Thursday, November 30, 2017

திருவண்ணாமலையில் கிரிவலம் தெரியும்.. உள்கிரிவலம் தெரியுமா?!



ஆக்கல், காத்தல், அழித்தல்ன்னு கடமையாத்தும் சிவன், பிரம்மா, விஷ்ணுவுக்கும் மேலான கடவுள் ஒன்று உண்டு. அவந்தான் பரம்பொருள்ன்னு ஆத்திகர்களும், உலக இயக்கத்துக்கு காரணமான சூரியனுக்கும் மேலான ஒன்று உள்ளதுன்னு நாத்திகர்கள் சொல்றாங்க. ஆகமொத்தம் நம் கண்ணுக்கு தெரியாத, நம் சிற்றறிவுக்கு எட்டாத பரம்பொருள் உண்டு என்பது உண்மை என நிரூபணமாகிறது. ஆத்திகர்கள், அதுக்கு ருத்திரன், ஆதிசிவன்னு  சொல்லி வழிபடுறாங்க. நாத்திகர்கள் இயற்கையே தெய்வம்ன்னு போற்றுறாங்க. ஆன்மீகத்தில். ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பை கடவுளாய் முக்கியப்படுத்துறாங்க. ஆனா, அறிவியலாளர்கள், இந்த பஞ்ச பூதங்களின்றி எதுவும் நடக்காதுன்னு சொல்றாங்க. இயற்கையை தெய்வமாய் வழிப்படும் பல வழிபாட்டு முறைகள் இருக்கு, அதுல, மலையை தெய்வமா நினைத்து வலம் வருதல் ஒரு  வழிபாட்டு முறையாகும். மலைக்கு கிரின்னு ஒரு பெயர். அதனால, இந்த வழிபாட்டு முறைக்கு கிரிவலம்ன்னு பேர் உண்டாச்சு. 


மலைக்கு கிரின்னு மட்டுமில்லாம  கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரின்னும் பொருள் உண்டு.   கிரிவலம் என்பது மிகப்பழமையானதாகும்.  கைலாய மலையையும், மேருமலையை பல சமயத்தாரும் சுற்றி வந்து வழிப்படுவது உண்டு,  கயிலை மலையை சூரியன் தினம் தோறும் வலம் வந்து வழிப்படுகின்றான் என புராணங்கள் சொல்லுது. இதை உறுதிப்படுத்தும் விதமா  
உலக முவப்ப வலநோபு திருதரு
பலா புகழ் ஞாயிறு
ன்னு தன்னோட முருகாற்று படை பாடல்வரிகளில் நக்கீரன் பாடி இருக்கார்.  பொதுவா இன்றைய நாட்களில் இப்படி கிரிவலம் வருதல் என்பது ஒரு சடங்காகத்தான் செய்யப்படுதே தவிர, உண்மையான பொருள் உணர்ந்து கிரிவலம் வருதல் லட்சத்தில் ஓரிருவராய்தான் இருப்பர். கர்ப்பிணி பெண் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின்மீது கவனம் கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்வதுப்போல, இறைவனை மனதில் இருத்தி, அவன் நாமம் ஜெபித்துகொண்டு கிரிவலம் வருதல் வேண்டும்.  

கிரிவலம்ன்னாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலைதான்.  ஆனா, பௌர்ணமி கிரிவலமென்பது அனைத்து மலைவாழ் கடவுளுக்கும் பொதுவானதாகும். கிரிவலம் பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில்தான் நிகழும். வெகுசில கோவில்களில் அமாவாசை, உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் நிகழும்.  பௌர்ணமி நாட்களில் நிலவின் ஒளி, மலையில் பட்டு எதிரொலித்து நம்மீது படும்போது உடலுக்கு நன்மை செய்யும் கதிர்கள் நம் உடலில் பாயும். மலையில் இருக்கும் மூலிகைகள் காற்றில் கலந்து, நம் நாசி வழியாய் உடலுக்குள் செல்லும். கிரிவலம் செல்லும்போது சாலையில் இருக்கும் சிறு,சிறு கற்கள் குத்தி, உள்ளங்காலில் இருக்கும் அக்குபஞ்சர் இடம் தூண்டப்பட்டு உடலுக்கு நன்மை உண்டாகிறது. அதுமட்டுமின்றி, சித்தர்கள் பௌர்ணமியன்று இறைவனை வழிபட அரூப வடிவில் கிரிவலம் வருவர். அவர்கள் பார்வை நம்மீது பட்டால் நம் வாழ்வு சிறக்கும்.  தீராத வியாதியும் தீருமென்பதால் பௌர்ணமி நாளில் கிரிவலம் வருதல் சிறப்பு. 

இறைவன் குடியிருக்கும் மலைக்கே இத்தனை சிறப்பு என்றால், இறைவனே மலையாய் அருளும் திருவண்ணாமலை கிரிவலத்தின் பயனை வார்த்தைகளால் சொல்லமுடியாது. பிறவி பெருங்கடனை அடைக்க திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல் நலம் . இங்கு கிரிவலம் வர எடுத்து வைக்கும் ஓரடிக்கு  யாகம் செய்த பலன் கிடைக்கும். ஈரடி வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன், நான்கடி எடுத்து வைத்தால் அனைத்து யாகங்களும் செய்த பலன் கிடைக்கும். நான்கடிக்கே இத்தனை பலனென்றால்,  மலையை சுற்றியுள்ள 14 கி.மீயும் வலம் வந்தால் எத்தனை பலன் கிடைக்குமென கணக்கிட்டு பாருங்க.  இங்கு, ஞாயித்துகிழமையில் கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும்,  திங்கட் கிழமையில் வலம் வந்தால் இந்திர பதவியும், செவ்வாயில் வலம் வந்தால் கடன், வறுமை நீங்கும், புதன்கிழமைகளில் வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் , வியாழக்கிழமை வலம் வந்தால் ஞானமும், வெள்ளிக்கிழமையில் வலம் வந்தால் வைகுண்டப்பதவியும், சனிக்கிழமைகளில் வலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமியில் வலம்வந்தால் தீவினைகள் போகும். எல்லா நாட்களையும் விட செவ்வாய் கிழமைகளில் கிரிவலம் வந்தால் கர்மவினை அகல்வதுடன் மோட்சமும் கிட்டும் என சேஷாத்திரி சுவாமிகள் கூறியுள்ளார். தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதரராய் கிரிவலம் வந்தால் மன நிம்மதி கிடைக்கும், குழந்தை பேறு உண்டாகும். 

