பா.. ஆனா, அவ அக்காவை விட்டுக்கொடுக்க மாட்டா..  என் அப்பா, அம்மா செல்லம் இவள்... எங்க சோகம் புரிஞ்சுதானோ என்னமோ! அப்பலாம் அழக்கூட மாட்டா. இப்பயும் அப்படிதான் அழவே அழாது. என் அம்மாவோட தைரியத்தை அப்படியே கொண்டிருக்கு... அன்னிக்கு ஹாஸ்பிட்டல்லயே விட்டு வந்த அத்தனை பேரும் இன்னிக்கு வீட்டுக்குள் வரும்போதே  அவப்பேரை சொல்லிக்கிட்டுதான் வர்றாங்க...
உடை விசயத்தில் அத்தனை நேர்த்தி.  எத்தனை செட் துணி எடுத்தாலும் மனசு நிறையாது அவளுக்கு.  வெளில கிளம்பும்போது அவதான் எனக்கு டச் அப் கேர்ள். போட்டோ எடுத்தா ஆயுசு குறையும்ன்னு சொல்லிச்சொல்லி வளர்த்ததால் இன்னிக்கும் எனக்கு கேமராமுன் நிக்க கூச்சம். ஆனா, இவ போன் முழுக்க குறைஞ்சது 2000 படங்கள் இருக்கு. செல்பி பிரியை. இப்படி செல்பி பைத்தியமா இருக்காதடின்னு சொன்னா, உன்னையப்போல பைத்தியமாதான் இருக்கக்கூடாது. செல்பி பைத்தியமா இருக்கலாம்ன்னு காலை வாரி விடும். 


என்னைவிட என் அப்பாமேல் அவளுக்கு பாசம் அதிகம்.  உறவுக்கரங்க உதவி கேட்கும்போது எதாவது கோவதீல் நான் செய்ய யோசித்தால் எனக்கு புத்திமஇ சொல்வா. யார்மீது வன்மம் கொள்ளாது. என்ன?! அவ கப்போர்டை சுத்தமா வச்சுக்க மாட்டா. எத்தனை மடிச்சு அடுக்கி வச்சாலும் கலைச்சு வைப்பா. மூளைக்காய்ச்சலின்போது செத்து பொழைச்சு வந்ததால, வாசிப்பதில் பிரச்சனை, நினைவாற்றலில் பிரச்சனைன்னு இருந்ததால ப்ளஸ்டூல மார்க் கம்மி... இதை சொல்லி எல்லாரும் மக்குன்னு சொன்னதால இன்னிக்கு கல்லூரில கிளாஸ் ஃபர்ஸ்ட்..  டாக்டராதான் ஆகமுடில... ஆனா, என் பேர் முன்னாடி டாக்டர்ன்னு போட்டே ஆகனும்ன்னு  பி.எச்.டி படிக்க இப்போதிலிருந்து தயாரிக்கிட்டு இருக்குறவ.  நான் எது சொன்னாலும் கேட்கமாட்டா. எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டைதான் போடுவா. அதுக்கு பெரியவ கேப்பா.. நீங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணா?! இல்ல மாமியார் மருமகளா?!ன்னு.. ஆனா, உடம்புக்கு முடியாதபோது பெரியவ என் துணைக்கு வரமாட்டா... சின்னவதான் ஓடோடி வருவா... தாத்தா பாட்டி செல்லம்,,, தம்பிக்கு புத்தி சொல்லன்னு எல்லாமே இவள்தான். ஆடுற மாட்டை ஆடி கறக்கனும்.. பாடுற மாட்டை பாடி கறக்கனும்ன்ற சொல்லுக்கு ஏத்தமாதிரி கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி காரியத்தை சாதிச்சுடுவா. இவ இல்லன்னா என் வீட்டு வண்டிச்சக்கரம் சுழலாது. என் அச்சாணியே இவள்தான்!!

வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும், பெற்று குன்றாத செல்வமும், மாறா சிரிப்போடும் பல்லாண்டு வாழ்க லட்டும்மா.....
முதல்முறையாக இந்த வருட பிறந்தநாளுக்கு எங்களையெல்லாம் பிரிஞ்சு ஹாச்டலில் இருக்கா. பெரியவளின் கல்யாண வேலைகள் இருப்பதால் அவளை நேரில் வாழ்த்தமுடியலை. வீடியோ காலில் வரும்போதெல்லாம் ஒரே அழுகாச்சி. எல்லாம் நல்லதுக்கே. கொண்ட லட்சியத்தினை அடைய சில கொண்டாட்டஙகளை விட்டுக்கொடுத்துதான் ஆகனும். சர்ப்ப்ரைஸ் கிப்டா கேக்கும், வாட்சும் ஆன்லைனில் புக் பண்ணியாச்சு. 

சின்னவளுக்கு சின்னதா ஒரு கிஃப்ட்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. நீங்களும் வாழ்த்துங்கள் வளரட்டும்...

நன்றியுடன்,
ராஜி.