கிரிவலம் வருவதற்கென சில நியதிகள் உண்டு. மலையை வலதுபுறமாக வலம் வரவேண்டும். ஆண்கள், மேற்சட்டை, தலைப்பாகை அணியாமலு வலம் வர வேண்டும். அனைவரும். காலில் செருப்பு அணியாமல் செல்ல வேண்டும். உடமைகளை தவிர்த்து வருதல் நலம். வாகனங்களில் கிரிவலம் வருதல் கூடாது. மாமிசம், மது, புகை, இன்னபிற போதை வஸ்துகளை தவிர்க்க வேண்டும். ஊர்க்கதை பேசாமல் இறைப்பாடல்களை பாடியப்படி வலம் வரவேண்டும். அது தெரியாதவர்கள் குறைந்த பட்சம் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வந்தாலே போதும். கோவில் வாசலிலிருந்து கிரிவலம் ஆரம்பித்து, வழியில் இருக்கும் கோவில்களில் உள்ள தெய்வங்களை வணங்கி, அண்ணாமலையாரை தரிசிப்பதோடு கிரிவலம் முடிக்க வேண்டும். கூட்டம், பணிச்சூழல் காரணமாய் கோவில் செல்ல இயலாதவர்கள் மலையையே இறைவனாய் நினைத்து வணங்கினாலும் போதும். கிரிவலம் முடிந்ததும் தூங்குவதும் குளிப்பதும் கூடாது. கிரிவலம் வரும்போது நொறுக்குத்தீனி தின்றப்படியும் வரக்கூடாது, ஆனால்  நீர் அருந்தலாம். கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவது, சிறுநீர் கழிப்பது கூடாது, ஏன்னா, திருவண்ணாமலை முழுக்க அடிக்கு ஒரு லிங்கம் பூமிக்குள் இருப்பதாய் சொல்லப்படுது. கூடவே, ஏராளமான சித்தர்கள் வசிப்பதால், அவர்கள் இடத்தை அசுத்தப்படுத்த கூடாது என்பதற்காகவும்தான். இல்லாதோருக்கு முடிந்தளவுக்கு தானம் செய்வது நல்லது. அன்னதானம் செய்வது சாலச்சிறந்தது. 




கிரிவலம் வரும்போது மழை வந்தால் குடைப்பிடிக்ககூடாது. மனிதனும், மிருகமுமல்லாது, உள்ளும் புறமுமல்லாது, மேலும் கீழுமல்லாது, இரவும் பகலுமல்லாது எந்தவித ஆயுதத்தாலும், ரத்தம் கீழ சிந்தாமல் மரணம் சம்பவிக்க வேண்டுமென இறைவனிடம், வரம் கேட்க இரண்யகசிபு தவமியற்ற காட்டுக்கு செல்ல நேர்ந்தபோது, கர்ப்பவதியான  மனைவியிடம் சொல்ல தயங்கி அவளிடம் சொல்லாமலே சென்றுவிட்டான். அவனை மனைவி லீலாவதி, அவனை தேடி ஒவ்வொரு ஆலயமாய் சென்று வழிப்பட்டு அவனை தேடினாள். அவ்வாறு தல யாத்திரையின்போது திருவண்ணாமலைக்கு வர நேர்ந்தது. அப்போது, நாரதர் அவள்முன் தோன்றி, காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வரச்சொன்னார்.  லீலாவதியும் அவ்வாறே வலம் வந்துக்கொண்டிருக்கும்போது, திடீரென புஷ்பமழைன்ற வகை மழை பொழிய, மழைக்கு பயந்து லீலாவதி பாறைகளுக்கு இடையில் மறைந்துக்கொண்டாள்.


 என்னதான் பொறுமைக்கு பூமாதேவின்னு பேர் கொண்டாலும்,  பூமியில் நடக்கும் அக்கிரமச்செயல்களால் சிலசமயம் , அவளுக்கும் ஆக்ரோஷம் உண்டாகி இயற்கை சீற்றங்களாய் வெளிப்படுத்துகிறாள். அவளை சாந்தப்படுத்த, அவ்வப்போது புஷ்ப மழையை இறைவன் அனுப்புவாராம். புஷ்ப மழை என்பது ஒரு கோடி மழைத்துளிகளுக்குபின் ஒரு அமுதத்துளி மழைத்துளிகளோடு சேர்ந்து வருவதாகும். அந்த அமுதத்துளி விழும் இடம் செல்வச்செழிப்போடும், நோய் நொடி அண்டாமல், விவசாயம் செழித்து வளரும் என்பது ஐதீகம். இதுமட்டுமில்லாம புஷ்ப மூலீகை என்ற சகல நோய்களை தீர்க்கும் அரிய வகை மூலிகை முளைக்குமாம். அத்தனை சக்தி வாய்ந்த புஷ்ப மழைக்கு பயந்துதான் லீலாவதி பாறைகளுக்கிடையே ஒதுங்கினாள். அவ்வாறு ஒதுங்கி நின்ற போதும் காயத்ரி மந்திரத்தை விடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தாள். கோடி மழைத்துளிகளுக்கு பின் இறங்கிய அமுதத்துளி லீலாவதிக்கு அருகிலிருந்த பாறையில் பட்டு தெரித்து லீலாவதி வயிற்றில் பட்டது. அது அவள் வயிற்றிலிருக்கும் சிசுவினை சென்றடைந்து, கருவிலிருக்கும் பிரகலாதன் அந்த அமுதத்துளியை உண்டான். பாறைகளில் பட்ட அமுதத்துளியால் புஷ்ப மூலிகை உண்டாகிற்று.  அவ்வழியே வந்த சித்தர்கள் இதைக்கண்டு, உரிய மந்திரம் சொல்லி, அம்மூலிகையை பறித்து, காயத்திரி மந்திரத்தை உச்சரித்துகொண்டிருக்கும் லீலாவதியிடம் கொடுத்தார்கள். அவள் வயிற்றிலிருக்கும் குழந்தையால் விஷ்ணு புதுஅவதாரம் எடுக்க இருப்பதை அறிந்து அவனுக்கு ஆசிக்கூறினர்.  சித்தர்கள் கொடுத்த மூலிகையை தனது இடுப்பில் சொருகி கொண்டாள் லீலாவதி. மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அக்கருவே பின்னாளில் ஸ்ரீநரசிம்ம அவதாரத்துக்கு காரணமான பிரகலாதன்.  மழையும், வெயிலும் சேர்ந்து வரும் நேரத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம துதியை உச்சரித்தபடி கிரிவலம் வந்தால் நமது வீட்டில் செல்வம் பெருகும். மழை இல்லாவிட்டாலும் கிரிவலம் வரும்போது.. காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது நலம். 