Friday, September 13, 2019

ஹேய்!! ஹோய்! டுடே நவரச நாயகன் கார்த்திக் பர்த்டே



1990களில்  திருத்தணில நாங்க குடியிருந்த தெருவில் கல்யாணம், திருவிழாக்களுக்கு மைக்செட், சீரியல் பல்ப் செட் போடும் கடை இருந்ததால் எல்லா புதுப்பாட்டும் புல் சவுண்ட்ல போடுவாங்க.  1989ல  சோலைக்குயில் படத்து கண்ணுல நிக்குது.. நெஞ்சுல சொக்குது மானே... பாட்டு கேட்க நேர என்னை ஈர்த்துச்சு...  மனசுக்குள் எப்பயும் அந்த பாட்டுதான் ரிவைண்டிங்... , ஸ்கூல் டான்ஸ்ல கங்கைக்கரை மன்னனடி... பாட்டுக்கு ஆட.. அப்பாவை கேசட் வாங்கி வரச்சொல்லும்போது அதுல, வருசம் 16, சோலைக்குயில் படமும் சேர்ந்து வர கேசட் கதறி கதறி அழுது கெஞ்சுற அளவுக்கு அதே பாட்டுதான். பாட்டு ஈர்த்ததே தவிர யார் நடிச்சாங்கன்னுலாம் தெரிஞ்சுக்க விரும்பல.  

இத்தனைக்கும் 1988ல நடந்த அக்கா கல்யாணத்துலயே கார்த்திக் நடிச்ச என் ஜீவன் பாடுது படம் பார்த்திருக்கேன். அப்பலாம் சின்ன பிள்ளைன்றதால   நடிகர்கள்மீது பெருசா ஈர்ப்பில்லை.  பிடித்தது காலப்போக்கில் பிடிக்காம போற அதிசயம்  நிகழும் ஈ லோகத்தில்,  இத்தனை காலமும் மாறாம இருக்குறது கார்த்திக் மீதான ரசனை மட்டுமே! அவர் ஈர்த்த அளவுக்கு எந்த நடிகரும் இன்னியவரைக்கும் இந்தளவுக்கு ஈர்த்ததில்லை....  அதுக்கப்புறம்,  எப்பயும் கார்த்திக்.. கார்த்திக்.. கார்த்திக்தான்.... 
 13/9/1960ல பிறந்திருக்கார் என் சின்ன பொண்ணை கருவுற்றிருக்கும்போது செப்.15 டெலிவரி டேட் கொடுத்தாங்க. ஆனா, செப் 13லயே அவ பிறந்திடனும்ன்னு சாமிக்கிட்டலாம் வேண்டிக்கிட்டேன். நாம கேட்டதைலாம் என்னிக்கு சாமி செஞ்சிருக்கு?! . 1981 அலைகள் ஓய்வதில்லை படம் வந்திச்சு.  எப்படி நடிப்பாரோன்னு பயந்துக்கிட்டிருந்த அவர் அப்பா முத்துராமனுக்கு  அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னுகூட  தெரியாது.  படம் வெளில வரும் முன்னயே முத்துராமன் நெஞ்சுவலியில் இறந்துட்டாரு. ஆலோசனை சொல்லி, கைக்கொடுக்க ஆளில்லாம  கொஞ்சம் வருசங்களுக்கு சரியான படம்  தேர்ந்தெடுக்க தெரியாம பெருசா எதும் ஹிட் கொடுக்கவே இல்ல. ரஜினி, ராதிகா நடிச்ச நல்லவனுக்கு நல்லவன் படத்துல, கிட்டத்தட்ட  வில்லன் வேஷம்ன்னு சொல்லி ஏ.வி.எம். நிறுவனத்தார் கேட்க வில்லன் வேஷமான்னு யோசிச்ச கார்த்திக்கை எங்க நிறுவனத்தின் அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோன்னு வாக்களிச்ச பின் நடிச்சதா ஏ.வி.எம் சரவணனே சொல்லி இருக்கார்...
கார்த்திக்கின் பொன்னுமணி, ரஜினியின்  எஜமான் படப்பிடிப்பும் ஒரே தளத்தில் நடந்தபோது எடுத்த படம்...

ஆவரேஜ் ஹீரோவா இருந்த கார்த்திக்கை நவரசநாயகனா காட்டுனது மௌனராகம் படத்துலதான்... மிஸ்டர் சந்திரமௌலீஈஈஈஈஈஈஈஈஈன்னு கூவி அதிகபட்சம் கால்மணிக்கூர் படத்துல வந்தாலும் காதல், குறும்பு, சோகம், கோபம்ன்னு அத்தனை அம்சத்தையும் காட்டி நடிச்சிருப்பார். படத்தின் நாயகன் மோகன்னாலும் படத்து பேரை கேட்டதும் நினைவுக்கு வர்றது கார்த்திக்தான். அந்த படத்துக்கப்புறம் கார்த்திக் கேரியர் டாப் கியர்ல போச்சு.. அக்னி நட்சத்திரம், வருசம் பதினாறு, கண் சிமிட்டும் நேரம், பாண்டி நாட்டு தங்கம், கிழக்கு வாசல், பொண்ணுமனி, முத்துக்காளைன்னு போய்க்கிட்டிருந்த கார்த்திக் கிராஃப்ல மீண்டும் ஒரு சறுக்கல்... எல்லாமே சொதப்பிக்கிட்டு வந்துச்சு...
ஆகாய கங்கை படத்துக்காக  கார்த்திக், சுகாசினி
மௌனராகத்துக்குபின் அக்னிநட்சத்திரத்தில் கார்த்திக்கை வச்சு இயக்கினார் மணிரத்தினம். பிரபு இன்னொரு நாயகன்.  பிரபு பெரிய வீட்டு பிள்ளையாய், போலீசாய் முறுக்கி காட்டி வருவார். காதல் காட்சியிலயும் அந்த ரஃப்னெஸ் தெரியும்.  ஆனா கார்த்திக் சாக்லேட் பாயா வந்து எல்லாரையும் கட்டிபோட்டார். நான் அந்த படத்துக்காக உடம்பை ஏத்தி கஷ்டப்பட்டு நடிச்சு வராத பேரை சும்மா கேமரா முன்னாடி நின்னு பேர் வாங்கிட்டு போயிட்டான் கார்த்திக்ன்னு பிரபுவே சொல்லி இருக்கார். 
அலைகள் ஓய்வதில்லை படத்துக்கான போட்டோ ஷூட்டிங்குக்கு வந்தபோது...

மணிரத்தினத்தின் தளபதி படத்துல கலெக்டர் வேசத்துக்கும், ரோஜா படத்து ஹீரோவாகவும் கார்த்திக்தான் முதல்ல நினைவுக்கு வந்திருக்கார். முதல்ல தளபதி படத்துக்காக போய் கேட்டபோது, என்ன நினைச்சாரோ தெரியல, அந்த படத்தை தவிர்க்க அதிக சம்பளம் கேட்டிருக்கார் கார்த்திக் அதனால் அந்த ரெண்டு படத்தையும் நடிக்க தவறவிட்டிருக்கார். பலவருசங்கழிச்சு ராவணன் படத்துலதான் மீண்டும் ரெண்டு பேரும் கைக்கோர்த்திருக்காங்க. பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என்ட்ரிக்கு பறக்காத விசில் கார்த்திக் என்ட்ரிக்கு பறந்துச்சாம். கார்த்திக்குண்டான இடம் இன்னும் சினிமாவில் நிரப்பப்படாமயே இருக்குன்னு மணிரத்தினமே ராவணன் படத்து புரமோஷன்ல சொன்னார். 

மிஸ்டர் சந்திரமௌலி... மிஸ்டர் சந்திரமௌலி... வசனத்தை எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி நடிக்காத நடிகரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டும் இதுவரை இல்லை. மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு கார்த்திக் குரல்ன்னா அல்வா சாப்பிடுறமாதிரி... கார்த்திக் ஹே.. ஹேய்..ன்னு சொல்லி கைகாலை ஆட்டி, குழைஞ்சு பேசி ஓவர் ஆக்டிங்க் செய்ய மட்டுமே தெரியும்ன்னு சொன்னவங்க வாய மூடுற மாதிரி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்... படத்துலயும், ஆனந்தபூங்காற்றே... படத்துலயும் நடிச்சு அசத்தி இருப்பார். ஹீரோவா நடிச்சிட்டிருக்கும்போதே அஜீத், பிரபுதேவா, விஜயகாந்த்... மாதிரியான நடிகர்கள் படத்துல கெஸ்ட்ரோல்லயும் நடிச்சிருக்கார். ஆறு பாடல்களை பாடி இருக்கார். 

பொதுவா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் ரீ எண்ட்ரிங்குறது ஒருமுறைதான் வரும். ஆனா கார்த்திக்குக்கு ரெண்டாவது முறையும் வந்துச்சு..  சுந்தர் சி இயக்கத்துல 1995ல உள்ளத்தை அள்ளித்தா படத்துமூலமா மீண்டும் பிசியானார் கார்த்திக். பூவரசன், மேட்டுக்குடி, பிஸ்தா, கோகுலத்தில் சீதைன்னு அவர் கொடுத்த ஹிட்டுகள் ஏராளம். கோகுலத்தில் சீதை படத்துல கார்த்திக் ரிஷியாவே வாழ்ந்திருப்பார். அந்த படத்து சாயலும் எல்லா நடிகர்கள்கிட்டயும் பார்க்கலாம்.  இதுக்கிடையில், கார்த்திக்கின் கவனம் அரசியல் பக்கமும் பார்வை போனது ...  அரசியல்ல மூழ்கி முத்தெடுத்தவங்க வெகுசிலரே! மூழ்கி காணாம போனது நிறைய பேரு. ஆனானப்பட்ட சிவாஜியே அரசியல்ல ஜெயிக்க முடியாதபோது தான் எம்மாத்திரம்ன்னு கார்த்திக் நினைச்சிருக்கனும்.. சரியான வழிக்காட்டுதல் இல்லாததால் அரசியல்ல இறங்கி சினிமாவை இழந்துதான் மிச்சம்...
தனக்கு தம்பியா, வில்லனா நடிச்ச சக நடிகரான முத்துராமன் தன்னோட மகனின் வளர்ச்சியை பார்க்க உடனில்லையேன்னு எம்.ஜி.ஆர் கலங்கினது படத்துலயே தெரியும்.

பொதுவா, நீச்சல் தெரியாம நீரில் முங்குறவங்களை,  ரெண்டு முறை வெளித்தள்ளி காப்பாத்த பார்க்குமாம். அதுல தப்பிச்சுக்கலைன்னா மூணாவது முறை முங்கிதான் போகனும். ஆனா, கார்த்திக் விசயத்துல இந்த விதி உடைக்கப்பட்டிருக்கு...  மாஞ்சா வேலு படத்துல கெஸ்ட்ரோலும், அனேகன் படத்துல வில்லனாவும் மீண்டும் கைக்கொடுத்து அவருக்குன்னு இன்னும் ரசிக பட்டாளம் இருக்குங்குறதை  அவருக்கு உணர்த்தி இருக்கனும்.  சூர்யாவோடு ‘ இது தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல வில்லனா வந்தார்(இன்னமும் நான் படம் பார்க்கலை :( ). 