இதில்லாம உள்கிரிவலப்பாதைன்னு ஒன்னு இருக்கு. திருவண்ணாமலைக்கு மிக அருகாமையில் இப்பாதை இருக்கு. சரிவர பாதை வசதி இல்லாத, காட்டு வழிப்பயணம் இது. இவ்வழியாகத்தான் ரமணர் கிரிவலம் வருவாராம். இவ்வழியில் பச்சையம்மன் ஆலயம், காட்டு சிவா சித்தர், கண்ணப்ப நாயனார் ஆலயம் உட்பட பல சித்தர்கள் ஆசிரமம் இங்க இருக்கு. இங்கு எந்த கடைகளும் இருக்காது. இது பொது வழியில்லை. அதனால, பெண்கள் தனியா போறது அவ்வளவு நல்லதில்லை. தகுந்த துணையோடு போகலாம். ஏன்னா, அங்க, சித்தராகனும்ன்னு ஆசைப்பட்டு தகுந்த வழிக்காட்டுதல் இல்லாம போதைக்கு அடிமையான சாமியார்கள் இங்க இருக்காங்க. அதனால், ஒரு குழுவா போகலாம். உள்கிரிவலம் பத்திய யூ ட்யூப் லிங்க்... 


கோடி முறைக்கு மேல் தீப தரிசனத்தை கண்ட இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதியானது இத்தலத்தில்தான். இன்றும் அரூபமாய் நம்மோடு கிரிவலம் வரும் சித்தர்கள் பட்ட காத்து நம்மீது பட்டாலே நம் வியாதிகள் தீரும். அடுத்த முறை கிரிவலம் வரும்போது யாராவது ஒரு சித்தரை நினைத்து ஜெபித்து விட்டு வாங்க. அடுத்த முறை கிரிவலம் வருவதற்குள் மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்வில் சந்திப்பீங்கன்னு அங்கிருக்கும் ஆன்மீக அன்பர்கள் சவால் விட்டு சொல்றாங்க. உள்கிரிவலப்பாதை மொத்தம் 7 கிமீ தூரம் கொண்டது. கற்கள், பாறைகள், முட்கள்ன்னு பாதை முழுக்க நம்மை சோதிக்கும். இங்கிருக்கும் ஒரு அம்மன் கோவிலின் முன்புறமிருந்து மலையை பார்த்தால், மலை தெரியாமல் கோவில் மறைச்சுக்கும். சக்திக்குள் சிவன் ஐக்கியம்ன்னு உணர்த்துது இக்கோவில்ன்னு சொல்றாங்க. 

தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்

சில்பூதமும் நீருந் திசைதிசையன

பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்

படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.....

கிரிவலத்தில் மொத்தம் எட்டு லிங்கங்கள் இருக்கு.. அது என்னென்ன?! அதில்லாம வழியிலிருக்கும் ஆசிரமங்கள், தீர்த்தங்கள், கோவில்கள்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். பதிவின் நீளம் கருதி, இத்தோடு முடிச்சிக்குறேன். முன்ன ஒருமுறை போட்ட பதிவின் லிங்க் தரேன். சிரமம் பார்க்காம போய் படிங்கப்பா...

சொர்ணாகர்ஷண கிரிவலம் பகுதி 1,         பகுதி 2,     பகுதி 3. 

திருவண்ணாமலை கோவிலின் அமைப்பு பத்தி வேற ஒரு பதிவில் பார்க்கலாம்...


நன்றியுடன்,
ராஜி.

Wednesday, November 29, 2017

மலையில் இறைவனை காணலாம்.. மலையே இறைவனாய் நின்று அருளும் அதிசயம்



திருவாரூர்ல பிறந்தா முக்தி, சிதம்பரத்துல வாழ்ந்தா முக்தி, காசில இறந்தா முக்தி. பிறப்பு நம்ம கைல இல்ல. ஆனா, வாழுறதும், சாகுறதும் கொஞ்சம் மெனக்கெட்டா முடியும். ஆனா, அதுக்கும்  கடவுள் அருள் முக்கியம். ஆனா, நினைத்தாலே முக்தி தரும் இடம் ஒன்னு இருக்கு. அதுதான் திருவண்ணாமலை.  நினைச்சாலே முக்தின்றதால, அங்கிருக்கும் தியேட்டர், ஹோட்டல், தெரு, கோவில், பிரசாதம்ன்னு அர்த்தமில்ல, இறைவனை உள்ளன்போடு நினைக்கனும். அவனே கதின்னு சரணாகதி அடைஞ்சு அவன் தாள் பணியனும். அப்பதான் முக்தி கிடைக்கும்...


திருவண்ணாமலை... மனதார உச்சரித்தாலே முக்தியை தருவதோடு, ஆன்மீக அன்பர்களுக்கு உற்சாகத்தையும் தரவல்லது. மத, இன, மொழி கடந்து அனைவரையும் தன்பால் ஈர்க்கும் இத்திருவண்ணாமலையின் சிறப்புகளை பல புராணக்கதைகள் சொல்லி செல்லும். ம்ஹூம், நான் நாத்திகன்ப்பான்னு சொல்றவங்களையும் சமாதானப்படுத்த திருவண்ணாமலையின் சிறப்பு ஒன்று உண்டு. அது என்னன்னா,  கேலக்சி உருவானபோது, நெருப்பா இருந்த கோளம் குளிர்ந்து  பூமி உருவானபோது முதல்ல தோன்றிய இடம் திருவண்ணாமலை. இம்மலையில் இருக்கும் பாறைகள் மிகப்பழமையானதுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. திருவண்ணாமலையின் உயரம் 800 மீட்டர். ஆழம் இன்னும் கணக்கிடப்படல. உச்சில இம்மலையின் சுற்றளவு வெறும் 20 அடிதான். இம்மலையின் வயது சுமார் 260 கோடி ஆண்டுகள் என டாக்டர் பீர்பால் சகானி  ன்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார். பால் பிரண்டன் ன்ற ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா ன்ற நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை"ன்னு சொல்லி இருக்கார். 