இப்ப சமீபத்துல வெளிவந்த மிஸ்டர்.சந்திரமௌலி படத்துல ஃபர்ஸ்ட் ஹீரோ கார்த்திக்தான். அவரோடு சேர்ந்து அவர் மகனும் நடிச்சிருக்கார். அப்பாவோடு சேர்ந்து நடிக்க கொடுத்து வைக்காத எனக்கு என் மகனோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு ஆடியோ ரிலீஸ்ல கண்கலங்கினார்.  தன் மகள் வயதுடைய வரலட்சுமி சரத்குமாருக்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி போனார்.  

அக்னி நட்சத்திரம், வருசம் 16, கிழக்குவாசல், பொன்னுமணி  படத்துக்காக நான்கு முறை பிலிம்பேர் விருதையும், அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், கிழக்குவாசல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)& பூவேலி(1998) படத்துக்காக நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்துக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதும்,  அபிநந்தனான்ற தெலுங்கு படத்துக்காக நந்தி விருதையும், அதுமட்டுமில்லாம கலைமாமணி பட்டமும் வாங்கி இருக்கார்.  சுயமரியாதை, அமரன், சின்ன ஜமீன், சிஷ்யா, பிஸ்தா, அரிச்சந்திரான்னு ஆறு படத்தில் சொந்தகுரலில் பாட்டு பாடி நடிச்சிருக்கார்.
 பல தடவை தவறவிட்டும் மீண்டும் கலை உலகில் இன்னொரு வாய்ப்பு வந்திருக்கு. பிரபு, சத்யராஜ் மாதிரி இந்த வாய்ப்பையாவது தக்க வச்சுப்பாரான்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்..... உங்களுக்கு கைக்கொடுக்காத அரசியலை விட்டு, உங்களுக்குன்னு இன்னமும் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை கவனிங்க கார்த்திக் சார். 

காதல் மன்னன், காதல் இளவரசன், நடிகர் திலகம்ன்னு எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் எல்லாரும் உணர்ச்சிகளை வெளிக்கொணர கொஞ்சம் மெனக்கெடனும்... உங்களுக்கு அதுலாம் வேண்டவே வேண்டாம். தானாவே வரும். நவரச நாயகன்ங்குற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  அந்த பட்டம் மௌனமாய் ராகம் பாடியப்படி... உங்கள் நடிப்பு திறமைக்கு மௌனச் சாட்சியாய் என்னிக்கும் உங்களுக்காகவே இருக்கும்... 


 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  கார்த்திக் சார்... 

மீள்பதிவு

நன்றியுடன்,
ராஜி. 

Sunday, September 08, 2019

என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது.. - பாட்டு புத்தகம்

எள்ளலும் எகத்தாளமுமாய் காதல் பாடல்பாடி நம்மையும் ரொமாண்டிக் மூடுக்கு கொண்டு போறதில் எஸ்.பி.பியை மிஞ்ச யாருமில்லை. அதேப்போல் சோகப்பாடல்களைப்பாடி நம் கண்ணில் நீரை வரவழைப்பதில் கே.ஜே.யேசுதாஸைவிட யாருமில்லை. தாஸன்னான்னு இளையராஜாவால் செல்லமாய் கூப்பிடப்படும் யேசுதாஸ் பல பாடல்களை பாடி இருந்தாலும யேசுதாஸின் டாப் டென் பாடல்கள்ன்னு வரிசைப்படுத்தினால் அதில் நீதானா அந்தக்குயில் படத்தில் வரும்  என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது...பாடல் கட்டாயம் இருக்கும்.

பாட்டின் முதலில் வரும் ஹம்மிங்க் பாட்டு சுமந்து வரும் சோகத்துக்கு கட்டியம் கூறி நம்மை அழைத்துச்சொல்லும்.  பாடலின் இடையிடையே ஒலிக்கும் உடுக்கை சத்தம்  நம் மனசின் அடி ஆழத்திலிருக்கும் சோகத்தை அசைச்சு வெளிக்கொணர்ந்துட்டுதான் ஓயும். பாடல், வரிகள், இசைன்னு இந்த  பாட்டு ஹிட்டடிக்க பல காரணங்கள் இருந்தாலும், இந்த படம் ஹிட் அடிக்காம போனதுக்கு ஒரே காரணமாதான் இருக்கும். அது இந்த படத்துல நடிச்ச ராஜா. செத்தவன் கையில் கொடுத்த வெத்தலை பாக்கு மாதிரின்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க, அந்த மாதிரி, உணர்ச்சிகொந்தளிப்பில் ஒலிக்கும் இந்த பாட்டை எந்தவித உணர்ச்சியுமில்லாம வெறும் வாயை மட்டுமே அசைச்சு சொதப்பி வச்சிருப்பாரு.

இரவுப்பயணத்தின்போது இந்த பாட்டை கேட்டா, கண்ணில் நீர் எட்டிப்பார்க்காம இருக்காது...
என் ஜீவன் பாடுது, உன்னைத்தான் தேடுது..
என் ஜீவன் பாடுது, உன்னைத்தான் தேடுது...
காணாமல் ஏங்குது, மனம் வாடுது...
எங்கே என் பாதை மாறி, எங்கெங்கோ தேடி தேடி....
என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது...
ஆஆஆஆ

கண்ணோடு மலர்ந்த காதல் ,
நெஞ்சோடு கனிந்த நேசம்
பொன்னாக வளர வேண்டும் வாழ்விலே!
ஒன்றோடு ஒன்று சேரும் .

உல்லாசம் வாழ்வில் கூடும் 

என்றே நான் நினைத்தேன் உண்மை நீரிலே...

உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்,
கல்யாண காலம் வந்ததும் திருமணம்
எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ?! 
ஆஆஆஆஆஆ..

என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது..

நெஞ்சத்தை திறந்து வைத்தேன்.
எண்ணத்தை சொல்லி வைத்தேன்.
என் ராணி மனசு இன்னும் தெரியலே!!
முல்லைப்பூ வாங்கி வந்தேன்.
முத்தாட ஏங்கி நின்றேன்.
கொண்டாட காதல் நாயகி வரவில்லை!!
என் ஜீவன் போனப்பாதையில் போகிறேன்..
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்
அன்பே என் காலம் யாவும் நீயன்றோ?!!
ஆஆஆ..

என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது...

படம்: நீதானா அந்தக்குயில்..
நடிகர்கள் :ராஜா, ரஞ்சனி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

அடுத்த வாரம் கார்த்திக் பாட்டோடு வர்றேன். அதுக்கொரு காரணம் இருக்கு.. என்னன்னு ஒருவாரம் வெயிட் செய்யண்டி!!
நன்றியுடன், 
ராஜி. 

Saturday, September 07, 2019

எங்க புள்ளைங்கலாம் பயங்கரம் - கிராமத்து வாழ்க்கை

Image
வேப்பங்கொட்டையை இரண்டாய் ஒடைத்து, உள்ளிருக்கும் பருப்பினை எடுத்துட்டு, பிளந்த வேப்பங்கொட்டையை கைவிரல் முட்டியில் வைத்து, இன்னொரு பிள்ளை ஓங்கி அடிக்க, வலித்தாலும் எட்டி பார்க்கும் ரத்தத்தினை கண்டு சந்தோசப்பட்டிருக்கோம். ஏன்னா, எங்க புள்ளைங்கல்லாம் பயங்கரம்!!
Image
எப்பவாவது பாட்டி வீட்டுக்கு லீவுக்கு வரும்போது வயக்காட்டுக்கு போறதுண்டு. வேர்க்கடலை பறிக்குற வேலை மட்டுமே தெரியும். மத்தபடி உருப்படியா எந்த வேலையும் தெரியாது. தெரிஞ்சுக்கும் வயசும் அப்ப இல்ல.  ஆனா, வயக்காட்டில் புகுந்தால் அதகளம்தான்.   பாட்டி, களை பறிக்க, மடை திறக்க, வரப்பை சீர் செய்யன்னு எதாவது செய்யும் நேரத்தில் சோளக்கதிரில் இருக்கும் முடிகளை இப்படி ஜடை பின்னி அழகு பார்த்ததுண்டு. காட்டு பூக்களை பறிச்சு வச்சு அழகூட்டியதுமுண்டு. 
Image
ரசகுல்லா, மக்கன் பேடா, அல்வா... என எத்தனை விதமான இனிப்புகளை சாப்பிட்டாலும் இந்த ஆரஞ்ச் மிட்டாய் சுவைக்கு ஈடாகாது.  எனக்கு தெரிஞ்சு ஒரு மிட்டாய் 5பைசா. குடியரசு தினம், சுதந்திர தினத்தன்னிக்கு லீவுன்னுகூட பார்க்காம ஸ்கூலுக்கு போனது இதுக்காகத்தான் இருக்கும். மஞ்சள், ஆரஞ்ச், பச்சை கலர்ல கிடைக்கும். ஸ்கூலில் கொடுத்ததும் சாப்பிட மாட்டேன். அதை வீட்டுக்கு கொண்டு வந்து அம்மாக்கிட்ட காட்டிட்டுதான் சாப்பிடுவேன். வீட்டுக்கு வருவதற்குள் கையெல்லாம் பிசுபிசுன்னு ஆகிடும்.  ஸ்கூல்லியே தின்னுட்டு வர்றதுக்கென்னன்னு அம்மா கடுமையா திட்டுவாங்க.  ஆனாலும், மறுக்கா, மறுக்கா அதையேதான் செய்வேன். ஏன்னா, இந்த புள்ளைங்கலாம் பயங்கரம்.
எத்தனை எத்தனை கனவு, ஏக்கம், பயணம், துக்கம், ஆனந்தத்தை சுமந்த பெட்டி இந்த போஸ்ட் பாக்ஸ்.. கிராமத்தில் பொதுவாய் போஸ்ட் ஆபீசில் இருக்கும்.  டவுனாய் இருந்தால் அங்கங்கு இருக்கும். கீழ பூட்டு போட்டு இருப்பாங்க. மேல ஒரு ஓப்பன் இருக்கும். கைவிட்டு யாரும் எடுக்கக்கூடாதுன்னு இருக்கும் துவாரத்தை அசையும் ஒரு தகரத்துண்டால் மறைச்சிருப்பாங்க. அந்த தகரத்துண்டை தள்ளிட்டுதான் தபால்களை சேர்க்கனும். அப்படி அந்த துண்டை தள்ளலைன்னா தபால் சரியா உள்ள விழுகாதுன்னு வெகுளித்தனமா நம்பிக்கிட்டிருந்தேன்.
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கிடைக்கும் பொருட்களை கொண்டு சந்தோசமாய் இருந்த நாட்கள்....  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவாங்க. அது அறிவு வளர மட்டுமே! வேலைக்கு போறதுலாம் ஆண்பிள்ளைகளுக்கே முக்கிய குறிக்கோள் கிடையாது.  வீட்டிலிருக்கும் பொருட்களைக்கொண்டே விளையாட பழகி இருந்தோம். கொட்டாங்கச்சி, தீப்பெட்டி, உடைந்த டம்ப்ளர்களைக்கொண்டு டெலிபோன் செய்து பேசி மகிழ்ந்தோம். இப்ப அம்மாக்கள் மாதிரிலாம் அப்பத்திய அம்மாக்கள் இல்ல.  மாவரைத்தல், மிளகாய் இடித்தல், தண்ணி இறைத்தல்ன்னு எத்தனை கடுமையான வேலைகள் இருந்தாலும், பிள்ளைகளோடு கதைப்பேசி, விளையாடிய அம்மாக்களை பெற்ற கடைசி தலைமுறை நாம்தான். 
No photo description available.