திருவண்ணாமலை ஒரு காந்தம்போல, ஒருமுறை வந்து செல்வோரை மீண்டும் மீண்டும் தன்பால் ஈர்க்கும் சக்தி கொண்டது. கைலாயம், வெள்ளியங்கிரி, சதுரகிரி, பர்வதமலைன்னு ஈசனை மையமா வச்சு புனிதமான மலைகள் எத்தனையோ இருக்கு, ஆனா, ஈசனே மலையாய் மாறி நமக்கு அருள்புரிவது திருவண்ணாமலை மட்டுமே.  திருவண்ணாமலையே ஸ்ரீமேரு வடிவமானது.  மனித உடலில் இயங்கிக்கிட்டிருக்கும் சக்தி மையத்தை டாப் ஆங்கிள்ல பார்த்தா முக்கோண வடிவிலும், அதற்கிடையே கோடுகளும் நிறைஞ்சதா இருக்கும்ன்னு அறிவியலாளர்கள் சொல்றாங்க. சூட்சும வடிவில் இருக்கும் இந்த விசயத்தை ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும் புரிஞ்சுக்கிட்டது மாதிரி எளியவர்களும் புரிஞ்சுக்கனும்ன்னுதான் ஸ்ரீசக்கரமா தகடுகளில் வரைஞ்சு வச்சாங்க.



ஸ்ரீசக்கரத்தோட மையத்தை மேருன்னு சொல்வாங்க. சரி, ஸ்ரீசக்கரம், மேரு மலை, திருவண்ணாமலை.. இம்மூன்றையும் இணைக்கும் மையப்புள்ளி எதுன்னு பார்த்தா, திருவண்ணாமலை, இயற்கையாவே அமைஞ்ச மேரு வடிவிலான மலை. அடுக்கடுக்கா அமைஞ்சு, கூம்பு வடிவம் மாதிரியான மலை இது. இந்தியாவிலேயே திருவண்ணாமாலை மட்டுமே, இதுமாதிரியான உருவ அமைப்போடு இருக்கு. இதனாலதான், திருவண்ணாமலைக்கு ஸ்ரீசக்கரகிரின்னும் பேர் உண்டு. நம்பிக்கை இல்லாதவங்க, கூகுள் மேப்ல மேலிருந்து திருவண்ணாமலைய பார்த்தா இதன் உண்மையினை அறியலாம். அதனாலதான், திருவண்ணாமலையை நோக்கி ஆன்மீக அன்பர்கள் அதிகம் வர்றாங்க. அதுமட்டுமில்லாம இங்கு ஏகப்பட்ட சித்தர்கள் இன்றும் உலா வர்றதா சொல்றாங்க.


எல்லாம் சரிதான்ம்மா, ஆனா, அப்படி தவம் செய்ய இந்த காடுகளையும், மலைகளையும் நோக்கி முனிவர்களும், சித்தர்களும் போவதேன்!? பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும்ங்குற மாதிரி திருவண்ணாமலைக்கு வருவதேன்னு நீங்க கேட்கலாம்..  இதுவே, சாதாரண பதிவா இருந்தா பொண்டாட்டி, புள்ளை, கடன் தொல்லை தாங்காமன்னு சொல்வேன். ஆனா, இது ஆன்மீக பதிவு. அதும் திருவண்ணாமலை பத்திய பதிவு. ஏற்கனவே எனக்கும்,  மிஸ்டர். அருணாச்சலேஸ்வரருக்கும் வாய்க்கா வரப்பு தகராறு இருக்குறதால, உண்மையான காரணம் சொல்றேன்.



 இதயத்திலிருந்து ரத்தத்தை நரம்புகள் நம் உடல் முழுக்க கொண்டு செல்லும். அதேமாதிரி உடல்ல இருக்கும் நாடிகள், ஆற்றலை உடல் முழுக்க கொண்டு செல்லும்.  நாடி உங்களை இயக்குனா நீங்க மனிதன்.  நாடியை நீங்க இயக்குனா நீங்க ஞானி.  இடப்பக்கம் சுவாசம் இருக்கும்போது  வலப்பக்கம் உடல் இயங்கும். வலப்பக்கம் சுவாசம் இருக்கும்போது இடப்பக்க உடல் இயங்கும். ரெண்டும் சமமா இயங்க ஆரம்பிச்சா அதுக்கு சூட்சும நாடின்னு சொல்லுவாங்க.  அந்த சூட்சும நாடி, இந்த மாதிரியான மலை, காடுகளுக்கு வரும்போது வேலை செய்ய ஆரம்பிக்கும். அதனாலதான், காடு, மலைன்னு சாமியார்கள் சுத்திவர காரணம், இதுமாதிரியான சூட்சும நாடி செயல்படுறவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும். அதனாலதான், நம்மளை மாதிரியான சாரி, என்னைய மாதிரியான ஆட்கள் கிரிவலம் வர்றதுக்கான காரணம். நம்ம உடம்புல எனர்ஜிட்டிக் பாயிண்ட்ன்னு அக்குப்பஞ்சர் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுற மாதிரி, பூமியின் எனர்ஜிட்டிக் பாயிண்டுன்னு இந்த திருவண்ணாமலையை ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. எனர்ஜிட்டிங் பொங்கி வழியும் இந்த இடத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்தா யோக வாழ்க்கை கைக்கூடும்ங்குறதாலயே ஆன்மீக அன்பர்கள் திருவண்ணாமலையை தேர்ந்தெடுக்குறாங்க. 

(கார்த்திகை தீபத்தின்போது தமிழக அரசு போக்குவரத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்)

திருவண்ணாமலை வெறும் கருங்கல், மண்ணால் உருவான மலை அல்ல. அதற்குள் பிரம்மலோகம் உள்ளது என்பது நம்பிக்கை. சுமார் 50 வருடங்களுக்கு முன் அண்ணாமலையார் கோவிலில் இரவு முழுக்க தியானித்திருந்த சுஜாதா சென் என்ற ஆங்கிலேய பெண் மலைக்குள்ளிருக்கும் பெரிய உலகத்தை கண்டதாக சொன்னார், ஆனால், அன்று அவரின் பேச்சை யாரும் நம்ப தயாரில்லை.   கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரம்மலோகம் உள்ளதென்பது ஐதீகம். மீண்டும்  சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவரும், தானும் இதுமாதிரியா உலகத்தையும் கடவுளையும் கண்டதாக கூறியதோடு, தான் பார்த்த உலகமும் சுஜாதா சென் பார்த்ததாக சொல்லப்பட்டதும் ஒத்துப்போனதை வியந்து குறிப்பிட்டுள்ளார்.  கிருதா யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்,  கலியுகத்தில் கல்மலையாகவும் இம்மலை உருவெடுத்துள்ளது. 