பல்பம்... அஞ்சாப்பு முடிக்கும்வரை பலகையில்தான் வீட்டுப்பாடம் எழுதி போவோம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு&புவியியல்ன்னு அத்தனை பாடத்தையும் சின்ன சிலேட்டில் நுனுக்கி, நுனிக்கு எழுதுவோம், காலையில் கொடுத்தனுப்பும் முழு பல்பம்குச்சி மாலையில் சின்னதா இருக்கும். அதுக்குள்ளவா எழுதி தீர்த்துட்டேன்னு அம்மா முறைப்பாங்க. வகுப்பில் தூக்கம் வராம இருக்க பல்பக்குச்சியை தின்னது நமக்குதானே தெரியும்!!
Image
இப்பத்திய பிள்ளைகளுக்கு விதம்விதமா பொம்மைகள் கிடைக்குது. ஆனா, அப்ப கைக்குழந்தைன்னா கிலுகிலுப்பை, ஆறு மாசத்துக்குபின் சீப்பாங்குழல், ஒரு வருசத்துக்குபின் பந்து, நடைவண்டி, அதுக்கப்புறம் படத்தில் காட்டி இருக்கும் இந்த குதிரை. இதில்தான் உக்கார வச்சி ஆட்டிக்கிட்டே கதை சொல்வாங்க. எனக்கு வாங்கின குதிரை ரொம்ப நாள் இருந்துச்சு. என் சின்ன பொண்ணு பிறந்தபின் தான் இனி தாங்காதுன்னு உசுரை விட்டுடுச்சு. இந்த குதிரையோட பேர் மறந்து போச்சு! யாராவது சொல்லுங்களேன். ப்ளீச்.
போன தலைமுறை பிள்ளைகள் மட்டுமே அறிந்த மருத்துவமுறை இது. வயலுக்கு, வியாபாரத்துக்கு, வேலைக்கு போய் வந்த அப்பா, தாத்தா, மாமாக்கள் தங்கல் உடல்வலி தீர வீட்டிலிருக்கும் சின்னப்பசங்களை ஏறி முதுகுல  மிதிக்க சொல்வாங்க. இது தப்புதான், ஆனா,  அப்படி செய்தா வலிலாம் போய்டும்ன்னும் சொல்வாங்க. ஆனா, இப்பத்திய பிள்ளைகளுக்கு நாமதான் தைலம் தேய்ச்சு, கால் பிடிச்சு விடுறதா இருக்கு :-(

கொசுவத்தி மீண்டும் ஏற்றப்படும்....
நன்றியுடன்,
ராஜி

Friday, September 06, 2019

புதுவை ஆதீன சிதம்பரம் ஸ்ரீ பாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள்- பாண்டிச்சேரி சித்தர்கள்.

பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில்  இரண்டு வாரமாக தொள்ளைக்காது சித்தர், ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தினை பார்த்தோம். அந்தவரிசையில்  இன்று நாம பார்க்கபோறது புதுவை ஆதீன சிதம்பரம் ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடம்.  புதுச்சேரியில் உள்ள செட்டிக்கோவிலின் பின்புறம் உள்ள அம்பலத்தார்  மடத்து வீதியில் அமைந்து  இருக்கிறது ஸ்ரீநாகலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி. இவர் திருவாசகத்தை மிகவும் நேசித்து அதை மக்களிடம் கொண்டு சேர்பித்தவர். திருவாசகம் உள்ளிட்ட பல ஆன்மீக கருத்துக்களை எடுத்துச்சொல்லி எல்லாருடைய மனதையும் உருக செய்வார். இவருடைய அற்புதச்செயலை பார்த்து பிரெஞ்சு அரசு இந்த தெருவிற்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்து வீதி எனப்பெயர் சூட்டி கௌரவித்தது.