பஞ்சபூதங்களை அடக்கி ஆளும் ஈசன் அருளும் பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது . சிதம்பரம் ஆகாயம், காளஹஸ்தி காற்று, திருவானைக்காவல் நீர், காஞ்சிபுரம் நிலம் என அருள்புரிகிறான். யார் பெரியவன் என்ற வாதம் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்குமிடையில் எழுந்தது, தங்கள் ஐயத்தை தீர்த்துக்கொள்ள, ஈசனிடம் சென்று முறையிட்டனர். என் அடியையோ அல்லது முடியையோ எவர் முதலில் தரிசிக்கின்றாரோ அவரே பெரியவர் என ஈசன் கூறி வானுக்கும், மண்ணுக்குமாய் தீப்பிழம்பாய் நின்றார். பிரம்மன் அன்னமாக மாறி முடியை காணவும், விஷ்ணு பன்றியாய் மாறி அடியை காண பூமியை பிளந்து சென்றார். யுகங்கள் பல கடந்தும் இருவராலும் அடி, முடியை காணவில்லை. தனது தோல்வியை உணர்ந்து ஈசனை நாடி விஷ்ணு திரும்பி வந்தார். ஆனால், தன் தோல்வியை உணர்ந்த பிரம்மா என்ன செய்வதென திகைத்திருந்த வேளையில், சிவனின் தலையிலிருந்து கழன்று விழும் தாழம்பூவிடம், பெண்ணே! ஈசனின் முடிக்காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமென கேட்டார். நான் பல யுகமாக பயணித்தும் இன்னும் பூமியை வந்து சேரவில்லை. அதனால் நீங்களும் ஐயனின் முடிக்காண இன்னும் பல யுகம் ஆகும் என உரைத்தது. தாழம்பூவின் பேச்சைக்கேட்டு அயர்ந்த பிரம்மன், தாழம்பூவிடம் தனக்கு உதவுமாறு கேட்டு, இருவரும் ஈசனிடம் வந்து தான் முடியை கண்டதாகவும், அதற்கு சாட்சி இந்த தாழம்பூவே என வாதிட்டார் பிரம்மன்.. உண்மையை உணர்ந்த ஈசன் கோபமடைந்து இனி தனிக்கோவில் பிரம்மனுக்கு இருக்காது எனவும், தனது பூஜையில் இனி தாழம்பூக்கு இடமில்லை எனவும் சாபமிட்டார்.

அண்ணா ன்ற சொல்லுக்கு நெருங்க முடியாதவன்னு பொருள். அடிமுடி காணா நெருப்பு மலையாய் ஓங்கி உயர்ந்து நின்றதால் இத்தலத்துக்கு திரு அண்ணாமலை என்று பெயர் உண்டானது.. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் நெருப்பு பிழம்பாய் காட்சியளித்த இடத்தில்தான் இன்று அண்ணாமலையார் கோவில் உள்ளது.  பார்க்க லிங்கம் போல் காட்சிதரும் இம்மலையானது, இம்மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தரும்


பிருங்கி முனிவரை பொறுத்தமட்டில் ஈசன் ஒன்றே தெய்வம். அவனின்றி எவரையும் தெய்வமாய் ஏற்காதவர். தினமும் கைலாயம் செல்வார். ஈசனை மட்டும் வணங்குவார்.  அம்பாள் உட்பட எவரையும் வணங்க மாட்டார், இதனால், வருத்தமுற்ற பார்வதி, அவருக்கு சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த,  சிவன் அம்பிகையை பிரிந்து சென்று, தவமிருந்தவளுக்கு தன் இடப்பாகத்தை தந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்தது இத்தலத்தில்தான். சக்தி இல்லையேல், சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லைன்னு உலகுக்கு பாடம் புகட்டும் தலம் இது, 


அருணகிரி, அண்ணாமலை, அருணாச்சலம், அருணை, சோனகிரி மற்றும் சோனாச்சலம் ன்ற பெயராலும் இம்மலை அழைக்கப்படுது. சமயக்குறவர் என அழைக்கப்படும் நால்வரால் பாடல் பெற்ற தலமிது. ரமணர், விசிறி சித்தர், காட்டு சிவா சித்தர், இடக்காடர், குகைநமச்சிவாயர், சேஷாத்திரி சுவாமிகள் உள்ளிட்ட பல சித்தர்களும் இங்கு இறவனை வழிப்பட்டு முக்தி அடைந்தனர். இளையராஜா, ரஜினி மாதிரியான பிரபலங்கள் அண்ணாமலையாரின் தீவிர பக்தர்கள்.  ஒவ்வொரு பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது வழக்கம்,  கர்ப்பிணி பெண், தன் வயிற்றில் இருக்கும் சிசுவின்மீது எத்தகைய கவனத்தைக்கொண்டு அடியெடுத்து வைப்பாளோ அதுமாதிரி, இறைவனை மனதில் இருத்தி கிரிவலம் வருதல் வேண்டும்.  திருவண்ணாமலை கோவிலின் சிறப்புகளையும், கிரிவலம் பத்தியும்  விரிவா வெவ்வேறு பதிவில் பார்க்கலாம்.



திருவண்ணாமலைக்கு வர திருச்சி, மதுரை, கோவை,சேலம், ஈரோடு, திண்டிவனம், விழுப்புரம், சென்னை, பெங்களூரு, திருப்பதி உட்பட பல ஊர்களிலிருந்து நேரடி பேருந்து உண்டு. ரயில் மார்க்கமாவும் வரலாம். இல்ல விமானத்துலதான் வருவேன்னு அடம்பிடிச்சா கொஞ்ச நாள் வெயிட் செய்ங்க. இப்பதான் விமானசேவை தொடங்கலாமான்னு அரசு யோசிச்சிங்க். இல்லன்னா, சென்னை, பெங்களூரு, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலின்னு விமானத்தில் வந்திறங்கி பஸ் பிடிச்சு வாங்க. கப்பல்ல வரனும்ன்னா.. நோ சான்ஸ்....  எங்க ஊர்ல கடல் இல்ல :-(


அடிமுடி காண இயலா பெருமான்.
அருவாகி இருக்கும் சூட்சும இறைவன்,
உருவாகி இருக்கும் நடராஜா பெருமான்,
அரு,உருவாகி எங்கும் கோயில் கொண்ட லிங்கேஸ்வரர்.
ஒலியாய்,செவிகளை நிறைக்கும் பஞ்சாட்சரம்,
பேரொளியாய்,சோதிவடிவாய் இங்கே அண்ணாமலையார்,
எங்கெங்கு ,எவ்வழி,எல்லா ரூபமும் கொண்ட எம்பெருமானுக்கு,
தென்னாடுடைய சிவனே போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ,
என்று உலகம் உய்ய அவன் மலர் பாதம் பணிந்து போற்றிடுவோம்