இவருக்கு திருவாசகத்தின்மீதான ஆர்வம் எப்படி வந்தது என செவிவழி கதையாக சொல்லப்படுவது என்னன்னா, இறைவனால் எழுதபட்டதாக சொல்லப்படும் திருவாசகத்தில்  இந்நூலில் இறைவனை எப்படி அடைவது, இறைவனின் பெருமைகள், அண்டகோளங்களின் விந்தைகள், இரகசியங்கள் .இயக்கங்கள், அவைகளை இயக்கும் மூலப்பொருட்கள், சூட்சுமநிலைகள் எல்லாவற்றையும் பற்றி விவரிக்கப்பட்டிருக்கு. இறைவனை தேடுபவர்களுக்கு இறைவனை அடைய இன்றளவும் இருப்பது திருவாசகம். இந்த திருவாசகத்தின் பெருமையை  அருளுணர்வால் உணர்ந்து இறைவனை அடைந்தார் இராமலிங்க சுவாமிகள். வள்ளலாரைப் போலவே, பல சித்தர்கள் திருவாசகத்தின் வழியே சென்று, இறைவனை அடைவதில் வெற்றி கண்டிருக்காங்க.
முன்னொரு சமயம், கனக சபையிலிருக்கும் இந்நூலை யாரிடம் ஒப்புவிப்பது என்ற பிரச்சனை எழுந்தபோது.  ஒவ்வொருவரும் தாங்களே இந்நூலை வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டனர். அப்பொழுது ஒரு அசரீரி ஒலித்ததாம். "இந்நூலை நம் சிவகங்கையில் விடுங்கள்.  கங்கையை சுற்றியிருக்கும் யாரிடம் கொண்டுபோய் சேருகின்றதோ -அவரிடம் இருக்கட்டும்” என்று அசரீரி சொன்னது. உடனே அந்நூல் சிவகங்கையில் விடப்பட்டது. கங்கையில் குளித்துக்கொண்டிருந்த சித்தரும் சிறந்த சிவபக்தருமாகிய ஒரு பெரியவரிடம் அந்நூல் வந்து நின்றது. அவர் அந்நூலை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு சிவ பஞ்சாட்சரத்தை ஓதிக்கொண்டே இந்த மடத்திற்கு வந்தார். அன்று முதல் அவ்விடத்திற்கு ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடையார் மடம் என்று வழங்கலாயிற்று. அந்த பெரியவர்க்குபின் ஒருவர்பின் ஒருவராக திருவாசகத்திற்கு சிவபூஜை செய்து பாதுகாத்து வந்தனர்.
இச்சமயம், கர்நாடகா நவாப்கள் தமிழகம்மீது போர் தொடுத்தனர். அப்போரின்போது ஏராளமான கோவில்களும், மடங்களும் இடித்து நாசமாக்கப்பட்டன. யுத்தம் சிதம்பரம் பரவியது. அப்பொழுது, அம்பலத்தாடையார் மடத்து பத்தாவது பட்டத்தை ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் வகித்து வந்தார். யுத்தம் பரவி வருவதும் கோவில்கள் இடிக்கப்பட்டு நாசமாக்கப்படும் செய்தியை கேள்விப்பட்ட ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் அதிர்ந்து, கண் கலங்கினார். இறைவனால் கையொப்பம் இடப்பட்ட அத்தெய்வத் திருநூலுக்கு  பாதிப்பு வந்து விடுமோ என பயந்தார்.ஊண், உறக்கம் என எல்லவரையும் மறந்தார் .அந்த சிவப்பரம்பொருளிடம் அனுதினமும் அழுது முறையிட்டு கொண்டிருந்தார். உடல், உயிர் எல்லாமே அந்த சிவபரம்பொருளை நோக்கி சிவபஞ்சாட்சர தியானத்தினுள் ஆழ்ந்தார்  நாட்கள் பல சென்றன.   யுத்தம் கடுமையாக நடந்தது. எங்கு பார்த்தாலும் அழிவுச்செய்திகளே வந்துகொண்டிருந்தன. சுவாமிகள் இதைப்பார்த்து சிவபரம்பொருளை  நோக்கி கடுமையான தியானம் இருந்தார். உலக அமைதிக்காக தன்னிலை மறந்தார் . ஓம் நமச்சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தினை தவிர அவரது உதடுகள் வேறு எதையும் உச்சரிக்கவில்லை. அவரது சிந்தை முழுக்க திருவாசகத்தை காக்கவேண்டும் என்று மட்டுமே இருந்தது . அந்த குறிக்கோளை நோக்கி கடுந்தவம் இருந்தார்.
தடுத்தாட்கொள்பவன் இறைவன் அல்லவா?! அடியவர்களின் துயர் கண்டு பொறுமையாகவா இருப்பான்?! இனியும் தனது பக்தனை கலங்கவிடவேண்டாம் என எண்ணி, ஸ்ரீநாகலிங்க சுவாமிகளின் நெற்றிப்பொட்டில்  ஜீவஒளியை பாய்ச்சி, திருவாசகத்தினை பாதுகாக்கும் இடத்தினை சுட்டிக்காட்டினார். இந்த தரிசனத்தைக்கண்ட ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் ஆனந்தம் கொண்டார். ஆனந்த கூத்தாடினார். இறைவன் சுட்டிக்காட்டிய இடம் ஞானபூமியான பாண்டிச்சேரி என்று கண்டு மகிழ்ந்தார். ஆத்மசாதனைக்கு மிகவும் உகந்த இடமானதும், சித்தர்களையும், ஞானிகளையும் தன்பால் கவர்ந்திழுக்கும் புண்ணிய பூமியாம் பாண்டிச்சேரிதான் ,” திருவாசகத்தை” பாதுகாக்க சரியான இடம் என்ற இறைவனின்  கருணையை கண்டு ஆனந்தமடைந்தார்.