நன்றியுடன்,
ராஜி


Tuesday, November 28, 2017

மாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்

தீபாவளி பலகாரங்களில் முக்கியமானது முறுக்கு.. ம்க்கும் கார்த்திகை தீபமே வரப்போகுதுன்னு சலிச்சுக்குற உங்க மைண்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன். நாந்தான் பலமுறை சொல்லி இருக்கேனே! ஐ ம் பேசிக்கலி சோம்பேறின்னு..  தீபாவாளிக்கு மட்டுமில்ல, மழை நேரத்துக்கு நல்ல நொறுக்கு இந்த முறுக்கு... அட, ரைமிங்க்....  இனி எப்படி முறுக்கு செய்யலாம்ன்னு பார்க்கலாம்.. 

தேவையான பொருட்கள்...
பச்சரிசி  - 8 டம்ப்ளர்
உளுத்தம்பருப்பு - ஒரு டம்ப்ளர்
ஓமம்,
வெள்ளை எள்
பெருங்காய தூள்
உப்பு,
எண்ணெய்

பச்சரிசியை ரெண்டு மணிநேரம் ஊற வெச்சு, வெயிலில் காய வச்சுக்கனும், உளுத்தம்பருப்பை லேசா சிவக்க வெறும் வாணலில வறுத்து ரெண்டுத்தையும் மெஷின்ல கொடுத்து அரைச்சுக்கனும். 


தேவையான அளவு மாவில் வெள்ளை எள், ஓமம் சேர்த்துக்கனும்...

பெருங்காயத்தூள் சேர்த்துக்கனும்...

கொஞ்சமா எண்ணெய் சேர்த்துக்கனும்.. முறுக்கு அச்சுல மாவு ஒட்டாம வரும். அதுக்காகத்தான் எண்ணெய் சேர்த்துக்குறது. சிலர் டால்டா சேர்த்துப்பாங்க. 
தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்...

தண்ணி விட்டு நல்லா பிசைஞ்சுக்கனும்... ரொம்ப கெட்டியாவும் இல்லாம, தண்ணி அதிகமா சேர்க்காம பிசைஞ்சுக்கனும்.. சப்பாத்தி மாவு போல இருக்கலாம். 


ஒரு பக்கம் வாணலில எண்ணெய் காய வச்சு, முறுக்கு அச்சுல மாவை போட்டு, தட்டு, ஜல்லிக்கரண்டின்னு அவங்கவங்க வசதிப்படி, அதுல எண்ணெய் தடவி பிழிஞ்சுக்கனும். 

எண்ணெய் காய்ஞ்சதும் முறுக்கு மாவை பிழிஞ்சு போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க வறுத்தெடுங்க. பார்த்து கவனமா போடுங்க. இல்லாட்டி எண்ணெய் தெறிச்சு கைலாம் புண்ணாகும். 

சுவையான முறுக்கு ரெடி, பிளாஸ்டிக் கவர்ல போட்டு வச்சிக்கிட்டா ஒருவாரம் வரை மொறுமொறுப்பா இருக்கும். இல்ல என்னைப்போல எஃப்.பில கவனமா இருந்து கோட்டை விட்டா அடுத்த நாளே நமத்து போகும்.. பீ கேர்புல்., நான் என்னைய சொன்னேன்..


நன்றியுடன்,
ராஜி.

Monday, November 27, 2017

வாட்ஸ் அப்ல விளைந்த நற்செயல் - ஐஞ்சுவை அவியல்

மாமா! இந்த போன்ல இருக்கும் வாட்ஸ் அப் ஆப்பை முதல்ல டெலிட் செய்யனும்.

ஏன்?! வாட்ஸ் அப்ல  பார்வார்ட் பண்ணுற மெசேஜ்ல எது உண்மை?! எது பொய்ன்னு தெரியாம குழப்பமா இருக்கு. அதான்.. 

அப்படிலாம் சொல்லாத. வாட்ஸ் அப்பால சில நல்லதும் நடந்திருக்கு..


கேரளா, தாம்பனூர் ராயில்நிலையத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை ஒரு வயதான பெண்மணி சாப்பிடுறது வாட்ஸ் அப்ல பரவி இருக்கு. அவங்க, மலப்புரத்திலிருக்கும் ஒரு ஸ்கூல்ல கணக்கு டீச்சரா இருந்தவங்களாம். பேரு வத்ஸா. டீச்சர் வேலைல இருந்து ரிட்டையர்ட் ஆனப்பின், பசங்க வீட்டை விட்டு துரத்திவிட, சாப்பாட்டுக்கு வழியில்லாம பிச்சை எடுத்து இருக்காங்க. வாட்ஸ் அப்ல இவங்களை பார்த்த முன்னாள் மாணவர்கள் இவங்களை அடையாளம் கண்டு இப்ப தங்கள் பராமரிப்புல வச்சிக்கிட்டு இருக்காங்க. இதுமாதிரி நல்லதும் வாட்ஸ் அப்ல நடக்குது. அதேமாதிரி, இன்னொரு நல்லதும் கேரளாவில் நடந்திருக்கு...

கேரளாவின் கண்ணூர் மாவட்ட, பரியாரம்ன்ற ஊரில் இருக்கும் ஆஸ்பிட்டல்ல ஆம்புலன்ஸ் டிரைவரா ஹமீம்ன்னு ஒருத்தர் இருக்கார். ஒரு புதன்கிழமை நைட்டு, பிறந்து முப்பது நாளான, பாத்திமான்ற குழந்தைக்கு ஹார்ட் ஆப்ரேஷன் செய்ய வேண்டி, திருவனந்தபுரத்திலிருக்கும் ஸ்ரீசித்ரா ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போக அழைப்பு வந்திச்சு, இரண்டு ஹாஸ்பிட்டலுக்கும் இடையில் சுமார் 500கிமீ தூரம். விமானத்துல பாப்பாவை கொண்டு போக பாப்பாவின் உடல்நிலை இடங்கொடுக்கல. அதனால, ஆம்புலன்சை கூப்பிட்டிருக்காங்க. பொதுவா 500கிமீ தூரத்தை சாலை வழியா கடக்க 14 மணிநேரம் ஆகும். ஆனா, ஹமீம் 6 மணி நேரம், 45 நிமிசத்துல இந்த தூரத்தை கடந்து வந்திருக்கார். இதுக்காக, இவர் கேரள மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கார். இவருக்கு உதவியா கேரள போலீசும் போக்குவரத்தை இவர் போகும் பாதையில் சீர் செஞ்சு கூட்ட நெரிசலில்லாம பார்த்துக்கிட்டாங்க. இப்ப, பாப்பா ரொம்ப நல்லா இருக்கா.