உடனே,  திருவாசகம் இருந்த வெள்ளிப்பெட்டகத்தை அழகான பட்டுத்துணியில் மூடி, அந்த மூட்டையினை தலையிலே சுமந்துக்கொண்டு,  தனது மடத்தில் இருந்த இருவரை துணைக்கு அழைத்துக்கொண்டு, மடத்தைவிட்டு வெளியேவரும் வேளையில் கடுமையான புயலும் அதை தொடர்ந்து மழையாக பொழிந்ததாம், அவற்றையெல்லாம் எதிர்க்கொண்டு கடலூர் வழியாக பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார். பாண்டிச்சேரியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு சின்ன குடிசை அமைத்து திருவாசகம் இருந்த வெள்ளிப்பெட்டகத்தை வைத்து சிவப்பரம்பொருளுக்கு அனுதினமும் பூஜைகள் செய்துகொண்டு வந்தார். அங்கு ஆழ்ந்த சிவத்தியானத்தில் எப்பொழுதும் இருந்ததால், ஸ்ரீநாகலிங்க சுவாமிகளுக்கு சக்திகள் பெருகின. சக்திகள் சித்துக்களாக மாறியது. பலரும் சுவாமிகளிடம் வந்து தங்களது குறைகளை சொல்ல,  அவைகளை உடனே ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் தீர்த்து வைத்துக்கொண்டு இருந்தார். நாட்கள் செல்லச்செல்ல,  சுவாமிகளின் பெருமை எல்லோருக்கும் தெரிந்தது. தூரத்திலிருந்தும் பக்தர்கள் அவரை தேடி வந்தவண்ணம் இருந்தனர் .
இப்படியே பல ஆண்டுகள் சென்றன. சுவாமிகள் இந்த பக்தர்கள் கூட்டம், புகழ்வெளிச்சம் இதிலெல்லாமிருந்து விடுபட்டு இறைவனுடன் கலக்கும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.  ஒருநாள் சிவபூஜை செய்துகொண்டிருக்கும்போது, தனது அருகில் இருந்த பட்டத்து தம்பிரான் ஸ்ரீநாகலிங்க சுவாமிகளின் எதிர்கால நிகழ்ச்சியை சூசகமாக தெரிவித்தார். அதைக்கேட்டு ஆனந்தப்பட்ட சுவாமிகள், தனது சீடன் பக்குவநிலைக்கு வந்துவிட்டான் என்பதை உணர்ந்துகொண்டார். அந்த நிமிடமே தனது 10வது பட்டத்தை 11வது பட்டமாக தனது சீடனுக்கு அளித்து மடத்தின் பீடத்தில் அமர்த்தினார். அன்றிரவே சுவாமிகள் இறைவனோடு கலக்கும் நேரத்தை இறைவனின் திருக்குறிப்பினால் உணர்ந்துகொண்டார் . இரண்டாம் நாள் தெய்வீக நிலையிலையே சுவாமிகள் காணப்பட்டார். சுவாமிகள் எதுவும் பேசாமல் மௌனத்தையே கடைப்பிடித்தார். சைகையினால் தம்முடைய சீடர்களிடம் அவர்கள் செய்யவேண்டிய முறைகளையும், கடமைகளையும் பற்றி மட்டும் விளக்கினார். மூன்றாம் நாள் வந்தது. சுவாமிகள் சிவத்தினுள் ஐக்கியமாகும் நேரமும் வந்தது. எல்லோரும் சுவாமிகளை வணங்கி நின்றனர் சுவாமிகள் இந்த உலகவாழ்வை விட்டு சிவத்தினுள் ஆட்கொள்ளப்பட்டு ஜீவன் முக்தியடைந்தார்.
உலகம் உய்ய இறைவன் அருளிய திருவாசகத்தைப் போற்றி
பாதுகாத்து, புதுவைக்கு கொண்டு வந்த பெருமை ஸ்ரீ நாகலிங்க
சுவாமிகளையே சாரும்.சுவாமிகள் தங்கியிருந்த இடத்தினுள்ளே அவரின் ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. சமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இந்த தெய்வீக இடத்தை  அம்பலத்தார் மடம் என்றே அழைக்கப்பட்டது.இம்மடம் அமைந்துள்ளதால் அத்தெருவிற்கு அம்பலத்தார்மடத்து வீதி  என்று  பிரஞ்சு அரசு பெயர் சூட்டியது .
இன்றும் இங்கே தவறாமல் ,திருவாசகம் வைத்திருக்கும்  வெள்ளிப் பெட்டகம் அன்றாடம் பூஜிக்கப்படுகிறது. 
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியன்று இரவு பெட்டகம் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றது.இவரது குரு பூஜை ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் 7 -ம் நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தரின் ஜீவ சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன் .
நன்றியுடன்
ராஜி.