ம்ம்ம் சரி, இந்த மாசம் சம்பளம் வந்ததும்.....

சம்பளம்ன்னு சொல்லுற வார்த்தை எப்படி வந்திச்சுன்னு தெரியுமா?! செய்த வேலைக்கு கூலியா சம்பான்ற வகை அரிசியையும், அளத்தில் விளைந்த உப்பைய்உம் கொடுத்ததால சம்பளம்ன்னு பேர் வந்திச்சு. அதேமாதிரி, காய்கறின்னு சொல்லுறதுல கறிங்குறது மிளகை குறிக்குது. முன்னலாம் காரத்துக்கு மிளகு சேர்ப்பதுதான் வழக்கம்,. அதனாலதான் காய்+ கறி= காய்கறின்னு ஆனது. கறின்ற வார்த்தைக்கு ஆட்டு இறைச்சின்னும் ஒரு அர்த்தம் உண்டு...

சம்பளத்துக்கான அர்த்தம் தெரியும். ஆனா, காய்கறிக்கான அர்த்தம் இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

நான் ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம். மூணு பேர் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டாங்க. பில் 75ரூபா வந்திச்சு, ஆளுக்கு 25 ரூபான்னு போட்டு சர்வர்கிட்ட பில்லையும் பைசாவையும் கொடுத்துவிட்டாங்க. சர்வர் கொண்டு போய் முதலாளிக்கிட்ட கொடுக்க, 5 ரூபாயை தள்ளுபடி பண்ணி, 70 ரூபாயை எடுத்திக்கிட்டு மிச்ச 5 ரூபாயை சர்வர்கிட்ட கொடுத்து விட்டிருக்கார். சர்வருக்கு டிப்சா 2 ரூபாயை கொடுத்துட்டு மிச்சம் 3 ரூபாயை ஆளுக்கு 1 ரூபான்னு பிரிச்சு எடுத்துக்கிட்டாங்க.

அதான் கணக்கு சரியாகிட்டுதே! இதுல என்ன கேள்வி?! என்ன சாப்பிட்டாங்கன்னு கேணைத்தனமா கேக்கப்போறியா?!

பொறு மாமா... ஆளுக்கு ஒரு ரூபா திரும்பி வந்ததால, சாப்பாட்டுக்குன்னு ஒவ்வொருத்தரும் 24 ரூபா செலவழிச்சிருக்காங்க. சரியா?!

ம் சரிதான்.. மூணு பேரும் செலவழிச்சது  24 * 3 = 72 ரூபா.  சர்வருக்கு டிப்ஸ் 2 ரூபா.. மொத்தம்  72 + 2 = 74 ரூபா. ஆனா, ஆரம்பத்தில அவங்க சர்வர்கிட்ட கொடுத்தது 75 ரூபா. அப்படின்னா மிச்சம் 1 ரூபா எங்க மாமா?! அந்த ஒரு ரூபாதான் இதுன்னுலாம் சொல்லக்கூடாது. 

அடிப்பாவி கொஞ்சம் நஞ்சம் வேலை செஞ்சிக்கிட்டிருக்கும் மூளையையும் குழப்பி விட்டுட்டியே!
யோசிச்சு நல்லா பதில் சொல்லு. இல்லாட்டி உனக்கு சாப்பாடு கட்.. யோசிச்சுக்கிட்டே இந்த படத்தை பாரு. மனிதாபிமானம் எப்படி இருக்கனும்ன்னு.. பார்த்ததும் பிடிச்சுட்டுது...
மாமா பதில் சொல்லுறதுக்குள் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சகோஸ்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டைக்கு
செல்லும் வழி..

நன்றியுடன்,
ராஜி.

Sunday, November 26, 2017

ஆதாமும் ஏவாளும் சீனாவிலோ, ஜப்பானிலோ பிறந்திருந்தா.... - படம் சொல்லும் சேதி



நல்லவேளை எனக்கு அறிவாள்மனைல காய்கறி கட் பண்ணும் பழக்கமில்ல.  அதனால பாம்பு தப்பிச்சுட்டுது. 

ஆதாமும் ஏவாளும் சைனாவிலோ இல்ல ஜப்பானிலோ பிறந்திருந்தா, காதல் கன்றாவிலாம் இல்லாம நாடும் நல்லா இருந்திருக்கும். 

தடுப்பூசியின் அர்த்தம் இதானோ?!
ஒரு பஸ், ரெண்டு நம்பரோடு ஓடுற அதிசயமான பஸ், இதுகூட கவனிக்காம எஃப்.சிக்கு போய் வந்திருக்கு இந்த பஸ்.
நல்ல வாத்தியார்களுக்கு சமர்ப்பணம்...

குழந்தைகளை சாக்லேட் கொடுத்து கடத்திக்கிட்டு போய்டுற மாதிரி என்னைய வா தஞ்சாவூர், மகாபலிபுரம், கன்யாக்குமரிக்கு கூட்டிப்போறேன்னு சொல்லி ஈசியா கடத்திடலாம். அந்தளவுக்கு இந்த ஊர்களை பார்க்க பார்க்க சலிக்காது எனக்கு..  வித்தியாசமான கோணத்தில் பார்த்த தஞ்சை பெரிய கோவில்... 

கடைமட்ட ஊழியர்களின் நிலை இதுதான்ன்னு வெளிச்சம் போடும் படம்...

அட, பக்கி பயலுங்களா! இப்படியா தப்பிக்க சொல்லி கொடுப்பீங்க?! அப்புறம் பொம்பளைங்க நாங்க உண்மை கண்டறியும் மெசினோடுதான் அலையனும்... 


இது எல்லாருக்குமே பொருந்தும்தானே?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
க்ளிக் ஹியர்.

நன்றியுடன்,
ராஜி.



Friday, November 24, 2017

பதினெட்டாம் படியின் தத்துவம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா?! - சபரிமலை யாத்திரை

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கேரளா மட்டுமில்லாம கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரான்னு  எல்லா இடமும் பிரதிபலிக்கும்.  சபரிமலையோடு சேர்த்து எல்லா புண்ணிய இடங்களுக்கும் போய் வருவது வழக்கம். பழனி, குற்றாலம், மதுரை, திருவண்ணாமலை, திருத்தணி, ராமேஸ்வரம்ன்னு எல்லா கோவில் மற்றும் சுற்றுலா தளங்களில் கூட்டம் அள்ளும், அத்தோடு எல்லா பொருட்களும் விலையும் சற்று அதிகமா இருக்கும்.

இப்ப மாலை போடுறவங்கள்ல பெரும்பான்மையானவங்க எதுக்கு மாலை போடுறோம்??! இருமுடியின் தத்துவமென்ன?! பதினெட்டு படிக்கு என்ன அர்த்தம்?! சரங்குத்தின்னா என்ன?! எரிமேலியில் ஏன் வேசம் போடுறோம்ன்னு தெரியாமயே மாலை போட்டு கோவிலுக்கு போறாங்க. அவங்களை பொறுத்தவரை இது ஒரு சுற்றுலா அவ்வளவே! ஆனா, சபரிமலை ஐயப்பனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு.  அதைலாம் நம் பதிவில் இனிவரும் காலங்களில் பார்ப்போம். 

முதலில் பதினெட்டாம்படி தத்துவம்....

பதினெட்டாம் படி ரகசியங்களில் ஒன்று ஐம்புலன்களை அடக்குவது.  அதாவது கண், காது, மூக்கு ,வாய், தோல், இதை அடக்குவது . காதுக்கு கெட்டதை கேக்காதே, கண்ணுக்கு கெட்ட விசயங்களை பாக்காதே,வாய்க்கு புலால் உண்ணாதே ,தோலுக்கு இரண்டு வேளையும் குளித்து சுத்தபடுத்து. இப்படி ஐம்புலன்ங்களையும் அடக்கி,  அறுங்குணங்ககளையும் சீரமைத்து   அறுங்குணம் என்றால் ஆறு குணம் . பேராசை,  கடும்பற்று, சினம், முறையற்ற பால் கவர்ச்சி(SEX), உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் இந்த ஆறு குணங்களையும் சீரமைத்தல்.  நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களின் வழியாக ஏழு சக்கரம் என்றால் மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம், அனகாதம்,விசுத்தி, ஆக்கினை, துரியம் என்னும் ஏழு சக்கரங்களை கடந்து குண்டலினி சக்தி மேலோங்கி  நிற்கும்.  அப்பொழுது  ஐந்து பூதங்களின் அப்பனான அய்யப்பனை கண்டு தரிசிக்கலாம் என்பதே ஐதீகம்.  ஐம்புலன்களை அடக்கி, அறுங்குணங்களை சீரமைத்து , ஏழு சக்கரங்களை கடந்து இந்த பதினெட்டு விதிகளை கடைபிடித்தால் ஐந்து பூதங்களின் அப்பனான ஐயப்பனை காணலாம் என்பதே  பதினெட்டு படியின் தத்துவம். 

பொதுவாக இந்து கடவுளர்களை பற்றி புரிந்து கொள்வது மிக எளிதான விஷயமில்ல. இந்துமதத்தில் சில இடைச்சொருகல்கள் காரணமாக சில விஷயங்கள் விமர்சிக்கப்படுகின்றனவே தவிர, உண்மையில் கடவுளை புரிந்துக்கொள்ள வள்ளலார், ராமக்கிருஷ்ணர்  மற்றும் விவேகானந்தர் போன்ற ஹீரோக்களால் மட்டும்தான் முடியும்.. அப்படி புரிந்துக் கொண்ட விஷயங்கள் நான்குபுறமும் கூர்மையான கட்டாரி போன்ற ஆயுதமாகும். ஆகவே, அதை கையாள்பவருக்கு அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற அறிவு இருக்கவேண்டும்.  தகுதியானவர்களுக்கும்,  மனப்பக்குவம் உள்ளவர்களுக்கும் சென்றடைய வேண்டி எல்லாமே மறைப்பொருளாக வைத்தனர். அப்படிப்பட்ட சிலவிஷயங்களை நம்முடைய அறிவுக்கு எட்டியவரை முயற்சித்து பார்க்கலாம்..... 
அய்யப்பனை பல்வேறு வடிவங்களில், பல்வேறு நிலைகளில் பாலகனாக, வாலிபனாக  தரிசிக்கின்றோம்.  குளத்துப்புழா, அச்சன்கோவில், ஆரியங்காவு மற்றும் சபரிமலையில் உறைவது ஒரே இறைவனே. வடிவங்கள்தான் வேறு. சபரிமலையில் அய்யப்பனை தர்ம சாஸ்தாவாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது முதலில் குளத்துப்புழா அய்யப்பனை பற்றி பார்க்கலாம் .

குளத்துப்புழா  ஐயப்பன் கோவிலில்  ஐயப்பன்  பாலகன் வடிவில் அருள்பாலிக்கிறார். அதனால், இந்த திருத்தலம் பாலா சாஸ்தா திருஸ்தலம் என்றும் சொல்லபடுகிறது.   இந்த குளத்துப்புழா என்னும் கிராமம், தமிழ்நாடு -கேரளா எல்லைப்பகுதியில் இருக்கும் கொல்லம் மாவட்டத்தில் தேன்மலா மலைப்பிரதேசத்திற்கு அருகில் இருக்கு இந்த கிராமம்.  திருவனந்தபுரத்திலிருந்து 62 கி.மீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கி.மீ தூரத்திலும் உள்ளது.. செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம்  வழியாகவும் இக்கோவிலுக்கு செல்லலாம். இந்த திருக்கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம்மும்,  கருவறையில்  ஐயப்பன் பாலகனாகக்  காட்சி தருகிறார். 

பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும், அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர். உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி. சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் இன்றும் வைக்கப்படுகின்றன.

கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி, அவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு கேட்க, ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம். மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா.  பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவிலும் ஒன்று.  ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள். [சபரிமலை]க்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது. இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கத்தில் உள்ளது. 

அடுத்த வாரம் அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியருடன்  கல்யாண சாஸ்தாவாக திருமணத்தடை நீக்கும் ஐயப்பனாக காட்சியளிக்கிறார் இந்த  வரலாறு பத்தி அடுத்தவாரம் பார்க்கலாம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1478642
 நன்றியுடன்....
ராஜி.